Sunday, December 31, 2023

என்ன ஆச்சுடா எந்திரி லூசண்ணா

 

இந்த ஆண்டில் நான் எதிர்பாராமல் நிகழ்ந்த மூன்று

01

”இல்லை,
வரமாட்டான்
அவன் வரவே மாட்டான்”
என்று தருமி புலம்புவதைப்போல
இனி வரமாட்டன்தான் போல என்கிற நிலையில் அவனது அத்தனைக் கிலோவும் அன்பாக ஒரு இரவு வீடு வந்து என்னோடு தங்கினான் விஷ்ணுபுரம் சரவணன்

02

மே 31
நான் ஓய்வு பெறுகிறேன்
பள்ளியில் இருந்து வீடு வந்தால் ஒரு புத்தக பார்சல்
மூன்று கனமான புத்தகங்கள்
பாரதி புத்தகாலயத்தில் இருந்து
நான் ஆர்டர் போடவில்லை
தோழர் Mohammed Sirajudeen அவர்களை அழைக்கிறேன்
வணக்கம் தோழர். வாழ்த்துகள். ஓய்வு சிறக்கட்டும். அந்தப் பார்சல் எங்க அன்பு தோழர் என்கிறார்

03

பணி ஓய்வு அரட்டையில் திடீரென மருத்துவர் Bhuvaneshwari Devarajan
அழைக்க மறந்து போயிருந்தேன்
“என்னை எதிர்பார்க்கலதான” என்ற அவர்களது குரல்

சோரும்போதெல்லாம் என்ன ஆச்சுடா எந்திரி லூசண்ணா என்று என்னை உசுப்பிக் கொண்டே இருக்கிறது
அனவரது கரங்களையும் பற்றிக் கொள்கிறேன்

குரலைக் கொடுத்தது கீர்த்தனா என்றால்

 

என்னளவில் நினைத்துப் பார்க்கிறேன்
அவமானங்களையும் வலியையும் மட்டும் அல்ல
மகிழ்ச்சியையும் சேர்த்துதான் எனக்குக் கொடுத்திருக்கிறது 2023
மே இறுதியோடு என் பள்ளி எனக்கு விடை கொடுத்து அனுப்பியது
எப்படி கடந்து வருவேன் என்ற பயம் இருந்தது உண்மைதான்
ஆனால் கடந்து வந்திருக்கிறேன்
எப்படி என்று புரியாமல் குழம்பிய என்னை கீர்த்தி தெளிவுபடுத்தினாள் இன்று
”அது ஒன்னும் இல்லப்பா
நல்லதோ கெட்டதோ
வாத்தியாரா, தலைமை ஆசிரியரா கிடைத்த எதையும் உன்னோடு நீ ஒருபோதும் சுமந்ததில்லை
எட்வினுக்கு கிடைத்ததை மட்டுமே சுமந்திருக்காப்பா
எங்களை வளர்த்ததும் எங்களுக்கு கொடுத்ததும் எட்வின்தானே தவிர ஹெட்மாஸ்டர் இல்ல
அதுதான் உன்னை ஒன்னும் பாதிக்கல”
மகிழ்ச்சிதான்
பணி ஓய்வை ஒரு அரட்டை விழாவாக்கினார்கள் கணேஷும் கலையும்
அனைத்தையும், காசு உள்ளிட்டு அவர்களே செய்தார்கள்
கிஷோரோடே துபாய் சென்றிருக்க வேண்டிய ஷீனா ஆகஸ்டில்தான் சென்றாள்
கீர்த்தி BHMS முடித்திருக்கிறாள்
இடையில் குரல் போனபோது
அநேகமாக அப்படித்தான் என்று மருத்துவர் சொன்னபோது உடனிருந்த கணேஷ் அழவில்லை
ஆனால் அப்படித்தான்
கீர்த்தனா கொடுத்த மருந்து குரலை மீட்டது
இளமதியின் புத்தகம் என்பது நான்கு வருடக் கனவு
வந்தது
குரலைக் கொடுத்தது கீர்த்தனா என்றால்
காதைக் கொடுத்தது கலை
இந்த ஆண்டு மட்டும் சுதா எனக்களித்த புத்தகங்களின் விலை பத்தாயிரத்தைத் தொடும்
எதுக்குப்பா என்றால்
படிங்க தோழர். நான் படிச்சா எனக்கு. நீங்க படிச்சா நிறைய பேருக்கு என்கிறார்
எங்கள் மாவட்டச் செயலாளர் ரமேஷ் இந்த ஆண்டு நெடுகிலும் என்னோடு இருந்திருக்கிறார்
அனைவரையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன்

