Sunday, October 28, 2012

நதி பயணப் படும் பாதை

சென்ற ஆண்டு இதே மாதிரி ஒரு மழை நாளில் கீர்த்தனாவோடு அமர்ந்து ஏதோ ஒரு செய்தி சேனலைப் பார்த்துக் கொண் டிருந்தேன்.

வழக்கமாக செய்தி சேனலை விரும்பவே விரும்பாத கீர்த்தி அடுத்த நாள் தனக்கு விடுமுறையா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் ஏறத்தாழ இரண்டு மணி நேரமாக என்னோடு அமர்ந்து செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆக,

மழைக்கு பிள்ளைகள் செய்தி சேனலுக்குள் ஒதுங்குகிறார்கள். இதற்காகவேனும் மழையை ஒரு முறை வாழ்த்திவிடத்தான் வேண்டும்.

 மதுராந்தகம், வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் கரைகள் உடைந்துவிடும் அபாயம் இருப்பதாகவும், ஆகவே உபரி நீரைத் திறந்து விட இருப்பதாகவும், நீரின் பயணப் பாதையிலிருக்கும் மக்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எல்லா செய்தி சேனல்களும் திரும்பத் திரும்ப அறிவுறுத்திக் கொண்டே இருந்தன.

நிரம்பி வழியும் ஏரிகளையும் அவை மாறி மாறி காட்டின. ஏறத்தாழ எல்லா ஏரிகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப் பட்டு முரட்டுக் கோவத்தோடு வெள்ளமெனப் பாய்வதைப் பார்க்க முடிந்தது.

இப்படி சீறிப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அதற்குள்ளாக ஒரு டசன் உயிர்களைக் காவு கொண்டிருந்தது. நூற்றுக் கணக்கான குடிசைகள் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னமாய் சிதைக்கப் பட்டுக் கிடந்தன.

உயிர்ச் சேதத்திற்கு, கால் நடை சேதத்திற்கு, உடமை சேதத்திற்கு, குடிசை சேதத்திற்கு என்று வகை வாரியாக நிவாரணத் தொகைகளை அரசு அறிவித்துக் கொண்டிருந்தது.

கீர்த்தி கேட்டாள்,

“ஏம்பா இப்ப இந்த தண்ணி எல்லாம் எங்க போகும்?”

“கடலுக்கு”

”வருஷா வருஷம் இப்படித்தானா?”

“ ஆமாம்”

” ஏம்பா, அப்ப இப்படி கொடுக்குற காசுல புதுசா ஒரு ஏரி வெட்டிட முடியாதா?”

“ எதுக்கு கேக்கற? வெட்டப் போறியா?”

எனது நக்கலை ஒரு பொருட்டெனவே அவள் மதிக்கவில்லை என்றுதான் தோன்றியது.

“லூசு மாதிரி உளறாம கேட்டதுக்கு பதில் சொல்லுப்பா”

“ வெட்டலாம் தான்”

“ அப்ப ஏன் அரசாங்கம் வெட்ட மாட்டெங்கறாங்க?”

“ வெட்டினா மட்டும்..?”

“ . வெட்டினா தண்ணியும் கடலுக்குப் போகாம பத்திரமா இருக்கும், ஜனங்களும் சாக மாட்டாங்க, மாடு சாகாது, குடிசையும் சாயாதில்ல ...”

இதைக் கேட்ட போது அவள் ஏழாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தாள்.

இது ஏதோ தனிப்பட்ட கீர்த்தனாவின் எண்ணமாகக் கொள்ளக் கூடாது. அவளொத்த குழந்தைகளின் பொதுப் புத்தியாகத்தான் இதைக் கொள்ள வேண்டும்.

எனில், ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு புரிகிற இந்த விஷயம் அரசுக்குப் புரியாதா?

புரியும் எனில் ஏன் அதை நிறை வேற்றவில்லை?

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்,

ஒவ்வொரு ஆண்டும் செம்பரம்பாக்கம், மதுராந்தகம், மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து வெளியேற்றப் படும் தண்ணீரை மூன்று ஏரிகள் வெட்டி சேமித்தால் கிடைக்கும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு செம்பரம்பாக்கம் நீரளவு ஆகும்.  இது கொஞ்சம் கூடலாம் குறையலாம்.

