Showing posts with label நன்றி/ பாராட்டு/ வாழ்த்து. Show all posts
Showing posts with label நன்றி/ பாராட்டு/ வாழ்த்து. Show all posts

Wednesday, June 18, 2025

சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்

 


திருவாரூரில் "ஒற்றைச் சிறகு ஓவியா " உள்ளிட்டு மூன்று புத்தகங்களின் வெளியீடு நடப்பதாகவும்
நான் "ஒற்றைச் சிறகு ஓவியா " குறித்து பேசவேண்டும் என்றும் Mohammed Sirajudeen கூறுகிறார்
சரவணன் என்னோடு காய் விட்டிருந்த காலம் அது
சரவணன் ஏதாவது நினைக்கப் போறான் சிராஜ் என்கிறேன்
''அய்யோ எட்வின், யாரைக் கூப்பிடலாம்னு அவர்ட்ட தான் கேட்டோம்
அண்ணன் பேசனும்னு அவர்தான் சொன்னார்" என்கிறார்



சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்
விருது கிடைத்திக்கிறது
நிறைய வரும்
முத்தம் சரவணன்

Friday, March 1, 2024

பெரம்பலூருக்கு ஒரு ”கலைஞர் நூற்றாண்டு நூலகம்”

 



உங்கள் பிறந்தநாள் பரிசாக பெரம்பலூருக்கு ஒரு ”கலைஞர் நூற்றாண்டு நூலகம்” கேட்டு கையேந்தி

வாழ்த்துகிறேன்
மகிழ்ந்து நீண்டு வாழ்க ஸ்டாலின் சார்

Sunday, January 7, 2024

எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களே


 

இசை அமைப்பாளார் AR ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் வாழ்த்துகளோடு இதை மீண்டும் வைக்கிறேன்

*************************************************

எனக்கென்னவோ இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் மொழி அரசியலை நன்கு அறிந்தவராகவும்
சனாதனம், மொழி, மற்றும் ஜனநாயகத்தை தின்று செரிக்க சங் பரிவாரம் முயலும் ஒவ்வொருப் பொழுதும் மிகச் சரியாகவும் அச்சம் இன்றியும்
எதிர்வினையாற்றுபவராகவும் தெரிகிறார்
அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும் என்றும்
இந்தியாவின் ஒற்றைமொழியாக இந்தியை கொண்டுவர வேண்டும் என்றும்
ஆதிக்கக் குரலெடுத்ததும்
கீழ்க்காணும் படத்தை ரஹ்மான் தனது ட்விட்டரில் வைக்க
பற்றிக் கொண்டது
உடனே,
தமிழ்த்தாய் எவ்வளவு அழகானவள்
அவளை இவ்வளவு கருப்பாகவும் கொடூரமாகவும் வரைவது வக்கிரம் அல்லவா என்று கொதிக்கிறார்கள்?

இவ்வளாவு உக்கிரமாய் கொதிக்கிறார்களே, யார் இவர்கள் என்று பார்த்தால்

தமிழை நீஷ பாஷை என்பவர்கள் அவர்கள்
தமிழ் எம் தாய்,
அவள் கருப்பாய் இருந்தாலும்
கொடூரமாய் இருந்தாலும் எம் தாய்
கறுப்பு காக்கையை எங்களின் மூதாதையராகப் பார்ப்பவர்கள் நாங்கள்
காகத்தை ஊரின் தோட்டியாக பார்ப்பவர்கள் நீங்கள்
எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களே
இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் என்கிறார் ரஹ்மான்
இது மொழி அரசியலில் புதுக் குரல்
அய்யோ அய்யோ
தமிழா, இணைப்பு மொழியா என்று கதறுகிறார்கள்
ஏன் கூடாது என்கிறேன்
அத்தோடு நிறுத்தவில்லை அவர்
கறுப்பாக இருப்பவர்களை தொகுப்பாளர்களாக,
நடிகர்களாக வாய்ப்பு கொடுங்கள்
நம் மக்களுக்கு நமது நிறம் பிடிக்கும் என்கிறார்
”திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”
என்கிறார் காக்கைப்பாடினியார்
காதலியைப் பிரிந்து நெடுநாள் கழித்து வருகிறான் காதலன்.

