Thursday, September 24, 2015

தினமணியின் முன்னுரை

மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், தொழிற்சங்கத் தலைவர், கலை இலக்கியச் சமூகச் செயற்பாட்டாளர், கல்வியாளர் என்னும் பன்முக ஆளுமைகொண்டவர். பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் கல்லூரியில் விரிவுரையாளராகத் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய எட்வின், தற்போது சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

சமுதாய மாற்றத்தில் ஆர்வமுடையவர். ஆசிரியர்களின் உரிமைகளைக் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள எட்வின், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தொழிற்சங்கத்தில் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். மூன்று கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சென்னையில் இருந்து வெளிவரும் ‘காக்கைச் சிறகினிலே’ இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பொறுப்புவகிக்கிறார். இவருடைய வலைத்தளம் http://www.eraaedwin.com.

முன்னுரை


 போய்ச் சேர வேண்டியவர்களுக்கு போய் சேரும் வரைக்கும் சலிக்கவே சலிக்காமல் சிலவற்றை மீண்டும் மீண்டும் பேசவேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்கிறேன்.  “கூறியது கூறல் குற்றம்என்ற மரபை உடைத்துக் கொண்டும் கல்விகுறித்து மீண்டும் மீண்டும் சிலவற்றை பேசவே ஆசைப்படுகிறேன்.

எல்லாமே மோசம்என்ற பொதுக் கருத்தை சகலத்தையும் நாசப்படுத்தும் மிக முக்கியமான காரணிகளுள் ஒன்றாக நான் பார்க்கிறேன். எல்லாம் மோசம் என்ற கருத்துக்குள் நிபந்தனையற்று விழுவதன் மூலம் நல்லதுகளை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் நாம் தவறுகிறோம் என்றே உணர்கிறேன். இந்தத் தவறை கல்வித் தளத்திலும் நாம் செய்கிறோம் என்றே படுகிறது. நல்லதுகளைத் தட்டிக் கொடுத்து ஒன்று திரட்டாமல் அல்லதுகளை அப்புறப் படுத்த இயலாது.

எனவே நிச்சயமாக இந்தத் தொடர் நல்லதுகளை தட்டிக் கொடுத்து அல்லதுகளுக்கு எதிராக ஒன்று திரட்ட முயற்சிக்கும். அது முடியாத பட்சத்தில் குறைந்த பட்சமாக நல்லதுகளை தட்டிக் கொடுக்கிற வேலையையாவது செய்யும்.

1)      எது கல்வி?
2)      எது செய்யக் கல்வி?
3)      மனசைத் தொட்ட ஆசிரியர்கள், சம்பவங்கள், பள்ளிகள், மாப்பிள்ளை பெஞ்ச்சுகள், கல்லூரிகள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுஜனங்கள்
என கல்வியோடு தொடர்புடைய அனைத்தையும் அனைவரையும் கலந்து கட்டி பேசவும் விவாதிக்கவும் கிடந்து தவிக்கிறேன்.

இளமையில் கல்என்றாள் கிழவி. முடியும் வரை கல்வி அவசியம் ஆகிறது. எனவேமுடியும் வரை கல்என்று தொடருக்கு பெயரிட்டிருக்கிறேன்கல்விகுறித்த எனது கருத்துக்களை உங்களது கருத்துக்களும் விவாதங்களும் வழிநடத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்.



Wednesday, September 23, 2015

கடிதம் 09

நண்பர்களே,
திணமனி.காம் இல் "முடியும்வரை கல்" என்ற எனது தொடர் ஒவ்வொரு வெள்ளியும் வருகிறது.
அதன் முன்னுரை இன்று வந்துள்ளது. வாசித்து சொல்லுங்கள்

Sunday, September 20, 2015

கடிதம் 08

அன்பின் நண்பர்களே,
வணக்கம்.

தமிழில் வரும் நூல்களுக்கு எடிட்டிங் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கத்திக் கொண்டிருப்பவர்களுள் நானும் ஒருவன். மேற்கே நூல்களை செதுக்கித் தருவதற்கென்றே தொழில் முறை எடிட்டர்கள் இருக்கிறார்கள்.  நல்ல வருமானமும் பெருகிறார்கள்.

தமிழில் அதற்கானத் தேவை நிறைய இருக்கிறது.ஆனால் அது தேவையான அளவிற்கு உணரப் பட்டதாகத் தெரியவில்லை. தமிழ்ப் படைப்பாளிடமும் அது குறித்த பார்வை இல்லை என்றால் கூட பழுதில்லை. அதை தங்களுக்கான கௌரவ குறைச்சலாகவே பார்க்கிறார்கள். தனது படைப்பை இன்னொருவர் சரி செய்வதா? என்ற ஆதங்கம் இவர்களுக்கு. உண்மையில் அது சிக்கெடுத்தல் மாதிரி ஒரு விஷயம்தான்.

என்னைக் கேட்டால் ஒவ்வொரு படைப்பிற்குமே எடிட்டிங் தேவைதான் என்பேன்.

நேற்று முக நூலில் போன வருடம் இதே நாளில் வைத்திருந்த கவிதையினை மீண்டும் வைத்தேன்.

பொம்மைக்காக ஏந்தப்பட்ட
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடந்து போயினர் இருவரும்
கடவுளை சபித்தபடியே
தன்னைத் தானே
இருள் சபித்துக் கொண்டது அறியாமல்

என்ற அந்தக் கவிதையினை வாசித்த தம்பி ஜானகி (நந்தன் ஸ்ரீதரன்) அதில் உள்ள கடைசி மூன்று வரிகள் பொழிப்புரை போல் எதற்கு என இன்பாக்சில் வந்து கடிந்தான்.

பொம்மைக்காக ஏந்தப்பட்ட
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடந்து போயினர் இருவரும்
கடவுளை சபித்தபடியே

அதை எடுத்து விட்டு பார்த்தால் கவிதை இப்படி அழகாக வருகிறது.  நன்றி ஜானகி.

எடிட்டிங் அவசியம்தான்.


Friday, September 18, 2015

வலைகளில் விழுவோம்


எனது வலையிலிருந்து ஒரு பக்கத்தை “புதிய தரிசனம்” இதழில் வைத்துள்ள செய்தியை சொல்வதற்காக அதன் ஆசிரியர் தோழர் ஜெபக்குமார் அன்று அதிகாலையே அழைத்தார். என்னமோ தெரியவில்லை அன்றைய எங்களது உரையாடல் வலைகளைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது.

2010 கு பிறகான எழுத்துக்களை பரிசீலிக்கும் யாராலும் வலைகளைத் தவிர்த்துவிட்டு அந்தக் காரியத்தை செய்ய இயலாது என்ற எனது கருத்தோடு பெருமளவு ஒத்துப் போனது ஜெபக்குமார் கருத்து.  

