Monday, August 8, 2011

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

” வெள்ளத்தால் அழியாது
வெந்தழலால் வேகாது
வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறையாது
கள்ளர்க்கோ பயமில்லை
காவலுக்கோ மிக எளிது”

என்பதாக நீளும் அவ்வையின் கல்வி குறித்த பாடல் ஒன்று. நீர் , நெருப்பு, காற்று போன்ற எதனாலும் கல்வியை அழிக்க முடியாது.  இன்னும் சொல்லப் போனால் எதன் உருவத்தையும் மாற்றி, அழித்து, சிதைத்துப் போடும் காலத்தாலும் கல்வியை சேதப் படுத்த முடியாது, என்பதாக கல்வியின் பெருமைகளை அவ்வை பட்டியலிட்டு சென்றிருப்பின் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

 “ காவலுக்கோ மிக எளிது” என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது அவ்வைக்கு?. எனில் கல்வியும் காவலுக்குரிய பொருள்தானா?. காவல் காக்காமல் போனால் கல்வி களவு போய்விடுமா?. கல்வியைத் திருடவும் ஆட்கள் உண்டா?. எனில் தங்கம் போல, மற்ற பொருட்கள் போல கல்வியும் ஒரு பொருள்தானா?. “காவலுக்கோ மிக எளிது” என்கிறாரே, எனில் தங்கத்தைப் போன்று மிகவும் சிரமமெடுத்து காவல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனினும் சன்னமாகவேனும் காவல் தேவைப் படும் பொருளாகத்தான் கல்வி அவ்வை காலத்திலேயே இருந்ததா?. என்றெல்லாம் யோசித்த பொழுதுகள் உண்டு.

இப்போது தெளிவாகப் புரிகிறது.  ஒழுங்காகக் காவலை செய்யத் தவறினோம் என்றால் மேட்டுக் குடியும் கல்வியை சந்தைப் படுத்துவதில் வெற்றி கண்ட கல்வி வணிகர்களும் கல்வியைக் களவாண்டு போய் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்துப் பூட்டி விடுவார்கள் என்பது. மட்டுமல்ல , அவ்வை காலத்தில் வேண்டுமானால் காவலுக்கு எளிதான ஒரு பொருளாக இருந்த கல்வி இன்று வெகு சிரத்தை எடுத்து காவல் காக்க வேண்டிய ஒரு பொருளாக மாறிப் போயிருக்கிறது.

”கல்வியை எப்படித் திருட முடியும்?” என்று வசீகரப் புன்னகையோடு சிலர் கேட்கக் கூடும். அவர்களிடம்தான் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள்தான் கல்வித் திருடர்கள்.

சரி, கல்வி களவு போகிறது என்று கத்துகிறார்களே. அதில் நியாயம் உள்ளதா?. உள்ளது எனில் கல்வியை எப்படி களவாட முடியும்?. ”ஒருவனிடம் இருப்பதை அபகரிப்பதுதானே களவு எனப்படும். எனில், ஒருவனிடம் இருக்கும் கல்வியை எப்படி அபகரிக்க முடியும்?” என்றும் சிலர் நக்கலடிக்கக் கூடும்.

அத்தகைய கனவான்களுக்காக சொல்கிறேன், இருப்பதை அபகரிப்பதும் களவுதான். அதே போல ஒருவனுக்கு உரியதை அவனுக்குத் தராமல், அவனது உரிமையை அவன் பெற்று விடாமல்,  இன்னும் சொல்லப் போனால் அது அவனது உரிமை என்பதையே அவன் உணர்ந்து விடாமல், மிகுந்த கவனத்தோடும், அதற்கென்றே சில நடை முறை சித்தாந்தங்களை, தேவைப் படும் பட்சத்தில் சட்டங்களையும் தீட்டி,  இவை எல்லாம் கடந்து யாருக்காவது தனது உரிமை குறித்து உணர்வு வந்து விட்டால் அவனை சித்திரவதை, ஏன் பல சமயங்களில் கொலையே செய்தும் அவனது உரிமையை அவன் பெறாமல் பார்த்துக் கொள்வதற்கும் களவு என்றுதான் பெயர்.

கல்வி விஷயத்தில் இது நடந்ததா?

