”கொரோனாவிற்கு ஜாதி மதம் இனம் எல்லாம் கிடையாது”என்று
தாமதம்தான் ஆனாலும் மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே
நீங்கள் வள்ளுவர் மாதிரி
எதையும் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டீர்கள்
“கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்”
என்று ஒரு குறள் உண்டு
ஒரு மனிதன் எவ்வளவுதான் கற்றுத் தேர்ந்த அறிவாளியாக இருந்தாலும் அவன் இறைவனின் தாளைப் பணியவில்லை என்றால் அவன் கற்ற கல்வியினால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை
என்று இதற்கு பாமரத்தனமாகப் பொருள் கொள்ளலாம்
இதை ஏன் வள்ளுவர் சொல்ல வேண்டும்?
இதை சொல்ல வேண்டியத் தேவை வள்ளுவருக்கு ஏன் வந்தது?
காரணம் மிகவும் எளிமையானது
வள்ளுவருக்குத் தெரிந்த யாரோ சில கற்றுத் தேர்ந்த அறிவாளிகள் இறைவனின் தாளினை வணங்க மறுத்திருக்கிறார்கள்
அதாவது
வள்ளுவர் காலத்திலேயே நாத்திகர்கள் இருந்திருக்கிறார்கள்
அதனால்தான் வள்ளுவருக்கு அப்படி ஒரு குறளை எழுத வேண்டியத் தேவை வந்திருக்கிறது
இதை எல்லாம் ஏன் இப்போது என்னிடம் கூறுகிறாய்? என நீங்கள் கேட்கலாம்
“கொரோனாவிற்கு ஜாதி, மதம், இனம் எல்லாம் கிடையாது”;
என்று சொல்லவேண்டிய தேவை ஏன் வந்தது?
எனில் யாரோ ஒரு கூட்டம் கொரோனாவிற்கு ஜாதி மத வண்ணத்தைப் பூசி இருக்கிறார்கள்
யார் அவர்கள்?
எதிர் முகாமாக இருந்தால் இன்னேரம் வாளை சுழற்றி இருப்பீர்கள்
சொந்த முகாம் என்பதால் பூசி மெழுகுகிறீர்கள்
மட்டும் அல்ல,
நீங்களே கடிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது
அது என்ன?
போகட்டும் என் அன்பிற்குரிய பிரதமரே
கொரோனாவிற்கு மதச் சாயம் பூசியவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
20.04.2020
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்