Showing posts with label நான்காம் நூல். Show all posts
Showing posts with label நான்காம் நூல். Show all posts

Sunday, September 23, 2012

பாரதியின் “இந்திய பாங்க்”

ஒரு பக்கம் பார்த்தால் பாரதியைப் பற்றி எவ்வளவு பேசியாயிற்று என்று மலைப்பாகத் தோன்றுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பேசுவதற்கு பாரதியைப் பற்றி இன்னும் இவ்வளவு இருக்கிறதே என்றும் தோன்றுகிறது.

அதுதான் பாரதி.

எவ்வளவோ விமர்சனங்கள், எவ்வளவோ வசைகள் எவ்வளவோ பாராட்டுக்கள் எனப் பரந்து விரியும் பாரதியின் தளம்.

பாரதியைக் கொண்டாடுபவர்களுள்ளும் சரி தூற்றுபவர்களுள்ளும் சரி பாரதியை முழுமையாகப் பார்க்காதவர்களே ஏராளம் எனலாம். கோனார் நோட்ஸில் போட்டிருப்பதற்காகவே பாரதியை மகாகவியாகக் கொண்டாடும் பலரை நானறிவேன்தான்.

ஆனால் இவை யாவும் கடந்து அள்ள அள்ளக் குறையாமல் ஏராளம் கிடக்கிறது பாரதியிடம்.

எது குறித்து பேசவில்லை பாரதி?

எது குறித்தும் பேசியவன்தான் பாரதி என்று ஆழமாய் நம்புபவனும் ஆச்சரியப் படும்படியாக ஒரு விசயத்திற்காக பாரதி விடாப் பிடியாகப் போராடியிருக்கிறான்.

தமிழகத்தில் ஒரு சுதேசி வங்கியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று போராடி அதில் வெற்றியும் பெற்றவன் பாரதி என்பது பாரதியின் பன்முகத் தன்மை குறித்து தொடர் வகுப்பு எடுக்குமளவிற்கு ஞானம் உள்ளவர்களில்கூட பலருக்கு ஆச்சிரியத்தைத் தரும் செய்தி.

36 சதவிகித வட்டி, வண்ண வண்ண, மற்றும் இதுமாதிரியான கவர்ச்சிகரமான அறிவிப்புகளில் மயங்கி தங்களது உழைப்பின் விளைவை எல்லாம் மொத்தமாக முதலீடு செய்துவிட்டு நிதி நிறுவனத்துக்காரன் கம்பியை நீட்டியவுடன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுகின்றவர்களை, சமயத்தில் தற்கொலை செய்துகொள்கிறவர்களை ஊடகங்களின் வாயிலாக நாம் ஏராளம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

எவ்வளவோ எடுத்து சொன்னாலும், ஊடகங்களின் வழியே அறிவுறுத்தினாலும் இது தொடர் கதையாகத்தான் இருக்கிறது. எத்தனை முறை எடுத்து சொன்னாலும் திருப்பித் திருப்பி இப்படி ஏமாறுகிறார்கள் எனில் எவ்வளவு பேராசை இவர்களுக்கு. இவ்வளவு பேராசை பட்டால் இப்படித்தான் நட்டப் படவேண்டும் என்று சொல்பவர்களும் உண்டுதான்.

ஆனாலும் இவர்கள் நிதி நிறுவனங்களில் கொண்டு போய் தங்களது வாழ்நாள் சேமிப்பைக் கொட்டுவது அவர்களது பேராசையினால் அல்ல. பிள்ளைகளை எப்படியேனும் உயர் படிப்பு படிக்க வைத்துவிடமாட்டோமா?, அவர்களின் திருமணத்தை நடத்திவிட மாட்டோமா? என்ற வாழ்க்கை நைந்து போயிருப்பவர்களின் ஏக்கத்தைதான் இந்த நிதிநிறுவனங்கள் கொள்ளை அடிக்கின்றன.

விலக்காய் சில பேராசைகளும் இருக்கவே செய்யும் என்பதையும் முற்றாக மறுத்துவிட முடியாதுதான்.

இவ்வளவு தொடர்பு சாதனங்கள்,  இவ்வளவு தொடர் பிரச்சாரங்கள் இருக்கிற இந்த நாளிலும் இத்தனைபேர் ஏமாறுகிறார்கள் என்றால் இவை ஏதுமில்லாத 1906 ஆம் ஆண்டு மக்கள் பெரிதாய் ஒரு வங்கியால் ஏமாற்றப் பட்டிருப்பதில் பெரிதாய் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லைதான். அதுவும் அன்றைய அரசாங்கமே அந்த வங்கியைத் தவிர வேறு எதிலும் லேவாதேவி செய்யக் கூடாது என்று சொல்லியிருந்த ஒரு கால கட்டத்தில் அரசு சொன்ன நிதி நிறுவனத்தைத் தாண்டி அவர்களுக்கு வேறு வழி ஏது?

1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அன்று சென்னை அர்பத்னாட் வங்கி இழுத்து மூடப்பட்டு அதன் கதவில் இப்படி எழுதி ஒட்டப் பட்டிருந்தது,

“அர்பத்னாட் கம்பெனியார் கடனாளிகளுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக விசனத்துடன் அறிவித்துக் கொள்கிறார்கள்.”

ஹிந்து நாளிதழ் 23.10.1906 அன்று இப்படி எழுதியது,

“:the consequence of this sudden and disastrous failiure will mean the ruin of many hundreds of families in southern india"

“ இந்த வங்கி இப்படித் திடீரென மூழ்கிப் போனதால் தென்னிந்தியாவில் உள்ள பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளன” என்பது மாதிரி ஹிந்து பத்திரிக்கை எழுதுமளவிற்கு அப்படி என்ன நடந்தது அந்த வங்கிக்கு.

“ஹிந்து” சொல்கிறமாதிரி திடீரென்றெல்லாம் அந்த வங்கி மூழ்கிப் போனதாத் தெரியவில்லை. 22.10.1906 திங்கள் அன்று வங்கி திவால் ஆனதாக அறிவிக்கக் கோரிய மனுவினை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறார் வங்கியின் தலைவர். ஆனால் சனி மாலை வரை வங்கி பொது மக்களிடமிருந்து “வைப்பு நிதி”களைப் பெற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

திங்கள் கிழமை காலை திவால் ஆனதாகக் கோரும் மனுவைத் தாக்கல் செய்கிறவருக்கு சனிக்கிழமை அன்று அந்த விவரம் தெரியாமல் போயிருக்க வாய்ப்பே இல்லை.

வழக்கறிஞரை நாடுதல், விவரங்களை சொல்லி மனுப்போடச் சொல்லி அவர் மனுதாக்கல் செய்தல் என்பதான இந்தச் சங்கிளித் தொடருக்கு எப்படிக் குறைச்சலாக வைத்துக் கொண்டாலும் ஒருமாத காலம் தேவைப் பட்டிருக்கும்.

எனில்,

22.09.1906 ஆம் தேதிக்கு ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னமே அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருக்க வேண்டும்.

எனில்,

குறைந்துபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பே வங்கியின் நிலைமை குறித்து அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

எனில்,

வங்கியை திங்கள் கிழமை மூடப் போகிறோம் என்று நன்கு தெரிந்திருந்தும் சனிக்கிழமை மாலை வரை பொது மக்களிடமிருந்து “வைப்பு நிதியினை”ப் பெற்றிருக்கிறார்கள் எவ்வளவு அயோகியத்தனமான கொள்ளையர்கள் அவர்கள்.

ஆனால் பாரதியோ அவர்களை வெறும் கொள்ளையர்களாகப் பார்க்கவில்லை. சுதேசிப் பணத்தினைக் கொள்ளை அடித்த அந்நியர்களாகப் பார்த்தான்.

“அரசாங்க வேலையில் உள்ளவர்கள் வெள்ளைக் கார வங்கிகளைலன்றி வேறு எந்த வங்கிகளிலோ அல்லது மற்ற பொதுமக்களிடமோ எந்தவிதமான பணப்பரிமாற்றமும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்றொரு விதி அந்தக் காலத்தில் இருந்தது.

03.11.1906 ஆம் தேதியிட்ட “இந்தியா” வில் பாரதி கேட்டான்,

“இவர்களெல்லாம் இப்படி நாசம் அடைவதற்கு சர்க்கார் விதியொன்று பெருந்துணையாக இருந்திருக்கிறது. அதாவது கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தர்கள் மற்ற ஜனங்களுடன் எவ்விதமான கொடுக்கல்- வாங்கலும் வைத்துக் கொள்ளக் கூடாதுஎன்றும், வெள்ளைக்காரபாங்கிகளில்தான் கொடுக்கல்- வாங்கல் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு விதி இருக்கின்றது.

இதனால் எத்தனையோ கவர்ன்மெண்ட் காலேஜ் உபாத்திமார்களும், கலெக்டராபீஸ் முதலிய கச்சேரிகளில் உள்ள நாள் எல்லாம் அரைவயிற்றுச் சோறுக்கு உழைக்கும் ஏழை ஜனக்களும் தாம் கஷ்டப்பட்டு மிச்சம் வைத்திருப்பதை இருக்கிற பிரிட்டிஷ்பாங்கிகளிலேசிறிது நல்ல மாதிரியாக இருந்த ஆர்பத் நாட் கம்பெனியிலே கொட்டிக் கொடுத்தார்கள்.

இப்போது அவர்களெல்லாம் உடைமையைத் தோற்றுவிட்டுப் பரிதபிக்கிறார்களே! இவர்களுக்கு சகாயம் செய்ய வேண்டியது கவர்ன்மெண்டாரின் கடமையல்லவா?”

