Thursday, September 29, 2016

இரண்டாவது கோப்பை தேநீரோடும்

காலையில் கையில் தேநீர்க் கோப்பையோடு நிவேதி வந்தாள்.
"மாமா டீ சாப்டியா?"
"சாப்டேனே"
ஓடிவிட்டாள்.
கொஞ்ச நேரத்தில் அழுதழுது கண்கள் சிவந்திருந்த நிவேதியைத் தூக்கிக் கொண்டு வந்த விக்டோரியா,
"பாப்பாவ என்ன செஞ்சீங்க?"
"ஒன்னும் செய்யலையேப்பா"
"இல்லத்த டீய பர்ஸ்டா குடிச்சாங்க"
அப்போது தான் இருவருக்கும் புரிந்தது. எது செய்தாலும் அவள்தான் பர்ஸ்ட் செய்யனுமென்பது வீட்டின் விதி. சடாரென சமாளித்த விக்டோரியா
"மாமாக்கு இன்னும் டீயே கொடுக்கலப்பா. பாப்பா குடிக்காம மாமாக்கு தருவனா" என்றவாறே இன்னொரு டம்ளர் தேநீரைக் கொடுத்தவாறே, "இப்பதான் கொடுக்கறேன் பாரேன்" என்றதும்
"ஐ! நாந்தான் பர்ஸ்டு" என்று கைகளைத் தட்டிக் கொண்டே ஓடினாள்.
குழந்தைகள் உலகம் குதூகலாமானது என்பதோடு சமயத்தில் இரண்டாவது கோப்பை தேநீரோடும் நம்மை அது ஆசீர்வதிக்கக் கூடும்

கடிதம் 18



அன்பின் தோழர்களே,
வணக்கம்.
நலம்தானே
நான் காக்கைக்கான படைப்பாளிகளுக்கான தேடலில் ஈடுபட்ட அளவிற்கு சந்தா தேடலில் ஈடுபட்டதில்லை. காரணம் வழக்கமாக “இந்த இதழ் நிச்சயம், அடுத்த இதழ் லட்சியம்” என்பதாக சிற்றிதழ்கள் மேல் படிந்துள்ள பிம்பம். காக்கையின் வெளியீட்டு விழாவில்கூட நான் இதைத்தான் சொன்னேன். ஒரு இதழ்கூட விற்கவில்லை எனினும் 18 இதழ்களையேனும் கொண்டு வருவோம் என்று கூறினேன்.
மேடையிலேயே எனது உரையை இடைமறித்து ஐந்தாண்டு சந்தாவினை வழக்கறிஞர் தோழர் அருள்மொழி வழங்கினார்.
தோழர்களே,
60 இதழ்களைக் கடந்து அறுபத்தி ஒன்றாவது இதழைக் கொண்டு வந்துவிட்டோம். இதற்கு நானோ, முத்தையாவோ அல்லது சந்திரசேகரோ மட்டும் அல்ல காரணம். என்னைப் பார்க்கிலும் சந்திரசேகர் மற்றும் முத்தையாவின் உழைப்பு மிக அதிகம். அது குறித்தெல்லாம் ஒன்றிரண்டு பாராக்களில் என்னால் சுறுக்கிவிட முடியாது.
இந்த இதழின் உயிர்ப்பில் நான் நன்றியோடு குறிப்பிட விரும்பும் சிலர் உள்ளனர்
1) ஓவியர் வீர சந்தானம்
2)ஓவியர் ட்ராட்ஸ்கி மருது
3) மூகாம்பிகை பைண்டர்ஸ் சரவணன்
4) கவிஞர் தம்பி Kavingnar Thambi
5) தோழர் அன்பாதவன் Anbaadhavan Shivam Bob
6) கவிஞர் ஜெயதேவன் கவிஞர் ஜெயதேவன்
7) பேராசிரியர் மணிகண்டன்
8) SRV பள்ளியின் முதல்வர் தோழர் துளசி
இன்னும் நீளும். இதில் தோழர் சரவணனைக் குறித்து ஒரு குறுநூலேனும் எழுதிவிட்டுத்தான் சாவேன்
எந்தக் குழுவையும் சாராது, தனக்கெனவும் ஒரு குழுவினை உருவாக்க முயலாது சன்னம் சன்னமாக ”காக்கை” ஒரு மாற்று இதழாக மாறிக் கொண்டிருக்கிறது.
புலம் பெய்ர்ந் தமிழர்கள் ’காக்கை’ யைத் தங்களது அடையாளமாகப் பார்க்கிறார்கள்.
பாரிசில் ஒவ்வொரு ஆண்டும் காக்கையின் சார்பாக பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.
தோழர் அரவிந்தன் தனது இறுதி நொடிகளில் உச்சரித்த இறுதி வார்த்தை “காக்கை” என்பதை நாங்கள் எங்களுக்கான கிடைத்தற்கரிய வெகுமதியாகப் பார்க்கிறோம்.
ஊதியத்தைத் தவிர வேறு எந்த வருமானமும் இல்லாத இரண்டு அரசு ஊழியர்களும் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியரும் இணைந்து இவ்வளவு காலம் கொண்டு வந்து விட்டோம். இனி உங்களிடம் கேட்கும் உரிமையும் தைரியமும் எங்களுக்கு இருப்பதாகவே நினைக்கிறோம்.
தோழர்களே காக்கையை வாசியுங்கள்.
இன்பாக்சில் முகவரியை அல்லது தொடர்பெண்ணை கொடுங்கள். இதழ் அனுப்புகிறோம். வாசியுங்கள். பிடித்திருப்பின் சந்தா அனுப்புங்கள்.
சந்தா விவரம்
*********************
ஓராண்டு ரூ 275
ஈராண்டு ரூ 500
ஐந்தாண்டு ரூ 1250
முகவரி
************
காக்கை
288, டாக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி
சென்னை 600005
செக் மற்றும் டிடி அனுப்ப
KAAKKAI என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்கதாய் அனுப்புங்கள்
நெட் பேங்கிங் மூலம் அனுப்ப
KAAKKAI
SYNDICATE BANK
AC NO: 60111010005660 (CURRENT ACCOUNT)
IFSC: SYNB0006011
தொடர்பு எண்கள்
**************************
எட்வின் : 9842459759
முத்தையா: 9841457503

Monday, September 26, 2016

சாதி கடந்து வந்துவிட்டால்

முகவரியை மறைத்துக் கொள்வதும் தவறான முகவரியைத் தருவதும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அவர்களது கழிசடைத்தனத்திற்கு உதவும் என்றால் அவர்கள் சுன்னத்தும் செய்து கொள்வார்கள், இஸ்மாயில் என்று பச்சையும் குத்திக் கொள்வார்கள்.
இந்தியா அதைக் கடந்து அழிந்துபோகாமல் நிற்பதற்கும், சிறுபான்மையினரை அவர்கள் நினைக்கிற அளவிற்கு அவர்களால் சீண்ட இயலாது போனதற்கும் ஆகப்பெரிய காரணம் இவர்களுக்கு எதிராக தீரத்தோடு நிற்கும் 99.999% இந்து மக்களின் பெருந்தன்மைதான்.
என்ன, மதத்தைக் கடந்து நிற்கும் என் இந்துமக்கள் சாதி கடந்து வந்துவிட்டால் அந்தப் புள்ளியிலேயே இவர்களது மதக் கேடயமும் செல்லாது போய்விடும்