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கூட தன் பிள்ளையை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியதை குற்றமாய் பாவித்து அந்தப் பெற்றோர்களை மரத்தில் கட்டி வைத்து சாட்டையால், சவுக்கால் அடித்த வரலாறு கீழத் தஞ்சை மாவட்டம் முழுக்க விரவிக் கிடக்கிறது.

இதை கீழத் தஞ்சைப் பகுதியோடு சுருக்கிப் பார்ப்பதே கூட குற்றம்தான்.

 “நான் பூர்வ பௌத்தன்” என்ற டி.தர்மராஜனின் நூலில் காணும் கீழ்காணும் சம்பவம் உண்மையை அப்படியே அம்மணமாகப் புட்டுப் போடுகிறது.வாசிக்க வாசிக்க உண்மை நம்மை கொதிக்கச் செய்கிறது.

1892 ஏப்ரலில் சென்னை விக்டோரியா மகாலில் “சென்னை மகா சபை கூட்டம்”  நடை பெறுகிறது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பிரதி நிதிகளின் பிரச்சினைகளை கேட்டு விவாதித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை சமர்ப்பிப்பதே அந்தக் கூட்டத்தின் நோக்கம்.

அயோத்தி தாசப் பண்டிதரும் அதில் கலந்து கொள்கிறார். பறையர் குலத்தவரின் பிரதிநிதியாய் தான் தனது குலத்தவரின் குறைகளை பேசுவதற்காக வந்திருப்பதாக சொல்கிறார்.  ஆலயங்களில் வழிபடும் உரிமை,  வெறுமனே தரிசாகக் கிடக்கும் நிலங்களை தனது குலத்தை சார்ந்த கிராம வாசிகளுக்கு பிரித்துக் கொடுக்க அரசுக்கு பரிந்துரைத்தல், தனது இனக் குழந்தைகளுக்கு நான்காவது வரை படிப்பதற்கு இலவச பாடசாலைகள் போன்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைக்கிறார்.

இந்தக் கட்டுரைக்கு தேவையில்லைதான் என்றாலும் பண்டிதரின் இந்தக் கோரிக்ககளை நிராகரித்துப் பேசிய தஞ்சையை சேர்ந்த சிவராம சாஸ்திரி முதலில் ஆலய நுழைவு உரிமையை நிராகரித்துப் பேசியதையும் சேர்த்தே  பார்ப்பது முற்றிலும் பொருத்தமானதாகும்.

“பறையர் குலத்தின் பிரதி நிதியாய் வந்திருக்கும் அன்பருக்கு நான் பதில் சொல்லக் கடமை பட்டிருக்கிறேன். அந்த அன்பர் எங்களை ஏன் சிவன் கோவிலுக்குள்ளும் விஷ்ணுவின் கோவிலுக்குள்ளும் சேர்க்க மறுக்கிறீர்கள் என கேட்கிறார். இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சிவனும் விஷ்ணுவும் என்றைக்குமே அவர்கள் கடவுள்கள் இல்லை. அவர்கள் கும்பிடுவதற்கு என்று மதுரை வீரன், காட்டேரி, கருப்பண்ண சாமி போன்ற
 சில தெய்வங்களை அவர்களுக்கு நாம் கொடுத்திருக்கிறோம், என்றபோது உங்களுடைய கடவுள்கள் என்றைக்கும் எங்களுக்கு வேண்டாம் என்று கம்பீரமாக தனது கோரிக்கையை தானே தூக்கிக் கிடாசிய பண்டிதர் தன் இனக் குழந்தைகளுக்கு நான்காம் வகுப்புவரைக்குமான இலவசப் பாடசாலைகளை துவக்க இந்த சபை அரசுக்கு கோரிக்கை அனுப்ப வேண்டும் எனக் கேட்கிறார்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்துப் பேசியதும் அதே சிவராம சாஸ்திரிதான்.” கோயிலில் சேர்க்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்ட அன்பர் இப்போது நான் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்...”என்று ஒரு நிபந்தனையோடே பேசத் தொடங்குகிறார். அவர் சொல்வதை இவர் ஏற்க வேண்டுமாம். முதலில் முதல் கோரிக்கை நிராகரிக்கப் பட்டதை பண்டிதர் ஏற்றார் என்பதே ஏற்க இயலாதது. ஏற்பது எனில் ஆமாம் நீங்கள் சொல்வது சரி . அதை நாங்கள் கேட்டிருக்கக் கூடாதுதான், என்றால் ஏற்பது. ஆனால் பண்டிதர் அப்படி செய்ய வில்லை. “ போங்கடா நீங்களும் உங்க சாமிகளும்”  என்பதே அவரது தொனியாக இருந்தது. இதையே ஏற்றதாகப் பதிவதுதான் மேட்டுக் குடியின் சாமர்த்தியம்.

ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொன்னபின் எதற்கு வியாக்கியானம் தேவைப் படுகிறது?. அவர்களது முடிவை ஆரம்பமே சொல்லிவிடுவதால் அதை விட்டு விடலாம்தான். ஆனால் அதற்கு பண்டிதரின் பதில் அவசியம் என்பதால் அதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.

சிவராம சாஸ்திரி திமிரோடு தொடர்கிறார், “கல்வி கற்றலும், புத்தி சாதுர்யமும் பயிற்சியாலோ , கட்டாயத்தாலோ, வருவது இல்லை. விவேகமும் புத்தியும் பிராமண விந்திற்கு மட்டுமே சொந்தம் என்பதை அன்பர் உணரவேண்டும். ஆதி என்ற பறையர் குலப் பெண்ணுக்கு பிறந்தவர் என்றாலும் அவருடைய தகப்பனார் பகவான் ஒரு பிராமணர். அதனால்தான் வள்ளுவரால் குறளை எழுத முடிந்தது.

எவ்வளவு திமிர். புத்தியும் கல்வியும் பயிற்சியினால் வருவது இல்லை என்பது எவ்வளவு ஆனவமான, சாதித் திமிரோடு கூடிய எல்லோருக்கும் கல்வி என்ற இன்றைய ஒடுக்கப் பட்ட திரளின், உழைக்கும் பெரு மக்களின் கோரிக்கைக்கு எதிரானது.

”சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்”  என்கிற நம் வீரியம் மிக்க பழ மொழியை நக்கலடிக்கிற பதில் இல்லையா. சரி சிவராம சாஸ்திரிக்கள் அந்தக் காலம் எனலாம்.

இப்போதும் ஒருவர் சிவராம சாஸ்திரியின் குரலாய் மாறிப் போனாரே.  எல்லா மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்றதும் நூலுக்கும் காலனிக்கும் ஒரே பாடத் திட்டமா? அடுக்குமா? அது கட்ட மாட்டு வண்டி இது ராக்கெட் அல்லவா என்பது போல் இல்லாத சிண்டை சினக்க சினக்க ஆட்டும் சோக்கள் சிவராம சாஸ்திரிகளன்றி வேறு என்ன?

மனு எல்லா காலத்திலும் இருக்கிறான். அவன் பெயர் அப்போது மனு, அப்புறம் ராஜ கோபாலாச்சாரி, இப்போது சோ.ஆக எல்லாக் காலத்திலும் மனு உண்டு.

இந்தக் கட்டுரைக்கு தேவையே இல்லை எனினும் சிவராமனுக்கு பண்டிதர் கொடுத்த பதில் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நம்மை உற்சாகப் படுத்தி நமது கங்கின் சாம்பல் ஊதக் கூடிய வார்த்தைகள் அவை என்பதால் பதிகிறேன்.

சிவராமனை இடை மறித்து பண்டிதர் கேட்கிறார்,

அய்யா, சிலது கேட்க வேண்டும்

கேளுங்கள்

“கல்வியும் விவேகமும் பிராமண விந்திற்கே தொடர்புடையதென்றால் BA, MA போன்ற பட்டங்களை பெற்றிருக்கக் கூடியபறையர்கள் அனைவரும் யாருடைய விந்திற்குப் பிறந்தவர்கள்? அதே போல் இன்றைய தினம் சிறையில் இருக்கும் பிராமணர்கள் யாருடைய விந்திற்குப் பிறந்தவர்கள்?”

