Sunday, January 29, 2012

திருவிழாவில் தொலையாத வாசகன்

சாக்ரட்டீஸ் கையில் விஷக் குப்பி வந்து விட்டது.  அருந்திப் பறந்துவிட வேண்டும், அவ்வளாவுதான். அந்த நேரம் பார்த்து ஒரு காவலாளி ஒரு பாடலைப் பாடுகிறான். அந்த ராகம் பிடித்துப் போகவே அந்த ராகத்தைக் கற்றுத் தருமாறு கேட்கிறான் சாக்ரட்டீஸ்.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஒலிக்கப்போகும் ஆலய மணியோசையைக் கேட்க அநேகமாக இவன் இருக்கப் போவதில்லை. அவ்வளவு ஏன், இந்த ராகத்தை முழுவதுமாகக் கற்பதற்கு போதுமான அவகாசம் இவனுக்கு இருக்கப் போவதில்லை. இவன் ஏன் இப்படி அலைகிறான்? என்பது மாதிரி அந்தக் காவலாளி பார்க்கவே, புரிந்துகொண்ட சாக்ரட்டீஸ் சொன்னானாம்,

" i want to learn one more thing before i die"

கூடுதலான ஒரு விஷய ஞானத்தோடு சாக விரும்பியதாக சொல்லியிருக்கிறான்.

மரணத்தை மகிழ்ச்சியோடு சாப்பிட்ட பகத் கொட்டடிக்கு அழைத்துப் போக ஆள் வரும் வரைக்கும் படித்துக் கொண்டிருந்தான் என்பது வரலாறு. மரணத்திற்கும் அவனுக்கும் ஒரு நூறு அல்லது நூற்றி ஐம்பது தப்படிகளே மீதம் இருக்கும் தருவாயிலும் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறான். அவனது விடுதலை வேட்கை, தியாகம் எல்லாம் எவ்வளவு உசத்தியானதோ அதற்கு கொஞ்சமும் குறைச்சலானதல்ல அவனது ஞானத்திற்கான தேடல்.

 அறுவை சிகிச்சைக்கு முன்னர் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த அண்ணா, “ எதற்கும் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நூலை வாசித்து முடித்ததும் அறுவையை வைத்துக் கொள்ளலாமே” என்று கேட்டதாக எங்கோ வாசித்திருக்கிறேன். ஒருக்கால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனால் தொடங்கிய புத்தகத்தை முடிக்காமலே,  இருபத்தி ஐந்து கிராம் குறைவான அறிவோடு செத்து விடுவோமோ என்று பயந்து தொலைத்திருக்கிறார்.

நூறு விழுக்காடு அவர்தானா என்று தெரியவில்லை. பேரதிக அளவிற்கு அநேகமாக மார்க்ஸ்தான், உங்களுக்கு அதிகம் பிடித்த மூன்று விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்று கேட்ட போது இப்படி பட்டியலிட்டாராம்,

புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்.

தங்களுக்கு கல்லறைக் குழி வெட்டுவதற்கு ஆட்கள் மயானம் போயிருக்கிறார்கள் என்பதை அறிந்த பிறகும் கிடைக்கிற அவகாசத்தில் ஏதேனும் புதிதாய் கற்றுக் கொண்டு சாக ஆசைப் பட்டிருக்கிறார்கள் .

படித்து கிடைக்கும் ஞானத்தை பயன்படுத்த நிச்சயமாய் இருக்கப் போவதில்லை என்பது தெரிந்த பின்னரும் இருக்கிற ஞானத்தோடு ஒரு புளியங்கொட்டை அளவுக்கேனும் கூடுதலாக்கிக் கொண்டுதான் சாவது என்று யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்தவர்கள் போல் வாசித்து தீர்த்திருக்கிறார்கள்.

புதிதாய் கற்க, அறிவை விரிவு செய்ய, இருக்கிற அறிவில் ,புரிதலில், ஞானத்தில், படிந்து கிடக்கிற அழுக்குப் படிமங்களை வெளுத்துத் துவைத்து சலவை செய்ய, மொத்தத்தில் மனிதப் படுத்த தற்போது நூல்களை விட்டால் வழி ஏது?

புத்தகத்திற்கும் மனிதனுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

இன்றைய தேதியில், மினி பேருந்தே செல்லாத ஊர்களிலும் அனைத்து சிம் கார்டுகளும் ரீச்சார்ஜ் கார்டுகளும் கிடைக்கும் இந்தக் காலத்திலும் எல்லா ஊர்களிலும் புத்தகங்கள் கிடைக்கின்றனவா?

உழவர் சந்தை, வாராந்திர சந்தை, ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, பலசரக்கு சந்தை போன்று பலத்தரப்பட்ட புத்தகங்களை ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்யும் புத்தக சந்தைகள் போதுமான அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி, திருப்பூர், என்று சில புத்தகக் கண்காட்சிகள் உண்டுதான். எனினும் சென்னை அளவிற்கு வேறு எதனையும் பொருத்திப் பார்க்க இயலாது.

“ சர்வ தேசிய அளவிலான இந்திய நிறுவனங்களின் எண்பது கடைகளை உள்ளடக்கி அறுநூறு கடைகள், கோடிக் கணக்கான புத்தகங்கள், எட்டு லட்சம் பார்வையாளர்கள், அறுபது லட்சம் புத்தகங்கள் விற்பனை என்று இந்த முறை சென்னைப் புத்தகக் கண்காட்சி கலைகட்டியது” என்கிற மாதிரி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. R.S சண்முகம் அவர்கள் கூறியுள்ளார்.

ஆனாலும் கொண்டாடத் தக்க அளவுக்கு இந்தப் புள்ளி விவரத்தில் போதுமான அளவுக்கு ஏதேனும் இருக்கிறதா?

