Wednesday, December 29, 2010

பூக்களை விற்ற காசில்...


" நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில் 
கவிதை"
என்று ஒரு முறை எழுதினேன். எப்போதாவதுதான் அப்படி ஒரு அபூர்வமான வாய்ப்பு கிடைக்கும். கிடைத்தற்கரிய  அபூர்வமான வாய்ப்பு அன்று கிடைத்தது.

நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் குடித்து வரலாம் என்று கடைக்குப் போனோம். தேநீர் கேட்டால் ஆளுக்கொரு வடையையும் கட்டாயப் படுத்தித் தந்தார் கடைக்காரர்.

ஒரே உப்பு. வாயில் போட்ட துண்டு வடையைத் துப்பி விட்டு எஞ்சிய வடையை தொட்டியில் கிடாசிவிட்டு வடைத் தாளைக் கசக்கி எறியப் போனபோதுதான் அதில் கவிதை மாதிரி ஏதோ கண்ணில் பட்டது.

பார்த்தேன். கவிதையேதான்.

"பூக்களை 
விற்ற காசில்
என்ன
வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்"  என்ற துருக்கிக் கவிதையோடு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

ஆஹா! என்னமாய் எழுதியிருக்கிறான். ஆமாம் பூக்களை விற்ற காசில் பூக்களை விட அழகாய் எதை வாங்கி விட முடியும்? அழகான அழகியல்.

ஒன்று துருக்கியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது துருக்கி படைப்புகளின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து வாசித்துவிட வேண்டும். இப்படியாக அந்தக் கவிதையின் அழகில் லயித்து மூழ்கத் தொடங்கிய போது எங்கோ ஒரு மூலையில் உறுத்தவும் தொடங்கியது.

இது மேல் தட்டு மற்றும் நடுத் தட்டு வர்க்கச் சிந்தனையல்லவா? நமக்குள்ளும் இது வந்துவிட்டதா? நாம் வரட்டுத்தனமான அழகியலுக்கு அப்பாற்பட்டவன் என்பதுதானே நமது அடையாளம். அது பொய்யா? என்று ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.

சாலை ஓரத்தில் வெய்யில் என்றால் காய்ந்து கொண்டும், மழை என்றால் நனைந்துகொண்டும் பூ விற்கும் பெண்ணிற்கு கவிழ்த்துப் போட்ட கூடையில் சுற்றப் பட்டுள்ள பூ முழுக்க விற்றால்தான் கந்து வட்டிக் காரனுக்கு அழுதது போக வீட்டில் உள்ள நான்கு வயிருகளுக்கும் அரை வயிறாவது நிறையும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வழக்கமாய் பேருந்துகள் நிற்குமிடங்களிலும், ரயில்வே கேட்டுகளிலும் சின்னஞ்சிறிய பையன்களும், பெண் குழந்தைகளும் கைகளிலே சின்ன சின்னதாய் மல்லிககை மற்றும் கனகாம்பரப் பூப் பந்துகளை வைத்துக் கொண்டு பூ விற்கும் காட்சிகளை பயணச்ங்களின் போது நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

எவ்வளவு கடினமான வேலை தெரியுமா இது? தேசிய நெடுஞ்சாலைகளை உயிரை வெறுத்துக் கடப்பதும், பேருந்து நின்று பயணிகளை அவசரம் அவசரமாய் ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் கிளம்பும் முன் கிடைக்கும் அந்த சின்ன கால இடைவெளிக்குள் கஸ்டமர்களை பிடிக்க வேண்டும், பூவைக் கொடுத்து, காசு வாங்கி மீதியைத் தரவேண்டும். 

சில நேரங்களில் பூவைக் கொடுத்துவிட்டு அந்தப்  பிள்ளை, காசுக்காக காத்து நிற்கும் அவஸ்த்தை இருக்கிறது பாருங்கள், அதைச் சொல்லி மாளாது.பல நேரங்களில் காசைப் பெருவதற்குள் பேருந்து நகரத் தொடங்கி விடும்.காசினை வாங்குவதற்காக அந்த சிறுவர்கள் பேருந்தோடே கூட ஓடி வருவதையும் பார்க்க முடியும்.