"உனக்குக் கூடவா

நிவேதியின் சுவற்றுக் கிறுக்கலை உற்றுப் பார்க்கிறான் புத்தன்.
"அடுத்த பி.எப்பில்தான் பெயின்டடிக்கனும் புத்தா"
என்ன அது என்ற புத்தனின் கேள்விக்கு "வீடு" என்கிறாள் நிவேதி.
என்னையும் கேட்கிறான்
"நிவேதியின் கிறுக்கல்"
"உனக்குக் கூடவா அது நானென்று தெரியவில்லை"

புத்தனனின் வேலையில்லையாமாம்

சுவர்க் கிறுக்கலை ஏன் சுவற்றுக் கிறுக்கலென்று பிழையாய் எழுதினாய் என்று தம்பி நாணற்காடன் உரிமையோடும் நாகரீகத்தோடும் இன்பாக்சில் வந்தபொழுது சரியாக என் அறைக்குள் நுழைந்தான் புத்தன்.
அவன் சுட்டிக் காட்டிய நிலைத்தகவலும் புத்தனோடான உரையாடல்தான்
"அன்று காட்டியபோது பிழையைச் சுட்டாமல் தலையைத் தலையை ஆட்டினாயே புத்தா" என்றேன்
ப்ரூப்ரீடிங் பார்ப்பதெல்லாம்
புத்தனனின் வேலையில்லையாமாம்

தேர்தல் ஆணையம் எது வேண்டுமானாலும் செய்யுமா?

தலைமை ஆசிரியர் அழைத்தார். எனக்கு தேர்தல் பணிக்கான வகுப்பு வந்திருக்கிறதாம். குரலே கோவமாக இருந்தது. ஏனென்று கேட்டேன் எனக்கு மூன்றாம் அதிகாரியாக வந்திருப்பதாகவும் போய் என்னவென்று கேளென்றும் சொன்னார். என்னைவிட 20 ஆண்டுகள் குறைவான சீனியாரிட்டியும் என்னைவிட 20000 ரூபாய் சம்பளம் குறைவாகவும் வாங்கும் தோழர்களெல்லாம் ஜோனல் அதிகாரிகளாகவும் ப்ரசீடிங் அதிகாரிகளாகவும் இருப்பதாக பொங்கினார்.
ஏங்கண்ணே, போய் வேலைய பார்த்துட்டு வந்தாப் போச்சு என்றதற்கு இன்னும் கோவப்பட்டார்.
தெரியாமல்தான் கேட்கிறேன் தேர்தல் ஆணையம் எது வேண்டுமானாலும் செய்யுமா?

Thursday, September 22, 2016

அதை நாங்கள் தொலைத்து விட்டோம்

அமைச்சரிடம் சி. பி. ஐ கேட்டார்கள்,

“ நிலக்கரி ஒதுக்கீடு சம்பந்தமாக கீழ்க் காணும் ஆவணங்களைப் பார்க்க வேண்டும்”

அமைச்சர் சொன்னார்,

“ மன்னிக்க வேண்டும் . அவற்றை தொலைத்து விட்டோம்”

உச்ச நீதிமன்றம் கேட்டது,

“ 2G சம்பந்தமாக சில கோப்புகளைப் பார்க்க வேண்டும்”

அமைச்சர் சொன்னார்,

“ மன்னித்து விடுங்கள். நாங்கள் அவற்றைத் தொலைத்து விட்டோம்.”

தொலை பேசியில் அழைத்த பக்கத்து நாட்டு அமைச்சர் சொன்னார்,

“நண்பா, உங்கள் நாட்டை என் தாயார் சுற்றிப் பார்க்க வேண்டுமாம்”

பழக்க தோஷத்தில் அமைச்சர் உண்மையை உளறினார்,

“ மன்னிக்க வேண்டும். அதை நாங்கள் தொலைத்து விட்டோம்”

Thursday, September 15, 2016

இதுவே புதியது

உச்சநீதிமன்ற தீர்ப்பினையடுத்து பாரதிய ஜனதாக் கட்சியின் கடும் எதிர்பையும் மீறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அளவுநீரைத் திறந்து விடுகிறார் மாண்பமை சீத்தாராமையா அவர்கள்.
இப்படிச் சொல்வதால் சீத்தாராமையா அவர்களுக்கோ கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கோ தண்ணீரைத் திறந்து விடுவதில் முழுமையான உடன்பாடு என்றெல்லாம் பொருளல்ல.
'கனத்த மனதோடு' திறந்து விடுவதாகத்தான் சீத்தாராமையா அவர்களே கூறியுள்ளார்கள்.
ஆக மனதளவில் ஒப்பவில்லை எனினும் உச்சநீதி மன்றத்தின் உத்தரவை அமுல்படுத்துவது என்ற அளவில் கர்நாடாக அரசு வந்திருக்கிறது. ஆளும் கட்சியும் எந்தப் பிரச்சினையிலும் ஈடுபடாமல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கர்நாடகத்தில் இதுவே புதியதும் ஆரோக்கியமானதும் ஆகும்.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படும் ஒரு மாநில அரசிற்கு அதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒததுழைப்பைத் தரவேண்டியது மைய அரசின் கடமையாகும்.
ஆனால் பிரதமரை சந்திப்பதற்கு புதன்கிழமைவரை எரிந்து கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு புதன்வரை பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்பது கண்டனத்திற்குரியது.
காவிரிப் பிரச்சினையில் பிரதமர் தலையிடுவதற்கு இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும், உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்தி முதல்வரை மனம் போன போக்கில் செயல்படுவதாகவும் மத்திய அமைச்சர் மாண்பமை சதானந்த கௌடா கூறியுள்ளார்.
இது கண்டனத்திற்கு மட்டும் உரியதல்ல.
நிரந்தரத் தீர்விற்கான திட்டமிட அரசோ வெகுஜன அரசியல் கட்சிகளோ ஆர்வம் காட்டாத நேரத்தில் அக்கறையும் இந்த விஷயத்தில் ஞானமும் உள்ளவர்கள் உட்கார்ந்து யோசித்து விவாதித்து ஒரு திட்டத்தை பொது வெளியில் வைத்து பொருத்திப் அபிப்பிராயத்தோடு அரசை நிர்ப்பந்தித்தால் என்ன?

ஒன்றுகூடி திட்டமிடுதலும்

தமிழகத்தைச் சார்ந்த பாராளுமன்ற, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள சகாக்களின் ஆதரவைப் பெரும் முயற்சியில் இறங்குவதும்
கிடைக்கிற தோழமைச் சக்திகளின் ஆதரவோடு தில்லியில் களமாடுவதும்
ஆதரவே கிடைக்கவில்லை என்றாலும் தமிழகத்தை சார்ந்தவர்களேனும் களமாடுவதும்
எப்படிக் களமாடுவது என்பதை தமிழகத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் , பொதுமக்கள் ஆகியோர்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி திட்டமிடுதலும் காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு கிட்ட உதவும்.

Tuesday, September 13, 2016

அவர்களை அனுப்பியது யார்?

சிறையில் நடந்த தாக்குதலில் பேரறிவாளன் தாக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வருகின்றன.
சிறையில் தாக்குதல் நடந்ததெனில் தாக்கியது யார்?
அவரை அல்லது அவர்களை அனுப்பியது யார்?
ஆயுள்வரைக்கும் சிறையிலிருப்பதுதான் ஆயுள் தண்டனை என்று கூறி அவரது விடுதலையைத் தடுப்பவர்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொபர்புண்டா?
என்ன காரணம் தாக்குதலுக்கு?

