Tuesday, August 28, 2018

என் தலையீட்டு உரிமை

கலைஞரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதாக் கட்சியையும் திமுக அழைத்திருக்கிறது
"மதவெறியால் நாட்டையே சுடுகாடாகத் துடிக்கும் அவர்களை எப்படி அழைக்கலாம்?“
இதைக் கேட்பதற்கு நமக்கு உரிமையேகூட கொஞ்சம் உண்டுதான்.
ஆனால், அடிப்படையில் அது அவர்கள் நிகழ்ச்சி. அவர்கள் அழைக்கிறார்கள். அதற்கான காரணங்களும் உரிமையும் அவர்களிடம் உண்டு.
பிரச்சினை என்னவெனில்,
எந்த பிஜேபியை திமுக அழைத்திருக்க வேண்டாம் என்று நாம் உரிமையோடு கேட்டோமோ அந்த பிஜேபி வாஜ்பாய் நினைவேந்தலுக்கு நம்மை அழைத்திருக்கிறார்கள்
முன்னதை சொல்வதற்கு எனக்கு உள்ள உரிமை எனக்கு உயிருக்கு உயிரான நண்பன் தனது வீட்டு விஷேசத்திற்கு யாரை அழைக்கலாம் என்பதிலான எனது தலையீடு
இரண்டாவது என்பது எனது குடும்பத்தை, தெருவை, நாட்டை சுடுகாடாக்க துடிப்பவர் வீட்டு விஷேசத்தில் என் தகப்பன் கலந்து கொள்ளலாமா என்பதிலான என் தலையீட்டு உரிமை
போகக்கூடாது தந்தையே

