Sunday, October 22, 2017

இப்படி யோசிப்போமே

விஜய் தொலைக்காட்சியில் இன்று அழகில் சிறந்தவர்கள் கேரளப் பெண்களா? தமிழ்ப் பெண்களா? என்கிற தலைப்பில் நீயா நானா நடக்க இருப்பதாக அறிய முடிகிறது.
பெண்களைக் கேவலப் படுத்துவது போல இந்தத் தலைப்பு இருப்பதாக நிறைய எதிர்விணைகளை முகநூலில் பார்க்க முடிகிறது. அவற்றில் சில மேம்போக்காகவும் சில மிக ஆழமாகவும் அமைந்திருக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது கேரள முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் அந்த மாநிலத்தின் கவர்னரும் ஒரே விமானத்தில் பயனித்து சென்னை வந்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே வாடகைக் காரில் வந்து மரியாதை செலுத்திவிட்டு அதே வாடகைக் காரில் விமான நிலையம் போய் அங்கிருந்து கேரளா போகிறார்கள்.
இந்த எளிமைக்கு காரணம் அந்த மூவரில் தனிப்பட்ட வகையில் யாருமல்ல. அது அந்த மண்ணின் வெகுஜன அரசியலின் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் ஏன் தமிழ் மண்ணில் இல்லை என்கிற விவாதத்தை எந்த ஊடகமும் தொடங்க வில்லை?
அந்த மநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் போதுப் பேருந்துகளில் மிக சகஜமாக பயணிக்கிறார்கள்.
கல்வியில் மிகச் சிறந்து விளங்குகிறது.
இவை பற்றியெல்லாம் ஏன் ஊடகங்கள் விவாதங்களைத் தொடங்குவதில்லை என்றெல்லாம் கேள்விகள் முகநூலில் எழுகின்றன.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
அங்கங்கு நமது எதிர்ப்பை நம்மால் முடிந்தவரைத்ந்திரண்டு காட்டினால் என்ன?
அல்லது கேரளாவிற்கும் நமக்குமான வேறுபாடுகள் குறித்து பொதுவெளியில் நாம் பேசினால் என்ன?

Wednesday, September 27, 2017

என் வீட்டிலிருந்து...

கலைமணி மிக நேர்த்தியான கவிதைகளைத் தந்து கொண்டிருக்கிறாள். உரைநடைக்கு வா என்று அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கிறேன். 

நல்ல வாசிப்பாளி. எந்திரக்கணக்காய் வாசித்துக் குவித்தவள். பழைய மாதிரி வாசிப்பதில்லை தற்போது.

நன்கு எழுத வரும். ஆனால் எழுதுவதில்லை. 

என்ன செய்வது என்று குழம்பிக் கிடந்த பொழுதொன்றில் இருவரும் NCBH செல்ல வேண்டியத் தேவை வந்தது. இரண்டு மூன்றுமுறை”கீதாரி” யை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாய் இருந்தாள். பார்த்துவிட்டேன். 

அவளுக்கேத் தெரியாமல் அதை வாங்கி “படி, தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லா இருக்கும் என்று சொன்னேன்.

ஒரு அழகான ’ரைட் அப்’ கொடுத்திருக்கிறாள். ஒரு ரைட் அப் எப்படி தொடங்கப்பட்டு எப்படி நகர வேண்டுமோ அப்படி நகர்கிறது.

ஒரு தம்ளர் தண்ணீர்தான் . குற்றல நீர் வீழ்ச்சியையே அவளால் கொண்டுவந்து தரமுடியும் அவளால்.

இனி வாங்கிக் குவித்து வாசிக்க வைக்க வேண்டும்.

என் வீட்டிலிருந்து பெண்ணொருத்தி எழுதுகிறாள் என்ற திமிரோடு அதைப் பந்தி வைக்கிறேன். வாசித்து வாழ்த்துங்கள். மகிழ்ந்து நன்றி சொல்வேன்.

**********************************  


NCBH புத்தக நிலையத்தில் இந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் பார்த்துப் பின் வைத்துவிட்டேன். "சு.தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லாயிருக்கும், படி பாப்பா" என்று தோழர்.இரா எட்வின் நூலை வாங்கிக் கையில் திணித்தார். பத்து நாட்கள் பொறுத்திருந்து கையில் எடுத்தேன் 
இன்று காலை 10 மணியளவில். இரு பிள்ளைகளுக்கும் விடுமுறை என்பதால் நானும் விடுப்பில்..ஒரு கையில் கீதாரியும் மறுகையில் தேநீர்த் தயாரிப்புமாய் 11/30 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்அரிசியுமாய் , 12 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்கரண்டியுமாய் சமையலில், 12/30 மணி..இப்படிவலது மாறினாலும் இடது மாறாமல் முழுவதும் படித்து முடித்தபோது 1/45.படித்து முடித்து ஒருமணிநேரம் கடந்துவிட்டது.ஆனால் புத்தகம் இப்போது இருகைகளிலும்.மூடி வைக்க மனமில்லை.வாழ்த்துச் சொல்லவா?கண்கலங்கி நின்ற வரிகளுக்காக வைது தீர்க்கவா?சொல்லுங்கள் தோழி சு.தமிழ்ச்செல்வி

Saturday, September 16, 2017

நானூறு தேவதைகளின் தகப்பன்

மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன்.
சந்தியா தலைமையில் ஐந்தாறு குட்டித் தேவதைகள் அறைக்குள் படை எடுக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் பேச ஆரம்பித்தால் நரசிம்மராவே சிரிப்பார். பார்த்த மாத்திரத்தில் இறுக்கம் ஓடிவிட்டது.
“வாங்ங்ங்க... வாங்ங்ங்க”
“சார், எனக்கு பின்னடி உக்காந்திருப்பாள்ள...”
“இப்படி கிட்டக்க வாங்க மேடம்” என்றவாறே பிள்ளையை இடுப்போடு அணைத்தவாறே, “ ம்ம்ம், சொல்லுங்க. என்ன செஞ்சா அவ உங்கள”
“தலையிலேயே அடிக்கிறாங்க சார். ஒரு தாட்டினா பரவாயில்ல. அடிச்சுக்கிட்டே இருக்கா. இப்ப வாங்க , என்னானு கேளுங்க”
“ இதுக்குத்தான் இத்தன எரும வந்தீங்களா? ( எருமை என்றால் தேவதை என்பது என் பிள்ளைகளுக்குத் தெரியும்)”
“அதுக்கு எதுக்கு நான் வந்துக்கிட்டு. அவளுக்கு நான் உன் ப்ரண்டுன்னு தெரியாம இருக்கும். “
“ம்”
“நேரா போ”
“ம்”
“போயி, நான் எட்வினோட ப்ரண்டு. என்ன வம்பிழுத்தா எட்வின் வருவான். அடிப்பான்னு சொல்லு போ”
போய்விட்டார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து நான் வகுப்புகளைச் சுற்றிப் பார்க்க கிளம்புகிறேன். மரத்தடியில் குழந்தைகளை அமரச் செய்து தம்பிகள் அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் எதையோ வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களோடு நிற்கிற போது அந்த தேவதைப் பட்டாளம் வருகிறது.
“என்ன சாமி, சொன்னியா?”
“சொன்னேன்”
“என்ன சொன்ன?”
“நான் எட்வினோட ப்ரண்டு. ஏங்கிட்ட வம்பு வச்சுகிட்டா அவன் வருவான், அடிப்பான்னு சொன்னேன்”
“ஐ, அப்புறம்?”
“அவ எட்வின் எனக்கும் ப்ரண்டுதான் எனக்கும் வருவான் சொல்றா. வந்து என்னான்னு கேளுங்க”
அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் அதிர்கிறார்கள்.
நானூறு தேவதைகளின் அப்பன் நான்.
( ஹெட் மாஸ்டர அவன் இவன் என்று சொல்லலாமா என்று யாருக்கேனும் நெருடல் வருமெனில் இந்த தேவதைகளின் அப்பனிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை. ரொம்ப உறுத்துமெனில் அவர்கள் என்னை உதறிச் செல்லலாம்)

Saturday, September 2, 2017

கவிதை 082

நீங்கள் கொடுத்த பாடத்திட்டம்தான்
நீங்கள் கொடுத்த புத்தகங்கள்தான்
நீங்கள் கொடுத்த கேள்வித்தாள்தான்
நீங்கள் கொடுத்த தாளில்தான்
நீங்கள் குறித்து கொடுத்த நாளில்தான் நீங்கள் அனுப்பிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்தான் எழுதினாள்
நீங்கள் அனுப்பிய ஆசிரியர்கள்தான் திருத்தினார்கள்
இத்தனைக்குப் பிறகுதான் இவ்வளவு எடுக்கிறாள்.
நீங்கள் மதிப்பிட்ட உங்கள் பிள்ளையைத்தான் அவன் தகுதி இல்லாதவனு சொன்னான்
நீ போட்ட மதிப்பெண் செல்லாதுன்றான்
நீ போட்ட மதிப்பெண்ணை அவன் அசிங்கப் படுத்தியதும் குழந்தை நாண்டுக்கறா
அசிங்கம் பார்க்க நமக்கேது நேரம்
எம் எல் ஏ ஓடிப்போயிடப்போறான்
அவனக் கவனி

Sunday, July 30, 2017

வந்து சந்திக்கிறேன்...



