Saturday, January 28, 2017

65/66, காக்கைச் சிறகினிலே ஜனவரி 2017

கோவிலுக்குப் போய்விட்டார்கள் விக்டோரியாவும் கீர்த்தனாவும் வழக்கம் போலவே.

குடிசை எரிவது தெரிகிறது. குழந்தைகளின் மரண ஓலம் கேட்கிறது. சவமாய் சுவர் சாய்கிறேன்.

கிறிஸ்மஸ் வந்துதுன்னா ஏம்ப்பா இப்படி பேயறஞ்சு பிரம்மை பிடிச்ச மாதிரி உக்காந்துடற?”

கேட்ட மகனிடம்

ராமையா குடிசை எரிந்த கதை சொன்னேன்,

அழுத குழந்தைகளை தூக்கி நெருப்பில் எறிந்த கதை சொன்னேன்...

44 பேர் எரிந்து சாம்பலான கதை சொன்னேன்....

ஏம்பா

அரைப் படி நெல்லுக்கு கிஷோர்

நாசமாப் போவாங்க. இதை ஏம்பா இவ்வளவு நாள் சொல்லல நீ?”

ராமையா குடிசை நெருப்பை விடவும், இவ்வளவு நிலம் வைத்திருப்பவர்கள் இதுமாதிரி குற்றம் செய்ய மாட்டார்கள் என்ற தீர்ப்பை விடவும், பெரிதாய் சுட்டது அவன் கேள்வி.

மன்னித்துக் கொள் மகனே.

எவ்வளவோ பாவம் செய்கிறோம். அவற்றில் தலையாய பாவம் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டியதை சொல்லத் தவறுவதே ஆகும்.

@@@@@@@@@@@@@@@@@@ 


ஆக சமீபத்தில் ஏறத்தாழ எழுநூறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி இடங்களை வாங்கிப் போட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இவர் ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துக்களை பதிகிறவர் அல்ல.

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னதான சில நாட்களில் அந்தக் கட்சி பல கோடி ரூபாய்களை வங்கிகளில் அதுவும் டெபாசிட் செய்திருப்பதாக தகவல்கள் வந்தபடியிருக்கின்றன. கொல்கத்தாவில் உள்ள ஒரு வங்கியில் அறிவிக்கப்படுவதற்கு முதல்நாள் கோடிரூபாய்க்குமேல் அந்தக் கட்சி டெப்பாசிட் செய்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

யாரும்  இது விஷயத்தில் தங்களை கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதில் பாரதிய ஜனதாக் கட்சி மிகுந்த அக்கறையோடு காய் நகர்த்துகிறது. அதனால்தான் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் வரத்து பற்றி கணக்கெதுவும் காட்டத் தேவையில்லை என்பதான ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்திருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சியும் அதன் துணைத் தலைவர் ராகுல் அவர்களும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இது மிகவும் ஆறுதலானதும் மகிழ்ச்சிக்கு உரிய செய்தியும் ஆகும்.

அவர்களுக்கு நினைவுபடுத்த ஒன்று இருக்கிறது நமக்கு.

2013 ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடரில்லோக்பால்குறித்த விவாதம் நடந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் விவாதத்தில் கலந்துகொண்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி லஞ்சம் ஒழிப்பு நடவடிக்கை என்பது மேலிருந்து கீழ் நோக்கி நகர வேண்டும் என்றார். இந்த லோக்பாலானது லஞ்ச ஒழிப்பென்பது கீழிருந்து மேல் நோக்கி நகர்த்தப் பார்க்கிறது. அந்த வகையில் இது குறைபாடுள்ளது என்றார். இன்னும் விளக்கமாக இது 500 ரூபாய் லஞ்சம் வாங்குகிற ஒரு அலுவலக எழுத்தரை கைது செய்யும். கோடி கோடியாய் கார்ப்பரேட் கட்சிகளிடமிருந்து நன்கொடை என்ற பெயரில் பணம் பெருகிற அரசியல் வாதியை, அரசியல் கட்சியை கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்று கூறினார்.

அவரது இந்த ஆழமான விவாதத்தை அன்றைக்கு பாரதிய ஜனதாக் கட்சியும் காங்கிரசும் மிகக் கடுமையாக எதிர்கொண்டன.

குறைபாடுள்ள இந்த லோக்பாலின் நீட்சியாக ஏதோ ஒரு புள்ளியில் கட்சிகள் பெறும் நன்கொடைகளை கணக்கில் காட்டத்தேவை இல்லை என்று இந்த அரசு அறிவித்துவிடக் கூடிய ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டினார்.

அந்தக் கூட்டத் தொடரில்கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் கணக்கில் காட்டுவதை கட்டாயமாக்க வேண்டும்என்ற ஒரு தனிநபர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அப்படி ஒரு சட்டத்தை இன்றைக்கு மத்திய அரசு மிக வெளிப்படையாக கொண்டு வந்துவிட்டது. அதை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்க்கிறது. வேடிக்கை என்னவென்றால் இப்படி நடக்கும் என்று எடுத்து சொன்னதோடு இதற்கு எதிராக தோழர் யெச்சூரி முன்மொழிந்த அந்த தனிநபர் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சியும் எதிர்வாக்களித்து தோற்கடித்தது என்பதுதான்.
***************
****************    

மாண்பமை ஜெயலலிதா அவர்களின் மரணம் கொடூரமானது. ஒவ்வொரு அதிமுக தோழனின் கைபிடித்தும் எனது இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய மாயைகளை அவரது மரணம் உடைத்துப் போட்டிருக்கிறது.

எந்தத் திரளுக்கு அவர் ஏதும் செய்யவில்லையோ அந்தத் திரள் வாயிலும் வயிற்றிலுமடித்துக் கொண்டு உழுது புரண்டு கதறியது. அவர் கூடவே இருந்து பொய்யாய் புகழ்ந்து ‘அம்மா, அம்மா’ என்றவர்கள் அடுத்த நாளே கூச்சமே இல்லாமல் அவரை ஜெயா என்றார்கள். அவர் சும்மா எல்லாமே சின்னம்மாதான் என்றார்கள்.

