Saturday, December 15, 2018

மக்கள் ஏன் உங்களை விரட்டி அடிக்கிறார்கள்…

“பேரிடர் ஏற்பட்டபின் மாநில அரசு அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து, அதனடிப்படையில் மத்திய அரசு குழு வரும் முன்பே பேரிடர் சுவடுகள் மறைந்து விடுகின்றன. காரணம் மாநில அரசு நிவாரண வேலைகளை செய்துவிடுகிறது.
பேரிடர் சுவடு மறைவதற்கு முன்பே மத்திய அரசுக் குழுவினர் பார்வையிட வேண்டும்”
என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள் கூறியிருக்கிறார்.
.பேரிடர் ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து மத்திய ஆய்வுக்குழு வந்து பார்வையிடுவதால் எந்தப் பயனும் இருக்காது காரணம் பேரிடர் ஏற்பட்ட அடுத்த கணத்தில் இருந்து மாநில அரசு நிவாரணப் பணிகளில் இறங்கி விடும். எனவே மத்திய ஆய்வுக்குழு அந்தப் பகுதிக்கு வரும் முன்னரே அந்தப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் என்பதே திரு சிதம்பரம் அவர்களின் நேர்காணலின் சாரம்.
“கஜா” புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி ஏறத்தாழ பத்து நாட்களாகிப்போன நிலையில் மத்திய ஆய்வுக்குழு இன்று அப்பகுதியினை பார்வையிடுகிறது.
இரண்டு மூன்று நாட்களிலேயே மாநில அரசு பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடும் என்றால், பத்து நாட்களுக்குப் பிறகு இந்த ஆய்வுக்குழு அந்தப் பகுதிக்கு செல்வதால் என்ன பயன்? அந்தப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பி நாட்களாகி இருக்குமே என்றெல்லாம் யோசிக்க நாம் என்ன தொலைக்காட்சி விவாத சமூக ஆதரவாளர்களா என்ன?
நாளாக நாளாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை மோசமடைந்துதான் இருக்குமே தவிர அது ஒருபோதும் மேம்பாடு அடைந்துவிடாது. காரணம் திரு சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டது போன்றதொரு மாநில அரசு தமிழகத்தில் இல்லை.
இன்னும் ஒருபடி மேலே போய் உண்மையை சொல்வதெனில் இந்தப் பத்து நாட்களுக்குள் டெல்டா பகுதி முற்றிலும் அழிந்து போகாமல் இருப்பதற்கு காரணம் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊழியர்கள், பொதுமக்கள் ஏன் கிழவர்கள் கிழவிகள் உள்ளிட்ட நம் ஈரப் பெருந்திரளின் உதவியும் உழைப்புமே ஆகும்.
ஆகவே கஜா தாக்கிய அடுத்த நாளில் இருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமானதொரு நிலையைத்தான் மத்திய ஆய்வுக்குழு காண இருக்கிறது. அது எத்தகைய நிலையைக் கண்டாலும் அது ஒன்றும் பெரிதாகக் பரிந்துரைக்கப் போவதில்லை என்பதும் அப்படியே ஆய்வுக்குழு பெரிதாகப் பரிந்துரைத்தாலும் மத்திய அரசு அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளப் போவதில்லை என்பதும் திரு சிதம்பரத்திற்கு நன்கு தெரியும். வெகுகாலம் மத்திய நிதி அமைச்சராக வேலை பார்த்தவர் அவர்.
நமக்கு இருக்கிற வியப்பெல்லாம் திரு எடப்பாடி அவர்கள் முதல்வராகவும் திரு பன்னீர்செல்வம் அவர்கள் துணை முதல்வராகவும் இருக்கிற இந்த மண்ணில் மத்திய ஆய்வுக்குழு வருவதற்குள் பேரிடரின் கோர சுவடுகள் மறைந்துவிடும் என்று எப்படி அவரால் கூற முடிந்தது என்பதில்தான்.
ஆனால் ஒரு விஷயத்தை இங்கு இதய சுத்தியோடு ஒத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தமுறை மிகச் சிறப்பாக செய்யப்பட்டன. அல்லது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அதுவும் அமைச்சர் திரு உதயகுமார் அவர்களது பணி பாராட்டுவதற்குரியது. அந்த நாளின் பேரிடர் கட்டுப்பாட்டுக் குழுவின் பணிகள் மட்டும் அந்த அளவில் இல்லாது போயிருந்தால் ”கஜா” கரையைக் கடந்தபோதே ஆயிரக்கணக்கில் மரித்துப் போயிருப்பார்கள். அந்த அளவில் அன்றைய உயிர்ச்சேதத்தை தடுத்து நிறுத்தியதற்காக அவரையும் அவரது குழுவினரையும் நன்றியோடு வணங்குகிறேன்.
ஆனால் புயல் கரை கடந்தபிறகான பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை என்பதைவிட பெருங்குரலெடுத்து வைகிற நிலையில்தான் இருக்கின்றன.
“மக்கள் ஏன் எங்களை விரட்டி அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று திருமதி தமிழிசை கூறியிருக்கிறார். அவரையோ அவரது கட்சியின் சகாக்களையோ பொதுமக்கள் உள்ளே நுழையவிடாமல் தடுத்து விரட்டியிருக்கிறார்கள் என்று அவரது கூற்றில் இருந்து தெரிகிறது. தேசத்தை ஆள்கிற ஒரு பெருங்கட்சியின் இந்த மாநிலத் தலைவரை மக்கள் இப்படி விரட்டியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு மக்களிடம் இருந்தும் இந்தப் பேரிடரில் இருந்தும் அந்நியப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.
மத்திய அரசுதான் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது, மாநில அரசும் ஆளுங்கட்சியும் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடும் மீட்புப் பணிகளோடும் இரண்டறக் கலந்திருக்கிறார்கள் என்றும் இதற்கு பொருளல்ல.
ஹெலிகாப்டரில் பறந்து சேதங்களைப் பார்வையிட்ட முதல்வரும் துணை முதல்வரும் முழுமையாகப் பார்வையிடாமல் பாதியிலேயே திரும்பி இருக்கிறார்கள். மழை பெய்வதால் முழுமையாகப் பார்வையிட முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
அடுத்தநாளே இருவரும் மாண்புமிகு பிரதமர் அவர்களைப் சந்திப்பதற்காக தில்லி சென்றனர். அவர்கள் சென்றபிற்கு சென்னையில் விடாது மழை கொட்டித் தீர்த்தது.
’மழை பெய்வதால் முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்ற முதல்வர் இப்போது சென்னையில் மழை பெய்வதால் சென்னைக்கு வராமல் தில்லியிலேயே தங்கிவிடப் போகிறாரா?’ என்று யாரோ ஒரு நடிகர் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு கிண்டல் மாதிரித் தோன்றினாலும் வலி கலந்த வேதனைக் குரல் இது.
திருமதி தமிழிசை தாம் பாதிக்கப்பட்ட மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார். மழை காரணமாகத் தாம் திரும்பிவிட்டதாக முதல்வர் கூறுகிறார். உள்ளது உள்ளபடி கூறுவதென்றால் இருவரும் மக்களிடம் போகமுடியாமல் போனதற்கு மக்களின் எதிர்நிலையும் கோவமும்தான் காரணம்.
வாய்க்காலில் தேங்கியிருந்த அழுக்கான நீரை எடுத்துதான் பல முகாம்களில் உணவு சமைத்திருக்கிறார்கள். இது சுகாதாரக் கேடானது, நோயைக் கொண்டுவரக் கூடியது, குறிப்பாகக் குழந்தைகளைக் காவுகேட்கக் கூடியது. எனவே இந்த அசுத்தமான தண்ணீரில் சமைப்பதை நிறுத்துங்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் முத்தரசன் கூறியிருக்கிறார். வேறு தண்ணீரே இல்லை. பசியினால் அழுதழுது அந்தக் குழந்தைகள் செத்துவிடாமல் தடுப்பதற்காகவே அந்த அசுத்தமான தண்ணீரை எடுத்து சமைப்பதாக அவர்கள் தோழர் முத்தரசனிடம் கூறியிருக்கிறார்கள்.
தங்களுக்கு ஆளொன்றுக்கு நான்கு என்ற எண்ணிக்கைக்கு குறையாத அளவில் முகாம்கள் ஒதுக்கப் பட்டிருப்பதாகவும், ஆனால் நிதி என்பது சுத்தமாகத் தம்மிடமில்லை என்றும் தம்மிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் புலம்பியதாகவும் தோழர் கூறுகிறார்.
புயல் கோரத் தாண்டவம் ஆடப்போகிறது என்பது அரசிற்கு வெகுமுன்னமே தெரியும். அதன் விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்கும், மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப் படுவார்கள் என்பதை எல்லாம் இந்த அரசு முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தது.
மக்கள் அரசாகக்கூட இருக்க வேண்டாம். குறைந்தபட்சம் மக்களைப் பற்றிக் குறைந்த அளவிற்கு அக்கறை கொண்ட அரசாக இருந்தாலேகூட கீழ்க்காணும் விஷயங்கள்மீது இந்த அரசு கவனம் குவித்திருக்கும். ஒரு தீவிரமான புயல் கரையைக் கடக்குமானால் கீழ்க்காணும் பாதிப்புகள் அரிச்சுவடியானவை
1) மின்சாரம் துண்டிக்கப்படும்
2) குடிதண்ணீர்ப் பிரச்சினை ஏற்படும்
3) குழந்தைகளுக்கான பால் தேவை ஏற்படும்
4) உணவு பற்றாக்குறை ஏற்படும்
5) கொசுப் பிரச்சினை தாங்க முடியாத அளவில் இருக்கும்
6) நோய்களும் தொற்று நோய்களும் சேற்றுப் புண்ணும் ஏற்படும்
7) இயற்கை உபாதைகளுக்காக மக்கள் அவஸ்தைபட நேரிடும்
8) பாம்புகளும் பூச்சிகளும் ஊருக்குள் படை எடுக்கும்
9) இந்தக் காலத்தில் மாதவிடாய் சுழற்சிக்குள் சிக்கும் பெண்களுக்கு நாப்கின் தேவை ஏற்படும்
இவற்றை மிகச் சாதரனமான ஒரு மனிதனால்கூட முன்உணர முடியும். எனில், மாபெரும் அனுபவம் மிக்க ஆளுமைகளை உள்ளடக்கிய ஒரு அரசு எந்திரம் இதை உணர முடியாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.
புயல் கரையைக் கடந்தப் புள்ளியில் இருந்து மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை உணர முடியுமானால் அவற்றை சரிசெய்வது என்பதும் ஒரு அரசிற்கு மிகமிக எளிதான விஷயம்தான்.
மின்சாரம்தான் மிக முக்கியமான விஷயம் என்பதும் அதுதான் முதலில் தடை செய்யப்படும் என்பதும் தெரிந்த அரசிற்கு அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய ‘ஜெனரேட்டர்களை பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் பகுதிகளுக்கு முன்கூட்டியே கொண்டுவந்துவிட முடியும்.
ஒரு முதல்வரின் கூட்டத்திற்கு மின்தடை எல்லாம் ஏற்படப் போவதில்லை. ஆனாலும் ஒருக்கால் எல்லாம் தாண்டி ஒருக்கால் மின்தடை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்பதற்காக ஜெனரேட்டர்களை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு சேர்ப்பவர்களால் பேரிடர் பரிசளிக்கும் கோர இருட்டில் இருந்து மக்களை காப்பதற்கு ஜெனரேட்டர்களைக் கொண்டு வந்து இருக்க முடியும்.
இருக்கிற குடிநீர்த் தொட்டிகளை எல்லாம் நல்ல தண்ணீர் கொண்டு முன்னதாகவே நிரப்பி வைத்திருக்க முடியும். முகாம்களில் தண்ணீர் பாக்கெட்டுகளை முன்னதாகவே சேகரித்து வைத்திருக்க முடியும். ஒரு அறிக்கை வெளியிட்டு கேட்டிருந்தால் போதும் பேரிடருக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரும் தன்னார்வலர்கள் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே எந்தவித சிரமும் இன்றி கொண்டு வந்து குவித்திருப்பார்கள். அதை முறையாக மேலாண்மை செய்திருந்தாலே போதும்.
உணவிற்குத் தேவையான பொருட்களை, சமைப்பதற்கான பாத்திரங்களை, தட்டுகளை தம்ளர்களை, போர்வைகளை, சோப்புகளை, நாப்கின்களை, மருந்துகளை புயலுக்கு முன்னரே கொண்டு வந்து சேர்த்திருக்க முடியும்.
இவற்றை எல்லாம் செய்யாதது குற்றம் என்றால் ஈர நெஞ்சம் கொண்ட பொதுமக்கள் அனுப்பி வைக்கும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் வேலையை செய்யாதது பெருங்குற்றம்.
பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றிற்கு பொருட்களை கொண்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்து முடித்துவிட்டு திரும்ப இருந்தவர்களை கொஞ்சம் இருக்கச் சொல்லி சாய்ந்து கிடந்த தென்னை மரங்களில் இருந்து இளநீர்த் தேங்காய்களையும் வாழைக் காய்களையும் அந்த வேனிலே ஏற்றி அனுப்பினார்கள் அந்த மக்கள் என்ற செய்தியைப் படித்ததும் என்னை அறியாமலே கண்கள் உடைத்துக் கொண்டன.
நிவாரணப் பொருட்களை முறையாக பகிர்ந்தளிக்கும் நிர்வாகத்தை சரியாக செய்யாமல் தங்களுக்கு குடிப்பதற்கு ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்காதா என்று நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துகிற அளவிற்கு அவர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அரசு. இதன் மூலம் நிவாரணம் கொண்டு வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்ப மனமில்லாமல் தேங்காய்களோடும் வாழைக் குழைகளோடும் அனுப்பி வைத்த மக்களை வழிப்பறிக் கொள்ளையர்களைப்போல பார்க்க வைத்திருக்கிறது இந்த அரசு.
விழாக்கள், அரசுக் கொண்டாட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்காகவெல்லாம் தற்காலிக கழிவறைகளை ஏற்படுத்தித் தரத் தெரிந்த இந்த அரசு நிர்வாகம் இயற்கை உபாதைகளால் துடித்த எம் மக்களுக்கு தற்காலிகக் கழிவறைகளை ஏற்படுத்தித் தந்திருக்க முடியும்.
இத்தனை ’இல்லைகள்’ இருந்த போதிலும் மின்ஊழியர்களின் தியாகம் செறிந்த பணியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்லிவிட வேண்டும்.
இதை எல்லாம் செய்யத் தெரியாத அரசு இது என்றெல்லாம் நாம் கருதிவிடக் கூடாது. இதை எல்லாம் சரியாக செய்யத் தெரிந்த அரசாங்கம்தான் இது. செய்யக் கூடிய ஆற்றல் இருந்தும் ஏன் செய்யவில்லை என்பதுதான் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மை ஒருவித சந்தேகத்தோடு பார்க்கக் கோருகிறது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் நீர் வந்து டெல்டா விவசாயி சாகுபடி செய்திருக்கிறான். ஏக்கருக்கு 36 மூட்டை விளையும் என்று ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறான். அப்படி ஒருக்கால் அவனது கனவு நிறைவேறி இருக்குமானால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ரெசார்ட், 10 வழிப்பாதை என்றெல்லாம் அவனிடம் படம் காட்ட முடியாது.
இயற்கை விவசாயிக்கு எதிராக விளையாடியிருக்கிறது. நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஆளும் வர்க்கத்தின் அரசியலாக இது இருக்குமானால் ஒன்றை சொல்லி வைப்போம்,
“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்”