மக்கள் தீர்வு காண்பார்கள்

தண்ணீர் கேட்பது தவறு என்பது தவிர அவனுக்கும்
தண்ணீர் மறுப்பது தவறு என்பது தவிர இவனுக்கும் பிரச்சினை என்னவென்று தெரியாது.
நீங்கள் பிரச்சினையயைத் தீர்க்கவெல்லாம் வேண்டாம்.
என்ன பிரச்சினை என்பதை மட்டும் இரு மக்களிடமும் வெளிப்படையாய் சொல்லிவிடுங்கள்.
மக்கள் தீர்வு காண்பார்கள்

Monday, September 12, 2016

மத்திய அரசின் கடமை அல்லவா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தலையிடக்கூடாதுதான் பிரதமர் அவர்களே. ஆனால், தீர்ப்பினை சம்பந்தப்பட்ட அரசுகள் முறையாக நடைமுறைப் படுத்துகின்றனவா என்று கண்காணிப்பதும் நடைமுறைப் படுத்த மறுக்கும் மாநிலத்தை செய்ய வைப்பதும், அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் போது ஏற்படும் சிக்கல்களை, வன்முறையை தீர்ப்பதற்கு அந்த மாநில அரசுக்கு உறுதுணையாக இருப்பதும் மத்திய அரசின் கடமை அல்லவா?

முப்போகம் விளையும் 350 ஏக்கர் தரிசு

நாங்கெல்லாம் மூனுபோகம் விவசாயம் செஞ்ச மக்கதெரியுமா? ” என்று தங்கள் காலத்தில் மூன்றுபோகம் விவசாயம் நடந்ததை மிகுந்த பெருமையோடு பேசும் கடைசி தலைமுறை மக்கள் இன்னமும் இருக்கவே இருக்கிறார்கள். அவர்களது இந்தக் கூற்றில் இழையோடும் பெருமிதமானது ’எங்கள் காலத்தில் நாங்கெல்லாம் நல்லாதான் இருந்தோம். உங்க நிலைமையப் பார்த்தீங்களா?’ என்ற எகத்தாளம் அல்ல. மாறாக, மூன்றுபோகமும் விவசாயம் செய்து தற்சார்போடு வாழ்வதற்கு நமக்கிருந்த வாய்ப்பு நமது சந்ததிக்கு இல்லாமல் போயிற்றே என்ற சோகம் தோய்ந்த ஆதங்கம் அது.

ஒருபோகத்திற்கே வாய்ப்பற்று இருக்கும் இந்தத் தலைமுறைக்கு அஞ்சாறு போகம் விளைவித்தால்தான் உணவு உற்பத்தியில் நாம் தற்சார்பை அடையமுடியும் என்ற எதார்த்தம் எடுத்த எடுப்பில் புரிந்துவிடும் என்று தோன்றவில்லை.

விவசாய உற்பத்திக்கான மொத்த நிலப்பரப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்பமை ராதா மோகன் சிங் சமீபத்தில் தெரிவித்துள்ள தகவலை 03.08.2016 அன்றைய தீக்கதிர் வெளியிட்டுள்ளது.

2013-2014 ஆம் ஆண்டில் 181.713 மில்லியன் ஹெக்டர் அளவிலான விவசாய நிலம் வேறு பணிகளுக்காக கைமாறிப் போயிருக்கிறது. இந்த ஆண்டு 182.209 மில்லியன் ஹெக்டர்  விவசாய விளைநிலம் கைமாறிப் போயிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் 1.25 மில்லியன் ஹெக்டர் விவசாய விளைநிலம் விவசாயம் கடந்து நகர்கிறது என்கிற தகவலை மாண்பமை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் கூறியிருக்கும் தகவலை அன்றைய தீக்கதிர் வெளியிட்டுள்ளது.

மற்ற விஷயங்களைப் பேசுவதற்கு முன்னால் பறிபோன விளைநிலங்களை ஏக்கர் அளவீட்டில் அறிந்துகொள்வது என்பது என்னொத்த பாமரர்களுக்கு உதவியாக இருக்கும். மில்லியன் என்றால் கோடி என்றே படுகிறது. அந்தப் புரிதலோடே நான் தொடர்கிறேன். பிழை என்றால் மாற்றிக் கொள்ளலாம். ஆக, மில்லியன் என்பதை கோடி என்று கொள்கிற பட்சத்தில் ஏதோ ஒரு வகையில் களவு போன 182.209 மில்லியன் ஹெக்டர் விளைநிலம் என்பதை தோராயமாக 182.25 கோடி ஹெக்டர் விளைநிலம் என்று கொள்ளலாம்.

ஒரு ஹெக்டேர் என்பது இரண்டரை ஏக்கர். 182.25 கோடி ஹெக்டர் என்பது 455.625 கோடி ஹெக்டர் என்றாகிறது. ஏறத்தாழ 456,62,50,000 ஏக்கர் விளை நிலம் இதுவரை வேறு பணிகளுக்காக மடை மாற்றப் பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 1.25 மில்லியன் ஹெக்டர் விளைநிலம் களவாடப் படுகிறது என்றால் ஒவ்வொரு வருடமும் 3.125 கோடி ஏக்கர் (3,15,00,000 ஏக்கர்) நிலம் பறிபோய்க்கொண்டே இருக்கிறது.

இப்போது ஒரு பாமரத்தனமான கணக்கை பார்த்துவிடுவது இது எவ்வளவு ஆபத்தானது என்பதை யூகிக்க உதவும். ‘முப்பதுகோடி முகமுடையாள்’ என்று பாரதி பாடினான். ஆக அந்தக் காலகட்டத்தில், தோராயமாக அதைக்கூட 1920 என்று கொள்வோம் எனில் 1920 இல் நம் பூமியில் முப்பதுகோடி மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.  கொஞ்சம் கூடட்டும் குறையட்டும் அதுகுறித்து அக்கறை வேண்டாம்.

1920 இல் முப்பது கோடி மக்கள் வாழ்ந்தார்கள். மூன்று போகம் விளைந்தது. மக்களுக்கு போதுமான உணவு கிடைத்தது. இப்போது ஏறத்தாழ 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். எனில் 1920 இல் இருந்ததைப் போல நான்கு மடங்கு விளைநிலம் கூடியிருக்க வேண்டுமல்லவா?

1920 இல் மூன்றுபோகம் விளைந்தது. இப்போது ஒரு போகம்தான் விளைகிறது (இது ஆகப் பெரிய பெருந்தன்மை). எனில் போகவாரியான மதிப்பீட்டில் மக்களுக்கான உணவு உற்பத்தியை ஈடு செய்ய மூன்று பங்கு நிலம் வேண்டும்.

ஆக, நான்கு மடங்காக மக்கள் தொகை உயர்ந்தும் போகம் என்பது மூன்றிலிருந்து ஒன்றென்று சுருங்கிப்போன நிலையில் 1920 இல் இருந்ததைப் போன்று 7 மடங்கு விளை நிலம் இருந்தால்தான் 130 கோடி மக்களுக்கான உணவு உற்பத்தியை ஈடு செய்ய இயலும்.   

தேவை இப்படி இருக்க, இருக்கிற விளைநிலத்திலிருந்தும் வருடா வருடம் மூன்றேகால் கோடி ஏக்கர் விளைநிலம் குறைந்தபடி வருகிறது என்றால் சில விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

1)   இந்த விளைநிலங்கள் எதற்காக களவாடப் படுகின்றன?
2)   இதை எப்படி எதிர்கொள்வது?