இது போக ஏரிகள், குளங்கள், குட்டைகள், கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள் போன்றவற்றை காலமுறையில் தூர் எடுப்பதன் மூலமும் நதிகளில் ஏரிகளில் மற்றும் நீர் நிலைகளில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை, சீத்தக் கருவை போன்றவற்றை அப்புறப் படுத்துதல் போன்றவற்றை செய்தாலே 25 விழுக்காடு நீரை நம்மால் சேமிக்க முடியும்.

இது போக மழைக் காலங்களில் தெருக்களில் ஓடும் கீற்றோடைகளை நன்கு திட்டமிட்டு ஊருக்கு வெளியே கொண்டு போய் ஒன்றிணைத்து சிறு சிறு ஓடைகளாக்கி அவற்றை ஒன்றிணைத்து ஒரு குளமாக்கி அல்லது தடுப்பணைகள் அமைப்பதாக் கொள்ளுங்கள்.

ஊருக்கு ஊர் இப்படி அமைத்தால், அரசு நினைத்து நேர்மையாக தொடங்கினால் ஒரே வாரத்தில் இது சாத்தியம்தான். ஊருக்கு ஊர் புதிது புதிதாய் குளங்கள் , தடுப்பணைகள் என்று மலர்ந்து அனைத்திலும் மழை நீர் தேங்கி நின்றால் அது எவ்வளவு மகத்தான நீராதார சக்தியாக மாறும்.

முதலில் இது மாதிரி பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நீர் நிலைகளுக்கு வரும் நீர்ப் பாதைகளை ஆக்கிரமித்துள்ள எதுவாயினும், அவற்றின் பின்னால் எத்தகையதொரு சக்தி வாய்ந்த அரசியல் சக்திகள் இருப்பினும் அவற்றை அப்புறப் படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மழை நீர் விரையமாகாமல் நீர் நிலைகளுக்கு வந்து சேரும்.

போக,
நிலத்தில் பெய்யும் மழையில் 35 விழுக்காடு வெப்பத்தால் ஆவியாகி வீணாவதாக 09.10.2012 அன்று வெளியான தினமணிக் கட்டுரையில் ராமையா சொல்கிறார். நினைக்கவே கொடுமையாக இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்,  மழை நீரில் நமக்கு பயனாகும் நீரின் அளவே 35 சதவிகிதத்திற்கும் சற்று குறைவாகத்தான் இருக்கும். எனில் நாம் பயன்படுத்தும் நீரின் அளவி மிக ஒத்த அளவு நீர் ஆவியாகிறது என்றால் அதைத் தடுத்தால் நீர்ப் பஞ்சமே இருக்காதே.

நீர் ஏன் ஆவியாகிறது?

புவியும் வெளியும் அளவுக்கு அதிகமாய் வெப்பமடைவதால்தான்.

பூமி ஏன் வெப்பமடைகிறது?

தாராளமயம் நிர்ப்பந்திக்க, உலக மயம் உந்தித் தள்ள விரைவுபடும் நகர் மயமாதலின் பொருட்டு அழிக்கப் படும் வனங்கள் இதற்கான முக்கிய காரணங்களுள் முதன்மையானது.

வனங்கள் அழிக்கப் படுவதன் மூலம் பூமி சூடாவது ஒரு புறமெனில் காட்டைத் தவிர வேறு எதையும் அறிந்திராத மலை மக்களும் சேர்த்தே அழிக்கப் படுகிறார்கள் என்பதுதான் கொடுமையான விசயம். அதை விடவும் கொடுமை என்னவெனில் அவர்கள் படும் சித்திரவதைதான்.

வனங்களின் அழிவு வனங்களோடு சம்பந்தப்பட்ட பறவைகளும் விலங்குகளும் இன்னபிற ஜந்துக்களும் சேர்ந்தே அழிக்கப் படுகின்றன. இவை புவி வெப்பத்தை அதிகப் படுத்துவதுடன் இயற்கைச் சமநிலையையும் குலைத்துப் போடுகின்றன.

