Sunday, September 30, 2018

பலூனைத் தொட்டால் தீட்டா....?

இன்றும் மூன்று விஷயங்கள் இருக்கின்றன பேச
1) ஒரு மூத்த சான்றாண்மை மிக்க பேராசிரியரை ABVP மாணவர்கள் தங்கள் கால்களில் விழுந்து கும்பிட வைத்த கொடுமை
2) கோவில் திருவிழாவில் கட்டப்பட்டிருந்த பலூனைத் தொட்டு விளையாடிய 12 வயது தலித் சிறுவனை அவன் வயதைச் சார்ந்த ஐந்து ஆதிக்கசாதி சிறுவர்கள் கொன்றுபோட்ட கொடுமை
3) பூனேவில் நடந்து முடிந்த PEN INTERNATIONAL அமைப்பின் 84 மாநாட்டில் தோழர் பெருமாள் முருகனை தனது துணைத் தலைவர்களுள் ஒருவராக உள்ளெடுத்துக் கொண்டது
மத்தியபிரதேசத்தில் மண்ட்சவுர் என்னுமிடத்தில் ராஜிவ்காந்தி பெயரில் ஒரு கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய பேராசிரியரும் ஆழமான நூல்களைத் தந்துள்ள சான்றாண்மை மிக்கவருமான முனைவர் தினேஷ் சந்திர குப்தா அவர்கள் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்
அப்போது பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP யைச்சேர்ந்த சிலர் சத்தமாக கோஷங்களை எழுப்பியவாறு வருகிறார்கள்
அந்த சத்தம் அவரது வகுப்பிற்கு இடையூறாக உள்ளது. எனவே அவர் அவர்களை சத்தமிடுவதை நிறுத்துமாறு கூறுகிறார்
அவ்வளவுதான்
அவரைத் தேசத்துரோகி என்கிறார்கள்
அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிரட்டுகிறார்கள்
பேராசிரியரும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்
அந்த வீடியோ வைரலாக வருகிறது
என்னவிதமான மிரட்டல் வந்திருக்குமாயின் அந்த மாணவர்கள் கால்களில் அவர் விழுந்திருப்பார்
ஆசிரியர்களை அமரவைத்து மாணவர்களை அவர்களது பாதங்களைக் கழுவி பாதபூஜை செய்யச் சொன்ன (சென்னையில் கூட நடந்தது) அமைப்பைச் சார்ந்த பிள்ளைகள் ஆசிரியரை தங்களது கால்களில் விழுந்து வைத்திருக்கிறார்கள்
இந்த இரண்டில் எது அவர்களது உண்மையான முகம்?
அவர்கள் போலியான வர்கள், ஆபத்தானவர்கள் என்பதை மக்களுக்கு புரிகிற மாதிரி எப்படி கொண்டுபோகப் போகிறோம்?
உத்திரப்பிரதேசத்தில் ஆக்ராவிற்கு அருகே நட்ரோயி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தில் சமீபத்தில் திருவிழா நடைபெற்றிருக்கிறது.
அந்தக்கோவிலைச்சுற்றி அலங்காரத்திற்காகக் கட்டப் பட்டிருந்த பலூன்களில் ஒன்றைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான் 12 வயதொட்டிய ஒரு தலித் குழந்தை.
அப்போது அவனது வயதொத்த 5 ஆதிக்கசாதி குழந்தைகள் அந்த வழியாக வருகிறார்கள். அவர்கள் கண்களில் இவன் பலூனைப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பது படுகிறது.
தலித் பையன் பலூனைத் தொட்டதால் ஆலயம் தீட்டுப் பட்டு விட்டதென்று கூறிக்கொண்டே அவர்களில் இருவர் அந்தப் பையனது கைகளைப் பிடித்துக் கொள்கின்றனர். இருவர் கால்களைப் பிடித்துக் கொள்கின்றனர். மிச்சமிருக்கிற ஒருவன் அவனது வயிற்றில்  மிதி மிதி என்று மிதிக்க பலூனைத் தொட்ட குற்றத்திற்காக அந்த தலித் பிள்ளை செத்துப் போகிறான்
பூனாவில் முடிவடைந்த PEN INTERNATIONAL 84 வது மாநாட்டில் தோழர் பெருமாள் முருகன் அந்த அமைப்பின் துணைத் தலைவர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்
Poets, essayists,editors, and novelists என்பது இதன் விரிவு. தேவை கருதிதான் எடிட்டர்களை பிற்பாடு இணைந்திருக்கிறார்கள்
இந்தியக் கருத்துச் சுதந்திரம் மிகவும் ஊனப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அதற்காக போராடும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் யாவரும் அச்சுறுத்தப் படுவதாகவும், தாக்கப்படுவதாகவும் கொலைசெய்யப் படுவதாகவும் இந்த மாநாடு கவலையோடு பார்த்திருக்கிறது
உலகத்தின் அனைத்து படைப்பாளிகளும் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று கோரியிருக்கிறது
தோழர் பெருமாள் முருகன் அந்த அமைப்பின் அகில உலகத் துணைத் தலைவர் என்பது பெருமைக்குரிய விஷயம்
அந்த அமைப்பை வீரியத்தோடு நம் மண்ணில் களமிறக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு பெருமாள் முருகனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
#சாமங்கவிந்து ஒரு மணி 17நிமிடங்கள்
30.09.2018

Saturday, September 29, 2018

நிவேதியின் இரண்டாம் நாள் குசும்பு

காலையில் கையில் தேநீர்க் கோப்பையோடு நிவேதி வந்தாள்.
"மாமா டீ சாப்டியா?"
"சாப்டேனே"
ஓடிவிட்டாள்.
கொஞ்ச நேரத்தில் அழுதழுது கண்கள் சிவந்திருந்த நிவேதியைத் தூக்கிக் கொண்டு வந்த விக்டோரியா,
"பாப்பாவ என்ன செஞ்சீங்க?"
"ஒன்னும் செய்யலையேப்பா"
"இல்லத்த டீய பர்ஸ்டா குடிச்சாங்க"
அப்போது தான் இருவருக்கும் புரிந்தது. எது செய்தாலும் அவள்தான் பர்ஸ்ட் செய்யனுமென்பது வீட்டின் விதி. சடாரென சமாளித்த விக்டோரியா
"மாமாக்கு இன்னும் டீயே கொடுக்கலப்பா. பாப்பா குடிக்காம மாமாக்கு தருவனா" என்றவாறே இன்னொரு டம்ளர் தேநீரைக் கொடுத்தவாறே, "இப்பதான் கொடுக்கறேன் பாரேன்" என்றதும்
"ஐ! நாந்தான் பர்ஸ்டு" என்று கைகளைத் தட்டிக் கொண்டே ஓடிவிட்டாள்.
குழந்தைகள் உலகம் குதூகலாமானது என்பதோடு சமயத்தில் இரண்டாவது கோப்பை தேநீரோடும் நம்மை அது ஆசீர்வதிக்கக் கூடும்

Friday, September 28, 2018

நமக்கு நம் மொழி என்றால் அவர்களுக்கு அவர்கள் மொழி

பத்து முறையேனும் இதை இதுவரை முகநூலில் பதிந்திருப்பேன்
தேவைப்பட்டால் இன்னும் லட்சம் முறைகூட பதிவேன்
இப்போது இதைப் பதிய வேண்டிய தேவையை தோழர் சீமான் கொடுத்திருக்கிறார்
தொன்னூறுகளின் துவக்கத்தில் சென்னை கிருஷ்ணகான சபாவில் தமுஎச வின் மாநிலமாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவர் திரு பாலுமகேந்திரா
அவர் தமது துவக்க உரையில்,
"all mothers are great, but my mother is the greatest" என்று கூறினார்
இதை இப்படியும் பெயர்க்கலாம்,
"எல்லா தாய்மார்களும் வணங்குவதற்குரியவர்கள்தான்
ஆனால் என் தாயோ
எல்லா தாய்மார்களும் எழுந்து நின்று
வணங்குவதற்குரியவள்"
இதை நமது தாய்மொழியோடு பொருத்தி பெருமை கொள்ள எல்லா உரிமையும் நமக்கு உண்டு
அதேவேளை நாம் நம் மொழியோடு இதைப் பொருத்திப் பார்த்து பெருமை கொள்வதைப் போலவே தம் மொழியோடு இதைப் பொருத்திப் பார்த்து பெருமை கொள்ள ஒவ்வொரு மொழிக்காரனுக்கும் உரிமை உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
"எனக்கும்
தமிழ்தான் மூச்சு
ஆனால்
அதை
பிறர் மீது
விடமாட்டேன்"
என்பார் ஞானக்கூத்தன்
நம் மீது தமது மூச்சை பிறர் விடும்போது தான் நாம் கோவப்படுவதே
அப்படித்தான் நம் மீது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும்போது நமக்கு திணிப்பவர்கள் மீது கோவம் வருகிறது
அப்போதும் கூட நமக்கு இந்தியின் மீதோ சமஸ்கிருதத்தின் மீதோ கோவமெல்லாம் வருவதில்லை
இதையெல்லாம் பேசுமளவு சீமான் என்ன சொன்னார்?
கானா பாடல்களால் தமிழ் சிதைகிறது. தமிழை நரிக்குறவர் மொழியாக்கி விடாதீர்கள் என்று சீமான் சொன்னதை தோழர் Mansoor Mohammed அவர்களது நிலைத் தகவலில் பார்க்க முடிந்தது
எந்த மொழியும் தாழ்ந்ததல்ல சீமான்
உமக்கு உம் மொழி என்றால் எமக்கு எம் மொழி என்றுதான் இந்திக்காரர்களைப் பார்த்து நாம் கூறுகிறோம்
இப்போதும் அதையேதான் கூறுகிறோம் 
நமக்கு நம் மொழி என்றால் அவர்களுக்கு அவர்கள் மொழி
நரிக்குறவர்கள் மொழியும் எழுத்து வடிவம் பெறவேண்டும்
அவர்களும் அவர்களது மொழியில் இலக்கியம் படைக்க வேண்டும்
அவர்களது மொழியும் ஆட்சி மொழியாக வேண்டும்
அது என்ன கானாவென்றால் அவ்வளவு கேவலமா சீமான்?
அது ஒரு வடிவம்
அது ஒரு அழகான குடுவை
அவ்வளவுதான்.
அதில் ஊற்றப்படுவது நீரா மதுவா விஷமா என்பதை குடுவை தீர்மானிக்காது
இப்படி ஏடாகூடமாக உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் மொழி வளராது
கொஞ்சம் புரிந்துகொண்டு நிதானமாக உரையாடுங்கள் தோழர் சீமான்
#சாமங்கவிந்து 19 நிமிடங்கள்
28.09.2018