பூவை வாங்கியவர்கள் காசை எடுத்து வெளியே எறிவதையும் நம்மால் பார்க்க முடியும். அதைபொறுக்க அந்த சிறுவர்கள் படுகிற அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா உசிரே போய்விடும். சரியான சில்லறை எடுக்க இயலாத சிலர் பூக்களை எறிந்துவிடுவதும் உண்டு. கீழே விழுந்த பூவை மீண்டும் விற்கவும் முடியாது.

சிலரோ இரண்டையும் செய்யாமல் போய் விடுவதும் உண்டு.

இந்தக் குழந்தைகளின் அவலத்தை, துயரத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

இந்தக் குழந்தைகளிடமும், பூக்காரப் பெண்களிடமும் போய்
"பூகளை விற்ற காசில் 
என்ன வாங்கிவிடப் போகிறீர்கள் 
பூக்களை விட அழகாய்?
என்று கேட்டால் நம்மை கொன்று போட மாட்டார்களா?

அவர்களைப் பொறுத்தவரை பூ என்பது ஒரு வணிகப் பொருள் என்கிற எல்லை தாண்டி அவர்களை இந்தச் சமூகம் எங்கே யோசிக்க அனுமதித்திருக்கிறது? பூக்களின் மலர்ச்சியையோ அழகையோ ரசித்து அனுபவிக்கிற அவகாசத்தை அவர்களது வயிறுகள் அவர்களுக்கு வழங்கியதே இல்லை.

எனில் இந்தக் கவிதை அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனதா? இதை ரசிக்க முடிகிறதே என்னால். என்றால் நான் உழைக்கும் திரளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறேனா?

இரண்டும் இல்லை. உழைக்கும் மக்களும் பூக்களின் அழகை, இந்தக் கவிதையின் அழகை ரசிக்கிற வாய்ப்பை பெறுகிற மாதிரி அவர்களது வாழ்க்கையை மாற்றித் தருகிற ஒரு போராட்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் போனதுதான் குற்றம்.

அந்தத் தாளில் இருந்த செய்தியை வாசித்தேன்.

கஸ்தூரி என்கிற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாணவி பள்ளிக்குப் போன நேரம் போக ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து பூ விற்கிறாள். வியாபாரம் இல்லாத நேரத்தில் அங்கேயே அமர்ந்து படிக்கிறாள். அங்குள்ள  ஆட்டோ ஓட்டுநர்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பூ விற்ற காசைக் கொண்டுதான் அந்தக் குழந்தை படிக்கிறாள் என்பதாக அந்த செய்தி நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி அபாண்டமாக  பேசும் உத்தம சிகாமணிகளுக்கு இந்தச் செய்தி வாசிக்க கிடைக்குமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

" மலை வாழையல்லவோ கல்வி" என்கிறார் பாரதுதாசன். வாழைப் பழங்களிலே  மலை வாழை மிகவும் சுவையானது என்பதால் அப்படிச் சொன்னார். வாழைப் பழங்களிலேயே மலை வாழைப் பழம் மிகவும் அதிக விலையானது. கல்வியும் இன்று எதையும் விடவுமதிக விலையில் விற்பதால் "மலை வாழை அல்லவோ கல்வி" என்பது இன்னொரு விதத்திலும்  மிக அசிங்கமாகப் பொருந்தவே செய்கிறது. 

" சொட்டுக் குழம்புக்கும் 
சோற்றுக்கும்
கையிலொரு துட்டுக்கும்
கண்ணயர்ந்து தூங்குவதற்கும்
கட்டத் துணிக்கும்
நல்ல
பணக்காரணாக்கும் படிப்பு"  என்றும் படிப்பு என்னத்தையெல்லாம் தரும் என்றும் சொன்ன பாரதி தாசன் மட்டும் படிப்பை வாங்க இந்தப் பிள்ளைகள் படும் பாட்டை பார்க நேர்ந்திருந்தால்  நொந்தே போயிருப்பான்.