போதாது, போதாது, போதவே போதாது.

“கடந்த ஆண்டு ஏழு லட்சம் பார்வையாளர்கள், ஐம்பது லட்சம் புத்தகங்கள் என்ற நிலையிலிருந்து இந்த ஆண்டு எட்டு லட்சம் பார்வையாளார்கள், அறுபது லட்சம் புத்தகங்கள் என்று முன்னேறியிருக்கிறோம்” என்று நகரும் சண்முகம் அவர்களின் கூற்றில் பொய் இல்லை என்றாலும் கொண்டாடுவதற்கும் எதுவும் இல்லை.

சென்றப் பொங்கலுக்கும் இந்தப் பொங்கலுக்கும் ஏறத்தாழ முப்பது கோடிரூபாய்க்கு அதிக விற்பனை என்ற டாஸ்மார்க் கணக்கைப் பார்க்கும் போது எட்டு லட்சம் பார்வையாளர்கள் அறுபது லட்சம் நூல்கள் என்பதிலோ அல்லது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு லட்சம் பார்வையாளர்களும் பத்து லட்சம் நூல்களும் அதிகம் என்பதிலோ சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.

ஏறத்தாழ எட்டரை கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தில், அதிலும் குறிப்பாக முப்பது லட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையில் மக்கள் திரள் வாழ்கிற பெரு நகரத்தில் பதி மூன்று நாட்கள் நடந்த கண் காட்சி என்று பார்க்கும் போது மனது வலிக்கவேகூட செய்கிறது ஆனாலும் , சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்து விட வில்லை என்பதுகூட ஆ|றுதலான விஷயம்தான். இந்த அளவிற்கான முன்னேற்றத்திற்கேகூட நாம் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

இந்தமுறை பல புதிய விஷயங்களை அமைப்பினர் கொண்டு வந்திருந்தார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல ஒன்று உண்டு. ஒவ்வொரு நாளும் படைப்பாளிகளையும், வாசகர்களையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தார்கள்.

அன்று எழுத்தாளர் பாமா அவர்களோடு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அரங்கத்தில் போடப் பட்டிருந்த நாற்காலிகள் எல்லாம் நிரம்பி வழிய, ஒரு இருபது பேர் அரங்கின் உள்ளே தரையில் அமர்ந்திருந்தனர். இது போக அரங்கின் மூன்று பக்கங்களிலும் ஒரு எழுபது எண்பது பேர் நின்றிருந்தனர்.

 நமக்கும் வெளியே நிற்பதற்குத்தான் வாய்ப்பு கிடைத்தது.

“எழுத எழுத மனது இலகுவானது. அழிக்கப்பட்ட வாழ்க்கையின் எளிமையும், இனிமையும் எனக்குள் முளைவிட ஆரம்பித்தன. பழைய மண்வாசனையுடன் புதியதொரு வளர்ச்சியைக் காண முடிந்தது. வாழ வேண்டும் என்றதொரு தாகமும், வேகமுமெனக்குள் தலைதூக்கின” என்று தனது எழுத்து குறித்து சரியாய் சொன்ன பாமாவோடு நேர்கானல் என்பது வழக்கத்தைவிடவும் சற்று கூடுதலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாமா ஒரு பெண், அவர் ஒரு தலித், அவரை எப்படி மடக்கலாம் என்ற திட்டமிடலோடு சிலர் கங்கனங் கட்டிக் கொண்டு வந்திருந்தது தெரிந்தது.

அப்படி இப்படி சுற்றி வளைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மேட்டுக் குடியினரும் தலித்துகளும் ஒன்றுதானே என்ற ஆபத்தான கேள்வியை ,அது எப்படி சரியாகும்?

பொருளாதாரத்தில் ஒரு தலித்தைவிட ஒரு அய்யர் மிகவும் பின் தங்கியிருந்தாலும் அவர் ஒரு போதும் தலித்தை சமமாகப் பாவிக்க மாட்டார். அம்பேத்கரை விடவும் படிப்பிலும் அறிவிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கி இருந்த பிராமணர்கள் கூட அம்பேத்கரை ஒரு சக மனிதனாகவே மதிக்க மறுத்த போது இது எப்படி சாத்தியம்? என்ற பாமாவின் பதில் உன்மையை தோலுரித்துக் காட்டியது.

ஒருவர் வலிந்து கட்டிக் கொண்டு சங்கராசாரியாரைப் பற்றி ஏதேனும் சொல்லுங்களேன் என்ற போது இன்னும் கொஞ்சம் கடுமையாக இருந்திருக்கலாம் என்கிற அளவில்தான் பாமாவின் பதிலை எடுத்துக் கொள்ள முடிந்தது.

படைப்பாளி என்கிற வகையில் நீங்கள் பெண்ணா? தலித்தா? என்றகேள்வி நாம் பெரிதும் மதிக்கிற பெண் படைப்பாளியிடமிருந்தே வந்தது கொஞ்சம் கவலையைத் தந்தது. இரண்டும் தான் என்பதை தங்களது அனுபவத்திலேயே கற்று வைத்திருக்கும் அவர்கள் ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? என்பதுதான் புதிரே.

நேர்காணல் முடிந்து ஞாநியோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் ஞாநியிடம் வந்து நீங்கள் ஏன் பிராமண எதிப்பாகவே எழுதுகிறீர்கள்? என்று வினவிய போது ” நான் ஒரு ப்ரோ ஹ்யூமன், அது பிராமண எதிர்ப்பாகப் படுமானால் அதை இன்னும் வலுவாகவே செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஞாநி சொன்னதுதான் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னை மகிழ்வித்த ஒன்றாகப் பார்க்கிறேன்.