நகர் விரிவாக்கம் என்ற பெயரில் பெருமளவு விளைநிலங்கள் கையகப் படுத்தப் பட்டிருக்கின்றன. ஒருபக்கம் பார்த்தால் இது நியாயமாகக்கூட படும். முப்பது கோடியிலிருந்து நூற்றி முப்பது கோடிக்கு மக்கள் தொகை தாவும்போது அதற்கேற்றார்போல வசிப்பிடமும் பெருகத்தான் வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளில் மக்கள் தொகை நான்கு மடங்கிற்கும் மேல் பெருகி உள்ளபோது வசிப்பிடமும் நான்கு மடங்கிற்கும் அதிகமாக பெருகத்தானே வேண்டும்.

நான்கு மடங்கிற்கும் அதிகமாக ஜனத்தொகை பெருகியிருக்கும்போது பொருள் உற்பத்தியும் வேலை வாய்ப்பும் அதற்கேற்றார்போல் தொழிற்சாலைகளும் பிறவகையான உற்பத்தி நிலையங்களும் உருவாக வேண்டும்தான். எனில், அதற்கான கட்டுமானங்களும், குறிப்பாக கட்டட கட்டுமானக்களும் விரிவடையத்தான் வேண்டும். இப்படியாக தொழிற்சாலைகள் அமைவதற்கு இடம் வேண்டும்தான். உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு வணிக வளாகங்கள் அவசியம்.

இப்படிப் மக்கள் திரள் நாளும் நாளும் பலுகிப் பெருகும் போது பெருகும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பள்ளிகளும்  கல்லூரிகளும் உருவாக்கப்படத்தான் வேண்டும்.

விளையாட்டு மைதானங்களும், கேளிக்கை நிலையங்களும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களும் ஜனத்தொகைக்கேற்ப கட்டமைக்கப்பட வேண்டும். அவர்களின் மத உரிமையும் மத ஜனநாயகமும் மதிக்கபடும் முகத்தான் சகல மதத்தினரும் தங்களுக்கான வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள்வதற்கு உரிமை கொண்டவர்கள் என்கிற வகையில் சகல மதத்தினரும் தங்களுக்கான ஆலயங்களை ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கத்தான் வேண்டும்.

மக்கள் தொகை பெருகும் போது மருத்துவமனைகளும் பெருகத்தான் செய்யும்.

நிலக்கரி, இரும்பு, தங்கம், சுண்ணாம்பு உள்ளிட்ட கனிம வளங்கள் இடங்கள் தவிர்க்கவே முடியாதபடிக்கு விவசாயத்திலிருந்து கையகப் படுத்தப்பட்டன.

இயர்ற்கைப் பேரிடர்களும் அவ்வப்போது ஏற்படும் நிலச்சரிவுகளும் பெருமளவு விவசாய நிலத்தைக் கொள்ளை கொண்டன.

விவசாயத்திற்குப் போதுமான நீர் கிடைக்காமல் போனது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது விவசாயி பெருமளவு நட்டப் பட்டான். நல்ல கூலி கிடைக்காது போனதாலும் தொழிற்சாலைகளில் விவசாயத் தொழிலைக் காட்டிலும் கூலியும் கொஞ்சம் மரியாதையும் கிடைத்ததாலும் விவசாயக் கூலித் தொழிலாளி தனது தொழிலை மாற்றிக் கொண்டான். இந்த வகையில் தொழிலாளர்களுக்கான பஞ்சமே ஏற்பட்டது. போக, விவசாயம் செய்வதால் கிடைக்கும் லாபத்தைவிடவும் விளை நிலங்களை விற்பதால் கிடைத்த பெருந்தொகை விவசாயியை கொஞ்சம் மாற்றி யோசிக்க வைத்தது. வருடா வருடம் விவசாயம் பார்த்து, போராடி கிடைக்கும் தொகையை விட நிலத்தை விற்று கிடைக்கிற பெருந்தொகையை ஏதேனும் ஒரு வங்கியில் போட்டு வைத்தால்கூட கிடைக்கும் வட்டியானது விவசாயம் செய்து கிடைக்கும் லாபத்தைவிடவும் அடிகமாக இருப்பது அவனை ஈர்த்தது.

விவசாயக் கூலித்தொழிலாளி ஆலைத் தொழிலாளியாக மாறுவது அவனையும் மாற்றுச் சிந்தனைக்கு இழுத்தது. இவனும் ஆலை முதலாளியானான்.

மேற்சொன்ன காரணங்களை எல்லாம் மேலோட்டமாகப் பார்த்தாலும் இல்லை கூடுதாலான கவனத்தோடு கொஞ்சம் ஆழமாகவே பரிசீலித்தாலும் இவற்றில் எதையும் யாராலும் நிராகரிக்கவே முடியாது. அப்படி மேற்சொன்ன பன்முகக் கட்டுமானம் தவிர்க்க முடியாததாக உள்ளபோது அதற்கான நிலத் தேவையும் தவிர்க்க முடியாததுதான். ஆனால் இவை எல்லாம் மொத்தமாகச் சேர்ந்தாலும் இவை மனிதச் சமூகத்திற்கான முப்பது விழுக்காடு தேவைகளே. உணவு உற்பத்தி என்பது மனித சமூகத்தின் ஐம்பது விழுக்காடு தேவை. வனம் என்பது அவனுக்கான இருபது விழுக்காட்டுத் தேவை.

அந்த முப்பது விழுக்காட்டுத் தேவையை நிவர்த்தி செயதால் மிச்சமுள்ள எழுபது விழுக்காட்டுத் தேவையை நிவர்த்தி செய்வதன்மூலம் கிடைக்கும் லாபத்தைவிட பலநூறு மடங்கு லாபம் ஈட்ட முடியும் என்கிற விஷயம் பணக்காரர்களை யோசிக்க வைத்தது.

பிரச்சினை என்னவெனில் அரசு இதில் மக்கள்நலன் சார்ந்து சாய்வதற்கு பதில் முதலாளிகளின் லாப வேட்டையை சார்ந்து நின்றது.

தரிசாக இருந்த புறவாழிடப் பகுதிகளை இந்தப் பணிகளுக்காக திட்டமிட்டு ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். நிறையப் புறந்கர்ப் பகுதிகளை உருவாக்கை சகலவிதமான வசதிகளையும் அங்கு ஏற்படுத்தி மக்களை அங்கு குடியமர்த்தி இருக்கலாம். இதை எல்லாம் செய்ததோடு இருக்கிற தரிசு நிலங்களை பண்படுத்தி விளைநிலமாக மாற்றி இருக்கலாம். இப்படியாக யோசித்து அரசாங்கம் செயல்பட்டிருக்குமானால் தொழிற்சாலைகளும், கல்வி நிலையங்களும் வணிக வளாகங்களும், மருத்துவ மனைகளும், இன்னபிற வாய்ப்புகளும் விளைநிலத்தைக் கைவைக்காமலேயே நிறைவேற்றியிருக்க முடியும் என்பதோடு விளைநிலங்களையும் கனிசமாக பெருக்கியிருக்க முடியும்.

எந்த ஒரு தொழிலும் லாபமும் நட்டமும் முதலாளியைச் சாரும். ஆனால் விவசாயத்தில் நட்டம் விவசாயியினுடையதாகவும் லாபம் வணிகனுடையதாகவும் இருக்கிறது.

திடீரென தக்காளி ஒரு கிலோ எண்பது ரூபாய்க்கு விற்கிறது. அனைவரும் விவசாயியை சபிக்கிறோம். திடீரென அதே தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு வந்துவிடுகிறது. அப்போது யாரும் விவசாயியை வாழ்த்துவதில்லை. உண்மை என்னவெனில் தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்கும் போது ஏற்படும் நட்டம் விவசாயியினுடையது. நூறு ரூபாய்க்கு விற்கும்போது கிடைக்கும் அதிக லாபம் கார்ப்பரேட்டு வணிகனுடையது.