நல்ல நூல்களை அறிமுகம் செய்வது போலவே நல்ல வலைகளையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று இருவருமே யோசித்தோம். ஆனால் அதை என்னையே செய்ய சொல்வார் என்று அந்தப் புள்ளியில் நான் நினைக்கவில்லை. யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு தம்பி விஷ்ணுபுரம் சரவணனிடம் யோசனை கேட்டேன். உடனே தொடங்குமாறு ஆலோசனை சொன்னவன் அத்தோடு சுறுக்கிக் கொள்ளாமல் சில வலைகளையும் பட்டியலிட்டான்.

அப்படித்தான் “வலைக்காடு” ஆரம்பமானது. இருபது வலைகளை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தோம். உடல்நிலை என்னை பதினேழிற்கு மேல் அனுமதிக்கவில்லை.

அதற்குப் பிறகு எனது வலையில் அண்ணன் முத்துநிலவன் அவர்களின் ‘வளரும் கவிதை’ என்ற வலை குறித்து நான் எழுதியதையும் சேர்த்து பதிணெட்டு வலைகளைப் பற்றிய அறிமுக நூலாக “வலைக்காடு” வருகிறது.

சொல்ல முடியாது, இந்த நூல் வலைகளைப் பற்றிய இந்தவகையான நூல்களுள் முதலாவதாகவும் இருக்கக் கூடும். ஒருக்கால் அப்படியிருப்பின் அதற்காக பெருமைப்படா விட்டாலும் மகிழவே செய்வேன்.

தொடர் எப்படி தற்செயலாகத் தொடங்கியதோ அதேபோலத்தான் இந்த நூலும் தற்செயலாக வருகிறது.

ஒரு அதிகாலை என்னைத் தொடர்புகொண்ட தம்பி பரிதி எனது பழைய கட்டுரை ஒன்றை தனது இதழான ‘வகுப்பறை’ யில் வைத்திருப்பதாகச் சொன்னான். ஏன் பழசு? என்று கேட்டேன். “நீ கட்டுரையும் தர மாட்டேங்கற… புத்தகமும் தர மாட்டேங்கற..” அப்புறம் நான் என்ன செய்யட்டும் என்றான்.

அதற்கு முதல்நாள்தான் கவிஞர் ஜெயதேவனிடம் இந்த நூலைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தேன். அவரும் ஒரு பதிப்பகத்திடம் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த உண்மையை பரிதியிடம் சொன்னபோது “இப்பவும் என் நினைவு வரலதானே” என்று வைதான். மன்னிப்பைக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.

இப்படியாக எனது ஏழாவது நூலை தம்பி பரிதி கொண்டு வருகிறான்.

வர்தினி பர்வதா, கிருத்திகா, ஜெபக்குமார், ‘புதிய தரிசனம்’ என நன்றி சொல்லவேண்டிய பட்டியல் நீளும்.

என் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் தங்களது அன்பாலும், வார்த்தைகளாலும், சகலவிதமான உதவிகளாலும் என்னை உயிரோடு வைத்திருக்கும் தோழர்கள் மோகனா, கவிஞர் ஜெயதேவன், தோழர் ஹரிஹரன் சோமசுந்தரம் மூவரையும் என் கடைசி மூச்சு நிற்கும் வரை நன்றியோடு நினைத்திருப்பேன்.

வாசித்துவிட்டு பேசுங்கள்.



Thursday, September 17, 2015

ரசனை 13

இன்று தந்தை பெரியாரைப் பற்றி நிறையபேர் எழுதியிருந்ததை வாசித்தேன். அவற்றுள் Devatha Tamil அவர்கள் எழுதியிருந்தது ஈர்த்ததது. எழுதுகிறார்,
”பெண்கள் கையில இருக்குற கரண்டிய பிடுங்கிட்டு கல்விய கொடுன்னார் பெரியார்...
கல்வியும் கொடுத்து கரண்டியும் பிடுங்காம ரெட்டை சுமை சுமக்க வைத்துவிட்டார்கள்..”
யோசித்துப் பாருங்கள். எவ்வளவு உண்மை.
படிப்பும் வேலையையும் எத்தனையோ அவர்களுக்கு எவ்வளவோ தந்திருந்தாலும் கரண்டியை அவர்கள் கையிலிருக்குமாறு கவனமாக பார்த்துக் கொள்கிறது.
வீசி எறியுங்கள் தாயே.

Saturday, September 12, 2015

6 பெரம்பலூர் வாசிக்கிறது

பாக்தாத் வசப்பட்டு விட்டதால் ஏகத்துக்கும் மகிழ்ச்சி தைமூருக்கு. குதூகலத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான்.


சுற்றி நிற்பவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உற்சாகமும் துள்ளலுமாய் ஓடி வருகிறான் அவனது தளபதி.

“ இங்கிருக்கிற வழிபாட்டுத் தளங்களையெல்லாம் அழித்து விடலாமா மன்னா?”

பொதுவாகவே ஒரு நாடு வெற்றி கொள்ளப் பட்டபின் அங்கிருக்கக் கூடிய புராதன சின்னங்களையும் வழிபாட்டுத் தளங்களையும் அழித்துவிட்டு செல்வங்களை, அடிமைகளை, அழகு நங்கைகளை, அள்ளிக்கொண்டு போவதுதான் வழக்கம். எனவேதான் அப்படிக் கேட்டான்.

“ அவை என்ன செய்தன உன்னை?. இருக்கட்டும் விடு”

அழிப்பதற்கான அவனது நீண்ட பட்டியல் ஒவ்வொன்றாய் முற்றாய் நிராகரிக்கப் பட்டபின் கேட்டான்,

“ அப்புறம் என்னதான் செய்யட்டும் மன்னா? ”

எதையுமே அழிக்க வேண்டாம் என்றால் பிறகெதற்கு இவ்வளவு சிரமப்பட்டு கைப்பற்ற வேண்டும் என்ற கவலை அவனுக்கு.

“போ, போய் கல்வி நிலையங்கள், நூல் நிலையங்கள், அனைத்தையும் அழித்துப் போடு. கவனத்தில் கொள், பாக்தாத்தில் ஒரு புத்தகம் இருக்கக் கூடாது. கொளுத்திப் போடு”

“ இதில் என்ன லாபம் மன்னா? ” கொஞ்சம் அப்பாவியாய்த்தான் கேட்டான்.

“ முட்டாளே ! நூல்கள் மனிதனுக்கு புத்தியைத் தரும். புத்தி விடுதலைக்காக அவனைப் போராடத் தூண்டும். பாக்தாத் தொடர்ந்து நமது ஆளுகையின் கீழ் இருக்க வேண்டுமென்றால் இவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும். புத்தகங்கள் இதைக் கெடுத்துப் போடும். தொணத் தொணவென்று பேசிக்கொண்டு நிற்காமல் சொன்னதை செய் விரைவாய்”

தொண்ணூற்றி ஒன்பது விழுக்காடு சரியாய்தான் இருக்கும்.

ஆனாலும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கமில்லாத காலத்தில் எங்கோ வாசித்தது என்பதால் பெயர் அல்லது இடம் தவறாகவும் இருக்கலாம். இருந்துவிட்டு போகட்டும். அதனால் ஒன்றும் முழுகி விடாது.விஷயம்தான் முக்கியம்.

