Wednesday, August 31, 2016

027

”பார்த்துக் கொள்ளுங்கள்
உங்களை நேசிப்பவர்களுக்காகவாவது
உடம்பை”

இன்னும் கொஞ்சம் இறங்கி
வெளி வந்து
சொல்லியிருக்கலாம் நீ

“எனக்காகவாவது”

கவிதை 058

வாடகைப் புரவியேறி 
வந்து கொண்டிருக்கும்
நீ கேட்ட ஓவியனால்
வரைந்துவிட முடியாது
உன்னை
உன்னை மாதிரி

Tuesday, August 30, 2016

028

கேட்டிருக்கும்
இடங்களிலிருந்து
ஏதேனும் கிடைக்கும்வரை
எப்படியேனும்
தாக்குப் பிடித்துவிடு தாயே
சாகாமல்

பள்ளத்தில் கிடக்கும் வானம்

இந்த இரண்டு கவிதைகளும் வேறு வேறு நாட்களில் வேறு வேறு நபர்களால் எழுதப் பட்டவை. ஆனால் இரண்டிற்கும் ஏதோ தொடர்பிருப்பதாகவே படுகிறது
"பள்ளத்தில் கிடக்கும்
வானத்தின் மீது
எச்சில் உமிழ்கிறார்கள்"
என்று திரைப்பட பாடலாசிரியர் தோழன் குகை மா.புகழேந்திஎழுதுகிறார்.
சாலையில் பள்ளம், தேங்கிய மழைநீர், மழைநீரில் தெரியும் வானம். சாலையை செப்பனிட வக்கற்ற வர்க்கத்தை துப்பாமல் பள்ளத்தில் கிடக்கும் வானத்தைப் துப்பும் கயவாளித்தனம்
பள்ளத்தில் கிடந்தால் வாகனமும் துப்பப்படும்
இவை கடந்து அழகியலாக பார்த்தால் ஜென்த்தனம்
அடுத்த கவிதையை கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தோழர்பெரியநாயகி சந்திரசேகர் எழுதியிருந்தார்
" மூன்றாம் பிறைக்கு
பாப்பா வைத்த பெயர்
கொஞ்சூண்டு நிலா"
அய்யோ அய்யோ "கொஞ்சூண்டு நிலா" எத்தனை அழகு
பாப்பா, கொஞ்சூண்டு நிலா அற்புதம்.
மகள் வைத்த பெயரென்று போட்டிருந்தாலும் அழகு கெட்டிருக்கும்
புகழுக்கும் பெரியநாயகிக்கும் என் கடனில் பாதியை எழுதி வைத்துவிடலாமென்றிருக்கிறேன்
வாழ்த்துக்கள் புகழ்
வாழ்த்துக்கள் பெரியநாயகி

Monday, August 29, 2016

029

பாதங்கள்
நிராகரித்த
ஒத்தையடிப் பாதையில்
பச்சைப் புல்

தோழர் திருவுடையான்



தோழர் திருவுடையான் நேற்றிரவு  சேலத்தில் நிகழ்ச்சியை முடிந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது  அவரது மகிழுந்து விபத்துக்குள்ளானதில் மரணமடைந்திருக்கிறார். இது மாதிரியான தோழர்களின் இழப்பு சொல்லொன்னாத் துயரினைத் தருகிறது.

25 லிருந்து 30 மேடைகளில் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.

விபத்துகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனாலும் பின்னிரவுப் பயணங்களை நிச்சயமாக தவிர்த்துவிட வேண்டும். அதற்கேற்றார் போல் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் உரையாளர்கள் இரவு தங்கி காலை எழுந்து உணவருந்தி திரும்புகிறமாதிரி  ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மட்டுமல்ல, மேடை ஊழியர்களை நிச்சயமாகக் தங்கிச் செல்லுமாறு செய்ய வேண்டும்.

திருவுடையானுக்கான தோழர் Su Po Agathiyalingam அவர்களின் இரங்கல் என்னை விசும்ப வைத்து விட்டது. “இதுமாதிரி  வேண்டியவர்களின் மரணத்துக்கூட செல்ல முடிவதில்லை. தூரம் என்பதோடு வருவாயோ சேமிப்போ இல்லாத நிலையில் என்ன செய்வது” என்று எழுதியிருந்தார். படிக்க படிக்க வெடித்துவிட்டேன்

போய் வா தோழா

Sunday, August 28, 2016

நடைப்பயிற்சி முடியும் தறுவாயில்

இன்று மாலை நடைப்பயிற்சி முடியும் தறுவாயில் சிகப்பூரிலிருந்து யாழிசை மணிவண்ணன் அலைபேசியில் அழைத்தார்.
இன்று அங்கு நடைபெற்ற ”அடம்செய விரும்பு” நூலின் வெளியீட்டு விழாவின்போது ஏற்புரையாற்றவந்த தோழர்கோபால் கண்ணன் என்னைக் குறித்து பேசியதாகவும் அதை உடனே எனக்கு கடத்திவிடவேண்டும் என்று அழைத்ததாகவும் கூறினார்.
கேட்பதற்கு மகிழ்ச்சியாயிருந்தது. இத்தனைக்கும் கோபால் என்னோடு பேசியதுகூட இல்லை.
அவரது உரையினூடே எனது
“குழந்தைகள்
உயரத்திற்கு
குனிந்து பார்த்தால்தான்
அவர்களின் பிரமாண்டம் புரியும்”
என்பதுமாதிரி நான் எழுதியிருந்த நிலைத்தகவலை கூறினார் என்றும் கூறினார்.
இதை மீளாகத்தான் போட்டிருந்தேன்.
இரண்டு விஷயங்கள்
1. அவ்வப்போது பிடித்தமான நிலைத் தகவல்களை மீண்டும் வைக்கலாம்.
2. காசை சேர்த்துக் கொண்டு ஒருமுறை சிங்கப்பூர் சென்று அங்கிருக்கும் தமிழ் மக்களைப் பார்த்து வர வேண்டும்

பேய்மாதிரி பார்த்தும்

ஒருமுறை பார்த்துவிட்டு கவிஞர் தம்பிக்கு அனுப்பிவிடுங்கள். அவரும் பார்த்துவிட்டால் அச்சுக்கு அனுப்பிவிடலாம் என்ற குறிப்போடு எனது "எது கல்வி?" நூலின் சிராக்ஸ் பிரதி நற்றிணையிலிருந்து வந்திருந்தது.
பேய்மாதிரி பார்த்தும் 176 பக்கங்களிலிருந்தும் ஒரு பிழையினையும் பார்க்க முடியவில்லை.
தம்பியிடம் பேசியபோது சிவன் சார் பார்த்தது பிழையெல்லாம் இருக்காது என்றார்
நன்றி நற்றிணை
நன்றி தம்பி Kavingnar Thambi
நன்றி சிவன் சார்
அநேகமாக மதுரை கண்காட்சிக்கு வந்துவிடும்.

Saturday, August 27, 2016

30

யாரது
ஆடி பெருக்கன்று
நடுக்காவிரியில்
ஊற்று தோண்டுவது

31

ஊறும் கால்களோ
வருடும் விரல்களோ
நடுநிசியின் நிசப்தத்தில்
என்னவோ செய்தது ஏதோ ஒன்று
தனித்து கிடந்த என்னை
அழுக்கும் பிசுக்குமான படுக்கையானதால்
ஊர்ந்திருக்கக் கூடும் ஜந்தெதுவும்
விரல்கள் போலவே உணர்ந்ததால்
வருடலாயுமிருக்கலாம்
கால்களா விரல்களா
ஏதெனக் கண்டடையுமுன்
வந்து தொலைத்தது
தூக்கம்

பரகூர் ராமசந்திரப்பா

"அங்குலி மாலா " என்ற கன்னட திரைப்படத்தின் கதாசிரியர் பரகூர் ராமசந்திரப்பாவிற்கு 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாசிரியருக்கான விருதினை கர்நாடகா அரசு அறிவித்தபோது அது தனது சொந்த கதை அல்லவென்றும் வரலாற்றை கொஞ்சம் புனைவு படுத்தியதைத் தவிர தாம் எதுவும் செய்யவில்லை என்றும் நிறைய நண்பர்களிடமிருந்து இதற்கான தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் எனவே எழுதாத கதைக்கு விருது வாங்குவது நியாயமல்ல என்பதால் அதை நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தாங்களே எல்லா செலவுகளையும் செய்து அடுத்தவர் தருவதுபோல் பிம்பத்தை ஏற்படுத்தி விருதுகளை வாங்குவோர் மத்தியில் இவர் பளிச்சென மாறுபடுகிறார்.
வணங்கி வாழ்த்துகிறேன் ராமசந்திரப்பா சார்.

