Saturday, September 8, 2018

போர்த்தொழிலில் ஊழல் ஒருபோதும் ஆகாது

”‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?”
என்று ராமருக்கு வசிஸ்டர் அறிவுரை கூறுவதாக கம்பராமாயணத்தில் வருகிறது.
ஒரு மன்னன் அடுத்த நாட்டு மன்னனோடு பகை கொள்வதற்கு பதில் அன்பை தெளிக்க முன் வருவான் எனில் இந்த மண்ணில் போர் ஏற்படாது.
அதாவது நாடுகள் பகை மறந்து அன்பை சந்தனமாக தேய்த்து ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டால் இந்த மண்ணில் போரே இருக்காது.
எந்த நாடு சமாதானத்தை தூவுவதன் மூலம் போரைத் தவிர்க்கிறதோ அந்த நாட்டின், அந்த நாட்டின் மன்னனின் புகழ் இப்புவி எங்கும் பரந்து விரியும்.
போரே இல்லை என்றானால் படையினர் போரில் சாக மாட்டார்கள். எனில், போர் வீரர்களின் எண்ணிக்கை குறையாது. அத்தோடு அவ்வப்போது படைக்கான ஆள்சேர்ப்பின் மூலம் படையின் பலம் கூடிக்கொண்டே இருக்கும்.
போரில் இடையறாது ஈடுபடும் நாடு தொடர்ந்து வீரர்களை இழக்கும்.
எனவே பகை கொள்ளாத நாடு போர் செய்யாது. போர் இல்லை எனில் வீரகளை இழக்கத் தேவை இருக்காது.
வீரர்களை இழக்காத படை பலமான படை.யாக இருக்கும். பலமான படை பயம் கொடுக்கும். நம் மீதான பயம் நமக்கு பாதுகாப்பைத் தரும்.
இதை எல்லாம் நான் சொல்லவில்லை மாண்புமிகு பிரதமர் அவர்களே, மாண்புமிகு பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்களே. நீங்கள் பெரிதும் போற்றித் துதிக்கிற, இன்னும் சொல்லப்போனால் யாருடைய பெயரால் ராஜியத்தைக் கட்டமைக்க விரும்புகிறீர்களோ அந்த ராமபிரானுக்கு வசிஸ்டர் கூறியது.
எங்களுக்கு அது புராணம். ஆனால் உங்களுக்கு அது ஆன்மீக ஆவணம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்
ஆனால் நீங்களே போர் விமானக்களை வாங்கிக் குவிக்க முனைகிறீர்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. போர் விமானங்கள்தானே வாங்குகிறோம். போர் செய்வதற்காக நாங்கள் ஒன்றும் அலையவில்லையே என்று நீங்கள் கேட்கக் கூடும். போர் விமானங்களை வாங்குவதன் மூலம் நமது பலம் பெருகும். நமது பலம் பெருகினால் நம் மீது யாரும் போர் தொடுக்க அஞ்சுவார்கள். எனில், போர் தடுக்கப்படும்.
ஆக, இதுகூட கம்பனின் கனவுதானே என்றும் நீங்கள் கேட்கக் கூடும்.
ஊழலுக்கு போர் விமானம் வாங்கினால் ஒருநாடும் நம்மைக் கண்டு பயப்படப் போவதில்லை.
ஆனால் இதை ஏதோ நீங்கள் மட்டுமே செய்யவில்லை என்பதும், முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் போட்ட ஒப்பந்தத்தின் நீட்சிதான் இது என்றும் எங்களுக்குத் தெரியும்
ஆனால் 526 கோடிக்கும் 1670 கோடிக்கும் இடையே மலை அளவு இடைவெளி இருக்கிறது.
போர் விமானக்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரிப்பதில் 75 ஆண்டுகால அனுபவம் உள்ள பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தை விடுத்து 13 நாட்களே வயது கொண்ட அம்பானியின் நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் வாய்ப்பை நீங்கள் வாங்கிக் கொடுத்திருப்பதில் சந்தேகம் இருப்பதாக ஃப்ரான்ஸ் நாட்டின் அரசு தொலைக்காட்சியான ஃப்ரான்ஸ் 24 அய்யம் வெளியிடுகிறது
நீங்கள் ஊழலற்றவர்கள் என்றால் அதை நிறுவுங்கள். இந்த ரபேலில் காங்கிரஸ்தான் ஊழல் செய்த்து என்றால் அதை நிறுவி தண்டனை வாங்கிக் கொடுங்கள். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அப்போதும் சொன்னோம். இப்போதும் அதையே சொல்கிறோம். எப்போதும் இதையேதான் சொல்வோம்,
யாரொடும்
பகை கொள்ளலன்
என்றபின்
போரொடுங்கும்
புகழொடுங்காது
அதைவிட முக்கியம்,
போர்த்தொழிலில் ஊழல் ஒருபோதும் ஆகாது
#சாமங்கவிந்து 50 நிமிடங்கள்
08.09.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...