தான் வரும்வரை தன் காதலியை தன் காதலியை ஆற்றுப்படுத்திக் காத்தமைக்காக நன்றி சொல்கிறான்
தான் எதுவும் செய்யவில்லை என்றும்,
அவ்வப்போது கரைந்து நீ வரப்போவதாய் காக்கைதான் அவளை ஆற்றுப்படுத்தியது என்றும் தோழி சொல்கிறார்
காக்கையை “ஊரின் தோட்டி” என்று தீட்டாய்ப் பார்த்த இலக்கியங்களை நாங்கள் நிராகரிப்போம்
காக்கை கருப்பு,
கரைந்து எமது உறவினரின் வருகையைக் கூறி எம்மை ஆற்றுப்படுத்தும் எமது கரிய தோழர்
அதனால்தான்
விடியல் வரும் என்று கரைந்துகொண்டிருக்கும் எமது பத்திரிக்கைக்கு “காக்கை” என்று பெயர் வைத்தோம்
நன்றி ரஹ்மான்

Monday, January 1, 2024

ரொம்பக் கூச்சமா இருந்தாலும்

 ரொம்பக் கூச்சமா இருந்தாலும் புத்தகம் போட்ட திருப்திங்க ராசி அழகப்பன் அண்ணா











Saturday, October 8, 2022

ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை

அன்பின் மருத்துவர் கீர்த்தனா,

பிறந்தநாள் வாழ்த்துகள்

கடந்த பிறந்தநாட்கள் எதையும்விட இந்த பிறந்தநாள் உனக்கு மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்

ஆமாம்,

நான்கு நாட்களுக்கு முன்னர் BHMS தேர்வு முடிவு வந்தபோது உன் அருகில்தான் இருந்தேன்.

தேர்வு முடிவினைக் கண்ணுற்றதும் நீ கொண்டாடி மகிழ்ந்த விதம் எனக்குப் புதிதாக இருந்தது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது நீ அப்பாயி வீட்டில் இருந்தாய். அப்போது 491/500 எடுத்திருந்தாய்,

மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் அதை உனக்கு அலைபேசிவழி தெரிவித்தபோது

எந்தவிதமான சலனமும் இன்றி,

இன்று வியாழன், எனவே நாளைக்கு வெள்ளி என்று யாரேனும் சொன்னால்

அந்த செய்தியை எப்படி எடுத்திருப்பாயோ அப்படி எடுத்த விதம் இன்னும் பசுமையாய் இருக்கிறது

ஒரு வகையில் unbecoming of keerthna வாக இருந்தாலும்

இந்தக் கொண்டாட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

ஹோமியோ மருத்துவர் என்பது உன் கனவு என்பது எனக்குத் தெரியும்

உன் கனவுகளில் ஒன்று நிறைவேறுவதற்கு ஏதோ ஒரு இடத்தில் உன் அம்மாவோடு நானும் இருந்திருக்கிறேன் என்பதில் பெரிய மகிழ்ச்சி எனக்கு

என் மகள் ஒரு மருத்துவர்

காட்டம்மா என்று அழைக்கப்படும் காளியம்மாளின் கொள்ளுப் பேத்தி

முனியம்மாள் ராஜரத்தினத்தின் பேத்தி

ஒரு மருத்துவர்

நம்முடைய குடும்பத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய செய்திதான்

பெரிய பாரம்பரியம் மிக்க குடும்பமெல்லாம் இல்லை நமது குடும்பம்

உன் தாத்தா ஒரு இடைநிலை ஆசிரியர்

ஆனாலும் அப்பாவைவிட தாத்தாவிற்கு ஏகத்திற்கும் கடன்

என் அம்மாயி காட்டம்மா மாடு மேய்க்கும்

இன்று உன் அப்பா ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். இதற்கும் உன் கொள்ளுப் பாட்டி மாடு மேய்த்ததற்கும் நேர்விகித உறவு இருக்கிறது கீர்த்தி

