Monday, November 24, 2014

...

22 ஆம் தேதி 11 மணிக்கு ஒரு அழைப்பு,
” எலெக்‌ஷன் கமிஷனிலிருந்து பேசறோம். நீங்க எட்வின் தானே?”
“ஆமாம்”
“ சரி வச்சுடுங்க”
பிறகு 12 மணி வாக்கில் அங்கிருந்து வந்த இன்னொமொரு அழைப்பு அடுத்த நாள் 9 மணிக்கே வந்து அப்பாயின்மெண்ட் ஆர்டெர் வாங்கி கொண்டு பூத்திற்கு செல்ல ஆணையிட்டது.
அன்று இரவு 8 மணிக்கு வந்த அழைப்பு அடுத்த நாள் சரியாக 7 மணிக்கெல்லாம் வந்து உத்தரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தவறினால் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் கனிவாக மிரட்டியது.
வீட்டை விட்டு 4 மணிக்கு கிழம்பி ஏழுக்கெல்லாம் போனால் ஏழரைக்குப் பிறகே அவர்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள். உத்தரவை 11 மணிக்கு கொடுத்தவர்கள் உடனே வாக்குச் சாவடிக்கு போய் காத்திருக்க வேண்டும் என்றும் வாக்களிக்கும் கருவிகளைக் கொடுக்க உடனே வருவார்கள் என்றும் அப்போது இல்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் வரும் என்றும் மிரட்டி அனுப்பினார்கள்.
போய் காத்திருந்தால் ஆறு மணி வாக்கில் நிதானமாக வந்தார்கள்.
முதல் நாள் மதியம் சாப்பிட்டது. 24 ஆம் தேதி இரவு 7 மணிக்குத்தான் சாப்பிட முடிந்தது. இடையில் ஒரே ஒரு கப் தேநீர்தான். இதுகூட பல இடங்களில் இல்லை என்பதுதான் செய்தி. ஏற்கனவே சாப்பாட்டிற்கு முன்னர், பின்னர் என்பதெல்லாம் தாண்டி சாப்பிடும் போது ஒரு மாத்திரை சாப்பிடவேண்டிய ஆள் நான்.
இவை போக வாக்கெடுப்பை அமர்ந்து நடத்த நாற்காலிகளைத் தேடிய ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே தேர்தல் வகுப்புகள் எடுத்து மிக நேர்த்தியாக ஆசிரியர்களை அசிங்கப் படுத்தினார்கள்.
தேர்தல் கமிஷனே இப்படித்தான் வழிகாட்டியதா? இல்லை வருவாய்த்துறை வரம்பு மீறினார்களா தெரியாது.
தேர்தல் கமிஷன் அவ்வப்போது ஆசிரியர்களை கலந்தாலோசித்தாலே தேர்தல்களை இதைவிடச் சிறப்பாக நடத்த முடியும்.

குட்டிப் பதிவு 13

ஏன் சார் உங்க செல் ரிப்பேரா? முகநூலில் பார்த்தேன் என்று கேட்ட பூபதியிடம் ( Jilla Boopathi ) சம்மரி தவிர மத்த எல்லாத்தையும் படி என்றேன்.
எந்த டெட்டால் போட்டு கழுவினாலும் வாத்தியார் புத்தியை சுத்தமாய் கழுவித் துடைத்தெறிய முடியவில்லை.

கவிதை 21

மாதக்கணக்காய் பூட்டிக் கிடக்கும் 
வீட்டின் கூரையிலிருந்து
கரைந்துகொண்டேயிருக்கிறது
காகம்

Friday, November 21, 2014

குட்டிப் பதிவு 12

உன் பெயரென்ன என்றுகேட்டால் வி.லேகாஸ்ரீ UKG C செக்‌ஷன் என்று பள்ளி முகவரியோடு சேர்த்துதான் சொல்வாள்.
வாங்க வி.லேகா LKG என்று ஆரம்பித்தாலே போதும் அழாத குறையாக தான் UKG என்று ஆரம்பித்து விடுவாள். எனக்கு அவளைச் சீண்டிக் கொஞ்சுவதற்கு இதுவே போதுமானதாக இருக்கிறது.
லேகா குட்டி LKG பெரிசா UKG பெரிசா என்றேன் இன்று.
கொஞ்சமும் யோசிக்காமல் UKG தானென்றாள். அப்புறம் ஏன் போன வருஷம் LKG படிச்ச என்றேன்.
போன வருஷம் LKGதான் பெரிசு. அதனாலதான் என்கிறாள்.
குழந்தைனா குழந்தைதான்.

