Thursday, March 7, 2024

அந்தக் கல்வியின் வழியும் உன்னை அடிமைப்படுத்த முயற்சிப்போம்

 ஒரு பள்ளிக்கூடம் என்று சொல்வதற்கு உரிய குறைந்தபட்ச அடையாளமான ஒரு பெயர்ப் பலகைகூட இல்லை

அது ஒரு வீடு

அதன் வாசலில் அப்படி ஒரு கூட்டம்

கற்கள், தடி, சாணி என்று அனைவரது கைகளிலும் அவரது வசதிக்கேற்ற ஆயுதங்கள்

அவரவருக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளோடு அந்தப் பெண்ணை அழைக்கிறார்கள்

வாசலுக்கு வருகிறார் அந்தப் பெண்

அந்தப் பெண்ணை மிரட்டிவிட்டு அந்தக் கூட்டம் கிளம்ப எத்தனிக்கும்போது அந்தப் பெண் பேசத் தொடங்குகிறார்

கல்லெறிந்தவர்கள், சேறு தெளித்தவர்கள், வசைபாடி எச்சரித்தவர்கள் அனைவரையும் பெற்றெடுத்த தாய் போன்ற ஈரக் குரலில்,

கடவுள் உங்களை மன்னிக்கட்டும். நான் என் கடமையைச் செய்கிறேன். அவர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

அவர்கள் கல்லெறியும் அளவிற்கு அவர் அப்படி என்ன காரியத்தை செய்து கொண்டிருந்தார்?

அந்தத் தாயின் பெயர் சாவித்திரி

கல்லெறிந்தவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள். ”உயர்குடியில் பிறந்தவர்கள்என்பதை கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அவர்களாலேயே நம்பமுடியாது. அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ படாத பாடுபட்டு அனைவரையும் அதை நம்பச் செய்வதற்கான முயற்சியில் இருப்பவர்கள். கல்வி என்பது பொதுப்பட்டால்மேல்குடி: என்பதோகீழ்க்குடிஎன்பதோ இல்லை என்பது அனைவருக்கும் புரிந்து விடும். அப்படிப் புரிந்து விட்டால்இழி வேலைஎன்று இவர்கள் கருதும் உடல் உழைப்பை இவர்கள் செய்ய நேரும் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தவர்கள்.

எளிய மொழியில் சொல்வதெனில், கல்வி பொதுப்பட்டால், உழைத்தால்தான் தமக்கு சோறு என்ற உண்மையை யாரைவிடவும் தெளிவாக உணர்ந்து வைத்திருப்பவர்கள்.

இவர்கள்தான் தன் மகன் ஜோதிராவை பள்ளிக்கு அனுப்பி அவனது புத்தி கூர்மையடைவதை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்த கோவிந்தராவ் என்கிற தகப்பனைச் சந்தித்தவர்கள்

இந்தக் கல்வியால் உன் மகனுக்கு ஒன்றும் கிடைத்துவிடப் போவதில்லை. குலத் தொழிலான விவசாயமும் மறந்து போகும்இந்தக் கல்வி அவனை மத விரோதியாக்கும். கல்வி உன் பிள்ளையைக் கலகக்காரனாக்கிவிடும் என்று நயந்து, நல்லவிதமாக எச்சரித்து ஜோதியின் கல்விக்கு சமாதி கட்டுவதில் ஓரளவிற்கு ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றவர்கள்.

விடாப் பிடியாக ஜோதி கற்பான் என்பதையோ, தான் கற்றதோடு தனது மனைவிக்கும் சொல்லிக் கொடுத்து அவரை பிறருக்கு சொல்லித்தரச் செய்வான் என்பதையோ அவர்களால் சகித்துக் கொள்ளவே இயலவில்லை

தலித்துகளுக்கும் பெண்களுக்கும் சாவித்திரி அம்மா கல்வியைத் தந்து கொண்டிருந்தார் என்பதே அவர்களது பெருங்கோவத்திற்கான காரணம்.

தலித்துகளுக்கும் பெண்களுக்கும் கல்வி தந்தால் இவர்களுக்கு என்ன?