அந்த அப்பாவித் திரளுக்கு உண்மையாய் இருந்து அவர்களோடும் இருந்திருப்பீர்களேயானால் சத்தியமாய் அந்தத் திரள் உங்களை சாக விட்டிருக்காதே தாயே.

@@@@@@@@@@@@@@@@@@  
  

ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்கு கேரளாவிலிருந்து முதல்வர், ஆளுநர், முன்னால் முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகிய அனைவரும் ஒரே பயணிகள் விமானத்தில் சென்னை வந்து விமான நிலையத்திலிருந்து ஒரே காரில் நெருக்கி அமர்ந்தபடி வந்து அஞ்சலி செலுத்திவிட்டு வந்த மாதிரியே திரும்பிப் போனார்கள்.

இது தற்செயலாய் நிகழ்ந்ததல்ல. மரணச்செய்தி கேள்விபட்டதும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு திட்டமிட்டிருக்க வேண்டும். பக்கத்து பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரின் குடும்பத்தில் யாரோ அல்லது ஒரு ஆசிரியரோ இறந்து போனால் அடுத்தவர்கள் கூடிப்பேசி ஒரு வேன் எடுத்துக் கொண்டு போவது மாதிரி வந்து போயிருக்கிறார்கள்.

இது கேரள மண்ணின் பண்பாடு.

அப்போது அஞ்சலி செலுத்தப்போன திரு ஸ்டாலின் அவர்கள் மாண்பமை முதல்வரின் கரம் பற்றி ஆறுதல் கூறியதும், கலைஞர் அவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது திரு தம்பித்துரை அவர்களும் திரு ஜெயகுமார் அவர்களும் அங்கு சென்று நலம் விசாரித்ததும் நம்பிக்கை அளிக்கின்றன.

என்றைக்கேனும் தமிழகத்திலிருந்து ஒரே காரில் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே காரில் கேரள முதல்வரின் மகளது திருமணத்திற்கு செல்லக்கூடும்.

பேரப்பிள்ளைகள் காலத்திலாவது நடக்கட்டும்
****************************************

காக்கையைப் பொறுத்தவரை தோழர் இன்குலாப் அவர்களின் இழப்பு சத்தியமாய் ஈடு செய்ய இயலாதது. இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்கூட காக்கைக்கான தொடரையும் கவிஞர் தமிழன்பன் அவர்களது நூல் குறித்த விமர்சனத்தையும் எழுதிக் கொடுத்திருந்தார்.

தோழர் இன்குலாப் நான்கைந்து கவிதைகளை எழுதியிருப்பதாகவும் மற்றவை எல்லாம் கோஷங்கள் என்றும் ஒருவர் சொல்லியிருக்கிறார். வருத்தமென்னவெனில், இவ்வளாவு சொன்ன அவர் சரியாய் எண்ணி நான்கா அல்லது ஐந்தா என்று சொல்லியிருக்கலாம்.

மற்றபடி அவரது கருத்தில் எங்களுக்கு வருத்தமேதும் இல்லை. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்காக எழுதப்படும் கோஷங்களும் எங்களைப் பொறுத்தவரை இலக்கியம்தான் ஆசானே.

“நாங்க எரியும்போது எவன் மசிறப் புடுங்கப் போனீங்க” என்ற எங்கள் இன்குலாப்பின் வரிகள் கோஷம் என்று நீங்கள் சொல்வதும், அது எங்களது உயிர்மீட்பின் இசையாக இருப்பதும் தற்செயலானது அல்ல.

யூனியன் கார்ஃபைடு விசவாயு கக்கி மக்களைக் கொன்றொழித்த வேளையில் சென்னையில் அதற்கெதிராக ஒரு பேரணி. நிறைய குழந்தைகள். எல்லாக் குழந்தைகளின் கைகளிலும் பதாகைகள். அவற்றிற்கான கோஷங்களை தோழர் இன்குலாப் எழுதியிருந்தார். அதிலொன்று,

“வானம் வேண்டும்
பூமி வேண்டும்
வாழும் உரிமை
வேண்டும் வேண்டும்”

இது எங்கள் மக்கள் கவிஞர் எழுதிய கோஷம். இதை இலக்கியம் என்கிறேன் நான். இல்லை என்று மறுக்கும் யாரோடும் பொதுவெளியில் விவாதிக்க தயாராயிருக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவருக்கான ஒரு பாராட்டு விழாவை காக்கை சார்பில் எடுத்திருந்தோம். அப்போது அவர் சொன்னார்,

”பெரும்பாண்மை சிங்கள இனம் சிறுபாண்மை தமிழினத்திக் கொன்றழிக்கிறது. நான் தமிழர்களுக்காக எழுதுகிறேன். ஒருவேளை தமிழர்கள் பெரும்பாண்மையினராகவும் சிங்களவர்கள் சிறுபாண்மையினராகவும் இருந்து தமிழர்கள் சிங்களவர்களை அழித்தொழித்துக் கொண்டிருந்தால் நான் நிச்சயமாய் சிங்களவர்களுக்காகத்தான் எழுதிக் கொண்டிருப்பேன்.”
  
இதற்காகத்தான் நாங்களவரை கொண்டாடுகிறோம்.

உங்களது நெறியாள்கையில்தான் நீங்கள் இல்லாதபோதும் காக்கை பயணிக்கும்.

போய் வாருங்கள் தந்தையே.

*****************************************************      

Friday, January 27, 2017

பிழைக்கிறீர்கள் சார்

ஒருக்கால் தில்லி சொன்னால் இவர் உங்கள் பையிலும் ஒசாமா படம் இருந்தததாகக் கூறி உங்களை பதவி நீக்கம் செய்வார் என்பதால் கவனம் மந்திரிமார்களே.
அதே தில்லி சொல்வார்கள் என்றால் உங்கள் பையில் ஒசாமா படம் இருந்ததாகக் கூறி உங்களையும் உங்கள் சின்னம்மா கட்சியிலிருந்து நீக்கக் கூடும் என்பதால் கவனம் முதல்வர் அவர்களே
பிழைக்கிறீர்கள் சார்

யாரைப் பார்த்து?