ஆக, அடிமைகளாகவே மக்கள் இருக்க வேண்டுமெனில் அவர்களிடமிருந்து புத்தகத்தை அப்புறப் படுத்திவிட வேண்டும்.

புத்தகங்களை வாசிக்காத மனிதன் தன் அடையாளம் இழப்பான். யாருக்கும் தானே விரும்பி அடிமையாவான்.

இதற்காகத்தான் யாழ் நூல் நிலையம் கொளுத்தப் பட்டது. உணர்வுள்ள தமிழ் பேசும் யாவரும் கண்ணீர் விட்டு அந்தத் தருணத்தில்அழுததும் அதனால்தான்.  ஈழத் தமிழினத்தின் அடையாளத்தை, சுயத்தை, வேட்கையை வேரறுக்கும் முயற்சியாகவே யாழ் நூல் நிலையம் கொளுத்தப் பட்டது.

எனில்,

சுதந்திரமாய் சிந்தித்து தமக்கான அடையாளத்தோடும், பகுத்தறிவோடும், எவனுக்கும் பணிய மறுக்கும் சுயமரியாதையோடும்,   மக்கள் இருக்க வேண்டும் என்று ஒரு அரசும் அரசு இயந்திரமும் விரும்பும் என்றால் அது தன் மக்களின் முன் புத்தகங்களைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.

பல ஊர்களில், ஏன், பல மாவட்டத் தலை நகரங்களில் நல்ல புத்தகக் கடைகளே இல்லை என்பதுதான் இன்றைய எதார்த்தம்.

வாசிக்கிற பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் நாம்தான் புத்தகங்களோடு மக்களை நோக்கிப் போக வேண்டும். புத்தகச் சந்தைகளை ஊர் ஊருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சந்தைக்குள் மக்களைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்.

இதுவெல்லாம் சாத்தியமா?

சாத்தியம் என்பதை புன்னகையோடு செய்து காட்டியிருக்கிறார் பெரம்பலூர் மாவட்ட ஆட்ச்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது.

அவர் பெரம்பலூருக்கு வந்தவுடன் வேறு எதைப் போலவும் வாசிப்புத் தளமும் இங்கு வறண்டு கிடப்பதை உணர்ந்து கொண்டார். ஒரு பெரிய நகரத்தின் பரப்பளவே கொண்ட இந்த மாவட்டத்தை சுற்றி சுற்றி எதை எதையோ செய்தவர் வறண்டு வெடித்துக் கிடக்கும் வாசிப்புத் தளத்தை வளப் படுத்த முடிவெடுத்தார்.

பெரம்பலூர் என்பது கல்வி நிலையங்களின் நகரம். எனவே கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து,

“ஒரு புத்தகத் திருவிழாவை இங்கு நடத்த வேண்டும். பத்து நாட்களுக்கு ஆகும் செலவை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இயலுமா? ”

“செய்துடலாம் சார்”

சென்ற ஆண்டு ஏறக்குறைய 50 கடைகளோடு புத்தகத் திருவிழாவைத் தொடங்கினார்.

ஒவ்வொரு நாள் செலவையும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள் ஏற்றன. தத்தமது மாணவர்களையும் ஊழியர்களையும் அவை தமது வாகனங்களில் கொண்டு வந்து சேர்த்தன. பார்வையாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிடவும் எகிறியது.

கடை எடுத்திருந்தவர்கள் புன்னகையோடு ஊர் கிளம்புமளவிற்கு வணிகம் அமைந்தது.

சென்ற ஆண்டின் அனுபவத்தை நன்கு படித்துக் கொண்ட ஆட்சித் தலைவர்
இந்த ஆண்டு ஒரு பெரும் பாய்ச்சலுக்குத் தயாரானார். அரசு ஊழியகளும் ஆசிரியர்களும் தங்களது குல தெய்வ கோயிலின் கும்பாபிஷேகத்தைப் போலவே பாவித்து சுழன்று சுழன்று உழைத்தார்கள்.

பப்பாசி வழிகாட்டுதலைப் பெற்றார். இந்த ஆண்டு 104 கடைகள். இதில் 64 பதிப்பகங்கள்.

உண்மையை சொல்லிவிட வேண்டும் சென்னை புத்தகக் காட்சியின் பிரமாண்டமே அசைத்துவிட முடியாத என்னை இந்தப் புத்தகத் திருவிழா நிறைய அசைத்துப் போட்டது.

என் மண்ணில் ஒரே இடத்தில் இத்தனைக் கடைகளா? குவியல் குவியலாய் இத்தனை நூல்களா? உணர்ச்சிவசப்பட்டதில் ஓரிரு துளி கசியவே செய்தது.

“ இது கொஞ்சம் அதிகமா தெரியலையா எட்வின்?” என்று கேட்கக் கூடும்.

சத்தியமாய் இல்லை. கை நிறைய புத்தகங்களோடு நடக்கும் எம் மண்ணின் இளைஞர்களையும் யுவதிகளையும் குழந்தைகளையும் பார்க்கும்போது நான் உணர்ச்சி வசப்படுவதை உணர வேண்டுமெனில் எங்கள் மாவட்டத்தின் வாசிப்பு வறட்சி பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இதில் இருக்கும் தன்னடக்கம் தினசரி மாலையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எனக்கு இல்லை. பெரம்பலூர்க் காரன் என்பதில் அதில் எனக்குத் திமிரே உண்டு. நிகழ்ச்சிகளை கண்கள் திறந்து காது கொடுத்து அனுபவித்தார்கள் எம் மக்கள்.

தினசரி மாலை ஆட்சியர் வந்து விடுவார். பதிப்பகத்து உரிமையாளர்களை வசதி எப்படி, எப்படி போகிறது என்பதை விசாரித்து அறிந்தார்.

தரமான, தீவிர இலக்கியங்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகங்களில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாகப் படவே ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து அது மாதிரி ஸ்டால்களில் ஆளாளுக்கு நூல்கள் வாங்க வேண்டும் என்றும், இல்லாது போனால் வரும் காலங்களில் இவர்கள் வராமாட்டார்கள் என்றும் சொன்னார்.இவர்கள் வராது போனால் தரமான நூல்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு வாய்க்காமல் போய் விடும் என்று புரிய வைத்தார். அது நல்ல பயனைத் தந்தது.

பிறகு போய் அரங்கில் அமர்ந்தால் முடிகிறவரை அமர்ந்து விருந்தினர்களை கை கொடுத்து அனுப்பிவிட்டுதான் திரும்புவார்.

அப்படித்தான் ஒருநாள் ஸ்டால்களை சுற்றி வரும்போது சந்தியா பதிப்பகத்தினுள்ளே நுழைந்தார். அவர்கள் எனக்கும் சின்னதாய் ஒரு கட்வுட் வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கிறார், என்னைப் பார்க்கிறார், அதைப் பார்க்கிறார்...என்னைப் பார்க்கிறார்,

“நான்தான் சார்”

“ கடை உங்களுதா? எப்படிப் போகுது?”

பதறிக் கொண்டு வந்தார் சந்தியா சௌந்திரராஜன்,

“ சார் அவர் எழுத்தாளர். இந்த ஊர்க்காரர்.”