நன்றி: “காக்கை டிசம்பர் 2018”

Monday, December 10, 2018

மாற்றி அமைக்கப்படவேண்டிய இட ஒதுக்கீடு விகிதாச்சாரம்

இன்றைய செய்தித்தாள்களில் கிடைக்கும் மூன்று செய்திகள் மிகவும் முக்கியமானவையாகப் படுகிறது.
1) ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த வாக்குப்பெட்டி
2) சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படும் அறைக்குள் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள்
3) இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தோழர்
K பாலகிருஷ்ணனது நியாயமான கோரிக்கை
கடந்த ஏழாம் தேதியன்று தெலுங்கானா, ராஜஸ்தான், சதீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் கோடையில் நடைபெற உள்ள பராளுமன்றத் தேர்தல் முடிவினை எதிரொலிக்கும் என்று கருதுவதால் மொத்த தேசமும் ஆர்வத்தோடு அதற்காக காத்திருக்கிறது. இது கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இந்த முடிவுகளை அறிய ஆவலாக உள்ளன. இந்த முடிவுகளை ஒட்டியே அவை பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கான உத்திகளைக் கையெடுக்கும்.
பொதுவாக தேர்தல் என்பது வாக்காளர்களுக்கும் வேட்பாளார்களுக்கும் இடையிலானதொரு செயல்பாடு. என்னைத் தேர்ந்தெடுத்தால் இதை இதை செய்வேன் என்று வாக்காளர்களிடம் வேட்பாளார்கள் வாக்குறுதி தருவதும் அதற்கேற்ப தமக்கு தேவையான அல்லது தமக்கு நம்பிக்கையான வேட்பாளரை வாக்காளர் தெரிவு செய்வது என்பதும் தேர்தலில் செயல்பாடாக இருக்க வேண்டும்.
கட்சிகள் எங்களைத் தேர்ந்தெடுத்தால் இதை இதை செய்வோம் என்று வாக்குறுதிகளைத் தருவதும் வாக்காளர்கள் தாம் நம்பும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதும் இந்தச் செயல்பாட்டின் மேம்பட்ட வடிவமாகும்.
சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். வீடு வந்து வாக்கு கேட்டவருக்கு வீடு தேடி வந்தார் என்பதற்காகவே வாக்களிப்பவர்கள் உண்டு. முதலில் வந்த வேட்பாளருக்கு முதலில் வந்ததற்காகவே வாக்களிப்பவர்கள் உண்டு. தன் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தார் என்பதற்காக அவருக்கு வாக்களித்தவர்கள் உண்டு.
போயும் போயும் அந்த ஆளுக்கு ஏன் ஓட்டுப் போட்ட என்றால் ”கைய காலப் புடிச்சு கெஞ்சினான் என்ன செய்ய சொல்ற” என்று கூறிபவர்களும் உண்டு.
பிரபலங்களின் தலையீடும் கவர்ச்சியும்கூட தேர்தலில் இடையீடு செய்தன.
இந்த செயல்பாட்டை ஜாதி இடையீடு செய்தது, மதம் இடையீடு செய்தது. இப்போது இவற்றோடு சேர்த்து பணமும் சரக்கும் இடையீடு செய்கின்றன.
கட்சி விசுவாசம் கணிசமான வாக்கு வங்கிகளை கட்சிகளுக்கு உருவாக்கின. அந்த வங்கிகளைக் கூட மேற்சொன்ன காரணிகள் உடைக்கவே செய்கின்றன.
இவை அனைத்தும் அத்தனை கட்சிகளுக்கும் பொதுவானவைதான். மேற்சொன்ன அனைத்து காரணிகளையும் அனைத்து காரணிகளையும் அனைத்துக் கட்சிகளும் கை எடுத்து மற்ற கட்சிகளுக்கு சேதாரத்தை தருவதற்கு முயற்சி செய்கின்றன.
இதில் பாஜக வாக்காளார்களோடு மட்டும் தன் செயல்பாட்டை முடித்துக்கொள்ள மறுக்கிறது. தேர்தல் கமிஷன், வாக்குபெட்டி ஆகியவற்றிடம்கூட அது வாக்கு கேட்கிறது. ஆச்சரியம் என்னவெனில் அதற்கு பலனும் கிடைக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னாலும் இன்னும் வெளிப்படையாக சொல்வதெனில் முற்றுமாக நிராகரிக்கப்பட்டபிறகும்கூட அது ஆட்சி அமைக்க முயல்வதும் அதில் அது வெற்றி பெறுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது.
இந்தமுறை தோற்றுவிட்டாய். தளர்ந்துவிடாமல் முயற்சி செய். அடுத்தமுறை வெற்றியடையலாம் என்போம். பாஜகவோ இந்த முறை தோற்று இந்தமுறையே ஆட்சி அமைக்கும்.
இந்த வெளிச்சத்தில்தான் முதல் இரண்டு செயல்களுக்கும் பாஜகவிற்கும் தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் “கிசாஞ்ச்” தொகுதிக்கு உட்பட்ட “சகாபாத்” என்ற இடத்தில் சாலயில் வாக்குப்பெட்டி கிடந்த செய்தியை இன்றைய தீக்கதிர் சொல்கிறது. அநேகமாக அந்த இடம் வாக்குச்சாவடிக்கும் வாக்கு எண்ணும் இடத்திற்கும் இடையேயான பகுதியாக இருக்க வேண்டும்.
வாக்குச் சாவடியிலும் வாக்கு எண்ணும் இடத்திலும் பணியாற்றிய அனுபவத்தில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும். அவ்வளவு பாதுகாப்பானது வாக்குச் சாவடிக்கும் வாக்கு எண்ணும் இடத்திற்குமான வாக்குப் பெட்டிகளின் பயணம்.
சதீஸ்கர் மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்பட்டு வரும் இடத்திற்குள் அத்தனைப் பாதுகாப்பையும் மீறி இரண்டு ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள் மடிக்கணினியோடு நுழைந்திருக்கிறார்கள் என்கிறது இன்றைய விடுதலை. சாத்தியமே இல்லாத இது எப்படி சாத்தியமானது?.
அம்பானிக்கும் மோடி அவர்களுக்கும் இடையேயான உறவின் வெளிச்சத்தில் இதைப் பார்த்தால் பிண்ணனி விரிகிறது. வாக்குப் பெட்டிகளை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்ற நடந்த முயற்சியா இது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் வாக்குச் சாவடிகளை, வாக்குச் சாவடிகளுக்கும் வாக்கு எண்ணுமிடத்திற்கும் இடையேயான பாதைகளையும், பெட்டிகள் பாதுகாக்கும் இடத்தையும் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வகையில் கண்காணிக்க வேண்டும்.
மக்கள்தொகையில் 18 விழுக்காடு தலித்களும் ஒரு விழுக்காடு பழங்குடியினரும் இருந்தனர். அப்போது 18+1 என்கிற அளவில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது தலித்கள் 19 சதவிகிதமும் பழங்குடியினர் ஒரு சதவிகிதமும் என்று இருப்பதால் இட ஒதுக்கீட்டை 19+1 என்று மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் K பாலகிருஷ்ணன் அவர்கள் கோரியுள்ளார்.
இதை மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையாகவே கொள்ள வேண்டும். சமூக அக்கறையுள்ள இயக்கங்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதும் ஒன்றிணைந்து இயக்கங்களைக் கட்டுவதும் அவசியம்.
#சாமங்கவிந்து 30 நிமிடங்கள்
09.12.2018

