Thursday, October 13, 2022

மழைக்கும் கால் வலிக்குமே என்று

 



பெய்துகொண்டிருந்த மழை நிற்கத் துவங்குவதாகவும்
நின்று கொண்டிருந்ததால் தனக்கு கால் வலிப்பதாகவும்
பாட்டி நாற்காலியில் அமர
நின்றால்
மழைக்கும் கால் வலிக்குமே என்று
நாற்காலி வரைகிறாள் பேத்தி

கோர்ட்டாச்சு அவராச்சு

 



றியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து திரு ஆ.ராசாவின் சொத்து 579 சதவிகித அளவு உள்ளது என்று அவர்மீது குற்றம் சாட்டப்படுகிறதே

அதற்கென்ன?
அதுபத்தியெல்லாம் பேசமாட்டியோ?
ஏன், அதைபத்தி நீ பேசேன்
நீ பேசமாட்டியா என்பதுதான் முதல் கேள்வி
”மாப்ள அதை அவர் பார்த்துகுவார்.
கோர்ட்டாச்சு அவராச்சு.
அதுமட்டுமில்ல
சனாதனத்தை வலுவா எதிர்க்கிற நான்கைந்து திமுககாரங்கள்ள அவரும் ஒருவர்,
அவர் பேசினா மதவெறியர்கள் அலறுறாங்க பாரு.
அதற்காக அந்தப் புள்ளியில் அவரோடு இருப்பதே என் பணி
அப்ப ஊழலை பேசமாட்டியா?
இப்பவும் சொல்கிறேன், அதை கோர்ட்டும் அவரும் பார்த்துக்குவாங்க

கடனுக்கெல்லாம் மார்க்கு கிடைக்காது, புரிஞ்சுக்கம்மா

 


80 கு 72 எடுத்துருக்கியே வெக்கமா இல்ல

உடும்மா முடிஞ்சததான என்னால எடுக்க முடியும்
என்னாலயும் உனக்கு 200 ரூபாய்க்குதான் சட்டை எடுக்க முடியும். ஆனா கடன கிடன வாங்கியாச்சும் உனக்கு 500 ரூபாய்க்கு சட்டை வாங்கித் தரனுல்ல
கடனுக்கெல்லாம் மார்க்கு கிடைக்காது. புரிஞ்சுக்கம்மா

உங்களை சுடச் சொன்ன பாரியண்டேசை உலகம் மறந்துவிட்டது சே

 