அது மாடுமேய்த்து சேர்த்த பால் காசில்லாது போயிருந்தால் உன் அப்பா இன்று இந்த அளவிற்கேனுமான நிலையில் இல்லை

இதை இதுவரைக்கும் உன் சித்தப்பாவிடமோ அத்தையிடமோகூட பகிர்ந்ததில்லை

இப்போது இவற்றை சொல்வதற்கு காரணம் இருக்கிறது

உன் வேர் உனக்குத் தெரிய வேண்டும்

என் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில்

என் பணியிடத்தில், எனக்கான சமூக வெளியில்

என்னை ஒரு ஆசிரியரின் மகன் என்று மட்டும் வெளிப்படுத்திக் கொண்டதில்லைஒரு மாடு மேய்த்த கிழவியின் பேரனாக என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறேன்

அன்பிற்குரிய கீர்த்தனா,

நீ,

ஒரு மாடு மேய்த்தக் கிழவியின் கொள்ளுப் பேத்தி

இவற்றை இவ்வளவு விளக்கமாக சொல்வதற்கு காரணமிருக்கிறது

அதை சொல்வதற்குமுன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும்

அப்பாவிற்கு காது கேட்காது என்பது நீ அறிந்ததுதான்

காது கொஞ்சம் மந்தமாக இருக்கிறது என்பதை நானும் உன் தாத்தாவும் உணரத் தொடங்கியபோது நான் அநேகமாக பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்

விடுதியில் தங்கிப் படிக்கும் அளவிற்கு வசதி இல்லாததால் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன்

காது மருத்துவரைப் பார்ப்பதற்கே எங்களுக்கு காலம் ஆயிற்று

ஒரு அறுவை, அல்லது காது கேட்கும் கருவியை அவர் பரிந்துரைத்தபோது அதற்கான வசதி நம் குடும்பத்தில் இல்லை

பிறகு அப்படியேப் பழகிப் போனது

இப்போது காதுகேட்கும் கருவியைப் பொறுத்தியதும் அப்பாவிற்கு காது பெருமளவு தெளிவாகக் கேட்பதும் நீ அறிந்ததே

அதுவரையில் நான் பட்ட அவமானங்களும் நீ அறிந்ததுதான்

காது கேட்கும் கருவியை முன்னரே பொறுத்தி இருப்பின் பொதுத் தளத்தில் நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கக் கூடும்

இப்போது உன்னிடம் வைப்பதற்கு ஒன்றிரண்டு கோரிக்கைகள் என்னிடம் உண்டு மகளே

நாம் என்பது இன்றைய நாம் மட்டும் அல்ல

உன்னை ஹோமியோ படிக்கவைத்ததற்கு என்னிடம் இரண்டு காரணங்கள் இருந்தன

1) ஹோமியோ என்பது மாற்று மருத்துவம்

2) அது ஏழைகளுக்கான மருத்துவம்

ஹோமியோவை மாற்று மருத்துவம் என்று கூறுவதற்கு அது அலோபதிக்கான மாற்று என்றோ, சித்தாவிற்கு மாற்று என்றோ பொருள் அல்ல

ஒன்றால் ஒன்றை இட்டு நிரப்பிவிட முடியாது என்பதும் எனக்குத் தெரியும்

அதனதற்கென்று தனிப்பட்ட லட்சணங்கள் உண்டு

எந்த மருத்துவமாயினும் அது மக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும் என்றும்

