Monday, June 24, 2013

3 . அக்ஷ்ய பாத்ரம்

“ மண்டினி ஞாலத்து
   வாழ்வோர்க்கெல்லாம்
  உண்டி கொடுத்தோர்
  உயிர் கொடுத்தோரே”

வணிகச் சமூகம் கண்ட மிகக் கொடிய வறுமையை, நெருக்கடியை தீர்க்கும் ஒரு கருவியாக மணிமேகலையின் கையில் தஞ்சமடைகிறது அட்சயப் பாத்திரம் .

அட்சயபாத்திரம் கிடைத்ததும் எது அறம் என துறவியைக் கேட்டபோது தான் மேலே குறிப்பிட்ட வரிகளை சொன்னதாகவும், ஆருயிர் மருந்தாம் அமுத சுரபியை பெற்ற மணிமேகலை அது கொண்டு பசிப்பிணி தீர்ப்பதே நல்லறம் என்றும் சொன்னதாகவும் அறிகிறோம். 

அந்த மணிமேகலைக்கு அப்படியொரு அட்சயபாத்திரமெனும் அமுத சுரபியெனில் நமது மணிமேகலைக்கு ”அக்ஷ்ய பாத்ரம்” எனும் வலைப் பாத்திரம். ஆனால் இந்த வலைப் பாத்திரம் இவரே செய்தது.

“ இது நான் கையால் அள்ளிய கடல்”  என்று இவர் தனது வலையைப் பற்றிக் கூறுகிறார்.

“ இயற்கையில் திளைத்தல்
கலைகளை ரசித்தல்
காலார நடத்தல்
நிலத்தோடு வாழல்
புத்தக வாசனை
உண்மையைத் தேடல்
மனிதனாய் வாழ்தல்”

என்று மணிமேகலை தன்னைப் பற்றிக் கூறுகிறார். இவை முழுக்க முழுக்க உண்மை என்பதை இவரது வலை நிறுவுகிறது.

 “ புது வருஷமும் பொற்கோயில் அனுபவமும்”  என்ற ஒரு பயணக்கட்டுரை. அப்பப்பா, எனக்குத் தெரிய மணியனுக்குப் பிறகு வாசிப்பதற்கு சிரமம் தராத இப்படி ஒரு இலகுவான பயணக்கட்டுரை இவருக்கு வசப் பட்டிருக்கிறது.

தாய்லாந்தில் உள்ள அந்தப் பொற்கோயில் புத்தர் கோயில் என்பதே ஆச்சரியத்தை அள்ளிக் கொண்டு வந்து நம் முகத்தில் பூசிச் செல்கிறது.

அது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப் பட்ட ஆலயம். அதில் 28.5 மில்லியன் டாலர் செலவில் 5.5 டன் எடையிலான தனித் தங்கத்தாலான 15 அடி 9 அங்குலத்தாலான புத்தர் சிலை இருக்கிறது. இது போன்ற வரலாற்றுத் தகவல்களை இந்த வலை நமக்குத் தருகிறது. படிக்கிறபோது போகிற போக்கில் புத்தர் இப்படி கடவுளாகிப் போனாரே என்கிற ஆதங்கத்தையும் எந்தவித நெருடலோ, மிகையான பிரச்சாரமோ இன்றி வாசகனுக்குத் தருகிற வேலையை மிகச் சரியாக செய்கிறது இந்த வலை.

ஒரு புறம் பிக்குகள் தானம் பெற்று வாழ்வதும் அதே நேரம் முற்றும் துறந்த பிக்குகள் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதும் போகிற போக்கில் கட்டுரை எங்கும் விரவிக் கிடக்கின்றன.

படங்களை விற்கும் ஒரு மனிதன் சக மனிதர்களின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை சொல்கிறது. வருடப் பிறப்பன்றும் வீட்டில் மனைவி குழந்தைகளோடு இன்பமாய் கழிக்க இயலாமல் இப்படி வெய்யிலில் காய்ந்து படங்களை விற்க வேண்டிய சூழலில் அவர்களது வறுமை இருப்பதை வலியோடு சொல்கிறது.

அழகு, ரசனை,வரலாறு, அதுகுறித்த விமர்சனம், வாழ்க்கை,  உன்னதம் , வலி,
கலாச்சாரம், என்று எது எல்லாம் ஒரு பயணக் கட்டுரையில் இருக்க வேண்டுமோ அது எல்லாம் திகட்டாத சுவைகளோடு இந்த வலையில் கிடைக்கின்றன.