இந்தக் கேள்விக்கான விடையில்தான்,

அவர்கள் ஏன் சாவித்திரி அம்மாவைத் தாக்கினார்கள் என்பதற்கும்,

இவர்கள் ஏன் புதியக் கல்விக் கொள்கையை இப்படியான வடிவத்தில் திணிப்பதற்கு இவ்வளாவு பிரயத்தனப் படுகிறார்கள் என்பதற்கும் காரணமாகும்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவில் ரெட்டியப்பட்டி என்றொரு கிராமம். அந்த கிராமத்து மக்கள் தங்களது கிராம சங்கத்தின் மூலமாககஸ்தூரி ஆரம்பப்பாடசாலைஎன்றொரு பள்ளியைக் கட்டுகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற குன்றக்குடி அடிகளார்,

சென்னை சர்க்காரின் புதியக் கல்வித் திட்டம் என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. ஆசிரியர்களுக்கும் புரியவில்லை. மாணவர்களுக்கும் புரியவில்லை. பொதுமக்களுக்கும் புரியவில்லை. அதன் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும்என்று பேசியதாக 15.10.1953 நாளிட்டவிடுதலைவெளியிட்ட செய்தியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளகுலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம்என்ற நூல் தருகிறது

பொதுக் கல்விக்கான அவர்களின் எதிர்ப்பையும், சென்னை சர்க்காரின் புதியக் கல்விக் கொள்கை என்று பொதுவாக சொல்லப்பட்ட குலக்கல்வியின் நோக்கங்களையும், இன்றையப் புதியக் கல்விக் கொள்கையின் நோக்கங்களையும் ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

மிகக் கூர்மையாக இதனை அணுகினால் மூன்றின் நோக்கங்களும் ஒன்று என்பது புரிய வரும். புதியக் கல்விக் கொள்கையின் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும் என்று அடிகளார் கூறியதே பெருந்தன்மையின் உச்சம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது இந்தக் கல்வித் திட்டம் தூக்கிக் கிடாசப்பட வேண்டியது.

நாம் கல்வி பெறுவதால் இவர்களுக்கு என்ன நட்டம்? ஏன் இப்படி இவர்கள் பதட்டப் படுகிறார்கள்?

கல்வி,

 1)   மனிதனை மத விரோதியாக மாற்றும்

 )   மனிதனை கலகம் செய்யத் தூண்டும்

 3)   எப்போதும் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதை கேள்விகேட்க வைக்கும்

 4)   அரியணையில் தாங்களோ அல்லது தங்களது சொல்பேச்சைக்   கேட்பவர்களோ மட்டுமே இருக்க விடாது

என்று கருதினார்கள்

கீழ்த்தட்டுஎன்று இவர்கள் கருதுகிற ஒருவன் கல்வி கற்பதன் மூலமாக மத விரோதியாகவோ, கலகக்காரனாகவோ மாறினால் இவர்களுக்கு என்ன? ஏன் கல்வி பொதுப்படுவதை எதிர்க்கிறார்கள்? அவர்களைப் பொறுத்தவரை மதவிரோதம் என்பது மநுவிரோதம். மநுவைக் கேள்வி கேட்பது என்பது சனாதன மேலாதிக்கத்தைக் கேள்வி கேட்பது.

கல்வி மேற்சொன்ன நான்கையும் அசைத்துப் போடும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவை உடையும் எனில் அனைவரும் சமம் என்றாகும். அனைவரும் சமம் என்பதை அவர்களால் ஒருபோதும் ஜீரணிக்க முடியாது.

கல்விச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான விஷயங்களில் சித்பவணர்களை ஒருபோதும் திருப்தி செய்ய இயலாது. மேற்கத்திய மேற்குடிகளின் தேசிய அரசியல் லட்சியங்களைப் போல நீடித்த, தொடர்ச்சியான தொலைநோக்கு ஆசையை நான் இதுவரைப் பார்த்த்தே இல்லைஎன்று 1879 வாக்கில் அன்றையத் தலைமை இந்திய ஆளுநர் ரிச்சர்ட் டெம்பிள் கூறியதை தனஞ்செய்கீர் தனதுமகாத்மா ஜோதிராவ் புலேஎன்ற நூலில் வைத்திருப்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

 நீடித்த, தொடர்ச்சியான, தொலைநோக்கு ஆசைஎன்பதை கூர்ந்து கவனிப்பதும் அவசியம். தொடர் கன்னி அறுந்து விடாமல் இந்த ஆசையை அவர்கள் தொடர்ந்து தலைமுறைத் தலைமுறையாக கைமாற்றிக் கொடுத்தபடி இருக்கிறார்கள். இந்தக் கங்கு அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இவர்களது செல்வாக்கு பம்பாயின் முன்னாள் ஆளுனரான எல்பின்ஸ்டோன் அவர்களைதாழ்த்தப்பட்ட மக்கள் மிகச் சிறந்த மாணவர்கள் என்று கிறிஸ்தவ மிசினரிகள் கருதுவதாகத் தெரிகிறது. இம்மாதிரியான தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எந்தவித சிறப்பு ஊக்குவிப்பையும் தருவதற்கு நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இவர்களுக்கு கல்வியைத் தருகிறோம் என்றால் கல்வியை வேர்விடாமல் செய்கிற காரியத்தை செய்கிறோம் என்று பொருள்எனறு  அரசாங்கத்திற்கான தனது பரிந்துரையில் எழுத வைத்தது.

