Friday, April 24, 2020

இல்லாத நமக்கு கல்வியும் சுகாதாரமும் தானே சாமிகளே முக்கியம்

திரு சீமான் அவர்களை முதன்முதலில் முழு அட்டைப் படத்தில் வைத்தது அநேகமாக “இளைஞர் முழக்கம்” என்றுதான் நினைக்கிறேன்
கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கலாம். ஆனால் விஷயம் இதுதான். அந்த அட்டைப் படத்தில்,
“ஆலயங்களைவிடவும் கழிவறைகளே முக்கியமானவை”
என்றிருக்கும்
அவரது செறிவான பேட்டிகளில் அதுவும் ஒன்று
அதனாலேயே அவரைப் பிடித்துப் போனது
இப்படிப் பேசிய சீமான் எப்படி இப்படி மாறினார் என்று அவ்வப்போது வருத்தம் எழும்
சில வருஷங்களுக்கு முன்னால்
“Toilet first
Temple later”
என்று பிரதமர் சொன்னார்
என்ன ஆச்சு?
ஏனிவர்இப்படி?
சரி யார் சொன்னாரென்பதோ
ஏன் சொன்னாரென்பதோ வேண்டாம்
விஷயம் சரிதானே என்று
அவர்வாய் கேட்டபோதும் மெய்ப்பொருள் கண்டோம்
சமயபுரம் பூச்சொரிதலுக்கு வசூலுக்கு வருவார்கள்
என்னோடு பேசுவார்கள்
தேநீர் சாப்பிடுவார்கள்
என்னிடம் காசு மட்டும் கேட்கமாட்டார்கள்
அவர்களில் ஆர்எஸ்எஸ் பிள்ளைகளும் உண்டு
ஆனால் அவர்களே தங்கள் தெரு பிள்ளைகளின் படிப்பிற்காக மருத்துவ செலவிற்காக வம்படித்து வாங்கிப் போவார்கள்
அதைத்தானே ஜோதிகா சொன்னார்
ஏன் கோவம்?
இல்லாத நமக்கு கல்வியும் சுகாதாரமும் தானே சாமிகளே முக்கியம்
அமைதியா யோசிங்கப்பா

23.04.2020

இதுதான் எங்கள் அரசியல்

”கோட்சேயின் குருமார்கள்” தோழர் அருணனின் மிக முக்கியமான நூல்களுள் ஒன்று.
72 பக்கம் உள்ள அந்த நூலில் எந்த ஒரு பகுதியையும் ஒதுக்கிவிட முடியாது
அதிலும் முதல் பதிப்பிற்கான முன்னுரையில் ஒரு பகுதி இன்றைக்கு முக்கியமானது
”இது (இந்த நூல்) தொடர்பான நூல்களைத் தேடத் தொடங்கினேன். கீர் எழுதிய ‘வீர் சவார்கர்’ என்கிற பழைய நூல் கிடைத்தது. டாமேங்கர் எழுதிய ‘சர்தார்’ ‘நள்ளிரவில் சுதந்திரம்’ ‘சதார் படேலின் கடிதங்கள்’ ‘இந்திய விடுதலை இயக்க வரலாற்’, காதியின் தொகுப்பு நூல்கள்’ ஆகியவை கைவசம் இருந்தன
ஆனாலும் ஒரு இடைவெளி இருந்தது. அது கோட்சே தரப்பு வாதம்.”
கோட்சேவை அம்பலப்படுத்துகிற நூலை எழுதுகிறபோதும் கோட்சேயின் தரப்பு வாதமௌம் தேவை என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் தோழர்
“கோட்சேயின் வாக்குமூலம் நூலினைத் தேடி அலைந்திருக்கிறார்.
நூலகம் நூலகமாக அலைந்திருக்கிறார்
அறிஞர்களிடம் உதவி கோரியிருக்கிறார்
கோன்ராட் எழுதிய “காந்தியும் கோட்சேயும்” நூல் கிடைக்கிறது
இரண்டே நாட்களுக்குள் திருப்பித் தரவேண்டும்
இந்த நூலுக்குத் தேவையானவை அங்கே இருக்கின்றன
வேக வேகமாக குறிப்பெடுக்கிறார்
நூலினை உரியவரிடம் சேர்ப்பிக்கிறார்
அதன் பிறகுதான் இந்த நூலை எழுதத் தொடங்குகிறார்
ஒருவர்மீத்ஆன குற்றசாட்டை ஆவணப்படுத்தும் முன்
குற்றம் சாட்டப்பட்டவரின் கருத்தையும் பரிசீக்கவும் ஆவணப் படுத்தவும் வேண்டும் என்ற அறத்தின் வெளிப்பாடு இது
தாழர் அருணன் எனக்கு முந்தையத் தலைமுறையைச் சார்ந்தவர்
இன்று மதுரையில் ஒரு பட்டருக்கு தொற்று இருப்பதாக ஒரு செய்தியை ஒரு சேனல் வெளியிடுகிறது
இதுவரை இஸ்லாமியர்கள்தான் தொற்று பரவுவதற்கான ஒரே சோர்ஸ் என்று பெருமக்கள் வெறுப்பினை விதத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது அந்தக் கருத்திற்கு எதிர்வினையளிப்பதற்கான வாய்ப்பினைத் தருகிறது
ஆனால்
பட்டருக்கு தொற்று இல்லை என்றும்சேனல் பொய் கூறுகிறது என்றும் சக பட்லர்கள் கூறுகிறார்கள்
இதுவரை சிங்கிள் சோர்ஸ் என்பதை மறுத்து எழுதி வந்த இளந்தோழன் ப்ரதாபன் (Prathaban Jayaraman)
செய்தியையும் பதிகிறான்
பட்டர்களது மறுப்பையும் பதிகிறான்
சேனலின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறுகிறான்
இவன் எனக்கு அடுத்த தலைமுறை
பட்டருக்கு இருந்தாலும் அவருக்காகவும் வருத்தப் படவே செய்வோம்
ஆனால் இதுவரை சிங்கிள் சோர்ஸ் என்று பொய்யுரைத்தோரை எதிர் கொள்வோம்
இதுதான் எங்கள் அரசியல்