போக, வேக வேகமாக எழும்பும் பெரிய பெரிய தொழிற்சாலைகளும் தமது பங்கிற்கு புகையை கக்கிவிட்டு செல்கின்றன.

இவ்வாறு பூமி வெப்பப் படுவதால் நீரற்று ஒரு அழிவு சாத்திப் படும் அதே வேளையில் நீர் பெருத்து பூமி அழியவும் வாய்ப்பிருக்கிறது. புவி வெப்பமடைவதால் துருவப் பகுதிகளில் பனி விரைவாய் உருகும் சாத்தியம் உள்ளது. அப்படி துருவப் பனி உருகும் போது அது கடலில் கலந்து கடலின் மட்டம் பெருமளவு உயரும் அபாயம் உள்ளது. அப்படி உபரியாய் உயரும் கடல் நீர் நிலப் பரப்பில் புகுந்து நிலத்தை மூழ்கடிக்கும் அபாயம் விரைவில் நிகழக் கூடும்.

 ஆக அது குறித்து உலகத் தலைவர்கள் உட்கார்ந்து முடிவுக்கு வர வேண்டும். அவ்வளவு எளிதாக செய்வார்களா?

அவரவர்களுக்கு ஆயிரமாயிரம் பிரச்சினைகள். இதில் கேவலம் பொது மக்களைப் பற்றி சிந்திக்க ஏது நேரம்?

பிறகு, என்ன செய்வது. அவர்களை இது குறித்து சிந்திக்க வைக்க வேண்டும். இதன் அவசியத்தைப் பொதுப் புத்திக்கு உரிய வழிகளில் கொண்டு போக வேண்டும். பொதுத் திரள் கிளர்ந்து எழுந்தால் மட்டுமே இது சாத்தியம்.

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் நிலம் சூடாக தன்னாலான பங்களிப்பை செய்கின்றன.

சொந்தமாக மகிழுந்து வைத்திருப்பது என்பது இன்றைய மத்திய தர வர்க்கத்து அடையாளமாகிப் போனது. சற்ரேரக் குறைய 40 விழுக்காடு மகிழுந்துகளில் ஒருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய நிலைதான் இன்றைக்கு உள்ளது. அரசு இதைத் தடுக்க ஏதேனும் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் மகிழுந்துகளுக்கான வரியை உயர்த்தலாம். அதன் மூலம் கௌரவத்திற்காகவும், எளிய தவணையில் கிடைக்கிறதே என்பதற்காகவும்
மகிழுந்து வாங்குபவர்களின் எண்னிக்கை பெருமளவு குறைந்து தேவைப் படுவோர் மட்டுமே வாங்கும் நிலை ஏற்படும்.

இதுவும் பெருமளவு வெப்பத்தைக் குறைக்க உதவும்.

அடுத்து மணல் கொள்ளை. காவிரியில் மணலின் உயரம் 100 மீட்டராக இருந்தது என்று வைத்துக் கொள்வோம். இதைத் தோராயமாகத்தான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் காவிரியின் பரப்பளவு 43856 சதுர கிலோமீட்டர் என்று விக்கி பீடியா சொல்கிறது.

எனில்,
438.56 கன கிலோமீட்டர் மணல் என்றாகிறது. எனில், 438.56 கன கிலோமீட்டர் அளவிற்கு ஈரம் என்றாகிறது. இப்போது ஏறத்தாழ 50 அடி ஆழத்திற்கு மணலை கொள்ளை அடித்தாயிற்று. எனில், இப்போது காவிரியின் மணல் பரப்பளவு 219.28 கன கிலோமீட்டர் என்றாகிறது. ஆகவே காவிரி மணலின் ஈரப்பதமும் 438.56 கன கிலோமீட்டரிலிருந்து 219.28 கன கிலோமீட்டர் என்றாகிறது.

மணல் குறித்த இந்தப் புள்ளிவிவரம் எல்லா ஆறுகளுக்கும் பொருந்தவே செய்யும். ஆக மணல் கொள்ளை பாதியளவு ஆற்று மணல் ஈரப் பதத்தை களவு கொண்டிருக்கிறது.

