Monday, January 10, 2011

தெளிவு



எதிர் பார்த்ததுதான்.

நான் பள்ளியில் நுழையும் போது ஏழெட்டுபேர் அலுவலக வாயிலில் நின்று
கொண்டிருந்தார்கள்.

வணங்கினார்கள்.

வணங்கினேன்.

"தலைமை ஆசிரியர் வரட்டும். பேசிக்கலாம் ," சொல்லிவிட்டு கையொப்பமிட்டு
விட்டு ஆசிரியர் அறைக்குப் போய் விட்டேன்.

நாங்கள்தான் வரச் சொல்லியிருந்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் மதியம் மூன்று மணிபோல பதினோராம் வகுப்பு
பெண் குழந்தைகள் அலறிக் கொண்டு ஓடி வந்தனர்.

"சார், சிலம்பு  தண்ணியப் போட்டுட்டு வந்து வாந்தி எடுத்துகிட்டு
கிடக்கிறான் , சார்." பயமும் அழுகையுமாய் நின்றார்கள்.

வகுப்புக்குப் போனோம். பெண் பிள்ளைகள் வகுப்பிலிருந்து வெளியேறி
மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்கள்.மாணவர்கள் வகுப்புக்குள்ளேயே
சுவரோரமாய் ஒதுங்கிக் கிடந்தார்கள்.

மூக்கைப் பிடித்துக் கொண்டோம். தாறு மாறாய் விழுந்து கிடந்தான்.

தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் செல்வத்தைப் பார்த்தார். பொருளறிந்த செல்வம்
ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்தார்.

ஆட்டோவில் தூக்கிப் போட்டு பையனை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.
பணியாட்களைக் கொண்டு வகுப்பைக் கழுவி சுத்தம் செய்தோம்.

மிரண்டுபோய் நின்ற பெண்பிள்ளைகளிடம் சென்ற தலைமை ஆசிரியர்
"பயப்படாதீங்கம்மா, நான் பார்த்துக்கிறேன்" என்றார்.

எப்பப் பார்த்தாலும் இப்படித்தான் சார் .  பான்பராக் போடுவது,
தண்ணியடித்துவிட்டு வருவது என்று ரகளை சார்," கொதித்துப் பதறினார்கள்.

" சரி, நான் பார்த்துக்கரேம்மா. நீங்க அப்பவே சொல்லியிருந்தா கண்டிச்சிருப்பேன்ல,"

"சொன்னாத் திட்டுவான்னு பயம் சார்"

சரி, சரி , நான் பார்த்துக்கறேன் " என்றவர்

" கொஞ்சம் கூட வா எட்வின்" என்றார்.

அதை அவர் சொல்லியிருக்கவே தேவையில்லை.

"என்ன செய்யலாம். ஒரு ஸ்டாப் மீட்டிங் போடலாமா?"

"போடாலாம்னே. நாளைக்குப் போடுவோம். நாமளும் பதறவேண்டாம்."

"ஆமாம் சார். அதுதான் சரி.," என்று நான் சொன்னதை ஆமோதித்தார் கனகராஜ் சார்.

"நாளைக்கு உணவு இடை வேளையில் ஸ்டாப் மீட்டிங். சர்குலர் ரெடி பண்ணுங்க."

" சரிங்கண்ணே" என்றேன்.

"அடுத்த நாள் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர்.
அவர்களது கொதிநிலை அதிகமாக இருந்தது. அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இறுதியாக பேசிக்கொண்டு வந்து எல்லோரும் ஒரே குரலெடுத்து சொன்னார்கள்,

"அவனுக்கு டி.சி யக் குடுங்க சார். இல்லேன்னா நாங்க எங்க புள்ளைங்க டி.சிய வாங்கிட்டு வேற பள்ளிக்கூடம் போய்விடுவோம்," எனப் பொரிந்தனர். மிகுந்த
பொறுமையோடும் அக்கறையோடும் அவர்களை அணுகிய தலைமை ஆசிரியர் "பயப்படாதீங்க. எனக்கும் இருபது வயசுல ஒரு பொண்ணு இருக்கா. உங்க வலி என்னன்னு எனக்கும் தெரியும். நான் பார்த்துக்கிறேன். நம்பிப் போங்க," என்றார்.

