தொழுவத்திற்கும் அதற்கும் ஆறு வித்தியாசங்களை எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. சற்றேரக்குறைய ஒரு தொழுவத்தில் கைகளை இரும்பால் பின்புறமாக கட்டிய நிலையில் அந்த மனிதனைக் கிடத்துகிறார்கள்.
கொல்வதற்குள் தானாக
செத்துவிடக்கூடாது. அதை அனுமதிக்கக் கூடாது.கொல்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட
முக்கியம் அதுவரை தங்களது இரையை உயிரோடு வைத்திருப்பது. அதற்காகவே அந்த மனிதருக்கு
உணவு கொடுத்து அனுப்புகிறார்கள்.
உணவோடு ஒரு மனிதர் உள்ளே
வருகிறார். அந்த பலவீனமான நிலையிலும் மிகவும் சிரமத்தோடு குரலுயர்த்தி அந்த
மனிதனைப் பார்த்து கேட்கிறார்,
“நீங்கள் யார்?”
“நான் ஜூலியா கோர்ட்ஸ். இந்தப்
பள்ளியின் ஆசிரியர்.”
“என்னது, பள்ளிக்கூடமா? இவ்வளவு
மோசமான இடத்திலா பாடம் நடத்துகிறீர்கள். இங்கே அமர்ந்தா பச்சிளங் குழந்தைகள் பாடம்
படிக்கிறார்கள்?”
கால்களில் குண்டுகள் பாய்ந்த
ரணங்கள்.இழுத்து வரப்பட்ட வலி. இதற்காகவெல்லாம் கலங்காத அந்த மனிதனின் கண்கள்
இவ்வளவு மோசமான இடத்தில் குழந்தைகள் அமர்ந்து படிக்கிறார்களே என்பதற்காக
கலங்குகின்றன.
சிறிது நேரம் கழித்து அவரே
சொல்கிறார்,
“கவலைப் படாதீர்கள். ஒருக்கால்
நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால் நல்ல பள்ளிக்கூடங்களைக்
கட்டிட்டித் தருகிறேன்.”
அதற்குமேல் ஜூலியா கோர்ட்ஸால்
அங்கே நிற்க முடியவில்லை.கொண்டு வந்த சாப்பாட்டுத் தட்டைக் கீழே போட்டுவிட்டு,
அழுது கொண்டே ஓடி விடுகிறார்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் அங்கே
கிடத்தி வைக்கப் பட்டிருந்த மனிதர் சேகுவாரா என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
இந்த சம்பவத்தை ஒரு வலைப் பதிவில்
கண்டெடுக்க முடிகிறது என்பது எனக்கு ஒரு பேராச்சரியமான விஷயமே. ஒரு வரலாற்று நூல்
செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு வலை செய்கிறது. இது ஒன்றும் புதிய தகவல்
இல்லைதான். ஆனாலும் சேகுவாராவின் கல்வி குறித்த அக்கறைக்கு மிகப் பெரிய சாட்சியாக
இருக்கும் இந்த சம்பவத்தை சேரவேண்டிய அளவிற்கு மாணவர்களிடமும் இளைஞர்களிடமும்
கொண்டு சேர்த்திருக்கிறோமா என்றால் ஒரு நொடியில் சிறு துளியும் யோசிக்காமல் இல்லை
என்றே சொல்லிவிட முடியும்.
இந்த வேலையை கரந்தை ஜெயக்குமார்
என்கிற ஒரு பட்டதாரி ஆசிரியர் தன் வலையில் செய்திருக்கிறார். அதுவும் அவர் ஒரு
வரலாறு சொல்லித்தரும் ஆசிரியரும் இல்லை, கணித ஆசிரியர் என்பது ஆச்சரியத்தை அள்ளித்
தருகிறது.
பொதுவாகவே, வரலாறு பதியப்
படும்போது, அதுவும் இது மாதிரியான சம்பவங்களை பதியும்போது நிச்சயமாக மிகை என்பது
இருக்கவே செய்யும். இதிலும்கூட மிகை இருக்கக் கூடும். அதுவும் கைமாறி கைமாறி
இவ்வளவு தூரம் நகர்ந்து வருகையில் மிகையின் விகிதாச்சாரம் நிறைய கூடியிருப்பதற்கும்
வாய்ப்புகளுண்டு.
ஆனாலும் கல்வி குறித்த
சேகுவாராவின் கவலையும் அக்கறையும் அவரது எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் விஷயமாகும்.
அதே பதிவில் அவர் தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தையும், மனைவிக்கு எழுதிய
கடிதத்தையும் எடுத்தாண்டிருக்கிறார் கரந்தை ஜெயக்குமார்.
நன்கு படிக்கவேண்டும் என்று
பிள்ளைகளுக்கு எல்லாத் தந்தைகளையும் போலவே புத்திமதி சொல்லும் அவர்,
புரட்சிக்காரர்களாகவும் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்கிறபோது சேகுவாரா
தெரிகிறார்.
” என்னை மரணம் தழுவும்போது உன்
நினைவோடுதான் சாவேன்” என்று தன் மனைவிக்கு சே எழுதியதை ஜெயக்குமார் பதிகிற விதம்
ஒரு புரட்சிக்காரனுக்குள் ஒளிந்து கொண்டிருந்த காதலை நமக்குக் காட்டுகிறது. இதைப்
பதிகிற விதத்தில் நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் ஜெயக்குமார்.
