Tuesday, April 28, 2026

09 2026

 

சம்பந்தி
ஒரு கார்
வாங்கியிருக்கிறார்
சுதா
ஒரு வீடு
வாங்கியிருக்கிறாள்
பாஜக
ஏழு எம்பிக்களை
வாங்கியிருக்கிறது
என்பதாக
இந்தியாவின் நேற்று
நிறைவாகியிருக்கிறது

பூரிப்பைத் தரும் பொங்கும் பூம்புனல்

 


ஒவ்வொரு மாற்றிதழ் வரும் பொழுதும் எனக்கு எண்பதுகளின் மத்தியில் "செந்தூரம்" இதழ் துவக்க விழாவின்போது பேராசிரியர் பெரியார்தாசன் பேசியதுதான் நினைவிற்கு வரும்.
"சிற்றிதழ் நடத்துவது என்பது காஸ்ட்லியான தற்கொலை" என்று அவர் சொன்னபோது நிறையபேர் முகம் சுளித்தார்கள்.
இது நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே நான் அன்று முகம் சுளித்தேனா அல்லது சிரித்தேனா என்பது நினைவில் இல்லை.
ஆனால் செந்தூரம் இதழின் ஆசிரியர் ஜெகதீஷ் அப்போது விழுந்து விழுந்து சிரித்தார்.
பேராசிரியரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை காக்கையை ("Kaakkai Cirakinile - Tamil Magazine") ஆரம்பித்த ஆரம்ப காலங்களிலேயே உணர்ந்துகொள்ள வாய்த்தது.
ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி வாக்கில் இதழை அச்சிற்கு அனுப்பிய கையோடு செத்துத்தான் போக வேண்டும்.
ஐந்தாம் தேதி வாக்கில் யாரவது அழைத்து இதழ் நன்றாக வந்திருக்கு என்று சொன்ன மாத்திரத்தில் மீண்டும் உயிர் வந்துவிடும்.
இப்படியாக, மாற்றிதழ் நடத்துபவர்கள் ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி செத்து 5 ஆம் தேதி உயிர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள்.
அன்றைய கூட்டத்தில் நன்றி சொல்லும்போது ஜெகதீஷ் சிரித்துக்கொண்டே சொன்னார்,
"இந்த இதழ் நிச்சயம். அடுத்த இதழ் லட்சியம்’
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் (aiiea) திருச்சி கண்டோன்மெண்ட் கிளையின் கணேஷ்ராம் மற்றும் கலைமணி உள்ளிட்ட தோழர்கள் கொண்டுவரும் "பொங்கும் பூம்புனல்’ எட்டாவது இதழ் வந்திருக்கிறது.
ஆக இந்த தோழர்கள் இதுவரை எட்டுமுறை உயிர்த்தெழுந்திருக்கிறார்கள். வாழையடி வாழையாக இந்த உயிர்த்தெழல்கள் தொடர வேண்டும் என்று ஆசை ஆசையாக வாழ்த்துகிறேன்.
எட்டு இதழ்களையும் வாசிக்கும் வாய்ப்பை இந்த நண்பர்கள் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"பிறப்பொக்கும்..." என்பதை சிக்நேச்சராகக் கொண்டிருக்கும் இந்த பத்திரிக்கையின் எட்டு இதழ்களும் அந்த முழக்கத்திற்கு உயிர்கொடுக்கின்றன.
இவ்வளவுதான், இனி இவர்களே நினைத்தாலும் ஒருபோதும் இவர்களால் பிறழ முடியாது.
" வாக்கு - வர்க்கப் போராட்டத்தின் ஆயுதம்" என்ற இந்த இதழின் தலையங்கத்தின் தலைப்பே வித்தியாசமானது.
வாக்கை வர்க்கப்போராட்டத்தின் ஆயுதமாகப் பார்க்கும் தலையங்கங்கள் பல இடதுசாரி இதழ்களிலேயே காணக்கிடைக்காதவை.
"ஒரு தொழிற்சங்கத்திற்கு, எளிய மற்றும் உழைக்கும் மக்களுக்கான பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து அதற்கு ஆதரவளிக்கும் அரசியல் அமைப்பை தேர்வு செய்யும் நோக்கில் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களுக்கு இணக்கமான அரசாங்கத்தை தேர்வு செய்ய வழிகாட்டுவது என்பது முக்கிய பணிகளில் ஒன்று"
