Thursday, October 27, 2011

தெய்வங்களுக்கு சொல்லித் தந்தவன்

பொதுவாகவே நம்முள் புதைந்து புறையோடிப் போயிருக்கும் அழுக்குப் பிடித்து வாடை வீசும் கருத்துப் படிமங்கள் நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், நாம் சற்றும் எதிர்பார்க்காத திக்கிலிருந்து நாம் கனவிலும் எதிர்பார்ப்பதற்கு அந்த நொடி வரைக்கும் நமக்கு நம்பிக்கையே தந்திராத மனிதர்களால் உடைசலைக் காணும்.

அப்படித்தான் படிக்கும் பிள்ளைகளைப் பற்றி நமக்கிருந்த ஒரு முடை நாற்றம் வீசிக் கொண்டிருந்த ஒரு பொதுக் கருத்தை பேய் மழைச்சாரல் தந்த குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த என்னை தங்களது செயலால் சூடேற்றி திமிறேற்றினார்கள்.

"படிச்சவன் நடந்துக்கற மாதிரியா நடந்துக்கற", "படிச்சவன் பேசற மாதிரியா பேசற" என்கிற மாதிரி படித்தவர்களைப் பார்த்து அவர்களது பெற்றோர்களோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ அல்லது வேறு மற்றவர்களோ கோவம் கலந்த தொனியிலோ அல்லது வருத்தம் தோய்ந்தோ அல்லது ஏளனத் தொனியிலோ கூறுவதைக் கேட்டிருப்போம்.

படித்தவன் எப்படி பேச வேண்டும்?.
படித்தவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு தெளிவான ஒத்தக் கருத்து எந்த சமூகத்திலும் இந்த நொடியில் இருப்பதாகப் படவில்லை. இதில் இவ்வளவு தயங்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்றே படுகிறது. இந்தக் கேள்விகளுக்கான ஒத்தக் கருத்தினை நோக்கி எந்த சமூகமும் முதல் எட்டெடுத்துக் கூட வைக்க வில்லை என்று யார் வேண்டுமானாலும் என் தலையில் அடித்தே சத்தியம் செய்யலாம்.

படித்தவன் அதிர்ந்து பேசக் கூடாது. படித்த தமிழனென்றால் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தை நுனி நாக்கில் உளற வேண்டும். நாம் உண்டு நம் வேலை உண்டு என்பதை உணர்ந்து உள் வாங்கி செயல்படுத்த வேண்டும். அவனவன் அவனவன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டாலே போதும். நாடு தானாக வளப் படும்.

அமெரிக்காவில் மக்கள் தெருவிலே வந்து பெரு முதாளிகள் அரசியலைத் தீர்மானிப்பதை எதிர்த்து போராடுகிறார்களா? அது பற்றி உனக்கென்ன? அது அவன் நாட்டுப் பிரச்சினை. இலங்கையில் கொத்துக் கொத்தாய் கொல்கிறானா?, அறுப்பதற்காகவே வளர்க்கும் செம்மரிகளைக் கூட மூங்கில் பட்டியில் அடைத்து, பகல் வேலையில் அவற்றை சுதந்திரமாய் காலாற மேய வைக்கும் தமிழனை முள் வேளியில் அடைத்து வைத்து அக்கிரமம் செய்கிறானா? விடு அது அவன் உள் நாட்டுப் பிரச்சினை.

எவ்வளவுதான் பாதுகாப்பாய் தப்பிவிட முயன்றாலும் ஈரம் சுரக்கிறதா?. அது தவறு. உடனே ஏதாவது ஒரு வட நாட்டு சேனலை போட்டு மேதைகள் ஆங்கிலத்தில் அலசுவதைப் பார். எந்த விதமான மனித ஈரத்தையும் அவர்கள் உலர வைப்பார்கள். அதையும் மீறிப் பொங்கினால் அவர்களுக்காய் பிரார்த்தனை செய்.

இதைத் தாண்டி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர். இந்த உணர்வுதான் ஞானத்தின் தொடக்கம். தர்க்க நியாயம் பேசுபவர்களிடம் காதைத் தராதே. அவர்கள் தீவிரவாதிகள். உன்னை நம்பி குடும்பம் இருப்பதை உணர். நீ அயோகியத்தனம்செய்யாமல் யோகியனாய் வாழ். இதைத்தான் ஆகப் பெரும்பான்மை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமும், நண்பர்கள் நண்பர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

இதுதானா படிப்பின் விளைவு?