Sunday, December 9, 2018

காமிக்ஸ் எழுதுவோம்

சமீப காலமாக, நாம் வெகு காலமாக கரடியாய் கத்திக் கொண்டிருக்கும் இரண்டு கருத்துக்களை தம்பி Karu Palaniappanதான் பேசுகிற கூட்டமெங்கும் பேசி வருகிறார். நான் கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சமோ கொஞ்சமாய் இருக்கிற வாசக கூட்டமும் பையப்பைய கேட்கிற கூட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றும் ஆகவே எழுதுவதைவிடவும் உரையாற்றக் கிளம்ப வேண்டும் என்றும் முன்பு கத்திக் கொண்டிருப்பேன். இப்போதெல்லாம் ’தம்பி பழநியப்பன் இப்படி கூறுகிறார்’ என்று சரியாக நான்கு வார்த்தைகளை சேர்த்து கூறுகிறேன். உண்மையிலுமே நாமாக சொல்வதை விடவும் ஒரு பிரபலத்தை மேற்காட்டினால் போய் சேரத்தான் செய்கிறது. இதை அவரிடமே ஒருமுறை சொன்னேன்.
அவரோடு ஒவ்வொருமுறை அலைபேசும்போதும் அவசியம் YOUTUBE ஐ பயன்படுத்துங்கள் என்பார். அந்தத் தொழில்நுட்பம் பிடிபவில்லை. யாரேனும் தோழர்கள் உதவினால் செய்யலாம் என்றிருக்கிறேன். ஆனால் அவரது வேண்டுகோளை ஏற்று ஏறத்தாழ சென்ற மாதம் நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கிற யாருக்கும் மறுக்காமல் தேதி கொடுத்தேன். அந்த வகையில் ஏழு கூட்டங்களுக்கு தேதி கொடுத்திருந்தேன்.
முதல் கூட்டத்திற்கு ‘டெங்கு’ போல இருந்ததால் போக முடியவில்லை. இரண்டாவது கூட்டத்திற்கு போய் வந்தேன். அடுத்த ஐந்து கூட்டங்களையும் “கஜா” காலி செய்தார்.
இந்த மாதம்கூட கேட்கிறவர்களுக்கெல்லாம் மறுக்காமல் தந்து கொண்டுதான் இருக்கிறேன்.
அது ஒரு புறம்.
சமீபத்தில் பழநியப்பனும் தோழர் சுப.வீ அவர்களும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தின் காணொலியைக் கேட்டேன். போகிற போக்கைப் பார்த்தால் பையைப் பைய நானும்கூட காணொலி வாசகனாகவே மாறிப்போவேன் போல.
அதில் பேசும்போது பழநியப்பன் எழுத்தாளர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்தார். இருக்கிற கொஞ்ச நஞ்சம் வாசகனும் தனக்கு வாசிப்பதற்கு நேரம் இல்லை என்று கருதுகிறான். வாசிப்பதற்கு அவன் ஒதுக்கும் கொஞ்ச நேரத்தில் மிகவும் அழுத்தமான ஆழமான எழுத்தை அவனுக்கு கொடுத்தால் அயர்ந்து விடுகிறான். இதனால் வாசிப்பதையே நிறுத்திவிடும் நிலைமைக்கு அவன் தள்ளப்படுகிறான்.
எனவே ஆழமான விஷயங்களை போகிற போக்கில் வாசித்துவிட்டுப் போகிறமாதிரி எளிய நடையில் தர வேண்டும் என்றார். தன்னைக் கேட்டால் எழுத்தாளர்கள் இனி ”காமிக்ஸ்” வழியாக தம் எழுத்துக்களைக் கொடுப்பதே சரி என்றார்.
நாம் காமிக்ஸ் எழுத்தாளார்களாக மாறுகிறோமோ இல்லையோ பழநியப்பன் காமிக்ஸ் பேச்சாளாராகவே மாறி வருகிறார். அயர்வே இல்லாமல் எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் அவரைக் கேட்க முடிகிறது.
கூட்டத்தில் இருந்த நிறையபேர் சிரித்தார்கள். அனால் அது கொள்வதற்கு உரிய கருத்து. வாசகன் ஆழத்திற்கு எதிரியாக இல்லை. நல்லதை கொள்வதற்கு அவன் ஒருபோதும் தயங்குதே இல்லை. அனால் அதற்காக அவன் சிரமப்படத் தயாரில்லை.
வாசிப்பதில் மட்டும் அல்ல, பயணிப்பதில், உறங்குவதில், உண்பதில், குளிப்பதில், என்று எதிலும் அவன் சிரமப்படத் தயாராயில்லை. உண்மையை சொன்னால் கொஞ்சம் சொகுசுப் பேர்வளியாய் ஆகிப்போனான். அவனை சிரமப் படுத்தாமல் அவனுக்கு நல்லதைத் தர முடியுமா என்பதை பரிசீலிக்கவும் தட்டுப்பட்டால் அதை நடைமுறைப் படுத்த முயற்சிக்கவும் வேண்டும்.
வேண்டுமானால் இதை இப்படி சொல்லலாம், “அவன் சிரமப்படாமல் சொகுசாய் வாசிப்பதற்காக நாம் கொஞ்சம் சிரமப்பட்டு எழுதுவதற்கு பயிற்சிபெற வேண்டும்.
நாமும் காமிக்சை பரிட்சித்துப் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்ததாய் தோழர் சுபவீ பேச வந்தார்.
பெரியார் குறித்த சில நூல்களை தாம் காமிக்சாக எழுதிக் கொண்டிருப்பதாகவும், அவற்றில் சில அச்சுக்கே போயிருப்பதாகவும் கூறினார். ஆங்கிலத்தில் இப்படி சொல்வார்கள்,
“GREAT PEOPLE THINK ALIKE”
அருணாச்சலம்கூட ஆண்டவன் சொல்லியபிறகுதான் செய்வாராம். ஆனால் பழநியப்பன் நினைத்த மாத்திரத்திலேயே அதை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார் அவரது தந்தை வயதொத்த தோழர் சுப.வீரபாண்டியன்.
காமிக்ஸ் வாசிப்பது சுலபம். அதை எழுதுவது அவ்வளவு கஷ்டம். காரண காமிக்ஸ் குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கானதை தயாரிப்பது எப்போதுமே கஷ்டம்.
குழந்தைகளுக்கான காமிக்சைத் தயாரிப்பதே சிரமம். நாம் எழுதப்போவதோ குழந்தைகளாய் மாறிப்போன மூத்த வாசகனுக்கு. அவனுக்கு எழுதுவது மிக மிக சிரமம். ஆனால் அதை செய்ய வேண்டும். செய்தே ஆக வேண்டும்.
மக்களின் எதிரிகள் அவனை ஏமாற்றுவதற்காக எந்த சிரமத்தையும் தாங்கிக்கொள்ள தயாராகி விட்டான். விதவிதமான வலைகளை வைத்திருக்கிறான். மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனில் மக்கள் ஊழியர்கள் இன்னும் பேரதிகமாய் துயரங்களைத் தாங்க வேண்டும். அவன் விரும்புகிற சூடில், அவன் குடிக்கிற சூடில் தரவேண்டும்.
இந்த நேரத்தில் ராணி காமிக்சின் ஐநூறு புத்தகங்களில் நூறு PDF வடிவில் வந்திருப்பதாக எங்கோ படித்தேன். அறிந்தவர்கள் இணைப்பைத் தந்தால் மகிழ்ந்து நன்றி சொல்வேன்.
ஆக,
YOUTUBE ஐப் பயன்படுத்த முயற்சிப்பது, மக்களுக்கான மேடைகளில் உடல்சிரமத்தைத் தாண்டியும் பங்கேற்பது, காமிக்சைக்கூட முயற்சிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
நீங்கள்?
#சாமங்கவிந்து பதினோறு நிமிடங்கள்

