Saturday, May 27, 2017

மக்கள் சொத்து...

இரண்டு நாட்களுக்கு முன்னால் Sarangapani Narayanasamy சாரை வழியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் நெகிழ்த்தியது.

அந்தக் குடும்பத்தின் தலைவரும் இறந்து தலைவியும் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் வீட்டிற்கு எல்ஐசி பிரிமியம் இரண்டு தவணைகளை கட்டுமாறு கடிதம் போயிருக்குறது.

ஒரு விவரமும் புரியாத நிலையில் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு எல்ஐசி அலுவலகம் வந்திருக்கிறாள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இறந்து போனவரின் குழந்தை.

அவர் 5 லட்சத்திற்கு பாலிசி எடுத்திருந்திருக்கிறார். மரணம் வரைக்கும் ஒழுங்காகக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் பாலிசி எடுத்திருந்தார் விவரம் யாருக்கும் தெரியாது.

சாரங்கபாணி சாரும் அவரது நண்பர்களும் ஒரே வாரத்தில் பணத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த LIC யவாப்பா தனியாருக்குத் தரத் துடிக்கிறீங்க பாவிகளா

ரெண்டு பீரியட் அளவுக்கு குறையாமல் நடக்கிறேன்

இன்றைய நடைபயிற்சியைத் தொடங்குவதற்காக வண்டியை நிறுத்தும்போது நடையை முடித்துவிட்டு வண்டியை எடுக்க வந்த இளம் ஆசிரியரோடான உரையாடலில் சொன்னான்,
"தெனமும் ரெண்டு பீரியட் அளவுக்கு குறையாமல் நடக்கிறேன் சார்"
குறைந்தது ஒன்றரை மணிநேரம் ஒவ்வொரு நாளும் நடக்கிறானாமாம்

கவிதை 80

ஓய்வா என்கிறாய்
ஓய்வுதான் என்கிறேன்
ஓய்விலிருந்த நான்
ஓய்விலிருந்தபடி
ஓய்வுதான் என்றவனிடம்
ஓய்வெடு என்கிறாய்
அழுத்துகிறேன் உன் எண்ணை

போதும் மகளே.

யவனிகாவின் கவிதை குறித்து மயிலாடுதுறையில் பேசும்போது Kani Mozhi G சொன்ன இரண்டு விஷயங்கள் என்னை நெகிழ்த்தின
1) Yavanika Sriram எந்த மண்ணையும் சுவிகீரித்துக் கொள்வதன் மூலம் அவரது கவிதைகள் எந்த நிலத்திற்கும் பொருந்திப் போகிறது.
இது முழுக்க முழுக்க உண்மை. அதுமட்டும் அல்ல யவனிகா எந்த மண்ணின் உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏன் நடுத்தர மக்களையும் சுவீகரிப்பதன் மூலம் இவரது கவிதைகள் எல்லா மக்களோடும் பொருந்திப் போகிறது. இதை அங்கேயே சுட்டவும் செய்தேன்.
என் தோழர்களைக் கொண்டாடும் யாருக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன் என்ற வகையில் கனிமொழிக்கென் அன்பு
2) எட்வினைப் பற்றி நினைக்கும் தோறும் அவர் ஒரு அணுக்கமான அப்பனாகவே எனக்குப் படுகிறார் என்றாள் பிள்ளை.
போதும் மகளே..

கவிதை 79

உறவினர் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்
நண்பர்கள் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்
உணவு விடுதிகளில் சாப்பிடுகிறீர்கள்
நேற்றும் இன்றும் தலித் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
இரண்டே இரண்டு வித்தியாசங்களோடு
அங்கங்கு சமைத்ததைத்தான் அங்கங்கு உண்டீர்கள்
தலித் வீடுகளைத் தவிர என்பது ஒன்று
கடைச் சாப்பாட்டை சாப்பிட
தலித் வீடுகளுக்கு போகும்போது மட்டும்தான்
இவ்வளவு கேமராவோடு போகிறீர்கள் என்பது இரண்டு

Monday, May 22, 2017

யவனிகா எனும் பேராளுமை

நேற்று மாலை மயிலாடுதுறை AVC கல்லூரியில் தன் கவிதைகள் குறித்தான ஆய்வுரைகளுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றினார் தோழன் Yavanika Sriram.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் 100 கிலோமீட்டர். ஒன்னேமுக்கால் மணிநேரம்தான் பயணம்.

கீழத்தஞ்சை பகுதியில் 50 கிலோமீட்டர் பயணத்திற்கு ரெண்டுமணி நேரமாகிறது.