இப்போது வரலாம் பஞ்சாயத்திற்கு. இப்போது என்ன நடந்து விட்டது? இது ஒன்றும் எல்லோரையும் புத்தகம் கைக்கு வந்த நாளே ஒன்று படுத்தி விடக் கூடிய ஒன்றல்ல. புத்தகம் கூட ஒன்றும் அல்ல. பாடத்திட்டம் மட்டுமே ஒன்று. பொதுப் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவனின் அறிவியல் பாட[ப் புத்தகத்தில் இரண்டாம் பாடம் ‘தண்ணீர்’  எனில் மெட்ரிக் பையனின் இரண்டாவது பாடமும்  ‘தண்ணீர்’ . அவ்வளவுதான். பொதுப் பாஷை நீசத் தனமானது என்று அவர்கள் கருதினால் அவர்களது தேவ பாஷையிலே ‘ஜலமாய்’ கொட்டலாம்.

இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு. இன்னமும் உன் பிள்ளை ரேமண்ட்ஸில் பள்ளிக்கு வந்தால் என் பிள்ளை கிழிந்த உடையோடுதான் வருகிறான். உன் பிள்ளை பாட்டா போட்டு வந்தால் என் பிள்ளை வெறுங்காலோடுதான் வருகிறான். உன்பிள்ளை ஏ.சி அறையிலெனில் என் பிள்ளை இன்னமும் மரத்தடியில்தான்.

இவ்வளவு வேறு பாடுகள் இருந்த போதும் அவன் குதிக்கிறானே ஏன்?

காரணம் இதுதான். அவன் காலத்தில் ஒன்றும் அவன் குடி முழுகிப் போய்விடாது என்பது அவனுக்கு நன்றாகவேத் தெரியும். இது ஒரு சின்னத் தொடக்கம் என்பதும் அவனுக்குத் தெரியும்.

சமச்சீர் திட்டத்தில் குறை என்பது கூட சரி செய்யக் கூடியதே என்பதும் அவனுக்குத் தெரியும் .மட்டுமல்ல சமச்சீர் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதோ சரி செய்து நல்ல பொதுவான ஒரு பாடத்திட்டம் நோக்கி நகர்வதோ அல்ல அவனது எதிர்ப்பின் நோக்கம்.

அவனுக்குத் தெரியும் இந்தத் திட்டம் நடை முறைப் படுத்தப் பட்டு பையப் பைய அதன் குறைகள் சரி செய்யப் படுமானால் அதன் விளைவு அவனது பேரனுக்குப் பேரன் நம்முடைய பேரனுக்குப் பேரனோடு ஒன்றாக எல்லா நிலைகளிலும் சமதையாக அமர வேண்டி வரும் என்று அவனுக்குத் தெரியும் .  அதுதான் கொதிக்கிறான்.

நேற்றைய ஜூனியர் விகடனில் கழுகாரிடம் “புதிதாக உதயம் ஆகியுள்ளதெற்கு சூடானுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?” என்று ஒரு கேள்வி

கழுகார் சொல்கிறார்,

“ மொத்தமே பதினைந்து சதவிகிதம் பேர்தானங்கு கல்வி அறிவு உடையவர்கள். கல்வியில் பின் தங்கியுள்ள தெற்கு சூடான் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் உங்களுக்கு தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் கல்விதான் அதை தக்க வைக்கப் பயன்படும்.”

மண்ணை தக்க வைக்க வேண்டுமெனில் கல்வி அவசியம். கல்வி பெறாத சமூகம் தனது மண் மீது தனக்குள்ள உரிமையை இழந்து அடுத்தவன் ஆதிக்கத்தின் கீழ் போகும்.

கல்வி சமப்பட்டால் சகலமும் சமப்படும். அல்லது கல்வி மட்டும் சமப்பட்டு விட்டால் அச்சமூகம் அனைத்திலும் சமத்துவம் கேட்கும். அதற்காய்ப் போராடும்.

ஆக கல்வியில் சமத்துவத்தை இன்று விட்டுக் கொடுத்தால் நாளை சகலமும் சமப்படும். அப்படி சமப் பட்டால் தனது ஆதிக்கம் பறி போகும். இன்னும் பச்சையாக சொல்வதெனில் அப்புறம் தனது சந்ததி உழைக்க வேண்டி வரும் போன்ற உண்மைகளே சமச் சீருக்கு எதிராய் அவனை கிளப்புகிறது.

ஆக சமச்சீரின் பலம் நம் எதிரிக்குப் புரிகிறது. நமக்கெப்போது புரியப் போகிறது?





Thursday, August 4, 2011

கதவை சாத்தியது யார்?