“ ஒரு குவளை ரசனை 1”  என்று ஒரு பதிவு. "ode on a grecian urn"  என்ற கீட்ஸ் 1800 களின் துவக்கத்தில் எழுதிய கவிதையை நினைவூட்டுகின்றன. அந்தக் கவிதையில்தான்
 “Heard melodies are sweet, but those unheard/ Are sweeter " என்ற தனது புகழ்மிக்க வரிகளை அவன் எழுதிப் போவான்.

மட்டுமல்ல கீட்ஸ் ஒரு கிரேக்க கோப்பையைப் பார்க்கிறான். அதன் பழமையும் அதில் உள்ள படங்களும் அவனை ஈர்க்கின்றன. அதில் ஒரு காட்சி. ஒரு இளைஞன் ஒரு யுவதியை முத்தமிட எத்தனிப்பான். அவள் தப்பித்து ஓட முயல்வாள். கீட்ஸ் சொல்வான்,

Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal – yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!

அய்யோ, அய்யோ எத்தனை அழகு. இதற்கு நிகராக என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அதை மணிமேகலையும் விரும்ப மாட்டார். ஆனால், தான் புதிதாய் வாங்கிய ஒரு குவளையில் வரையப்பட்டுள்ள அழகிய மயில் குறித்து இவர் எழுதும் போது நமக்கு நம்மை அறியாமலேயே கீட்ஸ் வந்து விடுகிறார். ஆக இந்த வலை கீட்ஸை நோக்கி நம்மை அநிச்சையாக உந்தித் தள்ளவே செய்யும்.

புலம் பெயர்ந்த வாழ்வின் வலியை, நெருக்கடியை, தாகத்தை , எது தாண்டியும் உயிர்க்கும் ரசனையை என்று எதையும் பார்க்க முடிகிறது இவரது வலையில். ஆனால் கொஞ்சமும் வறட்டுத்தனம் என்பதே இல்லை.

புலம் பெயர்ந்த நாட்டின் தேசிய அரசியல் ஜனநாயகத்தோடு இளைஞர்கள் கறைந்து போவதையும், போன தலைமுறைபட்டுப் புழு மனோபாவத்தோடு சுருங்கிப் போனதையும் வேதனையோடு பதியும் இவர், ”வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களையும் சிறகடிப்பில் தெரியும் வசந்தங்களையும் புலத்துத்தமிழ் எப்போது கொண்டுவரப்போகிறது?” என்று கேட்கும் போது புலம் பெயர்ந்த வாழ்க்கையின் படைப்பிலக்கியங்கள் குறித்த நமது ஏக்கம் நம்பிக்கை கொள்கிறது.


“ஒரு புத்தகம் படிக்கும் அனுபவம் என்பது தேநீர் குடிக்கும் அந்த ரசனை அனுபவத்திற்கு சற்றேனும் குறைந்ததல்ல” என்று இந்த வலையின் ஓரிடத்தில் காணக் கிடைக்கிறது.

வலையின் உள்ளே பயணித்துப் பாருங்கள்,

தேநீர்ப் பருகிக் கொண்டே ஒரு நல்லப் புத்தகத்தைப் படிக்கும் அனுபவம் கிடைக்கும்.

வலை முகவரி
http://akshayapaathram.blogspot.in/

Sunday, June 9, 2013

திரள்வோம் தெருவெங்கும்…



நம் ஊரில் ஒரு மளிகைக் கடை இருக்கிறது என்று கொள்வோம். நீங்களும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அரிசி வாங்குவதற்காக  நிற்கிறீர்கள். இருவரும் கர்நாடகா பொன்னி அரிசியை வாங்குகிறீர்கள். கடைக்காரர் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு கிலோ ஐம்பது ரூபாய்க்கும் உங்களுக்கு அறுபது ரூபாய்க்கும் ஒரே சாக்கிலிருந்து கொட்டி அளந்த ஒரே ரக அரிசியை விநியோகித்தால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

இப்படியெல்லாம்கூட செய்வார்களா? ஒருபோதும் இருக்காது என்றுதானே இயல்பாக எல்லோரும் சிந்திப்போம். ஆனால் அப்படித்தான் நடக்கிறது. அதுவும் அரசு நிறுவனம் ஒன்று ஒரே பொருளுக்கு இரட்டை விலை முறையை வைத்திருக்கிறது. அதுவும் மத்திய அரசின் நிறுவனம் மாநில அரசின் நிறுவனத்திற்கு ஒரு விலையையும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு விலையையும் நிர்ணயம் செய்திருக்கிறது.

