Saturday, December 21, 2019

அவனோட பேசனும்

மாலை சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போதே நான் எனது அறையைவிட்டு வெளியே வந்து வேப்ப மரத்தடியில் நின்று கொள்வேன்
வகுப்பு முடிந்து போகும் பசங்களை வம்பிழுத்து விளையாடுவதில் அப்படியொரு சுகம்
இப்படி சொல்வதுகூட சரியில்லை
அவனவனும் என்னையும், சில நேரங்களில் தமிழாசிரியர் செல்வத்தையும் வம்புக்கிழுத்து விளையாடிவிட்டு செல்வார்கள்
“சார், நீங்க கூட்டமெல்லாம் பேசுவீங்களாம்ல?”
“அதுக்கென்ன இப்ப?”
“அதுக்கு என்னவா? ஒன்னு கேக்கனும்”
“ன்ன?”
“நல்ல சாதிக்கு பொறந்தவனா இருந்தா ரேங்க் வாங்கிக்காட்டுங்கறார் எங்க அப்பா? சாதில நல்ல சாதி கெட்ட சாதின்னு இருக்கா சார்?”
“மொதல்ல சாதின்னு இருக்காடா?”
“இருக்கு சார். சாதின்னு இருந்தாதானே அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க செய்ய முடியும்”
“அதாவது இன்ன இன்ன சாதி இன்ன இன்ன வேலை செய்யனும்னு”
”ஆமாம் சார். அதுக்குத்தான கடவுள் சரியா படச்சிருக்கார்?”
”கடவுள் நல்லவராடா?”
“நல்லவர் எப்படி ஒருத்தர ஒசத்தியாவும் ஒருத்தர கீழயும் படைப்பாரா?”
“ஆமாந்தானே அதுல அவருக்கு என்ன லாபம்?”
“அப்ப யாருக்கு லாபமோ அவருதானே ஜாதிய படச்சிருக்கனும்?”
“ஆமா சார்”
”அப்ப யாரு படச்சிருப்பா?”
குழப்பத்தோடு நின்னான்.
”ஒசந்த சாதி கக்கூசுக்குப் போகுது. ஒடுக்கப்பட்ட சாதி கக்கூச சுத்தம் செய்யுது.”
“அப்ப ஒசந்த சாதிதான் கீழ் சாதிய உண்டாக்குச்சா சார்”
“ஆமா. ஆனா கீழ் சாதி இல்ல. ஒடுக்கப்பட்ட சாதின்னு சொல்லனும்”
அவனோட பேசனும்

Friday, December 20, 2019

வேணுன்டா எட்வின்

அரையாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது
அறைகளைப் பார்வையிட சென்று கொண்டிருக்கிறேன்
மரத்தடியில் மதியம் தேர்வெழுத வேண்டிய ஏழாம் வகுப்பு குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் செல்வகுமார்
சிலர் அவரை சூழ்ந்துகொண்டு
சிலர் அமர்ந்தபடி
குனிந்த தலையோடு அவர்களைக் கடக்கிறேன்
சாஆஆர், சார் என்று கத்துகிறார்கள்
அவர்களை நெருங்குகிறேன்
என்ன சாமி?
உங்கள யார் கூப்டா?
இப்ப சார்னு கத்துனீங்களே
சார்னா நீங்களா?
நாங்க எங்க சாரக் கூப்டோம்
வேணுன்டா எட்வின்

Tuesday, December 17, 2019

நீங்களே ஒருமுறை நீதி கேட்டு தெருவிற்கு வந்தவர்கள்தானே

அழுதுகொண்டே வந்தவளை என்னடா என்று கேட்கிறேன்
சயின்ஸ் சார் அடிச்சிட்டார்
அய்யோ அவர் யாரையும் அடிக்க மாட்டாரே. ஏதாவது தப்பு செஞ்சிருப்ப
ம்கும் சாரும் விசாரிக்காமயே அடிக்கிறாறு. நீங்களும் விசாரிக்காமலே நாந்தான் தப்புங்கறீங்க
முகத்துல அறையறமாதிரி கேட்கிறாள் குழந்தை
எட்டாம் வகுப்பு குழந்தை அவள்
விசாரிக்காமலே தீர்ப்பை சொல்கிறீர்களே. என் அன்பிற்குரிய நீதியரசர்களே
நீங்களே ஒருமுறை நீதி கேட்டு தெருவிற்கு வந்தவர்கள்தானே