அதை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை. மிகச் சரியாக இருபத்தி ஒன்பது நொடிகளே ஓடக் கூடிய ஒரு குட்டியோ குட்டியூண்டுக் குட்டிக் குறும் படம்.
தோழி ப்யூலாவின் முக நூலில் கிடைத்தது. அப்படியே சுட்டு கொஞ்சமும் சேதப் படாமல் எடுத்து வந்து நமது முக நூலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியவில்லை. நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களில் எப்படி சுடுவது என்பதும் ஒன்று.

கிஷோரின் கையில் காலில் விழுந்து எப்படியோ ஒரு வழியாய் அதை செய்தும் முடித்தேன். மீண்டும் ஒரு முறை பார்த்தேன். சுருக்கம் என்றால் சுருக்கம் அப்படி ஒரு சுருக்கம்.

ஒரு எல்.கே.ஜி பையனிடம் எழுதச் சொல்லி அவன் பெரிசு பெரிசாய் எழுதினாலும் கதை ஒரு A4 அளவு தாளைத் தாண்டாது.

அவ்வளவு சின்னது.

சட்டை போடாத சிறுவன் ஒருவன் ஒரு தட்டு நிறைய முட்டைகளை எடுத்துக் கொண்டு மாடிப் படி ஏறி வருகிறான். அவன் போக வேண்டிய அறையின் கதவு சாத்தி இருக்கிறது. கதவை ஒரு கையால் மென்மையாக தள்ளுகிறான். கதவு திறக்க வில்லை. மீண்டும் கொஞ்சம் விசை கொடுத்து அழுத்தித் தள்ளுகிறான். அப்போதும் திறக்கவில்லை. முட்டைத் தட்டை கீழே வைத்துவிட்டு இரண்டு கைகளாலும் தள்ளிப் பார்க்கிறான். முடியவில்லை. தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி தன் உடலால் ஆன மட்டும் பலம் கொண்டு மோதிப் பார்க்கிறான். ஒன்றும் பயனில்லை.

அவனால் முடிந்த அத்தனையும் செய்து பார்த்துவிட்டான். எதுவும் பலிக்கவில்லை. அவன் மீது ஏகத்துக்கும் அனுதாபம் பிறக்கிறது. நம்மாலும் உதவ இயலாத சூழல். அய்யோ பாவம் என்ன நேர்ந்தது இந்தக் கதவுச் சனியனுக்கு, என்று கதவை சபிக்கிறோம்.

அடுத்து என்ன செய்வான்? பேசாமல் திரும்பி விடுவானா? அல்லது நம்ம ஊர் கதாநாயகன் மாதிரி பின்னே ஓடி நின்று பின் முன் நோக்கி ஓடி வந்து கதவைத்  தள்ளித் திறப்பானா?

அதைப் பற்றி யோசிப்பதற்கோ யூகிப்பதற்கோ இடம் கொடுக்காமல் இன்னொரு சிறுவன் அங்கு வருகிறான். நேர்த்தியான உடை, மிடுக்கான நடை, கழுத்தில் டை, காலில் விலை உயர்ந்த ஷூ, கையில் புத்தகங்கள் என்று மேட்டுக் குடியின் அக்மார்க் பிரதி.  கொஞ்சமும் புன்னகை மாறாமல் ஏற்கனவே கதவைத் திறக்க முடியாமல் நொந்து போயிருந்த சிறுவனின் தோள் மீது கை வைத்து அவனைக் கொஞ்சம் நகரச் சொல்கிறான்.

இவன் சற்றே நகர இரண்டாவதாக வந்த பையன் அதாவது படித்த பையன் கதவின் ஒரு புள்ளி நோக்கி கையை நீட்டுகிறான். முட்டை தூக்கி வந்த பையன் முதல் நம் அனைவரது பார்வையும் அவன் கை நீட்டும் புள்ளி நோக்கி குவிகிறது.

அந்தக் குறிப்பிட்ட இடத்தில் கதவில் “இழு” என்று எழுதப் பட்டிருக்கிறது. மீண்டும் அந்தப் பையன் சட்டைப் போடாத இந்தப் பையனைப் பார்க்கிறான். சன்னமான புன்னகையோடு கதவை இழுக்கிறான். கதவு திறக்கிறது. முட்டையோடு வந்த பையன் தலையில் கை வைத்தவாறு நிற்கிறான்.

