Sunday, May 10, 2015

கிறுக்கனாக முயற்சிப்போம்



ஆத்திரத்தை அடக்கலாம் ஆனால் மூத்திரத்தை அடக்க முடியாது என்று முதன் முதலில் சொன்னவரை கைகுலுக்கி பாராட்ட வேண்டும். மிகச் சரியாக சொல்லப்பட்ட அனுபவ முத்திரைகளுள் முதன்மையான வாக்கியம் இது. அது ஒரு மாதிரியான அவஸ்தை. கந்துக்காரனுக்கு பயந்து தெருத் தெருவாக திரும்புவது மாதிரி குட்டிச் சுவர் ஏதேனும் கிடைக்காதா என்று அலைகிற அனுபவம் இருக்கிறது பாருங்கள்... அப்பப்பா.. அப்படியொரு அவஸ்தை அது. அப்படியே ஏதேனும் குட்டிச் சுவர் கிடைத்து ஒதுங்கலாமென்றால் அங்கு யாரேனும் நடமாடிக் கொண்டோ அல்லது நின்று பேசிக் கொண்டோ இருந்தால் அந்தக் குட்டிச் சுவர் சபிக்கப்பட்ட குட்டிச் சுவாராகும். ஆமாம், ஒன்னுக்கிருக்க ஒத்துழைக்காத சுவர் இருந்தென்ன, இல்லாமல் போனால்தான் என்ன.

அப்படி ஒரு அவஸ்தையை சமீபத்தில் அனுபவிக்க நேர்ந்தது. பேருந்திலிருந்து இறங்கியபோதோ வண்டி நிறுத்தத்திலிருந்து வண்டியை எடுத்தபோதோ ஒன்றும் தோன்றவில்லை. பாலக்கரையைத் தாண்டியதும் சிறுநீர் முட்டிக்கொண்டது. எங்காவது ஒதுங்கிவிட முடியுமா என்று அங்குமிங்கும் தேடுகிறேன் எல்லா இடங்களிலும் ஆள் நடமாட்டம் அதிகமாய் இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியொரு அவஸ்தை. ஒரு வழியாக பழைய தாசில்தார் அலுவலகத்தைத் தாண்டி உள்ள சுவர்ருகே யாரும் இல்லை என்பதோடு முன்னே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரண்டு சரக்கு ஆட்டோக்களும் மறைப்பாய் இருக்கவே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினேன். அந்த நேரம் பார்த்து தலமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வரவே அலை பேசியை இடது காதால் தோள்பட்டையில் வைத்து இடுக்கிக் கொண்டு நகர்கிறேன். துணி சாக்கை சுமந்தவாறு சுவற்றில் ஒட்டப் பட்டிருந்த படத்தைப் பார்த்து ஏதோ உளறிக் கொண்டிருந்தான் அந்த மனிதன். அவனை ஒரு பொருட்டாக யாரும் பார்ப்பதில்லை. எதோ ஒரு லாரியைப் பார்த்தோ அல்லது சுவரைப் பார்த்தோ அல்லது நடு ரோட்டில் நின்று கொண்டோ ஏதோ உளறிக் கொண்டிருப்பான். அவன் பேசுவதை யாரும் கவனிப்பதில்லை. அவன் யார்? எங்கு தூங்குகிறான்? எப்படி சாப்பிடுகிறான்? எங்கு குளிக்கிறான்? அவன் பெயரென்ன? எது பற்றியும் யாருக்கும் கவலை இல்லை. அவன் ஒரு கிறுக்கன் என்று நாங்களாகவே முடிவு செய்து விட்டோம். கிறுக்கனைப் பற்றி எங்களுக்கென்ன கவலை?

அந்த மனிதன் அங்கிருப்பதை ஒரு பொருட்டாகவே எனக்குத் தெரியவில்லை. பேசிக் கொண்டே போய் தணித்துவிட்டு திரும்பும்போது அவன்மீது மோதிக் கொள்ளவே அலைபேசி கீழே விழுந்து விட்டது. குனிந்து எடுக்கிறபோது அவனது உளறல் தெளிவாய் கேட்கிறது.

சாகிற வயசா சாமிங்களா? அந்தக் கண்டார ... சாமி நாசமாப் போகட்டும்

சத்தியமாய் இது உளறலில்லை. நிமிர்ந்து பார்க்கிறேன் சுவரில் கும்பகோணம் குழந்தைகளுக்கு ஒட்டப்பட்டிருந்த பழைய அஞ்சலி சுவரொட்டியைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறான். செத்துப் போன குழந்தைகளின் படம் பார்த்து சாகிற வயசா சாமிங்களா? என்பது உளறலா?

ஏய் என்ன சொன்ன என்பதற்குள் அவன் வேகமாய் நகர்ந்து விட்டான். எனக்கும் தலைமை ஆசிரியரோடு பேச இருக்கவே பேசிக் கொண்டே நகர்ந்து விட்டேன்.

அதன் பிறகு அவனைப் பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிட்டவே இல்லை. பார்த்தால் வீட்டிற்கு அழைத்து வந்து விசாரிக்க வேண்டும்.

குடைந்து கொண்டே இருக்கிறது. செத்துப் போன குழந்தைகளுக்காக அழுபவன் எப்படி கிறுக்கனாக முடியும்? அவன் கிறுக்கன் இல்லை என்றால் யார்? மனிதனா? மனிதன் என்றால் இப்படி அழ மாட்டானே. கொத்துக் கொத்தாய் குழந்தைகள் செத்தாலென்ன? தொழிலாளிகளை யாரோ சுட்டுக் கொன்றால்தான் என்ன? அவனுக்குத்தான் ஆயிரம் வேலைகள் இருக்குமே.

ஒருக்கால், கடவுள் என்று ஒருவன் இருந்தால் அது இவன்தானோ? கடவுள் என்று ஒருவன் இருந்து அது இவனாக இருந்திருக்கும் பட்சத்தில் அவன் இந்தக் குழந்தைகளை சாக விட்டிருக்க மாட்டான். பிறகு யார்தான் இவன். நீண்ட குழப்பத்திற்கு பிறகு தெளிந்தேன்.

சத்தியமாய் இவன் கிறுக்கன்தான். இத்தகைய கிறுக்கர்களால்தான் பூமி சுத்தமாய் வறண்டுப் போகாமல் இந்த அளவிற்கேனும் ஈரத்தோடு இருக்கிறது.

இவனை கிறுக்கனாக விட்டு விடுவோம். முடிந்தால் நாமுமொரு கிறுக்கனாக முயற்சிப்போம்.  

    




10 comments:

  1. மனதில் ஏற்படும் அடக்க முடியாத பதபதைப்பு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தனபால்

      Delete
  2. பிறர் வலி கண்டு(ம்) காணாமல் போகாமல்
    தனக்குத்தானே
    பிதற்றுவாயானால்
    நீயும்
    கிறுக்கனே
    இவன் (இப்படிக்கு)
    கிறுக்கன் அல்ல
    நாட்டில் உள்ள பலர்போல்
    காரிய கிறுக்கன்.

    ReplyDelete
  3. தங்களது பதிவிலிருந்து பார்க்கும்போது அவன் ஏதோ ஒரு பேரிழப்பை எதிர்கொண்டவனாக இருக்கவேண்டும் என்று உணரமுடிகிறது. அவன் நல்ல நிலைக்கு வர பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அய்யா. மிக்க நன்றி

      Delete
  4. Replies
    1. அப்ப பொய்யான ஐநா வேறு இருக்குங்களா?

      Delete
  5. மன்னிக்கவும் ஐயா. அது ஐநா அல்ல ஐயா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...