இது உண்மையெனில் நமக்கு இயல்பாகவே ஒன்று தோன்றும். மத்திய அரசின்  நிறுவனம் ஒன்று மாநில அரசின் நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனக்களுக்கும் இடையே தனது பொருளை இரட்டைவிலை முறையில் விநியோகிக்கிறது என்றால் நிச்சயமாக தனியார் நிறுவனங்களைவிடவும் மாநில அரசின் நிறுவனங்களுக்கு குறைச்சலான விலைக்கு வழங்கும் என்றுதான் நினைப்போம். அதுதான் முறையும்கூட.

ஆனால் உண்மை வேறுவிதமாய் உள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் டீசலின் விலையை தனியார் பெட்ரோல் பங்குகளைவிட அரசு போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ஏறத்தாழ பத்து ரூபாய் விலையை அதிகப் படுத்தியது.

கொஞ்சம் புரிகிறமாதிரி பேசிவிடவேண்டும்.

பேருந்துகள் அரசுடமையாக்கப் பட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஆளுகைக்குகீழ் அவை கொண்டுவரப்பட்டபின்னும் வெகுகாலத்திற்கு அவை தனியார் பெட்ரோல் பங்குகளில்தான் டீசலை நிரப்பின. அரசுப் பேருந்துகள் வரிசையில் நீண்டு காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது.

இதில் ஏற்பட்ட நேர விரயமும் பொருள் விரயமும் மாநில அரசை சொந்தமாக டீசல் பங்குகளை நிறுவிட உந்தியது. விளைவாக ஒவ்வொரு கிளை டெப்போவிலும் ஒரு டீசல் பங்குகள் ஏற்படுத்தப் பட்டன.

எட்டு கோட்டங்கள் இருபத்திரெண்டு மண்டலங்கள் என்று பரந்து விரியும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மாநிலம் முழுக்க ஏறத்தாழ 286 கிளைகள் உள்ளன.

இதன்மூலம் மூன்றுவிதமான பலன்களை போக்குவரத்துக் கழகங்கள் சுவைத்தன.

1 ) தனியார் பங்குகளின்முன் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய அவலம் தவிர்க்கப் பட்டது.

2 )மொத்தமாக டீசலை சொந்தமாகக் கொள்முதல் செய்துகொள்வதால் டீசல் பங்குகளுக்குப் போகக் கூடிய கமிஷன் கழகங்களுக்கு வந்தது.

3 )ஒவ்வொரு டெப்போவிலும் டீசல் பங்குகள் அமைக்கப் பட்டதால் டீசல் நிரப்பும் பணியை செய்வதற்காக குறைந்த பட்சம் இரண்டு ஊழியர்களின் தேவை வந்தது. இது ஒவ்வொரு டெப்போவிலும் இரண்டுபேருக்கான வேலை வாய்ப்பைத் தந்தது.

இந்த விலை ஏற்றத்தால்மாநில அரசு டீசல் கொல்முதலை நிறுத்திவிட்டு மீண்டும் தனது பேருந்துகளை டீசல் நிரப்புவதற்காக தனியார் பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பவேண்டிய அவலம் வந்திருக்கிறது.

இதனால் என்ன கெட்டுப் போய்விட்டது என்று கேட்பவர்களுக்காகவும், என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உள்ளவர்களுக்காவும் சில விஷயங்களை பந்திவைக்க வேண்டியுள்ளது.

இப்போது தனியார் பங்குகளுக்கு ஒரு லிட்டர்  டீசல் 52 ரூபாய் 53 பைசாவிற்கும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 65 ரூபாய் 53 பைசாவிற்கும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதில் தனியார் நிறுவங்களுக்கு ஒருலிட்டர் டீசலுக்கு 83 பைசா கமிஷன் கிடைக்கிறது. 30 பைசாதான் கமிஷன் என்றும் சொல்லப்படுகிறது. ஆக 83 பைசா கமிஷன் எனில் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டருக்கான அடக்கவிலை 51 ரூபாய் 73 பைசா என்றாகிறது. 30 பைசாதான் கமிஷன் எனில் 52 ரூபாய் 23 பைசா என்றாகிறது.