Monday, December 16, 2019

மக்களின் கொதிநிலை அவர்களை அச்சப்படுத்துகிறது

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை கிழிந்தப் பதாகையாக்கி தொங்க
விட்டிருக்கிறார்கள்
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொந்தளித்திருக்கிறார்கள்
அவர்கள் வென்ற வடமாநிலங்களே கொதித்தெழுந்திருக்கின்றன
அவர்களை பாராளுமன்றத்தின் கொதிநிலை ஒன்றும் செய்யாது
அவர்கள் அந்த நிறுவனத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல
அவர்கள் இல்லையென்று மறுக்கலாம்
ஆனால் மக்களின் கொதிநிலை அவர்களை அச்சப்படுத்துகிறது என்பதுதான் உண்மை
எனவே எதிர்க்கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகள் அந்த மக்களோடு கலப்பதும் சரியாக வழிநடத்துவதும் அவசியம்

எதற்கும்முதலில் நாம் தமிழைப் புழங்குவவோம்

அவனவனும் அவனவன் மக்களோடு அவனவன் மொழியைப் புழங்காமல்
அவனவன் பிள்ளைகளுக்கு அவனவன் மொழியில் கல்வியைக் கொடுக்காமல்
அலுவலகங்களில்
மருத்துவனையில்
நீதிமன்றத்தில்
பாராளுமன்றத்தில்
அவனவன் மொழியை புழங்காமல் நகர்ந்தால்
பேச ஆளேயில்லாத மொழியை தேவ பாஷை என்றும்
அந்த மொழியைப் பேசினால் நோய் அகலும் என்றெல்லாம்
அந்த மொழி தெரியாதவரெல்லாம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசத்தான் செய்வார்கள்
எதற்கும்முதலில் நாம் தமிழைப் புழங்குவவோம்

Friday, December 13, 2019

சகிக்கவில்லையே மருத்துவர் அய்யா

இந்தச் சட்டம் குறைபாடுள்ளது
எனவே இந்தத் திருத்தம் தவிர்க்க இயலாதது
ஆகவே இதை நாங்கள் ஆதரிக்கிறோம்
என்று சொல்வதில்கூட ஒரு பொருள் இருக்கிறது
அது குறித்து விவாதிக்கலாம்
ஆனால்,
கூட்டணி தரமம் என்று இருக்கிறது. அதைக் காப்பாற்ற வேண்டும். எனவேதான் இந்தியக் குடியுரிமை சட்டத்தில் கொண்டு வருகிறப் படுகிற திருத்தங்களை ஏற்கிறோம் என்கிறீர்களே மருத்துவர் அய்யா
மீண்டும் சொல்கிறேன்,
இந்தத் திருத்தம் அநியாயமானது ஆகவே எதிர்க்கிறோம் என்கிறோம்
இந்த திருத்தம் நியாயமானது, ஆகவே ஆதரிக்கிறோம் என்று ஏன் உங்களால் கூற முடியவில்லை
எனக்குத் தெரியும் ,
இந்த திருத்தத்தில் நியாயம் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் என்று
இளைய மருத்துவர் மேல் வழக்குகள் உண்டு என்பதும் கூட்டணித் தர்மங்களில் ஒன்றா
இந்திதான் தேசிய மொழி என்றாலும் ஏற்பீர்களா?
சகிக்கவில்லையே மருத்துவர் அய்யா