அனைத்துவகை மருத்துவமும் ஒன்றிணைந்து மக்களுக்கான ஆய்வுகளை செய்வதும்

ஏழைகளுக்கானதாக என்பதே தவறு

ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை மாற்றி அமைக்க வேண்டும்

ஹோமியோவை ஏதுமற்றவர்களுக்கான மருத்துவமாக நான் பார்க்கிறேன்

அல்லது அப்படியாக அது மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

40 வருடங்களுக்கு முந்தைய உன் அப்பா, அப்பாயி, பாட்டி ஆகியோர் இன்று ஓரளவு வசதியோடிருக்கலாம்

எந்தவிதமான மருத்துவத்திற்கும் கடன் பெற்றாவது சடுதியில் தயாராகிவிடக்கூடிய நிலையில் இருக்கலாம்

ஆனால்,

40 வருடங்களுக்கு முன்னர் உன் அப்பா இருந்த நிலையில் எத்தனையோ பேருடைய அப்பாக்கள், அப்பாயிகள், பாட்டிகள் ஏராளம் இன்றும் உண்டு

ஏதுமற்றவர்களும் உண்டு

அவர்களுக்கும் மருத்துவம் போக வேண்டும்

அதற்கு உன் பங்களிப்பும் இருக்க வேண்டும்

அது நடந்தால் அப்பாவின் கட்டை வேகும்

வாழ்த்துகள் கீர்த்தி

அன்புடன்,

இரா.எட்வின்

07.10.2022

Thursday, December 30, 2021

நாம் கேட்டது வந்திருக்கிறது

 உசிலம்பட்டியில் மீண்டும் சிசுக்கொலை தொடங்கி இருப்பதற்கான அறிகுறி தெரியவே

அய்யத்திற்குரிய அந்த சம்பவத்தை எழுதி
அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று நள்ளிரவிற்கு 53 நிமிடம் முன்பு எழுதினேன்
சிசுக்கொலை தடுப்பதற்கு ஒரு குழுவை அரசு அமைத்திருக்கிறது
நாம் கேட்டதால் வந்ததல்ல
ஆனாலும்
நாம் கேட்டது வந்திருக்கிறது
மகிழ்ச்சியும் நன்றியும் முதல்வரே

https://www.facebook.com/permalink.php?story_fbid=6662445800463540&id=100000945577360


Wednesday, December 29, 2021

பட்டைய கிளப்பலாம் வாங்க தோழர்

 தோழர் மாதவன் மற்றும் கேத்தரீன் இணையரின் இயக்க வாழ்க்கை என்பது அவர்களது இரண்டு குழந்தைகளையும் இணைத்தவாறே தெளிந்த நீரோடைபோல ஓடக்கூடியது


கட்சிக் குடும்பம் என்ற வகையில் இவர்களது குடும்பம் என்னை எப்போதும் பொறாமைப்பட வைத்துக்கொண்டே இருக்கிறது

மாணவப் பருவம் தொட்டே தங்களது இயக்க வாழ்க்கை தொடங்கியதில் ஏதோ போதாமையை உணர்ந்த இவர்கள்

தங்களது பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே கைகளில் செங்கொடியைக் கொடுத்தவர்கள்

வீசிங் இருந்தபோதிலும் பிள்ளை கடலூரில் இருந்து திருச்சிக்கான SFI சைக்கிள் பேரணியில் மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறான்

வட மாநிலத்தில் நடந்த SFI மாநாட்டில் குழந்தை பங்கேற்கிறாள்




குழந்தையாயும் செந்தொண்டர் பேரணியில் பங்கேற்ற குழந்தைகள்

அதே செந்தொண்டர் அணிவகுப்பில் இளைஞனாய் யுவதியாய்






தோழர் மாதவன் கட்சியின் மாவட்டச் செயலாளாராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக தோழர் ரமேஷ்பாபு முகநூலில் பதிவிடுகிறார்