Thursday, September 27, 2018

இதை இவ்வளவு காலம் சகித்ததே தவறு

கணவரது அனுமதி பெறாமல் திருமணமான அடுத்தவரோடு உடலுறவு கொள்வது குற்றம் என்றும் அதற்காக அந்த ஆணை தண்டிக்கவும் சொன்ன சட்டத்தைப் பற்றியும் அது தவறென்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது குறித்தும் நிறைய பேசலாம்.
பேசுவோம்.
முன்னதாக,
கணவரின் அனுமதி தேவை என்று சொன்ன அந்த சட்டம் கணவரின் அனுமதி இன்றி வரும் பெண்ணோடு உறவு கொள்ள அவரது மனைவியிடம் அனுமதி பெறுவது குறித்து கவலைப்படாததே குற்றம்
இதை இவ்வளவு காலம் சகித்ததே தவறு
மற்றபடி இது எந்த அளவு சரி எந்த அளாவு தவறு, இதன் மேன்மை கீழ்மை குறித்தான எனது  பார்வை  குறித்து காக்கையில் (Kaakkai Cirakinile) எழுத இருக்கிறேன்

பூனை ஸ்கெச் சாப்டாதுதானே?”

நிவேதி வந்திருக்கிறாள். காலையில் தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு முத்தம் கொடுத்து எழுப்பி விழித்ததும் குட்மார்னிங் என்று மழலையில் சொன்னாளென்ற வகையில் இந்த நாள் ஆசீர்வாதத்தோடு தொடங்கியிருக்கிறது.
எழுந்ததும் மாமா, கிளம்புங்க அக்காவ பள்ளிக்கூடத்துல உட்டுட்டு (அப்போது கீர்த்தி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்) Ball லும் மெழுகு ஸ்கெச்சும் வாங்கிட்டு வரலாம்.
Ball சரி, மெழுகு ஸ்கெச் எதுக்குப்பா?
“ம், பூனை வரையப் போறேன்”
“அய்யய்யோ, மெழுகுன்னா பூனை சாப்பிடுமே”
“எப்புடி?”
”பூனைக்கு வாய் வரையறப்ப லபக்குன்னு புடிங்குக்கும்”
“பரவல்லா, பூனைக்கு பக்கத்துல மொதல்ல சாசர்ல பால் வரஞ்சுக்குறேன். வரஞ்சதும் பூன பால் குடிக்கப் போயிடும். நீங்க ஸ்கெட்ச் வாங்கித் தாங்க”
வாங்கி வரும்போது கேட்டாள்,
“மாமா, பொய்தானே சொன்னீங்க, பூனை ஸ்கெச் சாப்டாதுதானே?”

Wednesday, September 26, 2018

ஆனாலும் H.ராஜா கைது செய்யப் படவில்லை

மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் மாண்புமிகு ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் சோபியா ஆஜரானார். விமானத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை எதிர்த்து “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர். பிறகு அவரை எப்படியெல்லாம் ஒழுங்காக வளர்க்க வேண்டும் அவரது தந்தைக்கு ஏகத்துக்கும் பாடம் நடத்தியபிறகு நீதிமன்றம் அவருக்கு பினை தந்திருக்கிறது என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே.
அப்போது தாமதமாய் ஆஜரான புதுக்கோட்டை ஆய்வாளாரும் இந்த வழக்கின் விசாரனை அதிகாரியுமான திரு திருமலை அவர்களிடம் நிறைய கடிந்துகொண்ட மாண்பமை ஜெயச்சந்திரன் அவரை நிறைய கேள்விகள் கேட்டிருப்பதை இன்றைய THE HINDU வெளியிட்டிருக்கிறது. அவற்றுள் முக்கியமான சில,
1) Why you (the police) are so keen on arresting the research scholar though she had not committed any serious offence?
2) Neither the caption of the flight nor the cabin crew had filed any complaint. However you had taken the girl to the police station and kept her there for more than seven hours. Do you know the provisions of criminal procedure coder in this regard
மேலுள்ள கேள்விகளை இப்படி பெயர்க்கலாம்
1) குறிப்பிட்டு சொல்லும்படியான எந்தஒரு பெருங்குற்றத்தையும் செய்யாத இந்த ஆராய்ச்சி மாணவியை கைது செய்வதில் நீங்கள் இவ்வளவு முனைப்பு காட்டவேண்டிய அவசியம் என்ன?
2) அந்த விமானத்தின் தலைவரோ ஊழியர்களோ உங்களிடம் எந்தப் புகாரும் அளிக்காத நிலையில் நீங்கள் அந்த மாணவியைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஏழு மணிநேரத்திற்கும் மேலாக அவரை அங்கே வைத்திருந்திருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் குற்றவியல் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் நீங்கள் அறிவீர்களா?
’விதி முறைகள் உங்களுக்குத் தெரியுமா?’ என்ற அவரது கேள்வி காவல்துறையினரை எதுவும் செய்துவிடாது. அவர்கள் எது செய்ய அரசு ஆசைப்படுகிறதோ அதை அவர்கள் செய்வார்கள். மற்றபடி விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அறியாதவர்கள் அல்ல அவர்கள். இந்த உண்மை திரு ஜெயச்சந்திரன் அவர்களும் அறிந்ததுதான். தாங்க மாட்டாத கோவத்தில் வந்து விழுகிற வார்த்தைகள் அவை.
1) அந்த எந்த ஒரு பெருங்குற்றத்தையும் செய்யவில்லை
2) விமானத்தில் எது நடந்தாலும் அது குறித்த புகாரை அந்த விமானத்தின் தலைவரோ அல்லது சிப்பந்திகளோதான் தரவேண்டும். அப்படி யாரும் புகார் தராத நிலையில் அவரைக் கைது செய்தது தவறு
3) ஒரு பெண்ணை ஏழு மணிநேரத்திற்கும் மேல் காவல் வைத்திருந்தது தவறு
மேற்சொன்ன விஷயங்களை சோபியாவின் தந்தையும் கூறினார், தலைவர்கள் கூறினார்கள், நாமும் கூறினோம். இப்போது மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரே கூறுகிறார்.
ஆக புகார் கொடுக்க வேண்டியவர்கள் எந்த ஒரு புகாரும் கொடுக்காத நிலையிலேயே திருமதி தமிழிசை கேட்டுக் கொண்டதற்காக அந்தக் குழந்தையை காவல்துறை கைது செய்து ஏழுமணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் வைக்கிறது காவல்துறை.
ஒரு பெண் இன்னொரு பெண்மீது புகார் தருகிறார் என்றால் காவல்துறை இருவரையும் விசாரித்திருக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, திரு H.ராஜா நீதிமன்றத்தையே கெட்ட வார்த்தையால் திட்டுகிறார். ஊருக்கு ஊர் அவர்மீது புகார் அளிக்கப் படுகிறது. அவரைத் தேடுவதற்காக தனிப்படைகளே அமைக்கப் படுகிறது.
அவர் தலை மறைவாகி விட்டபடியால் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. அடுத்தநாள் அவர் வேடசந்தூரில் காவல்துறை பாதுகாப்போடு அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
அங்கு அறநிலையத்துறை ஊழியர்களைக் கொச்சைப் படுத்தி பேசுகிறார். அதற்காகவும் அவர்மீது புகார் அளிக்கப் படுகிறது.
ஆனாலும் அவர் கைதுசெய்யப் படவில்லை.
தன்னிடம் விளக்கம் கேட்க நிதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறார். இப்போதும் அவர் கைது செய்யப்படவில்லை.
அந்த அளவிற்கு அசிங்கமாக பேசிவிட்டு நான் வீட்டிற்கு வந்தால் என் மனைவியும் மகளும் என்னை விளக்கமாறால் அடித்தே கொன்றிருப்பார்கள். ஊடகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களைக் குறித்து அவ்வளவு கேவலமாகப் பேசிய SV.சேகரை கைது செய்யாமல் அவருக்குப் பாதுகாப்பு அளித்தது காவல்துறை.
இந்த நாடு யாருக்கானது என்ற கேள்விக்கு “கிட்டத்தட்ட அவாளுக்கானது” என்பது நாளுக்குநாள் உறுதியாகிக் கொண்டே வருகிறதா?
அல்லது அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் அவர்கள் இப்படியாக உளறுவதன் மூலம் ரஃபேலில் இருந்தும் மல்லையாவிலிருந்தும் மக்களின் கவனத்தை அவர்கள் வேறுபக்கம் இழுக்கட்டும் என்று வழிகாட்டுதல் வந்திருக்கிறதா?
#சாமங்கவிந்து 34 நிமிடங்கள்
26.09.2018