யாரைப் பார்த்து திரும்பத் திரும்ப பொறுக்கி என்கிறீர்கள் திரு சாமி அவர்களே.
தைரியம் இருந்தால் காரைக்காலுக்கும் நாகைக்குமிடையே கிரஹாம் ஆன்ஹூக் நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சி முடிவை வெளியிடச் சொல்லுங்கள் உமது அரசை.
ஆராய்ச்சியை ஏன் நிறுத்தினீர்கள்
மீறியும் நடந்த ஆராய்ச்சி முடிவை ஏன் வெளியிட மறுக்கிறீர்கள்.?
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் அங்கு இருந்தது என்பதும் அது மெசபடோமியாவைவிட தொண்மையானது என்பதும் தவிர வேறென்ன அதற்கான காரணம் திரு சாமி அவர்களே
கீழடியை ஏன் அவசர அவசரமாக மூடுகிறீர்கள்.
சிந்துச்சமவெளிக்கு இணையான நாகரீகம் அங்கு இருக்கக்கூடும் என்ற பயம்தானே?
வாயை மூடுங்கள் திரு சாமி என்று கூறக்கூட கூச்சமாய் இருக்கிறது. வயதை மதிக்கிற தமிழன் நான்.
இனி என்னுடைய பிள்ளைகளோடு எனது இனத் தொண்மையை உரையாடத் தொடங்க வேண்டும் என்ற தேவையை புரிய வைத்திருக்கிறீர்கள். அதற்கென் நன்றி

படிச்சாய்ங்களானெல்லாம் கேட்கக் கூடாது







மாலை சிறப்பு வகுப்பு.
"உட்கார்ந்து படிங்கடா"
"செல்ல குடுங்க"
"ஏண்டா?"
"உங்களோட செல்பி எடுக்கனும்"
"படிங்கடா எருமைங்களா"
"எருமைங்களுக்கு செல்பி எடுக்கனும்"
"எரும எப்படி செல்பி எடுக்கும்?"
"எரும எப்படி படிக்கும்?"
செல்பி எடுத்தாச்சு.
சரி, படிச்சாய்ங்களானெல்லாம் கேட்கக் கூடாது

எங்க புள்ளைங்கடா

கொடியேற்றம் முடித்ததும் அறைக்கு வந்தோம்
மாணவர் போராட்டம் குறித்து பேச்சு திரும்பியது
"கொஞ்சங்கூட வெக்கம் ரோஷமெல்லாம் இல்ல உங்களுக்கு" என்றான் ஒரு தம்பி என்னைப் பார்த்து.
"ஏண்டா?"
"அவிங்கதான் நீங்க வேணவே வேணாம்னு சொன்னாய்ங்கல்ல"
"ஆனா அவிங்க வேணாம்னு நாங்க எப்படா சொன்னோம். "
எங்க புள்ளைங்கடா

Saturday, January 21, 2017

என்ன செய்ய முடியும் உங்களால் என்பதை

களத்தில் நின்ற பிள்ளைகளே உங்களின் சராசரி வயது அநேகமாக 20 இருக்கலாம்.

அநேகமாக வென்றிருக்கிறீர்கள். எழுதப் படிக்கத் தெரியாத ஒரு தகப்பன் முனைவர் பட்டம் பெற்ற பிள்ளையைப் பார்த்து எப்படி மகிழ்வானோ அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு.

அரியலூரை சேர்ந்த 17  வயதேயான  நந்தினி என்ற தலித் சமூகத்தைச் சார்ந்த உங்கள் சகோதரியை வன்புணர்வு செய்து கொன்றிருக்கிறார்கள். உண்மையான கொலையாளியை கைது செய்யாமல் யார் யாரையோ கைது செய்து போக்கு காட்டுகிறது  உங்களுக்கு ஆதரவாக நிற்கும் இதே காவல் துறை.

ஏதாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

என்ன செய்ய முடியும் உங்களால் என்பதை யோசியுங்கள்.

Wednesday, January 18, 2017

திரும்பும்

"எப்படா வருவ? "

"தெரியாது"

"அப்பப்ப வந்து சாப்ட்டு போங்கடா"

" பார்க்கறேம்மா"

முதல்முறையாக போராடப்போகும் கிஷோரைப் பார்க்க மகிழ்ச்சியாயிருக்கிறது.

பிள்ளைகளின் இந்தக் கோவத்தை கல்வியை பொதுப்படுத்தக்கோரியும் திருப்பிவிட்டோமென்றால் போதும்.

திரும்பும்.

Tuesday, January 17, 2017

எது வேண்டுமானால் செய்யும்...

இந்த அரசாங்கம் எவ்வளவு வன்மமானது, மனிதத் தன்மையற்றது என்பதை பள்ளிக்கரணையிலும் மதுரையிலும் ஆகச் சமீபத்தில் பார்த்தோம்.
போராடிய பிள்ளைகளின் பெற்றோரை வசியம் செய்ய முயற்சித்த காவல்துறை முடியாத நிலையில் மிரட்டிப் பார்த்தார்கள். ஏடிஎம்மில் போதுமான பணம் நிரப்பு என்று மத்திய அரசுக்கெதிராகப் போராடினால் மாநில அரசு மிதித்தது.

50 பேரை 300 காவலர்கள் ரவுண்டு கட்டி தாக்கிவிட்டு காவலர்களைத் தாக்கினார்கள் என்று வழக்கு ஜோடித்துள்ளது.

இப்போது அது எது வேண்டுமானாலும் செய்யும்

நம்முன் உள்ள பணிகள்

1) காயம்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவம்
2) வழக்குகளை எதிர்கொள்ள திட்டமிடல் (கடுமையான பிரிவுகளில் இருக்கலாம். வருடக்கணக்காக    கோர்ட்டுக்கலையும் இளைஞர்கள் இருக்கிறார்கள்)
3) பிள்ளைகள் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தடையின்றி தொடர ஆவண செய்தல்

அப்பாவின் மடி சாய்ந்து அழுகிறேன்.

