Thursday, March 13, 2014

நிலைத் தகவல் 31


இன்று காலை கரூரிலிருந்து வெங்கமேடு போகும் சிற்றுந்தில் ஒரு பெண் அலைபேசியில் சத்தமாக " ஏங்க நான் தங்கச்சி பேசறேன். எங்க அக்காவ கொஞ்சம் கூப்பிடுங்க" என்றார். அதற்கு என்ன பதில் கிடைத்ததென்று தெரியவில்லை. " நீங்க மேகலாதானே என்றார். அதற்கும் என்ன பதிலென்றுதெரியவில்லை.

"ம்ம் நா செல்வியோட தங்கச்சி பேசறேன். அதக் கொஞ்சம் கூப்பிடுங்க" என்றவர் தனக்குத்தானே "கிறுக்கி இதல்ல மொதல்ல சொல்லியிருக்கனும்" என்றார்.

விழுந்த வேகத்தினும் அதிக வேகமாக கற்றுக் கொள்கிறார்கள் சாமானியர்கள்.

Thursday, March 6, 2014

16 வல்லமை


தமிழ்த் தரவுகள் அனைத்தையும் முடிந்தவரை திரட்டிச் சேர்ப்பது. இயன்றவரை கலப்படமில்லாத தமிழில் புழங்குவது என்கிற உயரிய, நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியப் படுகிற நோக்கங்களோடு நடத்தப் படுகிற ஒரு இணைய இதழ் ”வல்லமை”.

ஒருநாள் அதன் நிர்வாக ஆசிரியர் திருமதி பவளசங்கரி அவர்கள் இதழுக்கு எனது படைப்புகளைக் கேட்டபோதுதான் இப்படி ஒரு இணைய இதழ் வந்துகொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே உள்நுழைந்தேன். தங்களது நோக்கங்களைப் பிரகடனப் படுத்தும் போது எந்த வித ஆரவாரமுமின்றி “ முடிந்தவரை திரட்டிச் சேர்ப்பது”    ”இயன்றவரை கலப்பின்றி புழங்குவது” என்று சொல்லக்கூடிய நடைமுறை நேர்மை என்னை ஈர்த்தது. இது கடந்து இதில் இன்னும் பாலரது படைப்புகளையும் பார்க்க இயலும் என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஈர்த்தது.

இங்கிலாந்திலிருந்து திரு சக்தி தாசன் அவர்கள் தொடர்ந்து கடித வடிவத்தில் எழுதி வருகிறார். ஒவ்வொரு கடித்தத்திலும் இந்த மண்ணின் மீதான அவரது அக்கறையும் அதை காப்பதற்கான அவரது அரசியல் 
நிலைபாட்டையும் காண முடிகிறது.

இப்பொழுது இங்கிலாந்து சந்தித்து வரும் சூறாவளி, வெள்ளம், வரலாறு காணாத பனி இவற்றின் காரணமாக இங்கிலாந்து மக்கள் அனுபவிக்கும் துயர் இவை பற்றி அவரது 97 வது கடிதம் விவரிக்கிறது என்பதோடு இருந்திருப்பின் இதை ஒரு சாதாரண செய்திப் பதிவாக விட்டு விடலாம்.  அது கடந்து அதற்கான காரணங்களைத் தேடிப் பயணித்து வியர்த்து, குளிர் உறைந்து மூச்சடக்கி பந்தி வைப்பதுதான் சக்திதாசன் அவர்களது கடிதத்தைப் பற்றி பேச வைக்கிறது. ஏறத்தாழ 250 ஆண்டுகளாக இது போன்ற ஒரு இயற்கை சீர்கேட்டை இங்கிலாந்து பார்த்ததில்லை என்று கூறும் சக்திதாசன் “ polar vortex” என்கிற ஒருவிதமான இயற்கை மாறுதலே இதற்குக் காரணம் என்கிறார். இயற்கையோடு இயைந்து வாழாமல் அதை தன் இஷ்டத்திற்கு தாறுமாறாய் பயன்படுத்துவதே இத்தகைய கொடூரமான கேடுகளைக் கொண்டுவரும் மாறுதல்களுக்குக் காரணம் என்பதை வெகு பூடகமாக புரிய வைக்கிறார். நோய் முதல் நாடும் அவரது ஆளுமை அவரை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது.

இமயமலையின் பனிப் படிமங்களின் மேல் ரிஃப்லக்டர் மாதிரி ஒரு படிமம் இருக்குமாம். அதுதான்  ஒளியையும் வெப்பத்தையும் பனிப் படிமத்தைத் தாக்கிவிடாமல் திரும்ப ஒளிரச் செய்து பாதுக்காக்கிறது என்று வாசித்திருக்கிறேன். இமயமலையையும் இப்போது தாறுமாறாகத்தானே நாம் பயன்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக அந்த ரிஃப்லக்டர் போன்ற படிமம் மாசுபட்டு அதன் விளைவாக வெப்பம் பனிப் படலத்தை வெகுவாகத் தாக்கத் தொடங்கி உள்ளதாகவும் எங்கோ வாசித்தேன். இந்தப் பனி படலம் வெப்பப் படுமானல் வெகு வேகமாக உருகத் தொடங்கும். அது பேரதிக இடர்பாடுகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

இப்படியாக அந்த மண்ணில் நடந்த இயற்கை இடர்பாடு குறித்த ஒரு கடிதம் அது மாதிரி நமது பூமியில் நடப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு இடர்பாடு குறித்து நம்மை எச்சரிக்கிறது. இதுதான் கடித இலக்கியம். பொதுவாகவே மின்னனு உபயோகம் பெருகிவரும் சூழலில் கடிதங்கள் அருகிப் போயுள்ளன. அத்தகைய சூழலில் வல்லமை மாதிரி இணைய இதழ்கள் கடித இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவும் ஒரு மனிதனின் 97 கடிதங்களை இதுவரை பதிவேற்றியிருப்பது கடிதங்களின் மேலும் கடித இலக்கியத்தின் மேலும் அக்கறை கொண்டோர் யாவரும் பாராட்டவேண்டிய ஒரு விஷயம்.