முடியும் என்றே தோன்றுகிறது

 

2024 கு என்ன மாப்ள?
ஏதுமில்லை
”சாமங்கவிய” கொண்டு வரலாம்ல என்கிறான்
65/66 என்ன ஆயிற்று? தொகுக்கலாமே என்கிறான் இன்னொருவன்
”நாப்கின் பெண்கல்வியின் வலது கண் ”என்ன ஆயிற்று என்கிறார் ஒருவர்
”சாமங்கவிய” முதல் தொகுதி
65/66 காக்கைச் சிறகினிலே முதல் தொகுதி இரண்டையும் கோடைக்குள் கொண்டுவர வேண்டும்
அதற்கு முன்னர்,
முடிந்தால் பொங்கலுக்குள் “நாப்கின் பெண்கல்வியின் வலது கண்” கொண்டுவர வேண்டும்
முடியும் என்றே தோன்றுகிறது
பார்ப்போம்

பாத்துட்டே பேசலாம்ல

 

ஷீனாவிற்கு சுடி எடுப்பதற்காக நானும் கீர்த்தியும் சென்றிருந்தோம்
சன்ன நடுத்தரக் குடும்பம் ஒன்று திருமணத்திற்கு துணி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
மகளுக்கு போலும்
அந்த மனிதரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி
திடிரென்று பொடிசு ஒருத்தி செல்லோடு அவரிடம் ஓடி வருகிறாள்
”அப்பா அண்ணன்”
புடிங்கி காதில் வைத்தவர்,
சாப்ட்டியாப்பா
நெகிழ்கிறேன்
அது வீடியோ கால்
பார்த்துட்டே பேசுங்க சார் என்கிறேன்
அவர் என் இனம்போல
காதுல வச்சாலே சரியா கேக்காதுங்களே என்கிறார்
நான் பேசியது அந்தப் பிள்ளைக்கு கேட்டிருக்கும்போல
யாராச்சும் வந்தா அப்பாக்கு நல்ல ஹெட்போன் அனுப்பனுங்க சார். பாத்துக்கிட்டே பேசுவார்ல
இல்லப்பா, அதுக்கு மிசினே வாங்கித் தந்துடலாம்ல
செவுட்டு மிசின்ங்களா. வெளியத் தெரியுமே
தெரியாதுப்பா என்று சொல்லிவிட்டு காதுக்குள் இருந்த என் மிசின்களை எடுத்துக் காட்டுகிறேன்
நீங்களும் செவிட்டு மிசின் வச்சிருக்கீங்களா?
ஆமாம்பா
எவ்வளவு ஆகுங்க
சொல்கிறேன்
வரப்ப வாங்கித் தரனும். பாத்துட்டே பேசலாம்ல
கொஞ்சமும் போலி இல்லை
அன்பு
அன்பு
இப்படியே இருங்கப்பா
வேறென்ன சொல்ல

Friday, December 29, 2023

அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசுங்கள்

 

28.12.2023 அன்று ”ஜேக்டோ ஜியோ” அமைப்பினர் தஙகளது கோரிக்கைகளை வலியுறித்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி கைதாகி விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்
உரிய முறையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் போராட்டத்தை அரசு எதிர்கொள்ளவில்லை
கிட்டத்தட்ட 60 கும் மேற்பட்ட சங்கங்கள் ஒன்றுபட்டு போராடும்போது அதை தலைமைச் செயலர் மூலமாக அணுகுவதும்
மூன்றே மூன்று பேர் வாருங்கள் பேசலாம் என்பதும்
Unbecoming of Stalin sir
நாம் இதுவரை பார்த்த ஸ்டாலின் சாராக இந்த அணுகுமுறையில் அவரைக் கொள்ள இயலவில்லை
நியாயமாக,
அன்போடு ,
அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசுங்கள் என்பது அரசிற்கும்
என்னப் பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்டு அரசை வழி நடத்துங்கள் என்பது எதிர்க்கட்சிகளுக்குமான நமது கோரிக்கை