நெல் விலை விவசாயி கேட்குமளவு கிடைப்பதில்லை. ஆனால் அரிசி விலை தாறுமாறாக ஏறிக் கொண்டே போகிறது. கரும்புக்கு நியாயமான விலைகேட்டு விவசாயி போராடிக் கொண்டே இருக்கிறான். ஆனால் எந்த முதலாளியும் ஒரு ஆர்ப்பாட்டம்கூட செய்யாமலேயே சர்க்கரைவிலை ஏறுகிறது.

இந்த முரணை அரசு கலைந்தாலே விவசாயத் தொழிலைக் காப்பாற்றி விடலாம். இருக்கிற விளைநிலங்களையும் காப்பாற்றலாம். இருக்கிற தரிசு நிலங்களையும் விவசாய நிலங்களையும் அதிகப் படுத்தலாம்.

விவசாயத்தைப் பற்ரி இப்படி மலை மலையாய் கவலைகள் குவிந்து கிடக்க தருமபுரி மாவட்டம் துரிஞ்சிப்பட்டியில் சாமானிய விவசாயிகள் 42 பேர் சேர்ந்து தங்கள் பகுதியில் நீரின்றி வறண்டு கிடந்த 350 ஏக்கர் நிலத்தை முப்போகம் சாகுபடி செய்யக்கூடிய விளைநிலமாக மாற்றி எடுத்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை 16.08.2016 தி இந்து சொல்கிறது.

சேர்வராயன் மலையிலிருந்து சரியும் நீர் முதலில் அஜ்ஜம்பட்டி ஏரிக்கு வரும். அதன் மிகை நீர் அடுத்தடுத்து உள்ள இரண்டு சிறிய ஏரிகளை நிரப்பியபின் கிருஷ்ணாரெட்டி ஏரிக்கு வரும். ஆக அந்தப் பகுதியில் பெய்யும் மழையானது நான்கு ஏரிகளை நிரப்பி கிருஷ்ணாரெட்டி ஏரிநீர் மட்டும் 350 ஏக்கர் விவசாய நிலத்தில் முப்போக விவசாயத்திற்கு உதவி வந்தது.

மலை அடிவாரத்திலிருந்து அஜ்ஜம்பட்டி ஏரிக்கு நீர் வரும் பாதையை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிக்கவே அஜ்ஜம்பட்டி ஏரிக்கு வரும் நீர் தடைபட்டது. நான்கு ஏரிகளும் வறண்டு போயின. அந்தப் பகுதியில் முப்போகம் விளைந்த 350 ஏக்கர் விளை நிலமும் தரிசாக மாறின.

ஆக்கிரமிப்பை அகற்ரக் கோரிய மக்கள் போராட்டங்கள் வழக்கம்போலவே உதாசீனப் படுத்தப் பட்டன. தமிழ்வாணன் உளிட்ட 42 விவசாயிகள் கொஞ்சம் மாறிச் சிந்தித்தனர். ஏரிக்கு வராமல் வீணாகும் நீரை அரசின் அனுமதியோடு மோட்டார் பம்ப் மூலம் கிருஷ்ணாரெட்டி ஏரிக்கு கொண்டு வந்தனர். இதற்கு ஏறத்தாழ 90 லட்சம் ரூபாய் செலவானது. நண்பர்கள் பகிர்ந்தும் வங்கிகளில் கடன் வாங்கியும் இதை சாத்தியப் படுத்தினர். இப்போது அந்தப் பகுதியில் 350 ஏக்கர் தரிசு முப்போகம் விளைகிறது.

42 சாமானியர்கள் யோசித்து செயல்பட்டாலே 350 ஏக்கர் தரிசு முப்போகம் விளையுமென்றால் சர்வ வல்லமி கொண்ட அரசு யோசித்து செயல்படுமானால்…?

காக்கை செப்டம்பர் 2015




Sunday, September 11, 2016

பிள்ளைகள் பாடம் நடத்தியிருக்கிறார்கள்

கல்லூரிகளின் மாணவர் பேரவைத் தேர்தல்களே கவனிப்புக்குரியவைதான். காரணம் அவற்றில் வென்றவர்களும் தோற்றவர்களும் பிற்காலத்தில் அரசியலில் ஏதோ ஒரு புள்ளியில் களமாடுபவர்களாக மாறுகிறார்கள். மக்களுக்கான அரசியலில் ஈடுபடுபவர்கள் அவர்களில் குறைவு என்றபோதிலும் அந்த அளவிற்காகவேனும் மாணவர் சங்கங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துதலுக்கும் உரியவையே.
அதிலும் தில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்து மாணவர் பேரவைத் தேர்தலை உலகமே உற்று கவனிக்கும். காரணம் தோழர் Jothimani Sennimalai சரியாக சொன்னதுபோல் அந்தத்தேர்தல் என்பது அகில இந்திய அரசியல் தேர்தலைப் போன்றதாகும். பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனக்குழுக்களிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் அவர்கள்.
அவர்களது கருத்தும் செயலும் அந்த அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மாண்பமை இந்திரா அவர்கள் எமர்ஜென்சியைக் கொண்டுவந்த நேரத்தில் அந்தப் பேரவையின் தலைவராக இருந்தவர் இன்றைய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் யெச்சூரி அவர்கள்.
அந்தக் காலகட்டத்தில் இந்திரா அவர்களின் வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி அவரை வெளியே அழைத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக அவர் கையிலேயே கொடுத்தவர்.
அதற்கடுத்த நாள் இந்திரா அவர்கள் பதவி விலகியது தற்செயலானது என்றும் அதற்கும் யெச்சூரியின் ஆர்ப்பாட்டத்திற்கும் ஒன்றும் தொடர்பில்லையென்றும் சொல்பவர்கள்மீது நமக்கு ஒன்றும் எதிர்கருத்தெல்லாம் இல்லை.
அப்படிபட்ட சூழலில் அங்கு இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட வலதுசாரி நாடுகள் நிச்சயமாக கவனம் செலுத்தும். வரும் காலங்களில் அதற்காக காசை வாரி இறைக்கவும் அவை தயங்காது.
போக, சமீபத்தில் அங்கு ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வந்திருந்த பிள்ளைகள்மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்.
அகில பாரதிய வித்யார்த்த பரிசித்தினை (ஏபிவிபி) எப்படியும் அங்கு கட்டமைப்பது அதன்மூலம் இந்தியக் கல்விக் கட்டமைப்பை தேசம் முழுக்க கொண்டு செல்வது என்ற பாரதிய ஜனதாக் கட்சியின் செயல்திட்டத்தையும் வலது சாரி மற்றும் காவித் தத்துவத்தின் கையெடுப்புச் சான்றோர்களின் கனவுகளையும் சமீபத்தில் நடந்த மாணவர் பேரவைத் தேர்தல் சுக்கு நூறாக உடைத்து எறிந்திருக்கிறது.
ஒற்றைக் கலாச்சாரம், சமஸ்கிருதமெனும் ஒற்றை மொழி, விஞ்ஞானத்தை கடவுளின் கொடையாகப் பறைசாற்ருதல், ஆங்கிலம், கணிதம், மற்றும் அறிவியலை மேட்டுக் குடியினருக்கானதாக மாற்றும் புதியக் கல்விக் கொள்கையை அரசு கை எடுத்திருக்கும் நேரத்தில் இடதுசாரிப் பிள்ளைகளின் இந்த வெற்றி கொண்டாடத் தக்கதும் கவனத்தோடு பரிசீலிக்கத் தக்கதும் தகுந்த முறையில் கொண்டுசெல்லப்பட வேண்டியதும் ஆகும்.
பெரியவர்களுக்குப் பிள்ளைகள் பாடம் நடத்தியிருக்கிறார்கள். கற்றுக் கொள்வோம்.