ஆக, அரசு விதிகளுக்குக் கட்டுப் பட்டுத்தான் மக்கள் ஆர்பத்நாட் வங்கியில் பணம் போட்டார்கள் என்பதால் அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டென்றும் , அதிலிருந்து நழுவிவிடாமல் அவர்களுக்கு அரசாங்கம் நியாயங்கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் கோரினான்.

“ ரீட்” என்பவரை இது குறித்து விசாரிக்கும் காரியஸ்தராக அரசாங்கம் நியமித்தது. இது போதாது என்றும் அரசாங்க காரியஸ்தரோடு கடனாளிகள் சார்பிலே அவர்கள் நியமிக்கும் ஒரு காரியஸ்தரும் இணைந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் பாரதி எழுதினான்.

03. 10 1906 ஆம் “இந்தியா” வில் அவன் எழுதினான்,

“ மொத்தம் கம்பெனியில் இருக்கும் தொகையில்100-க்கு 5 கமிஷன் சர்க்கார் காரியஸ்தருக்குக் கொடுக்கப் படவேண்டும் என்று விதி இருக்கிறது, என்றபோதிலும் ,ஹைகோர்ட்டாருக்கு இஷ்டமுண்டானால்சர்க்கார் காரியஸ்தருக்கு இவ்வளவுதான் என்பதைக் குறிப்பிடலாம் என்ற விதியும் இருக்கிறது.

இந்தச் சம்பவம் அசாதாரணமானதும், ஜனங்களுக்கெல்லாம் அளவறிந்தவருத்தம் உண்டாக்கத் தக்கதும் ஆக இருப்பதால்,இவ்விஷயத்தில் ஹைகோர்ட்டார் சர்க்கார் காரியஸ்தரின் லாபத்தை இவ்வளவென்று வரையறுத்துக் கொடுப்பது அவர்களுடைய பொறுப்பாகும்,

அப்படியில்லாவிடினும் மொத்த லாபத்தை சர்க்கார் காரியஸ்தருக்கு பாதியும், கடனாளிகளால் நியமிக்கப் படும் காரியஸ்தருக்குப் பாதியும் ஆகவகுத்துக் கொடுக்க வேண்டும்”

ஏற்கனவே இழந்து நிற்கும் மக்களின் பணத்தில் 5 விழுக்காடு அரசாங்க காரியஸ்தருக்கு கொடுக்கக் கூடாது என்று வாதாடுகிறான். அதற்கான விதிகளைச் சுட்டிக் காட்டுகிறான். ஒருக்கால் அதற்கு சாத்தியம் இல்லாது போனால் 5 விழுக்காட்டையும் வெள்ளைக் காரனுக்கு கொடுக்காமல் அதில் பாதியை சுதேசிக் காரியஸ்தருக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறான்.

விக்கி பீடியா சொல்கிறது,

“when the auditors appointed bythe official assigneebegan examining Arbuthnot s accounts, they found thefirm had 2300 accounts in India with balance of RS2.75 million and about 4,000 fixed deposits with claims to amount of 25 million.

This was the biggest crash in Indian banking history, till then."

இது ஒரு புறம் நடந்துகொண்டிருக்க இழந்த மக்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்று சில நல்லவர்கள் முடிவெடுக்கிறார்கள். இதைக் கேள்விப் பட்டதும் பாரதி துள்ளிக் குதிக்கிறான். கையில்தாஅன் “இந்தியா” இருக்கிறதே, 10.11.1906 ஆம் தேதியிட்ட “இந்தியா” வில் எழுதுகிறான்,

“இந்த நிதிக்குப் போதுமான்படி பணம் வந்து குவிந்து அனேக அநாதைகளுக்கு உதவி ஏற்படும் என்று நம்புகிறோம்.

ஆர்பத்னாட் கம்பெனி சிதறிப் போனதில்நஷ்டமடையாத பிரபுக்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கஷ்டப்படும் ஜனங்களுக்கு உதவி செய்வதைத் தமதுகடமையாகப் பாவிக்க வேண்டும்”

பாரதி கோரியபடி ஒருவார கால அவகாசத்திற்குள் 45,150 ரூபாய் நன்கொடைகளாக வந்து சேர்ந்தது. ஏமாந்ததைத் திரும்பப் பெறுவதற்கான போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டே இருக்க இடைபட்ட காலத்தில் அவர்களுக்கு உதவுவது அவசியம் என்ற பட்டறிவும் ஈரமும் அவனுக்கிருந்தது.

ஊதாரித் தனமான செலவு, தாறுமாறான முதலீடு , முதலே இல்லாமல் கம்பெனியைத் துவங்கியது போன்றவையே வங்கி திவாலானதற்கு காரணமென்று ரீட் சொன்னார்.

“தன் பணத்தைச் சூதாடுகிறவனையே கோர்ட்டில் தண்டிக்கிறார்கள். அன்னியர் பணத்தைச் சூதாட்டம் போன்ற முயற்சிகளில் செலவிடுவோரை சும்மா விடுவது நியாயமாகுமா?” என்று “இந்தியா” வில் எழுதினான் பாரதி.

ஆர்பத்நாட் சிறைக்குப் போனான்.

இப்போது சுதேசி வங்கி ஒன்றின் தேவை குறித்து யோசித்தான் பாரதி. பம்பாயில் அது அப்போது சாத்தியப் பட்டிருந்தது.

இதில் பாரதியை ஈர்த்தது என்னவெனில் ஒருக்கால் சுதேசி வங்கி திவால் ஆனாலும் பணம் முழுக்க நம் மண்னிற்குள்ளேயே இருக்கும் என்பதுதான். மண்ணின் ஒரு துரும்பும் மண்ணைத் தாண்டக் கூடாது என்று அந்தக் காலத்தில் போராடியிருக்கிறார்கள். இன்றோ ஊசி பாசி உருளைக் கிழங்கு முதல் ராக்கெட் வரை சகலத்திற்கும் அந்நியனுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

“இந்திய பாங்க்” என்று வரவேண்டிய வங்கிக்கு பெயரும் வைக்கிறான்.

இதே நேரத்தில் இதே கருத்தை “இந்தியன் பேட்ரியாட்” இதழில் திரு கோவிந்த தாஸ் அவர்கள் எழுதுகிறார்,

பாரதி கொண்டாடி எழுதுகிறான். 10.11.1906 “இந்தியா” வில் எழுதினான்,

“சென்னையிலே ஓர் இந்திய பாங்க் ஸ்தாபிக்கப் பட வேண்டியதன் அவசியத் தன்மை பற்றி நாம் பல முறை பேசியிருக்கின்றோம்.

இப்போது சென்னையிலே முக்கிய தனவந்தரும் மிகுந்த செல்வாக்குடையவருமாகிய ஸ்ரீ லாட் கோவிந்ததாஸ் “இந்தியன் பேட்ரியட்” பத்திரிக்கையிலே ஒரு கடிதம் எழுதியிருப்பதில் மேற்கண்டவாறு ஒரு பாங்க் ஸ்தாபிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருப்பதை மிகவும் மகிழ்வுடன் படித்தோம்.

வெறும் வாய்ப் பேச்சுக்காரர் முயற்சியிலே ஒரு பாங்க் ஸ்தாபனமாகி விடாது.

ஆதலால்,

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்தும், அந்நிய பாங்கிகளிலே கொட்டி வைத்தும் இருக்கும் சுதேசிகள் எல்லாம் உடனே கண் விழித்து கோவிந்த தாசருக்கு கடிதங்கள் எழுதிக் காரியங்களைப் பக்குவத்திற்கு கொண்டு வர வேண்டும்”

பாரதியின் கனவு ஒரு வழியாக மெய்ப் பட்டது. 02.12.1906 அன்று “இந்தியா பாங்க்” அமைப்புக் கூட்டம் நடந்தது.

08.12.1906 “இந்தியா”வில் பாரதி எழுதினான்,

சென்னையில் ஒரு சுதேசி பாங்க் ஸ்தாபிக்கும் அவசியத்தைக் குரித்து மகா ஜன சபையிலே சிலர் கூடி ஆலோசித்ததில் ஒரு பங்கு 500 ரூபா வீதம் 4000 பங்குகள் சேர்த்து, 20 லட்சம் ரூபாய் மூலதனம் உண்டாக்க திவான் பகதூர் ராஜரத்தின முதலியாரும், திவான் பகதூர் ஆதி நாராயய்யாவும், மிஸ்டர் சீதாராம் செட்டியும், மிஸ்டர் அண்ணாமலை செட்டியும், மிஸ்டர் சுந்தரம் அய்யரும், மிஸ்டர் முரளி தாஸும், மிஸ்டர் நடேச அய்யரும், மிஸ்டர் முத்தையா செட்டியும், மிஸ்டர் வெங்கடாசலம் செட்டியும், - ஒரு கமிட்டியாய் நியமிக்கப் பட்டார்கள்.

மிஸ்டர் சுந்தர அய்யரும், மிஸ்டர் முத்தையா செட்டியாரும்., மிஸ்டர்சீனிவாச அய்யரும் தற்காலத்துக்கு கமிட்டிக் காரிய தரிசிகளாய் நியமிக்கப் பட்டார்கள்.”

ஆக, தமிழ் மண்ணில் முதல் சுதேசி வங்கி உருவானதில் பாரதியின் பங்கு மகத்தானது.