28.08.2018
முன்னிரவு 07.41

குழந்தைகளையும் பஞ்சு மிட்டாயையும் சேர்த்து வைக்க மெனக்கெடும் கவிதைகள்







யாழிசை மணிவண்ணனின் “பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்” கவிதை நூலை முன் வைத்து
”மழையின் தாளம் கேட்குது 
மனிதா மனிதா 
வெளியே வா”
என்ற பாடலை கலை இரவு மேடைகளில் கேட்கும்போதெல்லாம் மனசு சிலிர்த்து போகும்.
மழையை யார் எப்படி எழுதினாலும் நனைந்து பழக்கப் பட்டிருக்கிறோம்.
ஈரமே அதன் ஜீவன் என்பதால் எந்த இசைக் கோர்வையைக் காட்டிலும் மழையின் சத்தம் உன்னதமானது.
எவ்வளவோ வாசித்து விட்டோம் மழை குறித்தும் மழையின் இரைச்சல் குறித்தும்.
”துளிகள் உடையும் சப்தம்”
என்று மழை விழும் ஓசையை யாழிசை மணிவண்ணன்சொல்வது புதிது மட்டும் அல்ல. அது நுட்பத்தின் உச்சம்
ஆஹா, துளிகள் உடைவதால் உண்டாகும் மழையின் வலி சத்தியமாய் தமிழுக்கு புதுசு.
“தெளிந்த குளத்தில் தெரிகிறது
ஒரு வெளிறிய வானம்
அந்தப் பறவையின் பெயர் தவளை”
ஒரு காட்சியை அப்படியே அழகுறப் பதிவது என்பதுகூட ஹைகூவிற்கான ஒரு கூறு என்று கூறப்படுகிறது. பாருங்களேன் எப்படி ஒரு காட்சிப் பதிவு.
தெளிவான குளமாம், அதற்குள் தெரிவது வெளிறிய வானமாம், தவளை பறவையாம். உள்ளே இருப்பது வானமெனில் அங்கே இருக்கிற தவளை பறவை இல்லாமல் வேறு என்னவாம்.
அவன் அறந்தாங்கியில் இருந்தால் ஒரு எட்டு ஓடிப்போய் முத்தம் இட்டுவிட்டு ஓடி வந்துவிடலாம்.
இந்தக் கவிதையில் மீட்டர் கூடலாம் குறையலாம். அதைவிடுத்துப் பார்த்தால் நேர்த்தியான ஹைகூ இது.
குழந்தைகளைத் தேடி
ஊருக்குள் நுழைகிறது
பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்
என்கிறான். யார் யாரைத் தேடுவது? பஞ்சு மிட்டாய் குழந்தைகளையா? அல்லது குழந்தைகள் பஞ்சு மிட்டாயையா? இவன் யாரைக் கொண்டாடுகிறான்? குழந்தைகளையா அல்லது பஞ்சு மிட்டாயையா? எதற்கு இவ்வளவு மெனக்கெடுகிறான் இந்தப் பிள்ளை?
குழந்தைகளையும் பஞ்சு மிட்டாயையும் சேர்த்து வைக்க மெனக்கெடுகிறது இவன் கவிதை.
குழந்தைகளுக்காக பஞ்சு மிட்டாய் மரத்தை சுமப்பவனை வியாபாரி என்கிறோம். இவனோ கவிஞன் என்கிறான்.
ஒரு கவிதை இதைவிட என்ன செய்துவிடும்? அல்லது இதைவிட என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?
பனை வெல்லமும்
பொடி செய்த சீரகமும்
கடல் கடந்து அனுப்பியிருக்கிறாள்
இருமலுக்கு நன்றி
என்கிறான். சன்னமாய் அழுதுவிட்டேன். நாலு வரிகளுக்குள் ஒரு குறும்படத்தை விரிக்கிற வித்தை இருக்கிறது இவனிடம்.
சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு ஒருவன் அலை பேசுகிறான். பேச்சினூடே இருமல். பதறிப் போகிறாள். அழுகிறாள். மருத்துவ மனைக்கு அழைத்துப்போகக்கூட ஆள் இல்லையே. ஒரு கஷாயம் வைத்துக் கொடுக்கவும் வாய்ப்பில்லையே?
மருந்துப் பொடி செய்கிறாள். விடுப்பில் அங்கிருந்து வந்திருப்பவர்களைத் தேடி பிடிக்கிறாள். பொடியை அனுப்புகிறாள். இணையாள் கைபட்ட பொடி வந்ததும் பூரிக்கிறான். ஊருக்கு வேண்டுமானால் அது மருந்துப் பொடி. அவனுக்கு அந்த டப்பி நிறைய அவளது அன்பு.
பெற்றோர் பெண்டு பிள்ளைகளைப் பிரிந்து சம்பாதிப்பதற்காக புலம் பெயர்ந்த இளைஞனின் வலியை எவ்வளவு லகுவாக கவிதை ஆக்கியிருக்கிறான்.
ஆண்டபரம்பரையின் பிணத்தில்
அடுக்கியிருந்த சாண விரட்டிகளில்
ஆதி திராவிடனின் கை ரேகைகள்
சாணி மிதிப்பதைப்போல் சாதியை மிதிக்கிறது இந்தக் கவிதை
கிழிந்த சுவரினை
தையலிட்டிருந்த்து 
எறும்புச் சாரை
என்கிறான்.
சில இடங்களில் செதுக்கி இருக்கலாம் என்பது தவிர கவிதையை மட்டுமே எழுதியிருக்கிறான். சாயல்களற்ற கவிதைகளின் தொகுப்பு. சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
“இத்தொகுப்பில் இருளை எரிக்கும் கொண்டு வந்திருக்கிறார் யாழிசை. நமது விளக்குகளில் ஏந்திக் கொள்வோம்” என்கிறார் கரிகாலன்.
ஏந்திக் கொண்டேன்.
#சாமங்கவிய 36 நிமிஷங்கள்
27.08.2018