கட்டுப் பட்டார்கள், கலைந்து போனார்கள்.

மதியம் கூடிய ஆசிரியர் கூட்டத்திலும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது என்றே
ஏக மனதாய் முடிவெடுக்கப் பட்டது.
அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனது பெற்றோரை வரச்சொல்லியிருந்தோம்.

அவர்களுக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியர் வந்ததும் வணங்கியிருக்கிறார்கள்.

" கொஞ்சம் பொறுங்க, பிரேயர் முடிஞ்சதும் கூப்பிடறேன்."

"சரிங்க சார்"

வகுப்புகள் தொடங்கியதும் சில ஆசிரியர்களை அழைத்தார் தலைமை ஆசிரியர்.
அந்தப் பையனது பெற்றோர்களையும் வரச் சொன்னார்.

" ஓங்கப் பையன் என்ன காரியம் செஞ்சிருக்கான் தெரியுமா?,"

"கேள்விப் பட்டோங்க சார் இனிமே இப்படி நடக்காமப் பார்த்துக்கறோம் சார்.
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார். அவன் செஞ்ச தப்புக்கு நாங்க மன்னிப்பு
கேட்டுக்கறோம்."

"ஆயிரம் பொம்பளப் பசங்க படிக்கிற பள்ளிக்கூடம்  இது. ஓங்கப்
பொண்ணு இங்க படிச்சா  சும்மா விட்டுடுவீங்களா?"

" தப்புதாங்க, தயவு பண்ணி மன்னிச்சுக்கங்க சார்."

இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தை ஒருமணி நேரம் நீண்டது.

எப்படியாவது மாற்றுச் சான்றிதழை வழங்கிவிட வேண்டும் என்பதில் நாங்கள்
பிடிவாதமாய் இருந்தோம். இல்லாது போனால் வருங்காலத்தில் மாணவர்களிடம் பயம்
இருக்காது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அப்போதுதான் பெண் பிள்ளைகளின்
பெற்றோர்கள் சமாதானமடைவார்கள் என்பது எங்கள் எண்ணம்.

அவர்களொஅ என்ன செய்தேனும் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றி
சேதாரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள்.

இறுதியாக வேறு வழியேயின்றி உரத்தக் குரலெடுத்து தலைமை ஆசிரியர் சொன்னார்,
"வேற வழியே இல்ல, டி.சி ய வாங்கிட்டுப் போங்க."

அதுவரை கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணீரோடு சுவரோடு சுவராய் சாய்ந்து
நின்று கொண்டிருந்த அவனது அம்மா வெடித்தார்,

"கொடுங்க சார், ஏம்புள்ள எப்படியோ நாசமாப் போகட்டும். நீங்க ஒங்க
பள்ளிக்கூடத்தக் கட்டிக்கிட்டு நல்லா இருங்க"

"என்னம்மா பேசுற நீ"

கூட வந்தவர்களும் , "நீ செத்த சும்மா இரும்மா. நாங்க பார்த்துக்கறோம்,
கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நில்லு," என்றனர்.

இந்த அம்மாவின் பேச்சினால் காரியம் கேட்டுவிடக் கூடாது என்று பயந்தனர்.

"உடுங்கய்யா எல்லோரும். ஏம்புள்ள எப்படியோ  நாசமாப் போகட்டும்" மீண்டும்
வெடித்தார்.

ஓம் பய என்ன செஞ்சிருக்கான்., நீ ஏன்னா பேசுற" தலைமை ஆசிரியர் கேட்கவும்

"அவன் யோக்கியன்னா சார் சொல்றோம். அவன் குடிச்சுட்டு பள்ளிக் கூடத்துக்கு
மட்டுமா சார் வரான். தண்ணியப் போட்டுட்டுதான் பல நேரம் வீட்டுக்கும்
வரான்."

" அப்பா கண்டிச்சு வைக்க வேணாமா?"

"கண்டிச்சுதான் வைக்கிறேன் சார். ஆனா வீட்ட விட்டு வெளிய துரத்துல"

இதற்கு அடுத்து அந்த அம்மா பேசியதுதான் எங்களை அதிரச் செய்தது.