ஒன்று சொல்ல வேண்டும்,

அது கோவிந்த தாஸன்கள் காலம். சுதேசி வங்கிகளைத் தோற்றுவித்தார்கள்.
இது ”கோவிந்த வாசன்”கள் காலம். அசந்தால் சுதேசி வங்கிகளை முற்றாய் முழுசாய் அந்நியர்களுக்கு விற்று விடுவார்கள்.

கொஞ்சம் விழிப்போடே இருப்போம்.

கட்டுரைக்கு பெரிதும் உதவியவை;

1)சீனி.விசுவநாதன் எழுதிப் பதிப்பித்த “ மகாகவி பாரதி வரலாறு”
2)விக்கி பீடியா இணைய தளம்
3)23.10.1906 ஆன் நாளிட்ட ஹிந்து நாளிதழ்
4) www.arbuthnot.org/crash_of_arbuthnot.html








Saturday, August 25, 2012

“வேணாண்டா வெள்ள மாத்திர”

“ வேணாண்டா
வெள்ள மாத்திர

அடக்
கண்டதுக்கெல்லாம்
முழுங்கி முழுங்கி
தொண்டையும் புண்ணா போச்சுதே

அட
வேணாண்டா
வெள்ள மாத்திர”

முன்பெல்லாம் த மு எ ச கலை இரவு மேடைகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது.

தொடங்கியதுமே ஜனத்திரள் வெடித்துச் சிரித்து கைதட்டி ஆர்ப்பரிக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது சுவைத்த பாடல் அது. அந்தப் பாடல் அவ்வளவு தூரம் ஜனங்களிடம் போய் சேர்ந்தமைக்கு அன்றைய தினத்தில் அரசாங்க மருத்துவ மனைகளில் வழங்கப்பட்ட “த.அ” வெள்ளை மாத்திரைகளே காரணம்.

தலை வலின்னு போனாலும், வவுத்து வலின்னு போனாலும், குளிர் காச்சல்னு போனாலும் அதே வெள்ளை மாத்திரையையே மாற்றாமல் கொடுக்கிறார்களே என்று மக்களிடம் இருந்த அயர்வு கலந்த சலிப்பே அந்தப் பாடலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

“த” னா “ அ “னா என்னா தெரியுமா? தானா ஆனாதான் உண்டு. இந்த மாத்திரையால ஒன்னும் ஆகாது என்று அர்த்தம் என்று அப்போதைய கலை இரவு பேச்சாளர்களில் பெரும்பான்மையோர் பலத்து வெடிக்கும் ஆரவார்த்திற்கு இடையில் பேசுவது வழக்கம். நானும் ஒரு இருபது கலை இரவு மேடைகளிலாவது இதை பேசியிருப்பேன்தான்.

அந்த அளவுக்கேனும், “ த” னா “அ”  னா மாத்திரைகளோடேனும் இன்றைக்கு இருக்கிற அளவில் அரசு மருத்துவ மனைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பதற்கு சன்னமான அளவிற்கேனும் நம்பிக்கை தரக்கூடிய பதில் தட்டுப்பட மறுக்கிறது.`

அரசு மருத்துவ மனைகளின் அவசியம் குறித்து ஆக சமீபத்தில் உணர ஒரு வாய்ப்பு கிட்டியது.

“உங்க அப்பா செத்துக்கிட்டு இருக்கார், சார். நேரம் கடத்திப் பயனில்லை. இன்னும் பத்து நிமிடங்களுக்குள் அவரை தியேட்டருக்குள் கொண்டு போக வேண்டும்”

என்று மருத்துவர் சொன்னபோது கேட்டேன்,

“எவ்வளவு சார் ஆகும்”

அவர் சொன்ன மாத்திரத்தில்,

“சரிங்க சார், அழைத்து செல்லுங்கள்”

அழைத்துச் சென்றார்கள். ஒரு மணி நேரத்திற்கெல்லாம், செத்துக் கொண்டிருந்த என் தந்தையை உயிரோடு எங்களிடம் எங்களிடம் ஒப்படைத்தார்கள்.

என்ன,

மூன்று வட்டிக்கு ஒரு ஐம்பது , இரண்டு வட்டிக்கு ஒரு லட்சம், கைவசம் இருந்த ஐம்பது போக நண்பர்கள் கைமாற்றாய் கொடுத்த நாற்பது எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆக கையில் இல்லாவிட்டாலும் புரட்ட முடிந்தது என்பதால் அப்பா இன்று எங்களோடு இருக்கிறார். புரட்ட முடியாது போயிருப்பின் அப்பா படமாகி ஐந்து மாதங்களாகியிருக்கும்.

அதற்கு அடுத்த நாள் தம்பி விஷ்ணுபுரம் சரவணனோடு பேசிக் கொண்டிருந்தேன்,

“எல்லா அப்பாவும் அப்பாயில்லையா சரவணன்?”

“ அப்பான்னா அப்பாதான். ஏண்ணே?”

“ஒருக்கால் புரட்ட முடியாதவனோட அப்பான்னா செத்துட வேண்டியதுதானா, சரவணன்?”

“வேற வழி, சாக சாகப் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்”

உடைந்தார்.

அவரது தந்தைக்கும் அப்பாவிற்குன் வந்ததுபோல் ஏதோ ஒரு நோய் வர புறட்டவும் முடியாது போகவே வேறு வழியேயின்றி ஏதோ அவரை திருப்தி படுத்துவதற்காக மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து அவர் பையப் பைய மரணிப்பதை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

உடைந்தேன்.

முடியாத எல்லா அப்பாக்களும் எல்லா அம்மாக்களும் காப்பாற்றப் படவேண்டும் எனில் பொது மருத்துவ மனைகள் பலுகிப் பெருக வேண்டும்.

ஆனால் இருக்கிற மருத்துவ மனைகளைக் காப்பாற்றவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. புதுச்சேரி ஜிப்மர் சற்றேரக்குறைய பணம் கட்டி வைத்தியம் பார்க்கும் அரசு மருத்துவ மனையாகிப் போய்விட்டது.

 இந்த மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்க முடிவெடுத்த போதிலிருந்தே பிருந்தா காரத் மாநிலங்களவையில் இந்த மருத்துவனையைக் காப்பாற்ற போராடியதையும், மார்க்சிஸ்ட் கட்சியினர் அதற்காக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களையும் நன்றியோடு கொள்ளவே வேண்டும்.

இது ஒரு புறமிருக்க “ மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக 01.07.2012 தினமலர் கூறுகிறது.

“சுகாதாரக் குறியீடுகள் மோசமாகவே தொடர்கின்றன” என்றும் அவர் கூறியதாகவும் தினமலர் தொடர்ந்து சொல்கிறது.

“ பிரசவ கால மரணங்களும், சிசு மரணங்களும் தனக்கு மிகுந்த கவலையைத் தருவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.

இவற்றை காரத்தோ, அத்வானியோ சொன்னால் அதில் ஒரு அர்த்தமுண்டு. பிரதமரே இப்படிப் பேசுவது என்பதுதான் எவ்வளவு முயன்றும் பிடிபட மறுக்கிறது.

சிசு மரணங்கள் குறித்து கவலையைப் பதிவதோடு ஒரு சராசரி குடிமகனே நிறுத்திக் கொள்ளக் கூடாது. போதிய மருத்துவ சிகிச்சையின்றி இறந்து போகும் குழந்தைகளில் எத்தனை பகத்களோ, எத்தனை பாரதிகளோ, எத்தனை அன்னை தெரசாக்களோ?

பிரதமர் இப்படி கவலைப் படுவதோடு தனது கடமையை சுறுக்கிக் கொள்வதை எதிர்த்து மக்கள் திரண்டு போராட வேண்டும்.

அவரது வேதனைகளிலேயே மிகவும் ஆழமான வேதனை இதுதான். அவர் சொல்கிறார்,

“இன்றைக்கும் மருத்துவ செலவுகளுக்காக, மூன்றில் இரண்டு பங்கு தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது”

மக்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி மருந்து வாங்குவது குறித்து நானோ நீங்களோ கவலைப் படுவதில் பொருளிருக்கிறது. ஆனால் மருந்து வாங்குவதற்காக மக்கள் கடன் வாங்குவதைப் பார்த்து ஒரு பிரதமர் கவலைப் படுவதாகக் கூறுவது கூட ஏழை மக்கள் மீதான அவரது நக்கல் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

அவர் எதற்கு விசனப் பட வேண்டும்? ஊர் ஊருக்கு மருத்துவ மனைகளைத் திறந்து மருத்துவத்தை ஒரே கை எழுத்தில் பொதுப் படுத்தி ஏழை எளிய மக்களை கடன் வலையிலிருந்து மீட்க சர்வ வல்லமையுள்ள பிரதமர் இப்படிப் பேசுவதை மிக வன்மையாக கண்டிக்கவே வேண்டும்.

போக இப்படி கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் பல சமயங்களில் கிலோமீட்டர் வட்டிக்கும் கடன் வாங்கும் மருந்துகளில் , அதுவும் குழந்தைகளுக்கான “ஃப்ரீ ப்ரோ கிட், மற்றும் லேக்டோபாசில்” போன்ற தர நிலையற்ற மருந்துகள் விற்கப் படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்திருப்பதாய் 22.08. 2012 “தீக்கதிர்” சொல்கிறது.