என் வட்டத்திலுள்ள வாசிக்கும் நண்பர்களுள் சிலர்

முன்பெல்லாம் பிசாசு மாதிரி வாசிப்பவன்தான்.
வயது கொஞ்சம்
சோம்பேறித்தனம் கொஞ்சம்
பணிப்பழு கொஞ்சம்
இணையம் கொஞ்சம் என்று
வாசிப்பு குறைந்து போனது
ஒரு நாளைக்கு சில நேரங்களில் 200, 150 என்கிற அளவிற்கு வாசிக்கிற பக்கங்களின் எண்ணிக்கை குறைகிறது
ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒரு புத்தகத்தை முடித்துவிட்டு மறு புத்தகம் எடுக்கிற பழக்கம் இல்லை
இப்போதுகூட மஹத், காடோடி, நண்டு, இந்நாள் இதற்கு முன்னால்,பணவீக்கம் என்றால் என்ன என்று கலந்துகட்டிதான் வாசிக்கிறேன்
என் வட்டத்தில் உள்ள சில வாசிக்கும் நண்பர்கள்
இந்த நொடியில் வந்தவர்களை மட்டுமே வைக்கிறேன்
பட்டியல் நீளமானது. அவ்வப்போது வரும்
1 மார்க்கண்டன் முத்துசாமி ( Markandan Muthusamy) ********************************************************************
மனுஷன் பிசாசுமாதிரி வாசிக்கிறார். தேர்ந்தெடுத்து வாசிக்கிறார்.
இவரது வாசிப்பு அனுபவங்களை புத்தகமாக்கித் தரவேண்டும் என்றும்
தண்ணீரும் தேநீரும் மட்டும் அருந்துவதற்கானவை குவளைகள் என்று கொள்ள வேண்டும்
கூட்டங்கள் மூலமாக இவரது அறிவைப் பந்தி வைக்க வேண்டும் என்பது கொள்ளநாள் ஆசை
வாழ்த்துக்கள் மார்க்கண்டன்
2 செல்வபாண்டியன் ( Mahathma Selvapandiyan )
*************************************************************
எனக்கு மிகவும் பிடித்த தோழர்
மிகப் பெரிய நூலகம் ஒன்றினை அவரது அரும்பாவூர் இல்லத்திலே வைத்திருக்கிறார்
அதில் சன்னமான அளவேனும் நம்மிடம் சுடப்பட்டவை
ஆழமான வாசிப்பாளர்
அளந்து பேசுபவர்
92 இல் இருந்து ஆவரிடம் ஒரு கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தேன்
ஏதேனும் ஒரு பகுதியில் கவனம் குவியுங்கள் என்று
பௌத்தம் பக்கமாக இப்போது கவனம் குவித்திருக்கிறார்
இதற்காக தினமும் தினமும் நூற்றுக் கணக்கான மைல்கள் பயணிக்கிறார்
இவரது உழைப்பை இணையத்தில் ஆவணப் படுத்திக்கொண்டே இருக்கிறார்
அச்சிலும் அதை இவர் செய்ய வேண்டும்
முத்தம் பாண்டியன்
3 தாஹீர்பாட்ஷா ( Dhahir Batcha)
********************************************
நிறைய களப்பணி
இடையேயும் விடாது வாசிக்கிறார்
வாசிப்பை தமது இதழொன்றில் தொடர்ந்து எழுதி வருகிறார்
இவரது சிறப்பு இணையரின் ஆளுமை வளர்ச்சிக்கான கருவியாய் இருப்பது
ஒருமுறை சில நூல்களை கொடுத்தபோது அவற்றை பார்த்ததும்
இதையெல்லாம் பார்த்தா சந்தோசம்மா ஆயிடுவான்னே
என்றார்
எனக்குத் தெரிய இணையரின் வளர்ச்சிக்கு இவ்வளவு மெனக்கெடும் ஆள் அரிது
நிறைய எழுதலாம் இவர்
4 ரமேஷ் (Ramesh Babu)
*****************************8*
இந்த மனிதனுக்கு எப்படி இவ்வளவு வாசிக்க நேரம் இருக்கிறது என்று வியக்குமளவிற்கு அப்படி ஒரு வாசிப்பு
இந்த லாக் அவுட்டைப் பயன்படுத்தி 2000 பக்கங்களுக்குமேல் வாசித்ததாக பத்து நாட்களுக்கு முன்னாள் போட்டிருந்தார்
இந்நேரம் 4000 ஆகியிருக்கும்
“யார் கையில் இந்து ஆலயங்கள்?” என்ற இவரது சமீபத்திய நூல் அவசியம் வாசிக்க வேண்டியது
முத்தம் ரமேஷ்
5 சிராஜுதீன் ( Mohammed Sirajudeen )
************************************************
அநேகமாக பாரதி புத்த்காலயம் வெளியிட்ட அனைத்து நூல்களையும் வாசித்து முடித்தவர்
எனக்கு கிடைத்த தகவலின்படி வலம்புரி ஜான் அளவிற்கு அதிகமாகவும் விரைவாகவும் வாசிக்கிறார்
புத்தகமாகவும் தரவேண்டும்
வணக்கம் சிராஜ்
6 அன்பாதவன் (Anbaadhavan Shivam Bob)
*****************************************************
வாசிப்பதும் அந்த அளவிற்கு எழுதுவதும் இவரது சிறப்பு
இவரிடம் பிடிட்ஜ்ஹ்த இரண்டு விஷயங்கள்
அ ) படித்து முடித்தததும் அது இஅரது எதிரியினுடைய நூலாயினும் அவரைத் தொடர்பு கொண்டு பாராட்டிவிடுவார்
ஆ) வாசிக்கவும் எழுதவும் தோழர்களையும் இளைஞர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்
வணக்கம் அன்பாதவன்
7 புலியூரார் ( புலியூர் முருகேசன்)
*********************************************
வாசித்துக் கொண்டே இருக்கிறார்
யாரேனும் சிறுகதை எழுத இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் பேனா வாங்கும் முன்பே அவருக்கு போன் போட்டு உங்களுக்கு நல்லா எழுத வரும் என்று உற்சாகப் படுத்துபவர்
இன்னொன்று
இவர் ஜெயமோகனின் விமர்சகர் என்று எல்லோருக்கும் தெரியும்
இவரளவிற்கு ஜெயமோகனை வாசித்தவர் ஜெயமோகனேகூட இல்லை
இன்னும் இரண்டு வருஷங்களுக்குப் பிற்கு ஜெயமோகன் என்ன எழுதுவார் என்பதை இப்போதே அறிந்து வைத்திருப்பவர்
முத்தம் தோழர்
8 யமுனா (Yamuna Rajendran)
**************************************
இவர் குறித்து எழுதுமளவு எனக்கிருக்கிறதா தெரியவில்லை
வியந்து போகிறேன்
வாசிப்பின் வழியேயான இவரது களமாடல் கொள்ளத் தக்கது
வணக்கம் சார்
9 கஸ்தூரி (Kasthuri Rengan)
************************************
ஆங்கிலத்திலும் தமிழிலும் என்று வாசித்துக் குவிக்கிறார்
டூவீலர்ல போகும்போதும் படிச்சுக்கிட்டே போவானாப்பா இந்த ஆளு என்று நண்பர்களிடம் கூறுவேன்
வாசிப்பனுபவத்தை தனது முகநூலில் வைத்துக் கொண்டே இருக்கிறார்
10 சுரேஷ் (Suresh Kathan)
*********************************
அப்படி ஒரு வாசிப்பு
வாசித்ததை பகடியோடு இவர் பதிவது அப்படி ஒருஅழகானது
என்ன,
நான் ஏன் இப்படி வாசிக்கிறேன்னா “அமெரிக்கன் காலேஜ் அப்படிக் கத்துக் கொடுத்தது” என்று இவர் சொல்லாமல் இருக்க வேண்டும்
இப்படி ஒரு மாணவர் அந்தக் கல்லூரிக்கு ஒருபோதும் வாய்க்காது
முத்தம் சுரேஷ்
11. செல்வகுமார் ( ப. செல்வகுமார்)
***********************************************
நல்ல வாசிப்பாளர்
இந்த லாக் டவுனை வாசித்தலுக்காக சிறப்பாகப் பயன் படுத்துகிறார்
இன்னும் இன்னுமாய் இவர் வாசிக்க வேண்டும்
முத்தம் செல்வா