Tuesday, September 25, 2018

காக்கையின் வேண்டுகோள்

காக்கையை ( Kaakkai Cirakinile) ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் ஆயிற்று.
ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்,
2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாளன்று சென்னை இக்சாவில் வைத்து காக்கையை வெளியிட்டபோது இவ்வளவு காலம் காக்கையை கொண்டுவர முடியும் என்று நாங்கள் கருதவில்லை
மாற்றிதழின் வாழ்நாளைப் பொறுத்தவரை "செந்தூரம்" இதழை வெளிட்டு அதன் ஆசிரியர் செந்தூரம் ஜெகதீஷ் சொன்னதுதான் சாசுவதம். அன்று அவர் சொன்னார்,
"இந்த இதழ் நிச்சயம், அடுத்த இதழ் லட்சியம்"
இதைத்தான் காக்கை வெளியீட்டு விழா அன்றும் குறிப்பிட்டேன்.
ஆனால் காக்கையின் 85 வது இதழ் அச்சுக்குப் போயிருக்கிறது
நிறைய எழுத்தாளர்களை காக்கை வழி அறிமுகம் செய்திருக்கிறோம்
நிறைய படைப்பாளிகளுக்கு காக்கை இளைப்பாற இடம் தந்திருக்கிறது
வாசகர்களை ஏமாற்றாமல் இயன்றவரை தரமாய் வழங்க முயற்சித்திருக்கிறோம்
விளம்பரங்கள் கிடைக்கவில்லை
நியாயமான முறையில் எவ்வளவோ முயன்றும் நூலக வாசலை எங்களால் எட்ட முடியவில்லை
எந்தவிதமான உதவிக்கும் ஊழியர்களை வைத்துக் கொள்ளுமளவு வசதி இல்லாததால் எல்லா வேலைகளையும் நாங்களேதான் பார்க்கிறோம்
உண்மையை சொன்னால் நமது அலுவலகத்தில் போர்டுகூட இல்லை
ஆனாலும் மாதாமாதம் காக்கையை சரியாகக் கொண்டுவந்து உங்களிடம் சேர்க்கிறோம்
போகிற இடமெல்லாம் நண்பர்கள் கொண்டாடுகிறார்கள். நேற்று பாண்டியில் ஒரு கூட்டம். உள்ளே நுழைந்ததும் தோழர் Jk தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் அறிவுறுவோன் அவர்களையும் உங்களையும் சந்திக்க வேண்டும் என்றிருந்தேன். என்கிறார்
காக்கை படைப்பாளிகளை கொண்டு சேர்க்கவும் செய்கிறது
எல்லாம் சரிதான்
மகிழ்ந்து கரைகிறோம்தான்
ஆனாலும் நண்பர்களே
நிதிச்சுமை கடுமையாக உள்ளது.
கடன் சுமை கவலை தருகிறது
இதழ் தொடர்ந்து வேண்டுமெனில் சந்தா அவசியம்
இதுவரை சந்தா செலுத்தாத நண்பர்கள் இரண்டாண்டு சந்தா 500 ரூபாய் அனுப்பிவிட்டு எனக்கும் தகவல் தாருங்கள்
இதை உங்களிடம் கேட்கும் உரிமை எனக்கு உண்டு
A/c Name ..kaakkai
A/c No .. 60111010005660
IFSC . . Synb0006011ede
Bank. .syndicatebanks
Triplicane
.. chennai 600005
Address. Naakkai
288dr nadesanroed.triplican
Chennai.5
#சாமங்கவிய ஒரு மணி 21 நிமிடம்

Saturday, September 22, 2018

வேசியின் மகனென்றே என்னை அப்போதும் அழைக்கலாம்

மிக நாகரிகமான வார்த்தைகளால் நான் வைக்கும் விமர்சனங்களே அவர்களை கோவப்படுத்துகிறது போல.
"வேசி மகனே" என்றும் இன்னும் மோசமாகவும் ஆரம்பித்திருக்கிறார்கள்
அவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்
ஆனால் நான் மாறமாட்டேன் தோழா
முகம் காட்டு
நேரில் வா
அனைவரையும் அறிமுகம் செய்து வைக்கிறேன்
உனக்கு என்ன வயதென்று தெரியாது
நீ என் அம்மாவை அழைத்த மாதிரியே என் மனைவியையும் மகளையும்கூட "வேசி" என்றும் அழைக்கலாம்
சத்தியமாய் கோவப்பட மாட்டோம்
அப்போதும் வீட்டில் அனைவரும் அன்பளிப்போம்
குடிக்கிற சூடில் தேநீர் பருகிக் கொண்டே விவாதிப்போம்
அதற்குப் பிறகும் திட்டலாம் நீ
பெயர் சொல்லு
அவசியம் வா தோழா
உன்னைமாதிரிப் பிள்ளைகளை பிஜேபி மாதிரி கட்சிகள் காவுகொள்வதை தடுக்க முடியாத கோவம்தான் எங்கள்மீது எனக்கு
என்ன சொல்ல
நேரில் பார்த்தால் நீ என்னை அப்பா என்றும் அழைக்கக் கூடும்
நீ என்னை வேசியின் மகனென்றே அப்போதுமழைத்தாலும் என்னால் மகனாக மட்டுமே உன்னை கொள்ள முடியும்
மீண்டும் சொல்கிறேன்,
உன்னைமாதிரிப் பிள்ளைகளை பிஜேபி மாதிரி கட்சிகள் காவுகொள்வதை தடுக்க முடியாத கோவம்தான் எங்கள்மீது எனக்கு
அவசியம் வா
#சாமம்கவிந்து ஒரு மணி எட்டு நமிடம்

கவிதை 088

ஹைகூ கவிதைகள்
இரண்டு
என் பல்லிடுக்கில்

Friday, September 21, 2018

நானும் கூறுகிறேன், குரலற்றவர்களின் குரலே இந்த நூல்



முனைவர் செல்வக்குமாரியின் “திருநங்கையரின் பால்நிலையும் வாழ்நிலையும்” நூலிற்கான எனது அறிமுக உரை