அன்பின் சேகுவேரா,

வணக்கமும் முத்தமும்
அக்டோபர் 08, 1967
உங்களது உடைமைகள் குறித்து பொலிவியா ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்குகிறது
சில தகவல்களையும் வெளியிடுகிறார்கள்
உங்களோடு இருந்தவர்கள் உறைகிறார்கள்
ஆமாம்,
அவை அவ்வளவு துல்லியமானவை
பிடிபட்டுவிட்டீர்கள்
உயிரோடு இருக்கிறீர்களா? இல்லையா? என்பதுதான் கேள்வி
பிடிபட்ட கணவாயிலேயே நீங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக கசியவிடப்படுகிறது
பொலிவியாவைக் குறித்தும்
பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் குறித்தும் நன்கு அறிந்தவர்களுக்கு ஒரு விஷயம் தீர்க்கமாகத் தெரிந்தது
ஒன்று நீங்கள் பிடிபட்ட கணவாயிலேயே கொல்லப் பட்டிருக்க வேண்டும்
அல்லது விசாரனைக்கு முன்பே நீங்கள் உறுதியாகக் கொல்லப்படுவீர்கள்
அமாம்
அமெரிக்காவே உங்களை உயிரோடு பனாமாவிற்கு கொண்டுபோக ஆசைப்பட்டதாக தகவல்கள் உண்டு
பொலிவியாவில் வைத்து விசாரித்தாலும்
விசாரனையை உங்கள் பக்கம் நகர்த்துவீர்கள்
போக,
பொலிவியாவில் மரண தண்டனை கிடையாது
நீங்கள் உயிரோடு இருப்பது மக்களை எப்போது வேண்டுமானலும் கிளர்ந்தெளச் செய்யும் என்பதை
பாரியண்டோஸ் நன்கு உணர்ந்திருந்தான்
ஆகவே
பாரியண்டோஸ் உங்களைக் கொன்றுவிடுமாறு உத்தரவிட
அந்த உத்தரவு ரெக்டெரான் என்பவனுக்கு அனுப்பப் படுகிறது
அவன் அதை செய்வதற்காக
உங்களை அடைத்துவைத்திருந்த பள்ளிக்கு வருகிறான்
பாருங்கள் சே,
பிடிபட்ட உங்களை அடைத்து வைப்பதற்காக பள்ளியை சிறையாக்கி இருக்கிறார்கள்
சிறைகளை பள்ளியாக்க நினைத்த மனிதனை அடைத்து வைக்க பள்ளியை சிறையாக மாற்றினார்கள்
பள்ளியில் இருந்த உங்களுக்கு உணவு அளிப்பதற்கு அனுமதி கேட்கிறார் யூலியா கார்டினோஸ் என்கிற ஆசிரியை
ஆச்சரியம்,
அனுமதி கிடைக்கிறது
என்ன செய்யப் போகிறார்கள் என்னை? என்று கேட்கிறீர்கள்
தனக்குத் தெரியாதென்றும்
கடவுள் உங்களைக் காப்பாற்றட்டட்டும் என்றும் அழுதுகொண்டே கூறியபடி அவர் ஓடிவிடுகிறார்
கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் உங்களைக் காப்பாற்றி இருப்பார்தானே சே
“tri continental" பத்திரிக்கைக்கு நீங்கள் ஒரு முறை பேட்டி தருகிறீர்கள்
கடைநிலையில் இருக்கக்கூடிய உலக மக்களின் விடுதலையே லட்சியம் என்கிறீர்கள்
நம்முடைய ஒவ்வொரு செயலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரலாக இருக்க வேண்டும் என்றீர்கள் அதில்
எவ்வளவு வித்தியாசம்
எல்லோரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் தர வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயலே
அதற்கு எதிரான குரல் என்று சரியாக சொன்னவர் நீங்கள்
அதே பேட்டியில்
நமது குரலை ஒரே ஒரு காது கேட்டாலும் போதும்
ஒரே ஒரு கை துப்பாக்கியை ஏந்தினாலும் போதும் என்றும் கூறினீர்கள்
துப்பாக்கி ஏந்த கைகளைத் தேடிய நீங்கள்தான்
எதிரியே தூண்டினாலும் தேவைப்பட்டால் ஒழிய ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்றும் சரியாகக் கூறினீர்கள்
உங்களிடமிருந்த டைரி ஒன்றைக் கைப்பற்றி பாரியண்டோசிடம் கொடுக்கிறார்கள்
அதை அவர் CIA விற்கு கொடுக்கிறார்
அது எப்படியோ கிடைத்து நூலாகவும் வருகிறது
அய்யோ சே,
07.10.1967 அன்றுகூட எழுதியிருக்கிறீர்கள்
அதில்
வீரமிருந்தாலும் தவறான தந்திரங்களை அவை மக்களை பலிவாங்கும் என்பதால் அவற்றை கையெடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தீர்கள்
இதற்குள் ரெக்டெரான் உங்களைச் சுட வந்துவிட்டான்
முடியாது தடுமாறுகிறான்
போதையேற்றுகிறான்
நீங்களே அவனை உங்களை சுடச் சொல்லி உற்சாகப்படுத்தியதாகவும் உறுதியில்லாத தகவல்கள் கூறுகின்றன
நீங்கள் இறந்ததும்
அசட்டு துணிச்சல்காரர் நீங்கள் என்றும்
இனி லத்தின் அமெரிக்காவில் ஏதும் செய்ய இயலாது என்றும் கூறினார்கள்
ஆனாலும் பாருங்கள்
லத்தீன் அமெரிக்கா சிவந்துகொண்டே இருக்கிறது
அந்த மக்கள் ஜனநாயகத்திலும் பக்குவப்பட்டு வருகிறார்கள்
உலகம் முழுக்க
ஏன் அமெரிக்காவிலும்
பிள்ளைகள் உங்கள் படம் இட்ட பனியன்களை அணிகிறார்கள்
உங்களை சுடச் சொன்ன பாரியண்டேசை உலகம் மறந்துவிட்டது
அவன் உத்தரவால் கொல்லப்பட்ட உங்களை உலகம் அது உள்ளவரைக் கொண்டாடும்
வீர வணக்கம் சே
அன்புடன்,
இரா.எட்வின்
09.10.2022
#சாமங்கவிய இரண்டுமணி பதினான்கு நிமிடங்கள்
09.10.2022