தோழர்கள் Aazhi Senthil Nathan Bala Murugan மற்றும் இளமதி ஆகியோரது தாயார் இயற்கை எய்தினார்கள் என்ற தகவலோடுதான் இன்று விடிந்தது.
புத்தகத் திருவிழாவில் இளமதியை சந்தித்தபோதே அம்மாவின் உடல்நிலை சன்னமாக பாதிப்போடுதான் இருந்ததென்று சொன்னார்.
பார்க்கனும் மதி என்றபோது அடுத்தமுறை சென்னை வரும்போது சொல்லுங்க அழைத்துப் போகிறேன் என்றார்.
இனி அது சாத்தியமில்லை.      

அப்பாவின் மடி சாய்ந்து அழுகிறேன்.

அம்மாவை, மாமியை, பாட்டியை இழந்து வாடும் அனைவரது கரம் பிடித்தும் அழுகிறேன்.

இளைய கோவத்தை...

இந்த இளைய கோவத்தை நெறிப்படுத்துவோம்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் என் முத்தம்.

விவசாயம்
குடிநீர்
எல்லோருக்குமான தரமான சமமான பொதுக் கல்வி
மருத்துவம்
பெருமுதலாளிகளுக்காதவரவான அரசுகளின் திமிரடக்குதல்
சாதி மிதித்தல்
பெண்ணும் ஆணும் எதிர்சமம் என உணர்தல்
என்று சகல தளங்களிலும் இந்த கோவத்தை கொண்டு செல்வோம்

அலங்கா நல்லூரில் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் மீண்டுமொரு முத்தம்

Monday, January 16, 2017

அவர்கள்….. குழந்தைகள்….

தங்கையின் திருமண அழைப்பிதழை வைப்பதற்காக திருவையாறு சென்றுவிட்டு திரும்புவதற்காக திருவையாறு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். வருகிற பேருந்துகள் எல்லாம் பிதுங்கிக் கொண்டு வந்தன. இரண்டு படிக்கட்டுகளிலும் கூட்டம் தொங்கிக் கொண்டு போனது. சரியான முகூர்த்தநாள் என்பது தெரியாமல் புறப்பட்டது தவறாகப் போனது.

பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போனதே அல்லாமல் குறைந்தபாடில்லை. கும்பகோணம் போகிற பேருந்து காலியாகப் போனது. திருக்காட்டுப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் போகிற பேருந்துகளும் காலியாகவே போயின. அதில் அமர்ந்து போகிறவர்களைப் பார்த்தால் ஒரு விதமான பொறாமையே வந்தது. ஆக, இருக்கிற கூட்டமெல்லாம் அரியலூர் வருகிற கூட்டம்தான் போல. அந்த எண்ணமே ஒருவித அயர்வை ஏற்படுத்தியது. பத்துப் பேருந்துகள் காலியாய் வந்தாலும் இருக்கிற ஜனங்களுக்கு காணாது என்றே பட்டது. சரி, உட்கார இடம் கிடைக்கிற வகையில் ஒரு பேருந்து வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தோம்.

ஓரமாய் மூடிக்கிடக்கும் ஒரு கடையின் படியில் அமரலாம் என்று போனோம். படிக்கட்டின் ஒரு மூலையில் ஏற்கனவே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது.ஒரு இளைய ஜோடி அமர்ந்திருக்க அவர்களது குழந்தை தன்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது அவன்மீதும் அவர்களுக்கு கவனம் இருக்கவே செய்தது. “ஏய், மண்ணுல விளையாடாத, சிரங்கு வந்துடும். ஆபுறம் டாக்டர்ட்ட தூக்கிட்டு போய் ஊசி போட்டுடுவேன்” என்று அவனது அப்பா சொன்னதுதான் தாமதம், “நான் பெரிய பையனா வந்து நம்ம ஸ்ப்லெண்டர எடுத்துட்டு போயி அந்தக் கொரங்கு மாமா மேல ஏத்தி அறைக்கப் போறேன்” என்று விளையாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமலே சொன்னான்.

இதைக் கேட்டதும் நானும் விக்டோரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். இருவர் மனதிலுமே ஒரு பழைய சம்பவம் மலரும் நினைவாய் வந்துஎங்கள் புன்னகையை ஆழமாய் அர்த்தப் படுத்தியது.

அப்போது நாங்கள் பெருமாள்பாளையத்தில் குடியிருந்தோம். கிஷோருக்கப்போது மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். அவனுக்கான சளிப் பிரச்சினைக்கு மருத்துவர் நரசிம்மன் அவர்களிடம் ஹோமியோ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அவரது மருத்துவமனை நொச்சியத்தில் இருந்தது. ஒரு முறை
அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு அவரிடம் கிளம்பினோம். போகும் வழியெல்லாம் எதையாவது கேட்டுக் கொண்டே வருவான். நானோ, விக்டோரியாவோ ஒருபோதும் அவனது கேள்விகளை அலட்சியப் படுத்தியதே இல்லை.

நொச்சியம் நெருங்கிய பொழுது சாலை ஓரத்தில் மரங்களில் தென்பட்ட குரங்குகளைப் பார்த்துவிட்டான். குரங்குளைப் பற்ரிய கேள்விகளாய் கேட்டு ஒரு வழி செய்துவிட்டான். அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் இடையே நடந்த உரையாடலுள் ஒரு மெல்லியப் பகுதியைப் பார்ப்போம்,

“பாப்பாக் கொரங்கெல்லாம் ஸ்கூலுக்கு போகுமாம்மா?”

“போகும்”

“அவங்களுக்கு யார் ரைம்ஸ் சொல்லிக் கொடுப்ப்பாங்க?”