காரணம் அங்கு சாலைகள் நேராகவும் இங்கு வளைந்து வளைந்துமாயும் இருக்கிறது.

இதற்கு காரணம் சாலை கட்டமைப்பிற்கு அங்குபோல் இங்கு நிலங்களை கையகப் படுத்த முடியாது. காரணம் அங்கு சாமானியனிடமும் இங்கு ஆண்டைகளிடமும் நிலமுருப்பதுதான்.

ஆக, நாடு நல்லா இருக்கனும்னா நெலம் சாமானியர்களிடம் இருக்கனும்

இவ்வளவு எளிமையா சொல்லமுடியுமா யவனிகா.

என் அணைப்பும் முத்தமும்

தம்பிகள் துவாரகா சாமிநாதன் முருக தீட்சண்யா Kavingnar Thambi மூவருக்கும் என் அன்பும் முத்தமும்

யாராவது இருக்கிறீர்களா என்ன?

நேற்று வல்லத்தைக் கடந்து போகும்போது தாஜூபாலும் அவரது கவிதைகளும் என்னை தொந்தரவு செய்யத் தொடங்கவே அதை பதிவாக்கினேன்.

அதற்குப் பின்னூட்டமிட்டிருந்த தோழர் Sundarappa Kamaraj எந்தெந்த ஊரைக் கடக்கும்போதெல்லாம் யார் யார் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை என்றொரு பட்டியல் போட்டிருந்தார்

பெரம்பலூரை நினைத்தால் உன் பெயரும் கூடவே நினைவுக்கு வருகிறது எட்வின் என்று யாராவது இருக்கிறீர்களா என்ன?

Sunday, May 21, 2017

வல்லம் தாஜுபால்

வல்லம் தாண்டிக் கொண்டிருக்கிறேன். வழக்கம் போலவே தோழர் வல்லம் தாஜுபாலின் நினைவு வருகிறது.

ரொம்ப காலமாச்சு தலைவனை சந்திச்சு.

எனக்குப் பிடித்த என் தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். சன்னமான கவிதைத் தெறிப்புகளால் அரங்கங்களை வசப்படுத்திக் கொள்வார்.

"தேசியக் கொடியில்
 வெள்ளைக் கொஞ்சம்
விலகிக் கொண்டதால்
பச்சையும் காவியும்
 அடித்துக் கொள்கின்றன"

என்று நச்செனப் போடுவார். கொடிப் பிரச்சினை வந்தபோது பாரதி எழுதிய

"பட்டுத் துகிலெனலாமோ
 அதில்
 பாய்ந்து சுழற்றும்
 பெரும் புயற் காற்று
 மட்டு மிகுந்தடித்தாலும்
 அதை மதியாத உணர்வுகொள்
 மாணிக்கப் படலம்
 இந்திரன் வச்சிரம் ஓர்பால்
 அதில் எங்கள் துலுக்கர்
 இளம்பிறை ஓர்பால்"

என்ற கவிதையோடு பொருத்திப் பார்ப்பேன்

"காட்பரீஸ்
 கம்மர்கட்
இனிப்பிலும்
வர்க்க பேதம்" என்பார்.

நுட்பமான கவிஞர்.

யாரேனும் அவரைச் சந்தித்தால் கேட்டதாக சொல்லுங்கள் தோழர்

அனுமதி மறுப்பீர்கள் எனில்....

இறுக்கிப் பிடித்த வாளோடும் நெஞ்சுநிறைய குரோத்தோடும் மனிதத்திற்கு எதிரான வன்மமும் அசிங்கமும் கலந்த குரலோடும் நகரும் காக்கி பேரணிக்கு அனுமதிப்பீர்கள்.

நடந்து முடிந்த இனப்படுகொலையில் செத்துப்போன என் மக்களுக்காக கூடி மெழுகு கொளுத்தி அழுது அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பீர்கள் எனில் நீங்களும் உங்கள் அதிகாரமும் அழிவின் விளிம்பிற்கு அருகே போய்விட்டீர்கள்

நாசமாய் போவீர்கள்

Tuesday, May 16, 2017

திருப்பிக்கொடு என்றல்லவா....