ஒரு வெகுஜன அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தொழிற்சங்கத்திற்குரிய பாத்திரத்தை கேட்கிறமாதிரி, வாசிக்கிற மாதிரி இவ்வளவு அழகாக யாராலும் வைத்துவிட முடியாது.
"இந்த முதலாளித்துவ அமைப்பில் தொழிற்சங்கம் கோருகிற பொருளாதாரக் கொள்கைகளை முழுவதுமாக பின்பற்றும் அரசியல் அமைப்பை அடையாளம் காண்பது அரிது" என்றும் இந்தத் தலையங்கம் சரியாக உண்ர்த்துத்துகிறது.
இந்த வேலையை செய்வதில் இடதுகள் படும் வலியை பாடுகளை இந்த தலையங்கம் குறிப்பிடுகிறது.
உச்சத்தில் இருந்து வந்து வலியோடு வந்திருப்பதாக பிதற்றல்களை மட்டுமே கேட்டு சலித்துப்போன நமக்கு தலைமுறை தலைமுறையாக இடதுகள் படும் வலியை புரிந்துகொண்டிருக்கும் இந்த நண்பர்களுக்கு நன்றியை சொல்லாவிட்டால் அந்த வார்த்தையை வைத்துக்கொண்டு வேறென்ன செய்வது?
இந்த எழுத்து நான் நன்கறிந்தது என்ற வகையில் இது தோழர் கணேசுடையது என்றே உணர்கிறேன். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
உங்களது ஏழாயிரம் ஆண்டு நாகரிகத்தை இன்று இரவிற்குள் அழிக்கப்போகிறேன் என்று ட்ரம்ப் கொக்கரித்த அன்று இரவு முடிந்தால் அழித்துப்பார் என்று ஈரான் மக்கள் இரவு முழுக்க தெருவிற்கு வந்து சுவராக நின்றார்கள்.
அதை, "நாகரிகத்தின் சுவர்" என்ற் தலைப்பில் கவிதையாக்கி இருக்கிறார் கலைமணி.
"தாயொருத்தியின் தோள்பற்றி
மகன் வந்தான்
தந்தையின் கரம் கோர்த்து
தனயன் வந்தான்
நாகரிகம் அழியாதென்பதை
அவர்கள்
உயிரால்
உடலால்
சொன்னார்கள்"
அந்தப் போராட்டத்தை மிகையின்றி சொல்லும் கலைமணி,
"பெருந்துன்பத்தின்முன்
நம்பிக்கையும்
அச்சமும்
தைரியமும்
ஒருங்கே தெறித்த"
போராட்டமென்கிறார். அந்த ’அச்சமும்’ என்பது அந்தக் கவிதையை எவ்வளவு எதார்த்தமாகக் கடத்துகிறது.
பாரசீக நாகரிகத்தை "நாகரிகத்தின் அழியாத முதிர்ச்சி" என்று முடியும் அந்த கவிதையை இன்குலாப் படித்திருந்தால் நிச்சயம் மெச்சியிருப்பார்.
"சமூக ஊடகங்கள் - ஒரு மாய உலகம்" என்ற மேரி ஜெசி ராணியின் கட்டுரை மாற்று இதழ்களுக்கேயான கட்டுரையின் சிக்னேச்சர்.
அப்படியொரு ப்ளோ .
சுமதியின் அழகியல் அபாரம். ஏதோ ஐம்பது ஆண்டுகளாக எழுதுபவரின் லாவகம்.
உள்ளே செல்லும் காற்றை வெளியே விடாத பந்து உதைபடுதாம். ஒரு துளையில் வாங்கும் காற்றை இசையாக மறு துளையில் இசையாத் தருவதால்
புல்லாங்குழல் முத்தம் பெறுகிறதாம்.
அய்யோடா.
தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் படங்கள் அப்படிப் பொருந்திப் போகின்றன.
அட்டைமுதல் அட்டைவரை கொட்டிக் கிடக்கு.
இதழ்கள் வர வர நாமும் பேசுவோம்.
பள்ளிக்கு ஒரு இதழ் என்று ஒரு கட்டுரையை பதினைந்து அண்டுகளுக்கு முன் எழுதினேன்.
வேண்டுமானால் பாருங்கள். இந்த இதழ் ஒவ்வொரு கிளையில் இருந்தும் ஒரு இதழைக் கொண்டுவரும்.
வாழ்த்துகள்.

28.04.2026

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...