Thursday, April 23, 2020

அரசு மரியாதையுடன் அடக்கம்...

கொரோனா தடுப்பில் ஈடுபடுபவர்கள் அந்தப் பணியினூடே இறந்தால் அரசு மரியாதையுடன் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படும்
என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு
நன்றி சொல்லி பாராட்டுவோம்
ரெண்டே ரெண்டு கோரிக்கைகள் இதனை ஒட்டி
1 மருத்துவர் சைமன் அவர்களது மனைவியின் கோரிக்கை
2 தடுக்கும் பணியில் என்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்றும் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

22.04.2020

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அவசியம் நடத்தியே ஆக வேண்டுமா?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அவசியம் நடத்தியே ஆக வேண்டுமா?
”இது விஷயத்தில் ஆசிரியர்கள்,
நடத்த வேண்டும்,
நடத்தத் தேவை இல்லை
என்பதாக இரண்டாய் பிரிந்து நிற்கிறார்கள் ”
என்கிறார் எனக்கான ஆசான்களில் ஒருவரான தோழர் மாடசாமி (ச. மாடசாமி)
தேர்வு தேவையா? இல்லையா? என்ற கேள்வியே தவறுதான் என்பது,
“தேர்வை நடத்தியே தீர்வார்கள்” என்ற மணிமாறனின் (மணி மாறன்) ஒரு பின்னூட்டத்தின் வழி தெளிவாகிறது
நடத்தட்டும் நடத்தாமல் போகட்டும் நமது நிலையை நாம் சொல்லிவிட்டு போவதே சரியானது
ஒரு சன்னமான கேள்வியில் இருந்து இதைத் தொடங்கலாம்
இவ்வளவு கொடூரமான சூழலில் இந்தத் தேர்வை ஏன் நடத்த வேண்டும்?
தேர்வை நடத்தினால்தானே சார் அவன் பாசா பெயிலா தெரியும்?
சரி, அதத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்?
என்ன சார், இப்படிக் கேட்டுட்டீங்க, பாசானாதானே அவன் மேல் படிப்புக்குப் போக முடியும்?
பத்தாங்கிளாஸ் பாசானா என்ன மேல் படிப்பு?
பதினொன்னங்கிளாஸ்,
அப்புறம்?
ITI,
அப்புறம்?
பாலிடெக்னிக்
இவ்வளவுதானே, இதுலயெல்லாம் இந்த ஆண்டு பத்தாங்கிளாஸ் படிச்ச எல்லோருக்குமான அனுமதி கொடுத்தால் என்ன?
எல்லோருமே தப தபன்னு சீட்டு கேட்பாங்களே சார்
கேட்கட்டுமே
எல்லோருக்கும் கொடுக்க முடியுங்களா?
அது சரி பரிட்சை எழுதி பாசாகி வந்தவங்க கேட்டா மட்டும் கேட்கிறவர்களுக்கு எல்லாம் கொடுத்துடுறீங்களா?
அதெப்படி சார்?
அப்ப என்ன செய்யறீங்க?
வடிகட்டி கொடுப்போம்
அப்படியே இப்பவும் கொடுத்துட வேண்டியதுதானே
மார்க் இல்லாம எப்படி சார் வடி கட்டுறது?
அப்ப வாய்ப்புக்கு அல்ல மதிப்பெண். வடிகட்டறதுக்குத்தான். அப்படித்தானே?
ஏதோ சின்னதா ஒரு தேர்வு வச்சு கொடுத்துட வேண்டியதுதானே
ஒன்னு தெரிந்துகொள்ளுங்கள் பத்தாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகளுள் ஏறத்தாழ 85 விழுக்காடு மேல்நிலை முதலாம் ஆண்டுதானே வருவார்கள்
ஆமாம் சார்
கொடுத்துடலாமே
எல்லோரும் பர்ஸ்ட் க்ரூப் கேட்டா
கொடுப்போமே
பத்தாங்கிளாசே பாசாக இயலாத புள்ளைங்களும் வந்துடுவாங்களே?
வரட்டுமே
அவன் பதினொன்னாங்கிளாஸ்ல பெயிலாயிடுவானே
ஆக பதின்னாம் கிளாஸ்ல பெயிலாகறவன் பத்தாங்கிளாஸ்லேயே பெயிலாக்கனுங்கறீங்க, அப்படித்தானே?
ரொம்பக் கொழப்புறீங்க சார்
இன்னும் கொஞ்சம் கொழம்புங்க சார். தெளிவு கிடைக்கும்
பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வேண்டாம் என்பது நமது பதினைந்து வருடக் கோரிக்கை.
+1, மற்றும் +2 வகுப்பு பாடத் திட்டத்தையும் தேர்வு முறையையும் செறிவாக்கினாலே போதும்
அதற்கான உரையாடலே இந்த நொடிக்கான தேவை

மருத்துவப் படிப்பிற்கே தேர்வை ரத்து செய்யும்போது...