“கொரங்கு மிஸ்”

“கொரங்கு மிஸ் அவங்கள ஸ்கேல்ல அடிப்பாங்களா?”

“மாட்டாங்க”

:”அப்புறம் ஏன் எங்க மிச் மட்டும் அடிக்கிறாங்க?”

“ஏன்னா அவங்க மனுஷ மிஸ்” (அய்யோ, விக்டோரியா இவ்வளவு அழகான பதிலை இவ்வளவு லாவகமாகவும் அலட்சியமாகவும் சொல்வதைக் கேட்டு சத்தியத்திற்கும் சிலிர்த்தே போனேன்)

“ஓ, பாப்பாக் கொரங்குக்கு சளிப் புடிச்சா யாரு மருந்து கொடுப்பா?”

“கொரங்கு டாக்டர்”

இப்படியாக குரங்குகளைப் பற்ரியே அவர்களது உரையாடல் சுழன்றுகொண்டிருக்க மருத்துவமனை வந்துவிட்டது. காத்திருக்கும் தேவை அன்று ஏற்படவில்லை.

அவருக்கு கிஷோரை மிகவும் பிடிக்கும்.

“காய் கிச்சு, எப்ப வந்தீங்க?”

“தம்பி, சாருக்கு வணாக்கம் ச்சொல்லு”

“சாரெல்லாம் இல்ல மாமாதான். கிச்சு, எங்க மாமா பேரென்ன சொல்லுங்க பார்ப்போம்”

சட்டென சொன்னான் ,”கொரங்கு மாமா”

சிரி சிரியென்று சிரித்தார். எங்களுக்கு மிகவும் சிரமமாய் போய்விட்டது. ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டோம். வரும் வழியில் குரங்குகளைப் பார்த்ததையும், தொடர்ந்து அவன் குரங்குகளைப் பற்றியே உரையாடிக்கொண்டு வந்ததையும் அதன் விளைவாகத்தான் இப்படிப் பேசிவிட்டான் என்றும் நாங்கள் சொல்லச் சொல்ல அவற்றையெல்லாம் சற்றும் சட்டை செய்யாதவராய் சாக்லெட் கொடுத்து தூக்கி வைத்துக் கொண்டு “எங்க இன்னொருதரம் சொல்லு” என்று அவனோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தை ”கொரங்கு டாக்டர்” என்று சொன்னதும் எங்களுக்கு பழைய நினைவு வந்துவிட்டது. விக்டோரியா அவனை நோக்கி கையை நீட்டி சிரிக்கவே விக்டோரியாவை நோக்கி தாவிக் குதித்து ஓடி வந்தான்.

“தம்பி பேரு என்ன?”

“தனுஷ்”

“ஓ! என்ன படிக்கிறீங்க?”

“யு.கே.ஜி” என்றவன் என்னை நோக்கி கை நீட்டி “இவங்கதான் மாமாவா?”

“ஆமாம்”

“அய்ய, நல்லாவே இல்ல, வேணாம்”

“சரி, என்ன செய்யலாம்?”

“கா விட்டு தொறத்தி விடுங்க ஆண்டி”

“சரி, செஞ்சுடலாம். நீ ஆண்டிய கட்டிக்கிறியா?”

இதைக் கேட்டதும் “சரி” என்றவன் விக்டோரியாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “ஓகேவா” என்றான்.

“ஓகே, ஓகே” விக்டோரியாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.

“டேய் பெரியவங்கள அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன்ல” என்று சொல்லிக் கொண்டே அவனை வாங்க எழுந்து வந்தார்.. விக்டோரியா அவனைத் தராமல் இழுத்து வைத்துக் கொண்டு ,”விடுங்க சின்னப் பிள்ளைதானே, போகவும் அவன் சரியாய்த்தானே சொல்கிறான்” என்று சொல்லவும் அவனது அம்மாவும் அப்பாவும் எங்களோடு சேர்ந்து சிரித்தனர்.

குழந்தைகளைக் கவனித்தால் எதையும் மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். சிரித்துக் கொண்டே கற்கலாம். எவனோ ஒருவன் அரை போதையில் உளறி இருக்கிறான் , “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று.எந்தக் குழந்தைக்காவது இது புரியும் என்றால் அவன் சொல்பவனைக் கொன்றே போடுவான்.இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு நிகர் எதுவுமே இல்லை.

இதற்குள் அவர்கள் போக வேண்டிய ஊருக்கு பேருந்து வரவே அவனை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.முத்தம் கொடுத்து டாடா சொல்லி விக்டோரியா அனுப்பி வைக்கவே அவன் காற்ரிலே ஒரு முத்தம் அனுப்பினான். அதில் ஒரு துளி என் மீதும் விழுந்தது.அயர்வு முழுக்க பறந்தே போனது.

“பேசாம அவங்க முகவரிய வாங்கி வச்சிருந்தா போயி அப்பப்ப கொஞ்சலாம்ல”

“அதுக்கு அங்க போகனௌம்னு அவசியமே இல்ல”

“அப்புறம்?”

“ஊர்ல இருக்கிற எல்லாக் குழந்தைகளுமே அவந்தான். எல்லக் குழந்தைகளுமே ஒரே மோல்டுதாங்க”

அப்பா, எவ்வளவு ஞானம். இவ்வளவு நாள் இதை எப்படி கண்டு கொள்ளாமல் போனோம்.

ஒரு வழியாய் எங்களுக்கும் பேருந்து வந்தது. நின்றுகொண்டுதான் போக வேண்டும். உள்ளே நுழைவதற்கு இடம் கிடைக்கவே ஏறிவிட்டோம்.

ஏறிய பின்புதான் ஏன் ஏறினோம் என்று தோன்றியது. முன்னே இருப்பவர்களைப் பின்னே போகுமாறும் பின்னே இருப்பவர்களை முன்னே போகுமாறும் ஒவ்வொரு முறை நடத்துநர் தள்ளும் பொழுதும் ஒவ்வொருவரும் எரிச்சலடைந்தோம். சிலர் அவரை கண்டபடி சபிக்கவே செய்தனர்.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறிக்கொண்டேதான் இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் நடத்துநரை சபித்துக் கொண்டேதான் வந்தோம். “இப்படிச் சம்பாரிக்கிறதுக்கு பதிலா…” என்றுகூட சிலர் அசிங்கமாய் திட்டவே செய்தனர்.

சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து, கசங்கி, இதில் அடிக்கடி நடத்துநர் டிக்கட் போடுவதற்காய் இப்படியும் அப்படியுமாய் நுழைந்து போவது என்பதெல்லாம் சேர்த்து உயிரே போனது.

இந்த நேரம் பார்த்து மழை வேறு வந்துவிடவே இன்னும் துயரம் அதிகமானது. எல்லா இடங்களிலும் ஒழுகியது. இரண்டு பக்கங்களிலும் ஜன்னல் கண்ணாஅடிகள் சரியாக வேலை செய்யாததால் சாரல் வேறு. ஏறத்தாழ குளித்தோம்.

ஒருவழியாய் பேருந்து அரியலூர் வந்தது. எல்லோருக்கும் அப்பாடா என்றிருந்தது. சிலர் அதைக் கொஞ்சம் சத்தமாகவே வெளிப்படுத்தினர்.

இறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கேட்டான், “இந்த பஸ் எப்ப திரும்பக் கிளம்பும்?”

“அதை ஏன் கேக்கற. எவ்வளவு ஒழுகினாலும் உடனே கிளப்பிடுவாங்க”

“பாவம் இல்ல அந்த கண்டக்டர்?”

அதை யாரும் சட்டை செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு பொட்டில் அறைந்ததுபோல் இருந்தது.

ஆம் நாம் ஏன் இப்படி யோசிப்பது இல்லை? அல்லது குழந்தைகள் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறார்கள்?

அவர்கள் குழந்தைகள்.


எனக்கொரு ஆசை, என்னைத் தவிர எல்லோரும் குழந்தைகளாய் மாறிவிட வேண்டும். அல்லது என்னோடு தொடர்புடைய அனைவருமாவது குழந்தைகளாய் மாறிவிட வேண்டும்.

சிரித்தவர்கள் ரசித்து சிரித்திருப்பார்களா?

ரயிலுக்கு புறப்படும் போது போகிற போக்கில் பார்த்தது. ஏதோ ஒரு சேனலின் பொங்கள் சிறப்பு நிகழ்ச்சியின் முன்னோட்டம்.
அனிதா (புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி ) அமர்ந்திருக்கிறார். கண்கள் கட்டப்பட்ட நிலையில் புஷ்பவனம் கம்பினால் பானைகளை உடைக்க முயன்று கொண்டிருந்தார்.
“ மூனு பானைகளையும் உடைச்சுட்டா உங்க அறுபதாம் கல்யாணத்த ஜாம் ஜாம்னு கொண்டாடலாம்” என்று உற்சாகமும் நக்கலும் கொப்பளிக்க அனிதா சொல்ல...
“ஆமாம் என்னோட அறுபதாம் கல்யாணத்துக்கு பொண்ணு யாரு?”
“ஏய்...”
எங்கள் வீட்டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏன் , அனிதாகூட ரசித்து சிரிக்கிறார்.
ஒருக்கால், “ஆமாம், அறுபதாம் கல்யாணத்துல மாப்ள யாரு?” என்று அனிதா கேட்டிருந்தால் புஷ்பவனம் கேட்டபோது ரசித்து சிரித்தவர்கள் ரசித்து சிரித்திருப்பார்களா?

எங்கள் வீட்டு வாக்குகள் விற்பனைக்கல்ல

கணினி வாங்குவதற்கா அல்லது வேறு ஏதேனும் கடன் வாங்குவதற்கா என்று சரியாக ஞாபகமில்லை. நண்பர் சிவக்குமார் பத்து காசோலைகளையும் விக்டோரியாவின் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு சத்திரம் பேருந்து நிலையம் வரச் சொல்லியிருந்தார். சரியாக நான்கு மணிக்கெல்லாம் வருவதாக சொல்லியிருந்தவர் ஐந்தரை வரைக்கும் வரவே இல்லை. ஏறத்தாழ ஒன்றரை மணிநேர காத்திருப்பு தந்த அயர்வு என்னை ஒரு தேநீர்க் கடையை நோக்கித் தள்ளியது. சூடான வாழைக்காய் பஜ்ஜியை எடுத்து தாளில் வைத்து நசுக்கி எண்ணெயை எடுத்துக் கொண்டிருந்தபோது சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது. தான் வேறொரு வேலையாக கரூர் சென்றுள்ளதாகவும் போன வேலை முடிய இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிடும் என்பதால் அடுத்த நாள் சென்று மேலாளரைப் பார்க்கலாம் என்றும் ஆகவே இன்று வீட்டிற்கு திரும்பிவிடுமாறும் கேட்டுக் கொண்டார். வேறு வழி, பஜ்ஜிக்கும் தேநீருக்குமான காசைக் கொடுத்துவிட்டு பேருந்தை நோக்கி நகர்ந்தேன்.

வரிசையில் முதலில் நின்ற பேருந்திலேயே உட்கார இடம் கிடைத்தது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. முன்னேயும் இல்லாமல் பின்னேயும் இல்லாமல் நடுப்பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் இடம். அறச்செல்வனுடைய பாப்பாவிற்கு பள்ளியில் இடம் கிடைத்ததற்கு அவர் அடைந்த சந்தோசத்தை அந்த இருக்கை எனக்கு வழங்கியது. அப்பாடா என்று அமர்ந்தால் சுசிலா அம்மாவின் “நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா/ இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”/ பாடல், அப்படியே கரைந்து போய்க் கிடந்தேன். அதைத் தொடர்ந்து, “நினைக்கத் தெரிந்த மனமே / உனக்கு / மறக்கத் தெரியாதா?/ அடுத்ததாக “கண்கள் இரண்டும் / என்று / உன்னைக் கண்டு பேசுமோ / காலம் இனிமேல் / நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ? /என்று சுசிலா அம்மாவின் தேன் கலந்த அற்புதங்களாகத் தொடரவே வேறு எதிலும் மனது நகராமல் ஓட்டுநருக்கு நன்றி சொல்லியபடி மனது பரவசித்துக் கிடந்தது. அப்படியே கண்களை மூடி லயித்துக் கிடந்த நமது மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போட்டார்கள் நான்கைந்து கல்லூரி மாணவர்கள்.