இப்படி புத்தகங்களைத் தாண்டியும் நிறைய இருந்தது கண்காட்சியில்.

மக்களை இழுக்கவும் , வாங்கச் செய்யவும் இன்னும் ஏராளம் செய்ய வேண்டும். இல்லையேல் புத்தகத் திருவிழாவில் பயனைக் கட்டிக் கொண்டு போவது ஹோட்டல்காரராகத்தான் இருக்கும்.




Tuesday, January 24, 2012

செயத்தக்க...

சூரியனே கம்பளி கேட்கும் அளவு பனியும் குளிரும் அமெரிக்காவில், ஆனாலும் சூரியனை விடவும் சூடாய்தான் இருக்கிறது அமெரிக்க தேர்தல் களம்.


“ராணுவம் எவ்வளவு முக்கியமானது? அமெரிக்காவின் அடையாளமும் ஆளுமையுமே ராணுவம்தானே. ராணுவத்திற்கான செலவைக் குறைத்ததன் மூலம் அமெரிக்க ராணுவத்தின் மேன்மையைக் குலைத்துப் போட்ட ஒபாமாவுக்கா உங்கள் வாக்கு?” என்று தன்னால் முடிந்த அளவு தேர்தல் களத்தை சூடேற்றி தேர்தலை வசப் படுத்த முயல்கிறது இன்றைய எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி.


குடியரசுக் கட்சியின் இந்த யுக்தி ஜனநாயக் கட்சியை வெகுவாக அசைத்துப் போடவே கட்சி ஒபாமாவைப் பார்க்கிறது.

பதறித்தான் போகிறார் ஒபாமா.

“அய்யோ, அய்யயோ... அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்களைப் போலவே நானும் ராணுவத்தை நம்பித் தானே தேர்தலை சந்திக்க வேண்டும். வேறெந்த நல்லதை செய்திருக்கிறேன். சொல்லி வாக்கு கேட்க. இது கூடவா தெரியாது எனக்கு.

முன்பு எப்போதையும் விட  ராணுவத்திற்கு இப்போது அதிகம் நிதி ஒதுக்கப் படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ராணுவத்திற்கு செலவு செய்யும் பத்து நாடுகளின் மொத்த செலவை விடவும் அதிகமாய் செலவு செய்கிறோம்.

எனவே குடியரசுக் கட்சியின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.”

இன்னொரு பக்கம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் ஏறத்தாழ இதே வாரத்தில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நம் நாட்டில் உள் நாட்டு உற்பத்தியில் 0.9 சதத்திற்கும் குறைவாகவே அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்கிறோம் என்று பேசியிருக்கிறார்.

அவர் செய்யக் கூடாத செலவை பேரதிகம் செய்கிறார். இவரோ செய்ய வேண்டிய செலவைத் தவிர்க்கிறார். இவர்கள் இருவருக்காகவும்தான் வள்ளுவன் இப்படி எழுதினானோ என்னவோ

”செயத்தக்க அல்ல

செயக் கெடும்
செயத்தக்க
செய்யாமையானும் கெடும்”

“செயத்தக்க அல்ல
செயக் கெடும்
செயத் தக்க
செய்யாமையானும் கெடும்”

Saturday, January 21, 2012

இந்தாப் பிடி செங்கொடி



இருபது ஆண்டுகளுக்குமேல் இருக்கும். தோழர் என்.ராமக்கிருஷ்ணன் எழுதிய “ ஆஷர்மில் பழநிச்சாமி” என்ற சிரிய நூலினை கையில் திணித்து இந்த மாத சோலைக் குயில்களுக்கு இது பற்ரி எழுது என்றார் நந்தலாலா.


கல்லூரியில் எங்கோ படித்துக் கொண்டிருந்த நேரம். பழநிச்சாமி ஆஷர் மில்லின் உரிமையாளர் போலும் என்கிற சராசரிப் புரிதலைத் தவிர வேறு எதுவும் அந்தப் புள்ளியில் என்னிடமில்லை.

உள்ளே போகப் போகத்தான் விரிந்தது பிரமிப்பு. பழநிச்சாமி அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர். தொழிற்சங்கத்தின் தலைவர். உரிமையாளார் பெயரோடு பொருத்திப் பேசப் படாத அந்த ஆலையின் பெயர் ஒரு ஊழியனோடு பொருத்திப் பேசப் படுகிறதென்பது அந்தக் காலத்தில் என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பொதுவாக தொழிற் சங்கத் தலைவர்கள் என்றால் வறட்டுத் தனமாக மோதும் குணம் கொண்டவர்கள் என்று என்னுள் செழித்து வளர்ந்திருந்த பிம்பத்தை அது சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டது.

அதில் வரும் ஒரு சம்பவம் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு நெளிவு சுழிவுடன் வென்றெடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அப்போது இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் தடை செய்யப் பட்டிருந்த நேரம். பழநிச்சாமியின் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் விலை வைத்திருந்த நேரம்.

திருப்பூர் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை. மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அந்த நிலையிலும் அவருக்கு ஆசை.

எல்லோரும் அசந்து உறங்கிய முந்தைய இரவில் மாறு வேடத்தில் வந்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே மே தின வாழ்த்து சொன்ன ஒரு தட்டியை கட்டுகிறார்.

அடுத்த நாள் அங்கே ஒரு பெரும் திரள் கூடுகிறது. மாறு வேடத்தில் பழநிச்சாமியும் அங்கே இருக்கிறார்.
தட்டியை அகற்ற எத்தனித்த காவலர்கள் பின் வாங்குகிறார்கள்.  தட்டியின் கீழ் மூலையில் களி மண்ணால் வெடி போன்று செய்து கருப்புத் துணியால் சுற்றி திரி இணைத்து கட்டியிருந்தார்.