Saturday, December 8, 2018

நாப்கினுக்கு உரிய பங்கு பற்றியும்

”பெண் பிள்ளை
பிறந்ததற்காய்
இனிப்பு வழங்குவோன்
மனசெல்லாம் கசப்பு”
என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இன்னமும் அந்த வரிகளுக்கு உயிர் என்பது இருக்கவே செய்கிறது என்றாலும் ஆக விரைவில் அந்த வரிகள் பழசாய் பழங்கதையாய் போய்விடும் என்றே நம்புகிறேன். குறிப்பாக கல்வித் துறையில் பெண்குழந்தைகளின் பாய்ச்சலும் முன்னெடுப்பும் இந்த நம்பிக்கையை முப்பது ஆண்டுகால பள்ளி ஊழியனான எனக்குத் தருகின்றன. காரணம் கல்வியில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்குழந்தைகளை பெண்குழந்தைகள் எல்லா நிலைகளிலும் விஞ்சியே நிற்கிறார்கள்.
பெண்குழந்தைகள் பள்ளிக்குள்ளேயே நுழைய முடியாத காலம் இருந்தது.
நுழைந்தார்கள்.
ஆனாலும் வயதுக்கு வந்த புள்ளியில் அவர்கள் படிப்பு நின்றது.
அதிலிருந்தும் பையப் பைய மீண்டார்கள்.
ஆனாலும் ஆண்குழந்தைகளின் ஆதிக்கமே தொடர்ந்தது.
ஒரு புள்ளியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பெண் குழந்தைகள் எழுந்தார்கள், கொஞ்சம் சிரமப்பட்டு சாதிக்கத் தொடங்கினார்கள், கொஞ்சம் கொஞ்சமாக சாதிப்பது அவர்களது இயல்பாக மாறியது.
இதற்கான பல காரணங்களை அலசினார்கள். அவற்றில் எதையுமே மறுக்கவில்லை நான். ஆனால் பெண்குழந்தைகளின் இந்த பாய்ச்சலுக்கும் சாதித்தலுக்குமான காரணங்களுள் நாப்கினுக்கு உரிய பங்கு பற்றியும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரினேன்.
நிறையபேர் முகம் சுளித்தார்கள். சிலர் நான் அசிங்க அசிங்கமாய் பேசுவதாய் நினைத்தார்கள். சிலர் இது ஆபாசம் என்றெல்லாம் என் காதுபடவே கூறினார்கள்.
எனக்கான வெளியும் வாசிக்கும் திரளும் விரிவடைந்தபோது “பள்ளிக்கொரு இன்சினரேட்டர்” என்ற கட்டுரையை அப்போது ”தினமணி டாட் காமில்“ நான் எழுதிக் கொண்டிருந்த தொடருக்கு அனுப்பினேன். மாற்றச் சொல்லி கேட்பார்கள் என்று நினைத்திருந்தேன். உமா சக்தி அழைத்து “செமப்பா. சான்சே இல்ல. இத மொதல்ல வாசிச்சது நான்தான் என்பதே சந்தோசமா இருக்கு” என்று எப்போதும்போல் பொய்யாய் முதுகெங்கும் தட்டினார்.
வாசித்தபிறகு வழக்கம்போல ஏச்சுகளும் வரத்தான் செய்தன. ஆனால் நிறைய தோழர்கள் உச்சி முகர்ந்தார்கள். பல பள்ளிகளில் அதன்பிறகு இன்சினரேட்டர்களை நன்கொடையாளர்கள் வாங்கிக் கொடுத்தார்கள் என்கிற செய்திகள் வரத் தொடங்கின. என் பள்ளிக்கேகூட இந்தக் கட்டுரைதான் ஒரு இன்சினரேட்டரைக் கொண்டுவந்து சேர்த்தது.
பருவம்எய்திய பின்னரும் குழந்தைகள் வந்தாலும் அவர்களுக்கான மாதச்சுழற்சி காலத்தில் பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டனர். துணியை மாற்றுவது அதை யாருக்கும் தெரியாமல் செய்வது, தீட்டுத் துணியை அலசிக் காயவைப்பது போன்றவற்றிற்காக பிள்ளைகள் பட்ட சிரமமும் அவமானமும் சொல்லி மாளாதது. பள்ளிகளில் போதுமான அளவு கழிவறை வசதிகளும் இல்லாது இருந்தது. எனவே பள்ளிகளுக்கு வந்தாலும் அந்தக் காலத்தில் அவர்கள் விடுப்பெடுத்து வீட்டில் பதுங்கவேண்டி இருந்தது.
யோசித்துப் பாருங்களேன், மாதம் மூன்றுமுதல் ஐந்து நாட்கள் விடுப்பெடுக்க வேண்டிய அவசியம் இருந்தால் குழந்தைகள் எப்படி படிப்பிலே சாதிக்க முடியும்.
இந்தப் புள்ளியில் “நாப்கின்” புழக்கத்திற்கு வருகிறது. மாத சுழற்சிக் காலத்தில்ன் விடுப்பெடுக்க வேண்டிய அவசியம் பணக்காரக் குழந்தைகளுக்கு இல்லாமல் போகிறது. தமிழக அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக நாப்கினை வழங்குகிறது.. ஏறத்தாழ எல்லாக் குழந்தைகளும் மாதம் முழுக்க பள்ளிக்கு வந்து படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கிறது. பயன்படுத்துகிறார்கள், சாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இப்போதும் ஒரு பிரச்சினை இருந்தது. நாப்கின்களை டிஸ்போஸ் செய்வதில் சிரமம் இருந்தது. இன்சினரேட்டர்களின் வரவு இதையும் வருங்காலத்தில் சரி செய்யும் என்று நம்பலாம்.
ஆக, நாப்கின்களின் வரவு பெண்பிள்ளைகளின் கல்விக்கான உடைசலைத் தந்த கருவி என்பதும் இன்சினரேட்டர் பெரு உடைசலைத் தந்த கருவி என்பதும் அவசியம் கொள்ளத் தக்கவை ஆகும்.
ஆக, இன்சினரேட்டர் பெண்கல்விக்கான ஒரு முக்கிய கருவி எனில் இன்சினரேட்டரில் கை வைத்தால் பெண்கல்வி கொஞ்சம் ஊனப்படும் என்பதையும் நாப்கினில் கை வைத்தால் பெண்கல்வி பெருமளவு காயப்படும் என்பதையும் சேர்த்தேதான் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் விரித்துப் பார்த்தால் பெண்கல்வியை சேதப்படுத்த வேண்டும் என்று அதன் எதிரிகள் நினைப்பார்கள் எனில் அவர்கள் இதிலும் கை வைப்பார்கள் என்ற கவனமும் நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.
பஞ்சாப்பில் இதைத் தொடங்கி இருக்கிறார்களோ என்ற அச்சத்தை 05.11.2018 தீக்கதிர் செய்தி தருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குந்தால் என்ற கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் கழிவறையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு நாப்கின்கள் கிடந்திருக்கின்றன. இதை அறிந்த ஆசிரியைகள் யார் அந்த காரியத்தை செய்தது என்று கேட்டிருக்கிறார்கள். தண்டனைக்குப் பயந்து அந்தக் குழந்தைகள் மௌனமாக இருந்திருக்கிறார்கள்.
கோவமடைந்த அந்த இரண்டு ஆசிரியைகளும் அனைத்து குழந்தைகளையும் உடைகளை களையச் சொல்லி சோதிருக்கிறார்கள். அவமானத்தால் கூனிக் குறுகிய குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நடந்ததைக்கூறி அழுதிருக்கிறார்கள்.
ச்விஷயம் முதல்வர் திரு அமரீந்தர்சிங்கிடம் போகவே அவர் விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறார். உண்மைதான் என்று தெரிய வரவே அந்த இரண்டு ஆசிரியைகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். துறைவாரி நடவடிக்கை உண்டு என்று உறுதி தந்திருக்கிறார்கள்.
இதை பெண்கல்விக்கு எதிரான விஷயமாகவே பார்க்க வேண்டும்.
பள்ளிக் கழிவறையில் நாப்கின் கிடந்ததென்றால் இன்சினரேட்டர் வைக்காத பள்ளி நிர்வாகம்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஆகவே நாம் மீண்டும் வலியுறுத்துவது இதைத்தான்,
இதை ஏதோ குழந்தைகளை அம்மணப்படுத்திப் பார்த்த குற்றமாக மட்டும் பார்க்காமல் பெண்கல்வியை சீர்குலைக்கும் முயற்சியாகவே இதைப் பார்த்து அதற்குரிய தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோருகிறேன்
#சாமங்கவிய 55 நிமிடங்கள்
02.12.2018

Thursday, December 6, 2018

தாகமே விஷமாகி ...