படித்தவன் யோக்கியனாய் மட்டும் இருந்தால் போதுமா? ஆதிக்க சக்த்திகளின் அத்து மீறலை, அயோகியத் தனத்தை பார்த்து மௌனிப்பதும் அயோகித்தனம் அல்லவா?

ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கொஞ்சி மகிழ்ந்து சந்தோசித்து இருப்பது குடும்ப விவகாரம். அதில் நாம் தலையிடக் கூடாது. ஆனால் குடித்துவிட்டு வந்து மனைவியை துவைக்கும் கணவனைத் தட்டி கேட்காமல் ‘இது அவர்கள் குடும்பப் பிரச்சினை’ என்று ஒதுங்கினால் அது அயோக்கியத் தனம் அல்லவா?

நல்லாப் படி, நன்கு சம்பாரி, சந்தோசமாய் குடும்பம் நடத்து என்பதைத் தவிர வேறு எதையும் நாம் கற்றுக் கொடுப்பதில்லையோ? மதிப்பெண்கள் தாண்டி சமூக அக்கறையே இல்லாமல் பிள்ளைகளை உருவாக்குகிறோமே... என்று நொந்து நூலாகிப் போன என்னை "அப்படியெல்லாம் இல்லை. உங்களது கழுகுப் பார்வைக்குப் படாமல் ஈரத்தை எங்கள் நெஞ்சிலே பத்திரப் படுத்தி வைத்திருக்கும் நாங்களிருக்கிறோம் . நம்பிக்கையோடு இரு" என்று சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வில் குறைந்த பட்சம் இரண்டு பாடங்களிலேனும் தேர்ச்சி பெறாத, ஆசிரியர்கள் அதிகம் நம்பிக்கை வைக்காத நான்கு மாணவர்கள் தங்களது மகத்தான செயலால் அறைந்து சொன்னார்கள்.


அன்று காலை தீபாவளிக்கு ஒரு நாள்தான் விடுமுறை என்று பள்ளிகளுக்கு வந்த உத்தரவு மாணவர்களையும் ஆசிரியர்களையும்கொஞ்சம் வருத்தப் பட வைத்திருந்தது. பொதுவாகவே தீபாவளி முதல் நாளே தொடங்கி அதற்கு அடுத்த நாள் வரைக்கும் நீளும். பல ஆசிரியர்கள் என்னை அணுகி, “ தலைவர்ட்ட கொஞ்சம் பேசுங்க சார். வியாழன் ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு அதை ஒரு சனிக்கிழமை பள்ளி வைத்து சரி செய்து கொள்ளலாம்” என்றார்கள்.

கோவப் படுவாரோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். பள்ளி விட்டிருந்தது. குடையோடு, மழைக் கோட்டோடு வந்திருந்த பிள்ளைகள் போய் விட்டார்கள். சில பிள்ளைகள் மழைக்கு அங்கும் இங்குமாய் ஒதுங்கியிருந்தனர்.

நமக்கு தீபாவளியில் உடன்பாடு உண்டா இல்லையா? நாம் கொண்டாடுகிறோமா, இல்லையா? என்பதை எல்லாம் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிற தருணம் இதுவல்ல. அதற்கான அவகாசமும் இப்போது இல்லை. சக ஆசிரியர்களின் மன நிலையை, அவர்களது கோரிக்கையை, அதில் உள்ள நியாயத்தை, தலைமை ஆசிரியரிடம் அவ்ர் நல்ல மன நிலையில் இருக்கிறபோது அவர் மனம் நோகாமல் பக்குவமாய் எடுத்துக் கூறி , அவர்களது கோரிக்கையை சேதாரம் இல்லாமல் வென்றெடுக்க வேண்டும் என்கிற கவனத்தோடு அவரது அறைக்குள் நுழைந்தேன்.

எனக்கு அந்த வேலையை தலைமை ஆசிரியர் வைக்கவே இல்லை. நான் உள்ளே நுழைவதைப் பார்த்தவர் , “வா எட்வின், உன்னை கூப்பிட பிரிட்டோவை அனுப்ப இருந்தேன். நீயே வந்துட்ட . வா, உட்கார்”

“என்னங்க அண்ணே?”