இது நடந்து 25 ஆண்டுகள் இருக்கும். ஈரோட்டில் கலை இரவு. உரையாற்ற வேண்டிய யாரோ கல்ந்துகொள்ள இயலாத காரணத்தால் மாற்று உரையாளனாய் கலந்து கொள்கிறேன்.
தோழர் முத்து சுந்தரம் நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார். பேசி முடித்துவிட்டு இறங்கியதும் கை கொடுக்கிறார். வெடவெடன்னு கை காலெல்லாம் உதறுகிறது. காரணம் RMS என்ற அந்தப் பேராளுமையின் ஆட்டோகிராப் வாங்கிவிட மாட்டோமா என்று மனது அலைந்து கொண்டிருந்த நேரம். பக்கத்தில் நிற்பதையே பிறவிப் பெரும் பயனாய் நினைத்தால் என் ஹீரோ என் கையைப் பிடித்தப் பிடி நழுவாமல் என் உரையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
அன்றையத் தேதியில் மேடை உலகின் உச்சத்தில் இருந்த ஒரு உரையாளுமை மேடையில் நடை பழகிக் கொண்டிருந்த ஒரு துரும்பொத்த என்னிடம் அவ்வளவு இயல்பாக பெசியது என்னை பிசைந்து போட்டது. ‘கன்வின்ஸ் பன்ன முயற்சிக்கிறீங்க தோழர். குரல் நெகிழ்ந்து அதற்கு ஒத்துழைக்கிறது. உடையமல் குரலை உச்சத்திற்கு கொண்டு போகிறீர்கள். பெரிசா வருவீங்க’ என்பது மாதிரி சொல்கிறார்.
யாருக்கு வரும் இப்படியொரு மனசு. எல்லோரும் கேட்கிறார்கள் , ‘எப்படி எட்வின் நாலு வார்த்த நல்லா பேசினாலே இப்படி இளைஞர்களைக் தோளில் தூக்கிக் கொண்டாடுகிறீர்களே’ என்று.
அது உண்மையெனில் அந்த ஒரு சொட்டு ஈரத்தை அந்த இரவில் அந்தப் பெருஞ்சுனையில் இருந்துதான் எடுத்து வந்திருக்க வேண்டும். செலவழிக்க செலவழிக்க தீர்ந்துபோகாமல் என்னிடம் ஈரம் சுரப்பதற்கு ஒரே காரணம் அது முத்து சுந்தரம் என்னும் சுனையின் துளி.
அப்போது எங்களது சங்கத்தின் மாநில அலுவலகத்தின் கீழ்ப் பகுதியில்தான் குடியிருந்தார். அடிக்கடி என்பதைவிட மாதம் மூன்று முறையேனும் சென்னை செல்லும் வழக்கத்தில் இருந்த நேரம் அது. ஒருமுறை அப்படித்தான் நுங்கம்பாக்கம் ரயிலடியில் இறங்கி அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்குகிறேன்.
இயற்கை உபாதை ஆரம்பமாகிறது. ஆட்டோ பிடித்து அலுவலகம் போனால் பூட்டிக் கிடக்கிறது. அலுவலக செயலாளர் ரவி எங்கோ போய்விட்டார். பொதுக் கழிவறையும் அந்தப் பகுதியில் கிடையாது.
அப்போது வீட்டில் இருந்து எட்டிப்பார்த்த தோழரின் இணையர் ’என்ன எட்வின் ரவி இல்லையா? வாங்க உள்ள’ என அழைத்து உட்கார வைத்து தேநீர் தருகிறர். எனக்கோ கலக்குகிறது. கேட்கவும் கூச்சம்.
எனது அவஸ்தையைப் புரிந்துகொண்ட தோழர் ‘என்ன தோழர் ரெஃப்ரெஷ் பண்ணனுமா. போங்க’ என்று வழிகாட்டுகிறார். நான் வெளியே வருவதற்குள் தோழர் RMS வந்துவிட்டார். தோழர் நடந்ததை சொன்னதும் கடகடவென சிரித்தவாறே “டாய்லெட் போகனும்னு சொல்ல வேண்டியதுதானே எட்வின்’ என்கிறார்.
.நீங்க இல்லையா அதனாலதான் என்று முடிப்பதற்குள் கன்னத்தில் அறை விழுகிறது எனக்கு.
தோழமைக்குள் இதுமாதிரி விஷயங்களில் கூச்சம் கூடாது என்று கத்துக் கொடுத்தது அந்தச் செல்ல அறை.
ஒருமுறை DPI செல்கிறேன். இப்போதைய தொடக்கக் கல்வி இயக்குனரான கார்மேகம் சார் அப்போது JD HS ஆக இருந்தார். அவரது அறைக்குள் நுழைகிறேன். உள்ளே அப்போது ஈரோட்டில் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த அருள்முருகன் சார் வரவேற்கிறார். இப்போது அவர் இணை இயக்குனராக இருக்கிறார்.
எப்படிப் போகிறது DEO பணி என்று கேட்கிறேன். பணி எல்லாம் சிறப்பாகத்தான் போகிறது என்றும் ஊதியம் பெறுவதில்தான் இழுபறி நிகழ்வதாகவும் சொன்னார். அவரது நேர்முக உதவியாளர் பயங்கர ஸ்ட்ரிக்ட் என்றும் எல்லா ஆவணங்களையும் கொடுத்தால்தான் ஊதிய ஃபைல் அவரிடம் இருந்து நகருமென்றும் பெருமையோடு சொன்னார்.
ஆக அவரது அதிகாரிக்கான ஊதிய ஃபைலையே சரியாக இருந்தால்தான் நகர்த்தக் கூடியவர். அவ்வளது கறார்.
எத்தனைப் பெற்றோம்?
எத்தனை கற்றோம்?
அவரது சங்கப் பணிகளும் தியாகமும் பற்றிப் பேசுவதற்குரிய தகுதி பெறவே எனக்கு இன்னும் கொஞ்சகாலம் ஆகும்.
போய் வாருங்கள் RMS. வந்து சந்திக்கிறேன்

Friday, June 16, 2017

வேண்டல்....

எமது பள்ளியில் எளிய அளவில் ஒரு வாசிப்புக் கூடம் ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.
உங்களிடம் உள்ள பழைய குழந்தைகள் நூல்களை அனுப்பி உதவுங்களேன்
இரா எட்வின்
தலைமை ஆசிரியர்
அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி
சமயபுரம் 621112
செல் 984259759

Monday, June 12, 2017

குறைந்தபட்சம் குடிநீரையேனும்

நேற்று நெய்வேலியில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் உரையாற்றிவிட்டு வந்தேன். அது குறித்து பிறகு பேசலாம். CITU வின் இரண்டாவது சுரங்கக் கிளை வெளியிட்டிருந்த துண்டறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் பத்துப் பதினைந்து கோரிக்கைகள் இருந்தன.
ஏறத்தாழ இத்துப்போன நிலையிலிருக்கும் லாரியில் சுரங்க ஊழியர்களுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது. இதனால் நீரோடு இரும்புத்துருவும் கலந்து வந்து விடுகிறது. அதனால் ஊழியர்களின் உடல்நலம் ம்கவும் பாதிக்கப் படுகிறது. எனவே சில்வர் கண்டெய்னர்களி குடிநீர் கொண்டுவந்து வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாத நிர்வாகம் இப்போதேனும் அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை இருந்தது.
சுரங்கத்திற்குள் கரியோடு கரியாய் வெந்து சாகும் ஊழியர்களை பலமுறை இதற்காக கோரிக்கை வைக்க வைத்ததே பாவம்.
குறைந்தபட்சம் நல்ல குடிநீருக்காவது நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்

கவிதை 81

கடத்தித் தொலைத்திருக்கலாம்
ஒரு பார்வை வழியாக
தனது மகிழ்ச்சியை
முயற்சித்திருக்கலாம்
திருப்தியா என்று அறிந்துகொள்ளவேனும்
குறைந்த பட்சம்
சொல்லாமல் கொள்ளாமல்
ஜோலி முடிந்ததும் ஓடத் தொடங்கிய ஆண்நாயை
முடிந்த அளவு வைது தீர்த்த பெண்நாய்
தாளவே தாளாமல்
விரட்டிப் போய்
கடித்துவிட்டு நகர்ந்தது பின் தொடையை
காயத்தை நக்கத் தொடங்கியது
ஆண்நாய்
புணர்வு செமபோல
என நினைத்தபடி

Saturday, May 27, 2017

மக்கள் சொத்து...