கல்லாப் பணத்தைவிட

தமிழ்நாட்டில் கழிவுநீர் சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி ஏறத்தாழ 200பேர் இறந்து போயிருப்பதாகவும் அவர்களது குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மீது ‘மாற்றத்திற்கான இந்தியா’ என்ற அமைப்பைச் சார்ந்த நாராயணன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.
வழக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உயர்நீதிமன்றம் என்று வழக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுகுறித்து எல்லாம் விவாதிக்க நமக்கெதுவும் இல்லை.
ஒருகட்டத்தில் உயர்நீதி மன்றம் பாதிக்கப் பட்ட குடும்ன்பங்களுக்கு பத்துலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசிற்கு உத்தரவிடுகிறது.
இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதியன்று பாதிக்கபட்ட குடும்பங்களில் 41 குடும்பங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் எனவேதான் இழப்பீடு வழங்க இயலவில்லை என்றும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக இன்றைய (27.08.2016) தீக்கதிர் சொல்கிறது.
சில அய்யங்களை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள தேவை இருப்பதாகப் படுகிறது.
நாராயணன் சொல்லியிருப்பது ஏறக்குறைய 200 குடும்பங்கள். இதுவே நிச்சயமாக குறைவான மதிப்பீடுதான். பாதிப்புகள் அனைத்தும் பதிவு செய்யப் படுவதில்லை. அதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு.
இதில் 41 குடும்பங்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் மீதமுள்ள 159 குடும்பங்களும் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாகத்தானே பொருள். எனில், கண்டுபிடிக்கப்பட்ட 159 குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதா?
இல்லை 41 குடும்பங்களையும் கண்டுபிடித்தால்தான் 200 குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுமா? எனில் ஒருக்கால் இந்த 41 குடும்பங்களை கண்டுபிடிக்க இயலாது போனால் கண்டுபிடிக்கப்பட்டதாக நாம் கருத இடமுள்ள 151 குடும்பங்களுக்கும் இழப்பீடு கிடையாதா?
அடுத்ததாக நமக்கெழும் அய்யம் இந்த 41 குடும்பங்களை ஏன் கண்டுபிடிக்க முடியாது போனது?
அவர்களை தேடியதற்கான ஆதாரங்கள் என்ன?
அவர்கள் என்ன அநாதைகளா?
உயிருக்கு ஆபத்தான வேலைகளை செய்வதற்கு இயந்தரங்களைப் பயன்படுத்தாமல் இன்னும் எத்தனை காலம் மனிதர்களை பயன்படுத்துவீர்கள்?
சரி, அப்படி பயன்படுத்தும் வேலைகளில் மனிதர்களை ஈடுபடுத்தும்போது ஏன் அவர்களது முகவரியை வாங்க மறுக்கிறீர்கள்?
ஒருவரை கல்லாப்பெட்டியில் அமரவைக்கும் முன் இப்படி முகவரி கேட்காமல் அமரவைப்பார்களா?
எனில் கல்லாப் பணத்தைவிட கழிவுநீர் சுத்தம் செய்யும் தலித்தின் உயிர் மலிவானதா?

Friday, August 26, 2016

கொஞ்சமும் குறைந்ததல்ல

ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் கசிந்தது தொடர்பாக பிரான்ஸ் போர்த் தளவாடங்கள் இயக்குனரகத்தில் முறையீடு செய்வதற்கு இந்திய அரசிற்குள்ள உரிமையில் கொஞ்சமும் குறைந்ததல்ல
பாதுகாப்பு துறையிலேனும் அந்நிய முதலீட்டை தவிர்க்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கோருவதற்கு மக்களுக்கு உள்ள உரிமை.

Thursday, August 25, 2016

நறுக்குகளாய் கவிதைகள் ....




(ஆன்மன் எழுதிய “லெமூரியாக் கண்டத்து மீன்கள்” நூலை முன்வைத்து)
"எனது சொற்கள்
ஏதேனும்
உங்கள் உள்ளத்தை
தொடுகிற நொடியில்
நான் யாரென
நீங்கள் நினைக்கிறீர்களோ
அதுவே
நான்"
என்கிற தன்னறிவித்தலோடு 'லெமூரியாக் கண்டத்து மீன்கள்' என்ற தனது கவிதை நூலைத் தொடங்குகிறார் ஆன்ம ன்
நூல் முழுக்க சின்னதாய் சின்னதாய் கவிதை நறுக்குகள். ஒரு செறிவான காட்சியை, யுகம் யுகமாய் கைமாற்றியளிக்கப் பட்ட வலியை, சோகத்தை சுமையை, காதலை,அன்பை, ஆதங்கத்தை நம்மிடம் கவிதையாய் கடத்துவதற்கு ஆன்ம னுக்கு ஏழெட்டு வார்த்தைகளே போதுமானதாக இருப்பதுதான் எனக்கிவரிடம் இருக்கும் பெருவியப்பு.
“கூண்டைத் திறந்துவிடு
தூர எறிகிறேன்
தூக்கிச் செல்
நீ அணிவித்த மகுடத்தை”
இதை எப்படி வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். தாய்நாடு, தெய்வம் அது இது என்று எனக்கு நீ இட்ட மகுடங்களை எல்லாம் கழட்டி எறிகிறேன். என்னை கட்டவிழ்த்துவிடு என்ற பெண்ணின் குரலாக இதை கொள்வதற்கும் இடமுண்டு.
நூலில் இணைக்கப்பட்டு நாம் விரும்பும் உசரத்தில் பறக்கவிடப்படும் பட்டத்தை பறக்கிறது என்பதே பிழை அல்லவா. ஆன்மன் எழுதுகிறார்,
“காற்றை
நிர்ப்பந்திக்காதே
நூலைக் கைவிடு
பறக்கட்டும்
பட்டம்”
இப்போது யோசியுங்கள் பட்டத்தை நூலில் கட்டிக் கொண்டு ஒருமுனையில் பட்டத்தை கையில் பிடித்துக் கொண்டு பட்டம் பறக்கிறதுஎன்று சொல்லும் பைத்தியக்காரத்தனத்தை ஆறே வார்த்தைகளில் பகடி செய்கிறார்.
“செங்கற் சூளையில்
அடமானமிருக்கும்
மனைவிக்காக
இரண்டாவது குவளை
மதுவை அருந்துகிறான்
முதல் குவளை
பன்னிரண்டு வயது
மகளுக்காக:”
எப்பேர்பட்ட வலியை எவ்வளவு எளிமையாக இந்தப் பிள்ளையால் எப்படிச் சொல்ல முடிகிறது
“பருந்தின்
நிழலை
விரட்டிக் கொத்துகிறது
கோழிக் குஞ்சு” என்ற கவிதையை நான் இந்தத் தொகுப்பின் சிறந்தக் கவிதையாகப் பார்க்கிறேன்.
நறுக்குகளை கவிதையாகத் தருவது எளிதாகவும் வாடிக்கையாகவும் இருக்கிறது. ஆனால் ஆன்மன் கவிதகளை நறுக்காக்கித் தந்திருக்கிறார்.
அருள்கூர்ந்து இவனைக் கொண்டாடுவோம். சத்தியமாய் இவனுக்குள் ஒரு பிரமாண்டம் புதைந்து கிடக்கிறது
இதுமாதிரி நல்ல நூல்களைத் தொடர்ந்து கொண்டுவரும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பூபாலன், அம்சப்ரியா உள்ளிட்ட தோழர்களுக்கு என் முத்தம்
நூல் வெளியீடு
**********************
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பில்சின்னாப்பாளையம்
சமத்தூர் அஞ்சல்
பொள்ளாச்சி வட்டம்

கவிதை 057

பிடிக்குமெனக்கு
சாமி வேஷத்திலிருந்தாலும்
குழந்தைகளை

தமிழ் திணிக்கப்பட்டாலும்...