”எங்க ஊர் எழுத்தாளருக்கு கட் அவுட்டா?” என்பது போல் பார்த்தார். இருபது நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

“நாளை நீங்க அவசியம் பேச வேண்டும்”

உத்தரவோடு விடை பெற்றார்.

அடுத்த நாள் ஆள் அனுப்பி அழைத்து பேச வைத்தார்.

பெரம்பலூரின் தொன்மச்சிறப்புகளைப் பற்றி பேசினேன். பெரம்பலூரின் வரலாறு எழுதப் படவேண்டும் என்று பேசினேன்.

அதற்கான ஒரு குழுவை அமைத்து வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆக புத்தகத் திருவிழாவின் உப விளைவாக பெரம்பலூர் வரலாறு வரப் போகிறது.

இன்னொரு பக்கம் உலகத் திரைப் படங்களும் குறும்படங்களும் தினமும் திரையிடப் பட்டன. வழிதக் கூட்டம் சொன்ன தகவல்கள் இரண்டு,

நல்லதைக் கொடுத்தால் நிச்சயம் பார்ப்பார்கள் என்பது ஒன்று.

குறும்பட ரசனை பெரம்பலூரில் தழைத்து வளரும் என்பது இரண்டு.

65000 புத்தகங்கள், 9500000 ரூபாய்க்கன விற்பனை என்பது எங்களுக்கு நம்பிக்கை தரும் விசயங்களே. 120000 பார்வையாளர்கள் , அதில் குறிப்பிடத் தகுந்த அளவு மாணவ மாணவியர் என்பது என்னைப் பொறுத்தவரை தித்திப்பான செய்திகளே.

கனரா வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ஸ்டால் எடுத்து புத்தகங்கள் வாங்க கடன் கொடுத்ததன என்பதை கண்ணால்பார்த்த என்னாலேயே இன்னும் நம்ப முடியவில்லை.

பெரம்பலூர் நூலக வாசக வட்டம் ஒரு ஸ்டால் எடுத்து நூல் தானம் கோரியது. மிக நல்ல அறுவடை. ஏறத்தாழ 45000 ரூபா மதிப்பிலான புத்தகங்களை மக்கள் எங்கள் ஊர் நூலகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குனர் தாமிரா பேச வந்திருந்தார். மிரண்டுப் போய் சொன்னார், “பெரம்பலூரில் நல்ல வாசகத் திரள் உருவாகும் பாரேன்”

நல்லவன் வாக்கு. பலிக்கும்.

இரண்டுமுறை வந்திருந்த மனுஷ்யப் புத்திரனுக்கு இந்தத் திருவிழாவில் கிடைத்த மகிழ்ச்சி வேறு எங்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

மற்ற ஊர்க்காரர்களைப் போல எங்களால் விமர்சனம் எல்லாம் செய்ய இயலாது. எங்களைப் பொறுத்தவரை வறண்ட மணற்பரப்பில் நா வறள பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு சுணை கிடைத்திருக்கிறது.

வருங்காலங்களில் எங்கள் பிள்ளைகள் ஏராளமாய் எதிர்பார்ப்பார்கள், நிறைய வளர்ந்து நிறைய விமர்சிப்பார்கள்.

அடுத்தமுறை உறவினர்களையும் நண்பர்களையும் புத்தகத் திருவிழாவிற்கு அழைக்க எண்ணியிருக்கிறேன். கும்பாபிஷேகத்திற்கும், கிடா வெட்டிற்கும் அவர்கள் அழைத்து போய் வெட்டிவிட்டு வரும் நாம் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற ஏக்கத்தை நேர் செய்ய ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது

ஸ்டால் எடுத்திருந்தவர்கள் சாப்பாடு, தேனீர் போன்றவற்றிற்கு மிகுந்த சிரமப் பட்டதை உடனிருந்து பார்க்க முடிந்தது. பார்வையாளர்களுக்கும் அதே சிரமம் இருக்கவே செய்தது. அடுத்த முறை உள்ளேயே நல்லதொரு கேண்டீன் ஏற்பாடு செய்யப் படுவது நல்லது.

இதைவிடவும் மிகுந்த அத்தியாவசியமானது கழிவறை வசதி.

அடுத்தது சில்லறைப் பிரச்சினை. இதை நானே ஆட்சியரிடம் சொன்னபோது என்ன செய்யலாம் என்று கேட்டார். சென்னையில் ஒரு வங்கி தினமும் சில்லறை பொட்டலங்களை ஸ்டால்களுக்கு விநியோகித்ததை சொன்னேன். கடைசி இரண்டு நாட்களில் இதற்கான முயற்சிகளை அவர் செய்திருந்தார்.

இவை கடந்து எதை வாங்குவது என்பதில் நிறைய குழப்பம் இருந்ததை உணர முடிந்தது. பட்ஜட்டுக்குள் எதை வாங்குவது என்பதில் தெளிவற்று தடுமாறியவர்களையும் பார்க்க நேர்ந்தது. 4000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன். அப்புறம்தான் “தோல் “ பற்றி தெரிந்தது. வாங்க பைசா இல்லை என்றார் நண்பர் ஒருவர்.

எதை வாங்குவது, தங்களது பட்ஜெட்டுக்குள் எதை எதை வாங்குவது என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனில் நல்ல நூல்கள் குறித்த புரிதலை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதனை இங்குள்ள இலக்கிய அமைப்புகள்தான் செய்ய வேண்டும். இதற்கு தொடர்ந்து கூட்டங்களை இவர்கள் நடத்த வேண்டும். இதற்கு எளிய வாடகையில் அரங்குகள் கிடைக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஆனதை சேய்ய வேண்டும். உள்ளூர் கல்லூரிக்ளும் இதில் தங்களது பொறுப்பை உணர வேண்டும்.

இவை எல்லாம் கடந்துஎங்களூர் புத்தகத் திருவிழா இரண்டு விசய ங்களை சொல்கிறது,

ஒன்று,

மாவட்ட ஆட்சியர்கள் நினைத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்கள் சாத்தியம்.

இரண்டு,

பெரம்பலூர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறது.

நன்றி : “காக்கைச் சிறகினிலே”

Friday, September 11, 2015

7 கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்…

உத்திரகண்ட் என்றாலே உதறுகிறது எல்லாம்.காணாமல் போனவர்கள் மற்றும்   இறந்தவர்களைக்கணக்கிட்டால் ஐம்பதாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள்.    நினைத்தாலே கண்களில் முட்டிக்கொண்டு வருகிறதுவயிறு பற்றி எரிகிறது.


அதுகுறித்து ஆளாளுக்கு ஆயிரம் சொல்கிறார்கள்அது அவரவர் உரிமை.அதற்குள் சென்று விவாதிக்குமளவிற்கு நமக்கு அவகாசம் இல்லைஆனால்அதுகுறித்து   வைக்கப்  பட்டுள்ள மூன்று வகையான கருத்துக்களுக்கு நாம்வினையாற்ற வேண்டிய கடமை உள்ளது.