“இல்ல, தீபாவளிக்கு அடுத்த நாள் விட்டுட்டு அதை பிறகு ஒரு சனி கிழமை பள்ளி வைத்து சரி செய்துக்கலாம்னு படுது. என்ன சொல்ற?”

“அதுதாங்கண்ணே சரி.

பேசிக் கொண்டிருந்த போதே பலத்த சத்தத்துடன் இடி ஒன்று இறங்கியது. வெளியே திண்ணைக்கு ஓடி வந்தோம். பத்துப் பதினைந்து பிள்ளைகள் நின்று கொண்டிருந்தார்கள். விடாது பெய்து கொண்டிருந்தது. இடியினால் பள்ளிக்கு எந்த சேதமும் இல்லை. அப்பாடா என்றிருந்தது.

உள்ளே போகலாம் என்று நாங்கள் எத்தனித்த போதுதான் அது நிகழ்ந்தது.

எங்கள் பள்ளி சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. எங்கள் பள்ளிக்கு நேர் எதிர்த்தார்போல் வாகனங்கள் u டேர்ன் போட வசதி உள்ளது.

கடைவீதியிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞன் மீண்டும் கடைவீதிப் பக்கம் திரும்ப சென்னைலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த மகிழுந்து அவனை இடித்து விட்டு நிற்காமல் பறந்துவிட்டது. அந்தப் பய்யன் பறந்து போய் அந்தப் பக்கம் விழுந்ததை கண்ணாரப் பார்த்தோம்.

அப்படியே உறைந்து போனோம்.

பள்ளிக்குப் பக்கத்திலிருந்து ஆண்களும் பெண்களுமாய் ஒரு சின்னக் கூட்டம் பள்ளியில் கூடிவிட்டது. ஆளாளுக்கு கார்க்காரனை வைது கொண்டிருந்தார்கள். வகை வகையாய் சிலர் சபித்துக் கொண்டிருந்தார்கள்.

எப்போது தங்கள் முதுகளில் தொங்கிய பைகளை இறக்கினார்கள்? எப்போது இறங்கி ஓடினார்கள் என்றெல்லாம் யூகிக்க வாய்ப்பே தரவில்லை. பதினோராம் வகுப்பு பிள்ளைகள் நான்கு பேர் அவனைக் கொண்டு வந்து பள்ளி வராண்டாவில் கிடத்தினார்கள்.

பின் மண்டை சின்னதாய் பிளந்திருந்தது. ரத்தக் கசிவு அதிகமாய் இருந்தது. கசிவு என்பது கூட கஞ்சத்தனம்தான். ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. நால்வரில் ஒருவன் தனது ஈரச் சட்டையை கழட்டி ட்ரத்தம் வரும் இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்தான்.

எந்த ஊர்ப் பையன் அவன் என்று யாருக்கும் விளங்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. ஒருவன் என்னிடம் வந்தான்.

“கொஞ்சம் செல்லைக் கொடுங்க சார்.”

கொடுத்தேன்.

நூற்றி எட்டை அழைத்தான். அந்த நொடி வரைக்கும் இது அங்கு நின்ற நான் உள்ளிட்ட பெரியவர்கள் யாருக்கும் தோன்றாத ஞானம்.

சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்தது.

ஏற்றினார்கள். யாரேனும் கூட வந்தால்தான் நன்றாயிருக்கும் என்றார் ஓட்டுநர். எதை பற்றியும் யோசிக்காமல் ஒருவன் ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

“ போயி என்னன்னு போன் பன்னு மாப்ள,  நாங்க வீட்டுக்குப் போயி அம்மா வந்ததும் ஏதாவது சூடா எடுத்துட்டு வரோம். நீ அங்கேயே இருடா”

சொல்லிக்கொண்டே சட்டையைப் பிழிந்தான். ரத்தமாய் கொட்டியது. எந்த அசூசையும் இல்லாமல் அதைப் போட்டுக் கொண்டான்.  மழை சன்னமாய் விட்டிருந்தது. மூவரும் எதுவுமே நடக்காததுபோல் கிளம்பிவிட்டார்கள்.

நீராளர் வேலுவின் மருமகள் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து வராண்டாவைக் கழுவி விட்டாள்.

அண்ணன் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார். அவரைத் தேற்ற வேண்டும்.