"வீட்டுக்கு குடிச்சுட்டு வரானேன்னு என்னைக்காச்சும் அவங்கிட்ட 'இப்படிக்
குடிச்சுப் புட்டு வீட்டுக்கு வாரயே யாரடா ஒன்னோட கிளாஸ் சார், அவர
கூட்டிட்டு வான்னு என்னைக்காவது சொல்லியிருக்கேனா? சார்"

கிறுக்கு புடிச்சுருக்காமா ஒனக்கு?"

"கெட்டுப் போற புள்ளைங்கள வீட்டுக்கு அனுப்பிட்டு மத்தப் புள்ளைங்களுக்கு
பாடம் நடத்தறதுக்கா சார் ஸ்கூலு? கெட்டு சீரழியிற பசங்கள நல்ல
வழிப்படுத்தி திருத்தரதுக்குத்தான் சார் பள்ளிக்கூடம், சம்பளம் எல்லாம்"

அந்த அம்மாவை இழுத்துக் கொண்டு போனார்கள்.

பள்ளிகளில், கல்லூரிகளில் , ஆசிரியர் பயிற்சியில் விளங்காத ஏதா ஒன்றை
அந்த அம்மாவின் பேச்சு தெளிவு படுத்தியது

Saturday, January 8, 2011

மரணத்தைக் கொண்டாடுவோம்


'மரணம் குறித்த
பயம் போய்விடும்
ஒரே ஒரு முறை
செத்துப் பார் "
என்று எப்போதோ ஜென்னில் வாசித்ததாய் ஞாபகம். இதைத் தாண்டி மரணம் குறித்து என்னத்தை யோசித்து தொலைப்பது? உச்சத்தில் உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். சரி,  எவ்வளவுதான் உச்சத்தில் உட்கார்ந்து யோசித்தாலும் இப்படியெல்லாம் கூட வருமா? ஒருக்கால் ஓரிரு முறை செத்து மீண்டும் எழுந்து வந்து மரண பயமற்ற தனது அனுபவத்தை எழுதியிருப்பானா?

எனது பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் தொடர்ந்து வெற்றிலைப் பாக்கு போடுபவர். கூடவே பன்னீர் புகையிலையும் .அவர் உள்ளே  நுழைந்தால் வாசம் கமகமக்கும்.

ஒரு முறை கேட்டேன் ,

"புகையிலை ஒரு மாதிரி மயக்கத்தைத் தரும் என்கிறார்களே ,தொடர்ந்து புகையிலை போட்டாலும் தெளிவா இருக்கீங்களே . உண்மைய சொல்லுங்க  புகையிலை எப்படி இருக்கும்?"

கொஞ்சம் புகையிலையை உருட்டி என்னிடம் நீட்டினார். மிரண்டு போய் ஒதுங்கினேன்.

"எதையும் அனுபவிச்சுப் பார்த்து உணரனும்டா"

மூன்று நான்கு வரிகள் கொண்ட எனது கேள்விக்கு நான்கே வார்த்தைகளில் பதில் சொன்னார்.

புகையிலைப் போட்டால் அது குறித்த பயம் தெளிந்து சுவைக்கும் என்கிறார் இவர். அவனோ  ஒருமுறை செத்துப் பார். மரணம் குறித்த பயம் நீங்கி சுவைக்கும் என்கிறான்.

எனில் புகையிலை போடுவது மாதிரி ஒரு சராசரி அனுபவம்தானா மரணம்?

வலியற்றதா?

" உறங்குவது போலும் சாக்காடு " என்கிறான் நம்மாளு.ஆஹா! மரணத்தை உறக்கம் மாதிரி ஒரு அனுபவம் என்கிறானே.

மரணம் அனுபவமா?

என்ன செய்வது ஜென் குறித்த பரிசீலனையின் நீட்சியில்தான் நமக்கு நமது மேன்மையே தட்டுப் படுகிறது. இதை என்ன என்பது? சுகன்தான்    சொல்வார் ," அது அப்படித் தாங்க அய்யா."

அது அப்படித்தான் போலும்.

ஆனால்  மனிதர்களுக்கு மரணம் வேப்பங்காயாய் கசக்கிறது என்று கூட சொல்ல முடியாது. மரண பயம் என்பது எந்தக் கசப்பினும் கொடூர கசப்பானது.