Monday, August 27, 2018

26.08.2018

அலைபேசியின் அழைப்பொலி கேட்டு எடுத்துப் பார்த்தால் மெசஞ்சரில் நா. விச்வநாதன் அழைத்துக் கொண்டிருந்தார். ஒருவிதமான குற்ற உணர்வு அப்பிக்கொண்டது. எடுப்பதா? அல்லது கொஞ்சம் பேசுவதற்குரிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பிறகு நாமே அழைத்து பேசிவிடலாமா என்று குழம்பிப் போனேன்.
காரணம் மூன்று நாட்களுக்கு முன்னமே அவர் மெசஞ்சரில்
“எட்வின், உங்களோடு பேச வேண்டும். என்னிடம் உங்கள் எண் இல்லை. நிச்சயமாக உங்களிடமும் என்னுடைய எண் இருக்காது. என்னுடைய எண் தந்திருக்கிறேன். அவசியம் பேசுங்கள்” என்றிருந்தார்.
மூன்று நாட்களாய் முடியாமல் போனது. அந்தக் குற்ற உணர்வு ஒருபுறம் தடுத்தாலும் எனக்குள்ளிருந்த நாவியின் குரலுக்கான தாகம் அலைபேசியை காதுக்கு இழுத்துப் போனது.
வாரம் இரண்டு முறையேனும் மணிக்கணக்கில் கேட்ட குரல். மாதம் ஒன்று அல்லது இரண்டு கூட்டங்கள் தஞ்சையில் இருக்கும் எனக்கு அப்போதெல்லாம்.
கேட்டபோதெல்லாம் Kaakkai Cirakinile கு எழுதிக் கொடுத்தார்.
‘எட்வின்’ என்றதுமே கண்கள் கசிய ஆரம்பித்துவிட்டன. “தோழர், எப்படி இருக்கீங்க?” என்று கேட்கிறேன்.
அதை பிறகு சொல்வதாகவும், பேச வந்ததை முதலில் பேசிவிடுவதாகவும் கூறுகிறார். விஷயம் ரொம்ப எளிமையானது.
தஞ்சையில் ‘வாசகர் வட்டம்’ ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்த கூட்டத்தில் “கறிசோறு” நாவல் குறித்து உரையாற்ற யாரை அழைப்பது என்று பேசிக்கொண்டிருந்தபோது யாரோ ஒரு தம்பி “கறிசோறு” குறித்து எட்வின் பேசிக் கேட்டால் நல்லா இருக்கும் என்று சொல்லியிருக்கிறான். லைனில் வந்துவிட்டார்.
”எட்வின், எனக்குத் தோணல, அந்தப் பையன் சொன்னதும் உங்களத் தேடினேன்” என்று அவர் சொல்ல சொல்ல “நம்ம யாருமே கண்டுக்கறதில்லயே என்கிற வழமையான நமது ஆதங்கம் காற்றிலே கறைந்து போனது. ”நாமளும் ஆளுதாண்டா” என்கிற திமிர் மீண்டும் ஒட்டிக் கொண்டது.
பொதுவாவே தஞ்சையில் பேசுவதென்றால் அலாதியான சுகம். ஒத்துக் கொண்டிருக்கிறேன். அநேகமாக செப்டம்பர் ஒன்பது அன்று தஞ்சையில் உரையாற்றுகிறேன்.
இனிதான் முக்கியமே.
இப்ப சொல்லுங்க தோழர், “எப்படி இருக்கீங்க? ஊர் எப்படி இருக்கு?”
”நானும் நல்லா இருக்கேன். ஊரும் நல்லா இருக்கு.என்ன ஊரும் நானும் ஒட்டாம இருக்கோம். கிட்டத் தட்ட ஊர்விலக்கம்தான்”
அவர் விரும்பாத ஒரு விஷயத்தை, இத்தனை காலம் பொதுவெளியில் அவர் குறித்து சொல்லாத ஒரு விஷயத்தை இப்போது வைக்கிறேன். அவர் பிறப்பால் ஒரு பார்ப்பணர். எப்போதும் அக்ரஹாரத்திற்கு எதிராகவே நிற்பவர். சனாதனம் மிதிப்பவர். இடைசாதி அரசியலையும் மூர்க்கமாய் எதிர்ப்பவர். ஏறத்தாழ எனக்குத் தெரிய எந்தக் காலத்திலும் ஊர் அவரை ஏற்றதே இல்லை. எனவே சிரித்துக் கொண்டே என்ன விஷயம்? என்கிறேன்
ஒன்றும் இல்லை. 150 தலித்துகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போயிருக்கிறார்.. ஜீவாவும் (Jeeva Kumar) இன்னொரு பையனும் இறுதிவரை கூட நின்றதாகக் கூறினார். ஜீவகுமார் இறுதிவரை கூட நின்றார் என்பதைக் கேட்டதும் ஒருவிதமான திமிர் ஒட்டிக் கொண்டது.
இதை செய்தால் ஊர் விலக்கி வைக்காமல் கொண்டு கொடுக்கவா செய்யும்.
சிரித்தேன்.
”புரயோஜனம் உண்டா?”
“இல்லாம, வெள்ளி வெள்ளி எழுபது எண்பது பேர் நம்ம பெண்கள் கோயிலுக்குள்ள போய் சாமி கும்பிட்டுட்டு வராங்க”
அவர் நம்ம பெண்கள் என்று சொன்னது தலித் பெண்களை. அவர் நாத்திகர்.
செப்டம்பர் ஒன்பது கலகக்காரர் நாவியைப் பார்க்க ஷாலோடு தஞ்சைக்கு போகிறேன்
#சாமங்கவிய ஒரு மணி ஐந்து நிமிடங்கள்
26.08.2018