இரண்டு நாட்களுக்கு முன்னால் தனக்கும் திரு கவுண்டமணி அவர்களுக்கும் இடையேயான அலைபேசி உரையாடலை தோழர் பாமரன்
(Ezhirko Pamaran Shanmugasundaram) வைத்திருந்தார்
மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களுக்கான இறுதித் தேர்வை அமெரிக்கா ரத்து செய்ததும் இல்லாமல் அவர்களுக்கு லைசென்சும் வழங்கி அவர்களை கொரோனாப் பணிக்கு அனுப்பிட்டதாக திரு கவுண்டமணி கூறியதாகவும்
ஏதோ அடித்து விடுகிறார் போல என்று நினைத்த தான் இணைய தளத்தில் சோதித்தபோது அது உண்மை என்பதை தெரிந்து கொண்டதாகவும் கூறியிருந்தார்
எவ்வளவு தேடலோடு இருக்கிறார் கவுண்டமணி
அது சரி,
மருத்துவப் படிப்பிற்கே தேர்வை ரத்து செய்யும்போது இத்தகைய கொடிய சூழலிலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை எப்படியும் நடத்தியே தீர்வது என்ற நமது நிலை மெய்சிலிர்க்க வைக்கிறது

22.04.2020

இந்திய இஸ்லாமியர்களுக்கும் இந்தியாதான் தாய்நாடு

“இந்தியா இஸ்லாமியர்களின் சொர்க்கமாக உள்ளது”
என்று அரபு நாடுகளுக்கு பதிலளித்திருக்கிறார் மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி
இஸ்லாமியர்களுக்கும் தலித்துகளுக்குமான நரகமாக இருக்கிறது எமது நாடு என்பது வேறு விசயம்
இந்த நாடே இஸ்லாமியர்களது அல்ல என்பதுபோலவே ஆளும் கட்சியின் பொறுப்பாளார்களே பேசினார்கள்
ஆகவே உண்மைக்கு மாறான தகவல் இது என்பதெல்லாம் வேறு
நான் கேட்பது வேறு
இப்படி சொல்ல வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏன் வந்தது?
எங்கள் அரசு அடுத்த ஒரு நாட்டிற்கு தன்னிலை விளக்கம் தர வேண்டிய அளவிற்கு இந்த நாட்டை ஏன் கொண்டு சென்றீர்கள்?
இந்தியக் கட்டமைப்பென்பது இந்திய இஸ்லாமியர்கள் இல்லாமல் இல்லை
சொர்க்கமெல்லாம் வேண்டாம் என் அன்பிற்குரிய அமைச்சரே
இந்திய இஸ்லாமியர்களுக்கும் இந்தியாதான் தாய்நாடு
அதை உணர்ந்து செயல் படுங்கள்
எந்த ஒரு நாட்டிற்கும் நாம் தன்னிலை விளக்கம் தரவேண்டிய தேவை இருக்காது

22.04.2020

Wednesday, April 22, 2020

இந்த மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது

தப்ளிக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்தான் கொரோனாவை பரப்பினார்கள் என்று திரு நாராயணன் உள்ளிட்ட இந்துத்துவ குழுவினர் தொடர்ந்து புலம்பிக் கொண்டே இருந்தனர்
இப்போது காசிக்கு போய் வந்தவர்களுக்கும் தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது
சிவராத்திரிக்கு போய் வந்தவர்களையும் பரிசோதிக்க வேண்டும் என்பதும்
ராமர் ஆலய மண்பூஜைக்கு சென்று வந்தவர்களையும்
பெருங்கூடுகைகளுக்கு சென்று வந்தவர்களையும்கூட சோதிக்க வேண்டும்
அது ஒருக்கால் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களையும் அவர்களிடமிருந்து வேறு யாருக்கும் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான்
இன்னொரு விஷயம்
தப்ளிக் மாநாடு சென்று வந்தவர்களில் தொற்று கண்டறியப்பட்டு
சிகிச்சைப் பெற்றுத் திரும்பியவர்கள்
ப்ளாஸ்மா செல்களை தருவதற்கு முன் வந்திருக்கிறார்கள்
ப்ளாஸ்மா செல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
அது தொற்று உள்ளவர்களை விரைவாக குணப்படுத்தும்
இப்போது
நாராயணன் அவர்கள் தப்ளிக் மாநாடு சென்று வந்தவர்களை
அவர்கள் தாமாகவே சிகிச்சைக்காக வந்ததற்காகவும்
ப்ளாஸ்மா செல்க்ளை அவர்கள் தர முன்வந்திருப்பதற்காகவும் பாராட்டுகிறார்
இவர்களது எம்பிக்கள் உள்ளிட்டு இவர்கள் போட்ட ஆட்டத்தில் அரபு நாடுகள் விழித்துக் கொண்டு பிரதமரை எச்சரிக்க ஆரம்பித்ததனால்கூட இந்த மாற்றம் இருக்கலாம்
காரணம் எதுவாயினும்,
இந்த மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது
திரு நாராயணான் சொன்ன காரணங்களையே எடுத்துக் கொள்வோம்
திரு நாராயணனுக்கு சொல்ல சில இருக்கின்றன
இஸ்லாமியர்கள் செய்த நல்லதுகளுக்காக நீங்கள் அவர்களைப் பாராட்டுவதாகவும் கொள்கிறேன்
எனில்
அவர்கள் நல்லது செய்கிறவர்கள், நல்லவர்கள் என்று தெரியாததால்தான் நீங்கள் அவர்களை சபித்துக் கொண்டும் தூற்றிக் கொண்டும் இருப்பதாகவும் கொள்ள வாய்ப்பிருக்கிறது
அவர்கள் செய்த தியாகத்தையும் நல்லதுகளையும் அறிந்து கொண்டால் நீங்கள் மனிதத் தன்மையோடு நடந்து கொள்வீர்கள் என்றும் தோன்றுகிறது
இந்த கொரோனா காலத்தில் சொந்தங்களே நிராகரித்த பல இந்து பந்தங்களின் உடல்களை இஸ்லாமிய சகோதரர்கள் சுமந்து வந்து புதைத்திருக்கிறார்கள்
வெள்ளம் காலத்தில் மசூதிகளில் இந்துக்கள் தங்குவதற்கு திறந்துவிடப்பட்டன
சீதக்காதி வரலாறுகளைப் படியுங்கள் திரு நாராயணன்
ராமேசுவரம் கோவில் கட்டமைப்பில் அவனது பங்கு குறித்து படியுங்கள்
சுதந்திரப் போராட்டத்தில்
பிரிவினையின் போது இங்குள்ள இஸ்லாமியர்கள் தங்களை இந்திய இஸ்லாமியர்களாகப் பாவித்து பாகிஸ்தானை நிராகரித்தது
இன்னும் இன்னுமாய் உள்ள வரலாறுகளைப் படியுங்கள்
இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்
உங்களைப் போன்றவர்களின் சாமிட்டத்திற்குப் பிறகும், ஆர்.எஸ்.எஸ் அட்டூழியங்களுக்குப் பிறகும் இஸ்லாமியர்கள் இந்த அளவிற்கு திடமாக இருக்க முடிகிறதென்றால்
உங்களைப் போன்ற சொற்ப அளவிலான இந்துக்களைத் தவிர்த்து பெரும்பாண்மை இந்துக்களின் ஈரமும் அன்புதான்
இந்த தேசத்தின் கட்டுமானம்
இந்திய மக்களின் ஒற்ருமையினால் எழும்பியது
பதட்டப் படாமல் படியுங்கள்
ஒருக்கால் உங்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் உண்மையானது என்றால்
வாசிப்பு உங்களை இன்னும் இன்னுமாய் மனிதனாக்கும்