Wednesday, November 19, 2014

நிலைத் தகவல் 64

” என்னங்க சார், மூனு தரம் போன் செஞ்சிட்டோம். வந்து வாங்கிக்க மாட்டீங்கறீங்க. எப்ப வரீங்க. அல்லாட்டி திருப்பி அனுப்பட்டுமா?”
என்னுடனான ஒரு கூரியர் அலுவலரின் உரையாடலே இது.
கூரியர் வந்த புதிதில் எல்லோரும் அதன் விரைவு சேவையை ஆகா ஓகோ என்று கொண்டாடினார்கள். தபால் துறையை விட இதன் சேவையை உச்சிமுகர்ந்து மெச்சினார்கள்.
தபால் துறையில் கோளாறுகளே இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் அவற்றைப் போக்குவதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அதற்கு மாற்று இது என்றார்கள்.
தெருக்கள் அதிகரிக்கும் அளவிற்கு தபால் காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற சன்னமான அக்கறைகூட இல்லாதே இருக்கிறார்கள். இருக்கிற காலிப் பணியிடங்களையே நிரப்ப எண்ணம் இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்ப்பது தவறுதான்.
இந்த லட்சணத்தில் ரயில்வேயை 100 விழுக்காடு தனியாருக்கு தாரை வார்ப்பதே தனது லட்சியம் என்பதை எந்த வித கூச்ச நாச்சமும் இன்றி சொல்லியிருக்கிறார் பிரதமர்.
விடுங்க சார்,
இனி எங்களுக்கு ரயிலும் இல்லை

Tuesday, November 18, 2014

குட்டிப் பதிவு 11

தங்களது காத்திரமான பதிவுகளால் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பவர்களுள் முகநூல் தோழர் சியாமளா ஷேக்ஸ்பியர் அவர்களும் ஒருவர்.
கிறிஸ்தவராக இருந்துகொண்டே அந்த மதத்தை விமர்சிக்கும் அவரை கூடுதல் மரியாதையோடுதான் நான் பார்க்கிறேன்.
தனக்கு தனது தந்தை தமிழ்ப் பெயரை வைக்காமல் தனது மருத்துவக் கல்லூரி தோழியான சியாமளாவின் பெயரை வைத்ததில் ஏற்படும் சிக்கல்களை அவர் எழுதி இருந்தார்.
இதில் பிழை எதுவும் இல்லை என்றும் தமிழைப் புழங்குவதே இன்றையத் தேவை என்றும் அவருக்கு பின்னூட்டமிட்டிருந்தேன்.
ஆனால் இந்தப் பதிவு வேறு காரணங்களுக்கானது.
பிடித்த தலைவர்களின், படைப்பாளிகளின், நடிக நடிகைகளின், தெய்வங்களின் பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை. ஆனால் தங்களது தோழர்களின் பெயரை வைப்பது அபூர்வம். எனக்குத் தெரிய எனத நண்பர் செல்வ பாண்டியன் அவர்கள் தனது ஒரு மகனுக்கு தனது வகுப்புத் தோழனின் பெயரான செழியன் என்பதை வைத்துள்ளார். அதற்காகவே அவரை வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாராட்டுவேன். தோழமையை இவ்வளவு உயர்வாக மதிக்கும் அவரை இன்னும் பாராட்ட வேண்டும் என்று கருதுவேன்.
தோழருக்கு சியாமளா என்று பெயர் வைத்ததற்காகவே அவரது தந்தையை நான் தொடர்ந்து மதித்து பாராட்ட கடமை பட்டிருக்கிறேன். அதிலும் செல்வ பாண்டியனாவது தனது தோழனின் பெயரை வைத்திருக்கிறார். இவரோ தனது கல்லூரித் தோழியின் பெயரை தனது மகளுக்கு வைத்ததோடு அதை தெரியப் படுத்தவும் செய்திருக்கிறார். இது பேரதிக மரியாதைக்குரியது. நான் அறிந்து தோழமையை அழகோடும் நெகிழ்வோடும் கௌரவப் படுத்தியிருக்கிறார் தோழரின் தந்தை அவர்கள்.
சங்கடமே வேண்டாம் சியாமளா தோழர். உங்கள் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு கனமும் எனக்குள் பெருமிதம் சுரக்கும்.