இதன் விளைவாக ஆற்று நீரின் வேகமும் அதிகரித்திருக்கிறது. இதன் சோக விளைவாக ஆடிப் பதினெட்டன்று காவிரியில் ஆழ்குழாய் கிணறு வெட்டி நீரெடுத்து குளிக்க வெண்டியதாயிற்று.

மேற்சொன்ன காரணங்களின் விளைவாக சராசரியா 40 மீட்டர் ஆழத்தில் தென்பட்ட நிலத்தடிநீர் மட்டம் இப்போது 200 மீட்டருக்கு நகர்ந்திருக்கிறது.

இதே நிலையினை கர்நாடகாவும் எடுக்கும் பட்சத்தில் காவிரி நீரை அவர்கள் மிகத் தாராள மனதுடன் தர இயலும்.

அதுமட்டும் அல்ல இவை சரி செய்யப் படும் போது எங்கள் உடமைகளும் உயிர்களும் கூட தப்பும்.

அரச கனவான்களே,

எங்களது உயிரின் மதிப்பும் , எங்கள் வலியும் உங்களுக்கு புரியாது போயினும்
இவற்றை நீங்கள் செய்து முடித்தால் வருடா வருடம் நீங்கள் தர வேண்டிய நிவாரணத் தொகை மிச்சமாகும்.

அதற்காகவேனும் இதில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

நன்றி : “காக்கைச் சிறகினிலே”

Sunday, October 7, 2012

இரவு...தீப் பந்தங்கள்... கல்வி

அந்தப் பல்கலை கழகத்தில் என்ன நடத்தினார்கள் என்பதில் ஏதேனும் விவாதம் இருக்குமானால் அதைக் கொஞ்சம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றேத் தோன்றுகிறது.

அந்தப் பல்கலைக் கழகம் குறித்த எந்தத் தகவலும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே நம்மை அழைத்துப் போகின்றன.

பத்தாயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் தங்கிப் படித்திருக்கிறார்கள்.



இத்தனை விளம்பரங்கள், இத்தனை விதமான போக்கு வரத்து வசதிகள், இத்தனை கேம்பஸ் வாய்ப்புகள் எல்லாம் கடந்து வியக்குமளவு ஜனத்தொகை
எல்லாம் இருந்தே இவ்வளவு மாணவர்களை கொண்டு வருவது சாத்தியமே இல்லாத போது அது சாத்தியப் பட்டிருக்கிறது.

படிக்கிறவர்களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் இன்னபிற கல்விச் செலவுகள் எல்லாம் இலவசம்.

இலவசம் என்பதை விட இது அரசின் கடமை என்பதை அந்த மன்னன் உணர்ந்திருக்கிறான்.

இரவிலும் வகுப்புகளும் விவாதங்களும் தொடர்ந்திருக்கின்றன. நினைத்துப் பார்க்கவே இயலவில்லை,

தீப் பந்தங்களின் ஒளியில் இவை சாத்தியப் பட்டிருக்கிறது.

ஒரு மன்னனின் சாம்ராஜியத்தில் எத்தனை கிராமங்கள் இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இருநூறு கிராமங்களிலிருந்து கிடைத்த வருமானம் முழுவதையும் அந்த மன்னன் கல்விக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறான்.

பாஹியான் சொன்னதாகக் கிடைக்கும் குறிப்புகள் நம்மை திக்கு முக்காட வைக்கின்றன,

 பத்தாயிரம் மாணவர்களுக்கு இரண்டாயிரம் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து நெறிப் படுத்தியிருக்கிறார்கள். ஏறத்தாழ மூவாயிரம் ஆசிரியரல்லாத ஊழியர்கள் அங்கு பணியாற்றியிருக்கிறார்கள்.

கல்விதான் மண்ணிற்கு வெளிச்சத்தையும் சாரத்தையும் தரும் என்று புரிந்திருக்கிறது அந்த மன்னர்களுக்கு.

“ அறிவை அள்ளித் தரும் இடம்” என்று பொருள் படும் படி “நாளந்தா” என்று பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.