இவர்களது செல்வாக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கல்வி குறித்து பரிந்துரை செய்த பிரிட்டிஷ்காரர்களையே அசைத்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி தருவது கடுமையான பின்விளைவுகளை அரசாங்கத்திற்குத் தரும் என்று அவர்களை  பரிந்துரைக்க வைத்திருக்கிறது.

கல்விக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவரான எல்லன்பாரோ இயக்குனர் குழுத் தலைவருக்கு எழுதிய கடிதம் பிரிட்டிஷ் அதிகாரிகளே மேட்டுக்குடி மக்களிடம் எத்தனை எச்சரிக்கையோடு இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவு படுத்துகிறது. இந்தக் கடிதத்தின் கீழ்க்காணும் பகுதியையும் தனஞ்செய் கீர் தனதுமாகாத்மா ஜோதிராவ் புலேநூலில் வைத்திருக்கிறார்.

கல்வியும், பண்பாடும் உயர்ந்த சாதி மக்களிடம் இருந்து கீழ்த்தட்டு மக்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும். சூத்திர சாதி மக்களுக்கு மட்டும் கல்வியைக் கொடுத்தால் அது பொது வெறுப்பிற்கு வழிவகுக்கும். அதற்கு முதல் பலி நாமாகத்தான் இருப்போம்

1)   ஓய்வாக இருக்கும் மேல்தட்டு மக்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டும்

2)   அவர்கள் கீழ்த்தட்டு மக்களுக்கு கல்வியைக் கடத்துவார்கள்

 என்பதே கல்வியைக் கீழ்த்தட்டு மக்களுக்கு கொடுப்பது குறித்த ஆங்கிலேயர்களின் எச்சரிக்கை உணர்வாக இருந்தது. ஓய்வாக இருப்பவனுக்கு கல்வியைக் கொடுப்பது என்றும் அவர்கள் உடலுழைப்பைத் தருகிற கீழ்த்தட்டு மக்களுக்கு கல்வியைத் தருவார்கள் என்றும் அவர்களை முடிவுக்கு வரச் செய்திருக்கிறது ஆதிக்க சக்திகளின் பிடிவாதம்.

நேரிடையாக நமக்கு கல்வி இல்லை என்று சொல்ல முடியாததால் குறைந்தபட்சம் அறிவியல் கல்வியை நமக்குத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கிறார்கள்..

அறிவியலுக்கு எதிரான ஜோதிடத்தை நமக்குத் தர முயற்சிக்கிறார்கள்.

அறிவியல் அனைவரும் சமம் என்றும் மனிதனால் முடியும் என்று கூறும்.

ஜோதிடம் மனிதனால் எதுவும் முடியாது. எழுதியபடிதான் எல்லாம் நடக்கும் என்று சொல்லும். பிரச்சினை எல்லாவற்றிற்கும் இறைவனிடம் மட்டுமே பரிகாரம் உண்டு, நீ கோவிலுக்குப் போ என்று சொல்லும். கோவிலுக்குப் போனால் யார் எங்கெங்கு நிற்க வேண்டும் என்று சொல்லும். கடவுளிடம் போ, ஆனால் கடவுளைத் தொடாதே என்று எச்சரிக்கும். கடவுளைத் தொட ஒருவர் இருப்பார். அவர் உனக்காக கடவுளிடம் பேசுவார். அவரைப் பணிந்து  அடிமையாய் இரு என்று சொல்லும்.

கல்வியைக் கட்டாயமாக்குவது தவிர்க்க முடியாதது என்றானால் என்ன. அந்தக் கல்வியின் வழியும் உன்னை அடிமைப்படுத்த முயற்சிப்போம் என்பதே புதியக் கல்விக் கொள்கையின் பிரதான கூறு.

புரிந்து கொள்வோம்


* புதிய ஆசிரியன் மார்ச் 2024

 

 

 

 

 

 

 

x

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...