ஜெயலலிதா அவர்களைக் குற்றவாளி என்று சொன்னது நீதிமன்றம்

அவரை பெங்களூரு சிறையிலே அடைத்தது நீதிமன்றம்

அதற்கு எதிராக பேருந்துகள் எரிந்தன, தாக்கப்பட்டன. தனியார் பேருந்துகளும் இயங்கமுடியாத நிலையை ஆளுங்கட்சியினர் செய்தனர்

வெளியே நடமாடவே முடியவில்லை மக்களால். மருத்துவமனைக்குப் போக முடியவில்லை நோயாளிகளால்

இவை யாவும் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதற்காக நிகழ்ந்தவை

எனில், நீதிமன்றத்திற்கு எதிரானவை

அப்போது மொனமாக இருந்த நீதிமன்றம் இப்போது தங்களிடமிருந்து பிடிக்கப்பட்ட பணத்தை திருப்பிக் கேட்டுப்  போக்குவரத்து தொழிலாளிகள் போராடும்போது  வேலைக்குத் திரும்பவில்லை எனில் எஸ்மா பாயும் என்றெல்லாம் மிரட்டுவது வருத்தமளிக்கிறது

ஊழியனிடமிருந்து எடுத்த பணத்தை அவனுக்கு கொடு என்றல்லவா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுருக்க வேண்டும்தி

Friday, May 12, 2017

முடியும் பிள்ளைகளே

அவரையும் இவரையும் சொல்ல த் தேவையே இல்லை. நம்மை வைத்தே உங்களோடு உரையாட முடியும்.
என்னை மிக நல்ல ஆசிரியர்களுள் ஒருவனாகவே என் பிள்ளைகள், சக ஆசிரியர்கள், இதுவரையிலுமுள்ள எனது ஆசிரியர்கள் எல்லோரும் கருதுகிறார்கள். பேசவும் செய்கிறார்கள்.
கல்வித்துறை உயரதிகாரிகள் சிலருக்கும் இதுதான் மதிப்பீடு.
கொஞ்சம் மிகை எனினும் உண்மைதான்
கேட்கிறமாதிரி உரையாற்றுவதாயும், வாசிக்கிற மாதிரி எழுதுவதாகவும் சொல்கிறார்கள். சிலர் நான் நிறையவும் ஆழ்ந்தும் படிப்பதாக சொல்கிறார்கள்.
இவ்வளவு ஏன், கண்டுகொள்ளப்படாத சிந்தனையாளன் என்கிறார்கள்.
ஏறத்தாழ 10 நூல்கள் இதுவரை எழுதியிருக்கிறேன். எல்லாம் சரியாய் போய் சேர்ந்திருக்கின்றன.
இரண்டு நூல்கள் அச்சில்.
தினமணி ஆசிரியர் என்னை சந்திக்க விரும்புவதாக எழுதுகிறார்.
கொஞ்சம் மிகையாய் மதிபிடுகிறார்கள் என்றாலும் இவை உண்மைதான்.
இன்னொரு விஷயம் ஒரு மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரான நான் இந்த ஜூன் முதல் தலைமை ஆசிரியராக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவும் ஏன் என்றால்,
நான் பத்தாம் வகுப்பில் பெற்ர மதிப்பெண் 311
பன்னிரெண்டாம் வகுப்பில் 575
இவ்வளவு குறைவாக பெற்ர என்னாலே இவ்வளவு முடியும் எனில், என்னைவிட புத்திசாளிகளான உங்களால் எதைக் கடந்தும் பயணிக்க முடியும்
இன்று கிடைக்கும் மதிப்பெண் எதுவாயினும் கொண்டாடுங்கள் குழந்தைகளே.
தேர்ச்சியே இல்லை எனினும் விடுங்கள். இன்ஸ்டண்ட் எழுதிக்கலாம்.
இதை மனதில் வையுங்கள் மக்கு எட்வினால் முடியும் எனில் ஏன் உங்களால் முடியாது?
முடியும் பிள்ளைகளே

நமது போராட்டம்

ATM அட்டையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம் என்ற தனது முடிவை SBI திரும்பப் பெற்றுக் கொண்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள்
இது தற்காலிகமானதாகத்தான் இருக்கும்
போக வங்கியில் உள்ள நமது பணத்திற்கு அவர்கள் வட்டி தருவதற்கு பதிலாக நமது பணத்தைப் பாதுகாப்பதற்காக நாம் கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை சமீபத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது
உடனே நாமென்ன செய்வோம்?
இந்தக் கட்டணங்கள் இல்லாத தனியார் வங்கிகளை நோக்கி நகர்வோம். அவர்களும் நம்மை தேனொழுக வரவேற்று உபசரிப்பார்கள்.
விளைவு, பையப் பைய பொதுத்துறை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை படிப்படியாக இழந்து தேக்க நிலையை அடைந்து மூடப்படும் நிலை வரும்
இந்த நிலைக்குப் பிறகு தனியார் வங்கிகள் கட்டணங்களை பன்மடங்கு ஏற்றினாலும் நமக்கு வேறு போக்கிடம் இருக்கப் போவதில்லை
ஆனால் இது உலகமயம் மற்றும் தாராளமயமாக்கலின் விளைவு. எனில், நமது போராட்டம் அவற்றிற்கு எதிரானதாகத்தான் இருக்க வேண்டும்