அவர்களது நச்சரிப்புத் தாங்காமல் ஓட்டுநர் குத்துப் பாடல்களைப் போட்டார். சரி, இனி வேறு வழியில்லை. கொண்டு வந்திருக்கும் புத்தகத்தை வாசிக்கலாம் என்று தேடியபோதுதான் அதை தேநீர்க் கடையிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது.. தோழர்.மதிவண்ணனின் ‘உள் ஒதுக்கீடு சில பார்வைகள்’ என்ற புத்தகம்.கருப்பு பிரதிகள் வெளியீடு. அநேகமாக ஐம்பது ரூபாய் என்று நினைவு. ஒரு தொலை பேசினால் அனுப்பி விடுவார்கள். ஆனால் அதற்குள் வைத்திருந்த வெற்றுக் காசொல்லைகள் ரொம்பவே பயப்படுத்தின. எனவே அடுத்த இறக்கத்திலேயே இறங்கி சாலையைக் கடந்து அந்தப் பக்கம் போய் அடுத்தப் பேருந்தேறி சத்திரம் வந்து அரக்கப் பறக்க தேநீர்க் கடைக்கு வந்தால் நல்ல வேளை, புத்தகம் எடுத்து வைக்கப் பட்டிருந்தது.

ஆனால் அதைத் தர மறுத்தார் கடைக்காரர்.

”வெறும் புத்தகமா இருந்தா கொடுத்துடலாம் சார். காசோலை இருக்கு”. ( ஒரு ஆழமான புத்தகத்தைவிட வெற்ருக் காசோலைகளுக்கு அவ்வளவு மரியாதை. அது சரி, வெறும் புத்தகமா இருந்திருந்தால் நாம் மட்டும் இப்படி வேர்க்க விறு விறுக்க வந்தா இருக்கப் போகிறோம். நேரே வீடு போய் கருப்புப் பிரதிகளுக்கோ அல்லது வைகறை அய்யாவிர்கோ தொலை பேசியிருந்தால் புத்தகம் வந்திருக்காதா? நம்மை இழுத்து வந்ததும் அந்த வெற்றுக் காசோலைகள்தானே)

“அது என்னுதுதான் சார். வேணா காசோலையைப் பாருங்க, எட்வின்னு இருக்கும்”

“அதெல்லாம் சரிங்க சார். ஆனா நீங்கதான் எட்வின்னு எப்படி முடிவு பன்றது”” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் புத்தகத்திற்குள்ளிருந்த விக்டோரியாவின் புகைப் படத்தை எடுத்து, “இது யாருங்க சார்?” என்றார்.

“அவங்க என் மனைவி”

“அப்ப சிரமத்தைப் பார்க்காம அவங்களைக் கொஞ்சம் வரச் சொல்லுங்க.கோவிச்சுக்காதீங்க, இது காசோலை விஷயம். உரியவங்க கிட்ட சேர்க்கனுங்கறதுக்காகத்தான் இவ்வளவும்”

உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற அவரது அக்கறை அவர்மீது மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. இனி வேறு வழியில்லை, விக்டோரியாவை அழைக்கலாம் என்று அழைபேசியை எடுப்பதற்கும் சிவா என்னை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

“கோவிச்சுக்காதீங்க சார். இப்பதான் வேலை முடிஞ்சுது. இப்ப உடனே புறப்பட்டாலும் சத்திரம் வந்து சேர இன்னும் ரெண்டு மணிநேரம் ஆகும். அதுதான்  நாளைக்குப் பார்த்துக்கலாம்னு சொன்னேன். வீட்டிற்குப் போயிட்டீங்களா சார்?”

நடந்தவைகளை அவரிடம் பொறுமையாக சொல்லி முடித்தேன்.

“எந்தக் கடை சார்?”

சொன்னேன்.

“செல்லக் கொஞ்சம் மொதலாளிகிட்ட கொடுங்க சார்”

கொடுத்தேன்.

பேசிவிட்டு அலைபேசியை என்னிடம் கொடுத்தவர், “சிவாவோட கூட்டாளியா சார். தப்பா நெனச்சுக்காதீங்க. உரியவங்ககிட்ட பொருள் போய் சேரனுங்கிற பயம்தான் சார்”

நன்றி சொல்லிப் புத்தகத்தைப் பெற்ருக் கொண்டு கிளம்பினேன்.

 தவறவிட்ட நமது வெற்றுக் காசோலைகள் சிலவற்றை திரும்பப் பெறுவதற்குள் நாம் இவ்வளவு சிரமப் பட வேண்டியிருக்கிறது. தவற விட்ட வெற்றுக் காசோலைகளை எப்படு பட்டேனும் திரும்பப் பெறவே விழைகிறோம். இதில் வயதில் மூத்த நாம் மட்டும் அல்ல, சிறிய குழந்தைகளும் தவறவிட்ட தங்கள் பொருட்களை மீட்க எத்தனை சிரமத்தை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வர். பல நேரங்களில் பள்ளிக் கூடத்தில் கூட்டு வழிபாட்டினை நடத்தித் தரவேண்டிய இடத்தில் இருப்பதால் இதை நன்கு உணர முடிகிறது.