அமீர்கான் எழுதியதை மொழிபெயர்த்துள்ள “ தமிழால் இணைவோம்” என்ற இணைய குழுமம்,

”சர்க்கரை நோய்க்கு என்ன மருந்து தருவாய்? என தேர்வில் கேட்கப் படும் கேள்விக்கு மருத்துவ மாணவர் “GLIMEPRIDE" என்று பதில் எழுதுகிறார்.
இது சர்க்கரை நோயாளிகளுக்கு தரப்படும் உப்பு. பத்து வில்லைகள் கொண்ட அட்டையின் விலை இரண்டு ரூபாய்.

ஆனால் அதே நபர் மருத்துவர் ஆனதும் சர்க்கரை நோயாளிக்கு “ AMARYL" என்ற மருந்தினை பரிந்துரைக்கிறார்.  மேற்சொன்ன இரண்டின் பெயர்கள்தான் வேறே தவிர இரண்டும் ஒன்றுதான்.

ஒரே வித்தியாசம் மேலே சொன்ன "glimepride"  இரண்டு ரூபாய். கீழே உள்ள "amaryl"   நூற்றி இருபத்தி ஐந்து ரூபாய்.

"CENTRIZINE" என்பதும் “ CETZINE" என்பதும் ஜலதோசத்திற்கான வேறு வேறு பெயர்களைக் கொண்ட ஒரே மருந்துகள். ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா விலையுள்ள “:cetrizine" ஐ தவிர்க்கும் மருத்துவர்கள் முப்பத்தி ஐந்து ரூபாய் விலையுள்ள”cetzine" ஐயே பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள்.

மட்டுமல்ல "STREPTOKINASE" மற்றும் "UROKINASE" ஆகிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாரடைப்புக்கான மருந்துகள் வேறு பிராண்டுகளில் ஐயாயிரம் ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப் படுகின்றன”

என்று அமீர்கான் எழுதியுள்ளதாக சொல்வதை எளிதாக கடந்து போக முடியவில்லை.

 “ வடகிழக்கு கிராமப் புறங்களில் இரண்டாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தொடர்வது தமக்கு கவலை அளிப்பதாகவும், ஒரு மருத்துவருக்கு குறைந்த பட்சம் மூன்று செவிலியர்களேனும் தேவை என்ற நிலையில் இரண்டு மருத்துவர்களுக்கு மூன்று செவிலியர்கள் என்ற நிலை நீடிப்பதிலும் தாம் தாங்கொன்னாத கவலையோடிருப்பதாவும்” சொல்லியிருக்கிறார்.

இவர் இப்படி சொல்வதால் ஏதோ தெற்கில் மேற்கில் எல்லாம் போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் இருப்பதாக் கொள்ளக் கூடாது. இங்கும் சற்றேரக் குறைய அதே நிலைமைதான் என்பதை உள்வாங்க வேண்டும்.

ஒரு பிரதமர் இவ்வளவு புலம்புவது தேவையே இல்லை. சொடக்குகிற நேரத்தில் வணிகர்களிடமிருந்து மருத்துவத்தை தனது நேரடி நிர்வாகத்தில் கொண்டுவர முடியும் அவரால். ஆனால் செய்ய மாட்டார். காரணம் முதலாலிகள் விடமாட்டார்கள். அவர்களிடம்தான் இவர்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்.

ஆனாலும் அவருக்கு சொல்லி வைப்போம். ஏழைகளின் உயிர் மீது கொஞ்சம் அக்கறை வையுங்கள்.

அவர்களிடம்தான் உங்களுக்கான வாக்குகள் இருக்கின்றன என்பதற்காகவேனும்.
 











Thursday, August 9, 2012

”ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள்”

“சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
 இனிதென மகிழ்ந்தன்றும் இலமே”

இதை கனியன் எழுதி ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்திருக்கும்.

சாவது எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. என்ன செய்தேனும் வாழ்வை நீட்டிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை. சாதல் என்ற ஒன்று இருப்பதை உணர்ந்தே வாழ்க்கையைத் துவக்கினோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை என ஏற்பதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பிறப்பிற்கும் சாவிற்கும் இடைப்பட்ட காலத்தில் உருப்படியாய் நம் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறோம் என்பதையே நம் வாழ்க்கையின் அளவாக கொள்கிறோம்.

வாழ்க்கையை, சாவைப் பற்றி வேறெந்தச் சமூகம் இந்த அளவிற்கு யோசித்திருக்கிறது என்று தெரியவில்லை.

“சாதலும் புதுவது இலமே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே”

என்கிற வரிகளுக்கு இப்போது ஒரு தமிழ் இளைஞன் பொழிப்புரையை உண்ணாதிருந்து எழுதிக் கொண்டிருக்கிறான்.

இனவெறி பிடித்ததும், அதன் விளைவாக ஒரு இனத்தை வேரோடு அழித்தொழிக்கும் முயற்சியில் பெருமளவு வெற்றி பெற்றும், அப்படியும் பசி அடங்காமல் மிச்சமிருக்கிற தமிழர்களைக் கொன்றழிக்க தொடர்ந்து முயன்றும் வருகிற இலங்கை அரசு அனுப்பியுள்ள இலங்கை விளையாட்டு வீரர்களை இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க அனுமதிக்கக் கூடாது என்பது அவனது முதல் கோரிக்கை.

அது இந்த நேரத்திற்கெல்லாம் நிறைவேறாது போனது வேறு விசயம்.

ஆனால் அதில் உள்ள நியாங்களை அரைக்காலே வீசம் அளவிற்கு சுய நினைவு இருப்பவனாலும் தள்ளிவிட முடியாது.

இதை அவன் சொல்லும்போதும் அதில் உள்ள நியாயங்களை நாம் சொல்லும்போதும் சொல்கிறார்கள்,

“விளையட்டை விளையாட்டாப் பாருங்க தோழர், விளையாட்டு இணைப்பதற்காக, பிரிக்கிற வேலைக்கான உங்கள் அரசியலை இதில் திணிக்காதீர்கள்,ஆமாம்.”

 நிற வெறியோடு ஆட்டம்போட்டமைக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப் பட்டிருந்த தடை நியாயம் என்றால் இனவெறியோடு சதிராடும் இலங்கைக்கு எதிராக சிவந்தன் கேட்கும் தடை ஆயிரம் மடங்கு நியாயம் கொண்டது.

ஜூலை மாதம் இறுதியில் ஒரு நாள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த இருபத்தி மூன்று தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை வன்மத்தோடு பிடித்துச் சென்று இம்சித்து சிறை வைத்தது.

இதை எதிர்த்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது. சமீப காலத்தில் எனக்கு மிக அதிகமாக ஆறுதல் அளித்த ஒரு விசயம் இது. அப்போது இடது சாரிகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை உச்ச நிலையில் நின்று பல நேரங்களில் தவறாகவும் கொஞ்சம் விசமத்தோடும்கூட எழுதுகிற வழக்கம் கொண்ட “தினமலர்”  “இவரும் ஒரு அரசியல்வாதிதான்” என்று எழுதி அந்தப் போரட்டத்திற்கு ஒரே ஒரு தோழரோடு எந்த வித பந்தாவும் இன்றி மிக எளிமையாக நடந்து வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜி.ராமக்கிருஷ்ணன் அவர்களது படத்திப் போட்டிருந்தது

இந்தப் பத்தியை நான் எழுதியது எனது சொந்த விருப்பத்தின் பொருட்டே ஆகும்.உலகில் நடக்கும் அநீதிகளுக்கெல்லாம் எதிராக எந்த வித தியாகத்தின் விளிம்புவரைக்கும் சென்று போராடுகிற, மிக எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக் காரர்களாகத் திகழக் கூடிய தலைவர்களை உள்ளடக்கிய இந்த இயக்கம் ஈழப்பிரச்சினையை ஒரு இன அழிப்புப் பிரச்சினையாக கையில் எடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கும் உண்டு. மட்டுமல்ல அவர்கள் இதை கையெடுக்கும் பட்சத்தில் இன அழிப்பிற்கெதிரான இயக்கம் வலுப்பெறும் என்றும் நான் நம்புகிறேன்.

அந்த இருபத்திமூன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்து மீறி நுழைந்து பிடித்துச் சென்றதற்கு அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடந்த இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா அடைந்த பெரு வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாததன் விளைவுதான் என்றும் சொல்லப்படுகிறது. மட்டுமல்ல இந்தியா தொடரை வென்ற நாளில் இருந்து கடலுக்குள் போகும் மீனவர்கள் மிகுந்த அச்சத்தோடே போவதாகவும் கடலுக்குள் போகும் மீனவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஜூலை இருபத்தி நான்காம் தேதி தினகரனில் ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி சேகர் ‘ இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோருகிறார்.

ஏற்கனவே உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுவது உறுதியானபின் ஒருக்கால் அந்தக் கோப்பையை இலங்கையை வென்றிருக்குமானால் அதை தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க இருந்தார்களாம்.

நல்ல வேளை தோற்றார்கள். அதன் விளைவு நான்கு தமிழ் மீனவர்களைக் கொன்று குவித்தார்கள்.

இவ்வளவிற்குப் பிறகும் “ விளையாட்டை விளையாட்டாய்ப் பாருங்கள் தோழர்” என்று நம் முன்னே வைக்கப் படும் கருத்துக்களை நம்மால் ஏற்பதற்கு இயலவில்லை.

இதே லண்டனில் இருந்துதான் பேச வரவழைத்திருந்த கூட்டத்தில் பேச வேண்டாம் என்று சொல்லி ராஜபக்‌ஷேவைத் திருப்பி அனுப்பியது இங்கிலாந்து அரசு. மைனஸ் அளவில் இருந்த குளிரையும் தாண்டி தெறித்த தமிழ்த் திரளின் கோவக் கொதி நிலையை அது அங்கீகரித்தது.