எந்த அளவிற்கு அறமற்று

பிஜேபி தலைவர்கள் எந்த அளவிற்கு அறமற்றுப் பேசுவார்கள் என்பதற்கு உதாரணம்
திருமதி தமிழிசை: கலைஞரது வைரவிழாவிற்கு எங்களையும் அழைக்க வேண்டும்
திரு ஸ்டாலின் : திராவிட இயக்கங்களை அழிக்க வேண்டும் என்று போராடுபவர்களை எங்கள் மேடையில் அமர்த்தி சிரமப்படுத்த விரும்பவில்லை. அதனால்தான் பிஜேபியை அழைக்கவில்லை
மாண்புமிகு பொன்.ரா: இது அரசியல் ஆதாயத்திற்காக நடக்கும் விழா. எனவே அதில் பிஜேபி பங்கேற்காது

Wednesday, May 10, 2017

கேள்வி கேட்ட மகளுக்கு

வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராசா அவர்களிடம் ஒரு இளைய குழந்தை கேட்டார்
"இந்த அவையில் இருப்பவர்களில் எத்தனைபேர் தங்கள் குழந்தைகளை பொதுப் பள்ளியில், தமிழ் வழியில் படிக்க வைக்கிறார்கள்?"
இதற்கு கிடைத்த பதில் மீதான விமர்சனத்தைக்கூட வைக்கத் தேவை இல்லை.
இந்த கேள்வி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. இந்தக் கேள்வி தமிழ்ச் சூழலில் புதுசு.
எல்லாக் கட்சியினரிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும். கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றில் குறிப்பாக மொழி குறித்து நடக்கும் நிகழ்வுகளில் இந்தக் கேள்வி இன்னும் கூர்மையாக இன்னும் சூடாகக் கேட்கப்பட வேண்டும்.
அது அனைத்து இயக்கங்களிலும் உள்ள இளைஞர்களை தம் குழந்தைகளை பொதுப்பள்ளியில் சேர்க்க வைக்கும்
அதுதான் தேவை
கேள்வி கேட்ட மகளுக்கு அப்பனின் வாழ்த்து

அடிப்படையில் தவறு

வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ஒரு பெண்ணின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தான் ஒரு மத்திய அமைச்சரென்றும் ஆகவே தனது மகள் கோட்டாவில் சலுகை கேட்பது தவறென்றும் கூறினார்
மேலும் அப்படிக் கேட்பது தனக்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் அவமானமென்றும் கூறியவர் ராசாவுக்கு கிடைத்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்வரை இருக்கிற நிலை தொடர வேண்டும் என்றும் கூறினார்
இது அடிப்படையில் தவறு
மத்திய அமைச்சரான பிறகு அவர் பெரம்பலூருக்கு செய்திருக்கிறார்
பெரம்பலூரின் மரியாதைக்குரிய அடையாளம் அவர்
ஆனாலும் பெரம்பலூர் பொதுத் தொகுதியானதும் அவர் இங்கே நிற்க முடியவில்லை என்பது சாதியின் கோரமென்பதுதான் அவரும் நாமும் அவமானப்பட வேண்டிய விஷயம்

கவிதை 78

நடுக்காட்டில் ரெசார்டுகளில் நீ
கொண்டு வந்து குவிக்கும் டூரிஸ்டுகளிடம் 
மனுஷவாடையே காணாத காடென்று
புழுகிக் கொழுக்க
எங்க காட்டை இழக்கனுமா நாங்க?

Tuesday, May 9, 2017

மார்க்சிஸட் கட்சிக்கு கோரிக்கை

இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் தோழர் யெச்சூரி பாராளுமன்றத்தில் இருப்பதென்பது எவ்வளவு சரியானது என்பதைக் கடந்து எவ்வளவு அவசியம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஏதோ இது அவர்கள் கட்சி விசயம் என்று வாளாயிருந்துவிடாமல் மூன்றாவது முறையும் அவரை மாநிலங்களவைக்கு அனுப்புமாறு மார்க்சிஸட் கட்சிக்கு கோரிக்கை வைப்போம்.
பிடிக்காதவர்கள் மௌனமாய் கடந்துவிட வேண்டுகிறேன்

ஒரு சர்வ கட்சி கூட்டம் அவசியம்.