அதற்கு கீழே “தோழர்கள் தொட வேண்டாம். தொடும் துரோகிகள் அழியட்டும்” என்று எழுதியிருந்தார்.

எந்தக் காவலர் நெருங்குவார்.

அப்போது ஒரு ரயில் வருகிறது.

மாறு வேடத்தில் இருந்த பழநி சொல்கிறார்,

“ ரயில் வந்தால் அதிர்ச்சியில் வெடித்துவிடும் வெடி”

“ என்ன செய்யலாம்?”

“ரயிலை நிறுத்துங்கள்”

“எப்படி?”

“இந்தக் கொடிகளைக் காட்டுங்கள்”

தயாராய் வைத்திருந்த சிவப்புக் கொடிகளைத் தருகிறார்.

காவலர்கள் சிவப்புக் கொடிகளோடு ரயிலை நிறுத்த ஓடுகிறார்கள்.

சிரிக்கிறார் பழநிச்சாமி.

எந்தக் காவலர்கள் செங்கொடியை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் கைகளிலேயே  செங்கொடிகள்.

அவரது புன்னகை எவ்வளவு உன்னதமானது.


Thursday, January 12, 2012

வாழும் மண்ணை மறந்த ஆங்கில ஊடக மலையாளப் பத்திரிக்கையாளர்கள்

”காக்கைச் சிறகினிலே” ஆசிரியர் குழு கூட்டத்தில் வைகறை அய்யா, ராதிகா கிரி அவர்களின் இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தைக் கொடுத்து தமிழில் பெயர்த்து தரச் சொன்னார். முடிந்த அளவு முயன்றிருக்கிறேன்

முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பல்வேறு ஆங்கில செய்தித் தாள்களில் வெளிவரும் செய்திகளைக் கூர்ந்து கவனிக்கும் போது கேரள பத்திரிக்கையாளர்களின் தொழில் நேர்மை குறித்து ஆழமான அய்யங்கள் என்னுள் எழுகின்றன.

தங்களது அரசாங்கத்தின் நிலைப் பாடுகளையும், தங்கள் மக்களது உணர்வுகளையும், அதிலிருக்கும் உண்மைகளைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாது, அப்படியே மலையாளப் பத்திரிக்கைகளில் எழுதிவிடும் பத்திரிக்கையாளர்கள் ஒருபுறம். அதைக்கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடலாம். ஆனால், ஆங்கில ஊடகங்களில் , அதுவும், சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்களில் பணிபுரியும் மலையாளப் பத்திரிக்கையாளர்களும் அதையே செய்வதுதான் நாம் அதுகுறித்து கவனம் குவிக்கவும், கவலையோடு அக்கறை கொள்ளவும் காரணமாயிருக்கிறது.

“முல்லைப் பெரியாறா? முல்லப் பெரியாறா?|”

இந்தக் கேள்விக்கான உங்களது பதிலே நீங்கள் தமிழகத்து ஆதரவாளரா? இல்லை கேரள ஆதரவாளரா என்பதைச் சொல்லிவிடும்.

“ ஒருக்கால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டாலோ அல்லது அணையே முற்றாக உடைந்தாலோ அணையிலிருந்து வெளியாகும் நீர் முழுவதும் இடுக்கி மற்றும் அதன் கீழுள்ள அணைகளில் சேதாரமில்லாமல் சேகரிக்கப் பட்டு விடும்” என்று நீதிமன்றத்தில் சொன்னமைக்காக கேரள அட்வகேட் ஜெனரல் திரு. K.Pதண்டபாணி அவர்கள் பதவி இறக்கம் செய்யப் பட்ட செய்தியை வெளியிடுவதில் இவர்கள் நடந்து கொண்ட விதமே வழுக்கிக் கொண்டே சறுக்கும் இவர்களது பத்திரிக்கை தர்மத்திற்கான சமீபத்திய சான்றாகும்.

அவர் பதவி இறக்கம் செய்யப் பட்ட நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ அந்தச் செய்தியைச் சென்னை ஆங்கிலப் பத்திரிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை. மிகவும் விபரீதமான,  முட்டாள்த் தனமான கருத்தினை சொல்லியிருக்கிறார் என்று தண்டபாணிக்கு எதிராக கேரள மக்கள் கொந்தளித்து வீதிக்கு வந்த பின்னரே வேறு வழியே இல்லாமல் அவை அந்தச் செய்தியை வெளியிட்டன. அதுவும் கூட அதற்காக தண்டபாணி பெற்ற தண்டனையைச் சொல்லாமல் அல்லது சொல்ல வேண்டிய அளவுக்குச் சொல்லாமல், அவரது கருத்து ஏற்படுத்திய முரண்பாடுகளை மட்டுமே மிகுந்த எச்சரிக்கையோடு வெளியிட்டன.

 தண்டபாணியின் கருத்தினை அவர்கள் ஏற்கிறார்களா? இல்லையா என்பது வேறு. இதில் நான் கவனப் படுத்த விரும்புவது என்னவெனில் கேரள அட்வகேட் ஜெனரலின் கருத்தினை பிரசுரிப்பதற்கு தகுதி வாய்ந்ததாகவே அவர்கள் எவரும் கருதவில்லை என்பதைத்தான்.

முதலில் தங்களை மலையாளிகளாகவும், பிறகே தேவைப் படும் பட்சத்தில் தங்களைப் பத்திரிக்கையாளர்களாகவும் மலையாளப் பத்திரிக்கையாளர்கள் கருதுகிறார்கள் என்றும் இதைக் கொள்ளலாம்.

" தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிக்கையின் சென்னைப் பதிப்பில் நவம்பர் 24 அன்று வெளியான ‘டைம்ஸ் வியூ’ தான் கடந்த இரண்டு வாரங்களாக என்ன நடக்கிறது என்று என்னைக் கூர்ந்து கவனிக்கப் பணித்தது.

“டேம் 999” திரைப் படத்தை இருட்டடிப்பு செய்ய வலியுறுத்தும் போராட்டங்களுக்கு வளைந்து பணிந்த தமிழகத் திரையரங்குகள்” என்ற தலைப்பின் கீழ் வெளியாகி உள்ள கருத்துச் சிதறலின் முதலிரண்டு வரிகளும் எந்த வித வில்லங்கச் சாயமும் பூசிக் கொள்ளாமல் கருத்துக்களைக் கூறும் தங்களது சுதந்தரத்திற்கான உரிமையை மட்டுமே கோருகின்றன. மூன்றாவது வரிதான் வில்லங்கப் பெருவெடியாய் வந்து விழுகிறது.  அது இவ்வாறு சொல்கிறது, “ உணர்ச்சிக் கொந்தளிப்பான முல்லப் பெரியாறு அணை விஷயத்தினை தெற்கு மாவட்டங்களில் வாழும் மக்களின் ஆதங்கத்தையும் ஆதரவையும் பெற வேண்டி அரசியல் கட்சிகள் தவறாகவும் திரிக்கவுமே செய்கின்றன.

"முல்லப் பெரியாறு” என்று மலையாளத்தில் எழுதவும் உச்சரிக்கவும் படுகிற, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வும் அவ்வாறே எழுதத் தேர்ந்தெடுத்து எழுதுகிற ‘முல்லைப் பெரியாறு’ கேரளாவில்தான் உணர்ச்சிக் கொந்தளிப்பான ஒரு விஷயமே தவிர தமிழகத்தில் அல்ல. ஆனால் கேரள அரசாங்கமும், பத்திரிக்கையாளர்களும், மக்களும் கூட்டாய் ஒன்றிணைந்து திட்டமிட்டுத் தவறான செய்திகளை இங்கே பரப்புவதன் மூலம் உணர்ச்சிக் கொந்தளிப்பான கலவர பூமியாக தமிழகத்தை மாற்றி விடுவார்களோ என்ற அச்சமும் கவலையும் நமக்குண்டு.

சென்னை மண்ணிலேயே வாழும் பத்திரிக்கையாளராயினும் ‘டைம்ஸின் கருத்து’ என்பது ஒரு மலையாளியின் கருத்தே என்பதில் சன்னமாகவேனும் யாரும் கவலை கொள்ளத் தேவை இல்லை.

சென்னையிலுள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தின் ஊழியர் கட்டமைப்பு பற்றி ஊடகத் துறையில் ஓரளவுக்கும் கொஞ்சம் குறைவான அளவு ஞானம் உள்ளவர்களுக்கும் நன்கு புரியும். ஒரு நாயரோ, மேனனோ அல்லது ஏதாவது ஒரு மலையாள இனத்தவரோதான் அதன் முக்கியப் பொருப்புகளில் உள்ளனர். அதன் உள்ளூர், அரசியல், மற்றும் பெருநகர ஆசிரியர்களாகவும் மலையாளிகளே உள்ளனர்.

”டைம்ஸ் அஃப் இந்தியா” நாளிதழின் சென்னை அலுவலகம் ஒரு ஆங்கில ஊடகத்தின் அலுவலகமாயினும் ஒருவருக்கொருவர் மலையாளத்தில் மட்டுமே பேசிக்கொள்ளும் ஊழியர்களாலும், மலையாள கலாச்சார மணத்தாலுமே நிரம்பிக் கசிகிறதென்று அதன் முன்னால் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

"டைம்ஸ் ஆஃப் இந்தியா” வில் சொற்ப சிறுபான்மையினராகவே தமிழர்கள் இப்போது உள்ளனர் என்றும் தான் அங்கு பணியாற்றிய போது தானும் தனது சக ஊழியர் ஒருவரும் தமிழகத்தைப் பாதிக்கும், அல்லது தமிழகம் சார்ந்த செய்திகள் நிராகரிக்கப் படுவது அல்லது இரண்டாம் பட்சமாக்கப் படுவது குறித்து அவ்வப்போதுவிவாதிப்போம் என்றும் அதன் இன்னொரு முன்னாள் ஊழியர் சொல்கிறார்.

ஓணம் பண்டிகையின் போது அலுவலகத்தை அலங்கரித்துக் கொண்டாட அனுமதிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நிர்வாகம் அதே அனுமதியைத் தமிழ்ப் புத்தாண்டின் போது வழங்க மறுப்பது அங்குள்ள தமிழர்களை எரிச்சல்பட வைத்ததென்றும் அவரும் சிலர்ம் இது குறித்து நியாயம் கேட்டதாகவும் ஆனால் எதுவும் விளைந்துவிட வில்லை என்றும் அவர் கூறுகிறார்.

படித்த மேல் தட்டு மக்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் ஆங்கில ஊடகங்கள் அடித்தட்டு மற்றும் உழைக்கும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தினை உதாசீனப் படுத்தி நிராகரிப்பதன் விளைவாக ஆங்கில மற்றும் தமிழ்ச் செய்தித் தாள்கள் ஒரே செய்தியை ஒன்றுக்கொன்று முற்றாய் முரண்பட்டுச் சொல்கின்றன என்று டைம்ஸ் இந்தியாவினை வாசிப்பதைத் தவிர அதனோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஒரு மூத்தப் பத்திரிக்கையாளர் சொல்கிறார்.