*********************************************************************


திவ்யபாரதி பர்கவுன்சிலில் தன்னை பதிவு செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தன்னை பார் கவுன்சில் உறுப்பினராகப் பதிவு செய்துவிட்டு வந்த திவ்யா நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஷர்மிளா என்ற ஒரு திருநங்கை தன்னை பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் செய்தியை முகநூலில் பதிந்திருந்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகே திவ்யா தனக்கிருந்த தடையை உடைக்க முடிந்தது. ஆனால் அதைவிடவும் பேரதிகமாய் ஷர்மிளா பார்கவுன்சிலில் இணைந்திருந்ததை மகிழ்ந்து கொண்டாடியிருந்தார்.
அந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் தோழர் பெண்ணியம் செல்வக்குமாரியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. தாம் எழுதியுள்ள “திருநங்கையர் பால்நிலையும் வாழ்நிலையும்” என்ற ஆய்வுநூலுக்கு ஒரு வாழ்த்துரை எழுதித் தருமாறு அவர் கேட்டிருந்தார்.
இரண்டும் ஒரே புள்ளியில் நிகழ்ந்தது சத்தியமாய் தற்செயல்தான்.
அந்த நூலுக்கான தன்னுரைக்கு “குரலற்றவர்களின் குரல்” என்று அவர் தலைப்பிட்டிருந்தார். இந்த நூலை வாசித்து முடித்ததும் நமக்குத் தோன்றியது இதுதான்,
ஏன் இவர் இந்த நூலுக்கு “குரலற்றவர்களின் குரல்” என்று தலைப்பு வைத்திருக்கக் கூடாது?
திருநங்கை என்றோ திருநம்பி என்றோ யாரும் பிறப்பதில்லை. ஆணென்றும் பெண்ணென்றும்தான் அனைவருக்கும் பிறப்பு நிகழ்கிறது. பிறகெப்படி திருநங்கைகளும் திருநம்பிகளும் காணக் கிடைக்கிறார்கள்?
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் குறித்து கருத்தெடுக்க விழைவோர் அவசியம் கவனம் குவிக்க வேண்டிய அடிப்படையான எளிய கேள்வி இது.
எல்லா மனிதர்களுக்குள்ளும் ஆண் தன்மையும் இருக்கும், பெண் தன்மையும் இருக்கும். பெண் தன்மையே இல்லாத வறட்டு ஆணோ அல்லது ஆண் தன்மையே இல்லாத வறட்டு பெண்ணோ சாத்தியமே இல்லை. இந்த வகையில் பால்நிலையைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1) ஆண் உடலில் ஆண் தன்மை பேரதிகமாகவும் பெண் தன்மை குறைவாகவும் உள்ளவர்கள் ஆண்கள்
2) பெண் உடலில் பெண் தன்மை பேரதிகமாகவும் பெண் தன்மை குறைவாகவும் உள்ளவர்கள் பெண்கள்
3) ஆண் உடலில் ஆண் தன்மை குறைவாகவும் பெண் தன்மை பேரதிகமாகவும் உள்ளவர்கள் திருநங்கைகள்
4) பெண் உடலில் பெண் தன்மை குறைவாகவும் ஆண் தன்மை பேரதிகமாகவும் உள்ளவர்கள் திருநம்பிகள்
வறுமையின் காரணமாக தங்கள் பிள்ளையின் ஆண்குறியை அறுத்து திருநங்கை போலாக்கி பாலியல் தொழில் ஈடுபடுத்தி பிழைப்பை ஓட்டும் பெற்றோர்களும் இருப்பதாக இந்த நூலில் ஓரிடத்தில் செல்வக்குமாரி பதிகிறார். இதுமாதிரி பிள்ளைகளின் நிலைமை கொடுமையினும் கொடுமை.
இவர்களுள் ஆண் தன்மையே மிகுதியாய் இருக்கும். ஆனால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு ஆண்களுக்கு விருந்தாக்கப்படும் ஆண்கள் இவர்கள்.
குறிப்பிட்ட காலம் வரைக்கும் இவர்கள் குடும்பத்தோடு ஐக்கியமாய் விளையாண்டு மகிழ்ந்து கொண்டாடி வாழவே செய்கிறார்கள். ஏதோ ஒரு புள்ளியில் தான் ஆணல்ல என்பதை உணரத் தொடங்குகிறார்கள். இதை உணரும் போது அவர்கள் அநேகமாக பதின் பருவத்தை அடைந்தவர்களாக இருக்கிறார்கள். அதன்பிறகு இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள்.
ஆனால் திருநம்பிகளால் அப்படி வெளியேறவும் வாய்ப்பில்லை. பல குடும்பங்களில் திருநம்பிகள் கௌரவக் கொலை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டு விடுகிறார்கள்.
இப்படி வீட்டைவிட்டு வெளியேறும் திருநங்கைகள் எப்படி ஒன்றிணைந்து குடும்பமாய் சங்கமிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை மிக நுட்பமாக ஆய்வு செய்து இந்த நூலூலில் பதிவு செய்திருக்கிறார் முனைவர் செல்வக்குமாரி.
இளைய திருநங்கை ஒருவர் திருநங்கைக் குடும்பத்திற்குள் நுழையும்போது அவரை மூத்த திருநங்கை சுவீகரித்து குடும்பத்து உறுப்பினராக அந்தத் திருநங்கையை ஏற்கும் வைபவத்திற்கு “ரீத்” என்று பெயர் என்பதை போகிற போக்கில் எழுதி நகர்கிறார் ராஜகுமாரி. ஆனால் இந்த நுட்பமான விஷயத்தைக் கண்டடைய அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்பது நமக்கு புரியவே செய்கிறது.
தனது குடும்பத்தில் ஆணாக வாழ்ந்து கொண்டு அரவாணியர் குடும்பத்தில் அரவாணியராக வாழ்பவர்களும் உண்டு என்கிறார் ராஜகுமாரி. இது எவ்வளவு ஆபத்தானது என்பதும் தான் பிறந்த குடும்பத்தில் ஆணாக வாழும் ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு பாதுகாப்பில்லாத மணித்துளிகள்தான். இதில் அவரை ஆணென்று நம்பி அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பங்கள் எத்தனிக்கும்போது அவரது நிலை மிக மிக கடுமையான ஒன்றாக அமையும்.
இதுபோக அரவாணியரை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களும் இருப்பதாகவும் அவர்களில் பலர் ரகசியமாக தங்களது குடும்பத்தைக் கட்டமைப்பதாகவும் இந்த நூல் கூறுகிறது. அவர்களில் பலர் குடும்பத்திற்கு பயந்து வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு இங்கும் அங்குமாக வாழ்க்கை நடத்துவதையும் ஏதோ ஒரு புள்ளியில் இது அவர்களது குடும்பத்திற்கு தெரிய வரும்போது அவர்களின் மிரட்டலுக்கு பயந்து திருநங்கையரை கைவிட்டு நகர்வதையும் இந்த நூலில் காணமுடிகிறது.
அவ்வாறு கைவிடப்பட்ட பிரிவாலுழலும் திருநங்கை ஒருவரின் வேதனைக் குரலை ஈரம் சொட்டச் சொட்ட பதிவு செய்திருக்கிறார் ராஜகுமாரி.
”தோல்விக்கு சுமை” என்ற சிறுகதை திருநங்கையருக்கு சொத்தில் பங்கில்லை என்ற அவலத்தை தோலுரிப்பதை மேற்கோளிடும் ஆசிரியர் தகப்பனின் சொத்தில் திருநங்கையருக்கும் பங்கு வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார். நிச்சயமாக அதற்கான போராட்டங்களை மிக வலுவாக முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு இந்தச் சமூகத்திற்கு இருக்கிறது.
இந்நூலின் முடிவுரையில் இந்தியக் குற்றவியல் சட்டம் 377 எப்படி அரவாணியரின் பாலுறவு உரிமையை இயற்கைக்கு மாறானது என்று காரணங்காட்டி தடை செய்த கேட்டினை சுட்டுகிறது. அதற்கு எதிராக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்ததையும் அதை மத அமைப்புகளும் சில அரசியல் கட்சிகளும் பழமைவாத அமைப்புகளும் எதிர்த்ததையும் இந்த நூலின் இறுதிப் பகுதி மிகச் சரியாக அம்பலப்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் அந்த சிறப்புமிக்க தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்டுள்ள மேல்முறைட்டின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று இந்த நூல் எழுப்பும் அய்யம் நம்மை வெகுவாகக் கவலைகொள்ளச் செய்கிறது. ஒருக்கால் தீர்ப்பு பாதகமாக வந்தால் இந்தக் கவலை நம்மை அந்தத் தீர்ப்பிற்கு எதிராக களமாடத் தூண்டும்.
அந்த வகையில் இது அரவாணியர் குறித்த ஆய்வுநூல் மட்டுமன்று. இது அரவாணியரை ஆதரவோடு அரவணைத்துக் கொள்கிற அவர்களுக்கு ஆதரவான நூல்.
அரவாணியர் குறித்து உலவுகிற புனைவுக் கருத்துக்களை பொய்யென்று நிறுவுகிற நூல்.
அரவாணியர்களுக்கு ஆதரவான சக்திகளை அடையாளாம் கண்டு அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்காக்க் களமாட்த் தூண்டுகிற நூல்.
இலக்கியத்திலிருந்தும், நீதிமன்றத் தீர்ப்புகளில் இருந்தும் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இந்த நூலுக்கான தரவுகளை சேகரித்திருக்கிறார் முனைவர் செல்வக்குமாரி.
இதற்காக ராஜகுமாரி நிறையத் தேடித் தேடி வாசித்திருக்கிறார். நிறைய நடந்திருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். நிறைய எதிர்வினைகளை நிச்சயமாக அவர் சந்தித்திருப்பார். நிறை இழந்துமிருப்பார் நிச்சயமாக.
மேற்சொன்னவற்றின் விளவுதான் இந்த நூல்.
எனக்கு சில ஆசைகள் உண்டு
எனக்கொரு மகன் எனக்கொரு மகள் என்று கூறுவதைப்போல எனக்கொரு மகன் ஒரு திருநங்கை என்று இயல்பாகக் கூறக்கூடிய காலம் ஒன்று வரவேண்டும்.
திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் சொத்தில் பங்குண்டு என்று சட்டம் வரவேண்டும்.
திரு நங்கைகள்மீது செலுத்தப்படும் அதே அளவு கவனம் திருநம்பிகள்மீதும் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வளவு மெனக்கெட்டு மிக நுட்பாக இந்த நூலைக் கொண்டு வந்திருக்கும் செல்ச்வக்குமாரிக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா.எட்வின்

Thursday, September 20, 2018

“நீங்கள் அலட்சியமாக இருந்தால் அது நடக்கவும் கூடும்”

”பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பக்கோடா விற்கப் போகவேண்டியதுதான் “ என்று சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் கூறியதை சலனமற்று தலைவர்கள் கடந்துபோவார்கள் என்றால் கிட்டத்தட்ட அதுதான் உண்மையாகவும் போகலாம்
இந்திய அரசியலில் அகிலேஷ் சிறு பிள்ளையாக இருக்கலாம். ஆனால் அவரது இந்தக் கூற்று எழுபது வயது தலைவர் ஒருவரின் அனுபவத் திரட்டாய் வந்திருக்கிறது. வள்ளுவனும் மிகச் சரியாய் சொல்கிறான்
“எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும்” என்று.
மதவெறிக்கு எதிரான அனைத்து தலைவர்களும் சிறுபிள்ளை சொன்னதுதானே என்று உதாசீனப்படுத்திவிட்டு கடந்துவிடாமல் அந்தக் கூற்றை சற்று ஆழமாய்ப் பரிசீலிக்க வேண்டும்.
இந்தியா முழுமையும் காவியடிக்கவேண்டும் என்பதற்கு அவர்கள் என்ன விலையானாலும் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
ஒரு உறுப்பினர்கூட தம் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கபடாத மாநிலங்களிலும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு எந்த விதமான கூச்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ இதை ஒட்டியான நிகழ்வுகளை நாம் சமீப காலங்களில் பார்த்தபடியேதான் இருக்கிறோம்.
ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்று தீர்க்கமாகத் தெரிந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப்போவோம் என்று தெரிந்த நிலையிலும், பெரும்பான்மைக்கும் அதிகப்படியான நிலையில் எதிரே திரண்டு விட்டார்கள் என்பது தெளிவாகிட்ட நிலையிலும், ஆளுநரை வைத்து தனிப்பெரும் கட்சி என்கிற அளவை வைத்து ஆட்சிக்கு வருகிறார்கள்.
அவர்களது திட்டம் இவைதான்,
1) நம்பிக்கை வாக்கெடுப்பிற்குள் அமைச்சர் பதவி, பணம், இன்னும் என்னவெல்லாம் சொல்லி சபலப்படுத்த முடியோ அவற்றையெல்லாம் செய்து எதிரணி எம் எல் ஏக்களை வளைப்பது
2) அல்லது, இருந்தவரை ஒரு நாளோ ஒரு வாரமோ, 15 நாட்களோ இருந்துவிட்டுப் போவது
இதை கர்நாடகாவில் பார்த்தோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.
கேரள மக்களுக்கு பேரிடர் காலத்தில் வழங்கிய அரிசிக்கான விலையைக்கூட கொடுக்க இருக்கிற நிவாரணா நிதியில் இருந்து பிடித்துக் கொள்வோம் என்று நெஞ்சில் ஒரு சொட்டு ஈரமும் இல்லாமல் கூறும் இரக்கமற்றவர்களாக பாஜக இருக்கிறார்கள்.
தில்லியில் பாண்டியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஆளுநர்களைக் கொண்டு முடக்கிப் போடுகிறார்கள்
தமிழ்நாட்டில் அவர்களுக்கென்று கன்னியாகுமரியில் இரண்டு வார்டுகளையும் ஒன்றிரண்டு ஊராட்சி மன்றங்களையும்பிடிக்க முடியும். அவ்வளவுதான்.
அந்த நிலையிலேயே அவர்கள் இங்கு போடும் ஆட்டம் இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது.
தூத்துக்குடி குழந்தை ஒருவர் விமானம் விட்டு இறங்கும்போது “பாசிஸ்ட் பாஜக ஒழிக” என்று கோஷமிட்டிருக்கிறார். அவர் கனடாவில் உயர் படிப்பு படிக்கும் குழந்தை. அந்த விமானத்தில் பாஜகவின் தமிழ்மாநிலத் தலைவர் திருமதி தமிழிசையும் வந்திருக்கிறார். அவர் வந்ததால்தான் இந்தக் கோஷமே போட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
விமான சிப்பந்திகள் யாரும் புகார் கொடுக்காத நிலையிலும் தமிழிசை கோழிசொன்னதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவரைக் கைது செய்து அவரது கடவுச் சீட்டை முடக்க முயற்சி செய்கிறார்கள்.
அதே நேரம் H ராஜா என்ற அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கிறுக்கன் அரைபோதையில் உளறுவதைவிடவும் கேவலமாக அனைவரையும் தாறுமாறாக பேசுகிறார்.
காவலர்கள் அவரைத் தேடுகிறார்கள். அதே சமயத்தில் வேறு ஒரு இடத்தில் காவலர்களின் பாதுகாப்போடு அவர் பொது மேடையில் பேசுகிறார்.
இந்த ஆட்சியை வைத்துக் கொண்டு அவர்கள் விளையாண்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவை அவர்களோடு கூட்டாளியாய் நின்று ரஜினி மற்றும் உதிரிக் கட்சிகள் ஆதரவோடு வெற்றிபெற வைத்து மந்திரி சபையில் இடம் பிடிப்பது, அதை வைத்து கட்சியைக் கொண்டுபோவது என்பது அவர்கள் திட்டம். இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று அலட்சியமாக யாரேனும் இருந்தால் அவர்களுக்கு சொல்வோம்
“நீங்கள் அலட்சியமாக இருந்தால் அது நடக்கவும் கூடும்”
உத்திரப் பிரதேசத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் தந்தை அம்பேத்கருக்கே ஞானஸ்தானம் செய்கிறார்கள். ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் கொத்து கொத்தாய் செத்ததையே அலட்சியமாய் கடந்து போகிறவர்கள்.
அங்கு அவர்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்கிற நிலைதான் இருந்தது. இடைத்தேர்தல் வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களாய் இருந்த முதல்வரும் துணை முதல்வரும் பதவிகளை ராஜினாமா செய்யவே வந்த இடைத்தேர்தல் அது. இரண்டு தொகுதிகளிலும் பாஜக மண்ணைக் கவ்வியது.
காரணம் மாயாவதியும் அகிலேசும் கரம் இணைத்தது.
அந்த அனுபவத்தில்தான் அகிலேஷ் சொல்கிறார்.
அதைக் கேட்டால் நாடு பிழைக்கும்.
இதில் காங்கிரசுக்கும் இட்துசாரிகளுக்கும் திமுக லாலு சந்திரசேகர் சந்திரபாபு இன்னும் அனைவருக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது.
பாஜகவை வீழ்த்த இவர்களை ஒன்றிணைக்க பொதுமக்கள் வீதிக்கு வந்தும் போராட வேண்டும்
அல்லது அகிலேஷ் சொன்னதுதான்
#சாமங்கவிய 21 நிமிடங்கள்
19.09.2018

கவிதை 087

ஒரு எட்டு நீ வந்து போனது
போகிற போக்கில் நிகழ்ந்ததோ 
என்னைப் பார்ப்பதற்கென்றேவோ 
எதுவாயினும் 
இனித்தது நீ வந்ததால்
கனவு

Wednesday, September 19, 2018

ராஜாவை விடவும் மோசமானவர்கள்

கடந்த இருபத்தி நான்குமணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன



1) இரண்டு தனிப்படைகள் உயிரைக் கொடுத்து நாடு பூராவும் தேடிக்கொண்டிருக்கும் திரு H.ராஜா அவர்கள் நேற்று மாலை வேடசந்தூரில் ஒரு கூட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி உரையாற்றியிருக்கிறார்


2) பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை எதிரிலேயே அவர் கேட்ட ஒரு நியாயமான் கேள்விக்காக பாஜகவினரால் கொலைவெறியோடு தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான கதிர் அவர்களை திருமதி தமிழிசை அவர் வீடு தேடி சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்
திருமயம் என்று நினைக்கிறேன். விநாயகர் சதுர்த்தி அன்று அங்கு நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்திற்கு தடை செய்யப்பட்டிருந்த பாதையின் வழியாக பிள்ளையாரை எடுத்துச் செல்ல முயன்றபோது அதை அங்குள்ள காவலர்கள் நீதிமன்றத் தடையானையை சுட்டிக்காட்டி அதைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் திரு H.ராஜா அவர்கள் உயர்நீதிமன்றத்தையும் காவலர்களையும் போதையில் உள்ள ஒரு மூன்றாம்தர குடிகாரனைவிடவும் தரக்குறைவாக பேசியது.
அங்குள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரைப் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கபட்டு அவர்களும் அவரை வலைபோட்டுத் தேடி வருகிறார்கள். பிரச்சினைப் பெரிதாவதை உணர்ந்துகொண்ட திரு ராஜா அவர்கள் அந்தக் குரல் தன்னுடையதில்லை என்று கூறிவிட்டார்.
தனிப்படைக் காவலர்களால் தேடப்பட்டுக் கொண்டிருப்பரான திரு ராஜா அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு நேற்று இரவு வேடசந்தூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார்.
இரண்டு விஷயங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன,
1) எந்தக் காவலர்களை அவ்வளவு கேவலமாகப் பேசினோமோ அந்தக் காவலர்களின் பாதுகாப்பில் பேசுகிறோமே என்ற என்ற கூச்சம் கொஞ்சமும் இல்லாது திரு ராஜா கொஞ்சம்கூட சலனமே இல்லாமல் உரையாற்றியது
2) நம்மை அவ்வளவு கேவலமாகப் பேசிய, இன்னும் சொல்லப்போனால் தமது சகாக்களால் தேடப்பட்டுவரும் குற்றஞ்சுமத்தப்பட்ட ஒருவரைப் பிடித்து தம் சகாக்களிடம் ஒப்படைக்காமல் அவருக்கு பாதுகாப்புத் தருகிறோமே என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவருக்கு பாதுகாப்பு கொடுத்த காவலர்கள்
அங்கும் அவர் நிதானமாகப் பேசினாரா என்றால் இல்லை/. அங்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மிகவும் கொச்சையாகப் பேசியிருக்கிறார். அதற்காக அங்குள்ள காவல்நிலையத்தில் அவர்மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
தொடரப்பட்டிருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனில் பதிவு செய்வதும் அவசியம்.
அதைவிட அவர் தலைமறைவாகிவிட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ள பத்திரிக்கையை மேடையில் நின்றவாறு தூக்கிக் காட்டி “சிங்கம் இங்கதாண்டா இருக்கு. முடிஞ்சா கை வைத்துப் பார்” என்று பாஜகவின் ஊழியர் ஒருவர் திமிராகப் பேசியிருக்கிறார்.
ராஜாவை விடவும் மோசமானவர்கள் அந்த மனிதரைப் போன்றவர்கள்.
முதலில் அவர்மீது ஒரு வழக்குப் போட வேண்டும்.
திரு ராஜா திருந்துவதாகத் தெரியவில்லை. சட்டம்தான் அவரைத் திருத்த வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. அதற்காக நிர்வாகத்திற்கு போராட்டங்களின் வாயிலாக நாம் கவனப்படுத்த வேண்டும்
இரண்டாவதாக பாஜக ஊழியர்களால் மரண வெறியோடு தாக்கப் பட்ட திரு கதிர் அவர்களின் வீடு சென்று திருமதி தமிழிசை ஆறுதல் கூறியிருக்கிறார்.
இரண்டில் ஏதோ ஒரு காரணத்திற்காக இதை திருமதி தமிழிசை செய்திருக்க வேண்டும்
1) செய்த தவறுக்கு வருந்தி அதை செய்திருக்க வேண்டும்
2) கேமராவில் பதிவாகி வைரலாகி விட்டது. இனி வேறு வழியில்லை. வழக்குப் பதிவாகி தமக்கும் பிரச்சினை வரும் முன் நிலைமையை சரி செய்துவிடலாம் என்பதற்காக செய்திருக்கலாம்
முதல் காரணம் எனில் அவரை வாழ்த்தலாம். இரண்டாவதுதான் எனில்,
கேமராவில் பதிவான கதிரைத் தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்
ஒரு கேள்வி என்னைக் குடைந்துகொண்டே இருக்கிறது.
திரு கதிர் அடி வாங்கியதிலிருந்து அவர் வீட்டிற்கு தமிழிசை போனது வரை நேரில் சென்று கதிரை அரவணைக்க நாம் ஏன் தவறினோம்?
#சாமங்கவிய 24 நிமிடங்கள்
17.09.2018

Tuesday, September 18, 2018

காவித் திரளைவிட காக்கித் திரள் பலம் வாய்ந்தது





அன்பிற்குரிய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரும் எங்கள் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரியவரான எங்கள் குமரி அய்யா அவர்களின் மகளுமான திருமதி தமிழிசை அவர்களுக்கு,
வணக்கம்.
தினமும் தினமும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. ஏறிக்கொண்டே போகிறது என்று சொன்னால் நீங்களே ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். நாளும் நாளும் ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்.
நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் கூடிக்கொண்டே போகிறது.
இவை இரண்டும் ஆட்டோ ஓட்டுநர்களை மிகக் கடுமையாக பாதிக்கும் விஷயங்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
மிக நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநரையே இவை இரண்டு விஷயங்களும் மிகக் கடுமையாய் பாதிக்கும்.
ஒரு நாளைக்கு 125 லிருந்து 150 கிலோமீட்டர் ஓட்டினால்தான் 1500 ரூபாய் கிடைக்கும் என்று கொள்வோம். கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம்.
நல்ல நிலையில் உள்ள ஆட்டோவெனில் இருபது கிலோமீட்டருக்கு ஒரு லிட்டர் குடிக்கும். வயதான ஆட்டோ எனில் 15 கிலோமீட்டர் கொடுக்கும். நாம் இரண்டிற்கும் இடையில் ஒரு லிட்டருக்கு 17 கிலோமீட்டர் என்று கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 150 கிலோமீட்டர் எனில் (150/17) 8.8 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும். தற்போதைய நெரிசலும் சிக்னல்களில் நிற்பதனாலும் இன்னும் ஒரு லிட்டர் கூட வரும். பத்து லிட்டர் என்று கொண்டால் தோராயமாக 850 ரூபாய் ஆகிறது.
வாடகை வண்டி எனில் அதற்கொரு 250 ரூபாய். திடீரென ஏற்படும் பஞ்சர் அல்லது கார்பரேட்டர் அடைப்பு அல்லது வண்டி முதலாளியிடம் கேட்கமுடியாத சில்லறை மராமத்து செலவினங்கள் என்ற வகையில் ஒரு 50 ரூபாய் செலவாகும். இந்த வகையில் ஏறத்தாழ 1150 ரூபாய் செலவாகும்.
ஆக 1500 ரூபாய்க்கு வண்டி ஓட்டினால் அவருக்கு 350 ரூபாய்தான் மிஞ்சும்.
இந்த நிலையில் தினமும் தினமும் பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே போனால் அவருக்கான மிச்சம் குறையும் என்பது நீங்கள் அறியாததா தாயே.
பெட்ரோல் உயர்வு தன்னை பாதிக்காது என்று சொல்ல படத்தில் உள்ள திரு கதிர் ஒன்றும் மத்திய அமைச்சர் அல்ல. மத்திய அமைச்சரின் அந்த அலட்சியமான கூற்றையும் எங்கள் அய்யாவின் மகளால் ஒருபோதும் மனதார ஏற்க முடியாது என்பதையும் நான் அறிவேன்,
எளிமையான ஆட்டோ ஓட்டுநரான அவர் இப்படியே பெட்ரோல் விலை ஏறிக் கொண்டிருந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார்.
இந்த 350 ரூபாயும் குறையும் எனில் அதைக் கொண்டு அவர் தனது குடும்பத்தை எப்படி நடத்துவார்? அவரது குழந்தைகளை எப்படி படிக்க வைப்பார்?
ஆகவே தனது ஸ்டாண்ட் அருகே உரையாற்ற வந்த உங்களிடம் இது நியாயமா எனக் கேட்டுள்ளார். அதை நீங்கள் சட்டை செய்யாத்தால் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார்.
அந்த ஏழை முதியவரை உங்களது கட்சிக்காரர்கள் உங்கள் எதிரிலேயே நையப் புடைத்திருக்கிறார்கள்.
கொஞ்சமும் சலனமே இல்லாமல் அந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறீர்களே. இது நியாயமா தமிழிசை அவர்களே?.
”ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்” என்பதை எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் எப்போதும் பாத்திரமாயிருக்கக் கூடிய தமிழறிஞர் குமரி அய்யா அவர்களின் செல்லப் பிள்ளையான உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?
கொஞ்சம் தரையில் நடக்க முயற்சி செய்யுங்கள் திருமதி தமிழிசை.
பரபரப்பு அரசியல் நிலை இல்லாதது தாயே.
காவித் திரளைவிட காக்கித் திரள் பலம் வாய்ந்தது என்பதையும் அருள்கூர்ந்து புரிந்துகொண்டு அரசியல் நடத்துங்கள்.
நன்றி.
அன்புடன்,
இரா.எட்வின்