ஆனால் ஒலிம்பிக் என்பது இங்கிலாந்து மட்டும் சம்பந்தப் பட்ட ஒரு விஷயமல்ல. அனைத்து தேசங்களும் உள்ளடங்கிய அமைப்பு சம்பத்தப்பட்ட விசயம் என்பதால்தான் அனைத்து தேசங்களின் கவனத்தையும் இது விசயத்தில் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த இளைஞன் ஏறத்தாழ இருபது நாட்களாக உண்ணாதிருக்கிறான்.

பெரிதாய் எதையும் சாதித்துவிடுவோம் என்ற எந்தவிதமான மிகை நம்பிக்கையும் சிவந்தனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் மிகச் சரியாய் சொல்கிறான்,

“ ஈழமக்களின் பிரச்சினை மீது சர்வ தேசத்தின் கவனத்தைத் திருப்பவே எனது இந்தப் போராட்டம்.”

உலகில் எங்குமே காண இயலாத ஒரு விசயம் இந்தத் தமிழ் இனப் படுகொலைதான். வரலாற்றில் எத்தனையோ இன அழிப்புகளும் இனப் படுகொலைகளும் பதிவாகி இருக்கின்றனதான். ஆனால் இது அவை எதனோடும் சன்னமாகவேனும் பொருந்திபோகாது தனித்திருக்கும் தன்மை கொண்டது. வரலாற்ரில் பதிவாகி உள்ள எந்த இனப் படு கொலாஇயும் இன அழிப்பும் அதன் அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப் பட்டதல்ல. அப்படி தன் சொந்த மக்களையே கொன்றழித்த ராஜபக்‌ஷேமீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனை நடத்த வேண்டும் என்பது அவனது இரண்டாவது கோரிக்கை.

09.01.2011 அன்று சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ‘பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின்’ தலைவர் நிமல்கா ஃபெர்னாண்டோ பேசியதைஅதே மாதம் பதினாறாம் தேதி வெளியான ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்தது. அதை நினைவு கூர்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது.

“கிழக்கு மாகானத்தில் நல்ல வளங்கள் இருந்த போதும் மக்கள் வேலையின்றி வறுமையில்தான் வாழ்கிறார்கள். இதனால் தமிழ் மக்கள் சொந்த கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி அங்கே இனப் பரப்பல் விகிதத்தை மாற்றி வருகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உருவாகிறது.அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியோடு நடக்கிறது.”

இவர் ஒன்றும் தமிழ்ப் பெண்ணுமல்ல. இன்னும் சொல்லப் போனால் தமிழ் பேசவேத் தெரியாத சிங்களப் பெண். இவர் இப்படிப் பேசி இருபது மாதங்களாகின்றன. இந்தக் காலத்தில் நிலைமை இன்னமும் மோசம் அடையவே செய்திருக்கிறது.

தமிழர் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதே சிவந்தனின் மூன்றாவது கோரிக்கை.

மட்டுமல்ல தமிழ் யுவதிகளை சிங்கள ஆண்களை விட்டு வன்புணரச் செய்து , அவர்களைக் கர்ப்பமாக்குவதன் மூலமும் இன அழிப்பு வேலையை செய்கிறது சிங்கள அரசு.

முள்ளி வாய்க்கால் பொன்ற வதை முகாம்களிலும் சிறைகளிலும் வாடும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது இவனது நான்காவது கோரிக்கை.

அகதிகளாக வருவோரை கருணையோடும், மனிதாபிமானத்தோடும் உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்பது அவந்து இறுதி கோரிக்கை.

நியாயமில்லாத எந்தக் கோரிக்கையையும் அவன் முன் வைக்கவில்லை.

உலகச் சமூகமே சாவின் விளிம்பின் விளிம்பு வரைக்கும் உண்ணாது சென்று கொண்டிருக்கும் அந்த இளைய மகனது கோரிக்கையைக் காது கொடுத்து கேள். சரி எனப் பட்டால் வினையாற்று.

போதும் சிவந்தா,

இன்னும் நீண்டு போகவே செய்யும் இந்தப் போராட்டம். போராட உன்னைப் போன்ற இளைஞர்கள் வேண்டும். விரதத்தை முடி.

மீண்டும், தமிழர்களைப் பார்த்து நிமல்கா சொன்னதை நினைவு கூர்வது அவசியம்,

“ நடந்ததை மறந்து விடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது.போரில் அழிக்கப் பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.”







Wednesday, August 1, 2012

வறண்டாலும் வாழி காவேரி

“ காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை
ஒட்டகங்களே போதும்”

என்று ஒரு முறை தோழர் தணிகைச் செல்வன் எழுதினார்.

“விற்பதற்கு 
சிலம்பிருந்த காரணத்தினால்
என்னை விற்கவில்லை
கோவலனின் 
குணம் புரிந்ததா?”

என்று கண்ணகி சொல்வதாய் தோழர் எழுதியபோது எவ்வளவு கொண்டாடினோமோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இதற்கும் கொண்டாடி மகிழ்ந்தோம். எங்கள் தோழர் எதை எழுதினாலும் அது இப்படித்தான் கொண்டாட்டத்திற்கு உரியதாகவே இருக்கும். “எங்கள் தோழர் தோழர் எழுதி எது தவறாய்ப் போகும்?” என்ற திமிறே உண்டு எங்களுக்கு.

ஆனால் எங்கள் செம்மாந்தத் திமிரில் மண் அள்ளிப் போட்டார்கள் மணல் கொள்ளையர்கள்.

 காவிரியைக் கடக்க ஓடமா? என்று சிலர் நக்கலாய் சிரிக்கக் கூடும். ஆனால் உண்மை அதுதான். நானே சிறு பிள்ளையாய் இருந்த பொழுது குளித்தலையிலிருந்து முசிறிக்கு பரிசலில் போன அனுபவம் உண்டு. இவ்வளவு பாலங்கள் இல்லாத காலத்தில் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு போவதற்கு ஓடங்களே பயன் பட்டன.

ஆனால் அதற்கு ஆற்றில் தண்ணீர் வர வேண்டும். கர்நாடகத்து நதி அரசியல் கறைபட்டு போனதிலிருந்து காவிரியில் தண்ணீர் வராது வறண்டு கிடந்த மணல்பரப்பாய் காவிரி காட்சியளித்தபோது அது தந்த வலியை தனக்கே உரிய எள்ளலோடு தணிகை அப்படி எழுதினார்.

அன்றைக்கு காவிரியில் தண்ணீர் இல்லை. எனவே காவிரியைக் கடக்க ஓடங்கள் தேவைப் படவில்லை. கொதிக்கும் மணல் பரப்பைக் கடக்க ஒட்டகங்கள்தான் பொருத்தமாகப் பட்டது.

ஆனால் இன்றைக்கு அவரது கவிதையையும் பொய்யாக்கிக் காட்டினார்கள் இந்தச் சண்டாளர்கள். “ஒட்டகங்களே போதும் ”  என்று அவர் எழுதிய காலத்தில் காவிரியில் மணல் இருந்தது. மணலே இல்லாமல் கட்டாந்தரையாக காவிரி காட்சியளிக்கும் போது ஒட்டகம் எப்படிப் பொருத்தமாய்ப் போகும்.

  நானும் கூட ஒரு முறை,

“யாரது
ஆடிப் பெருக்கன்று
நடுக்காவிரியில்
ஊற்று தோண்டுவது?”

என்று ஆடிப் பெருக்கன்றும் நீரற்றுக் காட்சியளித்த காவிரி தந்த வலியை எழுதினேன். இன்று ஊற்றுத் தோண்டுவதற்கு காவிரியில் மணலேது? கிணறு வேண்டுமானால் காவிரியில் வெட்டலாம். இப்படியாக என் கவிதையும் பொய்த்துப் போனது. என் கவிதை பொய்த்துப் போனதில் எனக்கொன்றும் வருத்தமெல்லாம் இல்லை. தணிகைக் கவிதையே சாலையைக் கிழித்துப் பறக்கும் மணல் லாரிகளில் நசுங்கும் போது என் கவிதை எம்மாத்திரம்?

எவ்வளவு முயன்றும் கவிதை முழுமையாக சரியாக நினைவிற்கு வரவில்லை. எழுதிய திருவைக் குமரனையும் அலை பேசியில் பிடிக்க இயலவில்லை. 

மணல் காற்றில் பறக்கக் கூடாது என்பதற்காக லாரி மணலில் நீர் ஊற்றுவார்கள். அப்படி ஊற்றப்பட்ட தண்ணீர் போகிற வழியெங்கும் சாலையில் கசிந்து கொண்டே போகும். அந்த நீரின் கசிவை திருவைக் குமரன் “ நதியின் கண்ணீர்” என்பார். ஏனடா கழிசடைகளே என் மணலை கொள்ளையடிக்கிறீர்கள் என்று கதறும் நதியின் கண்ணீராக அது அவருக்குப் பட்டிருக்கிறது.  

ஆடி மாதத்து தமிழ் நாட்டுக் காவிரியை இளங்கோ வர்ணிப்பார்,

“உழவர் ஓதை
மதகோதை
உடை நீர் ஓதை
தன் பதங்கொள் விழவர் ஓதை
சிறந்து ஆர்ப்ப 
நடந்தாய் வாழி காவேரி”

தமிழ் பூமிக்கு வருகிற காவிரியை தமிழகத்து விவசாயிகள் பெரும் சந்தோசக் கூச்சலிட்டும் பெண்கள் குழவி ஒலியோடும் வரவேற்க, மதகு தாண்டி வரும் நீர் மகிழ்ச்சியாய் சளசளவென்று சத்தமிட்டு நடந்து வரும் காவேரி என்கிறார் இளங்கோ.