”படிப்பு கதவுகளைத் திறக்கும்”  என்ற  ஒரு வாசகத்தோடு அந்தப் படம்  முடிகிறது.

இவ்வளவுதான் படம். அரை நிமிடத்திற்கும் ஒரு நொடி குறைவாகவே ஓடக் கூடிய இதனை, குறும் படத்திற்கு தேவையான மிகக் குறைந்த் அளவுக்கும் (அப்படி ஒரு அளவுகோள் இல்லை என்பது வேறு விசயம்.) மிகவும் குறைச்சலான அளவு நேரமே ஓடக் கூடிய ஒன்றினை, குறுகத் தறித்ததாகக் கொள்ளப்படும் குறளைப் பொருளோடு சொல்வதற்கு ஒரு சிறுவன் எடுத்துக் கொள்ளும் கால அளவில் பாதி அளவு நேரமே ஓடக் கூடிய ஒன்றினை வேறு ஏதேனும் புதுப் பெயெர் கொண்டுதான் அழைக்க வேண்டும். எந்த ஒன்றிற்கும் பொருத்தமான பெயர் வைப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கும் எங்கள் தமிழ்ப் பிள்ளை கூடிய விரைவில் இதற்கும் ஒரு பொருத்தமான புதுமையான பெயரை வைப்பான்.

கல்வி கதவுகளைத் திறக்குமா?
எனில் கல்வி எந்தக் கதவுகளைத் திறக்கும்?
எனில் எந்தக் கல்வி கதவுகளைத் திறக்கும்?
எனில் எந்தெந்தக் கல்வி எந்தெந்தக் கதவுகளைத் திறக்கும்?

கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. உண்மையிலுமே இந்தச் சின்னப் படம் கொளுத்திதான் போட்டது. நாம்தான் குழம்பிப் போனோம். மற்றவர்களை இது இந்த அளவுக்கேனும் கிச்சு கிச்சு மூட்டுகிறதா பார்ப்போம் என்று  விக்டோரியாவிடம், கீர்த்தியிடம், கிஷோரிடம், பள்ளியில் நண்பர்களிடம் என்று கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் இதனைக் காட்டி கருத்தினைக் கேட்டேன்.

ஏனென்றே தெரியாமல் ஒட்டு மொத்த தமிழகமும் ஓட்டுப் போட்டதைப் போல ஒருவர் பாக்கி இல்லாமல் ஒன்றையே சொன்னார்கள்.

“சின்னப் புள்ளைல அம்மா அப்பா பேச்சக் கேட்டுப் படிச்சிருந்தா இப்படி வருமா? கல்வி இல்லைனா அவமானப் படனும்னு ஆரோகியம் சிஸ்டர் அடிக்கடி சொல்வாங்க. இப்ப பாத்தீங்களா எழுதப் படிக்கத் தெரியாத அந்தப் பையன் எப்படி அவமானப் படறான்னு. படிச்சா எவ்வளவு மரியாதையா ஸ்டைலா வாழலாம்,” என்று தன்னளவிலான விமர்சனத்தை வைத்தாள் கீர்த்தி.

பள்ளியில் அன்று தலைமை ஆசிரியர் வராத காரணத்தால் நான் தான் கூட்டு வழிபாட்டினை நடத்த வேண்டி வந்தது. அப்போதும் இந்தக் கதையினை பிள்ளைகளிடம் சொன்னேன். முடிந்ததும் ஏழாம் வகுப்பு ரூபன் ஓடி வந்து என் கையை பிடித்துக் கொண்டு கதை நல்லா இருக்கு.  இனிமே நீங்களே கதை கிளாசுக்கும் வாங்க சார் என்கிறான். ஒரு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்னிடம் கதை நல்லா இருந்ததாக சொன்னார்கள். அடுத்தடுத்து வேலைகள் இருந்ததால் பிள்ளைகளிடம் இது குறித்து விவாதிக முடியவில்லை.

வகுப்புகளைப் பார்வையிட சென்றபோது ஒன்றிரண்டு ஆசிரியைகள் அந்தக் கதை குறித்து பேசினார்கள். கல்வியின் அவசியத்தை உணர வைக்க இதைவிட வேறு என்ன வேண்டும்? என்கிற மாதிரி சொன்னார்கள்.