மகிழ்ச்சியாக இருக்கிறது

மாவட்ட மாநாடுகளும் தேர்வுகளும் மகிழ்வையும் நம்பிக்கையையும் ஒருசேர தருகின்றன

பட்டைய கிளப்பலாம் வாங்க தோழர்

29.12.2021
இரவு 7.52

Monday, August 2, 2021

இது அப்பன்களின் பெருமிதம் மகள்களே




வீட்டுக்குள்ளே பெண்ணை

பூட்டி வைப்போம் என்ற மதவெறி மனிதர்கள் தலை குனியட்டும் நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு கோலும் மோகன் பகவத்களை உலுக்கி எடுக்கடும் இது அப்பன்களின் பெருமிதம் மகள்களே பிள்ளைகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் அரை இறுதிக்குள் நுழைந்த மகிழ்ச்சியில்

02.08.2021

Thursday, July 15, 2021

வாழ்த்துகள் எங்கள் அப்பா தோழரே

 அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்.




இன்று நமது தோழர் சங்கரய்யா அவர்களுக்கு நூறாவது பிறந்த நாள்
அரசு விழாவாக அதைக் கொண்டாட வேண்டும் என்று கோரினோம்
குறைந்த அவகாசம், நடைமுறை சிக்கல் போன்றவை அது நிகழாமல் செய்துவிட்டிருக்கும் என்றே கருதுகிறேன்
அவரது நூற்றாண்டு தொடக்கத்தில் இரு செய்திகளையும் ஒரு கோரிக்கையையும் உங்களிடம் வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது
1968 இல் இருமொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் அண்ணா கொண்டு வருகிறார்
பட்டும் கற்றும் தெளிந்த அனுபவத்தோடு
இதை வாழ்த்துகிறேன். ஆனால் ஒருமொழிக் கொள்கையை நீங்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். இதை ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள்
என்று கூறினார்
அதை நாம் உணார்கிறோம்
ஆனால், அதுகுறித்து எதுவும் பேசுவதற்கோ கோருவதற்கோ உரிய நேரம் இது இல்லை
1992 இல் சட்டமன்றத்தில் பேசும்போது
திமுகவும் அதிமுகவும் உரிமை மற்றும் மாநில சுயாட்சி குறித்து அதிகமாக பேசுவதும் செயல்படுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது
ஆனால் தராளமயமாக்கல் அனைத்தையும் உலக வங்கியிடம் கொண்டுபோய் அடகு வைத்துவிட்ட பிறகு
தாரளமயத்தை உலகமயமாக்கலை எதிர்க்காமல் இவற்றை அடைய இயலாது என்பதை உணருங்கள் என்றார்
இதை கோரிக்கையாக வைக்க ஆசைப்படுகிறேன்
வெற்றி பெற்றதும் நீங்கள் தோழர் சங்கரய்யா அவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற பாங்கு எங்களை நெகிழச் செய்தது
தந்தை மகன் பாங்கு அது
அந்தத் தந்தையின் கோரிக்கையை பரிசீலியுங்கள்
தாராள மயத்தை, உலகமயமாக்கலை எதிர்த்து களமாடாமல் அதை அடைய இயலாது
திமுக அவற்றிற்கெதிராக களமாடுவது
அரசு விழாவைவிட அவரை மகிழ்ச்சிப்படுத்தும்
அதுதான் அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் வாழ்த்துமாகும்
நன்றி முதல்வரே
வாழ்த்துகள்
எங்கள் அப்பா தோழரே

Saturday, August 25, 2018

ஞானத்தில் யாமொன்றும் ஏழைகளும் அல்ல



ஞானம் எமக்கு புதிதுமல்ல 

ஞானத்தில் யாமொன்றும் ஏழைகளும் அல்ல

எல்லோருக்கும் போலவே எமெக்கும் இருக்கு ஞானம். 

வெளிப்படுத்த இயலாமல் அங்கங்கே நீளும் தடைகளை உடைப்பதில்தான் சிக்கலே எமக்கு.

வாழ்த்துக்கள் தம்பி முனைவர் திருமா....