எவ்வளவு பெரிய விஞ்ஞானக் கூற்று இது. நதி நீர் நடக்க வேண்டும் .ஓடக்கூடாது. னதி நீர் பைய நடந்து போகும் பூமிதான் வளப்படும்.. பயிர் செளிக்கும் , நிலத்தடி நீர் செழித்தோங்கும். ஓடுகிற நீர் விரந்து கடலில் போய் தனது கதையை முடித்துக் கொள்ளும். பூமியும் செழிக்காது நிலத்தடி நீரும் உயராது.

இளங்கோ காலத்தில் நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாறி இப்போது வறண்ட காவேரியாய் மாறியிருக்கிறது.  நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாற மணல் கொள்ளையே காரணம். நீரும் மனிதன் போலத்தான், மணலில் ஓட முடியாது. 

ஒலிம்பிக்கோ, ஆசிய விளையாட்டுப் போட்டிகளோ, எதுவென்று சரியாய் நினைவில்லை அப்போதைய அமைச்சர் காளிமுத்து அவர்கள் எழுதினார்,

“சடு குடு போட்டி 
நடத்த இடம் தேடி அலையாதீர்
இங்கே அனுப்புங்கள்
நீரா இருக்கிறது
 மணல்தானே காவிரியில்” என்று

இப்போது காவிரியில் சடுகுடுவும் விளையாட இயலாது.

ஆடிப் பெருக்கன்று காவிரிக்கு வரும் புது மணத் தம்பதிகள் நீராடி மகிழ்ந்தார்கள். பிறகு ஊற்று தோண்டி தலையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொண்டார்கள். 

இனி ஆடியில் காவிரியில் நீராட வரும் புது மணத்தம்பதிகள் குடங்களில் நீரெடுத்து வர வேண்டியதுதான்.

இன்று ஆடி 18.

நமக்கு கிடைத்த வாய்ப்பு நம் பிள்ளைகளுக்கு இல்லை. இரண்டு மோசமான சக்திகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. 

ஒன்று,
கர்நாடகாவோடு நீருக்காய்

இரண்டு
மணல் கொள்ளையை எதிர்த்து

இதை செய்யாது போனோமெனில் ஆடி 18 கும் ஏப்ரல் ஒன்றிற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது.

  

Monday, July 30, 2012

மயான தர்பார்

ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எங்களூர் சுடுகாடு வரைக்கும் போய் திரும்பவேண்டிய அவசியம் வந்தது.

மாமா இறந்து போனார். ஊரில் பக்கத்து பக்கத்து வீடு.  எங்கள் அம்மாவும் அவரும் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள். நான் மிகச் சின்ன பிள்ளையாய் இருந்த காலத்தில் மனைப் பிரிவினையின் பொருட்டு எங்கள் அப்பா அம்மாவிற்கும் அவருக்கும் நிறைய பிரச்சினைகள். ஏதேனும் ஒரு வாரம் சனியோ ஞாயிறோகூட வராமல் போகலாம் ஆனால் எங்கள் வீட்டிற்கும் அவருக்கும் குறைந்தது வாரம் ஒருமுறையேனும் சண்டை நடந்தே தீரும்.

“வேனாப் பாரேன் நீ நாசாமாப் போயிடுவ” என்று அவரும் எங்கம்மாவும் அடிக்கடி ஒருவரையொருவர் மண்ணை வாரித் தூற்றிக் கொள்வதை எத்தனையோமுறை வேடிக்கை பார்த்திருக்கிறோம்.

அந்த மாமாவின் உயிர்பிரிந்த வேளையில்தான் நான் அவரது கால்களைப் பிடித்தவாறே கண்கலங்கி நின்றேன். அப்போது அழ ஆரம்பித்த என் அம்மா இன்று மாலை நான் வீட்டை விட்டு புறப்படும்வரை அழுதுகொண்டிருக்கிறது.

அவர் உயிர் பிரியும் போது கலங்கியக் கண்களோடு அங்கே இருந்தது அவரது மருமகளைத் தவிர நான், விட்டு, என் அம்மாயி, அம்மா, கிஷோர், கீர்த்தனா.

சதா எங்கள் அம்மா அப்பாவை மண்வாரித் தூற்றி சபித்துக் கொண்டும், சாபத்தை வாங்கிக் கொண்டும் இருந்த மாவை, இன்னும் சொல்லப்போனால் சிறு பிராயத்தில் எங்கள் எதிரியாகவே நாங்கள் பாவித்த மாமாவோடு எப்போது இப்படி ஒரு ஐக்கியம் வந்தது?

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. எங்கள் தாத்தா இறந்தபோது அவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் எங்கள் மாமாதான் கொள்ளி வைத்தார். அவருக்கு நான் கொள்ளி வைக்க முடியாது.ஏனெனில் நான் என் அம்மாவின் மூத்தாள் பெற்ற பிள்ளை. எங்கள் அம்மாவிடம் என்னை விட்டுவிட்டு அவர் கைக்குழந்தையாய் இருந்த போதே போய்விட்டாராம்.

கொள்ளி வைத்ததும் , கொள்ளிவைத்த தனக்குதான் சொத்து வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரமித்துவிட்டார். அதனால்தான் அவருக்கும் அங்கள் வீட்டிற்கும் சண்டை.

ஒரு வழியாய் பஞ்சாயத்து வைத்து பிரச்சினை தீர்ந்த பொழுது சொத்துக்களை எங்கள் அப்பா பெயரில் எழுதி வைத்துவிட்டது எங்கள் அம்மாயி.

ஒரு வாரம் சர்வேயர், அவர் இவர் என்று முகாமிட்டு காட்டையும் வீட்டையும் பிரித்து பட்டா செய்து கொடுத்துவிட்டு சென்று விட்டனர். அது ஒரு கூட்டுப் பட்டா. அன்று முதல் மாமா கோபத்தோடு ஒதுங்கிவிட்டார். சண்டைக் காட்சிகள் ஒரு முடிவுக்கு வந்தன.

பட்டா சரியாக உள்ளதா என்று பார்த்த்போதுதான் அப்பாவிற்கு மாமாவைவிட 40 செண்ட் காடு அதிகமாகப் பிரிந்திருப்பதைக் கண்டு பிடிக்கிறார்.

உடனே பட்டாவை எடுத்துக் கொண்டு மாமா வீட்டிற்குப் போகிறார். மாமா பேசவே இல்லை. “ வாங்கண்ணா” என்று அத்தை மட்டுமே அழைத்து உட்கார வைக்கிறார்.

“இல்லம்மா, பிரிச்சப்ப எனக்கு நாத மணிய விட 40 செண்ட் கூட ஒதுங்கிடுச்சு. அவர்ட்ட சொல்லி என்றைக்கு வசதிப் படும்னு கேளு. 20 செண்ட்டை எழுதிக் கொடுத்திடறேன்.”

சொன்னமாதிரியே எழுதிக் கொடுத்தார். அன்று இணைந்தார்கள். அதன் பிறகுஅவரது மரணம் வரைக்கும் நல்ல மைத்துனராக , நண்பனாக அப்பாவோடு வாழ்ந்தார்.

அதன் பிறகு நேற்றுவரை எங்களது தாய் மாமாவாய் மூழுதாய் செய்து தீர்த்திருக்கிறார்.

முழுச் சுய நிணைவோடு இல்லாத எங்கள் அப்பாவை அவர் சகித்துத் தாங்கிய அந்தப் பெருந்தன்மைக்கே நானும் என் குடும்பமும் அவருக்கு கடமைப் பட்டிருக்கிறோம். பெரிய சோகம் என்னவெனில் மாமா இறந்து போனது அவருக்கு முழுதுமாய் பிடிபட வில்லை.

“அப்பா நேரா நேரத்துக்கு மாத்திரை சாப்பிடனும். மாமாவப் பார்த்தீங்கள்ள”

“அவரு சளிய கவனிக்கலடா. நாந்தான் சளி வந்தா சிந்தீடறேனே”

இதுதான் எங்கள் அப்பா.

அவரு சளிய கவனிக்கலடா என்கிற போது இருந்த அழுத்தம் அடுத்த வரியிலேயே காணாமல் போய்விடுகிறது.

நல்ல சுய நினைவு இருந்த ஒரு புள்ளியில்

“மாமாவ எரிச்சிடாதீங்கடா. குழியில வச்சுடுங்க. நான் போனப்புறம் அவரோட பக்கத்துல வச்சுடுங்க.”

சுடுகாடு போனோம். புதைத்தோம்.

வழக்கம் போல் சுடுகாடு தர்பார் தொடங்கியது.

முன்பெல்லாம் தப்படித்த தோழர்களும், சலவைத் தோழர்களும், துப்புறவுத் தொழிலாளித் தோழர்களும், முடிவெட்டும் தோழரும் அந்த சபைனரின் காலில் விழுது ஊதியத்தினைப் பெறுவது வழக்கம்.

அந்தச் சபையில் 16 வயது பையனும் இருப்பான். அவனை உள்கொண்ட சபையின் காலில் விழுந்து வணங்குபவர்களில் 65 வயதுக்காரரும் இருப்பார்.

இப்போது நிறைய மாறியிருந்தது.