நீ ஆடுடா லேசந்த்

லாக் டவுனில் முடங்கிக் கிடந்த குழந்தைகள் கொஞ்ச நேரம் விளையாடினர்
லேசந்த் உப்புக்கு சப்ப என்று முடிவெடுத்தனர்
“ஒப்புக்கு சப்பான்னா என்ன தம்பி?”
“ அதா,
நா அவங்களத் தொட்டா அவங்க அவுட்
அவங்க என்ன தொட்டாலும் அவங்க அவுட்
அதான் ஒப்புக்கு சப்பா
ஓகேவா”
நீ ஆடுடா லேசந்த்

20.04.2020

அவ்வளவுதான் திரு ஜெயமோகன்

நானும் மனுஷன்
நீங்களும் மனுஷன்
அவ்வளவுதான் திரு ஜெயமோகன்
நீங்கள் மேலடுக்கு நான் கீழடுக்கு என நீங்கள் கருதுவீர்களென்றால்
நீங்கள் எத்தனை ஆயிரம் பக்கம் எழுதினால் எமக்கென்ன?
நீங்கள் கழிவறையில் கழிப்பதற்கும்
வால்யூம் வால்யூமாய் எழுதிக் குவித்திருப்பதற்கும்
ஒரே ஒரு வித்தியாசமும் இல்லை

விடுதலைத் தழும்புகள் நூலை முன்வைத்து

தொட்டால் ஒடிந்துவிடும் அளவிற்கு வயதாகிப் போன பழைய நோட்டுகளில் இருக்கும் குறிப்புகளை புது நோட்டில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
பேசுவதற்காகவும், எழுதுவதற்காகவும் எடுத்து வைத்துள்ள குறிப்புகள்
தோழர் சு.பொ. அகத்தியலிங்கம் ( Su Po Agathiyalingam) எழுதிய “விடுதலைத் தழும்புகள் என்ற நூலிலிருந்து மட்டும் நூற்றிற்கும் மேற்பட்ட குறிப்புகள் கொண்ட நோட்டு கிடைத்திருக்கிறது
நன்றாக நினைவிருக்கிறது,
252 குறுங்கட்டுரைகள்
சின்னச் சின்ன சம்பவங்களின் தொகுப்புகள்
நாடக மேதை விஸ்வநாத தாஸ் ஒரு வருடப்பு நாளில் மேடையிலேயே இறந்தது
ஒருமுறை அவர் முருகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்
வள்ளி கொக்குகளை இப்படியாக விரட்டுகிறார்,
“வெட்கங்கெட்ட வெள்ளை கொக்குகளா
விரட்ட விரட்ட வாரீங்களா”
தாஸ் அவர்களை கைது செய்ய போலீஸ் மேடை ஏறுகிறது
தாஸ் கேட்கிறார்,
“யாரைக் கைது செய்ய வேண்டும்?”
“விஸ்வநாத தாஸை”
“இங்கு நிற்பது தாஸ் அல்ல, முருகன். முருகன் மீது வாரண்ட் இருந்தால் சொல்லுங்கள்.
கீழிறங்கிய காவலர்கள் நாடகம் முடிந்தபிறகே அவரைக் கைது செய்கின்றனர்
அந்த மாவட்டத்தில் மக்களை மிருகத்தனத்தோடு அடிமைகளைப் போல நடத்திய கலெக்டரை
தங்கள் பள்ளிக்கு விருந்தினராக அவர் வந்திருந்தபோது இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சுட்டுக் கொன்றுவிட்டு 12 ஆண்டுகள் சிறைக்குப் போனது
இதைப் பதியும் நேரத்தில் அந்தக் கொலையை நியாயப்புத்திவிடாத கவனம்
இப்படியான 252 சிறு கட்டுரைகள்
வசந்தி தேவி அம்மாவின் மிகச் செரிவான அணிந்துரை
புத்தகத்தைத் தேட வேண்டும்
1999 இல் ஒரு கூட்டத்திற்குஇதை எடுத்திருக்கிறேன் என்கிறது அந்தக் குறிப்பு
இது வளரிளம் தோழர்களுக்கான முக்கியமான புத்தகம்
பதிப்பில் இருக்கிறதா தெரியவில்லை
இல்லை எனில்,
தோழர் சிராஜிற்கு (Mohammed Sirajudeen) இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்

20.04.2020

நீங்களும் ஒத்துப் போவதாக கொள்ளவேண்டி வரும்





இந்த ட்வீட் பாரதிய ஜனதாக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா என்பவருடையது என்பதை அறியும்போது மனதிற்கு வேதனை அளிக்கிறது.








கீழ்த்தரமான ஒருவன் முழுப்போதையில் உளறுவதைவிடவும் கீழ்த்தரமானதாக இருக்கிறது

இது இந்தியாவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்குமிடையே இருக்கும் உறவை பாதிக்காதா?