சமஸ்கிருதம் பற்றி எல்லாத் திக்கிலிருந்தும் கருத்துக்கள் வந்தபடியிருக்கின்றன.
சமஸ்கிருதம் சுத்தமாக வழக்கொழிந்து போயிருக்கிறது என்பதில் எங்களுக்கு எந்தவிதமான மகிழ்ச்சியும் இல்லை. மாறாக அதன்பொருட்டு வருத்தமும் கவலையுமே எங்களுக்கு.
சமஸ்கிருதம் மட்டுமல்ல எந்த ஒரு மொழி வழக்கொழிந்து போனாலும் இதே அளவு வருத்தமும் கவலையும் படவே செய்வோம்.
எல்லோரும் நினைப்பதுபோல நாங்கள் ஒருபோதும் இந்தியை எதிர்த்ததே இல்லை. பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக திணித்ததையே எம் முன்னோர்கள் எதிர்த்தனர்.
அறுபதுகளின் அந்திம ஆண்டுகளிலும் தமிழ் மண்ணில் காசு கொடுத்து இந்தியைக் கற்றுக் கொண்டவர்களும் பட்டம் பெற்றவர்களும் உண்டு.
எங்கள் மீது சமஸ்கிருதத்தை நீங்கள் திணிக்கும் உங்களது ஆணவத்தை எதிர்க்கிறோமே அன்றி சமஸ்கிருதம் என்ற மொழி வளர்வதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
சமஸ்கிருதத்தை நீங்கள் வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் இத்தகைய திணிப்பு அதற்கு ஒருபோதும் உதவாது. மாறாக எதிர் விளைவுகளையே தரும். தற்காலிகமான ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதன் மூலம் அந்த மொழியின் பெயர் பேசப் படலாம். ஆனால் அதுவும்கூட ஒருவிதமான வெறுப்போடும் எதிர் மறையோடும் இருக்கும்.
மீண்டும் மீண்டும் தமிழர்களாகிய நாங்கள் சொல்வது இதைத்தான்,
எங்கள்மீது சமஸ்கிருதம் திணிக்கப்பால் மட்டுமல்ல வேற்றுமொழி மக்கள்மீது தமிழ் திணிக்கப்பட்டாலும் அதை எதிர்க்கவே செய்வோம்

65/66, காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2916



இன்றையத் தேதியில் பெரும்பான்மைக் கவனம் இந்தப் படத்தின் மீதே இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட பேருண்மையாக இருக்கும் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மை பேருக்கு இது ஏதோ ஒரு கருப்புக் காகிதத்தால் சுற்றப்பட்ட பொட்டலமாகத் தெரியும் என்ற எதார்த்தம்.
நீண்டப் பொட்டலமாகக் கிடத்தப் பட்டிருப்பவர் உலகம் எழுந்து நின்று தொழும் வள்ளுவர்.
கிடத்தப் பட்டிருக்கும் வள்ளுவரின் சிலை இந்நேரம் ஹரித்துவாரில் உள்ள CENTRAL CONTROL ROOM TOWER இல் நிறுவப் பட்டிருக்கும். அல்லது நிறுவப் பட்டுவிடும்.
இதை கங்கைக் கரையில் உள்ள ‘ஹர் கி பூரி’ யிலோ அல்லது ஷன்கராச்சார்யாவில் உள்ள ஆதி சங்கரர் அருகிலோ ஒருபோதும் நிறுவ இயலாது என்பது தருணுக்கு நன்கு தெரியும்.
வள்ளுவரின் “பிறப்பொக்கும்” என்பதை ஒருபோதும் தருணால் ஏற்க இயலாது. ஏற்க இயலாது என்பதைவிட எதிரானது என்பதே சரியானது.
சரி, வள்ளுவரின் கொள்கைக்கு நேரெதிரான ஒருவர் ஏனிப்படி வள்ளுவருக்கு சிலை வைக்கிறேன் என்று அலையாய் அலைந்தார்? அதுவும் வள்ளுவரின் இந்தக் கொள்கைகு நேரெதிராக என்பதையே மூச்சாகக் கொண்டுள்ள சாமியார்கள் அதிகமாய் ஆதிக்கம் செலுத்துமிடத்தில் இதை நிறுவ ஏன் ஆசைப்பட்டார். ஆசைப்பட்டார் என்பதை அப்படியே ஏற்குமளவிற்கு நமக்கின்னும் பெருந்தன்மை வரவில்லை.
எனக்கென்னவோ ‘உறவாடிக் கெடுத்தலின்’ ஒரு பகுதியாகவே அது படுகிறது.
சாமியார்களின் எதிர்ப்பு இந்த சிலைமீதென்பதிலும் நான் மாறுபடுகிறேன். ‘பிறப்பொக்கும்’ , ‘ முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ போன்ற சித்தாந்தங்களின் மீதான எதிர்ப்பே அவர்களது இந்த சிலை மீதான வெறுப்பு.
அடிமடியில் நெருப்பள்ளி முடிந்துகொள்ள அவர்கள் என்ன கிறுக்கர்களா?
வள்ளுவனின் நேரெதிர் சித்தாந்தம் அவர்களது. வள்ளுவத்தின் வளர்ச்சி அவர்களது இருத்தலை எதிர்த்து கலகம் செய்யும்.
அவர்கள்மிகச் சரியாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பொட்டலத்திற்குள் கிடப்பதல்ல வள்ளுவர். அவரை பொட்டலமாய் மடிப்பதற்கான காகிதத்தை யாரும் இதுவரைக்கும் தயாரிக்கவில்லை. தயாரிக்கவும் முடியாது.
விமர்சனத்தோடு வள்ளுவரை ஏற்பது அவசியம்.
வள்ளுவருக்கு மீறி யாரால் என்ன சொல்ல முடியும் என்று இறுமாந்து இருப்பது இதைவிட ஆபத்தாக முடியும்.
கவனமாய் மொழிப்படுத்துவோம், கலை இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் வள்ளுவரை ஊர் ஊராய் கொண்டு போய் சேர்ப்போம்.
**************************************************************
ஆட்டோ ஓட்டுனரான ராஜா, துப்புரவு தொழிலாளியான அவரது மனைவி உஷா அவர்களது மகன் சூர்யா ஆகிய மூவரும் செங்கம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏதோ பிரச்சினை வந்திருக்கிறது. ராஜா உஷாவை அடித்திருக்கிறார்.
அப்போது அந்தப் பக்கம் வந்த மூன்று காவலர்கள் ராஜாவையும் சூர்யாவையும் சகட்டு மேனிக்கு தாக்கியிருக்கின்றனர். பொது மக்கள் முன்னிலையில் இது நடந்திருக்கிறது.
குடும்பமே மருத்துவ மனைக்கு போயிருக்கிறது. அவர்களை வலுக்கட்டாயமாக இடைமறித்த காவலர்கள் அவர்களைபேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே இந்தக் காட்சியின் க்ளிப்பிங் தொலைக் காட்சிகளில் வந்திருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இது பெரிதாக அலசப் பட்டிருக்கிறது. ராஜாவின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டிருக்கிறார்கள்.
இதன் விளைவாக அந்தக் காவலர்கள் மூவரும் ஆயுதப்படைக்கு மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவர்களை பணிநீக்கம் செய்யக் கோறி சாலை மறியல் நடக்கிறது.
இது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.
பொது இடத்தில் அத்தனை மக்களுக்கு முன்னால் மனைவியை கணவன் அடிப்பது என்பது ஆணாதிக்கத்தின் உச்சம். வன்மையாக கண்டிக்கப் படவும் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப் படவும் வேண்டும்.
அந்த வழியே வந்த காவலர்கள் சமாதானப் படுத்தி ராஜாவை கடுமையாகக் கண்டித்து அனுப்பியிருக்க வேண்டும். அல்லது அவரை கைது செய்து வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.
மாறாக இவ்வளவு வன்மமாகவும் மோசமாகவும் நடந்துள்ளது கண்டிக்கத் தக்கது.
இத்தோடு நிறுத்திக் கொள்வோமா?
அல்லது முகநூல் என்பது சமூக வலைதளத்தின் ஒரு கூறு. ஆகவே இது மாதிரி இனியேனும் நடக்காதிருக்க ஏதேனும் நம்மால் செய்ய இயலுமா என்று பரிசீலிக்கலாமா?
கூடி முடிவெடுப்போமா?
*************************************************************************************
கொஞ்சம்
அண்ணாந்து பாருங்களேன்..
அந்த மேகத்தை நிச்சயம்
ஒரு குழந்தை தான்
வரைந்திருக்க வேண்டும்.
இத்தனை அலங்கோலமாய்.
இத்தனை அழகோவியமாய்
என்று நான் ராம் எழுதுகிறான். எப்படித்தான் இப்படி எழுத வருகிறதோ இந்தப் பசங்களுக்கு. இதை இன்னும் செதுக்கினால் இதன் உசரம் எங்கேயோ போகும். இதை இவனது உள்டப்பியில் போய் சொன்னாலே போதும். அதுதான் நாகரீகமும்கூட. ஆனாலும் இங்கேயே சொல்வது வளரும் பிள்ளைகளுக்கு உதவும் என்பதால் இங்கேயே வைக்கிறேன்.
ஒரு குழந்தைதான்
வரைந்திருக்க வேண்டும்
அந்த மேகத்தை
இது போதும் என்று பார்க்கிறேன். இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். எழுதியதை சரி செய்வது எளிது. எழுதுவது கஷ்டம்
பொறாமையா இருக்குப்பா ராம்.
************************************************************************
நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது .
முன்பெல்லாம் எங்களூரில் வருடா வருடம் "கட்டபொம்மன் "நாடகம் நடைபெறும். எங்களூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாய் தலையணையோடு நாடகம் பார்க்க. வந்துவிடுவார்கள்.
உரையாடல்கள் பாடல்களாகவே இருக்கும் . ஆச்சரியம் என்னவென்றால் கட்டபொம்மனாய் நடித்தவரிலிருந்து பல நடிகர்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. எப்படி அவ்வளவு நீளமான வசனங்களை மனப்பாடம் செய்து அவ்வளவு நேர்த்தியாக பிரயோகம் செய்தார்கள் என்பது இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
"போனவருஷம் இந்த வசனத்ததானே குட்டியண்ணன் மறந்துபோனான்" என்று பெரிசுகள் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன் .
எழுதப் படிக்கத் தெரியாதவரிடமும் இலக்கியத்தை கொண்டுசேர்த்த ஜனநாயக வடிவம் இசை
******************************************************************************
தோழர் குப்பு வீரமணி அவர்களோடு தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலை சொன்னார்.
பொதுவாக கப்பல் மற்றும் படகுகளின் கட்டுமானத்தில் பயன் படுத்தப்படும் ஆணிகள் துறுபிடித்துப் போகும்போது தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்படும் கப்பல்களின் ஆணிகள் மட்டும் துறுபிடித்து இத்துப் போகாமல் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்ததாம்.
சோதித்துப் பார்த்ததில் தமிழன் ஆணியை மாட்டின் கொம்பிலிருந்து செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததாம்.
கட்டுமரங்ளையும் கட்டிப் பிணைக்காமல் இதே வகை ஆணிகளையே பயன்படுத்தி கட்டமைத்திருப்பதும் அவர்களை ஆச்சரியப் படுத்தியதும் தெரிய வந்ததாம்.
பழந்தமிழ் மூளையின் வீரியம் வியப்பைத் தருகிறது.
***************************************************
அந்த நிறுத்தத்தில் நகரப்பேருந்துகளைத் தவிர புறநகர் பேருந்தெதுவும் நிற்காது . மிகவும் வயதான பெரியவர் ஒருவர் கைநீட்டவே மனிதாபிமானத்தோடு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.
"எங்கங்கய்யா?" என்ற நடத்துனரிடம் "இருங்கலூர் கைகாட்டி" என்றார்.
சென்னையிலிருந்து வரும் மதுரை போகும் வண்டி அது.
சென்னையிலிருந்து மதுரை போற வண்டி கைகாட்டியெல்லாம் நிற்க முடியுமா? என்று கேட்ட நடத்துனரிடம் அகரத்துல பஸ் நிக்கும்னா இருங்கலூர் கைகாட்டியிலும் நிக்கனும். அகரத்தவிட எங்க ஊர் எதுல கொறஞ்சு போச்சு? என்றதும் நடத்துனரும் ஓட்டுனரும் சிரித்து விட்டனர்.
இருங்கலூர் கைகாட்டியில் பேருந்து நின்றது
***************************************************
வேறு வழியே இல்லை. இந்த மாதமும் ஒரு கவிதை.
கேட்டிருக்கக் கூடாதா?
என்றழுது புலம்பும் அவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை
நான் கேட்டிருக்கவே தேவையில்லை
நட்பு அசலெனில்
கேட்டிருந்தாலும் புண்ணியமில்லை
அப்படியில்லையெனில்
என்ற
வயித்து வலிக்கு மருந்து வாங்க
காசற்று
நாண்டு கொண்டவனின்
பிணத்தின் குரல்