Sunday, August 26, 2018

ஒரு பள்ளியை மூடுவதென்று முடிவெடுத்துவிட்டார்கள் என்றால்…


ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியை இழுத்து மூடவேண்டும் என்று
முடிவெடுத்து  விடுகிறார்கள். மூடுவதற்குரிய காரணங்களைச் சொல்லாமல் அதை அவர்களால் செய்ய இயலாது. எனவே அதற்கு என்னென்ன 
செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியலைத் தயாரிக்க அமர்கிறார்கள்.

காரணங்களைத் தேடி அவர்கள் மண்டையைப் போட்டு  குழப்பிக்கொள்ளத்  தேவை இல்லை. 

தேநீர்க் கடைக்காரர் கலியனிடம்  சர்க்கரை கம்மியாய்  ஒரு  கோப்பை  தேநீரை வாங்கிப் பருகிக் கொண்டே அன்றைய தினசரியை அவர்கள்  மேம்போக்காக  மேயத் தொடங்குகிறார்கள்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஏதோ  ஒரு ஊரின் அரசுப்  பள்ளி  ஒன்று மூடப் பட்டதாக ஒரு செய்தி அதில் வந்திருக்கிறது. இப்போது  அவர்களுக்கு தெளிவாகப் புரிந்துவிடும், ஒரு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் அந்தப் பள்ளியை மூடிவிடலாம்.

என்ன சோதனை என்றால் அவர்கள் மூட வேண்டும் என்று ஆசைப்படுகிற 
பள்ளியில் மாணவர்களின்  எண்ணிக்கைக்கு குறைவில்லை.

கொஞ்சம் யோசிக்கிறார்கள். மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பள்ளியைப்  பூட்டலாம் என்றால் மாணவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுத்துவிட்டாலும்  பள்ளியை பூட்டமுடியும் என்று புரிந்து கொள்கிறார்கள்.

 அவர்களிடம் அதிகாரம், ஆள்பலம், மற்றும் பணபலம், இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி பள்ளிக்கு குழந்தைகளை வரவிடாமல் தடுக்க முடியுமா என்று யோசிக்கிறார்கள்.