ஒரு காணொலி, அது வழிப் பொருந்திப் பெருகி வழியும் செய்திகள், அதனூடே மெல்லிசாய் நீண்டு பரவும் அரசியல் ஆகியவை குறித்து முடிந்த மட்டும் இன்று உரையாடலாம் என்று படுகிறது.
சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் ‘புதுகை பூபாலம்’ ( Pragadeeshwaran Poobalam ) கலைக் குழு நிகழ்த்திய நிகழ்ச்சியைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்.
அதில் ஒரு இடத்தில் செந்திலும் பிரகதீஸ்வரனும் ஜப்பான் பிரதமரும் இந்தியப் பிரதமருமாய் மாறுவார்கள்.
ஜப்பான் பிரதமர் நமது பிரதமரைப் பார்த்து கூறுவார்,
“வாங்க, வாங்க, உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”
உடனே இந்தியப் பிரதமர் பதில் கூறுவார்,
“வாங்க சார், வாங்க, நானும் உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”
ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர். அதைப் பகடி செய்ய வேண்டும். எதையாவது செய்யுங்கள் என்று திரு நாகேஷ் அவர்களிடம் ஒரு இயக்குநர் கூறியிருந்தால் அவர் ஒரு சக நடிகரைத் துணைக்கு வைத்துக் கொண்டு எப்படி செய்திருப்பாரோ அதைப் போலவே பிரகதீஸ்வரனும் செந்திலும் இணைந்து கலக்கியிருந்தார்கள்.
நாகேஷ் இன்று இருந்து இவர்களது நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் இவ்வளவு எளிய முறையில் இதைக் கொடுக்க தன்னால் முடிந்திருக்காது என்றுகூட சொல்லி இருக்கலாம். அப்படி ஒரு கலக்கல்.
இங்கு டெல்டா பகுதியே சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது. உலகத்தில் உலை கொதிக்க நெல்லைத் தந்தவன் ஒரு கவளம் சோத்துக்காக ஈர நெஞ்சத்தினர் யாரேனும் வேனில் கொண்டு வருகிறார்களா என்று வீதியில் தவம் இருக்கிறான்.
அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் ஒரு குவளை நல்ல தண்ணீருக்காக கையேந்தி நிற்கிறான்.
இப்படியே போனால் தாகமே விஷமாகி பலரை சாகடிக்கலாம்.
மாற்றுத் துணி இல்லை
ஏதுமற்று கட்டியிருந்த துணியோடு நிர்க்கதியாய் நிற்கிறான்.
அன்றுதான் பூப்படைந்தாள் ஒரு செல்ல மகள். தென்னந்தோபிற்குள் இருக்கிறது அவர்களது வீடு. வீட்டிற்கு அருகே குடில் கட்டி தங்க வைக்கிறார்கள். அந்தக் குடிலின்மேல் தென்னை மரம் ஒன்று விழுகிறது . நசுங்கிக் கொண்டே கதறுகிறாள்.
‘கஜா’ நமது பிரதமர் போல் பெருங்குரல் எடுத்து அலறுகிறது. பிரதமரின் பெருங்குரல் முன்னால் காணாமல் போகும் விவசாயியின் குரல்போல கஜாவின் பெருங்குரலின்முன் காணாமல் போகிறது அந்தக் குழந்தையின் வலிகுரல்.
தலைசுற்றி வீட்டுக்குள் அழைக்கவேண்டிய மகளுக்கு கோடித் துணிக்காக ஒரு தகப்பனும் தாயும்கூட ஒரு வேனிற்காகத்தான் கையேந்தி தவம் இருந்தார்கள்.
சாய்ந்த தென்னைகளைப் பார்த்து செத்தே போனான் ஒருவன்.
யாரேனும் வர மாட்டார்களா?
ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?
தோள்பற்றி ஆசுவாசப்படுத்த மாட்டார்களா?
பார்த்துக்கலாம் விடு. நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையாய் ஒரு நாலு வார்த்தை பேச மாட்டார்களா?
தற்கொலை செய்து கொண்டவன் பிணம் பார்த்து,
“ஏண்டா, ஏண்டா, இப்படி. என்ன ஆச்சு. நான் இல்லையா. பார்த்துக் கொள்ள மாட்டேனா? நான் இருக்கேன் என்பதை எப்படிடா மறந்தாய்?” என்று ஒப்புக்கேனும் யாரும் பேச மாட்டார்களா?
என்றுதான் எம் மக்கள் ஏங்குகிறார்கள்.
செத்துப் போனவர்களைப் பார்த்து உயிரோடிருப்பவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்ற உண்மை தெரியுமா பெரியோர்களே.
ஒரே ஒரு முறை வந்திருந்து எம் மக்களைப் பார்த்து வழக்கம்போல கொஞ்சம் பொய்களைப் பேசிவிட்டுப் போயிருந்தால்கூட போதும்.
தங்கள் அத்தனை சோகத்தையும் மறந்து சாய்ந்து கிடக்கும் தென்னையிலிருந்து நீர் அதிகமுள்ள இளநீராய்ப் பார்த்து உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “பாரதப் பிரதமர் வாழ்க” என்று தங்களைப் பார்க்க வந்ததற்காய் எம் வெள்ளந்தி மக்கள் உங்களை நூறாண்டு வாழவேண்டும் நீங்கள் என்று வாழ்த்திவிட்டுப் போயிருப்பார்கள்.
ஏன் பிரதமரே நீங்கள் வரவில்லை?
வாக்குகளையும் அம்பானி அதானியையும் தவிர யார் குறித்தும் எது குறித்தும் கவலைப்படவே மாட்டீர்களா பிரதமர் அவர்களே?
எங்கள் அழுகையின் வலி உமக்குப் புரியாதா? அல்லது எங்களது சோகத்தை உதாசீனம் செய்கிறீர்களா?
காவேரிக்கரையில் பிறந்து படித்து ஆளான உங்கள் ராணுவத்துறை அமைச்சர் பேரிடர் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டுக் கொள்ளாததால்தான் ராணுவத்தை அனுப்பவில்லை என்கிறார்.
கொஞ்சம்கூட ஈரமே இல்லையா தாயே?
சொல்லி அனுப்பினால்தான் சாவு வீட்டிற்கு வருவீர்களா மேடம்?
நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது இங்கே வந்த ஏதேனும் ஒரு நாட்டு அதிபர் விஷயத்தைக் கேள்விபட்டு எம் மக்களைப் பார்க்க இங்கு வந்து அந்த நேரம் நீங்கள் இந்தியா வந்தால் அவரைப் பார்க்க இங்கே வந்திருப்பீர்களா?
இல்லை வரட்டும் அவர் தில்லிக்கு என்று அப்போதும் இறுக்கமாகவே இருந்திருப்பீர்களா.
ஒன்று சொல்கிறேன் பிரதமர் அவர்களே,
இப்போது எம் மக்களிடம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். வரமாட்டீர்களா என்று தவிக்கிறான்.
வர மறுக்கிறீர்கள்.
ஆறேழு மாதங்களுக்குள் எழுந்து விடுவான். தேர்தல் வரும். நீங்களும் வருவீர்கள்.
இப்போது ஏதுமற்று இருக்கும் அவனிடம் ஒரு வாக்கு இருக்கும் அப்போது.
அதற்குள் அவனுக்கு அந்த வாக்கின் பொருள் புரிந்திருக்கும்.
#சாமங்கவிய 17 நிமிடங்கள்
01.12.2018

Wednesday, December 5, 2018

என் கல்வி என் உரிமை



”என் கல்வி என் உரிமை” அடுத்த பதிப்பு வந்துவிட்டது.

ஆறாவது பதிப்பு 

எவ்வளவுதான் அடக்கிப் பார்த்தாலும் அனைத்தையும் மீறி மகிழ்ச்சி கசியவே செய்கிறது

Tuesday, December 4, 2018

வாக்குகளையும் அம்பானி அதானிகளையும் தவிர....

ஒரு  காணொலி, அது வழிப் பொருந்திப் பெருகி வழியும் செய்திகள், அதனூடே மெல்லிசாய் நீண்டு பரவும் அரசியல் ஆகியவை குறித்து முடிந்த மட்டும் இன்று உரையாடலாம் என்று படுகிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் ‘புதுகை பூபாலம்’ ( Pragadeeshwaran Poobalam ) கலைக் குழு நிகழ்த்திய நிகழ்ச்சியைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்.

அதில் ஒரு இடத்தில் செந்திலும் பிரகதீஸ்வரனும் ஜப்பான் பிரதமரும் இந்தியப் பிரதமருமாய் மாறுவார்கள்.

ஜப்பான் பிரதமர் நமது பிரதமரைப் பார்த்து கூறுவார்,

“வாங்க, வாங்க, உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”

உடனே இந்தியப் பிரதமர் பதில் கூறுவார்,

“வாங்க சார், வாங்க, நானும் உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”

ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர். அதைப் பகடி செய்ய வேண்டும். எதையாவது செய்யுங்கள் என்று திரு நாகேஷ் அவர்களிடம் ஒரு இயக்குநர் கூறியிருந்தால் அவர் ஒரு சக நடிகரைத் துணைக்கு வைத்துக் கொண்டு எப்படி செய்திருப்பாரோ அதைப் போலவே பிரகதீஸ்வரனும் செந்திலும் இணைந்து கலக்கியிருந்தார்கள்.

நாகேஷ் இன்று இருந்து இவர்களது நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் இவ்வளவு எளிய முறையில் இதைக் கொடுக்க தன்னால் முடிந்திருக்காது என்றுகூட சொல்லி இருக்கலாம். அப்படி ஒரு கலக்கல்.

இங்கு டெல்டா பகுதியே சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது. உலகத்தில் உலை கொதிக்க நெல்லைத் தந்தவன் ஒரு கவளம் சோத்துக்காக ஈர நெஞ்சத்தினர் யாரேனும் வேனில் கொண்டு வருகிறார்களா என்று வீதியில் தவம் இருக்கிறான்.

அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் ஒரு குவளை நல்ல தண்ணீருக்காக கையேந்தி நிற்கிறான்.

இப்படியே போனால் தாகமே விஷமாகி பலரை சாகடிக்கலாம்.

மாற்றுத் துணி இல்லை

ஏதுமற்று கட்டியிருந்த துணியோடு நிர்க்கதியாய் நிற்கிறான்.