மனித வளம்னு சொல்றாங்க பெரியவங்க

இன்று பள்ளியில் சுற்றி வரும்போது ஒரு ஆசிரியரற்ற எட்டாம் வகுப்பினொரு பிரிவில் நுழைந்தேன்.
"என்ன பாடம்?"
"சோஷியல்"
"சாரெங்க?"
"எச் எம் சார் கூப்டாங்கன்னு போயிருக்காங்க"
"சரி, நாம கொஞ்சம் பேசலாமா?"
"ஐ, பேசலாமே"
"காந்தி தெரியுமா?" என்று கேட்டு முடிப்பதற்குள் சிலர் 'மஹாத்மா' என்று கத்தினார்கள், சிலர் 'தேசப்பிதா' என்றனர்.
இனி இப்படி சத்தம் போடக்கூடாது விடை தெரிந்தவர்கள் கைதூக்கினால் போதுமென்று நெறிப்படுத்யினேன்.
காந்தி எப்படி இறந்தார்? என்றதும் எல்லோரும் கைதூக்கினார்கள். ஒரு பிள்ளையை சொல்ல சொன்னேன்.
"கோட்சே சுட்டுக் கொனுட்டார், பாவம்" என்றான் ஒரு குழந்தை.
அடுத்து நேரு தெரியுமா என்றதும் ஆசிய ஜோதி, முன்னால் பிரதமர், என்று பதில்கள் வந்தன.
சரிப்பா, நேரு எப்படி செத்தார் தெரியுமா என்றதும் ஒரு பிள்ளை எழுந்து "அவர வெள்ளக்காரங்க தூக்குல போட்டுட்டாங்க" என்றதும் " சார் அவன் சரியாந்திர மக்கு சார் " என்றனர் குழந்தைகள்.
" ஏம்பா மக்குங்குன்னு சொல்றீங்க? "
"தானா செத்தவர தூக்குல போட்டாங்கன்னு சொன்னா மக்குதாங்க சார்" னு சொல்றான்.
மனித வளம்னு சொல்றாங்க பெரியவங்க

Wednesday, August 24, 2016

சொந்த மக்கள் மீது

“மனிதாபிமானமற்ற, அயோக்கியத்தனத்தின் உச்சமான அமெரிக்காவே தன் சொந்த மக்கள் மீது ரசாயண குண்டுகளை” என்றொரு நிலைத் தகவலைப் ஒருமுறை போட்டிருந்தேன்.
ஏதோ போதாமை இருப்பதாகவே பட்டது. “இதுவரை” என்ற வார்த்தை போட்டால் முழுமை பெறும் என்று தோன்றியது.
மனிதாபிமானமற்ற, அயோக்கியத்தனத்தின் உச்சமான அமெரிக்காவே இதுவரை தன் சொந்த மக்கள் மீது ஜெல்லட்டி குச்சிகளை வீசியதில்லை

எனக்கெந்த தயக்கமும் இல்லை

பாகிஸ்தான் அரசு மற்றும் ராவணுவத்தின் செயல்பாடுகளை கண்டிக்கிறேன்.
அதேவேளை பாகிஸ்தான் நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன். இதை சொல்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை

எங்க கணக்கு சார்

காலை ரெங்கராஜ் சார் அலைபேசியில் அழைத்தார்.
1977-78 இல் எனக்கு பத்தாம் வகுப்பு கணக்கெடுத்தவர். என் மீது அன்பைப் பொழிபவர்களில் அவர் யாருக்கும் இரண்டாமவர் இல்லை.
திடீரென பள்ளிக்கு வருவார். பேசிக் கொண்டிருப்பார். போய்விடுவார்.
திடீரென சத்திரம் வாடா என்பார். ஓடுவேன். “சும்மாதான் , பார்க்கனும்னுதான் கூப்பிட்டேன்” என்பார்.
கையைக் கட்டிக் கொண்டு நிற்பேன். “ சரி கிழம்பு. புள்ளைகள பத்திரமா பார்த்துக்க “ என்பார். திரும்பி விடுவேன்.
அப்பாவின் மரணத்திற்கு வந்தவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு அழுதார். தேற்றினேன்.
இன்று காலை அழைத்தார்.
“ வணக்கம் சார். சொல்லுங்க.”
“ எங்கடா இருக்க.”
“ வீட்ல”
“ வீட்லன்னா. கடவூரா? பெரம்பலூரா?”
” பெரம்பலூர்”
” சரி, வரேன். வந்ததும் போன் செய்றேன். வந்து கூட்டிட்டுப் போ”
“ சரிங்க சார்”
“ வந்தார்.
” வாங்க சார் போகலாம்”
“ வேண்டாம் இங்கேயே பேசலாம்”
பேசிக் கொண்டிருந்தோம்.
“ சரி. புறப்படவா.”
“ என்னங்க சார் வீட்டுக்கு வராம”
” பார்க்கனும்னு தோணுச்சு. வந்தேன். பார்த்துட்டேன். கிழம்பறேன்”
“ என்ன சார் இது. அப்பாவும் போயிட்டாங்க. நீங்களும் வீட்டுக்கு வராம போறீங்க”
“ அப்பா போயிட்டாரா. இருக்கேனேடா”
இது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.