சபையினரின் கால்களில் விழத் தேவை இருக்கவில்லை. கெஞ்சி கூலியை உயர்த்திக் கேட்கத் தேவை இருக்க வில்லை. சபையினரிடம் இருந்து மரியாதைக் குறைச்சலான வார்த்தைகள் இல்லை.

ஒவ்வொருவரும் அழைக்கப்பட்ட போது துண்டேந்தி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

அடுத்த நாள் காலை அப்பா மாமா வீடு போய்விட்டார்.

“ஏம்மா பத்மா, நாதமணி வந்தாச்சா. எங்க அவரு?”

படு இயல்பாய் கேட்டிருக்கிறார்.

இவரது நிலைக்காகவும் சேர்த்து அழுதுகொண்டே பத்மா அப்பாவைக் கொண்டு வந்து விட்டது.

நான்கு விஷயங்களுக்காக நான் அழுகிறேன்,

1) மாமாவின் மரணம்

2)அப்பாவின் நிலை

3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்

4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்


Sunday, March 25, 2012

உசிர் வேண்டும் முதலில்

ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இது ஒன்றும் முற்றான முடிவல்ல என்பதும், முழுமையான வெளிச்சத்தை, வாழ்தளத்தை, நியாயத்தை, நிவாரணத்தை ஈழத் தமிழர்களுக்கு இது தேவையான அளவு வழங்கிவிடாது என்பதும் மிக நன்றாக தெரிந்த போதும் நல்லவிதமான முடிவிற்கு வந்திருக்கிறது என்றே இதனைக் கொள்ள வேண்டும்.


கடந்த சில வாரங்களாக தமிழ் மக்கள் தங்கள் சொந்த ஊரின் பெயரை உச்சரித்ததை விடவும் “ஜெனிவா” என்ற பெயரைத்தான் அதிகம் உச்சரித்தார்கள்.

ஒரு வழியாக மார்ச் 22 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை குழு கூட்டத்தில் 24 நாடுகள் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை ஆதரித்தும்,15 நாடுகள் எதிர்த்தும் மலேசியா உள்ளிட்ட எட்டு நாடுகள் ஓட்டெடுப்பில் இருந்து விலகி நின்றும் தங்களது முகங்களைக் காட்டின.

ஐ.நா சபை அமைத்த குழு கொடுத்த பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வில்லை என்பதால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இந்த தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை. இலங்கை அரசு தானே நியமித்த “ கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம்”  பரிந்துரைத்த குறைந்த பட்ச நிவாரணங்களைக் கூட நிறைவேற்ற மனம் கொள்ளவில்லை. அதை நிறைவேற்ற ஐ. நா மனித உரிமைக் குழு இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதே அமெரிக்கா முன் வைத்த தீர்மானத்தின் சாரம்.

பொதுவாகவே எந்த அரசாயினும் ஒரு ஆணையத்தை நியமிக்கும் பொழுது தான் விரும்புகிற ஒரு அறிக்கையைத் தரக்கூடிய நபரைத்தான் தேடித் தேர்ந்தெடுத்து தலைவராக்கும். அதைத்தான் இலங்கையும் செய்தது.

எவ்வளவுதான் கவனமாக அரசு சொன்னது மாதிரியே அறிக்கையை தயாரித்தாலும் அதையும் கடந்து சில நல்லதுகள் தப்பித் தவறி அறிக்கையில் கசிந்துவிடவும் கூடும். ஆனாலும் அத்தகைய கசிவுகள் எந்த சேதாரத்தையும் அரசுக்கு தந்துவிடாத வன்னம் கவனத்தோடுதான் பரிந்துரைக்கப் பட்டிருக்கும். இலங்கை அரசு நியமித்த இந்த குழுவின் அறிக்கையிலும் இப்படித்தான் ஒன்றிரண்டு நல்லதுகள் வந்திருந்தன. அதை செய்வதற்குத்தான் ஐ. நா வரைக்கும் போக வேண்டி வந்தது.

போரின் போது காணாமல் போனவர்கள், சிறை பிடிக்கப் பட்டவர்கள், கடத்தப் பட்டவர்களைப் பற்றி போகிற போக்கில் கொஞ்சம் கவலைப் பட்டது அந்த அறிக்கை. அவரவருக்குரிய நிலங்களை அவரவர்களிடம் ஒப்படைக்க சொன்னது.  ராணுவ மயமாக்கலை கொஞ்சம் கட்டுப் படுத்த வேண்டும் என்றும் சொன்னது. இவ்வளவுதான்.

இதைக் கூட செய்ய மறுக்கும் இலங்கையை இந்தக் குறைந்த பட்ச பரிந்துரைகளையாவது நிறைவேற்றுங்கள் என்று சொல்வதுதான் பெரீஸ் அவர்களுக்கு மனித உரிமை கௌன்சில் எதற்காக உருவானதோ அதற்கு எதிரானதாகத் தெரிகிறது.

நம்மைப் பொருத்தவரை சோளப்பொறி அளவுகூட இதை ஒத்துக் கொள்ள முடியாதுதான். சோளப் பொறியை கையிலெடுக்கும் போது சிதறி விழும் சன்னமான கண்ணுக்குத் தெரியாத சிறு துகளின் அளவை விடவும் ஆயிரம் மடங்கு குறைவான ஒன்றாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.

வாக்களித்த நாடுகளும் ஒதுங்கி நின்ற நாடுகளும் இனி இது விஷயத்தில் கூர்ந்து உள்சென்று முள் வேலி மக்கள் இழந்த எதையும் மீளப் பெறும் வகையில் ஒரு நிர்ப்பந்தத்தை இலங்கை மீது செலுத்த வேண்டும்.

தமிழ் மண்ணில் நிகழ்ந்த எழுச்சியும் ,இதை செய்யாமல் போனால் உலக அளவில் அம்பலப் பட்டுப் போவோம் என்கிற அச்சமுமே இந்தியாவை இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு உந்தித் தள்ளியது. 

ஆனால் இந்த அளவுக்கான ஒரு முன்னேற்றத்தைக் கூட நம்மால் கூடங்குளம் விஷயத்தில் எட்ட இயலவில்லை. அண்ணா ஹசாரேயை ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள் உதயக்குமாரை எதிர் விதமாய் அணுகுவதில் என்ன அரசியல்? உதயக்குமார் ஹசாரேயைப் போல் அல்லாமல் தமிழனாய் இருப்பது தானா? விடுங்கள், நமக்கின்னும் ஓய்வற்ற வேலை இருக்கிறது என்பதையே இது சொல்கிறது.

இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பெரீஸ் அது குறித்து தனது கருத்தினை வைத்திருக்கிறார்.

”கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று ஒரு வழக்கு உண்டு. அபத்தம் என்னவெனில் மீசையை மழுங்கச் சிறைத்தவன் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவதுதான்.

15 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்துள்ளன, 8 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. ஆக இந்தத் தீர்மானத்தை ஆதரிக்காத நாடுகளின் எண்ணிக்கை 23. தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகள் வெறும் 24 தான். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது என்பது போல பேசியிருக்கிறார்.

ஒரு வாக்கா இரண்டு வாக்கா என்பதல்லல்ல பிரச்சினை. தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது.

8 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை, ஆகவே தீர்மானத்தை ஆதரிக்காத நாடுகள் 23 என்று அவர் சொல்கிறார். ஒன்றை அவர் வழக்கம் போல மரைக்கப் பார்க்கிறார். 8 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அந்த 8 நாடுகளும் தீர்மானத்தை எதிர்க்கவும் இல்லை என்பது.

அப்படிப் பார்த்தால் தீமானத்தை ஆதரித்த நாடுகள் 24 எதிர்க்காத நாடுகள் 8 , ஆக தீர்மானத்தை எதிர்க்காத நாடுகளின் எண்ணிக்கை 32 என்றும் கொள்ள முடியும்.

இந்தத் தீர்மானத்தை இந்தியாவோ அல்லது க்யூபாவோ கொண்டு வந்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்போம்.

இந்தியாவை ஆதரிக்க வைப்பதற்குள் நமக்கு முதுகே ஒடிந்து போனது. க்யூபா இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததைத் தான் இன்னமும் ஜீரணிக்க இயலாமல் தவித்துப் போகிறோம். ஒருக்கால் அமெரிக்கா ஆதரிப்பதால் இதை க்யூபா எதிர்த்ததா?

மக்கள் சீனத்திற்கு மக்களை விடவும் சந்தை பெரிதாகிப் போனதா?

 நாளைக்கு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடுக்குமானால் நிச்சயமாக அதை எதிர்த்து தமிழ்க் கருத்தும் தமிழ்க் கரங்களும் உங்களோடு எந்தத் தயக்கமும் இன்றி இணையவே செய்யும்.

தீர்மானத்தை முன் மொழிகிற ஒரு அரிய வாய்ப்பினை தவற விட்டு அந்த வாய்ப்பினை அமெரிக்காவிற்கு வழங்கியதன் மூலம் அமெரிக்காவின் கரம் பற்ற வேண்டிய ஒரு நிலைக்கு எங்களைத் தள்ளிய குற்றத்தை நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள்.

இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கும் முன் ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கீழ்க் காணும் பதிவினை எழுதியிருந்தேன்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு” 

இந்தக் குறளை நாம் வாசிக்காது போயிருந்தாலும், அல்லது வள்ளுவர் ஒருக்கால் இந்தக் குறளை எழுதாமலே போயிருந்தாலும் தீர்மானத்தைக் கொண்டு வருவது அமெரிக்கா என்பதற்காக  அதை நிராகரித்து விடுகிற நிலையில் நாங்கள் இல்லை.