Friday, March 24, 2017

என்னை என்னுள் அலைய விட்டிருக்கிறீர்கள்




ஒவ்வொரு சிற்றிதழ் வரும்போதும் வாசித்துவிட்டு அதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றும். ஆனால் எழுத வாய்க்காது. இதே நிலைதான் நூல்களுக்கும்.
ஆனால் “சிற்றிதழ்கள் உலகம்” வந்ததும் எழுதுவதற்கான வாய்ப்பும் அமைந்துவிட்டது.
நானும் சிற்றிதழ்களால் வளர்ந்தவன்தான்.
எண்பத்தி ஒன்றாம் ஆண்டு “தேன் மழை”யில்தான் எனது நான்குவரிக் கவிதை ஒன்று வெளி வந்தது. நான்கே நான்கு வரி, எண்ணிச் சொல்வதெனில் ஏழே ஏழு வார்த்தைகள்.
வீடு போகும்போது ஏறத்தாழ இரவு ஒன்பது மணி. வீட்டிற்குள் நுழையும்போதே “ கவிஞரு வராரு. டீயக் குடு” என்றதும் என்னோட அண்ணன் ( மாமா பையந்தான் எனக்கு அண்ணன். மாமா பொண்ணுதான் அக்கா. மாமா வீட்டிலேயே வளர்ந்தவன்) ஒன்னுக்கு எட்டு சைசில் இருந்த புத்தகத்தை (நீள வாக்கில் இரண்டாக மடிக்கப் பட்டிருந்தது) நீட்டினார். வாங்கிப் பார்த்தால் ’தேன்மழை’. புரிந்து விட்டது. எழுத்துக்கூட்டி என் பெயரை ஏழெட்டுமுறை வாசித்தேன்.
சைக்கிளை எடுத்தவனிடம் ‘எங்கடா இந்த நேரத்துல?” என்கிறார் அண்ணான். ராஜாட்ட (பொன்மலை ராஜா) காட்டனும் என்று நகர்ந்தவனிடம் “ அப்படியே பெசிலிக்கிட்டயும் காட்டிட்டு வந்துரு என்றார். இரண்டையும் செய்தேன்.
அந்த ஒரு வாரம் மாமாவின் நண்பர்கள் ரெண்டு ப்ளாக் அக்காக்கள், அத்தைகள், அண்ணன்கள் பாப்பாக்கள் மாமாவோட பணியாற்றும் மாமாக்கள் எல்லோரும் விசாரிக்கிறார்கள்.
அப்படியே விரிகிறது.
நூற்றுக் கணக்கான இதழ்களில் கவிதைகள் பிரசுரமாக தாஸ்னா விழாக்களில் பங்கேற்க அழைக்கிறார்கள்.
88 ற்கும் 90 கும் இடையே நண்பன் ராஜாவோடு இணைந்து “தாகம்” என்ற இதழையும் பிறகு “ மானுடம்” என்ற இதழையும் நடத்துகிறேன். தொடர முடியவில்லை. ஆனால் ஒருநாள் என்னிடம் படைப்பு வாங்குவதற்காக தோழன் சுகனும்வெற்றிப்பேரொளி யும் சமயபுரம் வந்து ஒரு இரவு என்னோடு தங்கி கவிதை வாங்கிப் போகிறார்கள்.
சுகனைப் பற்றி எழுத வேண்டும். நாந்தான் எழுத வேண்டும்.
பிறகு முத்துப் பேட்டையில் நடந்த மேதினப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது இரா காமராசு (Kamarasu Era) "தோழர், ஏன் நீங்கள் ப்ரோஸ் எழுதக் கூடாது?’ என்றார் எழுதினேன். “தாமரை” யில் பிரசுரித்தார்.
இதைப் பார்த்த, அப்போது ‘இளைஞர் முழக்கம்” இதழின் ஆசிரியராயிருந்த தம்பி ரமேஷ் பாபு (Ramesh Babu) ‘ஏன் தோழா, இ.மு க்கெல்லாம் எழுத மாட்டீங்களோ?” என்று கிண்டலடிக்க ஒரு பத்துப் பதினைந்து கட்டுரைகள் இளைஞர் முழக்கத்தில் வந்தன.
அப்புறம்தான் தெரியுமே?
தோழர் சித்தனோடு இணைந்து “யுகமாயினி”. கொஞ்ச காலம் சிவகாசியிலிருந்து யுகமாயினி ரெகுலர் சர்வீசில் பெரம்பலூர் வரும். நாந்தான் தோழன் ரமேஷோடு இணைந்து கவர் போட்டு முகவரி எழுதி அஞ்சல் செய்வேன்.
இப்போது “காக்கைச் சிறகினிலே”.
என்னைப் பொறுத்தவரை சிற்றிதழ்களை மாற்றிதழ்கள் என்பேன். காக்கையை அப்படித்தான் உருவாக்கம் செய்கிறோம்.
தோழர் பொள்ளாச்சி நசன் போலவே தோழர் Krish Ramadasசிற்ரிதழ்களைப் பாதுகாத்து ஆவணப் படுத்தி அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது. சம்பாரிப்பதில் ஒரு பகுதியையும் தனது நேரத்தின் ஒரு பகுதியையும் இதற்காக அவர் செலவு செய்கிறார், அதற்கென் நன்றி.
இதில் இலக்கியத்தைத் தேட வேண்டாம், இது சிற்றிதழ்கள் குறித்த ஆவணம் என்கிறார். இதுதான் முக்கியமானது.
நான் மகிழ அதுமட்டுமல்ல காரணம்,
1) பெரம்பலூர் மனிதர் ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட முயற்சி, அதுவும் பெரம்பலூர் முகவரியோடு. ஏற்கனவே என் பிள்ளை அம்மணி (Chandra Mouli ’கவண்’ என்றொரு இதழை அவ்வப்போது கொண்டு வருகிறான்.
2)என் நண்பர் முருக தீட்சண்யா முருக தீட்சண்யா ஆசிரியர் குழுவில் இருக்கிறார்
3) தோழர் Markandan Muthusamy எழுதுகிறார்
மகிழ்கிறேன். தொடருங்கள் ராதாஸ்.கிருஷ் பக்கம் தொடரட்டும். ஆசிப் அலிக்கு என் அன்பையும் பாராட்டையும் சொல்லுங்கள்.
வெகு காலத்திற்குப் பிறகு என்னை என்னுள் அலைய விட்டிருக்கிறீர்கள்.
அன்பு, முத்தம், வாழ்த்து