இவர் எதார்த்தமாகப் பார்த்தால்கூட சக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூசுமே

இவர் இந்த ட்வீட்டை நீக்கி இருக்கக் கூடும்

ஆனாலும் நீங்கள் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாண்பமை பிரதமர் அவர்களே

அல்லாது போனால் அவரது கீழ்மையான கருத்தோடு நீங்களும் ஒத்துப் போவதாக கொள்ளவேண்டி வரும்

பொறுப்பேற்க முடியாத எது குறித்தும்....

மூன்று நாட்களில் கொரோனா இல்லாமல் போகும் என்றீர்கள்
மூன்றாவது நாளில் பேரதிகமாய்த் தொற்று
இதற்கு நீங்கள் காரணம் இல்லை என்பது தெரியும்
பொறுப்பேற்க முடியாத எது குறித்தும் உளறுவதைத் தவிர்க்க வேண்டும்

Monday, April 20, 2020

ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்

பொதுவாகவே அலட்சியமான அதிகாரியையோ அல்லது ஆட்சியாளரையோ கடக்க நேரிடும் காலங்களில் அவர்களை நீரோவோடு பொருத்திப் பார்ப்பது வாடிக்கை
இன்றைய தேதியில் அப்படியான ஒரு தலைவரை இந்திய மக்கள் கடந்து கொண்டிருக்கிறார்கள்
கொரோனா மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில்
“கை தட்டுங்கள்”,
“விளக்கு ஏற்றுங்கள்”
என்று கூறும் தலைவர் ஒருவரை இந்திய மக்களாகிய நமக்கு காலம் கொடையளித்திருக்கிறது
அநேகமாக இந்திய மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு புள்ளியில் அவரை நீரோவோடு பொருத்தி பகடி செய்திருக்கக் கூடும்
காரணம் இதுதான்,
ரோம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பதாக நமக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது
ஆனால் இது உண்மையல்ல
முழுக்க முழுக்க அந்தக் காலத்தின் முதலாளிகளும் செல்வந்தர்களும் செனட்டர்களை தங்கள் கைகளுக்குள் மடக்கிக் கொண்டு
தங்களுக்கு எதிரான நீரோவின்மீது பரப்பிய வதந்தி ஏறத்தாழ 1956 வருடங்களுக்கும் மேலாக உலகப் பொதுத் தளத்தில் உயிரோடு இருக்கிறது
18.07.0064,
வெளியூரில் இருந்த நீரோவிற்கு ரோம் எரியும் செய்தி போகிறது
உடனே வருகிறான்
அவன் பேரரசன்
மெய்க்காப்பாளர்கள்கூட அவனோடு இல்லை
தீ அணைக்க திரளோடு திரளாய் இணைகிறான்
இடிபாடுகளுக்கு இடையே சிக்கிகொண்டிருப்பவர்களை மீட்கிறான்
நிவாரணப் பணிகளுக்காக முதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் வரி விதிக்கிறான்
முதலாளிகளும் செல்வந்தர்களும் இணைகிறார்கள்
எதை செய்தோ
செனட்டர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்கிறார்கள்
கிறிஸ்தவ தலைவர்களும் வரலாற்று ஆசிரியர்களும் விலை போகிறார்கள்
ரோம் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாய் வதந்தியை பரப்புகிறார்கள்
செனட் நீரோவை ரோமின் எதிரி என்று பிரகடனப்படுத்துகிறது
அவரை கட்டாயத் தற்கொலை செய்துகொள்ளுமாறு உத்தரவிடுகிறது
கட்டாயத் தற்கொலை செய்து கொள்கிறார்
விதிவிலக்காக
அந்தக் காலத்து செனட்டரான திரு டாசிட்டஸ் உண்மையை உள்ளது உள்ளபடி பதிவு செய்து வைத்துள்ளார் என்ற தகவலை தோழர் அறிவுக்கடல் தனது “இன்னாள் இதற்கு முன்னால்” நூலில் குறிப்பிடுகிறார்
டாசிட்டஸ் ஒரு வரலாற்று ஆசிரியரும் கூட
ஆக,
தனது நகரம் தீப்பற்றி எரிந்தபோது,
ஓடோடி அங்கு வந்தவனை,
உதவியாளர்கள் இல்லாமலே நிவாரணப் பணிகளில் ஈடு பட்டவனை,
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் துடைத்தவனை,
அவர்களுக்கு உணவளித்தவனை,
நிவாரணப் பணிகளுக்காக செல்வந்தர்களிடமும் முதலாளிகளிடமும் வரி விதித்தவனை
கஜா புயலின்போது எம் மக்களைப் பார்க்க மறுத்தவரோடு
ஓகி எம் மக்களை கிழித்துக் கூறு போட்டபோது அயல்நாட்டு விருந்தினரோடு விருந்து சாப்பிட்டவரோடு,..
ஏழைகளிடம் வரிபோட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பவரோடு
என் அன்பிற்குரியவர்களே ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்
அது ஒரு நல்லவன் பிணத்தை 1950 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்து மீண்டும் கொல்வதற்கு ஒப்பாகும்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்

நாளைக்கு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுகிறார் மாண்பமை பிரதமர்
அவருக்கு எமது பாராட்டுக்கள்
இதை எதிர்க்கட்சிகள் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிற்கு வழிகாட்ட முய்ற்சிக்க வேண்டும்
”இது மருத்துவம் சார்ந்த விஷயம். அரசியல் அல்ல. எனவே தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டமாட்டோம்”
என்கிறீர்கள் மாண்பமை முதல்வர் அவர்களே,
தமிழ்நாட்டிற்கும் ஹைட்ராக்சி க்ளோரோ குயின் தேவைப் படுகிறது.
இதன் பற்றாக்குறைகூட தமிழ் நாட்டில் உயிழப்பை அதிகரிக்கச் செய்யலாம்
மத்திய அரசோ மருந்தினை அமெரிக்காவிற்கு அனுப்ப இருக்கிறது
இதனால் தமிழ் நாட்டிலும் அந்த மாத்திரைக்கான தட்டுப்பாடு வரலாம்
இந்தப் பற்றாக்குறை மோசமான அரசியலால் வருவதுதானே
ஒடிசாவிற்கு 800 கோடியும் தமிழ் நாட்டிற்கு 510 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் அக்மார்க் அரசியல்தான் முதல்வர் அவர்களே
எனவே அவசியமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்