இரண்டு நாட்களுக்கு முன்னால் Sarangapani Narayanasamy சாரை வழியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் நெகிழ்த்தியது.

அந்தக் குடும்பத்தின் தலைவரும் இறந்து தலைவியும் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் வீட்டிற்கு எல்ஐசி பிரிமியம் இரண்டு தவணைகளை கட்டுமாறு கடிதம் போயிருக்குறது.

ஒரு விவரமும் புரியாத நிலையில் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு எல்ஐசி அலுவலகம் வந்திருக்கிறாள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இறந்து போனவரின் குழந்தை.

அவர் 5 லட்சத்திற்கு பாலிசி எடுத்திருந்திருக்கிறார். மரணம் வரைக்கும் ஒழுங்காகக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் பாலிசி எடுத்திருந்தார் விவரம் யாருக்கும் தெரியாது.

சாரங்கபாணி சாரும் அவரது நண்பர்களும் ஒரே வாரத்தில் பணத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த LIC யவாப்பா தனியாருக்குத் தரத் துடிக்கிறீங்க பாவிகளா

ரெண்டு பீரியட் அளவுக்கு குறையாமல் நடக்கிறேன்

இன்றைய நடைபயிற்சியைத் தொடங்குவதற்காக வண்டியை நிறுத்தும்போது நடையை முடித்துவிட்டு வண்டியை எடுக்க வந்த இளம் ஆசிரியரோடான உரையாடலில் சொன்னான்,
"தெனமும் ரெண்டு பீரியட் அளவுக்கு குறையாமல் நடக்கிறேன் சார்"
குறைந்தது ஒன்றரை மணிநேரம் ஒவ்வொரு நாளும் நடக்கிறானாமாம்

கவிதை 80

ஓய்வா என்கிறாய்
ஓய்வுதான் என்கிறேன்
ஓய்விலிருந்த நான்
ஓய்விலிருந்தபடி
ஓய்வுதான் என்றவனிடம்
ஓய்வெடு என்கிறாய்
அழுத்துகிறேன் உன் எண்ணை

போதும் மகளே.

யவனிகாவின் கவிதை குறித்து மயிலாடுதுறையில் பேசும்போது Kani Mozhi G சொன்ன இரண்டு விஷயங்கள் என்னை நெகிழ்த்தின
1) Yavanika Sriram எந்த மண்ணையும் சுவிகீரித்துக் கொள்வதன் மூலம் அவரது கவிதைகள் எந்த நிலத்திற்கும் பொருந்திப் போகிறது.
இது முழுக்க முழுக்க உண்மை. அதுமட்டும் அல்ல யவனிகா எந்த மண்ணின் உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏன் நடுத்தர மக்களையும் சுவீகரிப்பதன் மூலம் இவரது கவிதைகள் எல்லா மக்களோடும் பொருந்திப் போகிறது. இதை அங்கேயே சுட்டவும் செய்தேன்.
என் தோழர்களைக் கொண்டாடும் யாருக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன் என்ற வகையில் கனிமொழிக்கென் அன்பு
2) எட்வினைப் பற்றி நினைக்கும் தோறும் அவர் ஒரு அணுக்கமான அப்பனாகவே எனக்குப் படுகிறார் என்றாள் பிள்ளை.
போதும் மகளே..

கவிதை 79

உறவினர் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்
நண்பர்கள் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்
உணவு விடுதிகளில் சாப்பிடுகிறீர்கள்
நேற்றும் இன்றும் தலித் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
இரண்டே இரண்டு வித்தியாசங்களோடு
அங்கங்கு சமைத்ததைத்தான் அங்கங்கு உண்டீர்கள்
தலித் வீடுகளைத் தவிர என்பது ஒன்று
கடைச் சாப்பாட்டை சாப்பிட
தலித் வீடுகளுக்கு போகும்போது மட்டும்தான்
இவ்வளவு கேமராவோடு போகிறீர்கள் என்பது இரண்டு

Monday, May 22, 2017

யவனிகா எனும் பேராளுமை

நேற்று மாலை மயிலாடுதுறை AVC கல்லூரியில் தன் கவிதைகள் குறித்தான ஆய்வுரைகளுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றினார் தோழன் Yavanika Sriram.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் 100 கிலோமீட்டர். ஒன்னேமுக்கால் மணிநேரம்தான் பயணம்.

கீழத்தஞ்சை பகுதியில் 50 கிலோமீட்டர் பயணத்திற்கு ரெண்டுமணி நேரமாகிறது.

காரணம் அங்கு சாலைகள் நேராகவும் இங்கு வளைந்து வளைந்துமாயும் இருக்கிறது.

இதற்கு காரணம் சாலை கட்டமைப்பிற்கு அங்குபோல் இங்கு நிலங்களை கையகப் படுத்த முடியாது. காரணம் அங்கு சாமானியனிடமும் இங்கு ஆண்டைகளிடமும் நிலமுருப்பதுதான்.

ஆக, நாடு நல்லா இருக்கனும்னா நெலம் சாமானியர்களிடம் இருக்கனும்

இவ்வளவு எளிமையா சொல்லமுடியுமா யவனிகா.

என் அணைப்பும் முத்தமும்

தம்பிகள் துவாரகா சாமிநாதன் முருக தீட்சண்யா Kavingnar Thambi மூவருக்கும் என் அன்பும் முத்தமும்

யாராவது இருக்கிறீர்களா என்ன?

நேற்று வல்லத்தைக் கடந்து போகும்போது தாஜூபாலும் அவரது கவிதைகளும் என்னை தொந்தரவு செய்யத் தொடங்கவே அதை பதிவாக்கினேன்.

அதற்குப் பின்னூட்டமிட்டிருந்த தோழர் Sundarappa Kamaraj எந்தெந்த ஊரைக் கடக்கும்போதெல்லாம் யார் யார் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை என்றொரு பட்டியல் போட்டிருந்தார்

பெரம்பலூரை நினைத்தால் உன் பெயரும் கூடவே நினைவுக்கு வருகிறது எட்வின் என்று யாராவது இருக்கிறீர்களா என்ன?

Sunday, May 21, 2017

வல்லம் தாஜுபால்

வல்லம் தாண்டிக் கொண்டிருக்கிறேன். வழக்கம் போலவே தோழர் வல்லம் தாஜுபாலின் நினைவு வருகிறது.

ரொம்ப காலமாச்சு தலைவனை சந்திச்சு.

எனக்குப் பிடித்த என் தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். சன்னமான கவிதைத் தெறிப்புகளால் அரங்கங்களை வசப்படுத்திக் கொள்வார்.

"தேசியக் கொடியில்
 வெள்ளைக் கொஞ்சம்
விலகிக் கொண்டதால்
பச்சையும் காவியும்
 அடித்துக் கொள்கின்றன"

என்று நச்செனப் போடுவார். கொடிப் பிரச்சினை வந்தபோது பாரதி எழுதிய

"பட்டுத் துகிலெனலாமோ
 அதில்
 பாய்ந்து சுழற்றும்
 பெரும் புயற் காற்று
 மட்டு மிகுந்தடித்தாலும்
 அதை மதியாத உணர்வுகொள்
 மாணிக்கப் படலம்
 இந்திரன் வச்சிரம் ஓர்பால்
 அதில் எங்கள் துலுக்கர்
 இளம்பிறை ஓர்பால்"

என்ற கவிதையோடு பொருத்திப் பார்ப்பேன்

"காட்பரீஸ்
 கம்மர்கட்
இனிப்பிலும்
வர்க்க பேதம்" என்பார்.

நுட்பமான கவிஞர்.

யாரேனும் அவரைச் சந்தித்தால் கேட்டதாக சொல்லுங்கள் தோழர்

அனுமதி மறுப்பீர்கள் எனில்....

இறுக்கிப் பிடித்த வாளோடும் நெஞ்சுநிறைய குரோத்தோடும் மனிதத்திற்கு எதிரான வன்மமும் அசிங்கமும் கலந்த குரலோடும் நகரும் காக்கி பேரணிக்கு அனுமதிப்பீர்கள்.

நடந்து முடிந்த இனப்படுகொலையில் செத்துப்போன என் மக்களுக்காக கூடி மெழுகு கொளுத்தி அழுது அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பீர்கள் எனில் நீங்களும் உங்கள் அதிகாரமும் அழிவின் விளிம்பிற்கு அருகே போய்விட்டீர்கள்

நாசமாய் போவீர்கள்

Tuesday, May 16, 2017

திருப்பிக்கொடு என்றல்லவா....