மிகச் சாதாரன பின்புலத்திலிருப்பவர்களும் ஆங்கிலச் செய்தியறைகளில் இடம் பிடிக்க முடிந்த போதிலும் அடித் தட்டு மக்களின் குரல் தொடர்ந்து உதாசீனப் படுத்தப் பட்டே வருகிறது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த பார்வை என்பது மேட்டுக்குடிகளின் பார்வையாகவே உள்ளதால் அதிகப் படியான தவறான எண்ணங்களும் கற்பிதங்களும் உருவாகி உள்ளன.

ஒரு உதாரணத்தோடு சொன்னால் இது இன்னும் விளங்கும்.டெல்லி, கொல்கொத்தா மற்றும் மும்பை மக்களை இட்லி தோசை மற்றும் சாம்பார் ஆகியவையே தமிழ் சமையலறைகளின் விளை பொருட்களாக நம்ப வைத்துள்ளன ஆங்கில ஊடகங்கள். பெரும்பான்மை தமிழ் மக்கள் அசைவர்களாக இருக்கும் உண்மையை மறைத்து இட்லி தோசை சாம்பாரே தமிழ் மண்ணின் பாரம்பரிய உணவு என்பதானதொரு பிம்பத்தை ஆங்கில ஊடகங்கள் ஏற்படுத்தி உள்ளன.

வெறும் பத்து சத தமிழ் மக்கள் மட்டுமே புரிந்து ரசிக்கும் பரத நாட்டியம், மற்றும் கர்நாடக இசை ஆகியவற்றை ஏதோ ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பாரம்பரியக் கலைகளாக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துக் காப்பாற்றி வருகின்றன. எனில், பெரும்பான்மையான தொண்ணூறு சத தமிழ் மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைகள் என்னவாயின?

வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், குறிப்பாக ஆசிரியர் குழுவின் உச்ச நிலைகளில் உள்ளவர்கள் கற்றறிந்த மேட்டுக் குடியினரோடு மட்டுமே தங்களை அடையாளப் படுத்திப் பொருத்திக் கொள்வதால் பெரும்பான்மைத் தமிழர்களான அடித் தட்டு மற்றும் உழைக்கும் மக்களின் இசையும் கலைகளும் ஆங்கில ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பெற இயலாமலே போயின.

இடுக்கி அணைக்கான நீரே கேரள அரசின் பிரதான நோக்கம். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அல்லது உடைக்கப் பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்று கருதுவதால் கேரள அரசுதான் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்கிற பிரச்சாரத்தை மலையாளப் பத்திரிக்கைகளின் மூலமாகத் தொடங்கியது.

காலப் போக்கில் கேரள அரசின் கருத்தினை ஊதி ஊதிப் பெரிய வண்ண பலூனாக யார் மாற்றுவது என்று மலையாளப் பத்திரிக்கைகள் தங்களுக்குள் ஒரு பந்தயத்தைத் தொடங்கிய புள்ளியில்தான் இந்தப் பிரச்சினையில் உணர்ச்சிக் கொந்தளிப்பும் வெப்பமும் பெருமளவு கூடிப் போயின. எந்தவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லாத போதும் முல்லைப் பெரியாறு அணை என்பது ஒரு நீர்க் குண்டு என்பதாகவும் அது எந்த நொடியும் இடிந்து விடுமென்றும் ஒவ்வொரு மலையாளியும் சில பத்து ஆண்டுகளாக நம்ப வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் இதே உணர்வலை வரிசையில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஆங்கில ஊடகங்கள் பெரும்பாலும் மலையாள பத்திரிக்கையாளர்களாலேயே நிரம்பி வழிவதால் வேறு வழியே இன்றி அவை கேரளத்தின் கருத்துக்களையே வெளியிடுகின்றன.

தமிழகத்தின் முதல்வராக பிறப்பால் மலையாளியாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களும் தலைமைச் செயலாளராக ஒரு மலையாளியும் இருந்த காலத்தில் ஒரு நாளில்தான் 152 அடியிலிருந்து 136 அடியாக அணையின் கொள்ளளாவு குறைக்கப் பட்டது.

மலையாளத்து அலைவரிசையோடு தன்னை முற்றாய்ப் பொருத்திக் கொண்டுள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மட்டுமல்ல ‘இந்து’ பத்திரிக்கையின் சென்னை பதிப்பும் ‘முல்லப் பெரியாறு’ என்றுதான் எழுதுகிறது.

மக்களைக் கொந்தளிக்கச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கேரள அரசின் நோக்கத்தையே எதிரொலிக்கும் ஊதுகுழல்களாகவே மலையாளப் பத்திரிக்கையாளர்கள் செயல்படத் தொடங்கும் போதுதான் பத்திரிக்கைத் துறையின் சாராத் தன்மையும் நம்பகத் தன்மையும் காயம் படுகின்றன.

அணை உடைந்துவிடும் என்று ஊதிப்பெருக்கப் பட்ட பொய்யின் வரலாறும் கொஞ்சம் நீண்டதுதான்.

அன்று மலையாளப் பத்திரிக்கை உலகின் உச்சானிக் கொம்பில் இருந்தவரும், அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் வழங்குமளவிற்கு அவர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தவருமான, திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ‘மலையாள மனோரமா’ வின் அன்றையத் தலைவர் திரு. பட்ரோஸ் சும்மாரிடமிருந்து தொடங்குவதாக, 1978 இல் தொடங்கிய இந்த விவகாரத்தின் அந்தரங்கங்களை அறிந்த மூத்த சென்னைப் பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகிறார்.

