Wednesday, March 6, 2019

“சோர்வது குற்றம்”

என்ன அங்கீகாரம் இருக்கு நமக்கு?
எதற்கிந்த வேலைகளை விடாமல் செய்ய வேண்டும்?
என்று அவ்வப்போது சோர்வது வாடிக்கைதான். என்றாலும் ஒருபோதும் இந்த நேரத்தை பணம் பார்க்க செலவிட்டிருக்கலாமே என்று நினைத்ததே இல்லை.
சோர்வது குற்றம் என்பதையும் தகுதிக்கு மீறியே நாம் அங்கீகரிக்கப்படுகிறோம் என்பதையும் கடந்த இரண்டுமாத நிகழ்வுகள் உணர்த்தின.
கருஞ்சட்டைப் பேரணிக்காக திருச்சி வந்திருந்த தம்பி கரு.பழனியப்பன் (Karu Palaniappan) என்னை சந்திக்க விரும்பினார் என்பதையும் என்னுடைய “சாமங்கவிய” மற்றும் “சாமங்கவிந்து” ஆகியவைகுறித்து சன்னமாய் சிலாகித்தார் என்ற தகவலையும் இன்னொரு தம்பி Suresh Kathan கூறியபோது எனது ஆதங்கத்தின்மீது சம்மட்டி ஒன்று செல்லமாகத் தட்டுவதை என்னால் உணர முடிந்தது.
சுரேஷோடு உரையாடியபோது,
ஒருமுறை இடப்பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியைவிட்டு வெளியேறி ஆறு இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியபோதும் தாம் போட்டியிடாத 34 தொகுதிகளில் (புதுச்சேரி உள்ளிட்டு) திமுகவையும் அதன் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரிப்பதாக முடிவு செய்ததையும் சொன்னபோது சன்னமாய் வியந்தான்.
அந்த ஆறு தொகுதிகளுக்குள் சிலவற்றில் (எத்தனை என்று சரியாகத் தெரியவில்லை) பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியபோது அந்தத் தொகுதிகளில் இருந்து தனது வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கட்சி விலக்கிக் கொண்டதையும், அப்படி விலகிய வேட்பாளர்களில் ஒருவர்தான் சுரேஷ் காத்தான் உள்ளிட்ட தோழர்கள் வம்படியாகவும் மூர்க்கமாகவும் விமர்சித்த டி.கே.ரெங்கராஜன் என்பதை சொன்ன்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக வியந்தான்.
ஜெயலலிதா அம்மையார் ஒன்னேமுக்கால் லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தபோது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து நியாயம் காத்தவர் ரெங்கராஜன் என்று சொன்னபோது,
“இவை எல்லாம் உன்ன மாதிரி ஆளுங்க ஏன் எங்களுக்கு சொல்லல. சொல்லாதது உங்க குற்றமல்லவா?”
என்றபோது சம்மட்டி ஒரு சின்னத் துளி பிசிறை என் ஆதங்கத்தில் இருந்து தகர்த்தது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் எல்லாக் கிளைகளிலும் AIIEA ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக ஒருநாள் வ்வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் ஆனால் LIC யை தனியாருக்கு தாரை வார்க்க அரசுகள் முயன்றபோதெல்லாம் போராடிய AIIEA உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக நாம் போராடாமல் இருந்தது குற்றமல்லவா? என்று நான் கேட்டதை சுரேஷ் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததை தோழர் Marx Pandian கூறியபோது நியாயத்தை, உண்மையை சொன்னால் இளைஞர்கள் பற்றிக்கொள்ளவே செய்கிறார்கள் என்பது புரிந்தது.
இரண்டாவதாக ஒரு பெருந்துகள் ஒன்றினை என் ஆதங்கத்தில் இருந்து தெறிக்க வைத்திருந்தது சம்மட்டி.
புதுகை புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க உரைகளுள் எனது உரையும் ஒன்று என்று பெருந்தன்மையோடு கூறியிருந்தார் தோழர் Kasthuri Rengan
எனது ஆதங்கத்தில் ஒரு பெரும் பிளவை ஏற்ப்படுத்தியிருந்தது சம்மட்டி
சென்றமாதம் 65/66 பக்கங்களை காக்கைக்குத் தர முடியவில்லை. அப்படியொரு கைவலி. ஒரு கையை மேலே தூக்குவதற்கு இன்னொரு கையின் உதவி தேவைப்பட்டது.
அப்போது தோழர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை தோழர் முத்தையா எனக்கு அனுப்பி இருந்தார். அதில்,
“ எட்வினது பக்கங்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”
என்றிருந்தது.
எனது ஆதங்கம் சுக்கு நூறாய் உடைந்திருந்தது.
சோர்ந்தது குற்றம்.
மன்னித்துவிடுங்கள் தோழர்களே.
என்னைப்போலவே ஆதங்கத்தில் உழலும் தோழர்களே உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கவே செய்யும். ஆனாலும் சொல்கிறேன்,
“சோர்வது குற்றம்”
#சாமங்கவிய சரியாக இரண்டுமணி நேரம்
24.02.2019

அய்யா பயந்துட்டார் தெரியுமா?”