அன்றுதான் பூப்படைந்தாள் ஒரு செல்ல மகள். தென்னந்தோபிற்குள் இருக்கிறது அவர்களது வீடு. வீட்டிற்கு அருகே குடில் கட்டி தங்க வைக்கிறார்கள். அந்தக் குடிலின்மேல் தென்னை மரம் ஒன்று விழுகிறது . நசுங்கிக் கொண்டே கதறுகிறாள்.

‘கஜா’ நமது பிரதமர் போல் பெருங்குரல் எடுத்து அலறுகிறது. பிரதமரின் பெருங்குரல் முன்னால் காணாமல் போகும் விவசாயியின் குரல்போல கஜாவின் பெருங்குரலின்முன் காணாமல் போகிறது அந்தக் குழந்தையின் வலிகுரல்.

தலைசுற்றி வீட்டுக்குள் அழைக்கவேண்டிய மகளுக்கு கோடித் துணிக்காக ஒரு தகப்பனும் தாயும்கூட ஒரு வேனிற்காகத்தான் கையேந்தி தவம் இருந்தார்கள்.

சாய்ந்த தென்னைகளைப் பார்த்து செத்தே போனான் ஒருவன்.

யாரேனும் வர மாட்டார்களா?

ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?

தோள்பற்றி ஆசுவாசப்படுத்த மாட்டார்களா?

பார்த்துக்கலாம் விடு. நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையாய் ஒரு நாலு வார்த்தை பேச மாட்டார்களா?

தற்கொலை செய்து கொண்டவன் பிணம் பார்த்து,

“ஏண்டா, ஏண்டா, இப்படி. என்ன ஆச்சு. நான் இல்லையா. பார்த்துக் கொள்ள மாட்டேனா? நான் இருக்கேன் என்பதை எப்படிடா மறந்தாய்?” என்று ஒப்புக்கேனும் யாரும் பேச மாட்டார்களா?

என்றுதான் எம் மக்கள் ஏங்குகிறார்கள்.

செத்துப் போனவர்களைப் பார்த்து உயிரோடிருப்பவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்ற உண்மை தெரியுமா பெரியோர்களே.

ஒரே ஒரு முறை வந்திருந்து எம் மக்களைப் பார்த்து வழக்கம்போல கொஞ்சம் பொய்களைப் பேசிவிட்டுப் போயிருந்தால்கூட போதும்.

தங்கள் அத்தனை சோகத்தையும் மறந்து சாய்ந்து கிடக்கும் தென்னையிலிருந்து நீர் அதிகமுள்ள இளநீராய்ப் பார்த்து உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “பாரதப் பிரதமர் வாழ்க” என்று தங்களைப் பார்க்க வந்ததற்காய் எம் வெள்ளந்தி  மக்கள் உங்களை நூறாண்டு வாழவேண்டும் நீங்கள் என்று வாழ்த்திவிட்டுப் போயிருப்பார்கள்.

ஏன் பிரதமரே நீங்கள் வரவில்லை?

வாக்குகளையும் அம்பானி அதானியையும்ஒரு  காணொலி, அது வழிப் பொருந்திப் பெருகி வழியும் செய்திகள், அதனூடே மெல்லிசாய் நீண்டு பரவும் அரசியல் ஆகியவை குறித்து முடிந்த மட்டும் இன்று உரையாடலாம் என்று படுகிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் ‘புதுகை பூபாலம்’ ( Pragadeeshwaran Poobalam ) கலைக் குழு நிகழ்த்திய நிகழ்ச்சியைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்.

அதில் ஒரு இடத்தில் செந்திலும் பிரகதீஸ்வரனும் ஜப்பான் பிரதமரும் இந்தியப் பிரதமருமாய் மாறுவார்கள்.

ஜப்பான் பிரதமர் நமது பிரதமரைப் பார்த்து கூறுவார்,

“வாங்க, வாங்க, உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”

உடனே இந்தியப் பிரதமர் பதில் கூறுவார்,

“வாங்க சார், வாங்க, நானும் உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”

ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர். அதைப் பகடி செய்ய வேண்டும். எதையாவது செய்யுங்கள் என்று திரு நாகேஷ் அவர்களிடம் ஒரு இயக்குநர் கூறியிருந்தால் அவர் ஒரு சக நடிகரைத் துணைக்கு வைத்துக் கொண்டு எப்படி செய்திருப்பாரோ அதைப் போலவே பிரகதீஸ்வரனும் செந்திலும் இணைந்து கலக்கியிருந்தார்கள்.

நாகேஷ் இன்று இருந்து இவர்களது நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் இவ்வளவு எளிய முறையில் இதைக் கொடுக்க தன்னால் முடிந்திருக்காது என்றுகூட சொல்லி இருக்கலாம். அப்படி ஒரு கலக்கல்.

இங்கு டெல்டா பகுதியே சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது. உலகத்தில் உலை கொதிக்க நெல்லைத் தந்தவன் ஒரு கவளம் சோத்துக்காக ஈர நெஞ்சத்தினர் யாரேனும் வேனில் கொண்டு வருகிறார்களா என்று வீதியில் தவம் இருக்கிறான்.

அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் ஒரு குவளை நல்ல தண்ணீருக்காக கையேந்தி நிற்கிறான்.

இப்படியே போனால் தாகமே விஷமாகி பலரை சாகடிக்கலாம்.

மாற்றுத் துணி இல்லை

ஏதுமற்று கட்டியிருந்த துணியோடு நிர்க்கதியாய் நிற்கிறான்.

அன்றுதான் பூப்படைந்தாள் ஒரு செல்ல மகள். தென்னந்தோபிற்குள் இருக்கிறது அவர்களது வீடு. வீட்டிற்கு அருகே குடில் கட்டி தங்க வைக்கிறார்கள். அந்தக் குடிலின்மேல் தென்னை மரம் ஒன்று விழுகிறது . நசுங்கிக் கொண்டே கதறுகிறாள்.

‘கஜா’ நமது பிரதமர் போல் பெருங்குரல் எடுத்து அலறுகிறது. பிரதமரின் பெருங்குரல் முன்னால் காணாமல் போகும் விவசாயியின் குரல்போல கஜாவின் பெருங்குரலின்முன் காணாமல் போகிறது அந்தக் குழந்தையின் வலிகுரல்.

தலைசுற்றி வீட்டுக்குள் அழைக்கவேண்டிய மகளுக்கு கோடித் துணிக்காக ஒரு தகப்பனும் தாயும்கூட ஒரு வேனிற்காகத்தான் கையேந்தி தவம் இருந்தார்கள்.

சாய்ந்த தென்னைகளைப் பார்த்து செத்தே போனான் ஒருவன்.

யாரேனும் வர மாட்டார்களா?

ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?

தோள்பற்றி ஆசுவாசப்படுத்த மாட்டார்களா?

பார்த்துக்கலாம் விடு. நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையாய் ஒரு நாலு வார்த்தை பேச மாட்டார்களா?

தற்கொலை செய்து கொண்டவன் பிணம் பார்த்து,

“ஏண்டா, ஏண்டா, இப்படி. என்ன ஆச்சு. நான் இல்லையா. பார்த்துக் கொள்ள மாட்டேனா? நான் இருக்கேன் என்பதை எப்படிடா மறந்தாய்?” என்று ஒப்புக்கேனும் யாரும் பேச மாட்டார்களா?

என்றுதான் எம் மக்கள் ஏங்குகிறார்கள்.

செத்துப் போனவர்களைப் பார்த்து உயிரோடிருப்பவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்ற உண்மை தெரியுமா பெரியோர்களே.

ஒரே ஒரு முறை வந்திருந்து எம் மக்களைப் பார்த்து வழக்கம்போல கொஞ்சம் பொய்களைப் பேசிவிட்டுப் போயிருந்தால்கூட போதும்.

தங்கள் அத்தனை சோகத்தையும் மறந்து சாய்ந்து கிடக்கும் தென்னையிலிருந்து நீர் அதிகமுள்ள இளநீராய்ப் பார்த்து உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “பாரதப் பிரதமர் வாழ்க” என்று தங்களைப் பார்க்க வந்ததற்காய் எம் வெள்ளந்தி  மக்கள் உங்களை நூறாண்டு வாழவேண்டும் நீங்கள் என்று வாழ்த்திவிட்டுப் போயிருப்பார்கள்.

ஏன் பிரதமரே நீங்கள் வரவில்லை?

வாக்குகளையும் அம்பானி அதானியையும் தவிர யார் குறித்தும் எது குறித்தும் கவலைப்படவே மாட்டீர்களா பிரதமர் அவர்களே?

எங்கள் அழுகையின் வலி உமக்குப் புரியாதா? அல்லது எங்களது சோகத்தை உதாசீனம் செய்கிறீர்களா?

காவேரிக்கரையில் பிறந்து படித்து ஆளான உங்கள் ராணுவத்துறை அமைச்சர் பேரிடர் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டுக் கொள்ளாததால்தான் ராணுவத்தை அனுப்பவில்லை என்கிறார்.

கொஞ்சம்கூட ஈரமே இல்லையா தாயே?

சொல்லி அனுப்பினால்தான் சாவு வீட்டிற்கு வருவீர்களா மேடம்?

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது இங்கே வந்த ஏதேனும் ஒரு நாட்டு அதிபர் விஷயத்தைக் கேள்விபட்டு எம் மக்களைப் பார்க்க இங்கு வந்து அந்த நேரம் நீங்கள் இந்தியா வந்தால் அவரைப் பார்க்க இங்கே வந்திருப்பீர்களா?

இல்லை வரட்டும் அவர் தில்லிக்கு என்று அப்போதும் இறுக்கமாகவே இருந்திருப்பீர்களா.

ஒன்று சொல்கிறேன் பிரதமர் அவர்களே,

இப்போது எம் மக்களிடம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். வரமாட்டீர்களா என்று தவிக்கிறான்.

வர மறுக்கிறீர்கள்.