பவள சங்கரி எழுதும் இதழின் தலையங்கங்கள் கவனத்திற்குரியவை. 24.01.2014 அன்று அவர் எழுதிய தலையங்கம் குவிக்கப்பட்ட கவனத்திற்குரியது. குழந்தைகள் என்றால் ஆண் குழந்தைகள் மட்டும்தானா? என்கிற ஒரு வினாவை மிக நேர்த்தியானதொரு பூடக மொழியில் பேசுகிறது அது. கடந்த 20 ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்கிற ஒரு செய்தியை பவள சங்கரி தரும் போது உண்மையிலுமே அதிர்ந்து போகிறோம். கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனைக்கு கடுமையான தண்டனை என்று சொல்லப்பாட்டு எல்லா மருத்துவ மனைகளிலும் ஸ்கேன் நிலையங்களும் விளம்பரித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இப்படி என்றால் இத்தகையதொரு கடுமையான சட்டம் இல்லை என்றால் இந்த எண்ணிக்கை எங்கு போய் நின்றிருக்கும்?

ஆண் பெண் விகிதாச்சாரம் இயற்கைக்கு மாறாக வேறுபட்டால் அது சமூகத்தில் பல்வேறு விதமான கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அக்கையோடு சொல்லும் வலையாக இருக்கிறது வல்லமை.

பேராசிரியர் இ. அண்ணாஅமலை அவர்களது மொழியியல் மற்றும் ஒலியியல் சார்ந்த பதிவுகள் மிகவும் நுட்பமானவை. ஆங்கிலத்தை unphonetic language என்று சொல்வோம்.44 ஒலி வடிவங்களை எழுத்தில் வார்க்க வெறும் 26 எழுத்துக்களே இருப்பதுதான் இதற்கு காரணம். ஆனால் தமிழில் எந்த ஒரு ஒலிக்கும் அதற்கான எழுத்து இருப்பதாகவே நினைத்து வந்தோம். ஆனாலும் ஜ, ஷ, கங்கைக்கு வரும் க ஒலி போன்ற ஒலிகளின் தேவை தமிழில் இருப்பதாகவே உணர்ந்தோம். ஆனால் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வேறு வேறு மொழிகளா என்கிற அவரது ஆய்வு மொழி குறித்த அக்கறை கொண்ட அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கப் பட வேண்டியதாகும்.

பெண்ணியம், மொழி, கல்வி, ஆன்மீகம், உலகமயம், சாதி, வரலாறு அரசியல், குழந்தைகள் என அத்தனை விஷயங்களையும் அலசும் ஒரு வலை வல்லமை.

அவசியம் பாருங்கள்,

Monday, March 3, 2014

1096


சென்ற ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் அநேகமாக 1197 என்று நினைக்கிறேன். முதல் மதிப்பெண் பெற்றது ஒரு பெண் குழந்தை என்றும் நினைக்கிறேன். இப்படி நினைக்கிறேன் என்று சொல்வதற்குக் காரணம் உறுதியாய் எனக்குத் தெரியாது என்பதுதான்.

நண்பர்கள் கேட்கிறார்கள்,

“மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் நீயே இப்படி சொல்வது சரிதானா?”

சரியா தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மதிப்பெண்கள், முதலிடம், மூன்றாமிடம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகப் படுவதில்லை. யாருக்கேனும் இது தவறாகப் படும் பட்சத்தில் அவருக்கான எனது பதில்,

“இருந்துவிட்டுப் போகட்டும்”

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தன் நிதிப் பள்ளிகள் என்கிற வகையில் பெரிதும் சிறிதுமாய் ஏறத்தாழ 6000 மேல் நிலைப் பள்ளிகளாவது தேறும். இவை தவிர ஆங்கில வழிப் பள்ளிகள் வேறு.

 நிறையக் குழந்தைகள் 1100 மதிப்பெண்களுக்குமேல் பெற்றிருக்கிறார்கள். 1148  மதிப்பெண்கள் பெற்ற ஒரு குழந்தைக்கு மருத்துவம் அரசுக் கோட்டாவில் கிடைக்கவில்லை. சக ஆசிரியர் ஒருவரின் மகள் 1123 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாள். அவளுக்கு அவர்கள் விரும்புகிற பொறியியல் கல்லூரிகள் எதிலும் இடம் கிடைக்காது என்று சோர்ந்து போயிருக்கிறார்.

1115 மதிப்பெண்கள் எடுத்திருக்கக் கூடிய ஒரு குழந்தைக்கு மிகுந்த யோசனைக்குப் பிறகே இளங்கலை இயற்பியல் பிரிவில் சேர்த்துக் கொண்டார் அருட்சகோதரி ஒருவர்.

காரணம் இதுதான். 1150 மதிப்பெண்களுக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே பிரசித்தி பெற்ற கல்லூரிகளில் அரசு கோட்டாவின்வழி இடம் கிடைக்காது போலிருக்கிறது. மதிப்பெண்களை அள்ளிக் குவித்திருக்கிறார்கள் பிள்ளைகள்.

வஞ்சனையோ கஞ்சத்தனமோ இல்லாமல் வாழ்த்திவிடவேண்டும்.

ஆனால் இன்னொரு புறமும் இருக்கிறது

மேற்சொன்ன 6000 பள்ளிகளில் ஏறத்தாழ 3000 பள்ளிகளிலாவது ஆயிரத்திற்கும் குறைவான மதிப்பெண்களே குறைவான மதிப்பெண்களாக இருந்திருக்கும்.

எனில்,

மாநில அளவிலான இடத்தை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு புறத்தைப் பார்ப்போம். 1197 எடுத்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற அதே குழந்தைதான் அந்தப் பள்ளியிலும் முதல் மாணவி.

அதே நேரத்தில் 900 மதிப்பெண்களைப் பெற்ற ஒரு குழந்தை அவனது அல்லது அவளது பள்ளியில் முதல் மாணவணாகவோ முதல் மாணவியாகவோ வந்திருக்க வாய்ப்பு உண்டு.

1197 மதிப்பெண்கள் பெற்ற மாணவியின் பெயர் அவளது பள்ளியின் BOARD OF HONOURS இல் பதிக்கப் படும் எனில் 900 மதிப்பெண்கள் பெற்று அவனது பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனது பெயர் அவனது பள்ளியின் " BOARD OF HONOURS" இல் பதிக்கப் படும்.

அவன் 1197 ம் இவன் 900 மும் பெறுவதற்கு அவர்களது படிப்பு மட்டுமே காரணம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் சமூகப் பின்புலம் மட்டுமல்ல பள்ளியின் சமூகப் பின்புலமும் சேர்த்தே பரிசீலிக்கப் படவேண்டும்.