1) “இந்தப் பாழாப் போன கடவுள் தன்னோட பக்தர்களை இப்படியா கொன்றுகுவிப்பான்?” என்பது மாதிரியாக...

2) இப்படி ஒரு பேரிடர் வரப்போவதைக் கூட சொல்ல முடியாத வானிலைமுன்னறிவிப்பு மையம் இருந்தென்னஇல்லாமல் போனால்தான் என்னஎன்பதுமாதிரியாக...

3) உத்திரகண்ட் பகுதியில் இந்துக்களை ஒரு பேரிடர் மூலம் அழிப்பேன் என்றுஏசுநாதர் தன்னிடம் முன்னதாகவே சொன்னதாக ..எஸ் அதிகாரி உமா ஷங்கர்சொல்லியுள்ளது.

இந்திய ஆட்சிப் பணியின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி எப்படிஇப்படி பேச முடியும் என்று தெரியவில்லைஅல்லது இப்படி பேசிய ஒருவரை இன்னமும் உயர்ந்த பொறுப்பில் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

கடவுள் இல்லை என்று நம்புகிற நமக்கு இது ஒரு நமட்டுச் சிரிப்போடு நகர்ந்து போவதற்கான ஒரு விஷயம்தான்.

நம்மைப் பொருத்தவரை இது ஒரு இயற்கைப் பேரிடர்இதற்கு முழுக்க முழுக்கநாம்தான் காரணம்இது குறித்துதான் இங்கு பேச இருக்கிறோம்.

இல்லாத கடவுள் இதை செய்திருக்க வாய்ப்பில்லைஅல்லது அப்படியே கடவுள்  என்று ஒருவர் இருக்கிறார் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்,  அவர் கருணையே வடிவானவர் என்று நம்புபவர்கள் கருதுவதால் இந்தப்   பேரழிவை அவர் செய்திருக்க வாய்ப்பில்லை.

ஏசு என்று ஒருவர் இருந்தாலும் உமா ஷங்கர் சொல்வதைப் போல் அவர்செய்திருக்கவோ அல்லது உமா ஷங்கரோடு பேசியிருக்கவோ இயலாது.

எனவே ஏசு உள்ளிட்ட இருப்பதாய் நம்பப் படுகிற எல்லாக் கடவுள்களையும்இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தள்ளுபடி செய்து விடலாம்.

இந்தப் பேரிடர் குறித்து ஏற்கனவே வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்திருந்த எச்சரிக்கை உரிய முறையில் கண்டுகொள்ளப் படாமல் அலட்சியப் படுத்தப்பட்டதன் விளைவே இத்தனை இழப்புகளும் என்று சொல்கிறார்கள் . எனவேவானிலை ஆராய்ச்சி மையத்தையும் இந்தக் குற்றச் சாட்டிலிருந்து தள்ளுபடிசெய்து விடலாம்.

இப்போது இந்தப் பேரிடரோடு கடவுளை இணைத்துப் பேசியவர்களோடு பேச ஒன்றும் கொஞ்சம் யாகவா முனிவர் அளவிற்கு உளறி வைத்துள்ள உமா ஷங்கரோடு கொஞ்சமும் பேச இருக்கிறது, அதை முடித்துவிட்டு இந்தப் பேரிடர் ஏன் வந்தது என்பது குறித்தும், இதனை தடுக்கவே முடியாதா என்பது குறித்தும் பேசலாம்.

கடவுள்தான் இந்தப் பேரழிவுக்கு காரணம் என்றால் மரணமுற்றதாக நம்பப் படும் 35000 பேரின் மரணத்திற்கும் அவன்தானே காரணம். எனில் இத்தனைபேரைக் கொன்ற கொலைக் குற்றவாளியல்லவா அவன்.

அதுவும் அவன் உமா ஷங்கர் சொன்னதுபோல் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே குறி வைத்து கொன்றிருப்பான் எனில் அவன் மிகவும் அயோக்கியத்தனமான, பாசிசத்தால் பிசைந்து செய்யப்பட்ட கொலைகாரன் அல்லவா?

இன்னொரு கேள்வி நமக்கு உமா ஷங்கரிடம் இருக்கிறது. இந்திய ஆட்சி[ப் பணியில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் நீங்கள் இத்தனைபேரை அழிக்கப் போவதாக ஏசு உங்களிடம் சொன்னதும் அதை அரசுக்கும் மக்களுக்கும் ஏன் சொல்லவில்லை. இதன்மூலம் இந்தப் பேரழிவில் உங்களுக்கான பங்கு அதிகம் அல்லவா?

ஆனால் உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி ( அவரது கடந்தகால நேர்மைக்காகவும், அநியாயத்திற்கெதிரான போராட்டங்களுக்காகவும் வணங்குகிறோம் ) மாற்று மதத்தினர் இத்தனை ஆயிரம்பேர் ஒரே சமயத்தில் மரணமுற்ற துயரத்தை இப்படி ஒரு மனநிலையில் ஏற்பார் எனில் அவர் பணித்தளத்தில் எப்படி மதச் சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்வார்?

இப்போது இந்தப் பேரிடர் குறித்து வருவோம். நமக்குள் ஒரு கேள்வி இயல்பாகவே எழுகிறது. வரலாறு காணாத மழை. வரலாறு காணாத பெருவெள்ளம் என்றெல்லாம் சொல்கிறோமே இந்த வரலாறுக்கு வயது எத்தனை?

புரியும்படியாகவே கேட்டுவிடலாம் இதற்கு முன்னால் இதுபோன்ற பெரு மழையோ ,பெருவெள்ளமோ ஏற்பட்டதேயில்லையா? இதைவிடவும் அதிகமான மழையும் வெள்ளமும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அப்போதெல்லாம் இவ்வளவு உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

இன்னும் கொஞ்சம் தெளிவாய் பேசினால், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இந்த அளவிற்கு வளராத காலகட்டத்தில் இதைவிட பெரு மழையில், இதைவிட பெரு வெள்ளத்தில் இவ்வளவு உயிர்ச்சேதம் இல்லாத போது இத்தனை தொழில்நுட்பமும் வசதிகளும் குவிந்து கிடக்கும் இந்தக் காலகட்டத்தில் ஏன் இப்படி?

ஒரே காரணம்தான். சின்னக் குழந்தைக்கும் புரியும் எளிய காரணம். விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் இருந்திராத அந்தக் காலத்தில் மலைகளில் காடுகள் செழித்திருந்தன. காடுகள் செழித்திருந்ததால் விலங்குகளும் செழித்திருந்தன. இது ஒரு இயற்கைச் சம நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. இதுதான் மண் அரிப்பிலிருந்து மலைகளைக் காத்தன. இப்போது காடுகளை நம்மால் எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கு அழித்துவிட்டோம். மழை நீர் கட்டுக்கு அடங்காமல் வெள்ளமெனப் பெருக்கெடுத்து பேரழிவை கொண்டு வருகிறது.
ஏகப் பட்ட காரணங்கள் வரிசைகட்டி நின்றாலும் மரங்களை அதிகமாய் வளர்க்கச் சொல்வதற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு.