கீழ்க்கோர்ட் வரைக்கும் வந்துவிட்டார்கள். ‘தமிழைப் புழங்க தடை விதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோமா? அல்லது தடை வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோமா?
தேர்தல் கூட்டணி என்பது வேறு, மொழிப் பாதுகாப்பு என்பது வேறு. மொழி அழிப்பு என்பது இன அழிப்பின் தொடக்கம்.
ஒரு சர்வ கட்சி கூட்டம் அவசியம். கூடுங்களேன். இடது சாரிகள் இது விஷயத்தில் ஒரு சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டினால் என்ன?

Monday, May 8, 2017

உரையாடலைத் தொடங்குவோம்

கல்வியில் மாற்றம் செய்வதெல்லாம் பலனைத் தராது மாற்றுக் கல்வியே இன்றைய தேவை என்று தோழர் Rabeek Raja இன்று எழுதியிருந்தார். இதுதான் மிகச் சரியான பார்வை. இத்ற்காகத்தான் அவரவரும் அவரவரால் இயன்ற அளவு எதையாவது செய்து கொண்டிருக்கிறோம்,. ஆனால் பலன் இல்லை. என்ன காரணம்? சிதறிக்கிடக்கிற சிறுபான்மைத் திரளாகிப் போனோம்.
கருத்தாலும் கரத்தாலும் இந்தத் திரள் ஒன்றிணைய வேண்டும். நல்ல இயக்கங்களோடு உரையாடவும் உறவாடவும் தொடங்க வேண்டும். மாற்றுக் கல்விக்கான தேவைக்காக களமேகும் அதே வேளையில் மாற்றுக்கல்விக்கான கட்டமைப்பை சிலபஸை கண்டடைய முயற்சி செய்ய வேண்டும்.
“மாற்றுக் கல்வி” எது என்பதை வடிவமைப்பது, முன்வைப்பது, விவாதிப்பது, திருத்தங்களை தொடர்ந்து ஏற்பது, அது குறித்து பொது வெளியில் பேசுவது அதற்கான தேவைப்படும் போராட்டங்களை கையெடுப்பது என்கிற நடைமுறைக்கு வரவேண்டும்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் இதற்கான முயற்சியை தோழர் Varthini Parvatha எடுத்திருந்தார்.
அவர் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்திலும் ரபீக் ராஜா கலந்து கொண்டார். ஸ்ரீரசா, Marx Pandian போன்றோர் கலந்து கொண்டோம்.
ஆழமான கருத்துக்கள் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. நான் கலந்துகொண்ட மிக நல்ல கூட்டங்களுள் அதுவும் ஒன்று.
சோகம் என்னவெனில் அதை அதற்குமேல் முன்னெடுக்க இயலாது போனது. ஆனாலும் அந்த முயற்சிக்காக தோழர் பர்வதா கொண்டாடப் பட வேண்டியவர். அன்றைய விவாதங்களின் மினிட்ஸ் கையேடாகவே அமையும்.
அமைப்புகளும் இந்த விஷயத்தைப் பேச வேண்டுமென்றால் இவர் போதும் என்ற நிலையிலிருந்து மாறி இறங்கி வரவேண்டும் . அல்லது இந்த ஆண்டு இந்த மாதத்தில் என்ன கோரிக்கைக்காக எந்த மனிதரைக் கொண்டு மாநாடு அல்லது பேரவை போட்டீர்களோ அடுத்த ஆண்டும் அதே மாதத்தில் அதையேதான் தொடர வேண்டியவர்களாக இருப்பீர்கள்
இந்தக் கருத்துக்களோடு உடன்பாடு உள்ளோர் உரையாடலைத் தொடங்குவோம்

கவிதை 77

அதுவாகவும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
அதுவாகவே இருக்கட்டும்

கவிதை 76

கனவே வேண்டாமென்றெல்லாம் சொல்லக்கூடாது நீ
எதையேனும் தொலைப்பதற்கு நான் வருகிறமாதிரி
கனவு வரவேண்டும் உனக்கு
அதில் எதையேனும் தொலைத்து தொலைத்துவிட்டு
கவிதை எழுத வேண்டும் நான்

Saturday, May 6, 2017

கவிதை 75

நீ கொடுத்த ரெண்டாயிரத்தில்
மருந்துக்கு
ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பது போக
பாக்கெட்டில் அறுவது
மூக்கைக் கடந்துவிடாமல்
உசிரைக் கட்டிப்போட்டுள்ளன அந்த மருந்துகளென்ற வகையில்
நீயெனப் படுவது
என் உசிரும் அறுவது ரூபாயும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...