Thursday, December 12, 2019

நம்பிக்கை பிறக்கிறது






பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் வரும்
அநேகமாக ஏர்டெல் விளம்பரம் என்று நினைக்கிறேன்
நமக்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையிலான கம்பி வேலி
வேலிக்கு அந்தப்பக்கம் ஒரு பாக்கிஸ்தான் குழந்தை
இந்தப்பக்கம் ஒரு இந்தியக் குழந்தை
இந்தப்பக்கம் இருந்து உதைபந்தை அந்தப் பக்கத்திற்கு வேலியில் இருக்கும் இடைவெளி வழியாக உதைத்து அனுப்புவான்
அந்தக் குழந்தை இன்னொரு இடைவெளி வழியாக திருப்புவான்
அப்படி ஒரு நெகிழ்ச்சி
அந்த விளம்பரம் வரும் நேரங்களில் காத்திருந்து பார்த்த அனுபவம் உண்டு
ஆனால் அதை எடுத்து பத்திரப்படுத்தும் தொழில் நுட்பமெல்லாம் நமக்கு கைவராத நேரம்
மனித நல்லிணக்கம் குறித்து ஏர்டெல் நமக்கு பாடம் எடுத்ததாகவே பட்டதால் ஏர்டெல் எண்ணிற்கு மாறிய அனுபவமும் உண்டு
அந்த விளம்பரம் நின்றுபோனது எதையோ இழந்தது மாதிரி இருந்தது
ஆனால் பையப் பைய அதுவும் கடந்து போனது
இன்று தம்பி தாஹிர் தனது பக்கத்தில் வைத்திருந்த இந்தப் படம் அப்படியே நெகிழ்த்திப் பிசைந்து விட்டது
இந்தியக் குடியுரிமை குறித்த நம்பிக்கையில் தங்களது நகங்களால் சிலர் மகிழ்ந்து வெறித்து கீறத் துவங்கியப் பொழுதில் இந்தப் படத்தை வைத்திருக்கிறார் தம்பி
நம்பிக்கை பிறக்கிறது
முத்தம் Dhahir Batcha

Wednesday, December 11, 2019

“மாபெரும் ஏதோ ஒன்றைச் சொல்ல வேண்டும்”

இந்த டிசம்பர் பதினொன்றில்,
”பெரிதினும் பெரிது கேள்”
என்ற பாரதியின் வரியோடு
“மாபெரும் ஏதோ ஒன்றைச் சொல்ல வேண்டும்”
என்ற ரோசா லக்சாம்பர்க்கின் வரியும் சேர்ந்தே என்னை கிள்ளிக்கொண்டிருக்கிறது
மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே வேறு வேறு பணிக்கானவை
ஒன்று,
அற்பம் தவிர்த்து பெரியதாய்த் ஜனங்களிடமிருந்து தேடி உள்ளெடுக்கச் சொல்லும்
மற்றொன்று,
அற்பம் தவிர்த்து மிகப் பெரியதாய் ஜனங்களுக்குத் தரச் சொல்லும்
ஆனால் இரண்டிற்கும் தொடர்புண்டு
நல்லதைத் தரவேண்டும்
எனில்,
நல்லதை எடுக்க வேண்டும்
இரண்டிற்கும் முயற்சிப்போம்

Monday, December 9, 2019

பகடிகளுக்கு அளவே இல்லை

நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லை
அவர் தான் வாங்கியுள்ள ஒரு தீவில் இருக்கிறார் என்கிறார்கள்
அந்த தீவிற்கு கைலாஷ் என்று பெயர் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்
அவர் இமயமலையில்தான் இருக்கிறார் என்கிறார்கள்
காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறார்கள்
அவர் தினமும் தினமும் வீடியோவில் உரையாற்றுகிறார்
தனது தீவை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐநா சபைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் என்கிறார்கள்
அது ஒரு இந்துநாடு என்கிறார்கள்
அதை அர்ஜுன் சம்பத் மகிழ்ந்து வரவேற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன
அவரது கடவுச்சீட்டை ரத்து செய்துவிட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன
பகடிகளுக்கு அளவே இல்லை. அதில் உச்சம் என்னவென்றால் அவரது கடவுச்சீட்டு காலாவதியாகி பல காலமாச்சு என்பதுதான்

Sunday, December 8, 2019

சங்கர் தயாள் சர்மாவின் சாதிய வன்மம்

தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டபோது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு சங்கர் தயாள் ஷர்மா
அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவராய் அவர் இருந்திருக்கிறார். அதை இப்படியாக வெளிப்படுத்தியும் இருக்கிறார் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.09.1994 இல் வெளிவந்திருக்கும் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. அவர் கூறுகிறார்
“although the quota system might have taken away posts from brahmin, no one could take away brahmin's brain"
அதாவது,
இடஒதுக்கீடு மூலமாக பார்ப்பனர்களிடம் இருந்து பணியிடங்களை, வாய்ப்புகளைப் பறிக்கலாமே தவிர மூளையைப் பறிக்க இயலாது.
மொத்த இந்தியாவின் தலைமகனாக இருந்தவருக்குள்ளேயே இவ்வளவு சாதிய வன்மம் இருந்திருக்கிறது என்பது எவ்வளவு துயரமானது