அலை பேசியில் இருந்த படத்தைப் பார்த்துவிட்டு நண்பர்களும் இதையே சொன்னார்கள். சேவியர் ஒரு படி மேலே போய் இதை ஆறு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்றார்.கண்ணனும் நிவாசும் பள்ளி தொலைக் காட்சிப் பெட்டி மூலமாகவா அல்லது மேசைக் கணினி மூலமாகவா என்பது குறித்து விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கப் போன போது அவர்களிடம் அது குறித்து கருத்து கேட்டேன். அச்சுப் பிசகாமல் அவர்களும் இதையே சொன்னார்கள்.

ஆக இந்தப் படம் குறித்த எல்லோரது கருத்தும் ஒன்றாகவே இருக்கிறது. ஆறாம் வகுப்பு படிக்கும் பிள்ளையிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு பாடமெடுக்கும் ஆசிரியர் வரைக்கும். படிக்கிற வயசில் படிக்காமல் சுத்தினால்  இப்படித்தான் என்பதே அது.

அது மொத்தமும் சரி இல்லை என்றாலும் தவறில்லை என்கிற வகையில் சரியான கருத்தாகவே படுகிறது.

ஆனால் கீர்த்தனா பேசிக் கொண்டிருந்தபோது இடை மறித்து “ அவன் படிக்க மாட்டேன்னு யார்ட்டயாவது சொன்னத கேட்டியாடி வெள்ளச்சி” என்று கேட்டது நிரம்பவே யோசிக்க வைக்கிறது.

ஆமாம், இவன் படிக்காமல் போனதற்கு இவனா காரணம்? அல்லது இவன் மட்டுமா காரணம்?

ஆம் எனில் புத்தகத்தோடும், மிடுக்கான உடையோடும், அவன்தான் அல்லது அவனேதான் காரணம் என்றாகிவிடும். சத்தியமாய் அதுவல்ல காரணம்.  அவனது மிடுக்கிற்க்கும் , படிப்பிற்கும் , மேதமைக்கும் அவனல்ல அவனது சமூக சூழலே காரணம்.

அதேபோல்தான் இவன் முட்டை தட்டை தூக்குவதற்கும், இவனைப் போல் வேறு சிலர் தேநீர்க் குவளைகளைக் கழுவுவதற்கும் இவர்களது குடும்ப மற்றும் சமூக பின் புலமே காரணம்.

எனெக்கென்னவோ இவர்களது கல்வியைக் களவாண்ட புன்னியவான்களில் சிலரே இந்தப் படத்தைப் பார்த்து உப்பில்லை உரப்பில்லை என்று வியாக்கியானம் செய்துகொண்டிருக்கவும் கூடும் என்று படுகிறது

கல்வி இல்லாதவனுக்கு கதவுகள் திறக்காது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதே வேளை கல்விக் கூடங்களில் இவர்கள் நுழைய விடாமல் கதவைச் சாத்திய களவாணிகளை நாங்கள் சும்மா விடுவதாயில்லை.

எது எப்படியோ இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்த தோழன் அல்லது தோழி வாழ்க.


 





Tuesday, August 2, 2011

விழித்திருந்து பெற்றவர்கள் பாக்கியவான்கள்...




இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். கிஷோரை கல்லூரி விடுதியில் விட்டு 
விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்படியே அயர்ந்து தூங்கி விட்டோம் நானும் 
விக்டோரியாவும். அதிகாலை எழுந்து தளவாப் பாளையம் போய் இரவுதான் திரும்பிக் 
கொண்டிருந்தோம்.போக நூற்றைம்பது வர நூற்றைம்பது என சற்றேரக் குறைய 
முன்னூறு கிலோமீட்டர் பயணம். 

இடையில் கரூரில் இறங்கி அவனுக்குத் தேவையான வாலி, குவளை, கண்ணாடி, 
சோப்பு, சீப்பு, தலையணை, போன்ற பொருட்களை வாங்க கடை கடையாய் ஏறி இறங்கி , 
கடுமையான வெய்யிலில் வாங்கியவற்றை தூக்கிக் கொண்டு நடந்து, கல்லூரி 
அலுவலகத்திற்கும் விடுதீகுமாய் இரண்டு மூன்று முறை நடந்து, விடுதியில் கால்  
வலிக்க நின்று என்று ஏகத்துக்கும் பட்டதில் மிகவும் அசந்து போயிருந்தோம்.