1)  மரங்கள் மழையை ஆசைகாட்டி அழைத்து வரும்
2)  மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கும்.

இப்போது நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒன்று. மரங்கள் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு இவ்வளவு பெரிய பேரிடர் வந்ததென்றால் மரங்கள் இல்லாததால் மழையும் பெய்ய வேண்டிய அளவிற்கு பெய்யவில்லை என்றுதானே பொருள். எனில் மரங்கள் இருந்திருப்பின் மழையும் இதைவிடக் கூடியிருக்கும். கிடைத்த மழை நீரை ஒழுங்காக சேமித்து வைத்திருப்பின் தண்ணீர் பிரச்சினையும் தீர்ந்திருக்கும்.

வெள்ளமாய் பெருக்கெடுத்த நீர் போதிய மரங்களும் புதர்களும் இல்லாமையால் பெரும் மண் சரிவை உண்டு செய்து ஏறத்தாழ ஐம்பதாயிரம் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. இப்போது ஒரு கேள்வி வருகிறது. 

வரலாறு காணாத அளவிற்கு ஏன் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது?

பெரு மழை, பெரு வெள்ளம், பெரும் சேதம் என்று சொல்வதில் உண்மை இருப்பினும் அதுமட்டுமே உண்மையல்ல.

ஷோலாஷ் காடுகள் அழிக்கப் பட்டமையே இந்த வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் ஆகும்.

ஷோலாஷ் என்பவை ஒருவிதமான நார்ப் பயிர்ப் புதர் ஆகும். இது அநேகமாக கோரை போன்ற ஒரு பயிர். தன்னில் விழும் மழைத் தண்ணீரரை அப்படியே உறிஞ்சி பாதுகாத்து வைத்துக் கொள்ளும். எவ்வளவு காலம் நீர் இருந்தாலும் அழுகாது. நீரற்ற போது காய்ந்து விரைத்துக் கொள்ளும். இந்த ஷோலாஷ் காடுகள் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும். எவ்வளவு மழை பெய்தாலும் ஷோலாஷ் காடுகள் அவற்றை ஈர்த்து வைத்துக் கொள்ளும். பிறகு அங்கிருந்து கசிய ஆரம்பிக்கும் நீர். இது ஒரு பாதுகாப்பான அமைப்பு. இயற்கை நமக்கு அளித்த கொடை.

இந்த ஷோலாஷ் காடுகளைத்தான் நாம் தேயிலைத் தோட்டத்திற்கென்றும் , காபி தோட்டத்திற்கென்றும் அழிக்கத் தொடங்கினோம். போதாக் குறைக்கு பன்னாட்டு நிறுவனக்களின் மற்றும் பெரு முதலாளிகளின் தேவைக்கென்றும் இந்தக் காரியத்தை கொஞ்சமும் மனசாட்சியே இன்றி செய்தோம்.

மலைகளில் இப்போது ஷோலாஷ் இல்லாததாலும் அல்லது பெருமளவு அழிந்து விட்டதாலும் விழுகிற மழை நீர் அப்படியே பெருக்கெடுத்து கீழ் நோக்கி ஓடி வரத் தொடங்குகிறது. ஷோலாஷ் தேவையான அளவு இருந்திருப்பின் பெய்த மழை நீர் ஷோலாஷில் தேங்கி ஆறு அல்லது ஏழு மாதங்களாக கசிந்து கொண்டிருந்திருக்கும். இப்போது ஆறேழு மாதங்களில் கசிந்து கீழிறங்க வேண்டிய தண்ணீர் உடனடியாக ஒரே நேரத்தில் பாயத் தொடங்குவதால் இத்தகையப் பேரழிவுகள் நடக்கின்றன.

இதுதான் குடகிலும் நடக்கிறது. அதனால்தான் காவிரிப் பிரச்சினையே நமக்கு எனலாம். அல்லது குடகில் இருந்த ஷோலாஷ் காடுகள் அழியாமல் இருந்திருப்பின் காவிரியில் நமக்கு இந்த அளவிற்கு பிரச்சினைகள் இருந்திருக்காது.

மணிமுத்தாறு மலைகளிலும் புதிதாக தேயிலைத் தோட்டங்களையும் காபி தோட்டங்களையும் ப்பெரு  முதலாளிகள் ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது. இதுவும் அநேகமாக ஷோலாஷ் காடுகளை அழித்துத்தான் இருக்கும்.

புலிகளும், யானைகளும், காட்டெருமைகளும், வித விதமான காட்டெருமைகளும் வாழும் பகுதி அவை. இதன் மூலம் அவையும் இடமின்றி மக்கள் வாழும் கிராமங்களுக்குள் புகும். நாமுன் கொஞ்சமும் இரக்கமின்றி புலிகள் அட்டகாசம், யானைகள் அட்டகாசம் என்று சொல்லிக் கொண்டிருப்போம்.

நாம் சொல்ல வருவது என்னவெனில், இத்தகையப் பேரழிவுகளுக்கு காரணம் என்னவென்று கூடி ஆராய்ந்து கண்டுணர வேண்டிய தேவையே இல்லை. பாமரனுக்கும் பளிச்சென்று புரியும் விஷயங்களே இவை. இத்தகைய அழிவுகளில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் இருக்கிற வனப் பகுதியை முதலில் நாம் சேதப் படாமல் பாதுகாக்க வேண்டும். 

இதன் மூலம் பெருமளவு இத்தகைய இடர்களில் இருந்து நம்மால் தப்பிப் பிழைக்க முடியும். இருக்கிற வனங்களைப் பாதுகாத்தாலே அங்கு இருக்கக் கூடிய பழங்குடி மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப் படும். விலங்குகளின் அழிவு தடுக்கப் படும். ஆனால் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடும் பழங்குடி இன மக்களை நாம் தேசத் துரோகிகளாகவே சித்தரிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

“நாங்கள் கடவுளுக்கு முந்திப் பிறந்தவர்கள்” என்று பழங்குடினர் பாடலொன்று உண்டு. ஆக கடவுளுக்கு முந்திப் பிறந்தவர்களின் அடிப்படை வாழ்வுரிமை குறித்த அக்கறையின்றி அலட்சியத்தோடு நாம் நடந்து கொண்டால் அவர்களது சாபமே நம்மை சாய்த்துப் போடும்.

நாம் உடனடியாகச் செய்யவேண்டியவையாகத் தோன்றுவது,

1)  இருக்கிற வனங்களையும் ஷோலாஷ் காடுகளையும் மேலும் சேதப் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
2)  மேலும் புதிய வனப் பகுதிகளை மண்ணெங்கும் குறிப்பாக மலைகளில் உருவாக்க வேண்டும்.
3)  ஷோலாஷ் காடுகளை மீண்டும் தேவையான அளவு உருவாக்க முடியுமா என்பதை உரிய முறையில் அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் ஆராய்ந்து அவற்றை உருவாக்குவதில் கவனம் குவிக்க வேண்டும். இதைச் செய்வதற்காக எத்தகைய பணப் பயிர்த் தோட்டமாயினும், கட்டடங்களாயினும் அவை அழிக்கப் பட்டே ஆக வேண்டும்.  
நன்றி: காக்கைச் சிறகினிலே

Thursday, September 10, 2015

கடிதம் 07

அன்பின் நண்பர்களே,

வணக்கம்.