அந்தந்தப் பள்ளிகளின் கட்டுமான, கல்வி மற்றும் சமூகக் கட்டமைப்புகளும் சேர்ந்துதான் இரண்டு பள்ளிகளின் முதல் மதிப்பெண்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தத் தீர்மானிக்கின்றன.

அது 1197, இது 900. ஆனால் அது அது அந்தந்தப் பள்ளிகளின் முதல் மதிப்பெண்கள்.

அதை அந்தப் பள்ளி கொண்டாடுமெனில் இதை இந்தப் பள்ளி உச்சி மோர்ந்து கொண்டாடவேக் கொண்டாடும்.

இதில் இன்னொரு விஷயம் உண்டு.

900 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் பெயர் இந்தப் பள்ளியில் “BOARD OF HONOURS "இல் பதியப்பெறும் ஆனால் 1197 மதிப்பெண்கள் பெற்ற குழந்தை படித்த பள்ளியில் படிக்கும் ஒரு பிள்ளை 1170 பெற்றிருந்தாலும் அவன் பெயர் பலகையில் ஏறாது.

எனில்,

900 ஐ விட 1170 குறைவா எனில், இந்தப் பள்ளியில் 900 என்பது அந்தப் பள்ளியின் 1170 க்கு இணையானதே. மேலே பார்த்த விஷயங்களே இதற்கானக் காரணங்கள்.

அந்த வகையில் எங்கள் பள்ளியில் சென்ற ஆண்டு 975 மதிப்பெண்கள் பெற்றுமுதலிடம் பெற்ற ரஞ்சிதவள்ளி என்ற குழந்தைக்கு “ரோட்டரி”, மற்றும் “லயன்ஸ்” போன்ற அமைப்புகளும் சில தொண்டு நிறுவனங்களும் பொருளும் பரிசுகளுமாக கொடுக்கவே செய்தன.

1197  முதற்கொண்டு 750 மதிப்பெண்கள்வரை பெற்று அந்தந்த பள்ளிகளில் முதலிடத்தைப் பெற்றவர்கள் அனைவருமே இரண்டாண்டுகள் பள்ளிகளுக்கு சென்று படித்து, ஆசிரியர்களின் தொடர் கண்கானிப்பையும் ஆலோசனைகளையும் பெற்று, சிறப்பு வகுப்புகள் மற்றும் தனி வகுப்புகள் சென்று அவ்வப்போது தேர்வுகளை எழுதி, தயாரித்து கடந்து வந்தவர்கள்.

ஆனால் பள்ளியின் வாசலை ஒரு நாளும் மிதிக்காமல், எந்த ஆசிரியரின் வழிகாட்டுதலுமில்லாமல், சிறையிலிருந்தபடியே தேர்வெழுதி பேரறிவாளன் 1096 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான்.

பொதுவாகவே நல்ல மதிப்பெண்களை எடுத்த பிள்ளைகளை படிக்க வைக்க வசதி இல்லாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோரைப் பார்த்து ஏன் படிக்கிற பிள்ளையை இப்படி வீணடிக்கிறீங்க என்று கேட்போம்.

ஆனால் 1096  மதிப்பெண்கள் பெற்ற, நன்கு படிக்கிற பிள்ளைக்கு பணமோ பரிசுகளோகூட வேண்டாம்.

கொல்லவே கொல்வோம் என்றால் எப்படி?

இரண்டு பிள்ளைகளைப் பெற்ற ஒரு தந்தை இரண்டு கை ஏந்தி யாசிக்கிறேன்

அவனையும் மற்ற இருவரையும் உசிரோடு விடக்கூடாதா? 

“ எதற்கும் உதவாத ஓராளும் எங்கும் இருக்க மாட்டான்”


சரியாக நினைவில் இல்லை. அநேகமாக சென்ற வெள்ளி என்று நினைக்கிறேன்.

அதில் ஒன்றும் பிரச்சினையும் இல்லை. எனவே அதில் நின்று குழம்பாமல் நகர்கிறேன்.

நானும் நண்பர் அன்பழகனும் சமயபுரம் சுங்கச் சாவடியில் (தோல் பிளாசா) நின்று கொண்டிருந்தோம். பேருந்து நிலையத்தில் நிற்காமல் வரும் பேருந்துகளும் இங்கு கண்டிப்பாக நின்றே போக வேண்டும் என்பதாலேயே சிலர் இந்த சுங்க வரி ஏற்பாட்டிற்கு ரசிகர்களாய் மாறிப் போயிருக்கிறார்கள்.

அந்த நேரம் பார்த்து எங்களிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் படித்த மாணவன் ஒருவன் ஒரு புன்னகையோடு எங்களை நோக்கி வந்தான்.

நான்கு பாடங்களில் தேர்ச்சி பெறாதவன். அவ்வளவாய் படிக்க மாட்டான் என்பதால் அவன் ஒன்றும் தெரியாத மக்கு என்பதாகத்தான் பள்ளியின் பொதுப் புத்தியில் பதிந்து போயிருந்தது.

வணங்கினான்.

வணங்கினோம்.

”என்னங்க சார் இந்தப் பக்கம் ப்ளாட் ஏதும் வாங்கிப் போட்டிருக்கீங்களா சார்?”

விட்டால் எங்கே தேர்ச்சி பெறாத தாள்களின் நிலை குறித்து கேட்டு விடுவோமோ என்ற பயத்தில் பிள்ளை முந்துகிறான் என்றே பட்டது.

“ எங்கப்பா இங்கல்லாம் வாங்குறது? ஏதேனும் ஒதுக்குப் புறமான கிராமத்தில் வாங்கினால்தான் உண்டு.”

“ஏன் சார் நகர்ப் புறத்தில் இப்படி ஜனங்கள் குவிகிறார்கள்?”

“பொழப்பு அங்கதானேப்பா கிடைக்குது”

” அது என்னவோ நெசம்தான் சார். பொழைக்கிறதுக்காக 10000 பேர் ஒரு நகரத்துக்கு வந்தா அவர்களது மளிகை, காய்கறி, பொழுதுபோக்கு, லாண்டரி, தேநீர்க் கடை, என்பது போல இன்னும் ஒரு 2000 பேர் குடியேற வேண்டி வருதே சார்”

“ஆமாம்பா”

ஆச்சரியம் தொற்றிக் கொள்ள வியப்பின் உச்சியில் நின்று அவனைக் கவனித்தேன்.