ஒவ்வொரு மாலையும் பள்ளியை மூடும் முன் குழந்தைகள் தவறி விட்டுச் செல்லும் பேனா, பென்சில், ஜாமெண்டரி பெட்டிகள், மற்ரும் டிபன் பாக்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்து தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்படும். அடுத்த நாள் கூட்டு வழிபாட்டில் உள்ள பொருட்களின் பட்டியல் வாசிக்கப்பட்டு உரியவர்கள் தக்க அடையாளத்தை சொல்லி பெற்ருக் கொள்ளச் சொல்வோம். குழந்தைகளின் மனப் பக்குவத்தை நன்கு அறிந்தவரும் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுபவருமான ஆசிரியர் சேவியர் அந்தப் பணியினை சரியாக செய்து முடிப்பார். சில நேரங்களில் ஒரே பொருளுக்கு இரண்டு மூன்று குழந்தைகள் உரிமை கொண்டாடுவார்கள். அதை மிகச் சாமர்த்தியமாக சமாளித்து உரிய குழந்தையிடம் பொருளை சேர்த்துவிடுவார்.

அதை விடுங்கள்,  தெருவில் எதையேனும் கீழே இருந்து எடுத்து “ இது யாருடையது?” என்று கேட்டுப் பாருங்களேன். நான்கைந்து பேராவது திரும்பிப் பார்த்து, உரிமை கோராது போயினும் அது தன்னுடையதாக இருக்குமோ என்றேனும் தடுமாறிப் போவர். இது இயல்பு.

ஆனால் இரண்டு நாட்களாக ஒரு பேருந்து ஓடாமல் அதன் உரிமையாளர் வீட்டில் நிற்கிரது. ஓட்டுநர் வரவில்லை என்று காரணாம் சொல்லப்படுகிறது. அர்த்த ஜாமத்திற்கு கொஞ்சம் பிந்தி அந்தப் பேருந்து நிற்கும் இடம் குறித்த தகவலோடு அந்தப் பேருந்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக ஒரு தொலைபேசி தகவல் வருகிறது. செய்தியைப் பெற்ற அதிகாரி முப்பதிற்கும் ஒன்றிரண்டு குறைவான வயதுடைய ஒரு சின்னப் பெண்.

அந்தப் பின்னிரவிலும் ஒரே ஒரு ஊழியரின் துணையோடு போகிறார்.பேருந்து கூரையில் விரிக்கப்பட்டிருந்த தார்ப்பாய்க்கடியில் சற்றேரக்குறைய ஐந்தேகால் கோடி சிக்கியதாக செய்த்தாள்கள் கூறின.

“:இவ்வளவு பணாத்தை ஏன் சார் பேருந்துக் கூரையின் மேல வச்சிருக்கீங்க?”

“இது என் பணாமில்லங்க மேடம்.” பேருந்து உரிமையாளர் பதறுகிறார்.

“அப்புறம் இது எப்படி உங்க பஸ்ல வந்தது?”

“சத்தியமா தெரியலீங்க மேடம்?”

“இது உங்க பஸ்தானே?”

“ஆமாங்க மேடம்”

எவ்வளவு நாளா உங்க வீட்டு வாசல்ல இந்த பஸ் நிர்குது?”

“ரெண்டு நாளாங்க மேடம்”

“ரெண்டு நாளா உங்க பஸ் உங்க வீட்டு வாசல்ல நிற்குது.அதன் கூரைல உங்களுக்குத் தெரியாம யாரு பணத்த வச்சிருக்க முடியும்?”

“எங்க அம்மா மேல சத்தியமா இது என் பணம் இல்லீங்க மேடம். இது எப்படி இங்க வந்துச்சுன்னும் சாமி சத்தியமா எனக்குத் தெரியாதுங்க”

பிடிபட்ட ஐந்தே கால் கோடியும் அவருடையது அல்ல என்று நிறுவித் தப்பிக்க ஒன்றிரண்டு கோடிகளை செலவழித்தும் ஒன்றும் கதை ஆகாமல் இன்றளவும் அவர் பதட்டத்துடன் இருப்பதாகத் தகவல்.

அடுத்து இன்னொரு இடம்.

அது ஒரு தேநீர்க்கடை. விஷேச காலங்களில் பிச்சுக்கிட்டுப் போற வியாபாரம்னாக்கூட ஆயிரத்தைத் தாண்டி கல்லா கட்டாத கடை. அந்தக் கடையில் ஒரு பெரிய தொகை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வருகிறது. விரைந்த அதிகாரிகளின் கையில் நாற்பது லட்சம் சிக்குகியதா செய்தித் தாள்கள் சொல்லின.

“இந்தப் பணாம் இங்க எதுக்கு வந்தது?”

“என் புள்ளைங்க மேல சத்தியமா இது என் பணம் இல்லீங்க சாமி”

“இது ஒன்னோடது இல்லன்னு தெரியும். யாரோடது? எதுக்கு இங்க வந்துச்சு?”

தேநீர் கடைக்காரரும் சாமி சத்தியமாய் நாற்பது லட்ச ரூபாய் பண மூட்டை எப்படி தனது வீட்டிற்குள் வந்தது என்று தெரியாது என்று சொல்லியிருக்கிறார்.

வழக்கமாக வீட்டிலிருந்துதான் எப்படி போனது என்று தெரியாமல் பொருள்கள் களவு போகும். அவர்களது இடத்திற்குள் அவர்களுக்குத் தெரியாமல் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று தெரியாமல் இருப்பதுதான் தேர்தல் நகைச்சுவைகளிலேயே அதி சிறந்த நகைச்சுவை.

பிடிபட்ட தொகையே லட்சம் கோடிகளைத் தாண்டும்போல இருக்கும் பட்சத்தில் பிடிபடாமல் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பட்டது எவ்வளவு தேறும்?

இவ்வளவு கீழ்மைகளுக்கும் மத்தியில் தேர்தல் நெருக்கத்தில் வந்து விட்டது. மதுரையில் ஒருவர் தனது வீட்டில் “எங்கள் வீட்டு வாக்குகள் விற்பனைக்கு அல்ல” என்று எழுதி வைத்திருக்கிறார். அது என்ன விளைவைத் தரும் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அது நிச்சயமாய் வெளிச்சமான நன்பிக்கையைத் தருகிறது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...