Wednesday, October 5, 2022

அரசியலேகூட ஒரு காரணமாக இருக்கலாம்

 அன்பிற்குரிய முதல்வருக்கு,

வணக்கம்
1) சாதி, மதம், இனம், பால் போன்ற எந்தப் பாகுபாடுமற்ற உலக சமூகத்தை உருவாக்குவது
2) மதம், அறிவியல் மற்றும் சித்தாந்தங்களை ஒப்பாய்வது
3) இயற்கையின் பெருவெளி அதன்மீதான மனிதனின் உறவு மற்றும் அதிகாரம் ஆகியவற்றை தெளிவுபடுத்த மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை ஊக்குவிப்பது
போன்ற குறிக்கோள்களோடு 17.11.1875 அன்று தியாசபிகல் சபை தோற்றுவிக்கப்படுகிறது
அதனை அமைத்தவர்களில் ஒருவரான எலனா ப்ளாத்வஸ்கி சென்னை வந்து அதன் கிளை ஒன்றினை சென்னை அடையாறில் நிறுவுகிறார்
அது பிரம்மஞான சபை என்று அறியப்படுகிறது
அந்த அமைப்பின்மீதான நமது கருத்துகளை முரண்பாடுகளை சொல்வதற்கான பதிவு அல்ல இது
அந்த அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான எலனா ப்ளாத்வஸ்கி
தியாசபிகல் சபையை நிறுவுவதற்கு தம்மை உந்தியது வள்ளலாரும் அவரது சமரச சுத்த சன்மார்க்க சங்கமும்தான் என்கிறார்
19 ஆம் நூற்றாண்டில் எழுந்த மாபெரும் இயக்கங்களில்
ராம் மோகன்ராயின் பிரம்ம சமாஜம் முதல் இடம் என்றும்
அதற்கு அடுத்த இடத்தில்
வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம்தான் என்றும் ம.பொ.சி கூறுவதாக
தனது “விடுதலைத் தழும்புகள்” நூலில் வைத்திருக்கிறார் சு.பொ.அகத்தியலிங்கம்
பிரம்மஞான சபை உருவாவதற்கு காரணமாயிருந்த வள்ளலாரும் சமரச சுத்த சன்மார்க்க சங்கமும்
பிரம்மஞான சபை அளவிற்கும் இந்தியாவில் அறியப்படாமல் போனதேன்?
விவேகானந்தர் அறியப்படும் அளவிற்கு வள்ளலாரும் அவரது இயக்கமும் ஏன் அறியப்படவில்லை
நிறைய காரணங்கள் இருக்கலாம்
"கடுமை நிறைந்த ஆட்சி கடிது ஒழிக"
என்று அரசியல் பேசியவர் என்ற வகையில்
அரசியலேகூட ஒரு காரணமாக இருக்கலாம்
அவைகடந்து மொழியை அதற்கான காரணங்களுள் ஒன்றாக நாம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறேன்
பிரம்மஞான சபையும் விவேகானந்தரும் இவ்வளவு அறியப்பட்டதற்கு அவர்களது எழுத்துக்களும் உரையும் ஆங்கிலத்திலும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் கொண்டுபோகப்பட்டதும்
அவர்களைப் பற்றியும் அவர்களது இயக்கங்கள் பற்றியும் இந்த மொழிகளில் ஏராளம் வந்ததும்தான் என்பதை தங்களாது கவனத்திற்கு கொண்டு வருவது அவசியம்
வள்ளாலார் விஷயத்தில் இதை செய்யத் தவறி இருக்கிறோம்
இதை வள்ளலார் விஷயத்திலும் என்று கொள்ள வேண்டும் மரியாதைக்குரிய முதல்வர் அவர்களே
இன்று வள்ளலாரது இருநூறாவது வருடம் தொடங்குகிறது
என் பிரியத்திற்குரிய முதல்வர் அவர்களே
அரசு இதைக் கொண்டாடுவதோடு
வள்ளலாரின் படைப்புகளை, வள்ளலாரை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் கொண்டு போவதற்கான முயற்சியை செய்ய வேண்டும்
உங்களால் இதை செய்ய முடியும்
செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்
அன்புடன்,
இரா.எட்வின்
05.10.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...