Thursday, August 11, 2016

இன்றும் நிகழ்ந்தது.

இன்றைய இடைநிலைக் கல்வித் திட்டம் குறித்து நாம் அவசியம் கவலைப் பட்டே ஆக வேண்டும் என்பதை நாள்தோறும் ஏதாவது ஒன்று நியாயப் படுத்திக் கொண்டே இருக்கிறது.
அப்படி ஒரு சம்பவம் இன்றும் நிகழ்ந்தது.
இன்று பதினோராம் சி வகுப்பு நோட்டு திருத்திக் கொண்டிருந்தேன். ஒரு குழந்தை அளவிற்கு அதிகமான எழுத்துப் பிழைகளோடு எழுதியிருக்கவே அவளை அழைத்துப் பேசலாம் என்று தோன்றியது. யாராயிருக்கும் என்பதை அறிய முதல் பக்கத்தைத் திருப்பினேன்.
priyaha என்றிருந்தது.
இன்றைக்கு அந்த வகுப்பில் பாடமெடுத்து முடிந்ததும் அந்த நோட்டைக் காட்டி யாருடைய நோட்டு இது என்றேன்.
ஒரு குழந்தை எழுந்து நின்றாள். அழைத்து நோட்டைக் கொடுத்துவிட்டு ஆசிரியர் அறையில் என்னை வந்து பார்க்கச் சொன்னேன்.
வந்தாள்.
”பெயரென்னப்பா?”
”பிரியங்கா”
“நோட்டில் என்ன எழுதியிருக்க பாரு” என்றதும் பார்த்துட்டு சரியாகவே எழுதியிருப்பதாகச் சொன்னாள்.
சரி உன் பெயருக்கு ஸ்பெல்லிங் சொல்லு என்றால் piriyaha என்கிறாள்.
”இப்படித்தான் எப்பவும் எழுதுவியா?”
“ ஆமாம் சார்”
பயந்து போனவனாய் அலுவலகம் சென்று அவளது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை எடுத்துப் பார்த்தால் piriyanga என்றிருந்தது.
அவளது பெயரை அவளுக்கு எழுதச் சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
அவள் இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 50 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்.
மூன்றாம் தரத்தில் பேசுபவரிடம் இது போனால் “ பாரு பேரே எழுதத் தெரியவில்லை. இதல்லாம் பதினொன்னாங்கிளாசு படிக்குது. வெளங்குன மாதிரிதான்” என்று சொல்லக் கூடும்.
பெயரையே எழுதக் கற்றுக் கொள்ளாமல் கூட ஒரு குழந்தையால் பத்தாம் வகுப்பைக் கடந்து வந்துவிட முடியும்.
பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையின் தகப்பன் என்கிற முறையில் இந்தக் கல்வித் திட்டத்தில் எங்கோ குறை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது ரிசல்ட் வேண்டும் என்று பிழியும் இந்தக் கல்வி அமைப்பு பெயர் எழுதத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை தேர்ச்சி பெறச் செய்துவிட வேண்டும் என்று ஆசிரியரை உந்தித் தள்ளுகிறது.
இந்த அணுகுமுறை மிக மோசமான பின் விளைவுகளை, ஒரு பலவீனமான சமூகத்தைக் கட்டமைக்கும் என்பதால் இது பற்றி எனக்கு கவலையாயிருக்கிறது.
உங்களுக்கு?
பி.கு: இது 2014 ஆமாண்டு இதே நாளில் எழுதியது. பிரியங்கா ஓரளவு தெளிவோடு கல்லூரி போய்க்கொண்டிருக்கிறாள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...