ஆறேழு மாதங்களுக்குள் எழுந்து விடுவான். தேர்தல் வரும். நீங்களும் வருவீர்கள்.

இப்போது ஏதுமற்று இருக்கும் அவனிடம் ஒரு வாக்கு இருக்கும் அப்போது.

அதற்குள் அவனுக்கு அந்த வாக்கின் பொருள் புரிந்திருக்கும்.

#சாமங்கவிய 17 நிமிடங்கள்
01.12.2018 தவிர யார் குறித்தும் எது குறித்தும் கவலைப்படவே மாட்டீர்களா பிரதமர் அவர்களே?

எங்கள் அழுகையின் வலி உமக்குப் புரியாதா? அல்லது எங்களது சோகத்தை உதாசீனம் செய்கிறீர்களா?

காவேரிக்கரையில் பிறந்து படித்து ஆளான உங்கள் ராணுவத்துறை அமைச்சர் பேரிடர் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டுக் கொள்ளாததால்தான் ராணுவத்தை அனுப்பவில்லை என்கிறார்.

கொஞ்சம்கூட ஈரமே இல்லையா தாயே?

சொல்லி அனுப்பினால்தான் சாவு வீட்டிற்கு வருவீர்களா மேடம்?

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது இங்கே வந்த ஏதேனும் ஒரு நாட்டு அதிபர் விஷயத்தைக் கேள்விபட்டு எம் மக்களைப் பார்க்க இங்கு வந்து அந்த நேரம் நீங்கள் இந்தியா வந்தால் அவரைப் பார்க்க இங்கே வந்திருப்பீர்களா?

இல்லை வரட்டும் அவர் தில்லிக்கு என்று அப்போதும் இறுக்கமாகவே இருந்திருப்பீர்களா.

ஒன்று சொல்கிறேன் பிரதமர் அவர்களே,

இப்போது எம் மக்களிடம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். வரமாட்டீர்களா என்று தவிக்கிறான்.

வர மறுக்கிறீர்கள்.

ஆறேழு மாதங்களுக்குள் எழுந்து விடுவான். தேர்தல் வரும். நீங்களும் வருவீர்கள்.

இப்போது ஏதுமற்று இருக்கும் அவனிடம் ஒரு வாக்கு இருக்கும் அப்போது.

அதற்குள் அவனுக்கு அந்த வாக்கின் பொருள் புரிந்திருக்கும்.

#சாமங்கவிய 17 நிமிடங்கள்
01.12.2018

Sunday, December 2, 2018

மாலை முழுதும்.....

எப்போதும் இந்திய அரசு மொத்தத்தையுமோ அல்லது மனிதவள மேம்பாட்டுத் துறையையோ விமர்சித்துக் கொண்டோ அல்லது வைதுகொண்டோதான் இருப்போம் என்றெல்லாம் எம்மை யாரும் கருதிவிடக்கூடாது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் நல்லது செய்தால் கொண்டாடவே செய்வோம். மாறாக செயல்படும்போது அதை எதிர்த்து விமர்சிப்பதும் முடிந்த அளவு அதை எதிர்த்து களமாடவும் செய்கிறோம்.
இன்றைக்கும்கூட மனிதவள மேம்பாட்டுத் துறை பள்ளிக்குழந்தைகளின் புத்தகப் பையின் எடை எந்தெந்த அளவில் இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையினை கொண்டாடி வரவேற்கிறோம். அதை அனைத்து மாநில அரசுகளும் கொஞ்சமும் சுணக்கம் இன்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோருகிறோம். செயல்படுத்தாத மாநில அரசுகளை மனிதவள மேம்பாட்டுத் துறை செயல்படுத்த நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.
இந்த சுற்றறிக்கையை செயல்படுத்த மறுக்கும் மாநில அரசுகளை நிர்ப்பந்திக்கும் வகையில் அங்கங்கு உள்ள மாணவர் அமைப்புகளும், ஆசிரியர் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும், சமூக அமைப்புகளும் தம்மால் முடிந்த அளவு களத்தில் இறங்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம். இடதுசாரி வெகுஜன அமைப்புகளிடமும் இடதுசாரி கட்சிகளிடத்தும் இந்தக் கோரிக்கையை கூடுதல் அழுத்தத்தோடு வைக்கிறோம்.
அதே நேரம் என்ன களவானித்தனம் செய்தும் JNU மாணவர்களையோ அல்லது பேராசிரியர்களையோ காவிப்படுத்த முடியவில்லை என்பதற்காகவும் மனித நாகரீகத்திற்கு எதிராக இருக்கக் கூடிய காவிக் கோட்பாட்டிற்கு எதிரான அவர்களது போராட்டத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்பதற்காகவும் JNU நூலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 75 விழுக்காட்டை மத்திய அரசு கை வைத்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.
இரண்டு விஷயங்கள். இரண்டுமே புத்தகங்கள் குறித்த விஷயங்கள். ஆனால் இரண்டுமே ஒன்றோடு ஒன்று வலுவாக முரண்படும் விஷயங்கள்.
கூடாது என்கிற இடத்தில் குவிப்பதும் குவிக்க வேண்டிய இடத்தில் குறைப்பதுமான அயோக்கியத்தனமான போக்குகளைக் குறித்து உரையாடலாம் என்று படுகிறது.
முன்பெல்லாம் இப்படி வேடிக்கையாகப் பேசுவோம்,
MA படிக்கிற பிள்ளை இரண்டு ஆண்டுகளாக ஒரே ஒரு மெமோபேடை சுருட்டி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கல்லூரி போகிறான். அதுவும் எதற்கென்றால் பேருந்தில் இடம் போடுவதற்கு என்று சொல்கிறான். அதே நேரம் LKG படிக்கிற குழந்தை 12 கிலோ புத்தக மூட்டையையை சுமப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.
ஆனால் இன்றைக்கும் முதுகலை படிக்கும் மாணவன் சுமப்பதைவிட LKG படிக்கும் குழந்தை அதிக எடையுள்ள புத்தகப் பையினை சுமக்கிறாள்.
தங்களின் எடையில் 35 விகித எடையில் புத்தகப் பையினை பள்ளிக் குழந்தைகள் சுமப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதை சுட்டிக்காட்டும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதைக் கண்டிக்கிறது.
மூன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை புத்தகப் பையின் எடை 3 கிலோவைத் தாண்டக்கூடாது. ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு 4 கிலோவையும் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு குழந்தைகளுக்கு நான்கரை கிலோவும் பத்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு 5 கிலோவும்தான் அவர்களது புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும். இதற்கு மிகாமல் அந்தந்த மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை கூறுகிறது.
எனில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு?
புத்தகப் பையோடு அந்தக் குழந்தைகளை வரச்சொல்லும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு அதன் நிர்வாகியை சிறையில் அடைத்துவிட வேண்டும்.
குழந்தைகளின் குழந்தைமையை வணிகப்படுத்துவதை தடை செய்ய முயற்சிக்கும் இந்த சுற்றறிக்கையை கொண்டாடுகிறோம். இதுவே சட்டமாக வந்தால் கூட்டம் போட்டு கொண்டாடுவோம்.
JNU மாணவர் பேரவைத் தேர்தல் என்பது உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஒன்று. அதில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் தோழர் யெச்சூரி.
எப்படியேனும் அதைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று BJP தலையால் தண்ணீர் குடித்துப் பார்க்கிறது. தேர்தல் நடைமுறைகளில் என்ன தில்லு முல்லுகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து பார்த்து விட்டது அந்தக் கட்சி. வன்முறையை பிரயோகித்துப் பார்த்து விட்டது. வழக்குகளை போட்டு மாணவர்களை அச்சுறுத்திப் பார்த்தது. சிறையில் தள்ளிப் பார்த்தது. என்ன செய்தும் பிள்ளைகள் காவியை ஒவ்வொரு முறையும் துறத்தி அடிக்கின்றனர்.
மட்டுமல்ல, BJP யாரைத் தனது சித்தாந்த எதிரியாகப் பார்க்கிறதோ, யாருடைய பெயரைக் கேட்டால் கேட்ட மாத்திரத்திலேயே பயந்து நடுங்குகிறதோ அந்த இடதுசாரி பிள்ளைகளையே தொடர்ந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆசிரியர் சம்மேளனத்திலும் இதேதான் நிலைமை.
மோதி வெற்றிபெற முடியவில்லை. விட்டுவிட்டும் போக முடியவில்லை. ”ஏன் நம்மை நிராகரிக்கிறார்கள்?” என்று யோசித்தவர்களுக்கு அவர்களுக்கு சமூகம் குறித்த ஞானம் இருப்பது புரிகிறது. இந்த ஞானத்தை நூலகம் தருவதாக அவர்களால் யூகிக்க முடிகிறது.
நூலகத்திற்கான செலவில் 75 விழுக்காட்டை நிறுத்துகிறார்கள்.
கோவம் வருகிறது. வைகிறோம். வைதுகொண்டே எதிர்ப்போம். களமாடுவோம்.
#சாமங்கவிந்து 30 நிமிடங்கள்
28.11.2018