1)   பள்ளியின் உள்கட்டமைப்பினை (INFRASTRUCTURE) சிதைப்பதன் மூலம்
2)   மிகவும் அத்தியாவசிமான பராமரிப்புகளையும் மராமத்துகளையும்கூட செய்யாமல் விடுவது
3)   தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்காமல் விடுவது
4)   குழந்தைகள் கடந்துவரும் சின்னச் சின்னக் காட்டாறுகளில் பாலங்களைக் கட்டாமல் விடுவது அல்லது மராமத்து பார்க்காமல் விடுவது
5)   பள்ளி சரியில்லை, பாதுகாப்பானதாக இல்லை என்ற புரளியை மக்கள் நம்புகிறமாதிரி கிளப்பிவிடுவது.
6)   பிள்ளை பிடிக்கிறவர்கள் நடமாடுவதாய் புரளிகளை கிளப்புவது
7)   அடியாட்களை களமிறக்கி பிள்ளைகளை வர விடாமல் தடுப்பது 

பள்ளியின் உள்கட்டமைப்பை சேதப்படுத்துவது

பள்ளி வளாகத்திற்குள் இரவு வேளைகளில் நுழைந்து கூட்டமாக மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும் இதரக் குப்பைகளையும் அங்கேயே போட்டு விட்டு வந்துவிடுவது.

சீட்டு விளையாடிவிட்டு சீட்டுக் கட்டுகளையும் கொண்டு சென்ற தின்பண்டங்களின் ஈவையும் காகிதக் குப்பைகளையும் அங்கேயே போட்டுவிட்டு வருவது.

சுவற்றில் அசிங்க அசிங்கமாக கிறுக்கி வைத்துவிட்டு வருவது

பள்ளியில் அங்கங்கே அசுத்தம் செய்துவிட்டு வருவது

கூரையை, மேசை, டெஸ்க் மின்விசிறி உள்ளிட்ட தளவாடப் பொருட்களை சேதப்படுத்திவிட்டு வருதல் போன்றவை ஆகும்.

இவற்றின் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் முகச்சுளிப்பைத் துவங்கி வைப்பது. இவை தொடருகிற பொழுது பள்ளிப் பிள்ளைகளுக்கு பள்ளியின்மேல் ஒருவிதமான அருவெறுப்பை ஏற்படச் செய்வது என்று தொடங்கி அந்தப் பள்ளி படிப்பதற்கு உகந்த இடமல்ல என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவது. இவற்றின் மூலம் இந்தப் பள்ளி நம் பிள்ளைகளுக்கு ஏற்ற பள்ளி இல்லை என்பதை பெற்றோர்களிடம் ஏற்படுத்துவது. கொஞ்சம் கடன் பட்டாலும் பரவாயில்லை நல்ல தனியார் பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்த்துவிட வேண்டும் என்ற மனநிலைக்கு அவர்களை தயார் படுத்துவது.

உரிய பராமரிப்புகளையும் மராமத்துகளையும் மறுப்பது

பள்ளியை அன்றாடம் சுத்தம் செய்வது, அறைகளில் சேர்ந்துள்ள ஒட்டடைகளை எடுப்பது, தண்ணீர்த் தொட்டிகளை உரிய காலத்திற்குள் தூய்மைப் படுத்துவது, கழிவறைகளை சுத்தம் செய்து உரிய திராவகங்களை தெளித்து சுகாதாரம் பேணுவது, பள்ளி வளாகத்தில் புதர் அண்டாமல் பார்த்துக் கொள்வது, மின் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது போன்றவை பள்ளியின் அன்றாடப் பராமரிப்புப் பணிகள் ஆகும்.