Friday, December 6, 2019

கவிதை

நீண்ட தவத்தை இடைமறித்த
இறைவனிடம்
வரமாய்
சாத்தானின்
அலைபேசி எண் கேட்டான்

வெங்காயம்

வெங்காயத்தின் கைங்கரியத்தால் மத்திய நிதி அமைச்சர் மாண்பமை நிர்மலா சமூக வலைதளங்களின் பகடிக்கும் மீம்சிற்கும் ஆட்பட்டிருக்கிறார்
இன்றைக்கு அவையில் வெங்காயமும் பூண்டும் அவ்வளவாக எடுத்துக்கொள்ளாத குடும்பத்தில் இருந்து வந்திருப்பதாக அவர் கூறியதில் இருந்து வலைதளம் அவரை எடுத்து கொண்டது
தோழர் ஜெயதேவன் இதுகுறித்து வைத்திருந்த ஒரு பதிவில் பின்னூட்டம் இட்டிருந்த ரவி (Ravi S) ,
வெங்காயப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக துருக்கி மற்றும் எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாகவும், பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடும் என்றும் திருமதி நிர்மலா குறிப்பிட்டார் என்றும்
அப்போது ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் அந்த நாடுகளின் வெங்காயத்தை அமைச்சர் ருசித்துப் பார்த்திருக்கிறாரா என்று கேட்டபோது வெங்காயம் சாப்பிடும் பழக்கம் தமக்கில்லை என்று அமைச்சர் கூறியதைத்தான் சிலர் இப்படி திரித்துவிட்டார்கள் என்றும் கூறுகிறார்
அது உண்மையாகவே இருக்கட்டும்
துருக்கியில் இருந்தும் எகிப்தில் இருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்யவேண்டியத் தேவை ஏன் வந்தது?
இந்தியாவில் வெங்காய சாகுபடி குறைந்து போனதா?
இந்தியாவின் வெங்காயத்தேவை 1,60,00,000 டன் என்றும் ஆனால் இந்தியாவின் சராசரி வெங்காய உற்பத்தி ஆண்டொன்றிற்கு 2,30,00,000 டன் என்றும் இன்றைய (05.12.2019) தீக்கதிர் தலையங்கம் கூறுகிறது
பிறகு ஏன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டியத் தேவை வந்தது?
இந்த ஆண்டு 12,40,000 டன் வெங்காயத்தை இந்தியா ஏற்றுமதி செய்ததும்,
செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு அரசாங்கத்திடம் இருந்த வெங்காயத்தில் 30,400 டன் அழுகிப்போனதும்
இன்றைய வெங்காயத் தட்டுப்பாட்டிற்கான முக்கியமான காரணங்கள் என்றும் இன்றைய தீக்கதிர் சொல்கிறது
ஆக இந்த அரசாங்கம் பதில் சொல்ல வேண்டியது இந்தக் காரணங்களுக்குத்தான்
தேவை உணராமல் வெங்காயத்தை குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்ததும்
அழுகாமல் பாதுகாக்கத் தவறியதும்
இன்றைய வெங்காயத் தட்டுப்பாட்டிற்கும் விலை உயர்விற்கும் காரணங்கள் என்பதைத் தவிர்க்க இயலாது
போக,
இவ்வளவு விலைக்கு வெங்காயம் மார்க்கெட்டில் விற்கப்படும் சூழலில் விளைவித்தவன் இந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயத்தை ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு விற்றான் என்ற கொடுமையையும் மறந்துவிடக் கூடாது