ஸ்டாலினிடம் இங்கிதத்தைக் கற்க வேண்டும்

 

முற்றாக விடைபெற்றிருக்கிறார் திரு விஜயகாந்த்
ஒரு குறையுமற்று மிக நிறைவான
மிகவும் மரியாதைக்குரிய வழியனுப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது அரசு
ஸ்டாலினிடம் இங்கிதத்தைக் கற்க வேண்டும்
என்ற தோழர் Yamuna Rajendran அவர்களின் கருத்தை நான் ஏற்கிறேன்

அந்த விழுமியம்கூட எனக்கு எங்கமாயி காளியம்மாள் போட்ட பிச்சை

 

காட்டம்மா
எங்க அம்மாயி
அநேகமாக 102
உள்ளே நுழைந்ததும்
சாமி...
எபீனு
எல்லோரையும் சாமி என்றுதான் நான் விளிக்கிறேன் என்கிறார்கள்
அதனால்
கிரிஷ் என்னை சாமி தாத்தா என்று அழைக்கிறான்
அது என் விழுமியம் என்று பார்த்தால்
அந்த விழுமியம்கூட எனக்கு எங்கமாயி காளியம்மாள் போட்ட பிச்சை

திரு விஜயகாந்த் அவர்களுக்கு என் வணக்கமும் அஞ்சலியும்

 


உடல் ரீதியாக அவர் மிகவும் சிரமப் பட்டதாகவே உணர்கிறேன்
அந்த வகையில் ஒரு வகையில் அவருக்கான விடுதலைதான்
திரு விஜயகாந்த் அவர்களுக்கு என் வணக்கமும் அஞ்சலியும்

எங்கள் வீட்டின் முதல் பெண்ணெழுத்து

 

ரொம்ப நாளாச்சே புத்தகம் கொடுத்து

புக்பேருக்கு ஏதும் இருக்கா எட்வின்?

நாளாச்சுதான்

தரவேண்டும்தான்

ஆனால் மூன்று மாதங்களாகும்

புக்பேருக்கு?

பாப்பா

"அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது"

கொண்டு வந்திருக்கா

தலைப்பே மிரட்டுதில்ல

எங்கள் வீட்டின் முதல் பெண்ணெழுத்து

விழா எடுக்க வேண்டும்

15 வருஷமா எங்கள்மீது கல்லெறிந்து கொண்டே இருக்கிறார்கள்

கையிலிருப்பது கொண்டு தடுத்துக் கொண்டே இருக்கிறோம்

வாளும் கேடயமுமாய்

"மரிச்ஜாப்பி" பாரதி புத்தகாலயம் மூலமாக வருகிறது

கொண்டு சேர்க்க வேண்டும்

மால்கம் "பகை நன்று" தருகிறார்

கல்வி குறித்து அக்கறைப் படுபவர்கள் அவசியம் படிக்க வேண்டும்

இதுவும் பாரதி புத்தகாலய வெளியீடுதான்

அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது

மற்றும்

பகை நன்று

இரண்டின் அட்டைகளும் அவற்றிற்காகவும் பேச வைக்கும்

தோழர் Lark Bhaskaran மிரட்டி இருக்கிறார்

தருவோம் தோழர்





இறங்கறவரைக்கும் நீங்கதான் தாத்தா

 


பிரபஞ்சனா
பர்ஸ்ட் ஸ்டான்டர்டு டி செக்க்ஷன்
தேவகி மிஸ் செல்லம்
இறங்கறவரைக்கும் நான் தாத்தாவாம்
அப்ப இறங்கின பின்பு?
அத இறங்கறப்ப பார்த்துக்லாமாம்




உணவுப் பட்டியல் தமிழில்

 

கோவை குனியமுத்தூரில் உள்ள அன்னபூரணா உணவகத்திற்கு சூரியா அழைத்துப் போனான்

எப்படி இருக்கும்னு வந்து பாருங்க அங்கிள் என்றான்

உணவெல்லாம் அப்புறம்

போனதும் உணவுப் பட்டியல் தமிழில் வந்தது

அப்படியொரு மகிழ்ச்சி






Tuesday, December 26, 2023

என்னைக் கட்டிக்கிறதா இருந்தா செய்கிறேன் தோழர்

 