65/66, காக்கைச் சிறகினிலே அக்டோபர் 2018

நேரடியாய் எதிர்ப்பது, மிரட்டுவது, கழுத்தறுப்பது என்பது ஒன்று. அணைப்பதுபோல் போல் நடித்துக் கொண்டே கழுத்தை அறுப்பது என்பது மற்றொன்று. பெறும்பாலும் ஆதிக்க நச்சு சக்திகள் இவற்றில் ஏதோ ஒரு வகையைச் சார்ந்திருப்பார்கள். RSS அமைப்பின் தலைவர்கள் இந்த இரண்டிலுமே தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை. அவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடட்டும். இல்லை எனில் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று நேரடியாக மிரட்டக்கூடிய RSS தலைவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
இவர்கள் சொல்வதை செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களை தாக்குகிறார்கள், நடு வீதியில் கேமராக்களை இயக்கிக்கொண்டே இஸ்லாமிய பெண்களை வன்புணர்வு செய்கிறார்கள், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமிய சிறுவர்களை இளைஞர்களை, பெரியவர்களை பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்கிறார்கள். எரிக்கிறார்கள்.
எட்டு வயதுக் குழந்தையை எட்டுபேர் சேர்ந்து எட்டு நாட்கள் ஒரு கோவில் வளாகத்தில் வைத்து வன்புணர்ந்து கொன்று போடுவார்கள். அந்தப் பாதகத்தை செய்தவர்கள் தேசபக்தர்கள் என்றும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் பேரணி நடத்துவார்கள்.
அதைவிடக் கொடுமை “குழந்தையை வன்புணராமல் கிழவியையா வன்புணர முடியும் ?” என்று மந்திரிமார்களே கேட்பார்கள். கிழவியையும் இவர்களது அமைப்பினர் விட்டு வைக்க மாட்டார்கள்.
எழுவது குழந்தைகளை தம் சொந்தக் காசை செலவழித்து காப்பாற்றி மருத்துவரை உச்சி முகர்ந்து பாராட்டி விருதுகளை வழங்கி சிறப்பு செய்வதற்கு பதிலாக அவர் இஸ்லாமியர் என்பதற்காக அவரை சிறியிலடைத்து கொடுமைப் படுத்துவார்கள்.
இந்தக் கொடுமையாளர்கள் நேரடியாகக் களமிறங்கி ஏதோ ஒரு வகையில் தாக்குதலை நடத்தி இந்த பூமி உங்களுக்கானது அல்ல. ஒன்று மதம் மாறுங்கள் அல்லது பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள் என்று அச்சுறுத்துவார்கள்.
இதைக்கூட புரிந்து அதற்கேற்ப எதிர்வினையாற்ற இயலும்.
இது இப்படி என்றால் அமித்ஷாவோ ,”சுதந்திரத்திற்கு அடுத்த காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த மிகப் பெரிய போராட்டம் அயோத்திப் போராட்டம்தான்” என்கிறார்.
வாத்த்திற்கு அயோத்திப் பிரச்சினை முக்கியமானது என்றேகூட கொள்வோம். ஒரு இடம் எந்தக் கடவுளுக்கு சொந்தமானது என்ற வழக்கினை அந்தந்த தெவங்களை நம்புகிற மனிதர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கொள்வோம். எந்த தெய்வத்தின் இடம் அது என்பதை மனித நீதிபதிகள் விசாரிக்கிறார்கள். வழக்கு இன்னும் முற்றாய் முடிந்துவிடவில்லை.
முடியாத வழ்க்கினை ஒட்டி நிகழ்ந்துவரும் போராட்டத்தைத்தான் சுதந்திரப் போராட்ட அளவிற்கு கொண்டு போகிறார் அமித்ஷா.
அவர் ஏதோ போகிற போக்கில் இதை சொல்லவில்லை. இதற்குப் பின்னால் ஒரு தேர்ந்த திட்டமிடல் இருக்கிறது. ஒரு வழிபாட்டு இடத்தின் உரிமைக்காக இந்தியாவின் இரு பிரிவினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மையை அந்த இடத்திற்காக இந்தியர்கள் இஸ்லாமியர்களோடு போராடிக்கொண்டிருப்பதாக நிறுவ முயல்கிறார். இது ஆபத்தானது.
வழக்கமாக இவர்கள் யாவரையும்விட அதிகமாகப் பேசும் மோகன்பகவத் இஸ்லாமியர்கள் இல்லாமல் இந்துநாடு இல்லை என்று கூறியுள்ளார்.
இதை மேலோட்டமாகப் பார்த்தால் ஆஹா இஸ்லாமியர்கள் மீது எவ்வளவு அன்பு பாருங்களேன் என்று நினைக்கத் தோன்றும். இது இந்து நாடாம், ஆனால் இஸ்லாமியர்களும் இங்கு இருப்பதற்கு உரிமை உண்டாம்.
எவ்வளவு மோசமான கருத்து திரிபு இது.
இதுதான் சிரித்து அணைத்தபடி கழுத்தில் கத்தியை இறக்குவது.
ஏனிப்படி விதவிதமாக அணுகுகிறார்கள். ஆறு மாதங்களில் தேர்தல் வருகிறதே அதற்காகத்தான்.
இன்னும் அன்பாய் மூர்க்கமாய் எப்படி வேண்டுமானாலும் வருவார்கள், எதை வேண்டுமானாலும் பேசுவார்கள், எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
*************************************************
அவ்வபோது மல்லையா பேசப்படுகிறவராகவே இருக்கிறார்.
மாண்பமை அருண்ஜேட்லி அவர்களைச் சந்தித்துவிட்டுதான் தான் இந்தியாவைவிட்டு வெளியேறியதாக மல்லையா கூறியிருக்கிறார். இதை சன்னமான குரலில் மறுக்க முயற்சித்த ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
தம்மை மல்லையா சந்தித்தது உண்மைதான் என்பதை வேறு வழியின்றி ஜேட்லி ஒத்துக்கொள்ள வேண்டிய சூழல் வந்தது. சந்திப்பை ஒத்துக் கொண்ட அவர் அந்த சந்திப்பு வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே நடந்ததாகவும் அந்தச் சந்திப்பில் வங்கி அதிகாரிகளை சந்தித்து முறையாக செட்டில் செய்ய சொன்னதாக அருண்ஜேட்லி கூறியதாகவும் தகவல்கள் வெளியாயின.
ஏறத்தாழ 9000 கோடி கடனை அடைக்க முடியாத ஒருவர் வெளிநாட்டில் செட்டிலாகக் கிளம்பும் முன் நிதி அமைச்சரை சந்திக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இந்த சந்திப்பு நிகழ்ந்தபோது மல்லையாவின் மீது கடுமையான செக்அவுட் நோட்டீஸ் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் நாட்டைவிட்டு ஓடிப்போகும் முன் அமைச்சரை சந்திக்கிறார். வங்கி விவரங்களை முடித்துவிட்டு செல்லுமாறு தான் அறிவுரை மட்டுமே கூறினேன் என்று ஒரு அமைச்சர் கூறுவது எப்படி சரியாகும்?
அதுவும் இந்த சந்திப்பிற்குப் பிறகு மல்லையா மீதான செக்கவுட் நோட்டீஸ் தளர்த்தப் பட்டிருக்கிறது. அவ்வாறு தளர்த்தப் பட்டதால்தான் மல்லையாவால் தப்ப முடிந்திருக்கிறது என்று வருகிற தகவல்கள் அசாதாரணமானவை.
முறையான ஆலோசனைக்குப் பிறகே செக்கவுட் நோட்டீஸ் தளர்த்தப்பட்டதாக வரும் செய்தியும் சாதாரணமானதும் அல்ல.
நமது கோரிக்கை என்னவெனில் இது விஷயத்தில் மாண்பமை ஜேட்லி அவர்களை விசாரிக்க வேண்டும் என்பதே.
*******************************************************************
மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு கருத்துக்களைத் திரிப்பதில் இவர்கள் வல்லவர்கள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே செய்கிறோம்.
ஆனால் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாகவும் இவர்கள் தங்களது அசிங்கமான திரிப்புகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நடந்த முதுகலை பொலிடிகல் சயின்ஸ் பிரிவிற்கான இரண்டு வினாக்களே சான்று.
1) கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் GST யின் கூறுகள் – விளக்கு
2) உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்தவர் மனு – விவரி
கல்வி குறித்த விவாத்ததை பொதுத் திரளுக்கு புரிகிற மொழியில் பரவலாக்க் கொண்டு போகாவிட்டால் பாடப் புத்தகங்களைக்கூட கருப்பு மைக்குப் பதிலாக காவி மையிலேயே அச்சடிப்பார்கள்.
புரிந்து கொள்வோம்.
***********************************************************************
ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை சேர்த்துவிட்டது மோடி அரசுதான் என்று பிராஸ் நாட்டின் அதிபர் கூறியிருக்கிறார்.
மற்றவர்கள் கூறும்போது வன்மமாக மறுத்தவர்கள் இப்போது ஒப்பந்ததாரரே கூறும்போது அதற்கு முறையான பதிலை வெளியிட கடமைப் பட்டவர்கள் ஆவார்கள்.
இல்லாது போனால் இவர்கள் எதை எல்லாம் ரகசியம் என்று சொல்கிறார்களோ அவை ப்ரான்ஸ் மூலமாகவே வெளிவரும்.
***************************************
JNU மாணவர்ப் பேரவைத் தேர்தல் உலகமே எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. மிச்சமே இல்லாமல் அனைத்துப் பொறுப்புகளுக்கும் இடதுசாரி மாணவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
எல்லாவகையான இடதுசாரிப் பிள்ளைகளும் ஒன்றாய் கைகோர்த்ததனால்தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று.
இதில் நமக்கான பாடம் இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தேர்தல் ஜனநாயகமே சாத்தியம் என்பதை அவர்களும், அவர்கள் ஒன்றும் RSS காரர்கள் அல்ல என்பதை நாமும் உணரவேண்டும் என்பதே சின்னப் பிள்ளைகள் நமக்கு நடத்தி இருக்கும் பால பாடம்.
கற்போம்.
**************************************************
ஏறத்தாழ இதே நேரத்தில் தில்லி பல்கலைக் கழகத்தில் நடந்த தேர்தலில் பாஜக மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அங்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்களின் மூலமாக மோசடி நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. எந்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் வாங்கித்தான் தேர்தலை நடத்தியதாக நிர்வாகம் கூறியது. அதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
பிறகு தனியாரிடம் வாடகைக்கு வாங்கித்தான் தேர்தலை நடத்தியதாக சொல்லப்பட்டது. அதற்கும் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தனியாரிடம் வாக்கு எந்திரங்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவான விதி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
போக தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மாணவர் போலியான பட்டச் சான்றிதழின் பேரிலேயே தில்லிப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பிரிவில் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எதற்கானத் தேர்தலாக இருந்தாலும் பாஜகவின் தேர்தல் அணுகுமுறை ஒன்றுதான் போலும்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...