நலம்தானே?

நாளை மாலை கிஷோர் அத்தை மாமாவை பார்ப்பதற்காக ஷார்ஜா புறப்படுகிறான். வழியனுப்பி வைப்பதற்காக சென்னை செல்கிறோம். தம்பி அகர முதல்வன் விமான நிலையம்  வந்து சந்திப்பதாகக் கூறியுள்ளார்.

“தம்பிக்கு மூனு மாச விசாண்ணே. அதுக்குள்ளவே வேலை செட்டாயிடும் போலண்ணே. அப்படியில்லன்னா விசா எக்ஸ்டெண்ட் செய்து சரி செய்யனும்.”

“வேலையா?”

“ஆமாம். பார்த்துட்டு இருக்கார். அங்க இருக்கக் கூடாதாம். அதனால அவன் வந்து பார்த்துப்பான்னு வேலைய எல்லாம் ஒதுக்கி வைக்காத.எப்படியும் ஆறேழு மாசமாகும்” என்கிறாள் தீபா.  

நடப்பது நடக்கட்டும்.

***************************************************************************

122 நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி வெளியிடுகிறார் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா. முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அவர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துகிறார். மாண்பமை அமைச்சர் வீரமணி அவர்கள் வெளியிடுகிறார்.
ஜோலார்பேட்டையில் வரும் வெள்ளி அன்று.
நூல் குறித்து நான் பேச வேண்டுமாம்.
அதைவிட வேறென்ன வேலை?  

**************************************************************************************************************************

18 வளரும் கவிதை


எனக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அருள்முருகன் அவர்களுக்குமான அன்றைய உரையாடல் ஏதோ ஒரு புள்ளியில் அண்ணன் முத்துநிலவன் அவர்களை மையம் கொண்டது. அப்போது சொன்னேன்,

இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கவிதை எழுதலாம் என்று நினைப்பவனை இன்றைக்கே கவிஞர்’ என்றழைக்கும் பெருந்தன்மை நிலவன் அண்ணனிடம் மட்டுமே உண்டு

தனக்கே தெரியாமல் சன்னமாக சிரிக்கும் வித்தை தெரிந்தவர் அருள்முருகன். அதைக் கேட்டதும் மனிதர் சத்தமாக சிரித்தார். அதுதான் அய்யாவோட பலமும் பலவீனமும்” என்றார். “ அதுமாதிரி மட்டும் அவர் செய்திருக்கா விட்டால் இன்றைக்கு இந்த அளவிற்கான எட்வினும் இல்லை” என்றபோது இடைமறித்து நிறைய எட்வின்கள் இல்லை” என்று சரியாய் திருத்தினார்.

நல்ல எழுத்துக்களையே அங்கீகரிப்பதற்கு சங்கடப் படும் இந்தக் காலத்தில் ஒருக்கால் இவன் நன்றாக எழுதக் கூடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டாலே அவனை எழுத்தாளன் என்று அங்கீகரித்துக் கொண்டாடும் பெருந்தன்மை அண்ணன் முத்துநிலவனிடம் காணக் கிடைக்கும் அபூர்வமான குணம்.

விஞ்ஞானம் கொடையளிக்கும் எந்த ஒரு நவீன ஊடகத்தையும் வசப்படுத்திக் கொள்ளும் அவரது ஆற்றலுக்கு மிகச் சரியான சமீபத்திய உதாரணம் அவரது வலையான வளரும் கவிதை

அறுபது வயது மனிதனின் ஞானமும் பக்குவமும்இருபது வயது இளைஞனின் துள்ளலுமாய் சீறிப் பாய்கிறது வளரும் கவிதை

அவர் ஒரு ஓய்வு பெற்ற துணைத் தலைமை ஆசிரியர். பொதுவாக இப்போதெல்லாம்  இரண்டாம் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களையே ஆசிரியர்களால் கொண்டாட முடிவதில்லை. முதல் மதிப்பெண் மட்டுமே இலக்காகிப் போன இந்த இறுக்கமான சூழலில் ஒரு பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரான இவர் “ முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” என்றொரு கட்டுரையை இந்த வலையில் வைத்திருக்கிறார். இதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்எவ்வளவு விமர்சனங்களைவசவுகளைமிரட்டல்களை அதிகாரிகளிடத்திலிருந்து இவர் எதிர் கொண்டிருக்க வேண்டும் என்பதை கல்வித்துறையின் ஊழியனான என்னால் உணர முடிகிறது.

அதே தலைப்பில் இந்தக் கட்டுரையையும் உள்ளடக்கி வெளிவந்த இவரது நூல் தமிழ் வாசகத் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

யானையை மரமேறச் சொல்வது சரியா?” என்கிற கட்டுரை கல்வி குறித்த ஒரு ஆரோக்கியமான அலசலைத் தருகிறது.

இன்றையத் தமிழகக் கல்வித் துறையின் பாடத் திட்டம்பயிற்சிமுறைதேர்வுமுறை ஆகியவை குறித்து மிக அழகாக நகர்கிறது இந்தக் கட்டுரை.

பொதுவாகவேபாடத் திட்டம் குறித்தும் பயிற்சிமுறை குறித்துமதிகமாக கவலைப் படுவதும் அவைகுறித்து ஏராளமான பணியிடைப் பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதுமாக இருக்கிறது பள்ளிக் கல்வித்துறை. அவை முறையாக நடக்கின்றனவாநல்ல விளைவுகளைத் தருகின்றனவா ? என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் அவை குறித்த துறையின் அக்கறையினை செயல்பாட்டினை நாம் கேள்வி கேட்க முடியாது.

ஆனால் தேர்வுமுறை குறித்த இவர்களது பார்வையை நாம் கேள்வி கேட்டே ஆகவேண்டும். தேர்வு குறித்த கூட்டங்களில் பெரும்பாலும்,

1)   எல்லா மையங்களிலும் தேர்வினை உயிரைக் கொடுத்தேனும் உரிய நேரத்தில் தொடங்கி விட வேண்டும்.
2)   எந்தக் காரணத்திற்காகவும் ஆசிரியர்கள் தேர்வுப் பணியைத் தவிர்த்து விடக் கூடாது.
3)   ஆசிரியர்கள் அறைக்கு அலைபேசிகளை எடுத்துப் போக்க் கூடாது.
4)   மாணவர்களை அப்படி இப்படித் திரும்ப விடாமல் கண்காணிக்க வேண்டும்
5)   பறக்கும் படைகள் விழிப்போடு செயல் பட வேண்டும்

என்பதாகத்தான் அமையும். இதை கேள்வி கேட்கிறது இவரது பதிவு. இவரது பதிவின் வெப்பம் நியாயமானது. தேர்வினை எப்படிக் கறாராக நடத்துவது என்பதில் இவ்வளவு அக்கறை காட்டும் கல்வித் துறை வினாத்தாளை எப்படித் தயாரிப்பது என்பதில் தனது கவனத்தை செலுத்துவதே இல்லை என்கிற உண்மை இவரது கோவத்தின் நியாயத்தை உணர்த்தும்.