 


கிஷோரின் இணையேற்புக்குப் பிறகு என்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்திய செய்தி இதுதான்
ஒரு மாவட்டத்தில்
அதுவும் ஒரு வருவாய் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் மட்டும்
ஒரே நாளில் 227 இடங்களில்
குடிநீர் வசதி,
சாலை வசதி,
பேருந்து வசதி,
ஏரிகளை தூர்வாரி பராமரித்தல்
நூறுநாள் வேலைத் திட்டத்தை ஒழுங்குபடுத்துதல்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து CPM ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது
20 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள்
தமுஎச வின் திருச்சி மாவட்ட மாநாட்டினை முடித்துவிட்டு நானும் இன்றைய திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் Trichy Jayaseelan Jayaseelan Cam அவர்களும் நடந்து வருகிறோம்
திருச்சி வெல்லமண்டி அருகே திரு வெற்றிகொண்டான் பேச ஆரம்பிக்கிறார்
நமக்கும் அவர்களுக்கும் ஏதோ பிரச்சினை இருந்த நேரம்
இப்படியாக ஆரம்பிக்கிறார்,
”இங்க இருந்து ஒன்றரை கிலோமீட்டருக்கு கூட்டம் இருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்துக் கொண்டு
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் தலைவர் அவர்களே என்றுதான் ஆரம்பிப்போம்
ஆனால் சிலபேர் இருக்காய்ங்க
கூடியிருக்கிறவங்கள தெரட்டுனா ஒரு லாரிக்கு தேறமாட்டானுங்க
ஆனா,
இந்த மாபெரும் மாநாட்டின் தலைவர் அவர்களே என்று ஆரம்பிப்பானுங்க ”
எங்களைதான் கிண்டல் செய்கிறார்
ஆனாலும்
எனக்கும் ஜெயசீலனுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை
வலிக்கவும் செய்தது
இதற்கு அதே ஜெயா இப்போது பதில் சொல்லி இருப்பதாகவே எனக்குப் படுகிறது
திருச்சி புறநகர் மாவட்டத்தில் மட்டும் 227 இடங்களில் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டம்
அய்ய்யோ
எனில் எத்தனை கிளைகள் ஜெயா எனக் கேட்டபோது
400 கும் மேல் இருப்பதாக சொல்கிறார்
15 நாட்களாக வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆர்ப்பட்டம் குறித்து விளக்கி இருக்கிறார்கள்
மக்கள் திரண்டிருக்கிறார்கள்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தில்லாம்பட்டி
ஓடிக்கொண்டிருந்த பேருந்து நின்றுபோயிருக்கிறது
ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாளில் இருந்தே காலை 8 மணிக்கு மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது
சமயபுரம் அருகே உள்ள கூத்தூரில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி அப்போதே முடிந்திருக்கிறது
பல இடங்களுக்கு அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்
சிலவற்றை செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்கள்
மகிழ்ச்சியில் ரெக்கைகள் முளைக்கின்றன
227 இடங்களுக்கு தலைவர்கள் வேண்டுமே ஜெயா?
பக்கத்து மாவட்டங்களில் இருந்து கடன் வாங்கியாச்சே
உங்கள் ஊரில் இருந்தும் தான் என்கிறார்
பெர்மபலூரை சொல்கிறார்
அகா, ஆகா,
திருச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு தோழருக்கும் என் வணக்கம்
ஒரே ஒரு குறை
ஊடகங்கள் இதை முறையாக கொண்டு போகவில்லை
நம்மால் முடிந்தவரை கொண்டுபோவோம்
யூட்யூப் சேனல்களை ஒவ்வொரு ஊரிலும் உருவாக்குவோம்
#சாமங்கவிய 3 மணி 20 நிமிடங்கள்
08.10.2023

தினக்கூலியே குறைவென்பதும்

 