”ஜப்பான்லயும் இந்தப் பிரச்சினை வந்திருக்கு சார்”

“ம்...”

” அவன் புல்லட் ரயில் கொண்டு திறமையா ஜமாலிச்சிருக்கான் சார்”

உறை நிலைக்கு கிட்டத் தட்ட அருகில் சேர்ந்திருந்தேன்.

தொடர்ந்தான்,

”புல்லட் ரயில் 600 கிலோ மீட்டர் வேகத்துல போகும் சார்”

”ம்...”

“ அத இங்க கொண்டு வந்தா மதுரைலிருந்து சென்னைக்கு ஒரு மணி நேரம்தான். திருச்சி , விழுப்புரம் போன்ற முக்கிய இடங்களில் நின்று போனால் ஒன்றரை மணி நேரம்தான்”

“ம்...”

“ அப்புறம் ஏன் சார் சென்னையில் போய் குவியப் போகிறான்”

அசந்து போனேன். இதில் சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்க நிறைய இருந்தாலும் யோசிக்கவே வைத்தான்.

இவனையா மக்கு என்று கொண் டிருந்தோம்.

இவனைப் போன்ற பிள்ளைகளிடம் மனது விட்டுப் பேசினாலே நிறைய பிரச்சினைகள் தீர்ந்து போகும்.

கை குலுக்கினேன்.

எதற்கென்று விளங்கியதோ என்னவோ அவனும் சிரித்துக் கொண்டே கை குலுக்கினான்.

பேருந்து வந்தது.

கிளம்பினோம்.

1600 களின் துவக்கத்தில் கொமேனியஸ் சொன்னது உயிர்ப்போடு அசையில் வந்தது,

“ எதற்கும் உதவாத ஓராளும் எங்கும் இருக்க மாட்டான்”

கொண்டாடுவோம்


முதல்வர் ஜெயலலிதா அவர்களும் கலைஞர் அவர்களும் இன்று ஒரே நாளில் நான்கு முறை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அக்கறையோடு ஆலோசித்தார்கள். ஆலோசனை முடிந்து திரும்பிய கலைஞர் அவர்களை முதல்வர் அவர்கள் வாசல் வரை வந்து புன்னகையோடு கை அசைத்து வழியனுப்பி வைத்தார்கள் என்று ஒரு செய்தி வந்தால் அதைக் கூட நம்பி விடலாம்.

தேர்தல் பிரச்சாரத்தில் கல்வி பேசு பொருளாயிருக்கிறது என்று சொன்னால் அதை நம்ப முடியாதுதான். அதுவும் அது அமெரிக்காவில் என்றால் நான்கும் மூன்றும் எட்டு என்பதை நம்புபவனால்கூட நம்ப முடியாதுதான்.

ஆனாலும் அது உண்மைதான். 

சலனமோ, சந்தேகமோ இலாமல் நம்புங்கள்.

கூப்பிய கரங்களோடு வாக்கு கேட்டுப் போகும் ஒபாமாவை சட்டையை பிடித்து உலுக்காத நிலையில், (வருகிற செய்திகளைப் பார்த்தால் அவரது அவரது சட்டை உலுக்கப் பட்டிருந்தால்கூட அதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை)  மக்கள் கேட்கிறார்கள்,

“உலகில், ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் முதல் பத்து நாடுகளின் மொத்த செலவைக் காட்டிலும் அமெரிக்காவின் ராணுவ செலவு அதிகமாக்கும் என்று பெருமை பொங்க பேசினீர்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து ஏராளமாய் பேசினீர்கள்.

அதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.

என்ன செய்தீர்கள் இதுவரை கல்விக்காய்? அதை சொல்லுங்கள் முதலில்.

எப்போதாவது எங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து பேசியிருக்கிறீர்களா? 

கல்விக்காக ஒரு போதும் பேசாத நீங்கள், 

மத்திய தர வர்க்கத்து அமெரிக்க குழந்தைகளுக்கே கல்வி கனவாய்ப் போயிருக்கிற நிலையில்,

உழைக்கும், ஏழை அமெரிக்கக் குழந்தைகளின் கனவிலிருந்தும் கல்வி களவாடப் பட்டு விட்ட சூழலில்,

அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் அக்கறையோ கவலையோ கொள்ளாத நீங்கள்,

எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறீர்கள்?” என்று நியாயமாக கேட்கிறார்கள்.

கதி கலங்கித்தான் நிற்கிறார் ஒபாமா.

அமெரிக்க அதிபருக்கான இரு வேட்பாளர்களுக்குமே கல்வி பெரும் சவாலைத் தந்திருக்கிறது.

" நாங்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம். கல்வி குறித்த உங்களது தொலை நோக்குத் திட்டமென்ன?

ஈரான், எகிப்து, எத்தியோப்பியா பற்றிய உங்கள் அப்பிப்பிராயமெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.

கல்வியை ஏன் மறந்தீர்கள்?

அமெரிக்கப் பள்ளிகளில் இருந்து மணிக்கு 857 மாணவர்கள் வெளியேறுகிறார்கள் என்ற உண்மையோ, 2007 இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி வருடத்திற்கு 12 லட்சம் குழந்தைகள் இடை நின்று போகிறார்கள் என்ற உண்மையோ ஏன் உங்களுக்கு இதுவரை உறைக்காமலே போனது?

கல்வி குறித்த அக்கறை உள்ளவருக்கே எங்கள் வாக்கு” என்று உரத்து கூறுகிறார்கள்.

இதுவரை நேரடியாய் அரசியலில் ஈடுபட்டுப் பழக்கப் பட்டிராத கல்லூரி வாரியமும், நேஷனல் மால் என்ற அமைப்பும் தெருவுக்கு இறங்கி இடை நிற்றலுக்கு எதிராய் போராடத் தொடங்கியுள்ளன.

கல்வி குறித்த வாக்குறுதிகளே இந்த அமெரிக்க தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறது.

இதில் நாம் கொண்டாட என்ன இருக்கிறது?

இருக்கிறது.

இன்று அமெரிக்காவில் வீசும் புயல் நாளையோ நாளை மறு நாளோ இந்தியாவை வந்து சேரும்.