இன்னும் சொல்லப் போனால் நம் ஆயுசு முடிவதற்குள் நாம் ஏற்கும் படியாகவும் பாராட்டும் படியாகவும் மனிதத் தன்மையோடு எதையாவது அமெரிக்கா செய்துவிடாதா என்று ஏங்கித் தவித்து எதிர்பார்ப்பவர்கள் அல்லவா நாம்.

அமெரிக்கா எதை செய்தாலும் நீங்க எதிர்க்கத்தாண்டா செய்வீங்கஎன்று எப்போதுமே பொதுவாய் நீளும் அந்தக் குற்றச்சாட்டும் இந்த முறை ஒடிந்து போனது.

நல்லது செய்வது அமெரிக்காவே ஆயினும் இவர்கள் வாழ்த்தி ஆதரிக்கவே செய்வார்கள் என்பது இனியேனும் இந்தியப் பொது புத்திக்கு உறைக்கும்.

ஆமாம்,

இப்படி நீங்கள் ஏற்றுக் கொண்டாடுமளவிற்கு அப்படி என்னதான் அமெரிக்க செய்து விட்டது?

தனது சொந்த ராணுவத்தை அனுப்பி, தனது சொந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி, குவியல் குவியலாய் தனது சொந்த மக்களைக் கொன்று குவித்த ஒரு பேரினவாத வன்முறைக்கு எதிரான, அதை தலைமை ஏற்று எந்தவித தர்ம நியாயங்களுக்கும் கட்டுப் படாமல் குவிந்து கிடந்த பிணக் குவியல்களைப் பார்த்து மகிழ்ந்து கொக்கரித்த, உலகில் இருந்த கொடூரம் மொத்தத்தையும் ஒன்று திரட்டி பிசைந்து செய்யப்பட்ட ராஜபக்ஷேவிற்கும் எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை நா அவையில் கொண்டு வருகிறது.

அதுதான்.

கேட்கலாம்,

உலக நாடுகள் ஒவ்வொன்றின் கழுத்துகளையும் கடித்து ரத்தம் குடிக்கும் ரத்தக் காட்டேரியும் ராட்ஷச அட்டையுமான அமெரிக்காவிற்கும் ராஜபக்ஷேவிற்கும் அப்படி என்ன வித்தியாசத்தை கண்டீர்கள்? இன்னும் சொல்லப் போனால் ஒருகோடி ராஜபக்ஷேவை ஒன்றாய் பிசைந்தாலும் அதைவிடக் கொடூரமானதாயிற்றே அமெரிக்க கொடூரம்?

என்ன செய்வது அதுதான் எங்களின் கையறு நிலை? அமெரிக்கா ஒவ்வொரு முறை அட்டூழியங்களை நிகழ்த்தத் தொடங்கும் போதும் அதற்கு எதிராக உசிர் கொடுத்து போராடும் நல்ல உள்ளங்கள் நிறைந்த பூமி இது. மட்டுமல்ல, அந்த நல்ல உள்ளங்களோடு எப்போதும் எங்கள் குரலும், கரமும், கருத்தும், உசிரும் இணைந்தே களத்தில் நின்றதைப் போலவே இனியும் எப்போதும் இணைந்தேகளமேகும்.

இந்த நல்ல உள்ளங்கள் எங்களின் கண்ணீரைத் துடைக்க முன் வந்து எங்களை அள்ளி அணைத்து ஆற்றுப் படுத்தியிருந்தால் எங்களுக்கு ஏனிந்த நிலை ?

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அநியாயமாக ஒரு உயிர் கொல்லப் பட்டாலும் உதிரம் கொதித்து வீதிக்கு வந்து போராடுகிற, இன்னும் சொல்லப் போனால், மானுடம் காக்க இவர்களை விட்டால் வேறு யார் உள்ளார் என்று இன்னமும் நாங்கள் நம்பக்கூடிய நல்லவர்கள் சற்றேறக் குறைய ஒன்றரை லட்சம் உயிர்கள் ஒரு வார கால அவகாசத்திற்குள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் செம்மறி ஆடுகளை விடவும் கேவலமாய் முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள கொடுமை கண்டு வெடித்துக் கொதித்து வீதிக்கு வராமல் மௌனித்து நிற்பதே அமெரிக்காவின் ஆதரவுக் கரத்தை இறுகப் பற்றி நாங்கள் எழ முயற்சிக்கும் இந்த அவலத்திற்கான காரணம்.

அடிபட்டு கீழே கிடக்கிறோம். எங்களைக் கடந்து போகும் நல்லவர்கள் எல்லோரும் எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து போகிறார்கள். சிலரோபோன இடத்துல சும்மா இருந்தாதானேஎன்று இந்த நிலையிலும் எங்களுக்கு உபதேசம் செய்வதற்கும் தயங்குவதில்லை.

தோழர்களே,

அறிவுறைகளை கேட்பதற்கோ, மல்லுக்கு நின்று சரிக்கு சரி தர்க்கம் செய்வதற்கோ எங்களுக்கு இப்போது தெம்பில்லை என்பதையும், ரணங்கள் எரிந்து இம்சிக்க, ரத்தச் சேதாரம் எங்கள் உயிர் குடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பற்றக் கரம் நீட்டுவது உலகில் அயோகியத் தனத்தை மட்டுமே செய்து பழக்கப் பட்ட அமெரிக்காவாக இருந்தபோதும் அதைப் பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.  “எனது ஆயுதத்தை எனது எதிரி தீமானிக்கிறான்”  என்று மார்க்ஸ் சொல்வார். எங்களது பற்றுக்கரம் ஒரு மக்கள் விரோதியுனடையது என்றே கொண்டாலும் அதை எங்கள் மீது திணித்தது நாங்கள் இன்னமும் பெருமளவு நம்பிக்கை வைத்திருக்கும் எங்களது நண்பர்களே.

இதில் அமெரிக்காவிற்கு உள் நோக்கம் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும்.

மனித மீட்சிக்கான யுத்தக் களத்தில் உங்களோடு நின்று போராட, அது அமெரிக்காவுடன் ஆன போராட்டமாயிருப்பினும், எங்களுக்கு உசிர் வேண்டும் முதலில்.

ராஜ பக்ஷேவை உலகின் அசிங்கமென்று கொள்ள இயலாது. அசிங்கமெனில் கழுவித் துடைத்துவிட்டு பயணத்தைத் தொடரலாம். ராஜபக்ஷே உலகின் ஆகக் கொடூரமான கொலைகாரன். அவரை மென்மையாய் ஒதுக்கிவிட்டு கடந்து விடுவது அயோகியத் தனத்தின் உச்சம். அவர் தண்டிக்கப் படுவதே மனிதகுலம் தனது மாண்பை இன்னமும் இழந்துவிடவில்லை என்பதன் அடையாளம்.

அதற்காக முன்கை எடுக்கும் அமெரிக்காவை இப்போது வாழ்த்தி விடலாம். இல்லை எனில் மீண்டும் நாம் வாழ்த்துமளவிற்கு ஒரு நல்ல காரியத்தை செய்யும் என்ற நம்பிக்கை நமக்கில்லை.

அமெரிக்கா முன்கை எடுக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பின்தொடர்கின்றன.

இரு இந்தியக் குழந்தைகளுக்காக நார்வே பறக்கும் இந்திய அதிகாரிகளை, அவர்களை முடுக்கிவிடும் இந்திய அரசை, அந்தக் குழந்தைகளின் உறவினர்கள் பட்டினி கிடந்து போராடிய போது அவர்களை தாயுள்ளத்தோடு போய் பார்த்த சுஷ்மா, அப்பழுக்கற்ற பிருந்தா காரத் இன்னும் பிற அரசியல்வாதிகள் அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறோம்.

அந்த இரு பிள்ளைகளையும் எங்கள் பிள்ளைகளாகவே பார்க்கிறோம்.

முள் வேலியில் எங்கள் மக்கள்மீது தொடுக்கப் படும் அவலத்தை ஒருக்கால்  நாய்கள் மீதோ மாடுகளின் மீதோ தொடுக்கப் பட்டிருந்தால்கூட விலங்குகளின் பாதுகாவலர்கள் கொதித்திருப்பார்கள்.

பல ஆயிரம் எங்கள் குழந்தைகளை, எங்கள் தாத்தன்களை, அம்மாயி அப்பாயிகளை, எங்கள் தாய் மார்களை, இளைஞர்களை யுவதிகளை சித்திரவதைத்து, சின்னா பின்னமாக்கி, வண்புணர்ந்து கொலை செய்த ராஜபக்ஷே கூட்டத்திற்கு எதிராக அமெரிக்கா காய் நகர்த்துகிறது.

எங்களையும் இந்தியர்கள் என்றே விளிக்கிறீர்கள். அதுதான் உண்மையும் கூட.
எனில், மேல் காணும் பத்தியில் இருக்கும் அனைவரையும் நீங்கள் உங்கள் தாத்தன்களாக, பாட்டிகளாக, தந்தை தாய்களாக, சகோதர சகோதரிகளாகத்தானே பார்க்க வேண்டும்.

எனில்,

நா வில் இந்தத் தீர்மானத்தை நீங்கள் ஆதரிக்கத்தான் வேண்டும். வேறு வழியே இல்லை பிரதமர் அவர்களே.

போதும், புரியும் உங்களுக்கு  என்று முடித்திருந்தேன்.
புரிந்திருக்கிறது.
புரிய வைப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.



இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...