அங்கன்வாடிகளில் உள்ள LKG மற்றும் UKG வகுப்பெடுப்பதற்கு
தாற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டிருக்கிறது
மாதத்திற்கு 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்றும்
அதுவும் வருடத்திற்கு 11 மாதங்கள்தாம் என்றும் தெரிகிறது
இது வன்மையன கண்டனத்திற்கு உரியது
அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
சங்கங்கள் அரசிற்கு அழுத்தத்தைத் தர வேண்டும்
தனியார் பள்ளிகளில் அதுதானே என்பார்கள் சிலர்
அதுவும் தவறென்றும்
அதற்கெதிராகவும் அழுத்தங்களைத் தரவேண்டும் என்பதே நமது கோரிக்கை
இதைக் கண்டிக்கிற வேளையில்
இது தினக்கூலியைவிடக் குறைவாக இருக்கிறது என்றும்
துப்புரவுத் தோழர்களின் சம்பளத்தைவிடக் குறைவென்றும் தோழர்கள் பதிவது வருத்தம் அளிக்கிறது
தொகுப்பூதியம் குறைவென்பதும்
அது அநியாயமென்பதும்
அது களையப்பட வேண்டும் என்பதுதான் அவர்கள் சொல்ல வருவது
அதை சொல்ல வருகிறபோது தம்மையும் அறியாமல் தவறி விடுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது
தினக்கூலியே குறைவென்பதும்
துப்புரவுப் பணியாளர்களின் ஊதியம் குறைவென்பதையும்
உணர முடியாதவர்கள் அல்ல நாம்
100 நாள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்
அந்தப் பணிக்கான ஊதியமும்
ஆண்டு முழுவதும் வேலை என்பதையும்
உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் நாம் உணராதது அல்ல
கவனமாக கேட்போம்

Saturday, October 8, 2022

ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை

அன்பின் மருத்துவர் கீர்த்தனா,

பிறந்தநாள் வாழ்த்துகள்

கடந்த பிறந்தநாட்கள் எதையும்விட இந்த பிறந்தநாள் உனக்கு மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்

ஆமாம்,

நான்கு நாட்களுக்கு முன்னர் BHMS தேர்வு முடிவு வந்தபோது உன் அருகில்தான் இருந்தேன்.

தேர்வு முடிவினைக் கண்ணுற்றதும் நீ கொண்டாடி மகிழ்ந்த விதம் எனக்குப் புதிதாக இருந்தது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது நீ அப்பாயி வீட்டில் இருந்தாய். அப்போது 491/500 எடுத்திருந்தாய்,

மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் அதை உனக்கு அலைபேசிவழி தெரிவித்தபோது

எந்தவிதமான சலனமும் இன்றி,

இன்று வியாழன், எனவே நாளைக்கு வெள்ளி என்று யாரேனும் சொன்னால்

அந்த செய்தியை எப்படி எடுத்திருப்பாயோ அப்படி எடுத்த விதம் இன்னும் பசுமையாய் இருக்கிறது

ஒரு வகையில் unbecoming of keerthna வாக இருந்தாலும்

இந்தக் கொண்டாட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

ஹோமியோ மருத்துவர் என்பது உன் கனவு என்பது எனக்குத் தெரியும்

உன் கனவுகளில் ஒன்று நிறைவேறுவதற்கு ஏதோ ஒரு இடத்தில் உன் அம்மாவோடு நானும் இருந்திருக்கிறேன் என்பதில் பெரிய மகிழ்ச்சி எனக்கு

என் மகள் ஒரு மருத்துவர்

காட்டம்மா என்று அழைக்கப்படும் காளியம்மாளின் கொள்ளுப் பேத்தி

முனியம்மாள் ராஜரத்தினத்தின் பேத்தி

ஒரு மருத்துவர்

நம்முடைய குடும்பத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய செய்திதான்

பெரிய பாரம்பரியம் மிக்க குடும்பமெல்லாம் இல்லை நமது குடும்பம்

உன் தாத்தா ஒரு இடைநிலை ஆசிரியர்

ஆனாலும் அப்பாவைவிட தாத்தாவிற்கு ஏகத்திற்கும் கடன்

என் அம்மாயி காட்டம்மா மாடு மேய்க்கும்

இன்று உன் அப்பா ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். இதற்கும் உன் கொள்ளுப் பாட்டி மாடு மேய்த்ததற்கும் நேர்விகித உறவு இருக்கிறது கீர்த்தி

அது மாடுமேய்த்து சேர்த்த பால் காசில்லாது போயிருந்தால் உன் அப்பா இன்று இந்த அளவிற்கேனுமான நிலையில் இல்லை