07.04.2020

எம்மால் முடியாது திரு ட்ரம்ப்

குஜராத் கலவரநாள் தொடங்கி அவருக்கெதிரான கருத்தாளனாகத் தொடர்கிறேன்
இரண்டுத் தேர்தல்களில் என்னளவில் அவருக்கு எதிராகக் களமாடி இருக்கிறேன்
அவரது செயல்பாடுகளை என் வரையறைக்குட்பட்டு கடுமையாக விமர்சிக்கிறேன்
ஆனால் ஒருபோதும் அவருக்கான மரியாதையைத் தரத் தவறுவதே இல்லை
அவருக்கு இது புரிகிறதோ இல்லையோ,
எனக்கும் அவர்தான் பிரதமர்
எமக்கு அவர்மீது 1003 விமர்சனம் இருக்கலாம்.
இருக்கலாம் என்ன இருக்கிறது
ஆனால்,
“பேசினேன்,
கேட்டிருக்கிறேன்
அனுப்புவார்
அனுப்பாமலும் போகலாம்
அனுப்பாவிட்டால் அதற்குரிய பின்விளைவுகளை அனுபவிக்க நேரும்”
என்று 130 கோடி மக்களின் பிரதமரைப் பார்த்து எகிர எந்த ஒரு கொம்பனுக்கும் உரிமை இல்லை
இதை அவரே துடைத்துக் கொண்டு சமாளிக்கலாம்
எம்மால் முடியாது திரு ட்ரம்ப்
எங்களது கண்டனம்

07.04.2020

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்

உத்திரப் பிரதேச பாஜக தலைவர்களுள் ஒருவரான திருமதி. மஞ்சு திவாரி விளக்கணைத்து ஏற்றிய அந்த இடைவெளியில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்
அந்தக் காட்சி வலைதளங்களில் பிரபலமானதும் நடவடிக்கைக்கு பயந்து
தீபாவளி போன்ற சூழலாக அது இருந்தது உணர்ச்சி வசப்பட்டு சுட்டுவிட்டேன். மன்னியுங்கள் என்கிறார்
நமக்கான அய்யங்கள்
1) அவருக்கு எப்படி துப்பாக்கி வந்தது?
2) தீபாவளியின்போது இவர் நிஜத் துப்பாக்கியால்தான் சுடுவாரா?
3) அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

08.04.2020

எல்லோரையும் “அவர்கள்” பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்

என் நட்பில் உள்ள மரியாதைக்குரிய தோழியர்கள் சிலர் குடும்பச் சூழலுக்கு கட்டுப்பட்டு அன்றைய தினம் விளக்கேற்றினார்கள்
இருவரும் அதற்காக மிகவும் வருந்தி பதிவிட்டு இருந்தனர்
அதில் ஒருவர்
“என் வீட்டிலும் ஒரு சங்கி இருக்கே. என்ன செய்ய?”
இவர்
அப்படி ஒரு அழுத்தமான இடதுசாரியாக வாழ ஆரம்பித்திருப்பவர். இந்துத்துவாவை மூர்க்கமாக எதிர்ப்பவர்.
கணவர் ஆசாரமான பக்திமான்
இன்னொருவர்,
“இத செய்யலன்னா என் வீட்டுக்காரர் என்னை அன்பொண்டாட்டி செய்துடுவார்” என்றும் பதிவிட்டிருந்தனர்
”அன்பொண்டாட்டி”
அய்யோ அய்யோ என்ன ஒரு பகடி
சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறேன்
இவர் மதவெறிக்கு எதிராக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு பக்தர்
நான் சொல்வது இதுதான்
இருவருமே இப்படி ஆதங்கப் படுவதற்கு ஏதும் இல்லை
இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் விளக்கேற்ற விரும்பாமல் இருந்த குடும்பங்களிலும் பெண்கள் ஏற்றி வைத்திருக்கக் கூடும்
இது இறைநம்பிக்கை சார்ந்த விஷயம்
எங்கள் கிராமத்தில்
எங்க அம்மாவும் ஏற்றி
வைத்திருக்கும்
என் தம்பி ஏற்றி வைத்திருப்பான்
என் அம்மாவும் தம்பியும் அழுத்தமான திமுக காரர்கள்
இவர்கள் யாரும் மதவெறி ஆட்கள் இல்லை
இறை நம்பிக்கை உடையவர்கள்
நம் தோழியர்களின் கணாவர்களும் இறைநம்பிக்கையாளர்கள்தான்
விளக்கு ஏற்றினால் தெய்வம் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கை
அல்லது,
ஏற்றாவிட்டால் இறைவன் இன்னும் பேரதிகமாய் சோதிப்பான் என்ற பயம்
வெறுக்காதீர்கள்
எல்லோருக்கும் சொல்வது இதுதான்,
எல்லோரையும் “அவர்கள்” பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்
நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது
அவ்வளவுதான்

08.04.2020

சும்மா சொன்னேன்

திடீரென்று என் மகளுக்கு திருமணம் ஏற்பாடாகிறது என்று கொள்வோம்
கையிலோ பைசா இல்லை
எனில்,
என் தம்பியிடம், தங்கைகளிடம், உறவினர்களிடம் புரட்டுவேன்
போதாது எனும்பட்சத்தில் வட்டிக்கு வாங்குவேன்
வாங்கிய ப்ளாட்டில் வீடு கட்டலாம் என்று சேமிப்புகளை எல்லாம் ஒன்று திரட்டுகிறேன்
இருபது லட்சம் தேறுகிறது
வீடு கட்டும் ஏற்பாடுகளைத் தொடங்குகிறேன்
இந்த நேரத்தில் திடீரென்று மகளுக்கு திருமணம் ஏற்பாடாகிறது
வீடு கட்டும் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு திருமணத்தை முடிப்பேன்
புதிய பாராளுமன்றம் கட்டலாம் என்று இருபதாயிரம் கோடிக்கு திட்டம்
இந்த நேரத்தில் கொரோனா
சும்மா சொன்னேன்