இருக்கேன்பா

நீண்ட நாட்களுக்குப் பிறகு நலக்குறைவால் ஆசிர்வதிக்கப்பட்டு
காலையிலிருந்தே படுக்கையில்
அவ்வப்போது எழுந்து அமர்வதும் எதாவது படிப்பதும் மீண்டும் விழுவதுமாய்
ஜெயாபுதீன் (Jeyabudheen) அழைத்தான். உங்களால பேச முடியல, பிறகு பேசறேன் என்று வைத்துவிட்டான்
மாலை பிள்ளை தமிழ் (Vetrimozhi Veliyeetagam) அழைத்திருக்கிறான். எடுக்கவில்லை என்றதும் எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறேன்
“அப்பா, தமிழ்ப்பித்தனோட (Poondi Jeyaraj) அப்பா இறந்துட்டாங்க”
அப்பா இறந்து கொஞ்ச நாட்களில் வந்திருந்த எனது கணக்கு சாரிடம் (ரெங்கராஜ் சார்)
அவர் கிளம்பும்போது சொன்னேன்,
“அப்பாவும் போயிட்டாங்க, நீங்களும் கிளம்பறீங்களே”
சார் சொன்னார்,
“அப்பா போயிட்டாரா?
இருக்கேனேடா”
தமிழ்ப்பித்தனிடம் நான் சொல்வது இதுதான்,
“இருக்கேன்பா”

Wednesday, September 18, 2019

65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019


இந்த ஐந்து கிராமங்களைச் சேர்ந்த நாங்கள் இனி சாதி பார்க்க மாட்டோம். அப்படி யாரேனும் பார்த்தால் அவரை ஊர்விலக்கம் செய்துவிடுவோம்

இன்றைய தேதியில் ஒரே ஒரு ஊரைச் சார்ந்த மக்கள் இப்படி முடிவெடுத்து அமல்படுத்தினாலே நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவோம்

ஐந்து கிராம மக்கள் ஒன்றுகூடி இப்படி ஒரு முடிவெடுத்து அதை அவர்களது மன்னனிடம் கூறி அவனது ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்கள்

அதை கல்வெட்டாக்கியும் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்

அதுவும் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர்

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருமங்கலம் என்ற சிற்றூரில் உள்ள தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இருக்கிறது அந்தக் கல்வெட்டு

வேலூர் கல்யாணராமன் என்பவர் அந்தக் கோவிலில் புதைந்து கிடந்த ஒரு கல்வெட்டைக் கண்டெடுக்கிறார். அதில் என்ன எழுதி இருக்கிறது என்பது  அவருக்குத் தெரியவில்லை. கல்வெட்டு என்கிற வகையில் இதன் வயது பல நூறு ஆண்டுகள் இருக்கும் என்பதும், அது ஒரு முக்கியமான அவணமாக இருக்கக் கூடும் என்பதும் அவருக்குப் புரிகிறது

ஊர் மக்களை அணுகுகிறார்

அவர்களுக்கும் ஏதும் புரியவில்லை. ஆனால் ஒரு பொக்கிஷம் என்பதும் அதை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் புரிகிறது

அதை எடுத்து சுத்தம் செய்து நட்டு வைக்கிறார்கள்

குடவாசல் பாலகிருஷ்ணனின் முயற்சியால் கல்வெட்டு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்த தகவல்கள்தான் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன

சாதி தோன்றிய நாளன்றே சாதி மறுப்பும் தோன்றியிருக்கும். அது ஒரு முனகல் வடிவத்தில்கூட இருந்திருக்கலாம்.

அது அன்றேகூட நசுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அப்போதே நிச்சயமாக தோன்றியிருக்கும்.

பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பல பகுதிகளில் சாதிகள்இடங்கை சாதிகள்”, “வலங்கை சாதிகள்ஆகிய இரு பிரிவுகளுக்குள் உள்ளடங்கின என்று இந்தக் கல்வெட்டு கூறுகிறது.

ஒருகட்டத்தில்இடங்கை பிரிவில்’ 98 சாதிகளும், ‘வடங்கை பிரிவில்’ 98 சாதிகளும் இருந்திருக்கின்றன. இது பையப் பைய இடங்கைப் பிரிவில் 6 சாதிகளும் வலங்கைப் பிரிவில் 30 சாதிகளுமாக ஒரு கட்டத்தில் சுறுங்கி இருக்கின்றன

இவர்களுக்கிடையே அவ்வப்போது கலவரங்கள் வெடித்திருக்கின்றன. சதா சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்

இந்த மக்கள்தான் சித்திரை மாதத்தில் ஒருநாள் ஒன்றுகூடி,

1)   குறுக்கை நாடு
2)   காளி நாடு
3)   விளத்தூர் நாடு
4)   மாந்துரை நாடு
5)   திருமங்கல நாடு