கவிதை 063

போனவாரம் தொலைத்த சொல்லொன்று கிடைத்தது
நேற்று தொலைத்த ஒரு சொல்லிற்கான தேடலில் 
எதற்காக வைத்திருந்திருந்த சொல்
அதுவென்ற யோசனையில்
தொலைந்திருந்தது 
நாளைக்கான சொற்களிலொன்று

Saturday, September 10, 2016

கவலை கொள்ளவும் எதிர்வினையாற்றவும்

பிரதமர் மோடி அவர்களின் நிலை இப்படித்தானிருக்கும் என்பதில் மட்டுமல்ல இந்தப் பிரச்சினையின் நீள அகலம் குறித்தும் எதுவும் அவர் அறிந்திருக்க நியாயமில்லை என்பதிலும் எந்த அய்யமும் இல்லை.
ஆனால்
காவிரிப் பிரச்சினையில் தலையிடமுடியாதென்று வெளிப்படையாக பேசுவதற்கான அவரது தைரியம் கவலை கொள்ளவும் எதிர்வினையாற்றவும் நம்மை அழைக்கிறது

கவிதை 062

காற்றின் பேரிரைச்சலில்
அடங்கிப் போன
காட்டின் குரல்
அழைத்திருக்கக் கூடும்
என்னை

கவிதை 061

அலுத்தெல்லாம் 
போகவில்லையானாலும்
மிச்சமில்லைபோல
எனக்கான ஆட்டம்

Friday, September 9, 2016

அப்பாவின் மரணத்திற்கு நெருக்கமான ஒருநாளில்

அப்பாவின் மரணத்திற்கு நெருக்கமான ஒருநாளில் கேட்டேன்
"என்னப்பா வேண்டும்?"
"அப்பப்ப நீ பேசு, தீபாவ பேசச் சொல்லு போதும்"
சாரிப்பா.
இந்த வலியை, வலிக்க வலிக்க வாசிக்கிறமாதிரி தந்திருக்கிறார்Prema Venkatesh
வாஞ்சையோடு
வந்துதிரும்
அன்பான
ஒற்றைச் சொல்லில்
ஓசையற்றுப் போகிறது
வெறுமையின் ஓலக்குரல்.
வாழ்த்துக்களும் நன்றியும் ப்ரேமாகேட்டேன்
"என்னப்பா வேண்டும்?"
"அப்பப்ப நீ பேசு, தீபாவ பேசச் சொல்லு போதும்"
சாரிப்பா.
இந்த வலியை, வலிக்க வலிக்க வாசிக்கிறமாதிரி தந்திருக்கிறார்Prema Venkatesh
வாஞ்சையோடு
வந்துதிரும்
அன்பான
ஒற்றைச் சொல்லில்
ஓசையற்றுப் போகிறது
வெறுமையின் ஓலக்குரல்.
வாழ்த்துக்களும் நன்றியும் ப்ரேமா

Monday, September 5, 2016

சயின்ஸ் சார் ஸ்டூடண்ட்

எங்க ஊர்ல மூன்று சாருங்க இன்றும் பிரபலம்.
1. எட்டாங்கிளாசு சார் (இவர் 1991 இல் ஓய்வு பெற்றார்)
2. கணக்கு சார் (இவர் ஓய்வு பெற்று ஏறத்தாழ 15 ஆண்டுகள் இருக்கும்)
3. சயின்ஸ் சார் ( இவர் ஓய்வு பெற்றும் பத்து ஆண்டுகளேனும் இருக்கும்)
இப்பவும் எங்க ஊர்ல போய் எட்டாங்கிளாஸ் சார் வீட்டுக்குப் போகனும்னா எங்க வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள். ஆமாம், நான் எட்டாங்கிளாஸ் சாரோட பெரிய பையந்தான்.
கணக்கு சார் வீட்டுக்கு வழி கேட்டா அவரு ஊர மாத்திட்டு போயி 20 வருஷம் ஆகுது. திருச்சியில இருக்காரு. கருப்பசாமியக் கேட்டா சரியா வழி சொல்வாறும்பாங்க.
சயின்ஸ் சாரக் கேட்டா. சயின்ஸ் சாரக்கா செத்துப் போனதுக்காக ஒரு முட்டு அழுதுட்டு கரூரில் இருக்கும் சார் வீட்டை சொல்வார்கள்.
இவர்கள் மூவரிடமும் படித்த திமிர் எனக்குண்டு எப்போதும்.
அப்பா இல்லாத எனக்கு எப்பவும் எங்க கணக்கு சார்தான் அப்பா.
எங்க சயின்ஸ் சார் ஆங்கில முதுகலை ஆசிரியராக பணி உயர்வு பெற்று தாள் திருத்த வருகிறார். என்ன விஷேசம்னா முதுகலை ஆசிரியர் பணிநிலையில் எங்க சாரவிட நான் ரொம்ப சீனியர்.
ஒரே சீஃப் கிட்ட தாள் திருத்துகிறோம். சீஃப் கு என்னை நன்கு தெரியும்.
எங்க சாரப் பார்த்ததும் பெஞ்சின் நுனியில் அமர்ந்து தாள் திருத்துகிறேன். அதிகப் பழக்க்கம் என்பதால் விரைவில் திருத்திவிட்டு ஓடிவிடுவோம்.
எங்க சார் ரொம்ப தாமதமாத் திருத்தறார்.
எங்க சீஃப் என்னை கூப்பிட்டு உங்க சார் பேப்பரையும் திருத்திவிடுங்க என்கிறார். நானும் என் தாள்களை முடித்துவிட்டு சார் பேப்பரை முடித்து மதிப்பெண் பட்டியல் போட்டுவிட்டு ஓடுகிறேன்.
சாப்பாடு இடைவேளையில் யாருமற்ற பொழுதில் சார் என்னை அழைக்கிறார்.
போகிறேன்.
”உட்காரு”
“இல்ல சொல்லுங்க சார்” ( கைகள் தானாக கட்டிக் கொண்டன)
” இல்ல உக்கார்”
இப்பவும் நுனியில் அமர்கிறேன்
“யாரும் இல்லாதப்ப திட்டனும்னுதான் இப்ப கூப்டேன். பேப்பரே தந்திருக்க மாட்டேன். தப்பு செஞ்சுட்டேன். ஏண்டா கம்னாட்டி என்னடா பேப்பர் திருத்தற. ஒழுங்கா திருத்தனும். அவசரமா திருத்திட்டு ஓடுன முட்டி போடவச்சு தோள உறிச்சுடுவேன் ஆமா”
“தொல”
ஓடிப்போனேன். அப்புறமென்ன அந்த முகாம் முடியும் வரைக்கும் எங்க சார் திருத்தி கொடுத்தபிறகுதான் நகர்வேன்.
என்னன்னம்மோ சொல்றாங்க. இப்ப எனக்கும் உரத்த குரலெடுத்து கத்தனும்போல இருக்கு
சயின்ஸ் சார் ஸ்டூடண்ட்டா

Sunday, September 4, 2016

கவிதை 060

கடலுக்கு மஞ்சள் தீட்டினாள்
கடல் நீலமென்கிறேன்
கடல் மஞ்சள்தானென்றும்
நம்ம ஊரு கடல் தப்பென்றும் சொன்னவள்
தனது கடலை மடித்து
கணக்குப் புத்தகத்தில் வைத்துக் கொண்டாள்