#சாமங்கவிய ஒரு மணி பத்து நிமிடங்கள்
15.09.2018

65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2018

அனைத்தையும் அனுபவித்துதான் உணரவேண்டும் என்றெல்லாம் இல்லை. சில விஷயங்களை கற்பனையாக நினைத்துப் பார்த்தாலே கண்களில் பயம் கசிய அப்படியே மிரண்டு உறைந்து போய்விடுவோம்.
பக்கத்து ஊரில் இருக்கக்கூடிய அணையொன்று உடைந்து போனது என்பதை நேரில் போய் பார்த்தால்தான் அதன் பாதிப்புகளை உணர முடியும் என்றால் அவர்களுக்கல்ல இந்த மாதத்தின் கடைசி பக்கங்கள்.
தமிழகத்தின் முக்கியமான அணைகளில் ஒன்றான எங்கள் ஊர் முக்கொம்பு அணை உடைந்ததை நேரில் பார்த்த எங்களுக்கு அது தந்த பாதிப்புகளை விடவும், அதனால் எங்களுக்கு ஏற்பட்ட வேதனைகளை விடவும் இதுவரை ஆண்ட ஆட்சியாளர்களின் மீதும் மணல் மபியாக்கள்மீதும் எங்களுக்கு ஏற்படும் கோவம்தான் அதிகமாய் இருக்கிறது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு என்னும் இடத்தில் காவிரியின் மீது கட்டப்பட்டிருக்கும் அணை மேலணை ஆகும். இதுவரை அகன்ற காவிரியாக ஓடி வரும் நதியை காவிரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிக்கிற வேலையை மேலணை செய்கிறது.
உள்ளபடி சொல்ல வேண்டுமானால் மேலணையில் இரண்டு அணைகள் உள்ளன. ஒரே நதியாக அகன்று பரந்து வரும் காவிரி அந்த இடத்தில் இரண்டாகப் பிரிகிறது. தெற்குப் பகுதி காவிரி என்றும் வடக்குப் பகுதி கொள்ளிடம் என்றும் அழைக்கப் படுகிறது.
காவிரியில் ஒரு அணையும் கொள்ளிடத்தில் ஒரு அணையும் கட்டப்பட்டிருக்கிறது. காவிரிப்பகுதியில் நீர் அதிகமாகவும் கொள்ளிடம் பகுதியில் நீர் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கட்டுக்கடங்காத அளவு நீர்வரத்து இருந்தால் மட்டுமே கொள்ளிடத்தில் நீர் திறந்து விடப்படும். இன்னும் சொல்லப் போனால் காவிரிப் பகுதியில் உள்ள அணையின்மீது நடக்கும்போது ஏற்படும் ஒருவிதமான அச்சம் கொள்ளிடத்தில் கட்டப்பட்டுள்ள அணையின்மீது நடக்கும்போது இருக்காது. அத்தகைய சாந்தமான அணையில் இருந்துதான் ஒன்பது மதகுகள் உடைந்திருக்கின்றன.
அந்தப் புள்ளி தொடங்கி கல்லணையில் இவ்விரு நதிகளும் மீண்டும் இணைகிற வரைக்கும் இந்த இரண்டு நதிகளுக்கும் இடையில் இருக்கிற தீவில் திருவரங்கம், திருவானைக்கோவில், சர்க்கார்பாளையம் உள்ளிட்ட ஏராளமான ஊர்கள் உள்ளன. இரண்டு நதிகளிலும் சற்று அதிகமான அளவில் நீர் திறந்துவிடப்பட்டு சன்னமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலே இந்த ஊர்கள் அதிலுங் குறிப்பாக கல்லணைக்கு அருகில் உள்ள ஊர்கள் சொல்லொணா பாதிப்பிற்கு ஆளாகும்.
அணையின் ஒன்பது மதகுகள் இதுவரை உடைந்திருக்கின்றன. இந்த வகையில் சொல்லி அரற்றிக் கொள்கிற அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மொத்தம் உள்ள நாற்பத்தி சொச்சம் மதகுகளும் மொத்தமாகவோ அல்லது பெரும்பான்மை மதகுகளோ உடைந்துபோகும் பட்சத்தில் மொத்தத் தமிழகமும் இரக்கப்படும் நிலைமைக்கு திருச்சி போகும்.
இந்தச் சேதத்திற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.
1) அணையின் நிலைமையை அவ்வப்போது ஒழுங்காகப் பரிசீலிக்காதது. பரிசீலிக்கப் பட்டிருப்பின் அணை உடைவதற்கான ஆபத்தை உணர்ந்து அணையைப் பராமரிக்காதது.
ஒருக்கால் பரிசீலிக்கப்பட்டு ஆபத்தைக் கண்டுணராமல் இருந்திருப்பின் ஒழுங்காக பரிசீலிக்காதது.
2) மணல்திருட்டை ஊக்குவித்ததன் மூலம் அணையை பலவீனப் படுத்தியது.
மேலணை உடைந்து நமக்குத் தரும் பாடம் இதுதான்,
நதியைச் சீண்டாதீர்கள் கனவான்களே.
******************************************************************************
இதற்கு மழை காரணம் அல்ல.
இதை அப்படியே ஏற்க முடியாதவர்களும் இதை ஏற்பார்கள்,
இதற்கு மழை மட்டுமே காரணம் அல்ல.
குடகுப் பகுதியில் மழை ருத்ர தாண்டவமாடுவதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த மே மாதம் முதலே பேயாட்டம் ஆடிவரும் மழையினால் வீடுகள் சூறையாடப்பட்டு சாலைகள் துண்டாடப்பட்ட நிலையில் சிறு சிறு பாலங்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப் பட்டதாக செய்திகள் வருகின்றன. உண்மையோ பொய்யோ அல்லது மிகையோ நாமறியோம். ஆனால் குடகு மாவட்டத்தில் ஒரு ஊரையே காணோம் என்று வருகிற செய்திகள் நமக்கு கண்ணீரை வரவழைக்கின்றன. அந்தச் செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று மனது கிடந்து தவியாய்த் தவிக்கிறது.
இந்தத் துயரம் தோய்ந்த சூழலிலும் ‘எங்களுக்குத் தண்ணீர் தரல இல்ல, உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்’ என்று சபிப்பவர்களை நம்மால் ஒருபோதும் ரசிக்கவோ ஏற்கவோ இயலாது.
“இப்ப மட்டும் திறந்து விடற. இப்ப வேணாம், நீயே வச்சுக்க”, என்கிற வாதத்தையும் ரசிக்கிற நேரம் இதுவல்ல.
ஆனால் தமிழகத்தில் இருந்து கிளம்பும் இத்தகைய குரல்களுக்குப் பின்னால் உள்ள நியாயத்தையும் வலியையும் துயரையும் யாரும் புறந்தள்ளிவிட முடியாது என்பது மட்டுமல்ல, யாரும் புறந்தள்ளிவிடக் கூடாது என்பதையும் இந்த இடத்திலே நமது கோரிக்கையாக வைக்கிறோம்.
அதேபோல நிறைய வரும் போது நிறையத் தருகிறோம் என்று அவர்கள் சொல்வது முற்றும் வறட்டுத் தனமானதும் அல்ல.
அவர்கள் கூறுவதற்கும், நாம் கேட்பதற்கும், இந்த அளவிற்கு இன்று குடகு சேதப்பட்டு நிற்பதற்கும் இரண்டு காரணங்கள்தான் என்பதைத்தான் நாம் திரும்பத் திரும்பக் கூறுகிறோம்.
1) பணப்பயிர்களான தேநீர், காபி, ஏலம் ,மிளகு, மற்றும் பழங்களைப் பயிரிடுவதற்காக குடகு மலைப் பகுதியில் இயற்கை நமக்கு அரணாகத் தந்திருந்த சோலாஷ் காடுகளைப் பெருமளவு அழித்தது.
2) சுற்றுலாவை வளர்க்கிறேன் என்ற பெயரில் பெரிய ரெசார்ட்களை ஏற்படுத்தியதோடு பெரிய பெரிய பங்களாக்களை அந்த மலையில் ஏற்படுத்தியது.
‘சோலாஷ்’ என்பது இயற்கை கருணையோடு நமக்களித்த பெருவரம். நீளமான கோரைப் புற்களைப் போன்ற ஒரு அடர்ப்புதர்ப் பகுதியே சோலாஷ் காடுகள் ஆகும். எவ்வளவு கொடூரமான மழை பெய்தாலும் அவற்றை முற்றாய் முழுதாய் இவை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.
தான் உறிஞ்சி வைத்துக் கொண்டதை பல மாதங்களுக்கு சேமித்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கசியத் தரும். எனில், ஒருமுறை பெய்த நீர் சோலாஷால் உறிஞ்சி வைத்துக் கொள்ளப்பட்டு பல மாதங்களுக்கு அவை கீழே ஓடி வரும். நீரின் வேகம் குறைவாய் இருக்கும்.
இப்போது அவற்றை அழித்து விட்டதால் சேமிக்க வாய்ப்பற்று மொத்த நீரும் ஒரே நேரத்தில் முரட்டுத் தனமாய் கீழிறங்குகிறது. வேகம் அதிகம், நீரும் அதிகம் என்பதால் இயற்கையாகவே சேதமும் அதிகம் என்றாகிறது.
இப்படிப் புரிகிறமாதிரிப் பார்ப்போம்,
சோலாஷ் இல்லாததால் நீர் முழுவதும் ஒரே நேரத்தில் இறங்கி விடுகிறது. கர்நாடகாவும் இப்போதே நீரைத் திறந்து விடுகிறோம். சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நம்மிடம் கூறுகிறது.
மாறாக சோலாஷ் அழிக்கப் படாமல் இருந்திருப்பின் நீர் சேமிக்கப் பட்டிருக்கும். நீர் சேமிக்கப்பட்டிருந்தால் அதிக காலத்திற்கு நீர் கீழிறங்கிக் கொண்டிருக்கும். அதிக காலத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நீர் இறங்கிக் கொண்டிருந்தால் கர்நாடகமும் உரிய கால இடைவெளியில் நமக்கு நீரைக் கொடுக்க முடியும். உரிய கால இடை வெளியில் கர்நாடகா நமக்கு நீரைத் தரும் எனில் தஞ்சை எப்போதும் நெற்களஞ்சியமாகவே இருந்திருக்கும்.
இதுமட்டும் அல்ல, குடகு மலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள முரட்டுக் கட்டிடங்களுக்காக உறிஞ்சப்படும் நீரும் அதிக பாரம் தரும் சமமின்மையும்கூட இத்தகைய பேரழிவுகளுக்கு காரணமாகின்றன.
ஆக, மீண்டும் சோலாஷைக் கட்டமைத்து இத்தகைய முரட்டுக் கட்டிடங்களை அழித்துப் போட்டால் அல்லது புதிதாக கட்ட்டங்களுக்கு அனுமதி மறுத்தாலே போதும் இத்தகைய பேரழிவுகளும் இருக்காது, இரு மாநிலத்து மக்களும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் வாழ முடியும்
***************************************************************************
கேரளாவைப் புரட்டிப் போட்டிருக்கிறது பெருமழை. மழையின் வேகத்தைவிடவும் அதிவேகமாய் அங்குள்ள அரசும் மக்களும் குறிப்பாக மீனவர்களும் மண்ணை மறுகட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1) எதிர்க்கட்சித் தலைவரோடு இணைந்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும் தோழர் பினரயி விஜயன்
2) எமது மீனவர்கள்தான் எமது நேவி என்ற முதல்வரின் உருக்கத்தில் நெகிழ்ந்த மீனவர்கள் அது போதும் இதற்காக அரசு தருவதாய் சொன்ன ஊதியத்தை நிராகரித்தது
3) அரைக்கால் டவுசரோடு சேற்றில் இறங்கிப் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள்
4) பேரிடர்ப் பணியில் தோள்கொடுக்கும் தமிழ்நாட்டு மக்கள்
ஆகியோர் நெகிழ்த்துகிறார்கள்.
1) கொடுத்த அரிசிக்கான பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்ட நிவாரணாப் பணத்தில் கழிப்பதாகக் கூறும், அரேபிய நாடுகள் தரும் உதவியைத் தடுக்கிற மத்திய அரசும்
2) இதிலும் மதவெறியை நுழைக்கிற குருமூர்த்தி மற்றும் எச் ராஜாவும் எரிச்சலைத் தருகிறார்கள்