ஜெயலலிதா அவர்களைக் குற்றவாளி என்று சொன்னது நீதிமன்றம்

அவரை பெங்களூரு சிறையிலே அடைத்தது நீதிமன்றம்

அதற்கு எதிராக பேருந்துகள் எரிந்தன, தாக்கப்பட்டன. தனியார் பேருந்துகளும் இயங்கமுடியாத நிலையை ஆளுங்கட்சியினர் செய்தனர்

வெளியே நடமாடவே முடியவில்லை மக்களால். மருத்துவமனைக்குப் போக முடியவில்லை நோயாளிகளால்

இவை யாவும் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதற்காக நிகழ்ந்தவை

எனில், நீதிமன்றத்திற்கு எதிரானவை

அப்போது மொனமாக இருந்த நீதிமன்றம் இப்போது தங்களிடமிருந்து பிடிக்கப்பட்ட பணத்தை திருப்பிக் கேட்டுப்  போக்குவரத்து தொழிலாளிகள் போராடும்போது  வேலைக்குத் திரும்பவில்லை எனில் எஸ்மா பாயும் என்றெல்லாம் மிரட்டுவது வருத்தமளிக்கிறது

ஊழியனிடமிருந்து எடுத்த பணத்தை அவனுக்கு கொடு என்றல்லவா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுருக்க வேண்டும்தி

Friday, May 12, 2017

முடியும் பிள்ளைகளே

அவரையும் இவரையும் சொல்ல த் தேவையே இல்லை. நம்மை வைத்தே உங்களோடு உரையாட முடியும்.
என்னை மிக நல்ல ஆசிரியர்களுள் ஒருவனாகவே என் பிள்ளைகள், சக ஆசிரியர்கள், இதுவரையிலுமுள்ள எனது ஆசிரியர்கள் எல்லோரும் கருதுகிறார்கள். பேசவும் செய்கிறார்கள்.
கல்வித்துறை உயரதிகாரிகள் சிலருக்கும் இதுதான் மதிப்பீடு.
கொஞ்சம் மிகை எனினும் உண்மைதான்
கேட்கிறமாதிரி உரையாற்றுவதாயும், வாசிக்கிற மாதிரி எழுதுவதாகவும் சொல்கிறார்கள். சிலர் நான் நிறையவும் ஆழ்ந்தும் படிப்பதாக சொல்கிறார்கள்.
இவ்வளவு ஏன், கண்டுகொள்ளப்படாத சிந்தனையாளன் என்கிறார்கள்.
ஏறத்தாழ 10 நூல்கள் இதுவரை எழுதியிருக்கிறேன். எல்லாம் சரியாய் போய் சேர்ந்திருக்கின்றன.
இரண்டு நூல்கள் அச்சில்.
தினமணி ஆசிரியர் என்னை சந்திக்க விரும்புவதாக எழுதுகிறார்.
கொஞ்சம் மிகையாய் மதிபிடுகிறார்கள் என்றாலும் இவை உண்மைதான்.
இன்னொரு விஷயம் ஒரு மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரான நான் இந்த ஜூன் முதல் தலைமை ஆசிரியராக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவும் ஏன் என்றால்,
நான் பத்தாம் வகுப்பில் பெற்ர மதிப்பெண் 311
பன்னிரெண்டாம் வகுப்பில் 575
இவ்வளவு குறைவாக பெற்ர என்னாலே இவ்வளவு முடியும் எனில், என்னைவிட புத்திசாளிகளான உங்களால் எதைக் கடந்தும் பயணிக்க முடியும்
இன்று கிடைக்கும் மதிப்பெண் எதுவாயினும் கொண்டாடுங்கள் குழந்தைகளே.
தேர்ச்சியே இல்லை எனினும் விடுங்கள். இன்ஸ்டண்ட் எழுதிக்கலாம்.
இதை மனதில் வையுங்கள் மக்கு எட்வினால் முடியும் எனில் ஏன் உங்களால் முடியாது?
முடியும் பிள்ளைகளே

நமது போராட்டம்

ATM அட்டையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம் என்ற தனது முடிவை SBI திரும்பப் பெற்றுக் கொண்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள்
இது தற்காலிகமானதாகத்தான் இருக்கும்
போக வங்கியில் உள்ள நமது பணத்திற்கு அவர்கள் வட்டி தருவதற்கு பதிலாக நமது பணத்தைப் பாதுகாப்பதற்காக நாம் கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை சமீபத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது
உடனே நாமென்ன செய்வோம்?
இந்தக் கட்டணங்கள் இல்லாத தனியார் வங்கிகளை நோக்கி நகர்வோம். அவர்களும் நம்மை தேனொழுக வரவேற்று உபசரிப்பார்கள்.
விளைவு, பையப் பைய பொதுத்துறை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை படிப்படியாக இழந்து தேக்க நிலையை அடைந்து மூடப்படும் நிலை வரும்
இந்த நிலைக்குப் பிறகு தனியார் வங்கிகள் கட்டணங்களை பன்மடங்கு ஏற்றினாலும் நமக்கு வேறு போக்கிடம் இருக்கப் போவதில்லை
ஆனால் இது உலகமயம் மற்றும் தாராளமயமாக்கலின் விளைவு. எனில், நமது போராட்டம் அவற்றிற்கு எதிரானதாகத்தான் இருக்க வேண்டும்

எந்த அளவிற்கு அறமற்று

பிஜேபி தலைவர்கள் எந்த அளவிற்கு அறமற்றுப் பேசுவார்கள் என்பதற்கு உதாரணம்
திருமதி தமிழிசை: கலைஞரது வைரவிழாவிற்கு எங்களையும் அழைக்க வேண்டும்
திரு ஸ்டாலின் : திராவிட இயக்கங்களை அழிக்க வேண்டும் என்று போராடுபவர்களை எங்கள் மேடையில் அமர்த்தி சிரமப்படுத்த விரும்பவில்லை. அதனால்தான் பிஜேபியை அழைக்கவில்லை
மாண்புமிகு பொன்.ரா: இது அரசியல் ஆதாயத்திற்காக நடக்கும் விழா. எனவே அதில் பிஜேபி பங்கேற்காது

Wednesday, May 10, 2017

கேள்வி கேட்ட மகளுக்கு

வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராசா அவர்களிடம் ஒரு இளைய குழந்தை கேட்டார்
"இந்த அவையில் இருப்பவர்களில் எத்தனைபேர் தங்கள் குழந்தைகளை பொதுப் பள்ளியில், தமிழ் வழியில் படிக்க வைக்கிறார்கள்?"
இதற்கு கிடைத்த பதில் மீதான விமர்சனத்தைக்கூட வைக்கத் தேவை இல்லை.
இந்த கேள்வி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. இந்தக் கேள்வி தமிழ்ச் சூழலில் புதுசு.
எல்லாக் கட்சியினரிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும். கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றில் குறிப்பாக மொழி குறித்து நடக்கும் நிகழ்வுகளில் இந்தக் கேள்வி இன்னும் கூர்மையாக இன்னும் சூடாகக் கேட்கப்பட வேண்டும்.
அது அனைத்து இயக்கங்களிலும் உள்ள இளைஞர்களை தம் குழந்தைகளை பொதுப்பள்ளியில் சேர்க்க வைக்கும்
அதுதான் தேவை
கேள்வி கேட்ட மகளுக்கு அப்பனின் வாழ்த்து

அடிப்படையில் தவறு

வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ஒரு பெண்ணின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தான் ஒரு மத்திய அமைச்சரென்றும் ஆகவே தனது மகள் கோட்டாவில் சலுகை கேட்பது தவறென்றும் கூறினார்
மேலும் அப்படிக் கேட்பது தனக்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் அவமானமென்றும் கூறியவர் ராசாவுக்கு கிடைத்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்வரை இருக்கிற நிலை தொடர வேண்டும் என்றும் கூறினார்
இது அடிப்படையில் தவறு
மத்திய அமைச்சரான பிறகு அவர் பெரம்பலூருக்கு செய்திருக்கிறார்
பெரம்பலூரின் மரியாதைக்குரிய அடையாளம் அவர்
ஆனாலும் பெரம்பலூர் பொதுத் தொகுதியானதும் அவர் இங்கே நிற்க முடியவில்லை என்பது சாதியின் கோரமென்பதுதான் அவரும் நாமும் அவமானப்பட வேண்டிய விஷயம்

கவிதை 78

நடுக்காட்டில் ரெசார்டுகளில் நீ
கொண்டு வந்து குவிக்கும் டூரிஸ்டுகளிடம் 
மனுஷவாடையே காணாத காடென்று
புழுகிக் கொழுக்க
எங்க காட்டை இழக்கனுமா நாங்க?