இன்றைய பெரும் ஊழல்களுள் ஒன்றாக இடம் பிடித்துள்ள வியாபம் பற்றி மிக விரிவாக “வியாபம் – இந்தியாவின் ஆபத்தான ஊழல்” என்ற கட்டுரை அப்படி ஒரு நயம் மிக்க கட்டுரை.

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்தவரெல்லாம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளாக பணிபுரியும் அசிங்கத்தை இவர் எழுவதை பார்க்கும்போது எப்படி இவரால் சிரித்துக் கொண்டே கோவப் பட முடிகிறது என்ற அய்யம் எழுகிறது.

நாட்டில் அவ்வப்போது நிகழக்கூடிய அரசியல், சமூக, சாதிய, நீதிய பேரலைகளைக் கொண்டும் மறந்துபோன வரலாறுகளை வாசகனின் மனதிற்குள் கொண்டு சேர்க்கும் இவரது எழுத்தாளுமை மிக மிக அரிதானது.

நீதிபதி குமாரசாமி அவர்கள் நமது முதல்வரை சாட்டப் பட்ட குற்றங்களிலிருந்து விடுவித்த தீர்ப்பளித்த பேரழகினை நாடறியும். இதற்காக அவர் எப்படியெல்லாம் கிழிபட்டார் என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் இதைப் பயன் படுத்திக் கொண்டு “நான்கு குமாரசாமிகள்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை தந்திருக்கிறார். நாம் அறியாத அல்லது மறந்துபோன சில குமாரசாமிகளை நமது கவனத்திற்கு கொண்டு வருகிறார்.

ரௌலட் சட்டம் 1918 இல் வந்தபோது அதை நியாயப் படுத்திய ஒரு குமாரசாமியை இவரது வலை அறியக் கொடுக்கிறது.

திருப்பூர் குமரனின் முழுப் பெயர் குமாரசாமி என்கிறது.

முருகன் என்று வணங்கப் படும் குமாரசாமியை நமக்கு அறிமுகம் செய்கிறது.

பெரும்பான்மை தமிழ்த் திரள் நையாண்டி மட்டுமே செய்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை சரியாக கையாண்டு அதன் மூலமும் சில வரலாற்று, ஆன்மீக ஆளுமைகளை நமக்கு பந்தி வைக்கிறது இவரது வலை.

அவசியம் வாசிக்க வேண்டிய அறிய பொக்கிஷங்களை தனது வலையான “வளரும் கவிதை” யில் வைத்திருக்கிறார் நிலவன் அண்ணன்.
இதில் என்ன சிறப்பு என்றால் வாசிக்க வேண்டியவற்றை வாசிக்கிறமாதிரி இந்த வலையில் வைத்திருக்கிறார்.

அவசியம் வாசியுங்கள்…
 http://valarumkavithai.blogspot.com/




Tuesday, September 8, 2015

8 சந்திப்பு

முக்கியமானவையாகவோ, ரசிக்கத் தக்கனவையாகவோ உள்ள சந்திப்புகளின் காதலன் நான்.


அப்படிப் பட்ட சந்திப்புகள் அரிதாகத்தான் கிட்டும். அப்படி ஒரு அபூர்வமான சந்திப்பினை இன்றைய (19.07.2013) தீக்கதிர் வெளியிட்டுள்ளது.

ஜக்ருதி பாண்டியா மற்றும் ஆஸ்கர் அலி இருவருக்கும் இடையே விசாகப் பட்டிணம் சிறைச்சாலையில் 90 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்புதான் அது.

2003 ஆம் ஆண்டில் ஜக்ருதியின் கணவரும் முன்னால் குஜராத் அமைச்சரும், அகமதாபாத் நகரின் பாரதிய ஜனதா கட்சியின் முன்னனித் தலைவர்களில் ஒருவருமான ஹரேண் பாண்டியா கொலை செய்யப்பட்டார்.

அவரைக் கொன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு விசாகப்பட்டினம் சிறையில் இருப்பவர்தான் ஆஸ்கர் அலி. குஜராத் உயர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இவரை விடுதலை செய்தது. ஆனாலும் சி பி ஐ உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்கிறது.

இருவரது சந்திப்பும் மிக அமைதியாக இருந்தது. ஜக்ருதி கேட்கிறார்,

“ என் பிள்ளைகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்லவேண்டும். சொல் , என் கணவரைக் கொன்றது யார்?”

அலி சொல்கிறார்,

“ சத்தியமாய் எனக்குத் தெரியாது. உங்கள் கணவர் கொல்லப்பட்ட நாளிலெல்லாம் எனக்கு அகமதாபாத் அறிமுகமே இல்லை. பத்து ஆண்டுகளாக மிகுந்த சித்திரவதைக்கு ஆளானேன். எனக்கொரு கேள்வி இருக்கிறது தாயே.”

“ கேளப்பா...”

“ நான் இழந்த இந்த 10 வருட வாழ்க்கையை யார் எனக்குத் திரும்பத் தருவார்கள்? “

இந்தக் கேள்விக்கு அந்தத் தாயிடம் மட்டுமல்ல யாரிடமும் பதில் இல்லை.

வெளியே வந்த ஜக்ருதி சொல்கிறார்,

“நான் உறுதியாக நம்புகிறேன், ஆஸ்கர் அலி இந்தக் கொலையில் ஈடுபடவில்லை. சரியாகத்தான் குஜராத் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

இந்தக் கொலையில் ஈடுபட்ட சிலரை எனக்குத் தெரியும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நான் அந்தப் பெயர்களை வெளியிடுவேன்.

என் கணவரை ஒழித்துக் கட்ட ஒரு அரசியல் சதி நடந்துள்ளது”

மூன்று விஷயங்கள் பேசப்பட வேண்டும்,,

1 ) இதே மாதிரி ஒரு சந்திப்பு தமிழகத்தில் நடந்தபோது அதற்கு கொடுக்கப் பட்ட வெளிச்சமும் முக்கியத்துவமும் இந்தச் சந்திப்பிற்கு ஏன் கிட்டவில்லை.

2) குற்றவாளிகளைத் தெரியும் என்று ஒருவர் சொல்லும் போது அவரை அழைத்து விசாரிப்பதில் அக்கறை காட்டாது ஆஸ்கர் அலியை எப்படியேனும் குற்றவாளிக்கிவிட வேண்டும் என்று சி பி ஐ முனைப்பு காட்டுவது ஏன்?

3 ) இதே மாதிரிதான் ராஜீவ் அவர்களின் கொலைப் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியும். என்னை அழைத்து விசாரியுங்கள் என்று தமிழகத்திலிருந்து வேலுச்சாமி தொடர்ந்து குரல் கொடுக்கிறார். ஏன் அவர் இன்னும் முறையாக விசாரிக்கப் படவில்லை?

எது எப்படியோ இப்படி ஒரு சந்திப்பை வெளிச்சப்படுத்திய தீக்கதிருக்கு என் நன்றிகள்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...