இதற்கு மத்திய அரசு முன்வைக்கும் காரணம் மொத்தப் பயன்பாட்டிற்கான மானியத்தை விலக்கியிருக்கிறோம் என்பதே.

இப்போது ஒரு விஷயத்தைப் பார்ப்போம். ஒரு தனியாருக்கு 25 பேருந்துகள் இருக்கின்றன. அவர் ஒரு பெட்ரோல் பங்கும் வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது பேருந்துகளுக்கு அவரது பெட்ரோல் பங்கில்தானே நிரப்புவார். அது மொத்தப் பயண்பாட்டில் வராதா?

இப்போது எல்லாத் தனியார் கல்லூரிகளுக்கும் ஏராளமான பேருந்துகள் உள்ளன. எனக்குத் தெரிய 200 பேருந்துகளை வைத்திருக்கக் கூடிய கல்வி நிறுவனக்களும் உள்ளன. அவற்றில் சில பெட்ரோல் பங்குளையும் வைத்துள்ளன என்றே தெரிகிறது. அது உண்மையெனில் அந்தக் கல்வி நிறுவனங்களின் பேருந்துகள் அனைத்தும் அவர்களது பெட்ரோல் பங்கில்தானே டீசலை நிரப்பும். எனில் நமக்கொரு கேள்வி இயல்பாகவே வருகிறது, “ இது மொத்தப் பயன்பாட்டில் வராதா?”

வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படுகிற  அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் எண்ணிக்கை 22400 என்றும் 22552  என்றும் இரண்டுவிதமான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.  இயக்கப் படுகிற சிறப்பு வழித்தடங்களையும் சேர்த்தால் ஒவ்வொரு நாளும் இயக்கப் படுகிற அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் எண்ணிக்கை சற்றேரக்குறைய 23500 தேறும்.

சராசரியாக ஒரு வண்டிக்கு ஒரு நாளைக்கு 100 லிட்டர் டீசல் தேவைப் படும்  என்று கொள்வோம். எனில் 23500 பேருந்துகளுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 2350000 லிட்டர் டீசல் தேவப் படும். எவ்வளவுதான் குறைவாக வைத்தாலும் ஒரு லிட்டர் டீசலுக்கு 10 ரூபாய் அதிகம் என்று வைத்தால்கூட ஏறத்தாழ 2,35,00,000 ரூபாயை போக்குவரத்து கழகங்கள் டீசலுக்காக ஒவ்வொரு நாளும் அதிகம் செலவு செய்யவேண்டி வரும்.

இந்தவகையில்  ஏறத்தாழ 70 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒவ்வொருமாதமும் டீசலுக்காக போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கோடு இயக்கப் படுவதில்லை. இந்தக் கருத்தோடு முரண்பட வாய்ப்புகள் உள்ள்ன என்பதை நானறிவேன்.

25 ஆண்டுகளாக பெரம்பலூரில் இருந்து சமயபுரத்திற்கு பேருந்தில் தினமும் பயணிப்பவன். எப்போதும் அரசுப் பேருந்துகளில்தான் பயணிப்பவன். தவிர்க்க இயலாத சூழலில் மட்டுமே தனியார் பேருந்துகளில் ஏறுபவன். முன்னெல்லாம் எந்தக் குழப்பமும் இருக்காது. சரியான சில்லறையோடு பேருந்து ஏறிவிடுவேன். இப்போது அப்படி இல்லை. ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு கட்டணம். 16 ரூபாயிலிருந்து 39 ரூபாய் வரிக்கும் ஒவ்வொரு பேருந்திற்கும் ஒவ்வொரு கட்டணம் இப்போது.

மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வந்ததும் பள்ளிக்கு வருகிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாணவர்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உட்பட போகப் போக இதனால் பாதிப்புக்கு உள்ளாக நேரலாம். ஏற்கனவே போதுமான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பேருந்துகளின் நிலைமை இன்னும் மோசமாகலாம். இது சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடும்.