Tuesday, May 9, 2017

மார்க்சிஸட் கட்சிக்கு கோரிக்கை

இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் தோழர் யெச்சூரி பாராளுமன்றத்தில் இருப்பதென்பது எவ்வளவு சரியானது என்பதைக் கடந்து எவ்வளவு அவசியம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஏதோ இது அவர்கள் கட்சி விசயம் என்று வாளாயிருந்துவிடாமல் மூன்றாவது முறையும் அவரை மாநிலங்களவைக்கு அனுப்புமாறு மார்க்சிஸட் கட்சிக்கு கோரிக்கை வைப்போம்.
பிடிக்காதவர்கள் மௌனமாய் கடந்துவிட வேண்டுகிறேன்

ஒரு சர்வ கட்சி கூட்டம் அவசியம்.

கீழ்க்கோர்ட் வரைக்கும் வந்துவிட்டார்கள். ‘தமிழைப் புழங்க தடை விதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோமா? அல்லது தடை வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோமா?
தேர்தல் கூட்டணி என்பது வேறு, மொழிப் பாதுகாப்பு என்பது வேறு. மொழி அழிப்பு என்பது இன அழிப்பின் தொடக்கம்.
ஒரு சர்வ கட்சி கூட்டம் அவசியம். கூடுங்களேன். இடது சாரிகள் இது விஷயத்தில் ஒரு சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டினால் என்ன?

Monday, May 8, 2017

உரையாடலைத் தொடங்குவோம்

கல்வியில் மாற்றம் செய்வதெல்லாம் பலனைத் தராது மாற்றுக் கல்வியே இன்றைய தேவை என்று தோழர் Rabeek Raja இன்று எழுதியிருந்தார். இதுதான் மிகச் சரியான பார்வை. இத்ற்காகத்தான் அவரவரும் அவரவரால் இயன்ற அளவு எதையாவது செய்து கொண்டிருக்கிறோம்,. ஆனால் பலன் இல்லை. என்ன காரணம்? சிதறிக்கிடக்கிற சிறுபான்மைத் திரளாகிப் போனோம்.
கருத்தாலும் கரத்தாலும் இந்தத் திரள் ஒன்றிணைய வேண்டும். நல்ல இயக்கங்களோடு உரையாடவும் உறவாடவும் தொடங்க வேண்டும். மாற்றுக் கல்விக்கான தேவைக்காக களமேகும் அதே வேளையில் மாற்றுக்கல்விக்கான கட்டமைப்பை சிலபஸை கண்டடைய முயற்சி செய்ய வேண்டும்.
“மாற்றுக் கல்வி” எது என்பதை வடிவமைப்பது, முன்வைப்பது, விவாதிப்பது, திருத்தங்களை தொடர்ந்து ஏற்பது, அது குறித்து பொது வெளியில் பேசுவது அதற்கான தேவைப்படும் போராட்டங்களை கையெடுப்பது என்கிற நடைமுறைக்கு வரவேண்டும்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் இதற்கான முயற்சியை தோழர் Varthini Parvatha எடுத்திருந்தார்.
அவர் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்திலும் ரபீக் ராஜா கலந்து கொண்டார். ஸ்ரீரசா, Marx Pandian போன்றோர் கலந்து கொண்டோம்.
ஆழமான கருத்துக்கள் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. நான் கலந்துகொண்ட மிக நல்ல கூட்டங்களுள் அதுவும் ஒன்று.
சோகம் என்னவெனில் அதை அதற்குமேல் முன்னெடுக்க இயலாது போனது. ஆனாலும் அந்த முயற்சிக்காக தோழர் பர்வதா கொண்டாடப் பட வேண்டியவர். அன்றைய விவாதங்களின் மினிட்ஸ் கையேடாகவே அமையும்.
அமைப்புகளும் இந்த விஷயத்தைப் பேச வேண்டுமென்றால் இவர் போதும் என்ற நிலையிலிருந்து மாறி இறங்கி வரவேண்டும் . அல்லது இந்த ஆண்டு இந்த மாதத்தில் என்ன கோரிக்கைக்காக எந்த மனிதரைக் கொண்டு மாநாடு அல்லது பேரவை போட்டீர்களோ அடுத்த ஆண்டும் அதே மாதத்தில் அதையேதான் தொடர வேண்டியவர்களாக இருப்பீர்கள்
இந்தக் கருத்துக்களோடு உடன்பாடு உள்ளோர் உரையாடலைத் தொடங்குவோம்

கவிதை 77

அதுவாகவும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
அதுவாகவே இருக்கட்டும்

கவிதை 76

கனவே வேண்டாமென்றெல்லாம் சொல்லக்கூடாது நீ
எதையேனும் தொலைப்பதற்கு நான் வருகிறமாதிரி
கனவு வரவேண்டும் உனக்கு
அதில் எதையேனும் தொலைத்து தொலைத்துவிட்டு
கவிதை எழுத வேண்டும் நான்

Saturday, May 6, 2017

கவிதை 75

நீ கொடுத்த ரெண்டாயிரத்தில்
மருந்துக்கு
ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பது போக
பாக்கெட்டில் அறுவது
மூக்கைக் கடந்துவிடாமல்
உசிரைக் கட்டிப்போட்டுள்ளன அந்த மருந்துகளென்ற வகையில்
நீயெனப் படுவது
என் உசிரும் அறுவது ரூபாயும்

Friday, March 31, 2017

025

இயற்பியல்
வேதியியல்
உயிரியல், கணிதம்
முதல் பிரிவில்

இயற்பியல்
வேதியியல்
கணிதம், கணினி
இரண்டாம் பிரிவில்

வரலாறு
பொருளியல்
வணிகவியல், கணிதவியல்
மூன்றாம் பிரிவில்

கணினி
தட்டச்சு
தையல் என நீளும்
தொழிற் பிரிவுகள்

இவற்றோடு
எல்லாப் பிரிவிற்கும்
சேர்க்க

தமிழ் அல்லது விருப்ப மொழி
ஆங்கிலம்
மற்றும்
நன்கொடை

Wednesday, March 29, 2017

விவசாயிகள் போராட்டம் என்பது எமக்குமானது

எழுபதுகளில் ஒருமுறை நடந்த ஆசிரியர் போராட்டத்தை அன்றைய அரசு கண்டுகொள்ளவே இல்லை என்றும் இறுதியாக ஆசிரியர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் ஒருநாள் போராட்டத்தில் இறங்கியதாகவும், அடுத்த நாளே பேச்சு வார்த்தைக்கு அரசு ஆசிரியர்களை அழைத்ததாகவும் கேள்வி பட்டிருக்கிறேன்.
போராடிய எல்லா நாட்களுக்குமான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டு விட்டது. ஆனால் விவசாயிகளுக்கான அந்த ஒரு நாள் இழப்பு இன்றுவரை ஈடு செய்யப்படாமலேயே இருக்கிறது என்பதையெல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லக் கேள்வி பட்டிருக்கிறேன்.
அந்த நன்றிக் கடனுக்காக அல்ல இன்றைய விவசாயிகள் போராட்டத்தை நான் ஆதரிப்பது. எது செய்தும் அவர்களது அந்த ஒருநாள் இழப்பை, தியாகத்தை எங்களால் ஈடு செய்துவிட முடியாது என்பதை நான் அறிவேன்.
இன்றைய விவசாயிகள் போராட்டம் என்பது எமக்குமானது

குழந்தையா இருக்கீங்க....

கடந்த சனியன்று சென்னையில் நடந்த கல்வி குறித்தான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கல்யாணி அய்யாவோடு கலந்து கொண்டது மகிழ்வானதும் பொருளுள்ளதுமான ஒரு தருணம்.
நேற்று அழைத்த அய்யா,
"நேர்மையோடும் மென்மையாகவும் அக்கறையோடும் விவாதங்களை வைக்கிறீர்கள். நல்லா இருக்கு. மாவட்டந்தோறும் நாம இணைந்து பயணிக்கனும். குழந்தையா இருக்கீங்க. படைப்பாளிகள் அப்படித்தான் போல"
என்றார்.
மகிழ்ச்சியா இருக்கு

என் மரணம் தாண்டியும்

"என் மரணம் தாண்டியும் ஆசான் வாழனும் மாப்ள"
"பெரிய மனசுடா ஒனக்கு"
"ஆனா, நான் செத்ததுக்கப்பறம் தாறுமாறா எதனாச்சும் எழுதிடுவாரோனுதான் பயமாருக்கு"
"பயப்படதாடா மாப்ள, ஒன்னப் பத்திதான் அவருக்கு ஒன்னும் தெரியாதே. அப்புறம் எப்படி ஒன்னப் பத்தி எழுதுவார்"
"அவரு தெரிஞ்சத மட்டும் எப்படா மாப்ள எழுதியிருக்கார்"

Sunday, March 26, 2017

ஹையர் செகரட்டரி என்பது...

ஹையர் செகன்டரி என்பது ஒரு இன்டகிரேட்டட் கோர்ஸ்.

+1, +2 என்பதுதான் என்பதுதான் சரி. நாம்தான் 11, 12 என்று அழைக்கிறோம்.