Monday, August 22, 2016

எங்கள் பாட்டன்களுக்கு நூற்றி ஐம்பது ஏக்கரில் சுடுகாடே இருந்தது

வாஷிங்டனுக்கு, டோக்கியோவிற்கு, மெல்போனுக்கு மற்றும் இன்ன பிற பெருநகரங்களுக்கு எந்தெந்த விமான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை விமானங்களை இயக்குகின்றன என்பது அத்துப் படியான அளவிற்கு நம்மில்ல பலருக்கு நமது கிராமத்திற்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை நகரப் பேருந்துகள் வந்து போகின்றன என்பது தெரியாது.
பல மைல்களுக்கு அப்பால் கிடக்கிற பிரமிடுகளின் மேண்மை குறித்து, தொன்மம் குறித்து மணிக் கணக்காய் சிலாகிப்பதில், பாரம் பாரமாய் எழுதிக் குவிப்பதில் கொஞ்சமும் கஞ்சத் தனமே இருப்பதில்லை தமிழனுக்கு. அதில் நமக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படிக்கு வருத்தமும் இல்லை.
சாவதற்குள் ஒரு முறையேனும் பிரமிடுகளைப் பார்த்துவிட்டு வந்துதான் சாக வேண்டும் எனப் பிடிவாதமாய் ஆசைப்படும் நண்பர்கள் எனக்கும் உண்டு.
எரிச்சலே கொள்ளாமல், ஒரு புன்னகையோடு இவர்களைக் கடந்து போகும் பக்குவம்கூட நமக்கு
வந்துவிட்டது. ஆதிச்ச நல்லூர், மணல்மேடு மற்றும் காரைமேடு போன்ற நமது தமிழ்க் கிராமங்களில் நடக்கும் போதே கால்களில் மிதிபட்டு உடைந்து அழிந்து
வரும், நமது தொன்மையும் மேன்மையும் மிக்க நாகரீகத்தின் சின்னங்களான முதுமக்கள் தாழிகள் குறித்து எந்த அக்கறையும் இவர்களுக்கு இருப்பதில்லை
என்பதுதான் நமது கவலையே.
பெருந்தன்மையினால் தாராளமாய் பிசைந்து செய்யப்பட்ட மனிதனால்கூட மேற்சொன்ன எந்த ஒரு ஊரிலும் இன்றைய தேதியில்கூட ஐயாயிரம் பேருக்கு மேல் வாழ்வதாய்ச் சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட குக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றி ஐம்பது ஏக்கரை ஒட்டிய நிலப் பரப்பில்
அமைந்துள்ள சுடுகாடுகளின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச ஆய்வாளர்கள்அக்கறை கொள்ளாததில் நியாயம் இருக்கலாம். தமிழாய்ந்த தமிழர்களின் கவனம்கூட இவற்றின் பக்கம் திரும்பாததுதான் உலகம் ருசித்த சோகங்களிலேயே தலையாய சோகம்.
குருஷேத்திரப் போர் நடந்ததாகக் கூறப்படும் இடமருகில்கூட இவ்வளவு பரந்த நிலப் பரப்பில் சுடுகாடு இருக்கிறதா? அல்லது இருந்து அழிந்து போனதற்கான சுவடுகலாவது அல்லது புராணவழி சான்றுகளாவது இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்றால் அதுவுமில்லை.
எத்தனையோ லட்சாதி லட்சம் குதிரைகளும் யானைகளும் வீரர்களும் பங்கு பெற்றதாகக் கூறப்படும் போர்க்களமான குருச்கேத்திரத்திற்கு அருகே காணக்
கிடைக்காத ஒரு நிலப் பரப்பு நிலத்தில், தமிழ் மண்ணில் சுடுகாடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன என்றால் என்ன பொருள்? இத்தனை பெரிய பரப்பளவில் சுடுகாடுகள் ஏதோ ஒரு புள்ளியில் தேவைப் பட்டிருக்கின்றன. எனில் பெரியதும் உக்கிரமமானடுமான போர்கள் அங்கே நடந்திருக்கக் கூடும் என்று கொள்வதற்கும் வாய்ப்புண்டு.
இது உண்மையெனில் பொறாமை கொள்ளுமளவிற்கு மேன்மையும் அளப்பரிய வளங்களைக் கொண்டதுமான சாம்ராஜ்யங்கள் அங்கே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனில் இது குறித்த ஆய்வுகள் போதுமான வகையில் என்றுகூட அல்ல, இன்னும் தொடங்கப் படவே இல்லையே ஏன்?. உலக கவனம், இந்திய கவனம் என்பவற்றை எல்லாம் கூட ஆடித் தள்ளுபடி , பொங்கல் தள்ளுபடி அல்லது இது போன்ற ஏதாவது ஒரு தள்ளுபடி என்கிற வகையில் தள்ளுபடி செய்துவிடலாம். ஏனெனில் தமிழ்ச் சுடுகாடுகளின் தொன்மையேகூட அவர்களைக் கலக்கிப் புரட்டி வெட்டிச் சாய்த்திருக்கலாம்.அதையும் இதையுமென்றுஅலைந்தலைந்து ஆய்வு செய்யும் எங்கள் சான்றார்ந்த பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது குறித்து கவனம் சாயாததன் காரணம்தான் என்ன முயன்றும் பிடிபட மறுக்கிறது.
மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா பற்றித் தமிழகத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் சரியாகவோ தவறாகவோ கூடுதலாகவோ சற்றுக் குறைச்சலாகவோ இருக்கலாம், ஆனால் நிச்சயமாகத் தெரியும். மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவற்றின் தொன்மைச் சிறப்புகள் குறித்து கற்றுத் தெளியாமல் நமது பிள்ளைகள் பள்ளிகளைக் கடந்துவிடக் கூடாது என்கிற கவனத்தோடு நமது கல்வித் திட்டம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதில் நமக்கெதுவும் பிரச்சினை இல்லை. இன்னுஞ்சொல்லப் போனால் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் அதிலும் குறிப்பாக பண்டைய நகர நாகரீகம் ஆகியவற்றின் தொன்மச் சிறப்புகள் குறித்து நம் பிள்ளைகள் தெளிவுறக் கற்றுத் தேரவேண்டும் என்பதில் முரட்டுத் தனமான பிடிவாதமே நமக்குண்டு. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் உலகின் எந்த ஒரு நாகரீகத்தின் பழமை மற்றும் தொன்மச் சின்னங்கள் குறித்தும் நம் குழந்தைகளுக்குத் தெளிவுறச் சொல்லித் தரவேண்டும் நம் எல்லை தாண்டிய ஆசையை யாரும் சந்தேகப் பட முடியாது.
நமது ஆதங்கமெல்லாம், நமது தமிழ்மண்ணின் மையப் பகுதியான அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள உட்கோட்டையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் அந்தப் பூமிக்குக் கீழே புதையுண்ட நிலையில் கட்டடங்களும் சிலைகளும் காணப்பட்டு, போதிய பராமரிப்பும் ஆய்வுமின்றி அழிந்து வருவதைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லாதது குறித்துதான். ஆய்வாளர்களோ, கல்வியாளர்களோ, அரசுகளோ அது குறித்துப் போதிய அக்கறை காட்டாது மௌனிப்பதன் மர்மம் என்ன?. கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம் வரை செல்லும் கல்விச் சுற்றுலாக்கள்கூட அங்கிருந்து கிராம மக்களுக்கான நடை தூரத்திலிருக்கும் உட்கோட்டைவரை நீளாமல் போவதில் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.
கிரஹாம் ஆன் கூக் என்ற அறிஞர் பூம்புகாருக்கும், நாகைக்கும் இடையே நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் பதினோராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகுந்த நுணுக்கமான நகர கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு நிலப் பகுதி இப்பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருக்கிறது என்பதைத்தெளிவு படுத்தினார். அது குறித்து, அது சரியல்ல என்கிற அளவில்கூட வாய் திறக்காமல் உலகச் சமூகம் மௌனித்துக் மர்மம் புரிகிறது. அதை உண்மையென ஒத்துக் கொண்டால் மெசபடோமியாவைவிடப் பழமையும் தொன்மையும் வாய்ந்த நாகரீகத்திற்கு சொந்தப் பூமி தமிழ்ப் பூமி என்ற உண்மையை ஒத்துக் கொள்வதாய் ஆகும். அதை அவர்களால் ஜீரணிக்க இயலாது. ஆயிரம்தான் தமிழ்ப் பூமியின் நாகரீகம் என்றாலும் அது இந்திய நாகரீகம்தானே?. பிறகேன் இந்தியச் சமூகமும் மௌனிக்கிறது?. இதையெல்லாம் விடுங்கள், உலகின் எந்தப் பகுதியில் எது கிடைத்தாலும் ஓடியோடி ஆய்ந்து அவற்றின் சிறப்புகளை பெருந்தன்மையோடு ஏற்று பறை சாற்றும் தமிழ் மண்ணின் அறிவு ஜீவிகளே, இதை ஏற்கக் கூட வேண்டாம், சரிதானா என்கிற அளவிலேனும் இதை ஆய்ந்து பார்க்கவும் அஞ்சுவதன் பொருள்தான் என்ன?
கேட்கலாம், "தமிழ்ப் பூமியின் தொன்மத்தை, மேன்மையை ஒப்புக் கொள்வதால் மட்டும் உங்களுக்கென்ன லாபம் வந்துவிடப் போகிறது?." திருப்பிக் கேட்கிறேன்," அது உண்மையெனில் அதை ஒத்துக் கொள்வதால் உங்களுக்கென்ன நட்டம் வந்துவிடப் போகிறது?"
தன் மொழியின், கலாச்சாரத்தின் தொன்மம் அறிந்த சமூகம் அவற்றை மதித்துப் புழங்கும். அதன் மூலம் அந்த மொழியும் கலாச்சாரமும் வளர்ந்து செழிக்கும். தனது மொழி மற்றும் கலாச்சாரத்தின் மேன்மை புரியாத சமூகம் எதுவாயினும் அவற்றைப் புழங்கத் தயங்கி அவற்றின் அழிவுக்குக் காரணமாகும். எனவேதான் கவலைப் படுகிறோம்.
கி.பி.அரவிந்தன் "இருப்பும் விருப்பும்" என்ற தனது நூலில் தாங்கள் தோற்றதற்கான காரணங்களை அலசுகிறார். அவர் சொல்கிறார், " தவறுகளில் இருந்து படிப்பினைப் பெற்று முன்னேறுவதுதான் போராட்டம்." ஆமாம், தனது தவறுகளைத் திருமாத் திரும்பச் செய்யும் இனமோ, சமூகமோ, சொந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடும் குழுவோ, அல்லது எதுவோ ஆயினும் அது அழிந்து போகும்.
காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நமது சின்னக் குழந்தை சாய்நா சொல்கிறார், " I won the gold because I did not repeat my mistakes."