பூக்களை விற்று அதைவிட அழகாய் என்ன வாங்கப் போகிறீர்கள் என்கிறான் கவிஞன். பூக்களை விற்றுதான் கல்வியை வாங்குகிறேன் என்கிறாள் குழந்தை கஸ்தூரி.

ஒருமுறை சமயபுரம் டோல்கேட்டில் பூ விற்கும் ஒரு சிறுவனைக் கேட்டேன்,

"இப்படி ரிஸ்க் எடுத்து ஓடி ஓடி பூ விற்க்கிறாயே, எதுக்குப்பா?"

"டியூஷன் பீஸ், எக்ஸாம் பீஸெல்லாம் கட்டனும் சார்."

சாலையில் உயிரையேப் பணயம் வைத்து பூக்களை விற்கும் குழந்தைகளின் வருமானம் எதற்காக செலவிடப் பட்டாலும் அது குறித்து மொத்த சமூகமும் கவலை கொள்ளவே வேண்டும்.

குழந்தைகள் கல்வி கற்பதற்காக இப்படி உயிர் போக உழைக்க வேண்டிய நிலமை கண்டு நாம் சத்தியமாய் வெட்கப் படத்தான் வேண்டாமா?

ஒன்று திரண்டு அரசைக் கேள்வி கேட்க வேண்டாமா?
அதற்கு தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு தாண்டி கொஞ்சம் சொரனையோடு கூடிய அக்கறை வேண்டு
ஆமாம் அது நமக்கு எப்போது வரும்?



Thursday, December 16, 2010

ஏற்க இயலவில்லை ...

ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு என்கிறார்கள். எனில் இதில் எத்தனை ஆயிரம் கோடிகள் ஊழலாய் மாறியிருக்க வாய்ப்புண்டு என கணக்கிட்டுப் பார்க்கிறார்கள். எனில் யார் யாருக்கு எவ்வளவு கை மாறியிருக்கும் என ஊருக்கே கேட்கும்படி ரகசியமாய் கிசுகிசுக்கிறார்கள்.  இது குறித்து பாராளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு விசாரனை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

அமைச்சர் மீது வழக்குப் போட அனுமதி கேட்டபோது எதுவுமே பேசாமல் மௌனம் காத்தமைக்காக பிரதமர் அலுவலகத்தை உச்சநீதி மன்றம் கண்டனித்துள்ளது. இன்னின்ன காரணங்களால் அனுமதிக்க இயலாது என்றாவது சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்கிறார்கள் நீதியரசர்கள். அந்த மௌனத்தை உள்நோக்கம் கலந்த அலட்சியத்தின் உச்சம் என்றே அவர்கள் பார்க்கிறார்கள்.

தனது அறுபது ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் உச்சநீதி மன்றத்தின் அதிருப்தி இந்த அளவுக்கு முன்னெப்போதும் பிரதமர் அலுவலகத்தின் மீது விழுந்ததில்லை என்கிறார் அத்வானி. பிரதமர் ஒருவரிடம் உச்சநீதி மன்றம் கேள்வி கேட்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்கிறார்கள் யெச்சூரியும், பிருந்தா காரத்தும்.

இந்த விஷயத்தில் தான் சட்டத்திற்கு உட்பட்டும்,  பிரதமரின்  வழிகாட்டுதலின்  படியும்தான்  நடந்து  கொண்டுள்ளதாகவும், முடங்கிக் கிடக்கும் பாராளுமன்றம் சீராய் நடைபெற வேண்டும் என்பதற்காகவே தான் பதவி வில்கியுள்ளதாகவும், இதை செய்ததனால் தன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டுகளைத் தான்  ஏற்பதாகக்  கொள்ளக் கூடாது என்றும் ராசா சொல்கிறார்.

ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடியை சாக்கிலே கட்டினால் எத்தனை லாரிகளுக்கு தேறும் என்பது குத்து மதிப்பாகக் கூட நமக்குத் தெரியாது. திரும்பிய திசையெங்கும், கண்னில் படுகிற யாவரும் இது பற்றியே பேசுகிறார்கள். போக இதை விட முக்கியமான விஷயம் குறித்து தேவையான அளவிற்கு விவாதம் தொடங்கப் படவேயில்லை என்று படுவதால் அது குறித்து பேசலாம் என்று படுகிறது.

எந்த தொலைக் காட்சி என்று சரியாய் நினைவில்லை. சுப.வீரபாண்டியன் அய்யாதான் தலைமை. அந்த நிகழ்ச்சியில் உச்சத்துக்கே ஏறி நின்று பேசினார் ராசா. " நிரம்பி வழியும் இந்த அவையில் வேண்டுமானால் ஜாதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனது கிராமத்தில் எனது ஜாதிதான் எனது முகவரி" என்கிற மாதிரி உணர்ச்சிப் பிழம்பாய் ராசா அவர்கள் வெடித்தபோது அதில் உள்ள நியாயம் சுட்டது. சத்தியமாய் சொல்கிறேன், பனித்த கண்களோடுதான் கை தட்டினேன். கலைஞரும், கனிமொழியும், ரஜினியும் கூட அதே மனநிலையில் இருந்ததையே தொலைக் காட்சியில் பார்க்க முடிந்தது.

ஸ்பெக்ட்ராம் விஷயம் கசியத் தொடங்கிய நாள் முதலே "ராசா ஒரு தலித் என்பதால் எப்படி வேண்டுமானாலும்  அபாண்டமாக பேசலாமா?" என்கிற  தொனியில்  தொடர்ந்து  பேசி  வருகிறார்  கலைஞர். நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக நம்பப் படுகிறபெரும் இழப்பிற்கு பெருமளவு பொறுப்பு ராசாவுக்கு என்பது  குற்றச்சாட்டு. இது பொய்யென நிரூபிக்கப் படுமானால் அந்த நிமிடமே( அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் படுகிறது ) இப்போது உள்ள உசரத்தைவிட பல மடங்கு உசரத்திற்கு அவர் போய்விடுவார் என்பதும் மாறாக ருசுப்பிக்கப் படுமானால் அதன் விளைவுகள் என்ன என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.

எதிர்வாதம் செய்வதற்கும்,  தன்னை நிரபராதி என மெய்ப்பித்துக் கொள்வதற்கும் சகல உரிமைகளையும்  சேர்த்தே  தந்துதான் இந்தக் குற்றச் சாட்டும் வைக்கப் படுகிறது.  " தலித் என்பதால் இத்தனை அபாண்டமா?" என்கிற மாதிரி வெதும்பும் கலைஞரின் மேலான பார்வைக்கு சில சந்தேகங்களை, தெளிவு பெறும் பொருட்டு வரிசைப் படுத்துகிறேன்.

திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகே, இன்னும் புரியும்படிக்கு  சொல்வதெனில் கலைஞர் அவர்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் புரட்சித்த கல்லக்குடிக்கு மிக அருகே திண்ணியம் என்றொரு சின்ன கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவராய் செயல் படும் தலைவியின் கணவரிடம்  (அவர் ஓய்வு பெற்ர தலைமை ஆசிரியர் என்பதுதான் கொடுமயிலுங் கொடுமை ) தனது தங்கைக்கு தொகுப்பு வீடு ஒதுக்கித் தருமாறு ஒரு தொகையினத் தருகிறார் ஒருவர். அவர் ஒரு தலித். அநேகமாக அவர் அந்த ஊரின் தலையாரியாக இருக்கக் கூடும். வீடு ஒதுக்கப் படாதததல் கொடுத்த்ப் பணத்தைத் திரும்பக் கேட்கிறார். கிடைக்காது போகவே தண்டோரா போட்டு விஷயத்தை மக்களிடம் கொண்டு போகிறார்.

கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்டதற்காகத்தான் கலைஞர் அவர்களே திண்னியத்தில் ஒரு தலித் பீத் தண்ணீ குடிக்க நேர்ந்தது.

"தலித் என்பதால் ராசா மீது அபாண்டமாய் குற்றம் சுமத்துகிறீர்களே. நியாயமா?  என்று கொதிக்கும் கலைஞர் அவர்களே...

திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் ஆதிக்க சாதிகள் பீத் தண்ணியை ஊற்ரியபோது " தலித் என்பதால் பீத் தண்ணியை ஊற்றுவீர்களா பாவிகளே" என்று ஏன் கலைஞரே நீங்கள் குமுறவே இல்லை?

உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு நிழற்குடை அமைப்பதற்கு திரு. டி.கே.ரெங்கராஜன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகை தருகிறார். ஆனால் அங்கே நிழற்குடை அமைத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என சொல்லி அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்து விட்டார் என்ற சேதி எனக்கே தெரியும் போது உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல இயலாது.

தலித்துகளுக்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் என்ன மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும்?. பச்சையாக சொல்வதெனில் அங்கே நிழற்குடை அமைத்தால் தலித்துகள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வார்கள். இது ஆதிக்க சாதிக் காரர்களை கொதிப் படையச் செய்யும். அதனால் அங்கு சட்டம் ஒழுங்கு கெடும் என்பதுதானே மாவட்ட ஆட்சித் தலைவரின் தயக்கம்.

தலித்துக்கள் என்றால் அவ்வளவு கேவலமா? அவர்கள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வருமா?. வரட்டுமே.  அதை எதிர் கொள்ளத் துப்பில்லை  என்றால் எங்காவது ஓடி விடுங்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து ஏன் கலைஞரே நீங்கள் கேட்க வில்லை?

உச்சமாக ஒன்றை சொல்லிவிட வேண்டும். எது எப்படியோ அதை விசாரனை தீர்மானிக்கட்டும். ஆனால் பெரம்பலூர் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே பெரம்பலூருக்கு  அதிகம் செய்தவர் ராசா அவர்கள்.
பெரம்பலூர் தனித் தொகுதியிலிருந்து மாறி பொதுத் தொகுதியானவுடன்  நீங்கள் என்ன செய்தீர்கள்?  பெரம்பலூர்க் காரரான ராசாவை நீலகிரிக்கு அனுப்பினீர்கள். 

பொதுத் தொகுதியாய் மாறினாலும் ராசாதான் பெரம்பலூர் வேட்ப்பாளர் என்று ஏன் கலைஞரே நீங்கள் அறிவிக்க வில்லை.

பொதுத் தொகுதியில் தலித் ஒருவருக்கு கட்சிக்காரர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் என்று அஞ்சினீர்களா? அல்லது பொதுத் தொகுதியில் தலித் நிற்க்கக் கூடாது என்பதுதான் உங்கள் முடிவுமா? எனக்கென்னவோ அப்படித்தான் என்று தோன்றுகிறது கலைஞர் அவர்களே.

எனில், சேரியில் பிறந்த தலித்  சேரியில்தான் வாழ வேண்டும்,  தனித் தொகுதியில்தான் நிற்க வேண்டுமா கலைஞர் அவர்களே?

இதை, உங்களுக்குத் தனித் தொகுதி இருப்பதால் பொது தொகுதி கிடையாது என்றும்  கொள்ள  முடியுமே  கலைஞர் அவர்களே? 

ஆமாம் எனில் உங்களுக்கு சேரி இருப்பதால் பொதுத் தெரு கிடையாது என்றும் ஆகாதா கலைஞர் அவர்களே.

"ஒரு தலித் என்பதால் ராசாவின்  மீது அபாண்டமாக குற்றம் சுமத்தலாமா? என்ற உங்கள் கூற்றை ஏற்க இயலவில்லை , மன்னியுங்கள் கலைஞர் அவர்களே.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...