தெய்வம் எதுவுமில்லை என்பதில் நமக்கு தெளிவு உண்டு.

உயிரை காப்பது தெய்வக் குணம் என்கிறார்கள்.

எனில் அடிபட்ட பிள்ளையின் உயிரைக் காக்கப் போராடிய என் நான்கு பிள்ளைகளும் தெய்வங்கள்தான்.

அவர்கள் தெய்வங்கள் எனில் நான்?

நான்....

தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்.





Thursday, October 20, 2011

அருகம் புல்லே ஆயினும்

”எல்லாம் கெட்டு கிடக்கு. எதுவும் சரியில்ல. ஒருத்தனுக்கும் செய்கிற வேலையில் அக்கறை இல்ல” என்கிற மாதிரி ஏதாவது ஒரு விமர்சனத்தை காலை தொடங்கி மாலை வரைக்கும், வீடு தொடங்கி வீதி வரைக்கும் எல்லா இடங்களிலும் கேட்கிறோம். மேலே சொன்ன அம்புகளை எய்தாதவனும் இல்லை , அதே அம்புகளால் காயப் படாதவனும் இல்லை. சேதாராமாய் கொஞ்சம் விழுக்காடு ஒதுக்கலாமே தவிர பெரும்பகுதி ஏற்றே ஆக வேண்டிய விமர்சனங்களே இவை.

நல்லதுமில்லை, நல்லவனுமில்லை என்பது பொதுப் புத்தியாய் போன ஒரு சமூகத்தில் இருநூறு விழுக்காடு செய்கிற தொழில் அக்கறையும், அதனால் வழிகிற திமிறோடும், கம்பீரத்தோடும், மிடுக்கோடும் சரியான ஒரு மனிதனை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.

பெரும்பான்மை பணிக்கலாச்சாரம் மயங்கித் துவண்டு கிடக்கும் இந்த சமூக வெளியில் வரமாய்க் கைடைத்த அந்த ஒரு சொட்டு வனத் தேனை பந்தி வைத்து விடுவதே சரி என்று படுகிறது.

ஒரு மழைக் காலை. நடத்துநர் இருக்கையைத் தவிர எல்லா இருக்கைகளும் நிரம்பிய நிலையில் விரைகிறது பேருந்து.அந்த நடத்துநரைப் பற்றி நன்கு தெரியுமென்பதால் அதில் அமராமல் நிறு கொண்டிருந்தேன். நல்ல மனிதர்தான். நான்கு ரூபாய் பயணச் சீட்டிற்கு நூறு ரூபாய் நோட்டை நீட்டினாலும் சில்லரை இருந்தால் முகம் சுழிக்காமல் தந்து விடுவார்.இல்லையெனில் அதை எடுத்துரைப்பதிலும் ஒரு தன்மை இருக்கும். எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கும் பசங்களைக் கடிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தன்மையாக பேசி அழைப்பார். கோபமே வராது.

இது போன்ற மழைக் காலங்களில் ஒவ்வொறு நிறுத்ததிலும் இடத்தின் பெயரச் சொல்வதோடு அவரவர் குடையை அவரவர் எடுத்துப் போக ஞாபகப் படுத்துவார். நானறித வகையில் இவ்வளாவு தன்மைகளும் நிறைந்த அவரிடம் இருந்த ஒரே ஒரு கெட்ட குணம் தனது இருக்கையில் யாரையும் அமர அனுமதிக்காததுதான். எனக்கேக்கூட சமயங்களில் எரிச்சலாய்த்தான் இருக்கும். அவர் பயணச் சீட்டுகளை வழங்கிவிட்டு வரும் வரைக்கும் அவரது இருக்கையில் யாராவது அமர்ந்தால் குடியா முழுகிப் போய்விடும்  என்றுகூட நினைப்பேன். எல்லோருக்கும் முன்னால் எழுந்திரிக்கச் சொன்னால் அசிங்கம் என்பதால் நான் ஒருபோதும் அவரது பேருந்தில் நடத்துநர்  இருக்கையில் அமரத் துணிந்த்ததில்லை.