போக, நட்டத்தை குறைக்கிறேன் என்கிற வகையில் அதிக வசூலினைத் தராத வழித்தடங்களை போக்குவரத்துக் கழகங்கள் நிறுத்திக் கொள்ளவோ அல்லது குறைந்தபட்சம் குறைத்துக் கொள்ளவோ வாய்ப்பிருக்கிறது. இது பல கிராமங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதோடு இலவசப் பேருந்து இல்லாத காரணத்தினால் பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகப் படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வகையில் மத்திய அரசின் இந்த இரட்டைவிலை முடிவானதுஎல்லோருக்கும் கல்விஎன்ற அதனுடைய கொள்கைக்கே எதிரானதாக வந்தமையும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏறத்தாழ 280 கிளைகள்  உள்ளன. எல்லாக் கிளைகளிலும் டீசல் பங்குகள் உள்ளன. ஆக 280 டீசல் பங்குகள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் உள்ளன. குறைந்த பட்சம் இரண்டு ஷிஃப்ட் என்று வைத்துக் கொண்டால்கூட பேருந்துகளுக்கு டீசல் நிரப்ப ஒவ்வொரு டெப்போவிற்கும் இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்திருப்பார்கள். ஏறத்தாழ 560 ஊழியர்கள் இந்தப் பணியில் இருந்திருப்பார்கள்.

மத்திய அரசு இரட்டை விலையை அறிமுகம் செய்தவுடன் மாநில அரசு தனது பேருந்துக்ளை டீசல் நிரப்புவதற்காக தனியார் பங்குகளுக்கு அனுப்புகிறது.

 280 பங்குகளையும்  மாநில அரசு மூடியுள்ளது .என்றே கொள்ள வேண்டும். இதை கொஞ்சம் விரிவாக பார்த்தால் டீசலை நிரப்பிக் கொண்டிருந்த ஊழியர்களின் வேலை பறிபோகிறது என்று பொருள். யாரையும் எந்தப் போக்குவரத்துக் கழகமும் இதுவரை வெளியேற்றவில்லையே என்று கேட்கக் கூடும். ஆமாம்தான், இவர்களை இப்போதைக்கு வேறு ஏதேனும் பிரிவில் போடக்கூடும். பிறகு அந்தத் துறையில் ஏற்படும் காஇப் பணியிடங்களை நிரப்பாமல் விட ஏதுவாகும். ஏற்கனவே போதுமான ஊழியர்கள் இல்லாமையால் ஊழியர்களின் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இந்தக் கூடுதல் பணிச்சுமை தரும் அழுத்தமும் எரிச்சலும் பயணிகள்மேல் திரும்ப வாய்ப்புள்ளது.

ஆகவே இந்த இரட்டை விலை முறையானது ஒவ்வொரு நாளும் பயணிக்கும் ஏறத்தாழ இரண்டுகோடி பயணிகளுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்குமான  இயல்பான உறவு நிலையை முறித்துப் போடும்.

மட்டுமல்ல 280 டெப்போக்களிலும் டீசலை சேமிப்பதற்கான டேங்குகளை  பூமிக்கு அடியில் புதைத்து இருப்பார்கள். பயண்படுத்தாமல் போனால் அவை துருப்பிடித்து பயனற்றுப் போக வாய்ப்புள்ளது.

டீசல் நிரப்புவதற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் பணி நேரம் அதிகரிக்கிறது. இதற்கே நேரம் அதிகம் பிடிப்பதால் மராமத்து மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு போதுமான அவகாசம் இருப்பதில்லை.

எல்லாம் கடந்து இன்னொன்றும் உண்டு. போக்குவரத்து அதிகாரிகளுக்கும் தனியார் பெட்ரோல் பங்கு முதலாளிகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு ஊழலுக்கு வழி வகுக்கவும் வாய்ப்புண்டு.

ஒன்று சொல்லவேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது மக்களின் போக்குவரத்துக் கழகம். இழப்பாய் ஒதுங்கும் ஒவ்வொரு பைசாவும் நமது பைசா. இதனால் பறிபோகக் கூடிய வேலை வாய்ப்பு நம் பிள்ளைகளுடையது. கிராமங்களுக்கான போக்குவரத்து நின்று குழந்தைகளின் பள்ளிப் படிப்பு பாதிக்குமெனில் அவர்கள் நமது குழந்தைகள்.

மத்திய அரசு இதை திரும்பப் பெறவேண்டும். நாமென்ன செய்யவேண்டும். வேறென்ன

திரண்டு தெருவுக்கு வரவேண்டும்.

நன்றி :  “ காக்கைச் சிறகினிலே” ஜூன் இதழ்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...