எனில்,

1200 மதிப்பெண்கள் என்பது +1 பாடங்களுக்கும் +2 பாடங்களுக்கும் சேர்த்தானது.

அதாவது +1 தமிழுக்கு 100 , +2  தமிழுக்கு 100

நடைமுறையில் +2 தமிழுக்கு 200 மதிப்பெண்கள் என்று ஆகிறது. இதுவே எல்லாப் பாடங்களுக்குமான நடைமுறை ஆகிறது.

இதில் மாற்றம் செய்து +1 ற்கு 600 மதிப்பெண் +2 ற்கு 600 மதிப்பெண் என்று கொண்டுவரப்பட வேண்டும்

அப்போதுதான் +1 பாடங்களையும் குழந்தைகள் படித்து தெளியும் நிலை வரும்

Saturday, March 25, 2017

கவிதை 74

என்றைய நிலவின் மிச்சம் இன்றைய பிறை?

பேத்தி எனக்களித்த வானம்

வரைந்து கொண்டிருந்ததில் கொஞ்சமாய் கிழித்து எனக்குக் கொடுத்தாள்

"ஏம்பா படத்தை கிழித்த?"

"ஷ்... படமில்ல, வானம்"

"சரி, வானத்த ஏம்பா கிழிச்ச?"

"எல்லா வானமும் எனக்கு வேணாம். நீ கொஞ்சம் வச்சுக்க"

இரண்டாம் மடித்து பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டேன் ஒரு பேத்தி எனக்களித்த ஒரு துண்டு வானத்தை

Friday, March 24, 2017

என்னை என்னுள் அலைய விட்டிருக்கிறீர்கள்




ஒவ்வொரு சிற்றிதழ் வரும்போதும் வாசித்துவிட்டு அதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றும். ஆனால் எழுத வாய்க்காது. இதே நிலைதான் நூல்களுக்கும்.
ஆனால் “சிற்றிதழ்கள் உலகம்” வந்ததும் எழுதுவதற்கான வாய்ப்பும் அமைந்துவிட்டது.
நானும் சிற்றிதழ்களால் வளர்ந்தவன்தான்.
எண்பத்தி ஒன்றாம் ஆண்டு “தேன் மழை”யில்தான் எனது நான்குவரிக் கவிதை ஒன்று வெளி வந்தது. நான்கே நான்கு வரி, எண்ணிச் சொல்வதெனில் ஏழே ஏழு வார்த்தைகள்.
வீடு போகும்போது ஏறத்தாழ இரவு ஒன்பது மணி. வீட்டிற்குள் நுழையும்போதே “ கவிஞரு வராரு. டீயக் குடு” என்றதும் என்னோட அண்ணன் ( மாமா பையந்தான் எனக்கு அண்ணன். மாமா பொண்ணுதான் அக்கா. மாமா வீட்டிலேயே வளர்ந்தவன்) ஒன்னுக்கு எட்டு சைசில் இருந்த புத்தகத்தை (நீள வாக்கில் இரண்டாக மடிக்கப் பட்டிருந்தது) நீட்டினார். வாங்கிப் பார்த்தால் ’தேன்மழை’. புரிந்து விட்டது. எழுத்துக்கூட்டி என் பெயரை ஏழெட்டுமுறை வாசித்தேன்.
சைக்கிளை எடுத்தவனிடம் ‘எங்கடா இந்த நேரத்துல?” என்கிறார் அண்ணான். ராஜாட்ட (பொன்மலை ராஜா) காட்டனும் என்று நகர்ந்தவனிடம் “ அப்படியே பெசிலிக்கிட்டயும் காட்டிட்டு வந்துரு என்றார். இரண்டையும் செய்தேன்.
அந்த ஒரு வாரம் மாமாவின் நண்பர்கள் ரெண்டு ப்ளாக் அக்காக்கள், அத்தைகள், அண்ணன்கள் பாப்பாக்கள் மாமாவோட பணியாற்றும் மாமாக்கள் எல்லோரும் விசாரிக்கிறார்கள்.
அப்படியே விரிகிறது.
நூற்றுக் கணக்கான இதழ்களில் கவிதைகள் பிரசுரமாக தாஸ்னா விழாக்களில் பங்கேற்க அழைக்கிறார்கள்.
88 ற்கும் 90 கும் இடையே நண்பன் ராஜாவோடு இணைந்து “தாகம்” என்ற இதழையும் பிறகு “ மானுடம்” என்ற இதழையும் நடத்துகிறேன். தொடர முடியவில்லை. ஆனால் ஒருநாள் என்னிடம் படைப்பு வாங்குவதற்காக தோழன் சுகனும்வெற்றிப்பேரொளி யும் சமயபுரம் வந்து ஒரு இரவு என்னோடு தங்கி கவிதை வாங்கிப் போகிறார்கள்.
சுகனைப் பற்றி எழுத வேண்டும். நாந்தான் எழுத வேண்டும்.
பிறகு முத்துப் பேட்டையில் நடந்த மேதினப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது இரா காமராசு (Kamarasu Era) "தோழர், ஏன் நீங்கள் ப்ரோஸ் எழுதக் கூடாது?’ என்றார் எழுதினேன். “தாமரை” யில் பிரசுரித்தார்.
இதைப் பார்த்த, அப்போது ‘இளைஞர் முழக்கம்” இதழின் ஆசிரியராயிருந்த தம்பி ரமேஷ் பாபு (Ramesh Babu) ‘ஏன் தோழா, இ.மு க்கெல்லாம் எழுத மாட்டீங்களோ?” என்று கிண்டலடிக்க ஒரு பத்துப் பதினைந்து கட்டுரைகள் இளைஞர் முழக்கத்தில் வந்தன.
அப்புறம்தான் தெரியுமே?
தோழர் சித்தனோடு இணைந்து “யுகமாயினி”. கொஞ்ச காலம் சிவகாசியிலிருந்து யுகமாயினி ரெகுலர் சர்வீசில் பெரம்பலூர் வரும். நாந்தான் தோழன் ரமேஷோடு இணைந்து கவர் போட்டு முகவரி எழுதி அஞ்சல் செய்வேன்.
இப்போது “காக்கைச் சிறகினிலே”.
என்னைப் பொறுத்தவரை சிற்றிதழ்களை மாற்றிதழ்கள் என்பேன். காக்கையை அப்படித்தான் உருவாக்கம் செய்கிறோம்.
தோழர் பொள்ளாச்சி நசன் போலவே தோழர் Krish Ramadasசிற்ரிதழ்களைப் பாதுகாத்து ஆவணப் படுத்தி அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது. சம்பாரிப்பதில் ஒரு பகுதியையும் தனது நேரத்தின் ஒரு பகுதியையும் இதற்காக அவர் செலவு செய்கிறார், அதற்கென் நன்றி.
இதில் இலக்கியத்தைத் தேட வேண்டாம், இது சிற்றிதழ்கள் குறித்த ஆவணம் என்கிறார். இதுதான் முக்கியமானது.
நான் மகிழ அதுமட்டுமல்ல காரணம்,
1) பெரம்பலூர் மனிதர் ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட முயற்சி, அதுவும் பெரம்பலூர் முகவரியோடு. ஏற்கனவே என் பிள்ளை அம்மணி (Chandra Mouli ’கவண்’ என்றொரு இதழை அவ்வப்போது கொண்டு வருகிறான்.
2)என் நண்பர் முருக தீட்சண்யா முருக தீட்சண்யா ஆசிரியர் குழுவில் இருக்கிறார்
3) தோழர் Markandan Muthusamy எழுதுகிறார்
மகிழ்கிறேன். தொடருங்கள் ராதாஸ்.கிருஷ் பக்கம் தொடரட்டும். ஆசிப் அலிக்கு என் அன்பையும் பாராட்டையும் சொல்லுங்கள்.
வெகு காலத்திற்குப் பிறகு என்னை என்னுள் அலைய விட்டிருக்கிறீர்கள்.
அன்பு, முத்தம், வாழ்த்து

போய் வாருங்கள் அசோகமித்திரன் அய்யா


இந்தியா 1948 ஆ அல்லது 1945 ஆ தெரியவில்லை. முந்தா நாள் இரவு அந்த நாவல் குறித்து யுகன் சாரோடு நிறையப் பேசிக் கொண்டிருந்தேன்.

இன்று காலை எழுந்து செல்லைப் பார்த்தால் யுகன் சாரிடமிருந்து மிஸ்ட் கால். நேற்று செல்லை மௌனப் படுத்திவிட்டு காக்கைக்கு கட்டுரை எழுதிக் கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை.

ஒருக்கால் இதற்காகத்தான் அழைத்திருக்கக் கூடும்

உங்களுக்கென் வணக்கம்
 போய் வாருங்கள் அசோகமித்திரன் அய்யா

அதுக்காக...