என்னை இடித்துத் தள்ளிக் கொண்டு போய் நடத்துநர் இருக்கையில் அமர்ந்தார் ஒருவர். சபாரி உடை, கம்பீரமானத் தோற்றம், கையில் லேப் டாப், சட்டைப் பையில் ஒரு பச்சை மை ஜெல் பேனா. நிச்சயம் ஒரு அதிகாரியாய்த்தான் இருக்க வேண்டும்.அமர்ந்ததும் சுற்றும் முற்றும் அதிலும் குறிப்பாய் ஒரு மாதிரியாகத்தான் என்னை ஒரு முறை பார்த்தார். ஏதோ அந்த இடத்திற்கானப் போட்டியில் என்னை வென்றுவிட்ட பெருமிதப் பார்வை அது. ”கிழியப் போவுது டவுசர்” என்று மனதிற்குள் சிரித்துக் காத்திருந்தேன்.

 நினைத்த மாதிரியே நடந்தது. பேருந்து நடுவில் பயணச்சீட்டு விநியோகித்துக் கொண்டிருந்த நடத்துநர் கண்களில் இது பட்டுவிட்டது. நடந்து வந்தாரா பறந்து வந்தாரா தெரியவில்லை. அவ்வளவு வேகம்.

“சார், இது என் சீட்டு . தயவு செய்து எழுந்திருங்க”

“:ஒங்க சீட்டு இல்லைனு யாரு சொன்னா? நீங்க வந்த உடனே எந்திருச்சிடுறேன். இப்ப காலியாத்தானே இருக்கு.”

இந்தப் பதில் நடத்துநரை சீண்டியிருக்க வேண்டும். “காலியா இருந்தா...” மிதமான வெப்பத்தில் அவரது கேள்வி கதகதத்தது.

ஏறத்தாழ எல்லா பயணிகளுக்கும் நடத்துநரின் பேச்சு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும். சிலர் பக்கத்தில் இருப்பவர்களிடம் முனுமுனுத்தனர். சிலர் முகம் சுழிப்பதோடு முடித்துக் கொண்டனர். எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாது “ஹிந்து” வில் கண்களைத் தொலைத்த அறிவு ஜீவிகளும் இருக்கவே செய்தனர்.

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் மொத்தப் பயணிகளின்பிரதிநிதியாய் மாறினார். “ஏன் சார் நீங்க டிக்கெட்தான போடுறீங்க. இப்ப என்ன ஒங்கள நிக்க வச்சுட்டா அவர் ஒக்காந்து இருக்கார். போங்க சார், போயி டிக்கெட்டப் போடுங்க. வந்ததும் எழுந்திரிப்பார். இல்லன்னா சொல்லுங்க,” என்றார்.

இது எதுவும் நடத்துநரை சமாதானப் படுத்தியதாகத் தெரியவில்லை. “சார், இப்ப எந்திரிக்கப் போறீங்களா, இல்லையா,?” அவரது குரலில் உஷ்ணமும் உறுதியும் கொஞ்சம் கூடியிருந்தது.

”கவர்மெண்ட் பஸ்னாலே இப்படித்தாம்பா, ஒழுங்கா சில்லறை தர மாட்டானுங்க, ஸ்டோபிங்கில் நிறுத்த மாட்டானுங்க,பைசாப் பெறாத பிரச்சினைக்கெல்லாம் லா பேசுவானுங்க. டிக்கட் போடுற வேலையப் பாக்காம வெட்டி வீம்பப் பாரேன். இதுவே தனியார் பஸ்சா இருந்தா எப்படி கவனிப்பாங்க தெரியுமா? பேசாம எல்லாத்தையும் தனியார்ட்ட கொடுத்தரணும் சார். அப்பத்தான் இவனுங்க சரிப் படுவானுங்க,” ஒருவர் சந்தடி சாக்கில் தனியார் மயத்தின் பிரதி நிதியானார்.

“எந்திரிங்க சார் முதல்ல,” அழுத்தம் இன்னும் கொஞ்சம் கூடியது.

அமர்ந்திருந்தவர் அவரளவில் அவரது செயலில் நியாயம் கண்டிருக்க வேண்டும். எழுந்திருக்க முயலவில்லை.

“காலியா இருக்கிற சீட்லதான் ஒக்காந்து இருக்கேன் நீங்க வரவரைக்கும் ஒக்காந்துதான் இருப்பேன். எந்திருக்க மாட்டேன். என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கங்க.”