எனக்கென்னமோ அருணைகிரிநாதர்.

விராலிமலை என்று சொன்னாலே தனக்கு மயில்கள் நினைவுக்கு வருவதாக நண்பர் சொன்னார்.
எனக்கென்னமோ அருணைகிரிநாதர்.
உங்களுக்கு?

என் காலம் தாண்டியும் மகிழ்ந்து நீண்டு வாழவேண்டும்



"உங்களுடைய 'அந்தக் கேள்விக்கு வயது 98' ஐ யாரேனும் மறுபதிப்பு செய்தால் நல்லதுன்னு வண்ணதாசன் சொன்னார். பிரதி கைல இருக்கா?" என்று திரு சந்தியா சௌந்தரராஜன் சொன்னபோது சத்தியமாய் எனக்கிரண்டு ரெக்கைகள் முளைத்தன.

இப்படியாக அவர் சிபாரிசில்தான் அந்த நுல் மறுபதிப்பைக் கண்டது.

அதற்கடுத்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தியா ஸ்டாலில் நின்று கொண்டிருக்கிறார். எப்படி அறிமுகம் செய்துகொள்வது என்ற கூச்சத்தோடே ஒதுங்கி நிற்கிறேன்.

என்னைப் பார்த்ததும் அவரே 'என்ன எட்வின் நலமா?' என்று கேட்டவாறே என்னை நோக்கி வருகிறார்.

எனது வலது கையை எடுத்து தன்னிரு கைகளுள் வைத்துக் கொண்டவாறே பேசுகிறார்.

அப்போது அங்கு வந்த வண்ணநிலவனிடம் என்னை அறிமுகம் செய்கிறார்.

திரும்பி " நடராஜன் எட்வின் எழுத்துதானே தெரியும் உங்களுக்கு. பேச்ச ஒரு தரம் கேளுங்க" என்று சந்தியா நடராஜனிடம் கூறுகிறார்

யாருக்கு வரும் இத்தனை பெருந்தன்மை?

என் காலம் தாண்டியும் மகிழ்ந்து நீண்டு வாழவேண்டும் சார் நீங்கள்.

Sunday, August 21, 2016

எது செய்யும் காதல்?



தோழர் லட்சுமி (Lakshmi RS) “நீயும் நானும்” என்ற அவரது கவிதை நூலினை அனுப்பியிருந்தார். மிகவும் அழகான அட்டைப் படம். உள் உள்ள கவிதைகளுக்கு மிக நெருக்கமாக உள்ளது.
“வலது கண்ணும்
இடது கண்ணும் அல்ல
தொட்டுக் கொள்ளவே மாட்டோம்
என்பதற்கு
இரண்டாவது விரலும்
மூன்றாவது விரலும்
நீயும் நானும்”
என்பது மாதிரி 25 ஆண்டுகளுக்கு முன்னால் தங்கம் மூர்த்தி ஒரு கவிதை எழுதியிருந்தான். இந்த அட்டைப்படத்தைப் பார்த்ததும் நாங்கள் எங்கள் சிறு வயதில் கொண்டாடிய அந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.
போக, ‘நீயும் நானும்’ என்ற அந்த நூலின் தலைப்பும் என்னோடு நெருக்கமாக வந்து அமர்ந்து கொண்டது.
மிக மிக சிறிய அளவிலான கவிதைகள். அன்பெனும் மெல்லிய நூல்கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு கவிதைச் சரம் இந்த நூல்.
அகம் சார்ந்த நூல்.
மத்திய வயதை இன்னும் கொஞ்சம் நேரத்தில் கடக்க இருக்கிற ஒரு பெண்ணின் அகத்தை அதற்கு மிக நெருக்கமாக கொண்டுவர முயற்சித்திருக்கும் ஒரு படைப்பாளியின் வியர்வையின் நெடி என்னை வசீகரிக்கிறது.
“சிரிக்கிறது கேலியாக
உன் சட்டைப் பேனா
உருகி உருகி நீ கரைந்தாலும்
நாந்தான் எப்போதும் அவனுடனே
கோபமுடன் நானும்
நான் இருந்தால் அவனருகில்
உனக்கு ஏது வேலை?
உன் வழக்காடு மன்றத்தில்
நாங்கள் இருவரும்
தீர்ப்புக்காக”
என்றொரு கவிதை. இதில் என்ன இருக்கிறது என்றுகூட சிலர் கேட்க்கக் கூடும். இதில் என்ன இல்லை என்கிறேன் நான். நெஞ்சுக்கு நெருக்கமாக அதிக நேரம் இருக்கும் பேனாவைப் பார்த்து பொறாமைப் படும் ஒரு பெண்ணின் அழகான மனசை மிகுந்த ரசனையோடு கொண்டுவர முயற்சித்திருக்கிறார்.
புரிந்து கொள்ளப்படாத பெண்ணின் அன்பு குறித்து எத்தனையோ பேர் எத்தனையோ எழுதி குவித்திருக்கிறார்கள். இவர் எழுதுகிறார்
“புதியதோர் உலகத்தில்
புரியாத மொழிகளில்
மாட்டிக்கொண்டு முழிக்கிறது
என் அன்பு”
அன்புக்காக ஏங்கி ஏங்கி அலையும், ஒரு மென்மையான
ஜீவனின் அழுகையாகவே இது எனக்குப் படுகிறது. ‘புரியாத மொழி’ என்று எழுதவில்லை, ‘புரியாத மொழிகளில்’ என்பது அன்புக்காக ஏங்கி தொடர்ந்து சுநலமிகளால் ஏமாற்றப் படும் ஒரு இதயத்தை நேர்த்தியாக சொல்கிறார்.
ஒருவனின் மனுஷி அவனது சகோதரியுமாவாள். பிரச்சினை என்னவெனில் ஒருத்தியின் மனுஷன் அவளுக்கு சகோதரனாகவும் இருக்கவேண்டும் என்பதை இன்னும் ஆணுலகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான். இவரெழுதுகிறார்,
ஓடிவா என்னிடத்தில்
ஓர் துயரம் உனக்கென்றால்
அன்னையாய் நான்
அரவணைக்க
தோழியாய் தோள் கொடுக்க
சகோதரியாய்
சஞ்சலம் தீர்க்க
உனக்காக நான்
உனக்காக மட்டுமே நான்”
எது செய்யும் காதல்? என்பதற்கு இந்த ஒரு கவிதை போதும்
“உன்னுடன் பேச இயலாத
வார்த்தைகளுக்காக
பிறருடன் பேச இயலும்
வார்த்தைகள்கூட
கொஞ்சம் கொஞ்சமாய்
மரித்துப் போகின்றன”
என்று ஓரிடத்தில் எழுதும் இவர் பிரிதோர் இடத்தில்
”உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும்
ஆன்மாவை
உன்னுடன் பேசிவிட்டு”
என்கிறார். காதல் உரையாடல் ஆன்மாவைப் புதுப்பிக்க வேண்டும். ஆன்மாவைப் புதுப்பித்தல் என்பது காதலின் சாரம்.
“பருவம் தப்பி வந்த
அடைமழை நான்”
என்று சொல்கிறார். இதில் ஆதங்கப் படுவதற்கு ஒன்றும் இல்லை. காதலுக்கும் கவிதைக்கும் ஏது பருவம்? தாமதமாக வந்த அடைமழை என்றே கொள்கிறேன்.
இந்தக் கவிதைகளை இவ்வளவு கொண்டாட ஒரு காரணம் இருக்கிறது. இந்த நூலுக்குள்ளான எனது பயணம் ஒன்றைக் கண்டடைந்திருக்கிறது. இதைவிடவும் காத்திரமான கவிதைகள் இவருள் இருக்கின்றன. உற்சாகிப்பதன் மூலமும் கொண்டாடுவதன் மூலமாகவும் அதை சாத்தியப் படுத்த முடியும்.
கொண்டாடுகிறேன்.
இதை ’பன்முகம்’ வெளியிட்டிருக்கிறது. புத்தகத்தில் முகவரி இல்லை வாங்கி வைக்கிறேன்

வரலாறுகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்



எத்தனை கிறுக்கு நான்

”வாங்கி அனுப்பு” என்று நான் சொல்கிறேன்.
நீயும் என் முகவரி கேட்கவில்லை. நானும் கொடுக்கவில்லை. ஆனாலும் ஏதேனும் வந்திருக்கா என்று கூரியர் அலுவலத்தில் கேட்கிறேன்
உன் பிறந்த நாளன்று நீ எனக்கு வாங்கி அனுப்புவதாய் சொன்னதை
எத்தனை கிறுக்கு நான்

Saturday, August 20, 2016

மீள் 08

புத்தகம் கேட்கும்
மகளின் கையில்
மயிலிறகு

ஜாதி மதத்தினும் கொடியது, எதனினும் கொடியது

//// தலித்துகளுக்கும் உயர் சாதிக் காரர்களுக்கும் தனித் தனியே தேவாலயங்கள் உள்ள தமிழக கிராமங்கள் ஏராளம். திருச்சி போன்ற பெருநகரங்களின் மையப் பகுதியிலேகூட தலித்துகள் கல்லறைகளுக்கும் உயர்சாதியினர் கல்லறைகளுக்குமிடையே தடுப்புச் சுவரும் தனித் தனி நுழைவு வாயில்களும் உள்ள கல்லறைத் தோட்டம் இன்றைக்கும் உண்டு.
தொண்டமாந்துறை என்றொரு கிராமம் பெரம்பலூர் மாவட்டத்திலே உள்ளது. அழகான தேவாலயம், அழகான தேர். ஆனால் அந்தத் தேரோ குடியானத் தெருவுக்குள் மட்டுமே சுற்றி அடங்கும். சேரிக்கும் தேர் வரவேண்டும் என்று உரிமை கோரினார்கள்.சேரிக்குள் தேர் நுழைந்தால் சாமி தீட்டுப் பட்டுவிடும் என்றார்கள். தங்கள் தெருவுக்குள்ளும் தேரோட்டம் வேண்டும் என்று எண்ணிய தலித்துகள் தாங்களே ஒரு தேரை செய்து மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு. அதை குடியானத் தெருவிற்குள்ளும் கொண்டுபோக வேண்டும் என்கிற பெருந்தன்மை சேரி கிறிஸ்தவர்களுக்கு இருந்தது. அதைத் தடுத்த குடியானத் தெருக் கிறிஸ்தவர்கள் சொன்னார்கள் " சேரிச் சாமி எங்க தெருவுக்கு வரக் கூடாது"
"ஏன்?"
"உங்க சாமி எங்க தெருவுக்குள்ள வந்தா எங்க தெரு தீட்டுப் பட்டுடும், " கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதில் வந்தது.
குடியானத் தெரு மாதா சேரிக்குப் போனால் சாமி தீட்டுப் பட்டுவிடுமாம். சேரி சாமி குடியானத் தெருவிற்குள் வந்தால் தெரு தீட்டுப் பட்டு விடுமாம் . என்றால் சேரி மாதாவும் தலித்துதானா என்ற கேள்வி எழும்.
(இப்படியும் கொள்ளலாம். எந்த சாமி சேரிக்குள் வந்தாலும் சேரி தீட்டுப் படாது. காரணம் அழுக்காய் இருந்தாலும் சேரி தூய்மையானது. எந்தத் தெருவிற்குள் போனாலும் சேரிச் சாமி தீட்டுப் படாது. காரணம் சேரி மக்களைப் போலவே சேரிச் சாமியும் நெருப்பு)/////
( 12 ஆண்டுகளுக்கு முன்னர் ‘லோமியோ’ என்ற நாவலுக்கான என் விமர்சனத்தில் எழுதியது. இது அப்படியே அப்பட்டமாக சேஷ சமுத்திரத்திற்கும் பொருந்துகிறது.
ஜாதி மதத்தினும் கொடியது, எதனினும் கொடியது

Thursday, August 18, 2016

கவிதை 056

காடென்பது
கடலின்
கரை

கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கக் கடவர்

2013 இதே நாளில் எழுதியது. ஒலிம்பிக் சூழலில் இதை மீண்டும் படிப்பது நல்லது)
ஸ்பெயினில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில் (டோனோஸ்டி கோப்பை) மூன்றாவது இடத்தை வென்றிருக்கிறார்கள் ஜார்கண்ட் பழங்குடிப் பெண் வீராங்கனைகள்.
போட்டிக்காக வைத்திருக்கும் இருக்கும் ஒரே ஜோடிக் காலணிகளைச் சேதப்படுத்தி விடக்கூடாதென்று இவர்கள் வெறுங்கால்களுடன் பயிற்சி செய்வதைப் பார்த்த போட்டி நிர்வாகிகள் "Supergoats" என்று ஆச்சரியமும் அன்புமாய்ப் பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள்.
”எங்களால் (போட்டி முடிந்த அன்று) தூங்கவே முடியவில்லை...” - ரிங்கி குமாரி, தலைவர், யுவா அணி (சூப்பர் கோட்ஸ்) நிறைய பெண்கள் சந்தோஷம் தாங்காமல் அழுது கொண்டே இருந்தனராம். ஏனெனில் இறுதிவரை பாஸ்போர்ட் கிடைக்காமல் போட்டிக்குச் செல்வார்களா என்பதே கேள்விக்குறியாய் இருந்திருக்கிறது.
கால்பந்தாட்டத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் நம் நாட்டிற்கு இது குறிப்பிடத்தகுந்த அங்கீகாரம். ஆனால் யாருக்கு அக்கறை? நமது விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், அவ்வளவு ஏன், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (All India Footbaal Federation - AIFF) தலைவர் ப்ரஃபுல் பட்டேல் கூட இவர்களின் வெற்றியை அறிந்திருக்கவில்லை.
..இதே பெண்கள் தான் தங்கள் பாஸ்போர்ட்டுக்காக அரசு அலுவலகங்களுக்குச் சென்ற போது, கன்னத்தில் அறையப்பட்டனர், தரையைப் பெருக்கித் துடைக்குமாறு ஏவப்பட்டனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்ததற்காக எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தாங்கள் பிறந்த மாண்புமிகு “இந்தியா”வுக்குப் பெருமை தேடித் தந்திருக்கின்றனர்.
மேலும், இவர்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலத்திலேயே மிகவும் வறுமையானதும், குழந்தைத் திருமணங்களும், சிறுமிகள் கடத்தப்பட்டு விற்பதும் அதிக அளவில் நடைபெறுவதுமான ருக்கா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 17, 2016