இதை இதுவரைக்கும் உன் சித்தப்பாவிடமோ அத்தையிடமோகூட பகிர்ந்ததில்லை

இப்போது இவற்றை சொல்வதற்கு காரணம் இருக்கிறது

உன் வேர் உனக்குத் தெரிய வேண்டும்

என் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில்

என் பணியிடத்தில், எனக்கான சமூக வெளியில்

என்னை ஒரு ஆசிரியரின் மகன் என்று மட்டும் வெளிப்படுத்திக் கொண்டதில்லைஒரு மாடு மேய்த்த கிழவியின் பேரனாக என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறேன்

அன்பிற்குரிய கீர்த்தனா,

நீ,

ஒரு மாடு மேய்த்தக் கிழவியின் கொள்ளுப் பேத்தி

இவற்றை இவ்வளவு விளக்கமாக சொல்வதற்கு காரணமிருக்கிறது

அதை சொல்வதற்குமுன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும்

அப்பாவிற்கு காது கேட்காது என்பது நீ அறிந்ததுதான்

காது கொஞ்சம் மந்தமாக இருக்கிறது என்பதை நானும் உன் தாத்தாவும் உணரத் தொடங்கியபோது நான் அநேகமாக பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்

விடுதியில் தங்கிப் படிக்கும் அளவிற்கு வசதி இல்லாததால் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன்

காது மருத்துவரைப் பார்ப்பதற்கே எங்களுக்கு காலம் ஆயிற்று

ஒரு அறுவை, அல்லது காது கேட்கும் கருவியை அவர் பரிந்துரைத்தபோது அதற்கான வசதி நம் குடும்பத்தில் இல்லை

பிறகு அப்படியேப் பழகிப் போனது

இப்போது காதுகேட்கும் கருவியைப் பொறுத்தியதும் அப்பாவிற்கு காது பெருமளவு தெளிவாகக் கேட்பதும் நீ அறிந்ததே

அதுவரையில் நான் பட்ட அவமானங்களும் நீ அறிந்ததுதான்

காது கேட்கும் கருவியை முன்னரே பொறுத்தி இருப்பின் பொதுத் தளத்தில் நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கக் கூடும்

இப்போது உன்னிடம் வைப்பதற்கு ஒன்றிரண்டு கோரிக்கைகள் என்னிடம் உண்டு மகளே

நாம் என்பது இன்றைய நாம் மட்டும் அல்ல

உன்னை ஹோமியோ படிக்கவைத்ததற்கு என்னிடம் இரண்டு காரணங்கள் இருந்தன

1) ஹோமியோ என்பது மாற்று மருத்துவம்

2) அது ஏழைகளுக்கான மருத்துவம்

ஹோமியோவை மாற்று மருத்துவம் என்று கூறுவதற்கு அது அலோபதிக்கான மாற்று என்றோ, சித்தாவிற்கு மாற்று என்றோ பொருள் அல்ல

ஒன்றால் ஒன்றை இட்டு நிரப்பிவிட முடியாது என்பதும் எனக்குத் தெரியும்

அதனதற்கென்று தனிப்பட்ட லட்சணங்கள் உண்டு

எந்த மருத்துவமாயினும் அது மக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும் என்றும்

அனைத்துவகை மருத்துவமும் ஒன்றிணைந்து மக்களுக்கான ஆய்வுகளை செய்வதும்

ஏழைகளுக்கானதாக என்பதே தவறு

ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை மாற்றி அமைக்க வேண்டும்

ஹோமியோவை ஏதுமற்றவர்களுக்கான மருத்துவமாக நான் பார்க்கிறேன்

அல்லது அப்படியாக அது மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

40 வருடங்களுக்கு முந்தைய உன் அப்பா, அப்பாயி, பாட்டி ஆகியோர் இன்று ஓரளவு வசதியோடிருக்கலாம்

எந்தவிதமான மருத்துவத்திற்கும் கடன் பெற்றாவது சடுதியில் தயாராகிவிடக்கூடிய நிலையில் இருக்கலாம்

ஆனால்,

40 வருடங்களுக்கு முன்னர் உன் அப்பா இருந்த நிலையில் எத்தனையோ பேருடைய அப்பாக்கள், அப்பாயிகள், பாட்டிகள் ஏராளம் இன்றும் உண்டு