மின்தடையோ, மின்கசிவோ ஏற்பட்டால் அதை உடனே சரி செய்வது, நீர் இறைக்கும் மின் மோட்டார்கள் பழுதுபட்டால் அவற்றை உடனே பழுதுநீக்கி சரி செய்வது, தரையில் கட்டிடங்களில் ஏதேனும் சேதாரம் ஏற்படும்போது அதை சரி செய்வது, மேசைகள், நாற்காளிகள், பெஞ்ச்சுகள், டெஸ்குகள் போன்றவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவற்றை சரி செய்வது ஆகியவை மராமத்துப் பணிகள் ஆகும்.

இவற்றை செய்ய மறுப்பது அல்லது தமக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி இவற்றை செய்ய விடாமல் தடுப்பது.

இதன்மூலம் பெற்றோர்களை தம் பிள்ளைகளை வேறு தனியார் பள்ளிகளை நோக்கி நகர்த்துகிற மனநிலைக்கு பெற்றோர்களைத் தள்ளுவது.

ஆசிரியர் மற்றும் ஊழியர் பற்றாக்குறையை ஏற்படுத்துவது

ஆசிரியர் மற்றும் ஊழியர்களிடம் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவர்களை நிர்வாக மாறுதல் மூலம் வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டு அந்த இடங்களை நிரப்பாமல் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி பார்த்துக் கொள்வது. ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு யாரேனும் வருவதற்கு முயற்சி செய்தால் வரவிடாமல் பார்த்துக் கொள்வது.

போதுமான ஆசிரியர்களும் ஊழியர்களும் இல்லை என்கிற நிலையில் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு  கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்தை பெற்றோருக்கு ஏற்படுத்துவது.

பாதுகாப்பின்மை குறித்து வதந்திகளைப் பரப்புதல்

மேலே விவரித்தவைபோக பள்ளிக்கு குழந்தைகள் வரும் காட்டாறு பாலங்களை சேதப் படுத்துவது அல்லது அங்கு அமர்ந்து சாராயம் அடித்துக் கொண்டு குழந்தைகளுக்கு அச்சத்தைக் கொடுப்பது.

பாதுகாப்பு குறித்த அச்சத்தை, பிள்ளை பிடிக்கிறவர்கள் அலைகிறார்கள் என்ற அச்சத்தை வதந்திகளின்மூலம் பரப்புதல்.

பள்ளிக்கு குழந்தைகள் வரும் வழியில் அவர்களை மறிப்பது அச்சமூட்டுவது போன்ற காரியங்களை செய்தல்.

ஒரு அரசுப் பள்ளியை மூடுவது என்று செல்வாக்குள்ளவர்கள் முடிவெடுத்து விட்டால் வழக்கமாக மேலே விவரிக்கப்பட்ட விஷயங்களைக் கையில் எடுப்பார்கள்.

இதை இவர்கள்தான் செய்கிறார்கள் என்று யாரும் அறியாதபடி பார்த்துக் கொள்வார்கள். சிலநேரங்களில் எந்தவிதமான கவனக்குவிப்பையும் கடந்து அவர்களது அடையாளம் வெளிப்பட்டால் பலநேரங்களில் அதுகுறித்து எந்தவிதமான வெட்கமும் இன்றி வலம் வருவார்கள்.

இவர்கள் இவ்வளவும் செய்த பிறகும் பிள்ளைகள் பள்ளிக்கு வருவது தொடர்ந்தால் என்ன செய்வது என்று இவர்களுக்கு கீழ்வரும் சம்பவம் சொல்லித்தருகிறது.

கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் இருக்கிறது. அங்கு ஒரு அரசுப் பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளியில் திருநல்லூர், பறட்டை, தேவனாஞ்சேரி, ஊருடையான்நத்தம், அந்தியூர், கழுக்காணிவட்டம், இணைபிரியாள்வட்டம் போன்ற ஊர்களில் இருந்து குழந்தைகள் வந்து படிக்கிறார்கள்.