உலகத்தில் எந்த மண்ணில் தேர்தல் நடந்தாலும் இனி கல்வி அங்கு பேசு பொருளாய் மாறும் என்ற நம்பிக்கையே நமக்கு ஒரு புன்னகையைக் கொண்டு வந்து சேர்க்கிறது.

தீர்மானிக்கிற சக்தியாய் மாறியிருக்கிறது கல்வி.

புன்னகையோடு கொண்டாடுவோம்

அம்மாக்களுக்கே அது சாத்தியம்.



ஆசிரியர் அறையில் எல்லோரும் தாள் திருத்திக் கொண்டிருந்தோம்.

ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒருத்தி தன்னை ஒரு பையன் கல்லால் அடித்துவிட்டான் என்ற புகாரோடும் ஒரு கல்லோடும் என்னிடம் வந்தாள்.

“ சார், எத்தன வாட்டி சொன்னாலும் கேக்காம இந்தக் கல்லாலேயே அடிக்கிறான் சார்”

நெசத்துக்குமே சின்னக் குழந்தைகளின் பிர்ச்சினைகளை சச்சரவுகளை தீர்த்து வைப்பதில் எனக்கு கொஞ்சமும் போதாது. எனவே அதிலிருந்து கழட்டிக் கொள்ள விரும்பினேன்.

“ உங்க க்ளாஸ் சார் யாருப்பா?”

“செல்வக்குமார் சார்”

“சரி , அப்ப அவர்கிட்ட போய் சொல்லுடா. இதுக்கு ஏன் என்கிட்ட வந்த?”

“செல்வகுமார் சார்தான் உங்ககிட்ட போய் சொல்ல சொன்னார்”

செல்வகுமாரும் எனது மாணவன்தான். ஏதோ திட்டத்தோடுதான் அனுப்பியிருக்கிறான் என்று ஒரு புன்னகையோடு நினைத்தவன்,

சரி சரி வகுப்புக்கு போயி அந்தப் பையன வரச் சொல்லு. ரெண்டு போட்டு அனுப்பறேன் என்று சொன்னவன் என்ன தோன்றியதோ தெரியவில்லை ”இங்க கொஞ்சம் வாயேன்” என்றேன்.

வந்தாள்.

“அந்தக் கல்லக் கொடு”

கொடுத்தாள்.

ஒரு புளியங்கொட்டையைவிட சற்று பெரியதாய் இருந்தது.

“ இதாலதான் அடித்தானா?”

“ஆமாம் சார்”

“சரி, இந்தக் கல்ல யாராவது ஒரு சார் மேல வீசச் சொன்னா எந்த சார் மேல வீசுவ?”

“எந்த சார் மேலேயும் வீச மாட்டேன் சார்”

“ சும்மா சொல்லுடா. யாரும் அடிக்க மாட்டாங்க”

 “ சத்தியமா யார் மேலேயும் போட மாட்டேங்க சார்”

அதற்குள் இந்த விளையாட்டு பிடித்துப் போகவே எல்லோரும் ஆளாளுக்கு கேட்க ஆரம்பித்து விட்டார்கள். சேவியர் ஒரு படி மேலே போய் சொன்னா சாக்லேட் வாங்கித் தருவதாகவே சொன்னான்.


‘ யார் மேலேயும் போட மாட்டேன் சார்”

கனகராஜ் சாரை தனது பையனது படிப்பு சம்பந்தமாக பார்க்க வந்திருந்த ஒரு மாணவனின் அம்மா உள் புகுந்தார்.

“ இப்ப இந்தக் குட்டி எந்த சார் மேல கல்லப் போடுவான்னு தெரிஞ்சுக்கனும். அவ்வளவுதானே சார்?”

“ஆமாம்”:

“இங்க வாடா பாப்பா”

போனாள்.

“ உனக்கு யார ரொம்பப் பிடிக்கும்?”

“ எங்க அப்பாவ”

“பாப்பாக்கு எந்த சாமிய ரொம்பப் பிடிக்கும்?”

“ மாரியாயி”

“ சரி இப்ப மாரியாயி வந்து இந்தக் கல்ல ஒரு சார் மேல போடுன்னா என்ன செய்வ?”

“ போட மாட்டேன்”

“சரி, யார் மேலயாச்சும் போடலைனா உன் கண்ணையும் உங்க அப்பா கண்ணையும் புடுங்கிடுவேன்னு மாரியாயி சொன்னா என்னா செய்வ?”

பேசாமல் நின்றாள்.

“ மாரியாயி சொன்னத செய்யிலைனா ரெண்டு பேத்து கண்ணையும் பறிச்சிடும். ரொம்ப கோவக்கார சாமி. சொல்லு எந்த சாரு மேல போடுவ?”

மிகவும் தயங்கித் தயங்கி “ இந்த சார் மேல தான் என்று சொல்லிக் கொண்டே என்னை நோக்கி கை நீட்டினாள்”

எல்லோரும் சிரித்தோம். சேவியர் கொஞ்சம் அதிகமாக சிரித்தான்.

“எல்லாம் கேக்கற விதத்துல இருக்கு சார்”

ஆமாம் பிள்ளைகளிடம் கறக்க செரிவான கேள்விகள் அவசியம்.

அம்மாக்களுக்கே அது சாத்தியம்.

Sunday, March 2, 2014

மிச்சமிருக்கிறது வழக்கு…



கொந்தளிப்பின் விளிம்பில் நின்றவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் பல ஊடத்தினரும் காங்கிரஸ்காரர்களும். மக்கள் கொதித்துப் போய் இருப்பதாகவும், எனவேதான் தாங்கள் மக்கள் மன்றத்தின்முன் இதுபற்றி விவாதிக்க விரும்புவதாகவும் உரக்கப் பேசுகிறார்கள். யாரையும் பேச விடாமல் பேசுகிறார்கள். அப்படியே யாருக்கேனும் பேசுவதற்கு சற்று வாய்ப்புக் கிடைத்து பேசினாலும் உடனே பெருங்குரலெடுத்து, தலைவர் ராஜீவைக் கொன்ற கொலையாளிகளை விட்டு விடச் சொல்கிறீர்களே இது நியாயமா என்று கேட்கிறார்கள். இனி உங்களிடம் பேச என்ன இருக்கிறது? இது நியாயமா என்பதை நாங்கள் மக்கள் மன்றத்திடம் கேட்கிறோம் என்கிறார்கள்.