Monday, August 22, 2016

என் காலம் தாண்டியும் மகிழ்ந்து நீண்டு வாழவேண்டும்



"உங்களுடைய 'அந்தக் கேள்விக்கு வயது 98' ஐ யாரேனும் மறுபதிப்பு செய்தால் நல்லதுன்னு வண்ணதாசன் சொன்னார். பிரதி கைல இருக்கா?" என்று திரு சந்தியா சௌந்தரராஜன் சொன்னபோது சத்தியமாய் எனக்கிரண்டு ரெக்கைகள் முளைத்தன.

இப்படியாக அவர் சிபாரிசில்தான் அந்த நுல் மறுபதிப்பைக் கண்டது.

அதற்கடுத்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தியா ஸ்டாலில் நின்று கொண்டிருக்கிறார். எப்படி அறிமுகம் செய்துகொள்வது என்ற கூச்சத்தோடே ஒதுங்கி நிற்கிறேன்.

என்னைப் பார்த்ததும் அவரே 'என்ன எட்வின் நலமா?' என்று கேட்டவாறே என்னை நோக்கி வருகிறார்.

எனது வலது கையை எடுத்து தன்னிரு கைகளுள் வைத்துக் கொண்டவாறே பேசுகிறார்.

அப்போது அங்கு வந்த வண்ணநிலவனிடம் என்னை அறிமுகம் செய்கிறார்.