06.12.1952 இல் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களுக்கும் அம்பாள் அம்மாவிற்கும் திருமணம் நடக்கிறது

அவர்கள் இருவரும் இல்லறத்தில் இணைந்ததே ஒரு சுவையான கதை

அம்பாள் அம்மாவிற்கு மூன்று அக்காக்கள், ஒரு அண்ணன்

மூன்று அக்காக்களும் கட்சித் தோழர்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள்

இரண்டாவது அல்லது மூன்றாவது சகோதரி யமுனா

அவர் தோழர் K.M அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்

ஒருவர் மும்பையில் இருக்கிறார்

அம்மாவும் தன் சகோதரி வீட்டில் மும்பையில் கொஞ்ச காலம் தங்குகிறார்

அப்போது மும்பை தலைமறைவு அலுவலகத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டிய அவசியம் பிஆருக்கு வருகிறது

அப்போது அம்மா அறிமுகம் ஆகிறார்

இப்போது அம்மாவிற்கு சென்னையில் பணி கிடைத்து சென்னைக்கு வருகிறார்

தோழர் எதிர்க்கட்சித் தலைவராகிறார்

ஆகவே

நிறைய கடிதங்கள், கோரிக்கைகள்

அவர்களுக்கு பதில் எழுத வேண்டும்

அரசுக்கு அவை சம்பந்தமாக எழுத வேண்டும்

அவற்றை ஆவணப் படுத்த வேண்டும்

தமிழும் ஆங்கிலமும் நன்கு தெரிந்த அம்பாள் அம்மாவை தோழர் உதவக் கேட்கிறார்

அம்மா சொல்கிறார்

செய்கிறேன் தோழர்

என்னைக் கட்டிக்கிறதா இருந்தா செய்கிறேன் தோழர்

இந்தக் காட்சியை விஷுவலாக நினைத்துப் பார்க்கிறேன்

அய்ய்யோ

மேடைகளில் தோழருக்கும் அம்மாவிற்கும் திருமணம் நடந்ததாகவோ

அல்லது

தோழர் அம்மாவை திருமணம் செய்து கொண்டதாகவோதான் பெரும்பாலும் பேசுகிறார்கள்

தவறு,

உண்மை என்னவெனில்,

06.12.1952 அன்று அம்மா தோழர் பி.ராமமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார்

அம்மாக்களின் பிள்ளை நான்

அம்மாவிற்கு முத்தம்

Monday, December 25, 2023

சபர்மதி குறித்த ராஜாஜியின் மதிப்பீடு

 

சபர்மதி ஆசிரமத்தில் ஒன்றும் இல்லை என்று அதைக் கொஞ்ச காலம் நிர்வகித்து வந்த ராஜாஜியே சொல்லி இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா

ஆனால் அதுதான் உண்மை

1920 கல்கத்தா காங்கிரஸ் தீர்மானங்களில் ஒன்று

அரசு நடத்தும் அல்லது அரசு உதவியோடு நடத்தப்படும் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி

தேசியப் பள்ளிகளில் சேர வேண்டும் என்பது

தோழர் பிஆர் தான் படித்து வந்த இந்து பள்ளியில் இருந்து விலகி

அலகாபாத்தில் நேருவும் புருஷோத்தம தாஸ் தாண்டனும் நடத்தி வந்த தேசியப் பள்ளியில் சேர்வது என்று முடிவெடுக்கிறார்

பள்ளிக்கு கிளம்புவதுபோல தோழர் பிஆர் ரயிலடிக்கு வருகிறார்

டிக்கட் எடுக்காமல் அப்படி இப்படி என்றெல்லாம் சுத்திவளைக்க விரும்பவில்லை

திருட்டு ரயில்தான்

திருட்டு ரயிலேதான்

பிடிபட்டு இறக்கிவிடப்பட்டு

திரும்ப ஏறி

திரும்பப் பிடிபட்டு இறக்கிவிடப்பட்டு

திரும்ப ஏறி

ஒருவழியாக அலகாபாத் வந்து பள்ளி என்று அழைக்கப்பட்ட அந்த வீட்டிற்கு வருகிறார்

புருஷோத்தம தாஸ் தாண்டனைப் பார்க்கிறார்

விந்தி விந்தி நடக்கும் சிறுவன்

அவ்வளவாக ஈர்க்கவில்லை

ஆனாலும் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்

ஆனால் நேருவிற்கு இவரது சூட்டிகையும் அறிவும் பிடித்துப் போகிறது

ஞாயிறுகளில் வீட்டிற்கு அழைத்து உடன் சாப்பிடுமளவிற்கு நேருவிற்கு பிரியம் ஏற்படுகிறது