ஆகிய கிராமங்களைச் சார்ந்த குடிமக்களாகிய நாங்கள் இனி இந்த சந்திர சூரியன் உள்ளமட்டும் இடங்கை வலங்கை என்று வேறு எந்த விதமாகவோ எங்களுக்குள் பேதம் பார்க்க மாட்டோம் என்றும் அப்படி பார்ப்பவர்களை விலக்கம் செய்துவிடுவோம் என்றும் அந்தக் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்

800 ஆண்டுகளுக்கு முன்பே ஐந்து கிராம மக்கள் தாங்கள் இனி சாதி பார்க்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்தியிருப்பதை இன்றைய சாதிய இளந்தலைவர்கள் அருள்கூர்ந்து கவனிக்க வேண்டும்

கூடிய விரைவில் அந்த ஐந்து கிராமங்களுக்கும் சென்று அந்த மண்ணை வணங்கிவிட்டு வர வேண்டும்

********************************************************************************** 


மாணவர்களே இல்லாத பள்ளிகள் இழுத்து மூடப்படும். மிகக் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு அந்தப் பள்ளிகளையும் மூடிவிடுவோம்

மூடப்பட்ட பள்ளிகளை நூலகங்களாக மாற்றிவிடுவோம் என்று கூறிக் கொண்டே இருந்தது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

10.08.2019 அன்று 46 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடவும் செய்தது. அவ்வாறு மூடப்பட்ட பள்ளிகளை நூலகங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியது.

இதெல்லாம் வழமையான செய்திகள்தாம். ஆனால் அப்படி மூடப்பட்ட 46 பள்ளிகளில் ஒன்றை மூடிய மூன்றே நாளிலும் மற்றொரு பள்ளியை ஆறே நாளிலும் திறக்க வைத்திருக்கிறார்கள் மக்கள் என்பதுதான் நம்பிக்கையைத் தருவதும் அனைவருக்கும் கொண்டுபோகப்பட வேண்டியதுமான செய்திகள்.

மாணவர்களே இல்லாத காரணத்தால் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் இருந்த பள்ளி 09.08.2019 அன்று பூட்டப் படுகிறது. உடனடியாக ஊர் மக்கள் கூடுகிறார்கள். பக்கத்து ஊர்களில் படிக்கும் தம் வீட்டுக் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களைப் பெற்று சான்றிதழ்களோடும் குழந்தைகளோடும் பள்ளியின் முன் திரள்வது என்று முடிவெடுக்கிறார்கள்

துரித கதியில் செயல்படுகிறார்கள். 11 குழந்தைகளோடு பள்ளியின் வாசலில் திரள்கிறார்கள் ஊர்மக்கள்.

செய்தியாளர்கள் குவிகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர் திரு திராவிடச்செல்வம் அவர்கள் பள்ளிக்கு விரைகிறார்.

இதோ 11 குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் கூடுதலான மாணவர்களைக் கொண்டுவரவும் முயற்சி செய்கிறோம். பள்ளியைத் திறந்துவிடுங்கள்என்கிறார்கள்

மாவட்டக் கல்வி அலுவலர் உயரதிகாரிகளைக் கலக்கிறார். 09.08.2019 அன்று மூடப்பட்ட குளத்தூர் பள்ளி 13.08.2019 அன்றுமுதல் மீண்டும் செயல்படத் துவங்கிறது.

ஆவுடையார் கோவில் அருகே உள்ள சின்னப்பட்டமங்கலம் என்ற ஊரில் உள்ள பள்ளியும் இழுத்து மூடப்படுகிறது.

மூடப்பட்ட பள்ளியை நூலகமாக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்குகிறார்கள். பள்ளியின் பெயர்ப்பலகையை அகற்றிவிட்டு நூலகத்திற்கான பெயர்ப் பலகையை மாட்டுவதற்காக முயற்சியில் இறங்குகிறார்கள்.

குளத்தூர் தந்த வெளிச்சத்தில் தங்களது செயல்பாட்டினை நம்பிக்கையோடு தொடங்குகிறார்கள் சின்னப்பட்டமங்கலத்து மக்கள். பெரியப்பட்ட மங்கலம் உள்ளிட்ட பக்கத்து ஊர்களில் பயிலக்கூடிய தமது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களைப் பெறுகிறார்கள்.