மனிதர்கள் மட்டுமல்ல, தேவகுமாரன் என்றும் ,  உலக மக்களின் ஒட்டு  மொத்தப் பாவத்தையும் தனது ரத்தத்தால் கழுவிப் போக்க இந்த பூமிக்கு வந்தவர் என்றும் உலகின் பெரும்பான்மை மக்களால் நம்பப் படுகிற ஏசுநாதருக்கே தனது மரணத் தருவாயில் மரணம் கலக்கத்தைத் தந்திருக்கிறது. அதனால்தான்  தனது மரணத்திற்கு சற்று முன்னால் " என் தேவனே , என் தேவனே , ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று   கலங்கியிருக்கிறார்.

விவேகானந்தரும்கூட தனது மரணத்தின் நெருக்கத்தில் கொஞ்சம்  கலங்கி  இருந்ததாகத்தான்   படுகிறது.

முரட்டு வீரத்தோடுதான் எதிர்கொண்டார் எனினும் அவரது மரண நொடிகளில் கலக்கத்தின் ரேகைகளை சதாம் உசேனின் முகத்தில் பார்க்க முடிந்தது.

நம்ம  கட்டபொம்முவிடமும்  சின்னியம் பாளையத்து    தோழர்களிடமும் தூக்கிலே தொங்கி உயிர் துறக்கும் வரைக்கும் வீரத்தையும், முறுக்கையும் அள்ள  அள்ளக் குறையாதத் திமிரையும் பார்க்க முடிந்தது.

பகத்தோ  இவை அனைத்தையும் கடந்து சாகும் வரைக்கும் ஒரு வசீகரமான புன்னகையை தன் உதடுகளில் உலரப் போட்டிருந்தான். அந்தப் புன்னகைக்கு நிகரான ஒரு ஆயுதம் இதுவரைக்கும் உலகின் எந்த உலையிலும் தயாராகவில்லை.

சரி, மரணம் என்றால்தான் என்ன?

"பாவத்தின் சம்பளம் மரணம் " என்கிறது விவிலியம். எனில் மரணம் என்பது பாவத்தின் விளைவு.  சரி ஒரு வாதத்திற்காக பாவமும் புண்ணியமும் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இந்த உலகில் பாவ புண்ணியக் கணக்கையே இன்னும் துவங்கியிராத ஒரு சொட்டுத் தாய்ப் பாலைக் கூடப் பருகியிராத பச்சிளங்குழந்தை செத்துத் தொலைக்கிறதே. அது யார் செய்த பாவத்தின் விளைவு?

"ஏற்றப் பழந்துணியை நீக்கி
எறிந்தொருவன்
மாற்றும்  புதிய உடை
வாய்ப்பது போல்
தோற்றுமுயிர்
பண்டை உடம்பை விட்டு
பாரில் புதிய உடல்
கொண்டு பிறக்குமென்று
கொள்"
என்று கீதை சொல்வதாகத் தெரிகிறது. வி.ஸ.காண்டேகரின்  "கிரௌஞ்சவதம்" நாவலில் தனது மனைவி இறந்து போன துயரிலிருந்து தன்னைத் தானே தேற்றிக் கொள்வதற்காக பேராசிரியர் அப்பன்னா என்ற கதாபாத்திரம் கீதையிலிருந்து மேற்சொன்ன பாடலைப் பாடுவதாகப் படித்தது. மற்றபடி அது கீதையில் இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது.

இருக்கும்  என்றே  நம்புகிறேன். எனில் உயிரானது தான்  போட்டிருந்த உடல்  என்ற சட்டையை , அது  பழையது  ஆனதாலோ  அல்லது  வேறு  ஏதோ ஒரு  காரணத்தாலோ  மாற்றிக் கொள்வது மரணம் என்றாகிறது.

இதன் பொருள் மரணம் என்பது உயிர் உடலை மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.  உயிர் அழியாதது.  ராமசாமி  மரித்துப் போனான் எனில்  அவனது  உடலிலிருந்து  உயிர் புதிய உயிராகப்  பிறந்து   கந்தசாமி  அல்லது  வேறு  ஏதா  ஒரு  பெயர்  கொண்ட  ஒரு  மனிதனாவான்.