இந்த சமயத்தில்

சௌரிசௌரா நிகழ்ச்சி குறித்த காந்தியின் எதிர்வினைமீது ஏற்பட்ட விரக்தியில் பள்ளியில் இருந்து அனைவரும் வெளியேறுகின்றனர்

( இளைய பிள்ளைகள் யாரேனும் சௌரிசௌரா என்றால் என்ன என்று கேட்டால் அது குறித்தும் எழுதுவோம்)

வேறு வழி இல்லாமல் பிஆரும் வெளியேறுவதைத் தெரிவிக்க நேருவிடம் வருகிறார்

நேருவிற்கும் அது சரி என்றே படுகிறது

பயணத்திற்கும் செலவிற்கும் என்று பணம் கொடுத்து அனுப்புகிறார்

மீண்டும் ரயிலடி

இப்போது பிஆர் வேறு நினைக்கிறார்

எதற்கு வீட்டிற்கு

காந்தியின் சபர்மதி ஆசிரமம் போகலாமே என்று எண்ணுகிறார்

சென்னைக்கு பதில் டிக்கெட் எடுத்து அகமதாபாத் போகிறார்

அப்போது சபர்மதி ஆசிரமத்தை ராஜாஜி நிர்வகிக்கிறார்

அவரை பிஆர் சந்திக்கிறார்

இங்கு நூல் நூற்பதைத் தவிர வேறு என்ன நடக்கிறது

அது உனக்கு நன்றாகத் தெரியும்

நீ கற்றுக் கொள்ள இங்கு ஏதும் இல்லை

ஊருக்கு ஓடு என்று விரட்டுகிறார்

இவ்வளவுதான் சபர்மதி குறித்த ராஜாஜியின் மதிப்பீடு

தந்தை பெரியாருக்கும் தோழர் பிஆர் அவர்களுக்குமான

 