ஏதுமற்றவர்களும் உண்டு

அவர்களுக்கும் மருத்துவம் போக வேண்டும்

அதற்கு உன் பங்களிப்பும் இருக்க வேண்டும்

அது நடந்தால் அப்பாவின் கட்டை வேகும்

வாழ்த்துகள் கீர்த்தி

அன்புடன்,

இரா.எட்வின்

07.10.2022

Thursday, October 6, 2022

அரசாங்கம் எங்கள் அரசாங்கம்

 


நாங்கள் அதைத் தருகிறோம்

இதைத் தருகிறோம்

சம்பளம் தருகிறோம் என்கிறீர்கள்
நீங்கள் தருமளவு உங்களிடம் ஏது இவ்வளவு
அரசாங்கம் தருகிறது
அரசாங்கம் எங்கள் அரசாங்கம்
அது எந்தக் கட்சியின் அரசாங்கமானாலும்
அரசாங்கத்தைக் கட்டமைத்து எங்களுக்கு பணி செய்யும் வேலையை உங்களுக்குத் தந்திருக்கிறோம்
உங்களுக்கும் சம்பளம் தருகிறோம்
கார் தருகிறோம்
பெட்ரோல் தருகிறோம்
வீடு தருகிறோம்
இன்னும் என்னென்னமோ தருகிறோம்
எங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் உங்களை வீட்டிற்கும் அனுப்புவோம்
இதை முதல்வர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்
அதானால் அவரை நேசிக்கிறோம்
புரிந்து வைத்திருக்கிற அமைச்சர்களையும் மதிக்கவும் நேசிக்கவுமே செய்கிறோம்
இதை மற்ற அமைச்சர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்

உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பது புரிகிறதா?






உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பது புரிகிறதா?

அமெரிக்காவை மீட்டெடுக்க அமெரிக்க கம்யூனிஸ்டுகள் போதும் பைடன்






 