கவிதை 055

வந்துவிடுகிறது அடுத்த மாதம்
அவனைப் பிடித்து
இவனைப் பிடித்து
அதைப் புரட்டி
இதைப் புரட்டி
ஒரு வழியாய் இந்த மாத
தவணைகளை முடிப்பதற்குள்

பெட்ரோலால் மட்டும் ஓடவில்லை ஆட்டோக்கள்

(2014 ஆம் ஆண்டு நடந்தது.)
மூன்று மணி சுமாருக்கு பொள்ளாச்சி போய் சேர்ந்தேன்.
வந்ததும் வாசுதேவன் அய்யா வீட்டிற்கு போய்விடுமாறு அம்சப்பிரியா சொல்லியிருந்தார்.
இரண்டும் கெட்டான் நேரமாக இருந்ததால் தொந்தரவைத் தவிர்க்க விரும்பி லாட்ஜ் தேடினேன். கிடைக்காது போகவே வாசுதேவன் அய்யா வீடு போக ஆட்டோ எடுத்தேன்.
அய்யாவைத் தொடர்பு கொண்டேன். வடுகபாளையம் பூங்காவில் இறங்கி நிற்குமாறும், தான் வந்து அழைத்து போவதாகவும் சொன்னார்
விவரத்தை ஆட்டோ தோழரிம் சொன்னேன்.
பூங்காவில் இறங்கியதும் பணம் கொடுத்தேன். அவரும் இறங்கி என்னோடு நின்று கொண்டார்.
ஊருக்கு புதிதாய் தெரிவதாலும் இரண்டுங் கெட்டான் நேரமாக இருப்பதாலும் அய்யா வரும் வரை இருப்பதாவும் ஒருக்கால் முகவரி தவறெனில் விசாரித்து விடுவதாகவும் சொன்னவர் அய்யா வரும்வரை இருந்துதான் சென்றார்.
ஓட்டும் தோழனின் அன்பும் நேர்மையும் இல்லாமல்
வெறும் பெட்ரோலால் மட்டும் ஓடவில்லை ஆட்டோக்கள்
வணக்கம் தோழா

திமிறேறிப் போச்சு தாயே



ஜிம்னாஸ்டிக்கில் நான்காவது இடத்தில் இந்தியா. போதும் மகளே போதும். எங்கள் கிழட்டு உடம்புகளில் திமிறேறிப் போச்சு தாயே.
பார்க்க நாங்கள் இல்லாது போகலாம். ஆனால் உன் மன்னிப்பு கோரல் வருங்காலத்தில் பதக்கங்களை இந்தியாவும் குவிக்கும் என்ற நம்பிக்கை தந்திருக்கிறது.
அப்பனின் முத்தம் திபா

Tuesday, August 16, 2016

மீள் 07

வைப்பர் வேகத்தினும்
வேகமாய்
சலிக்கவே சலிக்காமல்
எழுதிக் கொண்டிருக்கிறது
மழை
எனக்கான கடிதத்தை

மீள் 06

நனைதலுக்கான
அவர்களது
தவம்
ஆசீர்வதிக்கப் பட்டபோது
நனைந்தன
அவர்களது குடைகள்

Monday, August 15, 2016

வாங்கினோம் விற்கிறோம்

"வாங்கினோம்
விற்கிறோம்”
என்று சம்பத் இளங்கோவன் எழுதியிருப்பதாக ஷாஜஹான் எழுதியிருந்தார். உட்கார முடியவில்லை. இவ்வளவு தெறிப்பாய் சொல்லமுடிகிறதே.
அவரது பக்கம் பாய்ந்தேன்.
வீட்டுப்
பாடத்திலிருந்தும்..
மேனேஜரின்
திட்டுகளிலிருந்தும்...
வாய்த்தால்
சமையலறையிலிருந்தும் கூட!
நாளை ஒருநாள்
"விடுதலை நாளே"!
அடடா.
மனுஷனுக்கு எங்க மேல எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். வெள்ளி சனி ஞாயிறு , மூன்று நாள் விடுமுறை எனில் வீட்டுப் பாடமும் மூன்று மடங்காகும் இளங்கோவன்.
“மிச்சமிருக்கிறது
மிளகின் நிழல்
எறும்புக்குப் போக”
என்று எழுதியிருந்தேன்.புரியவில்லை என்றார்கள் சிலர். புரிகிற மாதிரி எழுதுகிறார் இளங்கோவன்
விரிந்த
பாம்பின்
நிழலில்
இளைப்பாறும்
தவளைகள்!
வாய்ப்பு கிடைக்கையில் சம்பத் இளங்கோவன் பக்கம் போய்வாருங்கள்

எதையும்போல இதுவும் ஏதோ ஒரு நாள் இல்லை

குதித்து, குதூகலித்து, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் கொப்பளித்துக் கொண்டாட இயலவில்லைதான்.
ஆனாலும் எதையும் போல் இதுவும் ஏதோ ஒரு நாளில்லைதான்.
காங்கிரஸ், லீக், இடதுசாரி, மற்றும் கட்சி சாராது தியாகித்த எனது பாட்டன்களையும் பாட்டிகளையும் போகிற போக்கில் விட்டு விட முடியவில்லைதான்.
ஆனாலும் ஒரே மனிதன் 50 ஆண்டுகால இடைவெளியில் தந்த இரண்டு நேர்காணல்களை உள் வாங்குவது அவசியம்.
அநேகமாக 1942. பாட்னா கலக்டர் அலுவலகம். ஒரு சிறுவன் அதன் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று கொண்டு “ வந்தே மாதரம். வெள்ளையனே வெளியேறு” என்று குரல் கொடுக்கிறான். காவலர்கள் அவனை அமைதியாக கலைந்து செல்லுமாறு எச்சரிக்கிறார்கள்.
தொடர்கிறான்.
”சுட்டுவிடுவோம்” மிரட்டுகிறார்கள்.
“ சுட்டுக் கொள்ளுங்கள்”
இன்னும் அதிக அவேசத்தோடு இன்னும் அதிக குரலெடுத்து கர்ஜிக்கிறான். “ வந்தே மாதரம். வெள்ளையனே வெளியேறு”
சுட்டே விட்டார்கள். செத்தும் போனான்.
அவனது தந்தையை பேட்டி காண்கிறார்கள்.
“ உங்கள் மகன் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“ என் மண்ணின் விடுதலைக்காக என் மகன் தன் உயிரைத் தியாகித்திருப்பது மிகுந்த பெருமையாயிருக்கிறது. என் மண்னின் விடுதலையில் என் மகனது பங்கும் குறிப்பிட்டுக் கொண்டாடும்படி இருப்பதில் எதைவிடவும் பெருமையாய் இருக்கிறது”
1992 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டு கொண்டாடப் பட்டபோது அதே தந்தையிடம் அவரது மகனது தியாகம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள். சொல்கிறார்,
“ஊழலும் சுயநலமும் நிரம்பிப் போன இந்த மண்ணைப் பார்க்கும் போது என் மகன் செய்தது தியாகம் இல்லையோ, பைத்தியக்காரத்தனமோ என்று தோன்றுகிறது.”
இந்த நேர்காணலில் இருந்து நல்ல மக்கள் இயக்கங்களோடு இணைந்து பணி செய்ய வேண்டிய கடமை இருப்பது புரிகிறது.
ஆனாலும்,எதையும்போல இதுவும் ஏதோ ஒரு நாள் இல்லை எனக்கு.

இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்



உன் ஒரு நீண்ட பாடலின் மொத்த வார்த்தைகளை விட ஒன்றிரண்டு குறைவாய்த்தானிருக்கும் நம் கடைசி சந்திப்பில் நிகழ்ந்த உரையாடல்

இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.

ஏனப்பா இப்படி அவசர அவசரமாய் போகிறீர்கள் ஒவ்வொருவராய்.

புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் --- ஆலோசனைக் கூட்டம்



செப்டம்பர் 11 அன்று திருச்சியில் நடைபெற உள்ள புதிய கல்வித் திட்டம் குறித்த கருத்தரங்கத்திற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று இன்று சிங்கர் அகாடமியில் நடந்தது

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...