சேவின் பன்முகத் தன்மைகளை ஒரு
பதிவில் சொல்லிவிடுவது இயலாதுதான். அதை மிகச் சரியாய் செய்கிறது இந்த வலை.
இன்னொமொரு பதிவில் ஜோசப் ஸ்டாலினாக
மாறிய சம்பவம் வருகிறது. ஜோசப் ஒரு நல்ல நாடறிந்த கட்டுரையாளர். ரஷ்யாவில்
ஜார்ஜியா பகுதியை சேர்ந்தவர். தனது தலைவர் லெனின் கலந்து கொள்ளும் மாநாடு
ஒன்றிற்கு வருகிறார். லெனினோடு ஒரு முறை பேசிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார்.
மாநாடு முடிந்ததும் இவரைக் கடந்து போகையில் லெனின் இவரைப் பார்த்து கேட்கிறார்,
“ ஜார்ஜியா எப்படி இருக்கிறது?”
ஏதோ சொல்லி ஜமாலித்த ஜோசப்பிடம்
சொல்கிறார்,
“ உங்கள் எழுத்து இரும்பாய்
இருக்கிறது. அப்புறம் ஏன் ஜோசப் என்று பெயரை வைத்துக் கொண்டு? ஸ்டாலின் என
மாற்றுங்கள்.”
மாறுகிறது பெயர்.
இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவிடம்
தோற்று பின்வாங்கும் வேளையில் கைக்கு அகப்பட்ட ரஷ்ய வீரர்களை எல்லாம் கைதிகளாக
அள்ளிக் கொண்டு போகிறார்கள் ஜெர்மனிக்காரர்கள். அப்படி பிடித்துக் கொண்டு
வந்தவர்களுள் ஸ்டாலினின் மகன் லெப்டினெண்ட் யாக்கோபும் இருக்கிறார் என்பது
தெரிந்ததும் ஜெர்மெனி மகிழ்ந்து பேரம் பேசுகிறது.
யாக்கோபைத் தாங்கள் தருவதாகவும்,
மாறாக ரஷ்யா பிடித்து வைத்துள்ள ஜெர்மானிய வீரர்களைத் தந்துவிட வேண்டும் என்றும்,
இல்லாது போனால் யாகோபு கொல்லப் படுவார் என்றும் மிரட்டுகிறார்கள். ஸ்டாலின்
சொல்கிறார்,
“நான் பேரம் பேசுபவனல்ல”
யாகோபு கொல்லப் படுகிறார். இதை இதய
சுத்தியோடு பதிந்திருக்கும் ஜெயக்குமார் இடது சாரியல்ல. இந்த வலையின் பலமே
அதுதான். தான் சார்ந்துள்ள இயக்கத்தின் அல்லது குழுவின் பிரச்சாரகர் அல்ல இவர்.
நல்லது எங்கு தட்டுப்பட்டாலும் அதை தேடி எடுத்து வந்து தன் வலையில் பந்தி
வைக்கிறார்.
நல்லனவற்றை எடுத்துத் தருவதைத்
தவிர வேறு எந்த அரசியலையும் இவர் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை. பொதுவாகவே
அரசியலற்ற எழுத்துக்களை அவ்வளவாக ரசிக்காத நமக்கும் இவரது வலை கவனிக்கப் பட
வேண்டிய ஒன்றாகவே படுகிறது.
மண்டேலாவின் வழமையான சாதனைகளோடு
நில்லாமல் மிகவும் அபூர்வமான அவரது ஒரு போராட்டத்தை இவரது வலை தருகிறது.
சாரா என்கிற பெண்ணை மருத்துவர் ஒருவன் வேலை ஆசை காட்டி லண்டன்அழைத்துபோய்
நிர்வாணமாய் நிற்க வைத்து காட்சிகளை நடத்தி காசு செய்கிறான். பிறகு ஃப்ரான்ஸுக்கு
விற்கிறான். பாலியல் தொழிலில் தள்ளுகிறார்கள். அவள் இறந்த பிறகும் ஒரு பூத
பெண்ணின் உருப்புகள் என்று சொல்லி அவளது அந்தரங்க உறுப்புகளை பாடப் படுத்தி
ம்யூசியத்தில் வைக்கிறார்கள்.
அவற்றை மிகுந்த
போராட்டத்திற்கிடையே மீட்டு வந்து அடக்கம் செய்கிறார். அப்போது மண்டேலா
சொன்னாராம்,
“பல மனித ஆயுட்காலங்களை கடந்து
அவமதிக்கப் பட்ட பெண்ணின் உடல் இனியாவது அமைதியாக உறங்கட்டும்.”
சாரா இறந்தது 1815 இல்.
இப்படியாக ஏராளமான தேடக் கிடைக்காத
அபூர்வமான தகவல்கள்.
எப்போதும் சொல்லாத ஒன்றை சொல்கிறேன்.
இந்த வலையை குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு பாருங்கள். குழந்தைகளுக்கும்
இளைஞர்களுக்கும் நிறைய இருக்கிறது இந்த வலையில்.