திரும்பி " நடராஜன் எட்வின் எழுத்துதானே தெரியும் உங்களுக்கு. பேச்ச ஒரு தரம் கேளுங்க" என்று சந்தியா நடராஜனிடம் கூறுகிறார்

யாருக்கு வரும் இத்தனை பெருந்தன்மை?

என் காலம் தாண்டியும் மகிழ்ந்து நீண்டு வாழவேண்டும் சார் நீங்கள்.

Wednesday, August 17, 2016

திமிறேறிப் போச்சு தாயே



ஜிம்னாஸ்டிக்கில் நான்காவது இடத்தில் இந்தியா. போதும் மகளே போதும். எங்கள் கிழட்டு உடம்புகளில் திமிறேறிப் போச்சு தாயே.
பார்க்க நாங்கள் இல்லாது போகலாம். ஆனால் உன் மன்னிப்பு கோரல் வருங்காலத்தில் பதக்கங்களை இந்தியாவும் குவிக்கும் என்ற நம்பிக்கை தந்திருக்கிறது.
அப்பனின் முத்தம் திபா

Thursday, August 11, 2016

உங்களை நம்பித்தான்

அணையைத் திறந்து விடுவதற்காக அமைச்சர் மாண்பமை ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மேட்டூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
கந்தம்பட்டி புறவழிச்சாலை அருகே ஒரு முதியவர் இரு சக்கர வாகனத்தில் அடிபட்டிக் கிடக்கிறார். அமைச்சர் காரிலிருந்து இறங்கி அந்த மனிதரை எடுத்து தன் காரில் கிடத்துகிறார். அதற்குள் அங்கு வந்துவிட்ட அவரது உதவியாளர்களிடம் அவரை ஒப்படைக்கிறார்.
அந்த முதியவருக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி கொடுக்கப் பட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப் படுகிறார்.
அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தது நெல்லையிலிருந்து பெங்கலூருக்கு சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் என்று இன்றைய தீக்கதிர் சொல்கிறது.
சொல்ல இரண்டு
1 அணை திறக்க சென்ற அந்த அவசரத்திலும் நின்று அந்த முதியவரைக் காப்பாற்றிய அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
2 இவ்வளவு நீண்ட தூரப் பயணத்திற்கு இரு சக்கர வாகனத்தைத் தேர்ந்தெடுப்பதையும், தாறுமாறான வேகத்தில் வண்டியை இயக்குவதையும் இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். உங்களை நம்பித்தான் இருக்கிறோம்
2014 ஆகஸ்ட் 11 அன்று எழுதியது

இவர் என் தோழி தெரியுமா

ஒரு அழகான செய்தியோடு முடிந்தது எனது நேற்று.
கிடைத்த செய்தி பெருமிதத்தின் உச்சிக்கே என்னை உந்தித் தள்ளியது. ஏற்கனவே இருக்கும் திமிர் போதாதென்று இன்னும் ஒரு பிடி திமிரை என்னில் போட்டு, கொஞ்சம் கர்வப் பட வைத்தது.
மதுரை சமணர் மலையின் அருகே இருந்த கருப்பசாமி கோவிலின் வாசலில் இருந்த 100 வயதான ஒரு நாவல் மரத்தை சிலர் வெட்ட முயன்றததை வர்தினி பர்வதா சென்று நான்கு மணி நேரம் போராடி ஆர்க்கியாலஜி அதிகாரிகளுக்கு தகவல் தந்து வரவழைத்து காப்பாற்றினார் என்ற தகவல்.
நான் தினமும் நாவல் பழக் கொட்டை பொடியை சாப்பிட்டு சர்க்கரையைக் கட்டுப் படுத்தி வருபவன். அந்த வகையில் ஒரு நாவல் மரம் காப்பாற்றப் பட்டதில் என் ஆனந்தம் ஏகத்திற்கும் விரிவடைந்தது.
இவர் என் தோழி தெரியுமா என்று ஊர் ஊராய் டமாரமடித்துக் கொண்டாடத் தூண்டியது
2013 இதே நாளில் எழுதியது

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...