1976 முதல் நான்கு பருவங்களாக இடுக்கி அணைக்கு போதுமான நீர் வரத்து இல்லாமல் போனது ஏன் என்றும் அதற்கு என்ன செய்யலாம் என்றும் இன்றைய கேரள அரசின் ஆலோசகரும் அன்றைய கேரள மின்சாரத் துறையின் தலைமைப் பொறியாளருமான M.K.பரமேஷ்வரன் நாயரும் அன்றைய காங்கிரசின் தலைவர் கருணாகரனும் கவலையோடு கலந்தாலோசித்ததின் விளைவாக 1978 இல் ‘ முல்லப் பெரியாறு அணை’ உடையப் போகிறது என்று மலையாள மனோரமா எழுதி இந்தப் பொய்ப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கிறது.

அணையின் கொள்ளளவைக் குறைத்துக் கொள்ள தமிழக முதல்வரும் தங்களது ரத்த சகோதரருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களிடம் பேசுமாறு கருணாகரன் அவர்களிடம் வேடிக்கையாகப் பேச்சைத் துவக்கிய பரமேஷ்வரன் நாயர் தனது தொனியை மாற்றிக் கொண்டு அதற்குமுன் மக்களிடம் அணை குறித்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு கோரிக்கையை வைக்க வேண்டுமென்றாராம்.

மலையாள மனோரமா துவக்கி வைத்த அச்சம் கொள்ள வைக்கும் கயமையைப் புனித வேள்வி போல் ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் தொடர்ந்து தோளேற்றிச் செயல் படுகிறார்கள். இவர்களது இந்த நீண்ட பொய்ப் பிரச்சார யாத்திரையை உச்ச நீதிமன்றம்
‘ அணை பலவீனமாக இல்லை. எனவே தமிழக அரசு கொள்ளளவைக் கூட்டிக் கொள்ளலாம்’ என்று 2006 பிப்ருவரியில் ஒரு தீர்ப்பு சொல்லி முடித்து வைத்தது.

இன்று ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் பட்ரோஸ் சும்மராக செயல் படுவது பத்திரிக்கை உலகை மட்டுமல்ல, நீதியை, உண்மையை முடமாக்கிப் போடும் துயரை உற்பத்துக்கும் செயலாகும். இதை உணர்ந்துகொள்ளாத பசத்தில் அவர்களது குறுகிய இனப் பற்று இந்த தேசத்தின் மேன்மையான பன்முகத் தன்மையை உடைத்துப் போடும்.

கொஞ்சம் தண்ணீருக்காகவும் திருவாங்கூர் மகாராஜாவிடமிருந்து சட்டப்படி பிரிட்டிஷ் இந்திய அரசு கையகப் படுத்திய ஒரு சின்னத் துண்டு நிலத்திற்காகவும் தங்களது பத்திரிக்கை தர்மத்தை கேரள பத்திரிக்கையாளர்கள் காவு கொடுக்கலாமா?


 நன்றி: “காக்கைச் சிறகினிலே”

Sunday, January 8, 2012

நமக்கில்லை கடவுள் கவலை

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் மறு ஒலிபரப்பினை பார்த்துக் கொண்டிருந்தான் கிஷோர். ஒருவர் பின் ஒருவராக இந்திய மட்டை வீரர்கள் வீரர்களின் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவனருகில் இருந்த ரிமோட்டை எப்படியோ லாவகமாகக் கைப்பற்றிய கீர்த்தி அவள் அம்மாவை அழைத்தாள். இருவரும் பாயில் அமர்ந்து கொண்டனர். படீரென வேறு ஒரு சேனலுக்குத் தாவினாள் கீர்த்தி. அவ்வளவுதான், கிஷோருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“நான்தான் பார்த்துக் கிட்டிருக்கேன்ல, அப்புறம் எதுக்குடி வெள்ளச்சி மாத்துற?”

”அதுதான் நேத்தே தோத்துட்டான்களே. அப்புறம் அதையே ஏன் திரும்பிப் பார்க்குற? நீ திரும்பிப் பார்க்குறதால மட்டும் ஜெயிச்சுறப் போறான்களாக்கும்?”

" நீ மட்டும் என்னாடீ, தெனைக்கும் ஏசு அழைக்கிறார் ஏசு அழைக்கிறார்னு சொல்றியே தவிர எங்கேயும் போகாம இங்கேயே தானடி உக்காந்திருக்க வெள்ளப் பன்னி”

“ஏய், வேண்டாம், அப்புறம் ..” என்பதற்குள் பையன் வெளியே போய்விட்டான்.

தொலைக் காட்சியில் ஒருவர் கையில் வேதப் புத்தகத்தோடு ஜெபித்துக் கொண்டிருந்தார். எதை எப்படி விமர்சித்தாலும் அவரது மன்றாடலில் கசிந்த உருக்கமும் அழுகையும் உண்மைக்கு மிகவும் கிட்டத்தில் இருந்ததை ஏற்கத்தான் வேண்டும். அதில் எந்த விதமான பூச்சையோ போலித் தனத்தையோ பார்க்க இயலவில்லை.

எதிரே கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் கண்களை மூடியவாறும் கைகளைத் தூக்கியவாறும் அவரது மன்றாடலோடு ஒன்றிணைந்து உருகினர்.

“ஆலயம்
கண்களை
மூடச் சொல்லும்
பள்ளிக் கூடம்
கண்களைத் திறந்து வைக்கும்”

என்ற வைரச் சந்திரனது கவிதை எவ்வளவு சரியானது என்பதை உளப் பூர்வமாக உணர முடிந்தது.

“புத்தகம் கூட
கைத் தடிதான்
தூங்குபவனைத்
தட்டி எழுப்பும்
விழுந்தவனை
தூக்கி நிறுத்தும்”

என்பான் தம்பி ஆங்கரை.பைரவி.

திரண்டிருந்த ஆயிரக் கணக்கானோரில் பெரும்பான்மையோர் கைகளில் வேதப் புத்தகம்.  “புத்தகம் தூங்குபவனைத் தட்டி எழுப்பும்” என்கிறானே பைரவி, இங்கு வேதப் புத்தகத்தோடு கண்களை மூடிய படி இருக்கிறார்களே, எனில் வேதப் புத்தகம் புத்தகம் இல்லையா?