Monday, September 17, 2018

ஜெய் ராக வேந்தா

சிங்கபூர் இசை நிகழ்ச்சி.
எங்கள் கருப்பு ராக வேந்தனின் கையசைவுக்கு ஏற்ப வெள்ளை சீமாட்டிகளும் சீமான்களும் வயலைன் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெருமையும் திமிருமாய் கவனிக்கிறேன்.
இதில் என்ன திமிர் வேண்டிக் கிடக்கு?
இருக்கு.
காந்தியாரை ரயிலில் இருந்து தள்ளும்போது அந்த வெள்ளையர்கள் சொன்னது,
“கேவலமான கருப்பு இந்திய நாயே”
இத்தனைக்கும் காந்தியார் நல்ல சிவப்பு. அவரையே அப்படி சொன்ன வெள்ளைச் சீமாட்டிகளும் சீமான்களும் எங்கள் கருப்பு ராக வேந்தனின் கை அசைவுக்கு இயங்குவதைப் பார்க்கும்போது ஏற்பட்ட பெருமையும் திமிரும் இது.
ஜெய் ராக வேந்தா

Sunday, September 16, 2018

கற்றுக் கொள்வோம்

உலகமே எதிர்பார்க்கும் JNU மாணவர் பேரவை தேர்தல் முடிந்து பிள்ளைகள் வெற்றிச் சிரிப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான்
“தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பிள்ளைகள் ஒவ்வொரு முறையும் நமக்கு பாடம் சொல்லித் தருகிறார்கள்”
இந்த நான்கு பிள்ளைகளில் ஒருவர் எனக்கு பொதுச் செயலாளராக வரக்கூடும்.
அது வரைக்கும் என்னை விட்டு வை இயற்கையா

அது அவர் குரல் இல்லையாம்

விநாயகர் ஊர்வலம் தொடர்பாக திரு H.ராஜா அவர்களுக்கும் காவலர்களுக்கும் பிரச்சினை எழுகிறது.
காவலர்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கூறுகிறார்கள்
"ஹைகோர்டாவது மயிராவது" என்கிறார் ராஜா
பிரச்சினையானதும் அது என் குரல் இல்லை என்கிறார்
இதில் விநாயகர் பக்தி இதற்குள் எல்லாம் நமக்கு எதுவும் இல்லை
அதை அவர் சொன்னாரா என்பதை விசாரிக்க வேண்டும்
அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்
அவர் பெரியாரை பேசியபோதே நீதிமன்றம் சுதாரித்திருந்தால் இந்த அளவிற்கான தைரியம் அவருக்கு வந்திருக்காது

14.09.2018

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கால் நூற்றாண்டிற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் மாநில அரசு விரும்பினால் அமைச்சரவைக் கூடி முடிவெடுத்து விடுவித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வந்தவுடனே பெரும்பான்மை தமிழ் மக்கள் உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கத் துவங்கி விட்டார்கள்.
தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் திரு மு.க..ஸ்டாலின் அவர்கள் ”காலம் தாழ்த்தாது உடனடியாக அவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளார்.
மாநில அரசும் காலத்தை வீணடிக்காமல் அவசர கதியில் களம் இறங்கியது. அமைச்சரவை உடனே கூடியது. எழுவரையும் விடுவிப்பது என்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுகிறது
கூடிய வேகத்தினும், தீர்மானம் நிறைவேற்றிய வேகத்தினும் கூடுதல் வேகத்தோடு அதை மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. அவை அனைத்தின் வேகத்தினும் அதிக வேகத்தோடு அந்த்த் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புகிறார் மாண்புமிகு ஆளுநர்.
உச்சநீதி மன்றத்தின் பெஞ்ச் அளித்துள்ள உத்தரவு தெளிவாக இருக்கிறது. மாநில அரசு விரும்பினால் அவர்களே தீர்மானம் நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்யலாம்.
மாநில அரசு அவர்களை விடுதலை செய்ய விரும்புகிறது. தீர்மானம் நிறைவேற்றுகிறது. இந்தத் தீர்மானத்திற்கு இந்த அரசின் நிர்வாகத் தலைவரான ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அந்தத் தீர்மானத்தை மாண்பமை ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறது.
இந்த நிலையில் ஒன்று அவர் அதை ஏற்று அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அல்லது அதை ஏற்க மறுத்து அரசுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். அதன் பிறகு என்ன செய்வது என்பது அதன் பிறகான விஷயம்.
ஆளுநரோ அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெளிவு பெறுவதற்காக அனுப்புகிறார். உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றுகிற அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு இருப்பதாகப் படவில்லை.
எப்படிப் பார்த்தாலும் இது நீதிமன்ற அவமதிப்பே.
இது ஒருபுறம் இருக்க பாஜகவும் காங்கிரசின் பல தலைவர்களும் ஊடகங்களில் லபோ திபோ என்று கொதிக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி கொலைக்கு ஒரு நியாயம் வேண்டாமா? என்கிறார்கள்.
வேண்டும், நிச்சயமாக வேண்டும்.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் கனவான்களே, அவரது கொலையைப் போலவே இளவரசன் கொலைக்கும் சங்கர் கொலைக்கும் நியாயம் வேண்டும் என்பதுதானே நியாயம்
ஒன்று புரியுமா, இவற்றில் எந்த வழக்கையும் நீங்கள் முறையாக விசாரிக்கவே இல்லை.
ராஜீவ் கொலை வழக்கில் இன்னும் விசாரிக்க வேண்டி இருப்பதாக கமிஷன் சொல்லவில்லையா நியாயவான்களே?. எனில், வழக்கு இன்னும் முடியவே இல்லையே. அப்புறம் எப்படி இவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள்?
குற்றவாளிகளைத் தண்டியுங்கள். அதற்கு நீங்கள் விசாரனைக் கைதியை விசாரிப்பதுபோல திரு சுப்ரமணியசாமியை விசாரிக்க வேண்டி வரும். அவரையும் திருச்சி வேலுசாமியையும் விசாரிக்காமல் உங்களால் இந்த வழக்கில் ஒரு முடிவுக்கு வர முடியாது.
இந்த வழக்கை சரியாக முன்னெடுப்பதில் திருமதி சோனியா காந்தியே முனைப்பு காட்டாததில் கவலை தெரிவிக்கும் வேலுசாமி தன்னை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கொண்டே இருக்கிறார். அவர் காங்கிரச்காரரும்கூட.
இந்த நேரத்தில் போலிசாருடன் தனக்கு ஏற்பட்ட விவாத்த்தில், “ஹை கோர்ட்டாவது மயிராவது” என்று பாஜக வின் தேசிய செயலாளார் H.ராஜா கூறியிருக்கிறார்.
இந்த தேசத்தை ஆளும் கட்சியின் தேசிய செயலாளர் கோர்ட்டாவது மயிராவது என்பது அந்தக் கட்சியின் நிலைப்பாடு அல்ல எனில் அவரை கட்சியைவிட்டு விலக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் கட்சியின் நிலைப்பாடும் அதுதான் என்று கொள்ள வேண்டும்.
முட்டிக்கு முட்டி தட்டி அவரை உள்ளே போடுங்கள்.
அவர்களை விடுவிக்க வேண்டும் என்று திமுக கோருகிறது. ஆளும் அதிமுக விடுதலை செய்ய முயற்சிக்கிறது.
எழுவரின் விடுதலையை எதிர்க்கும் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு கொள்வதிற்கில்லை என்று ஏன், திமுகவும் அதிமுகவும் கூறக்கூடாது?
#சாமங்கவிய ஒரு மணி 6 நிமிடங்கள்
14.09.2018

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...