தேர்வல்ல.... மதிப்பீடே தேவை

” புதிய தலைமுறை கல்வி” இதழில் வந்திருக்கும் எட்டாம் வகுப்பு வரைக்கும் கட்டாயத் தேர்வு அவசியமா? என்பது குறித்த எனது கருத்துக்களின் முழுப்பகுதி
**********************************************************************************
”பேரெழுதத் தெரியாதது, அனா ஆவன்னா தெரியாததையெல்லாம் எட்டாம் வகுப்பு வரைக்கும் பாஸ் போட்டுட்டு இப்ப 100 விழுக்காடு ஏன் தரலைனா எங்க போயி முட்டிக்கிறது? எப்படி தருவது?” என்பது மாதிரியான பத்தாம் வகுப்பு ஆசிரியர்களின் புலம்பலில் உள்ள நியாயத்தை ஒரு சக ஆசிரியனான என்னால் உணர முடிகிறது.
நல்ல தேர்வும் முழுமையான வடிகட்டலும் அவசியம்தானா? என்று கேட்டால் நல்ல தேர்வு அவசியம்தான் ஆனால் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரைக்குமேனும் வடிகட்டுதல் கூடாது என்பதே நமது பதில்.
யுனெஸ்கோவின் கல்வி அறிக்கை ஒன்று, “The purpose of education is to include the excluded” என்று சொல்கிறது. மதிப்பெண்களும், தேர்ச்சியும் மட்டுமல்ல, யாரையும் விடுபடாமல் பள்ளியில் அமரவைப்பதே கல்வியின் நோக்கம் என்று இதை தமிழ்ப்படுத்தலாம்.
பொதுவாகவே ஒரு வகுப்பில் தேர்ச்சி பெறாத குழந்தைகளில் 60% பேர் அதற்கு மேல் கல்வியைத் தொடர்வதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் தெருக்களில் சுற்றித் திரிவதும், சன்னம் சன்னமாக தீயப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு சமூகவிரோதிகளாகவும் மாறிப் போகிறார்கள்.
பள்ளி என்பது மொழிகளையும், சில பாடங்களையும் மட்டும் கற்றுத்தரும் இடம் அல்ல. தன்னம்பிக்கையை, நல்ல ஒழுக்கத்தை, அடுத்தவன் துயர் கண்டு துயருறும் மனிதத்தை, சாதி மிதித்தலை, மண்ணின், தாய்மொழியின் தொண்மத்தை போற்றிக் காக்கவேண்டிய கடப்பாட்டினை, பெண்மையைப் போற்றச் செய்வதில், வயதான காலத்தில் பெற்றோரை காப்பாற்றுவதில் அந்தக் குழந்தையை செதுக்கித் தரவேண்டிய பட்டறைதான் பள்ளி.
குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் பெறாத ஒரு குழந்தையை தேர்ச்சி பெறாதவனாக அறிவிப்பது என்பது அவனுக்கு வழங்க வேண்டிய மற்றவற்றைத் தர மறுக்கிற, அவனை மனிதப்படுத்துகிற கடமையிலிருந்து நழுவிப் போகிற வன்முறையே ஆகும்.
இந்த மாணவர்களை வைத்துக் கொண்டு எப்படி தேர்ச்சி விழுக்காட்டைத் தருவது? இங்குதான் ஆசிரியப் பணி அறப்பணி என்பது பொருந்துகிறது. இந்தக் குழந்தையும் தேர்ச்சிபெறப் போராடுவோம்.
இன்னொருபுறம் வறட்டுத் தனமான தேர்ச்சிவிழுக்காடு உதவாதென்பதை கல்வித்துறைக்கும் அரசுக்கும் எடுத்துச் சொல்வோம். தேவைப் படுமெனில் இதற்கான ஒரு போராட்டத்தையே கையெடுக்கலாம்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...