அவர்கள் அவசரமாகவோ ஆதாயத்திற்காகவோ யாரிடம் நியாயம் கேட்பதாக சொல்கிறார்களோ அந்த மக்கள் மன்றத்தின் ஒரு பிரதிநிதியாகத்தான் இதை எழுதுகிறேன். அந்த மக்கள் மன்றத்தின் ஒரு துளி என்பதைத்தான் நமக்கான பலமாக உணர்கிறோம்.
நாடும் மக்களும் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று தொடர்ந்து அவர்களால் கூறப்படும் ஒரு விஷயத்தை தமிழ் மண்னின் குறுக்கும் நெடுக்குமாய் பயணித்துப் பார்த்தவர்கள் என்ற வகையில் இந்தக் கூற்றில் குட்டி எறும்பொன்று உருட்டிப் போகும் அதனிரையின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்கேனும் உண்மை இல்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட விரும்புகிறேன்.

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல என்பதையும், அவர்களது பெரும்பான்மையான நிலை பாடுகளில் செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்பதைவிட எதிர்நிலையிலேயே நிற்பவன் என்பதையும் பதிவின் இந்த நிலையிலேயே சொல்லிவிடுகிறேன்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவதனால் நாடோ மக்களோ கொந்தளித்துவிடவில்லை. மாறாக இந்த மூவரின் விடுதலை மக்களை மகிழ்வுறவே செய்திருக்கிறது. அதே நேரம் தங்களது மகத்தான தலைவனைக் கொன்றவர்களை விடுதலை செய்துவிட வேண்டும் என்கிற நிலையில் இவர்களது விடுதலையை மக்கள் பார்க்கவில்லை.. மாறாக, தங்களது அன்பிற்குரிய தலைவனின் கொலையில் இந்த மூவருக்கும் சம்பந்தமில்லையோ என்கிற அய்யமும், தேவை இல்லாமல் சில அப்பாவிகளைத் தண்டித்திருக்கிறோமோ என்கிற அய்யமும் அவர்களை இந்த விடுதலையை ஒரு நிம்மதி பெருமூச்சோடு பார்க்க வைத்திருக்கிறது

உண்மையான குற்றவாளிகளையும் அல்லது அந்தக் குற்றத்தோடு தொடர்புடையவர்களையும் படு சுதந்திரமாக உலாவ விட்டிருக்கிறோமோ என்கிற அய்யம் கலந்த ஒரு குற்ற உணர்வோடும், அதில் சிலர் நியாயவான்களைப் போல் ஊடக விவாதங்களில் பங்கேற்கிறார்களோ என்கிற அச்சமுமே அவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களின் இரண்டு விருப்பங்களையும் இரண்டு பேருக்கான நன்றியயும் சொல்லிவிட வேண்டும்.

இந்த மூவரையும் தூக்குக் கயிறிலிருந்து காப்பாற்றிய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியையும், அவர்களை சிறையிலிருந்து விடுவிப்பதாய் அறிவித்த மாண்பமை தமிழக முதல்வரையும் அவர்கள் மனதார நன்றி சொல்லி வாழ்த்துகிறார்கள்.

தங்களது தங்கத் தலைவனைக் கொன்றவர்களை ஒரு வெளிப்படையான விரைவான மறுவிசாரனையின் மூலம் கணாடறிந்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றே மக்கள் மன்றம் விரும்புகிறது.
குற்றவாளிகளை நெறிப்படுத்துவதாகத்தான் தண்டனை இருக்க வேண்டுமேயன்றி மரணதண்டனை என்பது மற்றுமொரு கொலை என்பதால் மரண தண்டனையை முற்றாய் ஒழிக்க வேண்டும் என்பதிலும் தமிழ்த் திரள் உறுதியாயிருக்கிறது.

உண்மையான குற்றவாளிகளை தப்ப வைத்துவிட வேண்டும் என்பதில் இந்த வழக்கினை நடத்தியவர்கள் குறியாக இருந்து எப்படியோ இந்த வழக்கினை முடித்து யாரையோ தண்டிப்பதன் மூலம் கோப்பினை மூடிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்களோ என்ற அய்யம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
பொதுவாகவே எந்த ஒரு வழக்கின் விசாரனையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளவே யாரும் விரும்புவார்கள். 2G அலைக்கற்றை வழக்காயினும், சொத்துக் குவிப்பு வழக்காயினும் வேறு எந்த ஊழல் வழக்காயினும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதிலிருந்து விலக்கு பெறுவதற்காகப் போராடிப் பார்ப்பதையும் முடியாத பட்சத்தில் நெஞ்சு வலியை கொள்முதல் செய்துகொண்டு மருத்துவ மனைகளில் போய் படுத்துக் கொள்வதையும்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தனக்கு இந்த வழக்கிற்கு தேவையான மிக முக்கியமான சில விஷயங்கள் தெரியும் என்றும் ஆகவே தன்னை வெளிப்படையாகவும் நியாயமாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் ஏறத்தாழ இந்த வழக்கு தொடங்கிய நாளில் இருந்தே திருச்சி வேலுசாமி சொல்லி வருகிறார். இதே கோரிக்கையை ஊர் ஊராகப் போய் அவர் கத்திச் சொல்லிப் பார்க்கிறார். என்னை முற்றாய் விசாரியுங்கள் என்று சொல்பவரைப் பார்த்து ஏன் நழுவுகிறார்கள் என்ற அய்யம் தமிழ் மக்களிடம் இருக்கிறது.

இந்தத் தீர்ப்பும் மாண்பமை முதல்வரின் அறிக்கையும் கிடைத்தவுடன் இப்படித்தான் முகநூலில் எழுதினேன்,
    
 மூவரின் விடுதலைக்காக மக்கள் தளத்தில், நீதி மன்றங்களில், சமூக             ஊடகங்களில், சட்ட மன்றத்தில், பாராளு மன்றத்தில் உழைத்த அனைவரையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

எனக்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லை. இன்னும் சொல்லப்போனால் இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆனாலும் இதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட மகள் செங்கொடி உள்ளிட்ட அனைவரையும் நினைத்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த நியாயமான போராட்டங்களை மதித்து இந்த அரசு எதுவும் செய்ய வில்லை என்பதையும் கருத்துக்களையோ, போராட்டத்தின் நியாயத்தையோ உணர்கிறவர்கள் என்றால் கூடங்குளம் போராட்டத்தின் நியாயம் உணரப் பட்டிருக்கும். எவ்வளவு அழுத்தமான, நியாயமான, செறிவான போராட்டம். 150 ஆண்டுகளில் இப்படி ஒரு நியாயமான செறிவான , வன்முறை துளியுமற்ற போராட்டத்தை பூமி பார்த்ததில்லை.
ஒரு நியாயமான மனிதனிடத்தில் இந்த வழக்கு போனதால் கிடைத்தது என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