பாவத்தின்  சம்பளம்  மரணம்  என்பதோ,  உயிர்  அழியாதது  என்பதோ மனிதர்களுக்கு  இருக்கும்  மரணம்  குறித்த  பயத்தைப்  போக்குவதற்கு  என்றே  கொள்ள வேண்டும். 

மரணம்  குறித்து  ம்க்களுக்கு  பயம்  இருக்கிறது..  அதே  நேரத்தில்  தற்கொலை  செய்து  கொள்கிறானே.  எனில்  அவனுக்கு  மரணம்  குறித்த  பயம்  இல்லை  என்றுதானே  பொருள்? 

அல்ல,  சாதாரண மனிதனுக்கு  மரணம் கண்டு  பயம்.  தற்கொலை செய்து  கொள்பவனுக்கு  வாழ்க்கை குறித்து பயம்.

மரணம்  என்பது  பிறப்பது  மாதிரி ,  பெயர் பெற்றுக் கொள்வது  மாதிரி ,  பூப்பெய்துவது   மாதிரி ,  திருமணம்  செய்து  கொள்வது  மாதிரி  வாழ்வில்  ஒரு நிகழ்ச்சி.  அவ்வளவுதான்.  மற்றவற்றிற்காக  ஏங்கி,  எதிர்பார்த்து,  தவமாய்  தவம்  கிடக்கும்  நாம்  மரணத்தைப்  பொருத்தவரை  இவற்றிலிருந்து  மாறுபட்டு  ஒன்று அதைத  தவிர்க்கவோ  அல்லது  குறைந்த  பட்சம்  தள்ளிப்  போடவோ  முயற்சிக்கிறோம் .

இதற்கு   ஒரே  ஒரு  காரணம்தான்  இருக்க  முடியும்.  மற்றெல்லா  நிகழ்வுகளிலும்  அது  குறித்து  அசை  போட  அதற்கடுத்த  நாள்  நாம்  இருப்போம் .  ஆனால்  நேற்று  நடந்த  தனது  மரணத்தைப் பற்றி  அடுத்த  நாள் அசை போட மரணித்தித்தவனுக்கு  வாய்ப்பிருக்காது.

மரணத்தைக் கொண்டாட  நாம்  கற்றுக்  கொண்டால்  வாழ்க்கையின்  எந்த  ஒரு  இடர்  கண்டும்  நம்மால்  புன்னகைக்க  இயலும்.  மரணத்தைக்  கொண்டாட  வேண்டும்  என்று  நாம்  பரிந்துரைப்பதன்  பொருள்  இந்தப் புள்ளியிலேயே  ஒரு  புன்னகையோடு  மரணித்து  விட  வேண்டும்  என்பதுமல்ல.  மரணம்  வரைக்கும்  வாழ்க்கை  நிஜம்.  மரணம்  வரைக்கும்  வாழ்வதற்கான  போராட்டத்தை  நடத்திவிட வேண்டும்.

இத்தனை  மருத்துவமனைகள் ,  இத்தனை மருத்துவ  வசதிகள்,  அனைத்துமே  மரணத்தை முற்றாய் முழுசாய்  தவிர்ப்பதற்கு உதவாது.  மரணத்தை  முடிந்த  அளவு  தள்ளிப்  போடுவதற்காக  நமக்கு  வாய்த்த  வாய்ப்புகள் அவை.

மரணமே  இல்லாத  உலகத்தை  கற்பனை  செய்து  பாருங்கள்.  இளைஞர்களை  விடவும் ,  குழந்தைகளை  விடவும்  கிழவர்கள்  அதிகம்  வாழும்  ஒரு  உலகத்தை  ஒப்புக்கேனும்  சகித்துக்  கொள்ள  முடியுமா?

மரணம்  தவிர்க்க  இயலாதது.  சக  மனிதன்  குறித்த  புரிதலோடும் ,  அக்கறையோடும் ,  கவலையோடும்  அவனுக்கானதுமாக  நம்  வாழ்க்கை  செலவிடப்  பட்டிருக்குமானால்  நமது  மரணத்தையும்  தாண்டி  நீளும்  நமது  வாழ்க்கை.                      

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...