வழக்கம் போலவே கோயம்பேடு பேருந்து நிலையம் நிறைந்து கசிந்தது. இரக்கமுள்ள நட்த்துநர் ஒருவரின் பெருந்தன்மையால் ஒரு வழியாக இடம் கிடைத்தது. ஆனால் கறாராக சொன்னார்,

“திருச்சி டிக்கட் வாங்கிக்கங்க சார். துறை மங்கலத்தில் இறங்கிக்கங்க”

“ சரிங்க சார்”

அமர்ந்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம்  பேருந்து நிறைந்து விடவே புறப்பட்டது.

அஷோக் பில்லர் அருகேஒரு இளைஞன் ஏறினான். உள்ளே என் அருகே வந்தவன் எங்கும் இடமில்லை என்பதால் இறங்கி விடலாமா என்று தயங்கினான்.

நடத்துநர் சொன்னார்,

“எல்லா பஸ்ஸும் கூட்டம்தான். பேசாம வாப்பா. இதோ துறை மங்கலத்துல சார் இறங்கிடுவார். உட்கார்ந்துக்கலாம்.”

பையனுக்கு திருப்தி.

பயணச்சீட்டு எல்லாம் போட்டு முடிந்ததும் நடத்துநர் அவனை ட்ரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் உட்கார அழைத்தார்.

“ பரவாயில்லீங்க சார். சார் இறங்கியதும் இங்கயே உட்கார்ந்துக்கறேன்”

சொன்னார்,

“அது சரிப்பா. அதுக்காக அஞ்சர மணி நேரமா நின்னுட்டு வருவ”

Thursday, March 23, 2017

”எந்த ஊராயிருந்தாலும் சனங்கதானே சாமி”

இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடத்தின் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு பற்றியும் இழப்புகள் பற்ரியும் பேச்சு நீண்டுகொண்டிருந்தபோது இஞ்சிமரப்பா வாங்க வந்த பாட்டி இடை புகுந்தார்
“எங்க ராசா?”
“நம்ம ஊர்ல இல்ல பாட்டி. லண்டன்ல”
”எந்த ஊராயிருந்தாலும் சனங்கதானே சாமி”
அய்யோ! எங்க கிழவிடா என்று உறக்க கத்தனும்போல இருக்கு

Tuesday, March 21, 2017

ஒருதலை பட்சமானது

பாபர் மசூதி பிரச்சினையை சம்பந்தப்பட்ட இருசாராரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த கவலைதரத்தக்கதும் ஏறத்தாழ ஒருதலைப் பட்சமானதுமாகும்

மத்தியிலும் மாநிலத்திலும் பலத்தோடும் வெறியோடும் அவர்களது அரசாங்கங்கள் இருக்கின்றன.

எந்தவிதமான பலமுமற்ற நிலையில் இருக்கக்கூடியவர்களை அவர்களோடு பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ள சொல்வது அநீதியானது

விரிவாக இந்தமாத காக்கையில் எழுதுகிறேன்

ஒருபோதும் அனுமதியோம் நீதியரசர்களே

”வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால் கவலை தரக்கூடிய தகவல்களை மேடையேற்ற வேண்டியுள்ளது” என்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் சொத்து குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளனர். உண்மை நிரூபனமானபின்பும் மிக நீண்ட காலம் அதை வெளிப்படுத்த முடியாமல் நீதிமன்றத்தையே சிலரால் மௌனிக்கச் செய்ய முடிகிறது என்பதைத்தானே நீதியரசர்கள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்தவராய் ஆகிய இருவரின் வேதனை கலந்த இந்த வார்த்தைகள் நிரூபிக்கின்றன.

அவ்வளவு கால தாமதமா? நீதியரசர்களே இப்படி வேதனை கொள்ளுமளவிற்கு தங்களுக்கு சாதகமாக நீதிமன்றத்தை தங்களது செல்வாக்கால் மௌனப்படுத்த முடியுமா? முடியும், முடிந்திருக்கிறது என்பதைத்தான் செல்வி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சொல்கிறது.

ஆமாம், கீர்த்தனா பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தொடரப்பட்ட வழக்கு இது. அவளுக்கு பதினேழு வயது பூர்த்தியாகப் போகும் சூழலில் தீர்ப்பு வந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் இப்போது அந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் தமிழகத்தின் முதல்வராக பத்து ஆண்டுகளுக்கும் மேல் இருந்திருக்கிறார். முதல்வராக இருந்து கொண்டே இந்த வழக்கை  சந்தித்திருக்கிறார். கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அவரது பதவியை அந்த வழக்கை இழுத்தடிப்பதற்காகவும் செயலிழக்கச் செய்வதற்காகவும் பயன்படுத்தியிருக்கிறார். இடையில் அதில் அவருக்கு கொஞ்சம் வெற்றியும் கிடைத்திருக்கிறது.

அவர் குற்றவாளி என்றும் அதற்காக அவருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவர் இறந்து இரண்டு மாதங்களும் ஒன்பது நாட்களும் ஆகியிருந்தது.

எப்படிச் சுரண்டினார்கள், எவ்வளவு சுரண்டினார்கள், அதற்கு எவ்வளவு தண்டனை, அது அதிகமா அல்லது போதாதா என்பதை எல்லாம் நிறைய பேசிவிட்டார்கள். பேசுவதற்கு நிறையபேர் இருக்கிறார்கள்.

தண்டனையை அறிவித்தது சட்டநெறிமுறைகளின்படி. அதில் நாம் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் உணார்ச்சி வசப்படாத நிலையில் இறுக்கமாகவே தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகள் வழக்கத்திற்கு மாறாக வேதனையோடு கொட்டியுள்ள சில விஷயங்கள் மிக முக்கியமானவை.

எத்தனை வழக்குகளைப் பார்த்திருப்பார்கள். எத்தனை தீர்ப்புகளை வழங்கியிருப்பார்கள்.

”அச்சமே இல்லாமல் இவர்கள் பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். தவறான வழியில் சொத்து சம்பாரிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் இவர்கள் சம்பாரித்து குவித்திருக்கிறார்கள். இவர்கள் தந்திரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றெல்லாம் நீதிபதிகள் கூறியிருப்பது ஏதோ ஒரு பெரு முதலாளியைப் பார்த்து என்றால்கூட அதில் ஒரு நியாயம் இருக்கும்.  அது தவறு என்றாலும் ஒரு முதலாளி எத்தகைய தகிடுதத்தம் செய்தேனும் சொத்து குவிக்க வேண்டும் என்று நினைப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

ஆனால் அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டிருப்பது மக்களின் பேராதரவோடு ஆட்சிக்கு வந்த ஒரு மாநிலத்து முதல்வரைப் பார்த்து. மக்களிடத்தில் அவருக்கிருந்த அன்பும் செல்வாக்கும் அத்தனை அலாதியானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உண்ணாமல் உறங்காமல் அவருக்காக கதறி அழுது கடவுளிடம் இறைஞ்சியபடி இருந்தவர்கள் அவர்கள்.

செல்வி ஜெயலைதா மீது இந்த மக்கள் வைத்திருக்கும் அன்பை வார்த்தைகளுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் சிரமமானது. அந்த அப்பாவி எளிய மக்களுக்காக ஜெயலலிதா ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதே இல்லை. அப்படி இருக்க அந்த அம்மையார்மீது என்ன காரணத்திற்காக இத்தனை வெறி கொண்ட அன்பை வைத்திருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி வியந்து போவதுண்டு.

அவர் சிறைபட்டபோது அமைச்சர்களும் நிர்வாகிகளும் மண்சோறு சாப்பிட்டதும் கண்ணீரைத் துடைத்ததும் சந்தேகத்திற்கே இடமில்லாமல் போலியானவை. ஆனால் அவர் சிறைபட்டபோதும் மருத்துவ மனையில்

சேர்க்கப்பட்ட பொழுதும் இந்த எளிய மக்கள் சிந்திய கண்ணீரும் அவர்களது வேண்டுதல்களும் உண்மையானவை. அவர் மரணத்தின்போது வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு தரையில் விழுந்து அழுதார்களே அது எவ்வளவு உன்னதமானது.

தங்களுக்காக ஒன்றுமே செய்யாதவர்மீது மக்கள் ஏன் இவ்வளவு அன்பு பாராட்ட வேண்டும் என்று மக்கள்மீது எனக்கிருக்கும் கோவத்தைவிட தங்களுக்கான எல்லாமும் ஜெயலலிதாதான் என்று நம்பி விசுவசித்து வாக்குகளைப் போட்டு ஆட்சியில் அமர்த்திய இந்த அப்பாவி எளிய மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தனக்கும் தனது தோழியின் குடும்பத்திற்காகவும் கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சொத்து குவித்திருக்கும் ஜெயலலிதாவின்மீதான வெறுப்பு அதிகமாகிறது.   

”இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்”
என்று தீர்ப்பின் ஓரிடத்தில் நீதியரசர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த இடம்தான் என்னை நிலைகுலையச் செய்கிறது. ஒரு நகருக்குள் யாரோ ஒரு தலைவர் வருவதாக இருந்தால் அந்த ஊரில் உள்ள சிலரை கைது செய்வார்கள். ஏதேனும் பெரிய திருவிழா அல்லது தேசிய தினங்களின் போதும் சிலரை கைது செய்து அடைப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு முடிந்ததும் அவர்களை வெளியே விட்டுவிடுவார்கள். இந்தக் கைது நடவடிக்கைக்கு ’முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று பெயர்.

யாரிவர்கள்? எதற்காக இவர்களைக் கைது செய்கிறார்கள்? அதற்கு ஏன் முன்னேச்சரிக்கை நடவடிக்கை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?

இவர்கள் சமூக விரோத நடவடிக்கையில் ஏதோ ஒரு காலத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தங்களது சமூக விரோத செயல்களில் இருந்து வெகுவாக வெளியேறி சமூகவெளியில் கறைந்திருக்கவும் கூடும். ஆனாலும் இவர்களது கடந்த கால செயல்பாடுகளின் பொருட்டு தலைவர்கள் வரும் பொழுது அல்லது விழாக்களின் பொழுது இவர்கள் வெளியே இருந்தால் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடும் என்ற அச்சப்படுகிறார்கள். அப்படி ஏதும் விபரீதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகாக அந்த நிகழ்வு முடியும்வரை அவர்களை சிறையில் அடைக்கிறார்கள். இது அசம்பாவாவிதங்களில் இருந்து சமூகத்தைக் காப்பதற்கான முன்னெச்சரிக்கை

நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கை என்பது பெரும்பாலும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்வது என்பது தற்காலத்தைய நடைமுறையாகிப் போனது என்பது வேறு.

அந்த சம்பவம் நடக்கும்போது இவர்கள் வெளியே இருந்தால் இந்த சமூகத்திற்கு ஆபத்து நேரிடும் அப்படி நேரிட்டுவிடக் கூடாது என்பதற்காக சமூக விரோதிகள் என்று தங்களது பட்டியலில் இருப்பவர்களை கைது செய்து சமூகத்தைக் காப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இங்கோ ‘இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்’ என்று உரத்த குரலில் வேதனைப் படுகிறார்கள் நீதியரசர்கள்.

நான் திரும்பத் திரும்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையில்கூட ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இருந்தால்தான் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற கருத்து இருக்கிறது. அதாவது அந்தக் குறிபிட்ட காலத்தில் அந்தக் குறிப்பிட்ட நபர் அந்தக் குறிபீட்ட பகுதியில் இல்லை என்றால் அவரைத் தேடிப்போயெல்லாம் சிறைக்கு கொண்டு வரமாட்டார்கள்.

அந்தக் குறிப்பிட்ட தேதியில் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அவர் இருந்தால் அந்தப் பகுதியின் அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்று நினைக்கிறார்கள்.

இங்கோ, இவர்கள் வெளியே இருந்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும் என்று நீதியரசர்கள் பயப்படுகிறார்கள். இந்த இடத்தில், இந்த நேரத்தில் இவர்களை அனுமதித்தால் அந்த இடத்தின் அமைதி குலையும் என்பது இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது ஒன்றும் இல்லாததாகிப் போகிறது.

சமூக விரோதிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்தக் குறிப்பிட்ட இடத்தின் அமைதியை குலைத்துப் போடுவார்கள். இவர்களோ வெளியே இருக்கும் காலம் எல்லாம் நாடு முழுமையிலும் அமைதியைக் குலைத்துப் போடுவார்கள் என்று நீதியரசர்கள் அச்சப்படுகிறார்கள். எனில், சமூக விரோதிகளைவிடவும் இந்த மேன்மக்களால் இந்த மண்ணிற்கு பங்கம் விளையும் என்று இவர்கள் கருதுகிறார்கள். எனில், அவர்களைவிடவும்


இவர்கள் ஆபத்தானவர்கள், மோசமானவர்கள் என்று இந்த நீதியரசர்கள் கருதுகிறார்கள். எனில், நான்காண்டுகள் என்பதுகூட இவ்வளவுதான் தர இயலும் என்ற சட்டநுணுக்கத்தின் பொருட்டுதான் என்று கொள்ள முடியும்.

இவை இப்படி இருக்கும்போது முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மரியாதைக்குரிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அம்மாவின் ஆசியோடும் சின்னம்மாவின் வழிகாட்டுதலோடும் தமது அரசு செயல்படும் என்று கூறியிருப்பது மிகுந்த அச்சத்தைத் தருகிறது.

அவரால் அம்மா என்று அழைக்கப்படுகிற ஜெயலலிதா அவர்களையும் சின்னம்மா என்று அவர் அழைக்கிற சசிகலா அவர்களையும் கண்டுதான் நீதியரசர்கள் ‘இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்’ என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் சுட்டப்பட்டுள்ள ஒருவரது ஆசியோடும் இன்னொருவரது வழிகாட்டுதலோடும்தான் தமது ஆட்சி நடக்கும் என்று மாண்பமை முதல்வர் சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமானப் படுத்துவது ஆகாதா?

இன்னமும் ஜெயலலிதா அவர்களின் பெயரால் நலத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதும் குடிநீர் பாட்டில்களில் அவரது படத்தை வைத்திருப்பதும் அம்மா உணவகங்கள் அதே பெயரோடு தொடர்வதும் எப்படி நியாயமாகும்?

இதைக் கேட்டால் ஒரு அமைச்சருக்கு கோவம் சுள்ளென்று தெறிக்கிறது. ’காந்திகூடத்தான் சிறைக்குப் போனார். அவரது படத்தை அரசு பயன்படுத்துவதில்லையா, அதுபோல்தான் நாங்கள் அம்மாவின் படத்தை பயன்படுத்துவதும்’ என்று கூறுகிறார்.ச் எப்படி இதை எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

மகாத்மா சிறைக்கு போனதற்கான காரணமும் ஆட்டோ சங்கர் சிறைக்கு போனதற்கான காரணமும் ஒன்றல்ல என்கிற எளிய உணமைகூட இவருக்குத் தெரியாதா?

1)   இந்த எளிய உண்மைகூடத் தெரியாத ஒருவர் அமைச்சர் என்பது ஜீரணிக்க இயலாதது
2)   அல்லது அவருக்குத் தெரியும். தெரிந்தேதான் இப்படி பேசுகிறார் என்றால் மக்களை அவர் மக்குகள் என்று கருதுகிறார் என்றுதானே பொருள்.

இதை எல்லாம்விட அந்தத் தீர்ப்பு வெளியான பொழுதில் அதே அம்மாவின் படத்தை சட்டைப் பாக்கெட்டுகளில் வைத்துக் கொண்டே பெரும்பாண்மை அதிமுகவினர் போவோர் வருவோருக்கெல்லாம் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். அந்தத் தீர்ப்பு அவர்கள் இதய தெய்வத்தையும் சேர்த்துதான் குற்றவ்வாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது என்ற உண்மை தெரியாதவர்களா அவர்கள்.

”’இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததேகூ வாழ்வததற்காக அல்ல. சதி செய்வதற்காகத்தான்” என்று நீதியரசர்கள் கூறும் இடத்தைதான் நான் தீர்ப்பின் முக்கிய இடமாகக் கருதுகிறேன்.

வாழ்வதற்காக சதி செய்வதைக்கூட ஒரு வாதத்திற்காக ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்கலாம்.

இவர்கள் சதி செய்வதற்காகவே வாழ்பவர்கள் என்றுதான் நீதியரசர்களின் தீர்ப்பு சொல்கிறது.

இவர்கள் குற்றவாளிகள் என்பதை அம்பலப்படுத்துவது மிக முக்கியம். அந்தக் காரியத்தை நாம் சரியாக செய்யாது போனால் அவர்கள் விட்ட இடத்திலிருந்து அவர்களது பிரதிநிதிகள் தொடருவார்கள்.

”இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்” என்ற நீதியரசர்களின் கருத்து கவனமாகக் கொள்ளத் தக்கது. இறந்துவிட்டார் என்பதற்காக ஒருவரைப் புனிதராக்குவதோ சிறைக்கு போனதால் ஒருவரை மன்னிப்பதோகூட அவர்களை அனுமதிப்பச்தே ஆகும்.

இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்கள் என்பதன் பொருள் இவர்களை அனுமதித்தால் நல்லவர்கள் குறைந்து போவார்கள் என்பதே.

நல்லவர்கள் குறைந்தால் கெட்டவர்கள் பெருகுவார்கள். நல்லது குறைந்து அல்லது பெருகும்.

ஒருபோதும் அனுமதியோம் நீதியரசர்களே.



   

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...