Saturday, September 3, 2016

அந்தத் தெருவின் பதினேழு வருட நம்பிக்கை விக்னேஷ்



இந்தக் குழந்தையின் பெயர் விக்னேஷ். பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.
வியாழன் அதிகாலை மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்திருக்கிறான். அவனோடு அந்த குட்டியானையை ஓட்டிச் சென்ற அவனது அண்ணனும் பக்கத்து வீட்டுப் பையனும் விபத்து நடந்த இடத்திலேயே மரணித்திருக்கிறார்கள்.
சவாரிக்கு போகும்போது பேச்சுத் துணைக்காக அந்த இருவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துப் போயிருக்கிறான்.
இரண்டு குழந்தைகளை ஒரே விபத்தில் அள்ளிக் கொடுத்திருக்கும் அந்தத் தாயைப் பார்த்து ஆறுதல் சொல்லிவர போனோம்.
எங்களைப் பார்த்ததும் வெடித்துக் கதறினார் அந்தத் தாய்.
1. இந்தத் தெருவோட படிப்பாளிப் புள்ளைய சாகக் கொடுத்துட்டேனே
2. சம்பாரிச்சுக் கொடுத்த ஒரு புள்ளையும் போயிட்டானே. இனி இருக்கிற ரெண்டு புள்ளைங்கள எப்படிக் கரையேத்துவேன்
பிசைகிறது.
விக்னேஷ் ரொம்பச் சுமாராகப் படிப்பவன். அவனை அந்தத் தெருவே படிப்பாளிப் பிள்ளை என்றும் தெருவில் இருந்த ஒரே ஒரு ஒரு படிப்பாளிப் பிள்ளையையும் தெரு பலி கொடுத்துவிட்டதாகவும் அழுகிறார்கள்.
யோசித்துப் பார்க்கிறேன்,
ரொம்பச் சுமாராகப் படிக்கிற அந்தக் குழந்தைதான் அந்தத் தெருவின் ஒரே படிப்பாளி என்றால் ‘முதல் தலைமுறை’ அளவைத் தொடவே விக்னேஷ் படித்து ஆளாகி இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் அந்தத் தெருவிலிருந்து பிள்ளைகளை உருவாக்கியிருக்கவோ அல்லது அவனது வெளிச்சத்தில் பிள்ளைகள் தோன்றியிருக்கவோ கூடும்
அந்தத் தெருவின் பதினேழு வருட நம்பிக்கை விக்னேஷ்
யோசிக்க யோசிக்க கலங்குகிறேன்
பொத்தல் கூரையை பாலித்தீன் கவரால் மறைத்திருக்கிறார்கள்.
உதவ நினைத்தவர்கள் சொல்லுங்கள். அவர்களது முகவரியையோ அல்லது வங்கி எண்ணையோ வாங்கித் தருகிறேன்

சொல்லிவிட்டு வந்திருக்கலாம்

டீ குடிக்க மூனுரூவா பத்தல, இருந்தா கொடேன்
கொஞ்சமும் யாசித்தலின் சாயமற்றிருந்தது அந்தக் கிழவியின் இறைஞ்சல்
ஐந்துரூபாய் நாணயமொன்றை எடுக்கிறேன்
இரண்டுரூபாய் மிச்சம் தருகிறாள்
போதும் அஞ்சுரூவா இருக்கு எங்கிட்ட
இருமுகிறேன்
“சளிப்புடிச்சா சனிப்புடிச்ச மாதிரி” டாக்டர பாரு
நகரும் பேருந்தில் அவசரமாய் தொற்றும் முன் யாரெனத் தெரியாத அந்தத் தாயிடம் சொல்லிவிட்டு வந்திருக்கலாம் நான்
“அது ஒன்னும் இல்ல தாயி, மழையில நனஞ்சதுதான்” என்று

இருக்கு மாப்ள. பேசிடறேன்

எனக்கிருக்கும் வெகு சில வாடா போடா நண்பர்களுள் ஒருவன் மதியம் அழைத்தான்.
“ மாப்ள க்ளாரா அக்கா உன் நம்பர் கேட்டாங்க. செல் மாத்தினப்ப போயிடுச்சு. உன் நம்பர கொடு. அக்காவுக்கு அனுப்பிடுறேன். அல்லது நீயே அக்காவிடம் பேசிடு. அவங்க நம்பர் இருக்குல்ல”
“இருக்கு மாப்ள. பேசிடறேன்

Friday, September 2, 2016

026

தேடல் நல்லது
தேடலாம்
தேட
எதையேனும்
தொலைக்கலாம்
முதலில்
தொலைக்க எதையேனும்
தேடலாம்
எனது “எப்படியும் சொல்லல்லாம்” நூலில் இருந்து

Thursday, September 1, 2016

65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2016

ஏம்மா, திடீர்னு சரவணன் டாக்டர் எரிக்கறதுக்கு முன்னாடி எழுந்து வந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும்

பொதுவா இவ்வளவு செண்டிமெண்ட்டா எப்போதுமே பேசியிராத கீர்த்தனா இப்படி விக்டோரியாவிடம் பேசியபோது ஆச்சரியத்தோடு அவளது கண்களைப் பார்க்கிறேன், கலங்கியிருக்கின்றன. விக்டோரியா கண்களும்தான். நான் ஏற்கனவே மாலையைப் போடும்போதும் அதன்பிறகு இரண்டுமுறையும் வெடித்தே அழுதிருந்தேன்.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்தான் குடும்ப மருத்துவர். அநேகமாக அவர் படித்து வந்ததிலிருந்து.

விக்டோரியாவிற்கும் அவருக்கும் அப்படி ஒரு நல்ல பிரியம். பத்து வயது கூடுதலான கிஷோர்தான் விக்டோரியாவிற்கு சரவணன். அவரைக் கேட்காமல் எந்த ஒரு மருத்துவமனைக்கும் விக்டோரியா போனதில்லை.

ஒருமுறை கழுத்திலே கட்டி வந்து கடுமையான அவஸ்தை பட்டபோது திருச்சியில் உள்ள ஒரு பெரிய  மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சைக்கு அப்பாயின்மெண்ட் எல்லாம் வாங்கிவிட்டோம். ஒய்ய்வெடுக்க வேண்டும் என்று அந்த மருத்துவர் கூறவே காலாண்டு விடுமுறையில் போவது என்று முடிவெடுத்திருந்தோம். பணம் வேறு புரட்ட வேண்டும்.

வழக்கம்போல விக்டோரியா சரவணனை ஒரு வார்த்தை கேட்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவே அவரைப் பார்க்கப் போகிறோம். விவரங்களைக் கேட்டதும் கட்டியை உறுட்டிப் பார்க்கிறார். “ ஒன்னும் இல்லீங்க மிஸ், நாமலே எடுத்துடலாம். அந்த ரூமிற்கு போங்கஎன்கிறார். எஙகள் அனைவரது முகச்சுளிப்பையும் தாண்டி விக்டோரியா அடுத்த அறைக்கு போய்விட நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கிறோம்.. சின்னதாய்  லோகல் அனெஸ்தீஷியா கொடுத்து  பிதுக்கி எடுத்து விட்டார்.

ஒன்னும் இல்ல வேர்வைக் கட்டிங்க சார். உருட்டிப் பார்த்தேன். உருண்டது, எனவேதான் எடுத்துட்டேன் என்றார்.”

ஃபீஸ் எவ்வளவு என்று கேட்டபோது 800 ரூபாய் என்கிறார். அந்தப் பெரிய மருத்துவ மனையில் அறுவைக்கு மட்டும் 35,000 கேட்டிருந்தார்கள். அதுபோக மருந்து செலவு வேறு. மிகுந்த ஆச்சரியத்தோடு”எப்படி சார்?” என்கிறேன்.