“ ஏன் சார் காலியா இருக்குங்கறதுக்காக என் சீட்ல ஒக்கார்றீங்களே. காலியா இருக்குங்கறதுக்காக கலெக்டர் சீட்ல ஒக்காந்துடுவீங்களா?”

“எதுக்கு எத முடிச்சுப் போடுறீங்க. கலெக்டர் சீட்டும் இதுவும் ஒண்ணா? கலெக்டரும் நீங்களும் ஒண்ணா? பெரிய சட்டமெல்லாம் பேசுறீங்க.”

இருவரும் விடுவதாக இல்லை.இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் ஓட்டுநர் கருமமே கண்ணாய் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

“கலெக்டரும் நானும் ஒன்னில்லைதான் சார். அவரு ஆலமரமா இருக்கலாம். நான் வெறும் அருகம்புல்லா இருந்துட்டுப் போறேன். ஆனா அவருக்கு அவரு சீட்டு. எனக்கு என்னோட சீட்டு,” பொருமிவிட்டு எழுந்திருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் பயணச்சீட்டு விநியோகத்தை விட்ட இடத்திலிருந்து தொடரச் சென்றுவிட்டார். என்ன பட்டதோ இவரும் எழுந்துவிட்டார். அத்தோடு ஒரு வழியாய் அந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.

பளீரென்று அறைந்தது போலிருந்தது எனக்கு.

ஆமாம்,

மருத்துவ மனைக்குப் போகிறோம். மருத்துவர் இல்லை. அவரது இருக்கை காலியாக்ல இருக்கிறது. காலியாகத்தானே இருக்கிறது என்பதற்காக அமர்ந்து விடுவோமா?

சராசரி மனிதனை விடுங்கள். நமது ஜனாதிபதி, பிரதமர், அல்லது ஏதோ ஒரு பெரிய மந்திரி உடல் நலமின்றி மருத்துவரிடம் போவதாகவும், இவர்கள் போகிற நேரத்தில் மருத்துவர் வார்டுக்கு போயிருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். மருத்துவர் இல்லையென்பதால் காலியாக உள்ள அவரது இருக்கையில் ஜனாதிபதி அமர்ந்து விடுவாரா?. நிச்சயம் இல்லை

ஆனால் நடத்துநர் இருக்கை என்றால் மட்டும் சட்டென அமர்ந்து விடுகிறோமே. ஏன்?

நடத்துநர் அவர்கள் அளவுக்கு அவர்கள் அளவுக்கு கவுரவமில்லாத சராசரியான அடிமட்ட ஊழியர் என்ற ஈனத்தனமான பொதுப் புத்திதான்.

அன்றிலிருந்து எந்தப் பேருந்தாயினும், நடத்துநரே சொன்னாலும் நடத்துநர் இருக்கையில் அமர்வதைத் தவிர்க்கிறேன்.

புத்தனுக்கு போதி மரம். எனக்கு வைப்பர் வேலை செய்யாத இந்த அரசுப் பேருந்து.

பொதுவாக பல நடத்துநர்கள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத போது இவர் மட்டும் ஏன் மாறுபடுகிறார், என்பதுதான் பரிசீலிக்க வேண்டிய விஷயம்.ஒரே ஒரு காரணம்தான். அவர் தன்மானத்தை விட்டுக் கொடுக்க மறுக்கிறார், அவ்வளவுதான். யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான். மாற்றிச் சொன்னால் , தனது பணியய் சரியாய் செய்பவனால் மட்டுமே தனது தன்மானம் குறித்து சமரசமில்லாது அக்கறை கொள்ள முடியும். ஆக தன்மானமென்பது பணிக்கலாச்சாரத்தோடு ரத்த சம்பந்தமுடையது.

“எல்லாம் கெட்டு கிடக்கு. எவனும் சரியில்ல” என்று புலம்புவதைத் தவிர்த்து இப்படிப் பட்ட நல்லதுகளைக் கொண்டாடத் தொடங்குவோம்.னிறைந்து கிடக்கிற கெட்டதுகளை பேசுவதால் கடுகளவு பயனும் விளையப் போவதில்லை. மாறாக அரிதினும் அரிதாய் கிடைக்கிற நல்லதுகளைக் கொண்டாடப் பழகுவோம். பையப் பையப் புரளும் சமூகம்.

( எனது "அந்தக் கேள்விக்கு வயது 98" என்ற நூலிலிருந்து)

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...