08.04.2020

முரண்களை சுமந்து அலைய வேண்டாம்

நேற்று (09.04.2020)
பிற்பகல் 01.25
விக்டோரியாவின் அலைபேசிக்கு ஷியாமளாவிடம் இருந்து அழைப்பு
SHYAM CALLING
என்பதைப் பார்த்ததுமே கீர்த்தனா அழத் தொடங்கி விட்டாள்
விசும்பிக்கொண்டே விக்டோரியா அலைபேசியை வாங்கி
“அழாத பாப்பா, அழாத பாப்பா” என்றவாறே சத்தமாக அழத் தொடங்கி விட்டது
எனக்கும் கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டது
ஒருமணி நேரத்திற்கு முன்பு பேசிய ஷியாமளா முடிந்ததும் சொல்வதாக சொல்லியிருந்தாள்
முடிந்துவிட்டது
விக்டோரியாவின் அக்காவினுடைய கணவர் இறந்துவிட்டார்
ஒருமணி நேரத்திற்குள் எரித்துவிட வேண்டும் என்று நெறுக்குவதாகக் கூறினாள்
அதற்குள் கலெக்டரிடம் அனுமதி பெற்று போவது கடினம்
எனவே போவதில்லை என்று முடிவெடுத்தோம்
வீடியோ பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்தோம்
02.15 வாக்கில் மீண்டும் அழைத்தாள்
இதற்கிடையே தூய உடல் ஏற்றிச் செல்லும் வண்டிக்கு இன்னொரு உடலை எடுத்துச் செல்ல புக் ஆனதால் வண்டி வர 04.30 ஆகும் என்றாள்
ஆகா, அதற்குள் அனுமதி வாங்கி போய்விடலாம் என்று தோன்றவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் விரைகிறேன்
அங்கு சென்று பார்மாலிட்டிகளைத் துவங்குவதற்குள் வண்டி வந்துவிட்டதாக பிள்ளை சொல்லவே திரும்பிவிட்டேன்
திருமணம் ஆனதில் இருந்து நானும் அவருமாகவே எதற்கானாலும் சேர்ந்தே திரிவோம்
எனக்கு திருமணமாகுப் பொழுது ஷியாமளா மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்
அதற்கப்புறம் அவள் அவள் எனது பிள்ளையாகவே ஆகிறாள்
அவளது திருமணத்தின் ஊடாக அவருக்கும் எனக்கும் சிறு ஊடல்
நானும் அவரும் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை என்றாகிவிட்டது
கோவத்தில் அவளோடும் பேசுவதைத் தவிர்த்து விட்டேன்
மற்றபடி குடும்பத்தில் யாருக்கும் யாரோடும் முரணெதுவும் இல்லை
ரெண்டரை வருடங்களுக்குப் பிறகு ஒரு வாய்ஸ் மெசேஜ் வருகிறது
எடுத்துக் கேட்கிறேன்
“எபீன் தாத்தா”
ஒரு ஆண் பிஞ்சின் மழலை
யார் என யோசிப்பதற்குள்
“புவா சாப்டியா?”
அய்யோ, தவமே செய்யாமல் வரமா?
“பெரம்பலூர் வரேன்
ஒன்ன தூக்கறேன்
கரட்டாம்பட்டி வரேன்”
யாரெனப் புரிந்துவிட்டது.
பேரன்
அம்மா சொல்லி கொடுத்து ரிகர்சல் எடுத்து வந்த குரல்
இளகிப் போனேன்
இன்னும் கொஞ்ச நாள் கழித்து மகள் மருமகன் பேரன் பேத்தி எல்லோரும் வருகிறார்கள்
வாங்க சொல்கிறேன் எப்போதும்போல
பிறகு உம்
அவர்களுக்கு நான் உம் என்று இருப்பது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை
என்னைத் தவிர எல்லோரும் ஒன்றுதான்
திடீரென்று பேத்தி வருகிறாள்
சத்தமாக,
“டேய்”
திரும்புகிறேன்
“ன்னா”
சிரிப்பு தொண்டைக்குழிவரை வந்துவிட்டது
“;ஊக்கு” என்று கைகளை நீட்டுகிறாள்
அம்மா சொன்னதை செய்கிறாள்
தூக்கிவிட்டேன்
மகள்களுக்கு அப்பன்களை சுளுவாக வளைக்கத் தெரிகிறது
சகோதரன்களுக்கு இந்தக் கலை வாய்க்க மறுக்கிறது
மகளோடு ராசியாகிவிட்டது
அவருக்கும் உடல் சரியில்லாமல் போகிறது
இப்பவும்கூட என் நியாயம் சரி என்றே எனக்குப் படுகிறது
என் நியாயம் எனக்கு சரியென்றால் அவர் நியாயம் அவருக்கு சரிதானே
போய் பார்த்து
பழசெல்லாம் மறந்துடுவோம் என்று சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறேன்
போகவே முடியவில்லை
ஒருக்கால் அதே மாதிரி அவருக்கும் தோன்றியிருக்கலாம்
உடம்பு நன்றாக இருந்தபோது அவரது வந்திருக்கலாம்
நானாவது போயிருக்கலாம்
இது நடந்திருந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக அவர் வாழ்ந்திருக்கலாம்
இனி அவரும் வர இயலாது
நானும் போக முடியாது
என் அன்பிற்குரியவர்களே,
முரண்களை சுமந்து அலைய வேண்டாம்

இலவசமாக பொய்யை விற்க வருகிறார் மதுவந்தி

அவர்கள் குடும்பம் நெடுங்காலமாக தரமான கல்வியை விற்று வருபவர்கள்
விற்கப்படும் கல்வியில் தரம் எப்படி இருக்கும்?
ஆனாலும் லஞ்சம் கொடுத்தும் அந்தப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்தார்கள் நம் மக்கள்
அம்மா பள்ளியில் குழந்தையை சேர்க்க வருபவரிடம் பிள்ளையே லஞ்சம் வாங்குவார்
பெற்ற லஞ்சத்திற்கு ஒழுங்காக பணியாற்றாமல் காசும் திருப்பி தராமல் நடந்த பிரச்சினைகளும் உண்டு
நல்ல நீச்சல் குளம் இருப்பதாக விளம்பரம் செய்வார்கள் அது பிள்ளையை விழுங்கும் குளம் என்பதை சொல்ல மாட்டார்கள்
கேட்டால்
பரம்பரை பரம்பரையாக கல்வி விற்பதாக சொல்கிறார்கள்
இப்போது
இலவசமாக பொய்யை விற்க வருகிறார் மதுவந்தி
ஆக அவர்கள் பரம்பரை பரம்பரையாக விற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள்
இப்போதுதான் கொஞ்சம் சுதாரித்து இருக்கிறோம்

11.04.2020

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...