”அவ்வளவு காஸ்டிலியா செய்ய நான் என்ன கான்வெண்ட்லயா சார் படிச்சேன், கவர்மெண்டு ஸ்கூலில்தானே சார் படித்தேன்” என்கிறார்.

அரசுப்பள்ளி என்ன செய்யும் என்பதை எந்தவிதமான பிரச்சார நெடியும் இல்லாமல் எனக்கு போதித்த அந்த இளைஞன் இன்று இல்லை.

போய் வாருங்கள் சரவணன்.
*********************************************************************    

கல்வி மேம்பாட்டு இயக்கத்தின் சார்பிலான ஒரு கலந்துரையாடலில் இருக்கிறேன். முருகனிடமிருந்து அழைப்பு வருகிறது.

“கூட்டத்தில் இருக்கிறேன். என்ன விஷயம்? சட்னு சொல்லு”

“நா. முத்துகுமார் செத்துட்டார். டிவில ஃப்ளாஷ் ஓடுது. அதுதான் கூப்டேன். நீ கூட்டத்தப் பாரு”

விஷயத்தை கூட்டத்திலும் சொல்கிறேன். அப்படியே எல்லோரும் உறைந்து போகிறார்கள்.

அருமையான பாடலாசிரியன். அழகியலோடு இலக்கியத்தின் சாறெடுத்து எளிமைப்படுத்தி காற்றிலே மிதக்க விட்டவன். கலை இலக்கியத்தை மக்களுக்கானதாக மதித்தவன்.

நண்பர்களுக்கு ஓடி ஓடி உதவியவன்.

யாரையும் ஒரு பொருட்டெனப் பார்க்காத வைரமுத்து அவர்களே தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்தவன்.

அவனோடான எனது கடைசி சந்திப்பு மிக மிக சின்னது. அவனது ஒரு நீளமான ஒரு பாடலில் வரும் வார்த்தைகளின் எண்ணிக்கையைவிட ஒன்றிரண்டு வார்த்தைகள் குறைவாகத்தான் இருக்கும்.

கொஞ்சம் கூட பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

எதை சாதிப்பதற்காக இப்படி அவசர அவசரமாய் போகிறீர்கள் முத்து.
************************************************************ 

 இன்று பள்ளியில் சுற்றி வரும்போது ஒரு ஆசிரியரற்ற எட்டாம் வகுப்பினொரு பிரிவில் நுழைந்தேன்.
"என்ன பாடம்?"
"சோஷியல்"
"சாரெங்க?"
"எச் எம் சார் கூப்டாங்கன்னு போயிருக்காங்க"
"சரி, நாம கொஞ்சம் பேசலாமா?"
", பேசலாமே"
"காந்தி தெரியுமா?" என்று கேட்டு முடிப்பதற்குள் சிலர் 'மஹாத்மா' என்று கத்தினார்கள், சிலர் 'தேசப்பிதா' என்றனர்.
இனி இப்படி சத்தம் போடக்கூடாது விடை தெரிந்தவர்கள் கைதூக்கினால் போதுமென்று நெறிப்படுத்யினேன்.
காந்தி எப்படி இறந்தார்? என்றதும் எல்லோரும் கைதூக்கினார்கள். ஒரு பிள்ளையை சொல்ல சொன்னேன்.
"கோட்சே சுட்டுக் கொனுட்டார், பாவம்" என்றான் ஒரு குழந்தை.
அடுத்து நேரு தெரியுமா என்றதும் ஆசிய ஜோதி, முன்னால் பிரதமர், என்று பதில்கள் வந்தன.
சரிப்பா, நேரு எப்படி செத்தார் தெரியுமா என்றதும் ஒரு பிள்ளை எழுந்து "அவர வெள்ளக்காரங்க தூக்குல போட்டுட்டாங்க" என்றதும் " சார் அவன் சரியாந்திர மக்கு சார் " என்றனர் குழந்தைகள்.
" ஏம்பா மக்குங்குன்னு சொல்றீங்க? "
"தானா செத்தவர தூக்குல போட்டாங்கன்னு சொன்னா மக்குதாங்க சார்" னு சொல்றான்.
மனித வளம்னு சொல்றாங்க பெரியவங்க
****************************************************************************  
ஜிம்னாஸ்டிக்கில் நான்காவது இடத்தில் இந்தியா. போதும் மகளே போதும். எங்கள் கிழட்டு உடம்புகளில் திமிறேறிப் போச்சு தாயே.
பார்க்க நாங்கள் இல்லாது போகலாம். ஆனால் உன் மன்னிப்பு கோரல் பதக்கங்களை இந்தியாவும் குவிக்கும் என்ற நம்பிக்கை தந்திருக்கிறது.
அப்பனின் முத்தம் திபா.
******************************************************************** 
 வேண்டுமானால் என்னைச் சுடுங்கள், தலித்துகளை கொல்லாதீர்கள்" என்று நீங்கள் சொன்னதாக அறிகிறேன் மாண்புமிகு பிரதமர் அவர்களே.
நீங்கள் கோரிய இரண்டையும் அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்பது எனக்கே தெரியும். உங்களுக்குத் தெரியாதா?
தலித்துகளை கொல்லாதீர்கள் என்ற உங்கள் கூற்று தலித்துகளை உங்கள் ஆட்கள் கொல்கிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
எனில் கொலை செய்கிறவர்கள்மீது ஏனின்னும் நடவடிக்கை இல்லை?
தலித்துகள் மீது கைவைத்தால் போலீஸ் சுடும், ராணுவம் சுடுமென்று ஏன் நீங்கள் கூற மறுக்கிறீர்கள்?
அது சரி, தலித்துகளை கொல்லாதீர்களென்கிறீர்களே அவர்கள் இந்து இல்லையா பிரதமர் அவர்களே?
******************************************************* 
"cow bakth is different from cow sevak" என்று மாண்பமை பிரதமர் அவர்கள் மிகுந்த கோபத்தோடு பேசியிருக்கிறார்.
"பசு பக்தி இருக்கலாம் ஆனால் பசுபாதுகாப்பு என்று பெயரில் வெறியாட்டம் போடுவதை சகித்துக் கொள்ள முடியாது" என்பதாக நகர்ந்த அவரது உரை அத்தோடு நிற்கவில்லை.
பசு பாதுகாப்பு என்ற பெயரால் வெறியாட்டம் போடுபவர்களது கடந்தகால செயல்பாடுகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிக்கை தயாரித்து தரவேண்டும் என்றும் அவர்கள் பகலில் பசு பாதுகாவலர்களாகவும் இரவில் சமூகவிரோத குற்றவாளிகளாகவும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்
இவ்வளவு கடுமையான விமர்சனத்திற்கு ஆளானவர்கள் பிரதமரது இயக்கத்தை சேர்ந்தவர்கள்தாம்.
சமூகக் குற்றவாளிகள் என்று தெரிகிறதே பிறகேன் பிரதமர் அவர்களே அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
உனாவில் தலித் மக்கள் மீது ஜாதிய வெறியர்கள் நிகழ்த்திய வன்முறைக்கெதிராக ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியுள்ள குஜராத் பேரணி பிரதமர் அவர்களை தனது சொந்த இயக்கத்தவர்க்கு எதிராகவே இப்படி பேச வைத்துள்ளது.
உனா யாத்திரையும் வரலாறுதான்
******************************************************************** 

பொம்மைக்காக ஏந்தப்பட்ட
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடவுளை சபித்தபடியே
கடந்து போயினர் இருவரும்
*********************************************************************************************** 



இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...