Wednesday, October 5, 2022

சுட்டதற்காக துப்பாக்கி மீது ஆத்திரப்படலாமா

 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு

உலகமே இந்திய விடுதலையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது
பூனேவிலும் 500 பேர் கூடி இருக்கிறார்கள்
அவர்களும் கொடி ஏற்றுகிறார்கள்
ஆனால் அவர்கள் ஏற்றியது ஸ்வஸ்திக் கொடி
அவர்கள் முன்னால் கோட்சே வருகிறான்
“இந்தியப் பிரிவினை என்பது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு துன்பங்களைத் தந்துள்ள பேரழிவு.
இதைச் செய்தது காங்கிரஸ். அதிலும் குறிப்பாக அதன் தலைவர் காந்திஜி”
கோட்சே ஒரு பத்திரிக்கையாளன் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும் என்பது அய்யமாக இருக்கிறது
”அக்ரானி”, “இந்துராஷ்டிரா” ஆகிய இரண்டு பத்திரிக்கைகளை அவன் வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தி வந்தான்
காந்தியார் கொலை செய்யப்படும் காலத்தில் அவன் “இந்துராஷ்டிரா” இதழின் ஆசிரியனாக இருந்தான்
1947 ஆகஸ்ட் 15 நாளிட்ட இந்துராஷ்டிரா தலையங்கம் எழுதப்படாமல் அந்த இடம் கட்டம் கட்டப்பட்டு வெள்ளையாக விடப்பட்டிருந்தது
1947 நவம்பர் ஒன்று
“இந்துராஷ்டிரா” இதழின் பங்குதாரர்கள் கூட்டம் நடக்கிறது
அதன் ஆசிரியரான கோட்சே பேசுகிறான்
“தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியும் என்று காந்தி கூறினார்.
இந்தியா பிளக்கப்பட்டுவிட்டது
இன்னும் காந்தி உயிரோடு இருக்கிறார்” (தோழர் அருணனின் “கோட்சேயின் குருமார்கள்” பக்கம் 11)
இதன் பொருள் என்ன? இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே காந்தியார் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு உயிரோடு இருந்திருப்பார்
”நல்லவராக வாழ்வதும்கூட மிகவும் ஆபத்தானது”
என்று காந்தியாரின் இறப்பு செய்தியை கேட்ட மாத்திரத்தில் பெர்னாட்ஷா கூறிய செய்தியை
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிப்பித்த
“காந்தியார் கொலை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்”
என்ற நூலின் 97 ஆவது பக்கத்தில் பார்க்கிறோம்
இனி இந்தக் கட்டுரையில் (அந்த அளவிற்கு இது நகரும் பட்சத்தில்) பக்க எண் என்று மட்டுமே தருகிறேன். அது மேல்காண் நூலின் குறிப்பிட்ட பக்கம் என்று கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
ஒரு மகத்தான மனிதனின் பிறந்த நாளில் அவரது மரணம் குறித்தே நாம் தொடங்க வேண்டிய சூழல் இருக்கிறது
இந்த சூழலுக்கு நம்மை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற வகையில் அவர்களது வளர்ச்சியை
அதுவும் 2014 இல் ஒன்றியத்தை அவர்கள் கைப்பற்றிய பிறகு அவர்களது அசர வளர்ச்சியை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்
அவர்களுக்கான எதிர்வினையை நாம் போதுமான அளவு தரவில்லை என்பதையும் நாம் ஏற்க வேண்டும்
அப்போதுதான் நாம் செய்ய வேண்டியதை இனியாவது சரியாக செய்ய இயலும்
காந்தியைக் கொன்றது கோட்சே என்ற தனி மனிதன் அல்ல
அவரைக் கொன்ற கோட்சே ஒரு கூட்டத்தின் பிரதிநிதி
அந்தக் கூட்டத்தை இயக்கியது ஒரு மிகக் கொடிய மதப் பாசிசத்தின் பிரதிநிதி
ஆக,
காந்தியைக் கொன்றது ஒரு சித்தாந்தம்
இதை காந்தி கொல்லப்பட்டபோதே சரியாகப் புரிந்து கொண்டவர் தந்தை பெரியார்
ஒரு கொலையை செய்திருக்கிறார்கள்
உலகமே அதிர்ந்த ஒரு கொலையை செய்திருக்கிறார்கள்
கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார்கள்
ஆக,
தாங்கள் செய்த ஒரு மகா மனிதனின் கொலையை
கொலையாளியை கையில் வைத்துக் கொண்டு தங்களை இந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டு
0210.2022 அன்று அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி கோருகிற தைரியத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை வெறும் தற்செயலான வளர்ச்சி என்று கொள்வோமானால் நாம் இன்னும் பின்னடைவுகளை சந்திக்க நேரும்
அவர்கள் அனுமதி கேட்கும் தைரியத்தைப் பெற்றிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றாலும்
“அவர்கள் அவர்களது சீருடையோடு தெருவிற்கு வருகிறார்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு
அதோ வருகிறார்களே அவர்கள்தான் காந்தியைக் கொன்றவர்கள்
அவர்கள்தான் காமராசரைக் கொன்றவர்கள்