அதே நேரத்தில் இந்த மனிதனிடத்தில் இந்த வழக்கு போகும் நேரம் வரைக்கும் இத்தனைக் காலம் தூக்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றியது இத்தகைய போராட்டங்கள்தான் என்பதையும் நினைத்துக் கொள்கிறேன்.”
இந்த நிமிடம் வரை அவர்களைத் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றியது இத்தகையப் போராட்டங்கள்தான். அதிலுங்குறிப்பாக சுதாங்கன், திருச்சி வேலுசாமி, வை கோ ஆகியோரின் பங்களிப்பை நான் இந்தப் புள்ளியில் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

எதோ இப்போதுதான் கருணை மனு நிராகரிக்கப்பட்டதாய் பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்கிறது திருச்சி வேலுசாமி அவர்களின் நூலான “ராஜீவ் படுகொலை… தூக்குக் கயிற்றில் நிஜம்”. கே ஆர் நாராயணன் அவர்கள் இந்த மூவரது கருணை மனுவையும் நிராகரித்து அவர்களது தூக்கிற்கான தேதியும் அறிவிக்கப் பட்டுவிட்டது ஒருமுறை. தூக்கிலிடுவதற்கான ஆள்கூட தேர்வு செய்யப்பட்டு விட்டார். மருத்துவர் இந்த மூவரையும் சோதித்துப் பார்த்து விட்டார்.

எல்லாம் முடிந்துவிட்டது. அடுத்தநாள் விடியல் அவர்களது சாவுச் செய்தியோடு வரப்போகிறது என்றுதான் பெரும்பான்மையோர் நினைத்திருந்தோம். ஆனால் எந்தக் காரணமும் குறிப்பிடப் படாமல் அந்தத் தூக்கு நிறுத்தி வைக்கப் பட்டது. இதற்கான காரணத்தையும் அந்த நூல் விரிவாக சொல்கிறது.

அடுத்தநாள் தூக்கு என்கிற நிலையில் அது குறித்த ஒரு விவாதத்தை விஜய் தொலைக் காட்சி ஏற்பாடு செய்கிறது. காங்கிரஸ் சார்பில் கௌரிசங்கர், ம.தி.மு.க சார்பில்வைகோ, இந்திய மார்க்சிஸ்ட் பொது உடமைக் கட்சி சார்பில் டி கே ரெங்கராஜன், மற்றும் வேலுசாமி ஆகியோர் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். என்ன காரணத்தினாலோ தோழர் டி கே ரெங்கராஜன் அவர்களாலும் வை கோ அவர்களாலும் வர இயலாமல் போகிறது. சுதாங்கந்தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசினால் நியமிக்கப் பட்ட ஜெயின் கமிஷன் நூற்றுக் கணக்கான நபர்களிடம் விசாரனையை நத்தியதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை அரசுக்கு அளித்தது. விசாரிக்கப் பட்டவர்களில் திருச்சி வேலுசாமியும் ஒருவர்.
ராஜீவ் கொலையில் உண்மைக் குற்றவாளிகளை இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை என்றும் இன்னும் விசாரிக்கப் பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னதோடு விசாரிக்கப் பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்றையும் கமிஷன் வழங்கியது. அதன் அடிப்படியில் பன்முனைநோக்கு புலனாய்வு விசாரனைக் குழுவை அரசு நியமித்திருக்கிறது என்பதையும் வேலுசாமி சொல்கிறார். அந்த விசாரனை நடக்கும் வேளையில் அதில் சாட்சி சொல்வதற்கு முருகனோ, சாந்தனோ, பேரறிவாளனோ தேவை[ப் பட்டால் அப்போது யாரால் அவர்களை உயிரோடு தர முடியும் என்பதாக வேலுசாமி அந்த விவாதத்தில் நொந்து போனவராய் சொல்லியிருக்கிரார்.

வேலுசாமியின் இந்த பதிவால் அடுத்த கேள்வியைக் கேட்க இயலாத அளவிற்கு சுதாங்கன் ஸ்தம்பித்துப் போயிருக்கிறார். விவாதம் பாதியிலேயே முடிந்திருக்கிறது.

கொலை வழக்கு இன்னும் நடக்கிறது என்றால் இன்னும் கொலையாளிகளைக் கண்டடைய வில்லை என்றுதானே பொருள். எனில் இவர்கள் எப்படி குற்றவாளிகளாவார்கள். படபிடிப்புத் தளத்திலிருந்த அனைவரும் வேலுசாமியைக் கட்டியணைத்தார்களாம். உடனே இதை விளக்கியும் அடுத்த நாள் தூக்கு நியாயமற்றது என்பதாகவும் ஒரு மனு அவசர அவசரமாகத் தயாரிக்கப் பட்டு தொலை நகல் வழியாக அன்றைய குடியரசுத் தலைவர் கே ஆர் நாராயணன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

காரணம் சொல்லப் படாமல் அடுத்தநாள் நடக்கவிருந்த தூக்கு ரத்து செய்யப் படுகிறது. இந்த மனுதான் தூக்கு ரத்தானதற்கு காரணம் என்று சொல்லப் படவில்லை. என்றாலும் இதுவாகத்தானிருக்க வேண்டும். இல்லை என்றால் இதைப் போலவே வேறு யாரிடம் இருந்தேனும் இது மாதிரியானதொரு அய்யம் குடியரசுத் தலைவரிம் கொண்டுபோகப் பட்டிருக்க வேண்டும். அப்படி வேறு யாரோ கொண்டு போயிருந்தால் கொலையாளிகள் இவர்களாயிருக்க வாய்ப்பில்லை என்கிற அய்யத்திற்கு இன்னும் வலு சேரவே செய்யும்.