15.08,2019 அன்று பள்ளியின் வாசலில் ஊரே திரள்கிறது. ஒரு கொடிக் கம்பத்தை நடுகிறார்கள். சீறுடையோடு வந்த குழந்தைகள் கம்பீரமாக அணிவகுத்து நிற்கிறார்கள். கொடியேற்றி விடுதலைநாளைக் கொண்டாடுகிறார்கள். வந்திருந்தவர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

செய்தியறிந்து ஆவுடையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் திருமதி லதாபேபி விரைகிறார்.

விளைவாக 16.08.2019 முதல் அந்தப் பள்ளியும் செயல்படத் தொடங்குகிறது.

பள்ளி மூடப்பட்டதும் ஏதோ அந்தக் கிராமமே ஊனப்பட்டுப் போனதாக அந்த மக்கள் துடிக்கிறார்கள். ஒரு வாரகால அவகாசத்திற்குள் ஒரு பள்ளி செயல்படுவதற்கான குறைந்த பட்ச மாணவர்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

அந்தப் பள்ளியை கிராமத்தின் ஒரு உறுப்பாக, இதயமாக பாவிக்கும் அந்த மக்கள் தங்களது குழந்தைகளை ஏன் பக்கத்து ஊர் பள்ளிகளுக்கு அனுப்பினார்கள்?

இந்தக் கேள்வியைத்தான் அரசு அலசி ஆய வேண்டும்.

ஏன் என்பதற்கான காரணங்களுள் ஆசிரியரும் வருகிறார் என்பதைத்தான் சின்னப்பட்டமங்கலம் ஆசிரியர் திரு ஞானபாண்டியன் அவர்களது நடவடிக்கை கூறுகிறது.

பள்ளிக்கு ஒழுங்காக வராமை, மாணவர்கள்மீது அக்கறை கொள்ளாமை என்பதெல்லாம்போக பள்ளியில் இருந்த குழந்தைகளின் பெற்றோரையும் அழைத்து கட்டாயப்படுத்தி மாற்றுச் சான்றிதழ்களை வழங்கி அந்தப் பள்ளியை மூடுவதற்கான ஒரு காரணமாக இருந்திருக்கிறார்

அதுகுறித்து விசாரித்து, உண்மையெனில் அவர்மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும். அவர்மீது மட்டுமல்ல அதுபோன்ற ஆசிரியர்கள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பள்ளியில் இருந்து குழந்தைகளை பக்கத்து ஊர் பள்ளிகளுக்கு கொண்டு போகிறார்கள் என்றால் அதற்குரிய காரணங்களைக் கண்டு அவற்றைக் களாஇய வேண்டும்.

1)   கட்டுமான வசதி இல்லாமல் இருக்கலாம்
2)   பக்கத்தில் சாராயக்கடை இருப்பதால் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம்
3)   பள்ளியைச் சுற்றி புதர் மண்டிப்போய் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலவுகிற இடமாக இருக்கலாம்
4)   ஆசிரியர்கள் மோசமான செயல்பாடுகளாக இருக்கலாம்

இதுபோன்ற காரணங்களைக் கண்டறிந்து அவற்றை களைந்துவிட்டாலே பள்ளிகளைப் பூட்டவேண்டிய அவசியம் இருக்காது

அதிக மாணவர்கள் படிக்கும் பக்கத்துப் பள்ளி மாணவர்களில் இருந்து மூட இருக்கிற பள்ளிக்கு பிள்ளைகளைக் கொண்டு வருவதன் மூலமும் பள்ளிகள் மூடப்படுவதைத் தவிர்க்கலாம்

2018-2019 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட்த்தில் கல்விக்கென்று ஒதுக்கப்பட்ட 28,757 கோடியில் 1,627 கோடி ரூபாய் செலவளிக்கப் படவில்லை என்கிறது கணக்குத் தணிக்கை அறிக்கை. இந்தத் தொகையினை இந்தப் பள்ளிகளின் பக்கம் திருப்பியிருந்தாலே மூடவேண்டிய நிலை வந்திருக்காது

மீதமுள்ள 44 பள்ளிகளும் குளத்தூர் மற்றும் சின்னப்பட்டமங்கலம் ஆகிய கிராமங்களை முன்னெடுத்து தமது பள்ளிகளை மீட்டெடுக்க வேண்டும்   


     

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...