மேல்நிலை முதலாமாண்டு குழந்தைகளுக்கு இறுதித் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. நான்கு அறைகள்.
ஒருபக்கம் மேல்நிலைப் பொதுத் தேர்விற்கான பறக்கும் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று நண்பர்கள் அதற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்காக சென்றுவிட்டனர்.
தமது தந்தை இறந்துவிட்டதால் ஒரு நண்பர் விடுப்பில் இருக்கிறார்.
இந்தநிலையில் இன்னும் ஆறு ஆசிரியர்களை தேர்வறைக் கண்காணிப்பிற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு வந்துவிட்டது.
எப்படி பள்ளியை, திருப்புதல் தேர்வை, நடத்துவதென்று புரியவில்லை.
இதுமாதிரி சூழ்நிலையில் திரு நரசிம்மராவ் அவர்களேகூட வெடித்துவிடக்கூடும்.
இறுகிய முகத்தோடு ஏற்பாடுகளை செய்வதற்காக அறையைவிட்டு வெளியே வருகிறேன். ஒரு அறையை செல்வம் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் செய்தியை சொல்லலாம் என்று அறக்குப் போகிறேன். உள்ளே நுழைகிறபோது சிரித்துக் கொண்டே, “இது என்ன எழுதி இருக்குன்னு பாருங்க சார்”.
அவள்தான் வகுப்பில் முதல் குழந்தை.
“என்ன அபி எழுதி இருக்க?”
பேப்பரைப் பிரித்துக் காட்டுகிறாள்.
“என் சாவுக்கு எங்க அய்யாதான் காரணம்” என்று கொட்டை எழுத்தில் எழுதி இருக்கிறாள். அதிர்ந்துபோய் நிற்கிறேன். அவளோ கெக்கபிக்க என்று சிரிக்கிறாள்.
ஒன்றும் இல்லை,
“தண்ணீர் தொட்டி சென்று நீர் அருந்திவர அனுமதி கேட்டிருக்கிறாள். “பேசாம எழுது பாப்பா” என்று மறுத்திருக்கிறான். அவனது செல்லம் அவள். சிரித்துக் கொண்டே ”உடலைனா தாகத்திலேயே செத்துவிடுவேன்” என்று மிரட்டி இருக்கிறாள். “செய்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறான்.
இப்படி எழுதிவிட்டு,
“நான் எழுதி வச்சுட்டேன். தாகத்துல செத்துட்டேன்னா HM சார் உங்களப் புடிச்சு போலீஸ்ல கொடுத்துடுவார்”
அந்த நேரம் பார்த்து குறுக்க போயிருக்கேன்.
“அய்யாவ புடிச்சு போலீஸ்ல கொடுப்பீங்கதானே?”
”நீயாச்சு உங்க அய்யாவாச்சு. ஆள விடுங்க புள்ளைங்களா” என்றாவாறு போன வேலையை மறந்தவானாக திரும்பிவிட்டேன்.
மதியம் ரவுண்ட்ஸ் போகும்போது அவளைப் பார்க்கிறேன்.
“என்னமோ சவடால் எல்லாம் விட்ட. கொஞ்சம்கூட வெக்கம் மானமே இல்லாம உக்காந்துருக்க”
“நீங்கதானே அன்னிக்கு ப்ரேயர்ல ‘மானம் கருதக் கெடும்’னு சொன்னீங்க. போக அய்யா பயந்துட்டார் தெரியுமா?”
”எனக்கா?”
“உங்களுக்கு வர்ஷினியே பயப்பட மாட்டா. எங்க அய்யா பயப்படுவாராக்கும். அவர் போலீசுக்கு பயந்துட்டு என்ன தண்ணி குடிக்க அனுப்பிட்டாரு தெரியுமா?”
சிரித்தபடியே நகர்கிறேன்.
இடைவேளையில் அறைக்கு வந்த செல்வத்திடம் “பயந்துட்டியாம்ல, சொன்னா”
“நானா?, ரவி தண்ணி கேட்டான். அனுப்பிட்டேன். பாவமா பார்த்தா. தொலையறானு அனுப்பிட்டேன். பயந்துட்டேன்னு சொன்னாளா? நாளைக்கு வச்சுக்கிறேன்”
சிரித்தேன்.
எங்க பள்ளி இப்படித்தான்.
ஊருல எங்க….?
#சாமங்கவிய 18 நிமிடங்கள்
28.02.2019

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...