கும்பகோணத்திலிருந்து காவற்கூடம் வரைக்குமான அரசுப் பேருந்து நீலத்தநல்லூர் வழியாக இயக்கப் படுகிறது. இந்தப் பேருந்து பிற்பகல் 3.50  மணி வாக்கில் நீலத்தநல்லூரைக் கடக்கிறது.

நீலத்தநல்லூர் அரசுப்பள்ளி சரியாக 4.10 மணிக்கு முடிகிறது. இதற்கு அடுத்த பேருந்து இரண்டுமணி நேரம் கழித்தே நீலத்தநல்லூரைக் கடக்கிறது.

ஆக, 4.10 கு பள்ளி முடிந்த மாணவர்கள் ஏறத்தாழ இரண்டுமணி நேரம் பேருந்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது என்ற செய்தியை 10.08.2018 ஆம் நாளிட்டஇந்து தமிழ்கூறுகிறது.

இதைவிட முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.
மாலை ஆறுமணிக்கு பேருந்து ஏறும் அந்தக் குழந்தைகள் வீடுபோய் சேர்வதற்கு எப்படியும் ஏழு அல்லது ஏழரை ஆகிவிடும்.

அந்தக் குழந்தைகளுக்கான மாலை நேரத்துப் பேருந்துப் பிரச்சினையை மட்டுமே இங்கு பார்த்தோம். காலையில் பள்ளிக்கு வரும்போதும் இத்தகைய பிரச்சினைகள் அந்தக் குழந்தைகளுக்கோ அல்லது வேறு பள்ளி அல்லது பள்ளிகளைச் சார்ந்த குழந்தைகளுக்கோ இருக்கக் கூடும்.

உதாரணமாக பள்ளி 9.30 கு துவங்குகிறது என்று கொள்வோம். பெருந்து 7.30 கு அந்த ஊரைக் கடக்கிறது. அடுத்தப் பேருந்து 10 மணிக்கு கடக்கிறது என்று கொள்வோம். ஒன்று குழந்தைகள் பள்ளிக்கு இரண்டு மணி நேரம் முன்னமே வந்து காத்திருக்க வேண்டும். அல்லது தாமதமாக வர வேண்டும். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் பட்டிணியோடு வந்து காத்திருக்க வேண்டும்.

சில குழந்தைகளுக்கு இரண்டு நேரமும் பிரச்சினையாகி விடும்.

இவை அந்தக் குழந்தைகளை ஏதோ ஒரு புள்ளியில் இடைநிற்கச் செய்துவிடும்.  

இப்போது கொஞ்சம் யோசிப்போம்.

பள்ளி நேரத்திற்கு வெகு முன்னமோ அல்லது பள்ளிவிட்டு வெகுநேரம் கழித்தோ அந்த ஊருக்குப் பேருந்து வரும் எனில் அந்தக் குழந்தைகள் இடைநிற்க ஏதுவாகும்.

கொஞ்சம் மாற்றி யோசித்தால்,

அந்தப் பள்ளியை மூடவேண்டும் என்று நினைப்பவர்கள் பேருந்துகளை முன்னமோ அல்லது பின்னரோ இயக்க செய்துவிட்டால்கூட பள்ளிக்கு குழந்தைகளின் வரத்து குறைந்துவிடும். இது ஏதோ ஒரு புள்ளியில் அந்தப் பள்ளி மூடப்படுவதற்கான காரணமாக அமைந்துவிடும்.

இவ்வளவு எதற்கு என்று கேட்கத் தோன்றும்.

பள்ளிநேரத்திற்கு ஏற்ப அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். பொதுப் பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு பள்ளி தொடங்குவதற்கும் முடிவதற்கும் ஏற்றாற்போல் அரசுப் பேருந்துகளை இயக்கு என்ற கோரிக்கை அனைத்து அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலுமான கோரிக்கையாக இருக்க வேண்டும்.


நன்றி: தீக்கதிர் 26.08.2018














இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...