1936
ஒருநாள் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களும் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களும் தந்தை பெரியாரை சந்திக்கிறார்கள்
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேருமாறு பெரியாரைக் கேட்டுக் கொள்வது அவர்கள் சந்திப்பிற்கான நோக்கம்
தடாலடியாக பெரியார் மறுத்துவிடுகிறார்
அவர்களது உரையாடலினூடே பிஆர் குறித்த விசாரனையை ஆரம்பிக்கிறார் பெரியார்
அவர்களது சாதியில் 22 வயதானாலேயே கல்யாணத்தை முடிச்சு வைத்துவிடுவார்களே. அவரை எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார்
விரட்டிக்கொண்டுதான் இருப்பதாகவும், தான்தான் பிடி கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார் பிஆர்
ஒருக்கால் தோழர் ராமமூர்த்திக்கு திருமணத்தில் பிரியம் இல்லையோ என்ற எண்ணாம் வந்துவிடுகிறது பெரியாருக்கு
அப்படி இல்லீங்க அய்யா என்ற தோழர்
படித்து பெரிய வேலைக்குப் போவார் என்று தன் அம்மா நினைத்தார்கள் என்றும்
உல்டாவாக ஆனாலும் தான் செய்யும் வேலைக்கு அவர்கள் ஒத்தாசையாக இருப்பதாகவும்
எனவே,
தனது கருத்தின்படி கலப்புத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் அவர்களது மனதைப் புண்படுத்த விரும்பவில்லை என்றும்
அவரது மறைவிற்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள விரும்புவாதாகவும் கூறுகிறார்
அப்படி நெகிழ்ந்து போகிறார் பெரியார்
வழக்கமாக குழந்தைகளைக்கூட “ங்க” போட்டு மரியாதையாகப் பேசும் பெரியார்
“தம்பி நீ செய்த முடிவு நல்ல முடிவு. உன் தாயாரை மெச்சுகிறேன். இப்படிப்பட்ட பழைய காலத்து தாய்மார்களைப் பார்ப்பது அரிது.
அம்மா மனசு காயப்படக்கூடாதுன்னு நெனைக்கிற பாரு. அது நல்ல மனசு.
நீ எப்பயாச்சும் கல்யாணம் செய்தா நான் இருந்தா வருவேன்”
என்று தோழர் பிஆர் அவர்களை ஒருமையில் அழைத்து சொல்கிறார்
இரண்டு விஷயங்கள் தோழர் ராமமூர்த்தியை நெகிழ்த்துகிறது
ஒன்று தன்னை பெரியார் ஒருமையில் அழைத்தது
இரண்டு வழக்கமாக இப்படி செண்டிமெண்டெல்லாம் பார்க்காத பெரியார் தோழருக்கு திருமணம் நடந்தால் வருவதாக சொன்னது
ஒருவழியாக 06.12.1952 திருமண பதிவு அலுவலகத்தில் தோழர் பி.ராமமூர்த்திக்கும் அம்பாள் அவர்களுக்கும் பதிவுத் திருமணம் நடக்கிறது
யாருக்கும் சொல்லவில்லை
திருமணத்தை முடித்துவிட்டு சட்டமன்றம் வருகிறார்
அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் அவரை வாழ்த்த அனைவருக்கும் விஷயம் தெரிகிறது
செய்தியைக் கேள்விபட்டதும்
கட்சித் தோழர்கள் அடுத்த நாள் சித்தாதிரிப் பேட்டையில் ஒரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள்
பெரியாருக்கு தொலைபேசியில் செய்தி சொல்லப்படுகிறது
அந்த நேரம் திகவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவ்வளவாக பொருந்திப் போகாத நேரம்
ஆனாலும் அழைக்கிறார்
தந்தை பெரியாரும் வருகிறார்
தலைமையேற்று வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கிறார்
சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை
தந்தை பெரியாருக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கக் கூடும்
தந்தை பெரியாருக்கும் தோழர் பிஆர் அவர்களுக்குமான அன்பும் உறவும் அப்படியானது

Sunday, December 24, 2023

தமிழ்நாடு பள்ளிகளில் காணப்படும் 28 விதமான சாதிய பாகுபாடுகளில் ஒன்று

 





தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு பள்ளிகளில் காணப்படும் 28 விதமான சாதிய பாகுபாடுகள் குறித்து ஆய்வு நடத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது

இது மிகவும் சவால் வாய்ந்த ஒரு முயற்சி

களம் சென்ற TNUEF தோழர்களையும் இப்படி ஒரு முடிவெடுத்த மாநிலக்குழுவையும் கைகளைப் பற்றி நன்றி சொல்கிறேன்

இந்த அளவிலான அந்த அறிக்கையே அதிர்ச்சி அளிக்கிறது

இப்படி சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது

இந்த அறிக்கை பொய் என்று யாரும் சொல்ல முடியாது

ஆனால் குறைவுதான்

அவர்களது வாய்ப்புகள் அளவிற்கும் மேலான முயற்சி இது

கயிறு விஷயத்தில் திருச்சி விடுபட்டிருக்கிறது

அனுபவத்தில் சொல்கிறேன்

இங்கு அதிகம்

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

தலித் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளைக் கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்யும் பள்ளிகளின் எண்ணிக்கை 15 என்கிறது அறிக்கை




ஒன்று என்று இருந்தாலே நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும்

பதினைந்து

9 மாவட்டங்களில் இப்படி என்று அறிக்கை கூறுகிறது

கட்சி தனது கவனத்தை அங்கு குவிக்க வேடும்

பள்ளிகளின் பட்டியல் நிச்சயம் இருக்கும்

வாசலை மறிப்போம்

கேள்வி கேட்போம்

மால்கம் “பகை நன்று” ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார்

அதிலும் இதுகுறித்து நுட்பமாக வரும்

அணிந்துரையிலும் இது குறித்தே நானும் பேசி இருக்கிறேன்

பாரதி புத்தக வெளியீடு

குழந்தைகளை அவர்கள் பிறப்பின் பொருட்டு கழிவறைகளைக் கழுவச் சொன்னவர்களை

தூக்கிலேகூட போடலாம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...