யாரோ என் காலை சுரண்டுவது போன்று தோன்றியது. தூக்கம் தொலைந்த எரிச்சலோடுதான் 
விழித்தேன். பார்த்தால் படத்தில் காணும் குழந்தை தன் அப்பாவிடம் இருந்து தாவி என் 
காலை தடவிக்கொண்டிருந்தாள். நானும் விக்டோரியாவும் மூன்றுபேர் இருக்கையில் 
அமர்ந்திருந்தோம். எங்களுக்கு நேரே இருந்த இருவர் இருக்கையில் ஒரு இளைய தம்பதியர். 
அவர்கள் குழந்தைதான் அவள். 

அது அந்தக் குழந்தையின் ஸ்பரிஷம் என்பது புரிந்த மாத்திரத்தில் தூக்கம் அசதி அலுப்பு 
எல்லாம் பறந்து போய் அப்போதுதான் ஜில்லென்ற தண்ணீரில் குளித்து வந்த புத்துணர்ச்சி 
உடலெங்கும். மனசோ ரெக்கை இல்லாமலே பறக்க ஆரம்பித்து விட்டது.

இரு கைகளையும் நீட்டி எவ்வளவோ புன்னகைத்தும் வர மறுத்து சிரித்தாள். அந்த தூக்கம் 
கசியும் கண்களும் பொக்கைச் சிரிப்பும் அப்படியே கிறங்க அடித்தன. 

எவ்வளவோ கெஞ்சியும் வர மறுத்தாள். ஆனால் நாம் அந்தப் பக்கம் திரும்பினால் 
சுரண்டினாள். நாம் திரும்பினால் சிரித்தாள். ஆனால் வர மட்டும் மறுத்தாள். ஒரு ஐந்து 
நிமிடம் இப்படியான எனக்கும் அவளுக்குமான போட்டியாகவே கழிந்தது. ஒவ்வொரு முறை 
அவளிடம் தோற்ற போதும் ஏதோ உலகக் கோபையை வெண்ன்ற பெருமிதம். 

இதற்கிடையில் அவர்கள் அவர்கள் ஊர் வரவே இறங்கப் போனார்கள். 

அவளது தந்தை அவளை தூக்கிக் கொண்டு படிக்கட்டு நோக்கி நடந்தார். குழந்தை பேருந்தில் 
இருந்த எல்லோருக்கும் டாடா காட்டினாள்.  எல்லோருக்கும் கஞ்சத்தனமே இல்லாமல் 
காற்றில் முத்தம் கொடுத்தாள். எனக்கும் ஒன்று வந்தது.

எப்படி சொல்வது ? எனது நாற்ப்பத்தியெட்டு வருட வாழ்வில் நான் அதிகம் சந்தோஷப் பட்ட 
பத்து தருணங்களுள் அதுவும் ஒன்று. 

 இறங்கி பேருந்தைக் கடந்து போகும் வரைக்கும் விக்டோரியா அவளையே வைத்தக் கண் 
வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். 

”ஏங்க வெளியே இருந்து இப்ப ஒரு முத்தம் கொடுக்கறாங்க” என்று சொன்ன விக்டோரியாவின் 
குரலில்தான் எத்தனை உற்சாகம்.  எத்தனை குதூகலம். நானும்தான் அவளைப் பார்த்தேன். 
நான் பார்க்காத நேரம் பார்த்து விக்டோரியாவிற்கு கொடுத்திருக்கிறாள். ம்.. எதற்கும் ஒரு 
கொடுப்பினை வேண்டும்

 “ குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று ஏதோ கிறுக்கன் பாதி மப்பில் உளறி இருக்கிறான்.
குழந்தை எதையும் விடவும் உசத்தியானது.

அவள் காற்றிலே முத்தங்களை கொடுத்தபோது விழித்திருந்து பெற்றுக் கொண்டவர்கள் 
பாக்கியவான்கள். அப்போது தூங்கிக் கொண்டிருந்த ஏனையோர் சத்தியமாய் 
சபிக்கப் பட்டவர்கள்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...