ஒருக்கால் அன்றே மூவரும் தூக்கிலேற்றப் பட்டிருந்தால் அவர்களை விடுதலை செய்வதற்கு மாண்பமை முதல்வருக்கு இன்று வாய்ப்பே இருந்திருக்காது. அதனால்தான் இதுவரை அவர்கள் உயிரோடு இருப்பதற்கு போராட்டங்களும் இவர்களைப் போன்ற தனி ஆளுமைகளும் காரணம் என்று சொன்னேன். காரணமானவர்களின் முழுமையான பட்டியல் இதுவென்று ஒருபோதும் சொல்லமாட்டேன்.
1991 மே 21 ஆம் நாளன்று இரவு10.25 வாக்கில் தனக்கு சுப்ரமணிய சாமிக்குமிடையில் நடந்ததாக ஒரு உரையாடலை வேலுசாமி அந்த நூலில் தருகிறார்.

மே 22 அன்று மதுரையில் வேலுசாமியும் சுப்ரமணிய சாமியும் கலந்துகொள்ளவேண்டிய தேர்தல் பிரச்சாரக் கூட்டம். 22 அதிகாலை தில்லியிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் சுப்ரமணியசாமி அவர்கள் அங்கிருந்து மதுரை விமானத்தில் வருவதாகவும், விமானம் திருச்சியில் நிற்கும் வேளையில் அவரோடு வேலுசாமி சேர்ந்து கொள்வதாகவும் ஏற்பாடு. அதுகுறித்து பேசுவதற்காகத்தான் 21 ஆம் தேதி இரவு 10.25 வாக்கில் சுப்ரமணிய சாமியை அழைக்கிறார். இவரது குரலைக் கேட்டதும், “ என்ன ராஜீவ் காந்தி செத்துட்டார். அதானே சொல்ல வரேள்” என்று சுப்ரமணிய சாமி கேட்டதாக வேலுசாமி எழுதுகிறார்.

குண்டு வெடித்தது 10.10 அல்லது 10.15 மணி வாக்கில் நடந்ததாகவும் பெரிய புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் புகை அடங்கிய பிறகே தானும் திரு மூப்பனார் அவர்களும் சென்று முகம் சிதறிக் கிடந்த தங்களது தலைவரைக் கண்டுபிடித்ததாகவும் திருமதி ஜெயந்தி நடராஜன் அடுத்தநாள் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியை மேற்கோள் காட்டுகிறார் வேலுசாமி. எப்படியும் புகை அடங்க அரை மணி நேரமாவது ஆகியிருக்கும். எனில் மூப்பனார் அவர்களும் திருமதி ஜெயந்தி அவர்களும் தங்களது தலைவரது உடலை அடையாளம் காண்பதற்கும் அதை ஊர்ஜிதம் செய்வதற்கும் அதன் பிறகு அதை மேலித்திற்கு சொல்வதற்குமான நேரங்களைக் கணக்கிட்டால் எவ்வளவு விரைவாக என்று கொண்டாலும் தில்லிக்கு செய்தி சேர்ந்திருக்க 10.45 ஆவது ஆகியிருக்கும். அப்படி இருக்க தன்னிடம் 10.25 கு பேசிய சுப்ரமணிய சாமி ராஜீவ் செத்துவிட்டார்தானே என்று எப்படி சொல்லியிருக்க முடியும். வேலுசாமி இன்னொரு விஷயத்தையும் இந்த நூலில் சொல்கிறார்.
அதே நூலின் 78 ஆம் பக்கத்தில் தேர்தல் செலவிற்காக பணம் கேட்டவர்களிடம் தேர்தல் நடந்தா பார்த்துக்கலாம் என்று சுப்ரமணியசாமி அவர்கள் சொன்னதாகவும் வேலுசாமி சொல்கிறார். ராஜீவ் இறப்பதற்கு முதல்நாள் இதை சுப்ரமணியசாமி சொன்னதாக அவர் சொல்கிறார்.
வேலுசாமி சொல்வதெல்லாம் உண்மை என்று வாதாட நாம் தயாராய் இல்லை. ஆனால் அவை உண்மையா இல்லையா என்பதை ஏன் ஒழுங்காய் விசாரிக்கவில்லை என்பதுதான் நமது கேள்வி. விசாரிக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசை.

மகத்தான ஆளுமையாக விளங்கிய , அந்த நேரத்தின் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக விளங்கிய ராஜீவின் கொலையாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும். ஆனால் அவர்களுக்கும் மரண தண்டனை கூடாது என்பதே நமது நிலை.

ஆயுள் தண்டனை என்றால் சாகும்வரைதானே என்றுகூட மெத்தப் படித்த அறிவாளிகள் கேட்கிறார்கள். அப்படி எனில் பிரேமானந்தாவிற்கு இரட்டை ஆயுள் விதிக்கப் பட்டதே. ஒரு ஆயுள்தானே அவருக்கு முடிந்திருக்கிறது. இன்னொரு ஆயுள் தண்டனைக்காக மீண்டும் உயிர்ப்பித்து அவரை உள்ளே போடுவீர்களா?

வேலுசாமிகூட எந்த இடத்திலும் தான் சொல்வதை ஏற்கக் கோரவில்லை. மாறாக தன்னையும் உட்படுத்தி விசாரனையை முடுக்கிவிட வேண்டும் என்றே கூறுகிறார். அது நியாயமாகவே படுகிறது.

எனது முகநூல் நிலைத்தகவலை கீழ்வருமாறுதான் முடித்திருந்தேன். அப்படியே இங்கும் முடிக்கிறேன்,

”1 இனி யாரையும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. அதற்கான தயாரிப்பை  நாம் கொண்டு சென்றாக வேண்டும். தன்னை மாய்த்துக் கொள்ளுதல் என்பது இனி போராட்ட வடிவமாக இருத்தல் கூடாது. இளைய உயிர்களின் முக்கியத்துவத்தை நாமும் உணர வேண்டும் , பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும்.

2 மரண தண்டனைக்கு எதிராக என்னென்ன வடிவங்களில் என்னென்ன செய்ய முடியுமோ அதை அது நடக்கும் வரைக்கும் தொய்வின்றி கொண்டு செல்ல வேண்டும்.

3 ராஜீவ் கொலை வழக்கினை மீண்டும் நியாயமான முறையில் வெளிப்படையாக நடத்த வற்புறுத்தி தொடர்ந்து இயங்க வேண்டும். அதை அமெரிக்க நாராயணன் பாஷையில் சொல்வதெனில் மக்கள் மன்றத்தில் நடத்தக் கேட்டு தொடர் இயக்கத்தை நடத்த வேண்டும்”

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...