யார் என்று சரியாய்த் தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள், சொன்னான்

“வெள்ளையர்கள்
வந்தபோது
அவர்கள் கையில்
பைபிள் இருந்தது
நம்மிடம்
நாடு இருந்தது

உருக்கத்தோடு
ஜெபித்தார்கள்
நாமும்
கண்களை மூடி
ஜெபத்தில் கலந்தோம்

ஆமேன் என்றார்கள்
விழித்துப் பார்த்தோம்

பைபிள்
நம் கைகளில் இருந்தது
நாடு
அவர்கள் கைகளில் இருந்தது”

கவிதையை சரியாய் எழுதியிருக்கிறேனா என்பதும் தெரியவில்லை. ஆனால் இது மாதிரித்தான் போகும்.

நமது பூமி அடிமைப் பட்டுப் போனதற்கு இது மட்டுமே காரணம் அல்ல என்பதும் , அதற்கு நீண்ட நெடிய சமூக ,பொருளாதார, அரசியல்,  நம்மிடம் புரையோடிப் போய்க் கிடந்த சாதீய ஒடுக்குமுறை போன்ற ஏராளமான அழுத்தமான விஷயங்களே காரணங்கள் என்பதும் நாமறிந்ததே.

நமது கவலையும் கவனமுமெல்லாம் தட்டி எழுப்பக் கூடிய நூல்களும், கண்களைத் திறக்கச் சொல்லும் பள்ளிகளும் ஏராளம் வேண்டுமென்பதே.

இதற்கிடையே கிஷோர் மீண்டும் வந்து விட்டான். விக்டோரியாவும் கீர்த்தியும் முக்காடிட்டு அந்த பிரசங்கியாரின் இறை மன்றாடலில் இரண்டற இணைந்திருந்தார்கள்.

கிஷோர் சும்மாவும் இருக்க மாட்டான். முக்காடு அவனை என்ன செய்ததோ தெரியவில்லை.

“ஏம்மா, ஏம்மா இப்படி?”

”அப்பாவோட சேர்ந்து நீயும் அழிஞ்சு போகாத. நல்ல பிள்ளையா இப்படி வந்து கண்ண மூடி ஜெபத்துல உட்காரு”

“வொய் மம்மி வொய்?”

வழக்கமாக அவனது இது போன்ற நக்கல்களில் லயித்து சிரித்துவிடும் விக்டோரியா வழக்கத்திற்கு மாறாக எரிச்சலடைந்து ,

“கட்டையில போறவனே, இப்படி கடவுளக் கிண்டல் செய்து அவரோட ஆக்கினைக்கு ஆளாகாதே. ஏற்கனவே ஒன்னு இப்படி செய்றதாலதான் எவ்வளவு வந்தாலும் ஒன்னும் விளங்காம இருக்கு. நீயும் இப்படி செஞ்சேன்னு வச்சுக்க அப்புறம் அவரோட ஆக்கினைல அப்படியே கருகிப் போயிடுவீங்க”

கல கலவென சிரித்தான். அது விக்டோரியாவை இன்னும் எரிச்சல் பத்தியது. கண்களில் லேசாக ஈரத்தைப் பார்க்க முடிந்தது.

”உனக்குப் பிடிக்கலைனா உட்டுடுடா. வம்புக்கிழுக்காத”

”ஏம்மா கடவுள நீ பார்த்திருக்கியாம்மா நீ”

ரொம்பப் பழசுதான் கேள்வி. ஆனா அதைவிட அதலப் பழசா பதில் வந்தது.

“ நம்புடா, நம்பாட்டி உருப்படமாட்ட. நாசமாப் போயிடுவ.”

“எத நம்பனும்?”

”கடவுள”

”அப்புறம்?”

“அவரோட அதிசயங்கள”

”அதிசயங்களா? புரியலம்மா. கொஞ்சம் விளங்குறமாதிரி சொல்லும்மா”

“எத்தனைக் குருடங்க பார்க்கிறாங்க. எத்தனை ஊமைகள் பேசறாங்க. எத்தனை முடவர்கள் பார்க்கிறார்கள்.”

பேச விடாமல் இடை மறித்து சிரித்தான்.

“ஏண்டா சிரிக்கிற எடுபட்ட பயலே”

“பார்த்தியாக்கும்”

“கண்டு விசுவாசிக்கிறவனைவிட காணாமல் விசுவாசிக்கிறவனே பாக்கியவான்”

 “கொறச்சலே இல்ல. சோமலியால சின்ன சின்ன புள்ளைங்க சோறில்லாம சாகுது. அவங்களுக்கு சோறு போடமாட்டாராக்கும்”

“டேய் வேணாம்...”

 “ கடவுள் இருக்கார்னு நம்பச் சொல்றத வேண்டும்னா அறியாமன்னு ஒதுக்கிடலாம். ஆனா அத செஞ்சார் இத செஞ்சார். சோதிக்காம ஒத்துக்கன்னா, சாரிம்மா நோ சான்ஸ்”

சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

“ நான் கட்டிக்கிட்டதும் சரியில்ல, பெத்துக்கிட்டதும் சரியில்ல, என்றவாறே மூக்கைத் துடைத்தபடியும், முக்காட்டை சரிசெய்தவாறும் மீண்டும் விக்ட்டோரியா ஜெபத்தில் மூழ்க, நடந்த எதிலும் அக்கறை காட்டாமல் ஜெபத்திலேயே இருந்தாள் கீர்த்தி.

சபாஷ்டா கிஷோர்.




இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...