வருவாயில் பெரும்பகுதியை கல்விக்கு செலவு செய்திருக்கிறார்கள் முடி சுமந்த மன்னர்கள்.

வருவாயில் பத்து சத விகிதம் கூட மக்களாட்சியில் கல்விக்கு இல்லை.

பத்தாயிரம் மாணவர்கள் படிக்கும் இடத்தில் இரண்டாயிரம் ஆசிரியர்களும், மூவாயிரம் ஆசிரியரில்லாத ஊழியர்களுமென்று ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் பணி புரிந்துள்ளனர்.

முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது நம் மண்ணின் மிக நீண்ட கனவாகவே உள்ளது.

நாளந்தாவின் பெருமையும் கல்வியின் மகத்துவமும் நிச்சயமாய் பிரதமருக்கும் எல்லா முதல்வர்களுக்கும் தெரிந்தேதான் உள்ளது.



எனில் ,

இவர்கள் கல்வியை இப்படி வணிகப் படுத்துகிறார்களே. ஏன்?

உழைக்கும் ஜனத்திரளும், ஒடுக்கப் பட்ட ஜனத் திரளும் கல்வி பெற்றுவிட்டால் தாங்கள் சொகுசாக இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு என்ன?


Tuesday, October 2, 2012

அக்டோபர் இரண்டு



நாகம்மையார் உடலைக் கிடத்தியிருக்கிறார்கள். சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் கதறி அழுகிறார்கள். ஒப்பாரி வேறு. இது பெரியாரை எரிச்சல் படுத்துகிறது.

“ அழுபவர்கள் இங்கிருந்து ஓடுங்கள். அழுவதால் அவர் எழப் போவதில்லை. போக சாவு என்பது இயல்பானது. எல்லோருக்கும் வரக்கூடியது”

என்று அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தவர்.

ராஜாஜி மறைந்த பொழுது பெரியார் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து கிருஷ்ணாம்பேட்டை சுடுக்காட்டுக்கு வருகிறார்.

தனது மனைவி இறந்த பொழுது அழுதவர்களை விரட்டி அடித்தவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தேம்பித் தேம்பி அழுகிறார்.

வேறு எப்போதேனும் பெரியார் இப்படி அழுதிருப்பாரா என்று தெரியவில்லை.

கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இடம் கொள்ளாததால் மக்கள் வெளியே நிறுத்தப் படுகிறார்கள். கோபம் கொண்ட கூட்டம் கல்லெடுத்து எறிகிறது.

பெரியார் மீது கற்கள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக காமராசர் பெரியாரை மூடி மறைத்தபடி நிற்கிறார்.

கற்கள் காமராசர்மேல் விழுகின்றன. ஆனாலும் நகராமல் பெரியார்மேல் கற்கள் விழாமல் பார்த்துக் கொள்கிறார்.

அவர்தான் காமராசர்.


அவரும் சராசரிதான் பல விஷயங்களில்.

எதிரிகளின், எதிர்க் கட்சியின் வளர்ச்சி குறித்தோ, பலம் குறித்தோ, மக்களின் மனநிலை குறித்தோ சரியாய் கணிக்கத் தெரியாதவர்தான்.

நல்லது செய்திருக்கிறோம், மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்று அப்பாவியாய் நம்பி ஏமாந்தவர்தான்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தந்தைப் பெரியாரின் மீது கற்கள் விழுந்து விடக் கூடாது என்று தான் கல்லடிப் பட்ட,

அணைகள் கட்டினோம், தொழிற்சாலைகள் கொண்டு வந்தோம்,  நெய்வேலி சுரங்கம் கொண்டு வந்தோம். விவசாயமும் வேலை வாய்ப்புகளும் பெருக்கினோம். பயனடைந்த மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்பிய அப்பாவி சராசரியின் நினைவு நாள் இன்று.

எத்தனையோ கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் உங்கள் மீது எனக்கும் உண்டு.

ஆனாலும் உங்கள் நினைவு நாள் ஒரு பெரிய வெற்றிடத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது பெருந்தலைவரே.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...