அவர்கள்தான் எல்லோருக்குமான கல்விக்கு எதிராக நிற்பவர்கள்”
என்பதை நம் மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று சரியாகக் கூறி இருக்கிறார் தோழர் Thirumurugan Gandhi
இதை நாம் முறையாக இதுவரை செய்யவில்லை
“பிரிவினையின்போது இந்து அகதிகளின் துயரைப் பாராது, இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின்மேல் காந்தியார் பரிவு காட்டினார்” என்றும்
“பாரத மாதாவைக் காப்பாற்ருவதற்கு காந்தியைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை, அவரைக் கொன்றது சரியே” என்றும்
அவர்கள் காந்தியாரின்மீதான தாக்குதல்களைத் தொடுத்தபோது
காந்தியர்கள் தம் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டியவாறே இருந்தனர்”
என்று துசார் ஏ. காந்தி கூறுவதை (பக்கம் 83) நம்மால் மறுக்க முடியாது
காந்தியைக் கொன்றவர்கள் காந்தியின் பிறந்த நாளைக் கையெடுக்க முன் வந்ததும் தமிழகத்தில் அதை முதலில் எதிர்கொண்டவர் தோழர் திருமா அவர்கள்
அக்டோபர் 02, 2022 அன்று தங்கள் கட்சி தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி நடத்தும் என்றும் அறிவித்தார்
காந்திக்கு ஆதரவாக திருமா வரலாமா?
காந்தியே சனாதனத்தை ஏற்றவராயிற்றே
திருமா சனாதனத்தை எதிர்ப்பவராயிற்றே
எரவாடா மறந்துபோயிற்றா திருமாவிற்கு
என்றெல்லாம் நமது பக்கம் இருந்தும்
திருமா தீயசக்தி என்று திரு H.ராஜாவிடமிருந்தும் குரல்கள் கிளம்பின
எதையும் பொருட்படுத்தாமல் திருமாவின் முன்னெடுப்பை வரவேற்று இரண்டு பொது உடமைக் கட்சிகளும் அவரோடு இணைந்தன
மே 17 இயக்கம் அதில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் என்று தோழர் திருமுருகன் காந்தி அறிவித்தார்
”மனிதச் சங்கிலி”யாக மாறியது
இரண்டையும் தடுத்திருக்கிறது மாநில அரசு
இரண்டிற்கும் தடை நியாயமா? என்பது பற்றி பிறகு பேசுவோம்
ஏன் தோழர் திருமா காந்தியைக் கையில் எடுக்கிறார்?
”வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு” என்று தந்தை பெரியார் சொன்னதை அவர் மிகச் சரியாக உள்வாங்கி இருக்கிறார்
காந்தி வாழும்போது வர்ணாசிரமத்தை ஏற்கிறவராகவே இருந்தார் என்பது உண்மை
அதை அவர் நம்பினார்
தான் நம்பிய ஒன்றை அவர் எடுத்து வைத்தார்
அது தவறு என்று பட்ட மாத்திரத்தில் அவர் தன்னை மாற்றிக் கொண்டார்
அப்படியாக அவர் மாறியதுதான் அவரது கொலைக்கான காரணங்களுள் முக்கியமானது
அப்போது ஓமாந்தூரார் தலைமையிலான காங்கிரச் ஆட்சி
அவரது ஆட்சியை ”தாடி இல்லாத ராமசாமியின் ஆட்சி என்றும்
பார்ப்பனர்களுக்கு உரிய கல்வி மறுக்கப்படுவதாகவும்
“சுதந்திரா” பத்திரிக்கையிலும் “THE HINDU" விலும் எழுதுகிறார்கள்
இதுகுறித்தும் “வகுப்புவாரி” முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் காந்தியிடம் முறையிடுகிறார்கள்
இதுகுறித்து ஓமாந்தூராரிடம் காந்தியார் விசாரிக்கிறார்
ஓமாந்தூரார் மிகத் தெளிவான விளக்கத்தை அளிக்கிறார்
பார்ப்பனர்களிடமிருந்து எதையும் பிடுங்கவில்லை
அவர்கள் முழுவதையும் அபகரித்து வைத்துள்ள நிலையில் மற்றவர்கள் தமக்கானதை ஓரளவேனும் பெறுவதற்கான முயற்சியே ”வகுப்புவாரிமுறை” என்பதை விளக்குகிறார்
காந்தியார் புரிந்துகொள்கிறார்
பார்ப்பனர்களைப் பார்த்து
“வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கழகு
தர்பையும் பஞ்சாங்கமும் பிடிக்க வேண்டிய நீங்கள் ஏன் சனாதனத்தையும் வைதிக நெறிகளையும் விட்டுவிடு ச்டெதாஸ்கோப்பையும் டி-ஸ்கொயரையும் எடுக்க விரும்புகிறீர்கள் இது நியாயம் அல்ல”
என்கிறார்
07.10.1947 அன்று “இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு” என்கிறார்
அவர் உயிரோடு இருந்தால் இந்தியா சுயமரியாதை நாடாக மாறிவிடும் என்று பயந்தவர்கள் காந்தியை அவர்கள் சுட்டுக் கொல்கிறார்கள் (பக்கங்கள்1X மற்றும்X)
காந்தியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூரில் பெரியார் பேசுகிறார்
அப்போது அன்றைக்கு இளைஞராக இருந்த கலைஞர் கொஞ்சம் கோவமாக எதையோ பேச குறுக்கிட்ட பெரியார்
“சுட்டதற்காக துப்பாக்கி மீது ஆத்திரப்படலாமா?” என்று ஆற்றுப்படுத்துகிறார்
ஆமாம் துப்பாக்கிக்கு பின்னால் உள்ள சித்தாந்தத்தின் அரசியலை பேசுவோம்
உரக்கப் பேசுவோம்
ஒன்று சேர்ந்து இன்னும் இன்னுமாய் உரக்கப் பேசுவோம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...