1) இரண்டு தனிப்படைகள் உயிரைக் கொடுத்து நாடு பூராவும் தேடிக்கொண்டிருக்கும் திரு H.ராஜா அவர்கள் நேற்று மாலை வேடசந்தூரில் ஒரு கூட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி உரையாற்றியிருக்கிறார்
2) பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை எதிரிலேயே அவர் கேட்ட ஒரு நியாயமான் கேள்விக்காக பாஜகவினரால் கொலைவெறியோடு தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான கதிர் அவர்களை திருமதி தமிழிசை அவர் வீடு தேடி சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்
திருமயம் என்று நினைக்கிறேன். விநாயகர் சதுர்த்தி அன்று அங்கு நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்திற்கு தடை செய்யப்பட்டிருந்த பாதையின் வழியாக பிள்ளையாரை எடுத்துச் செல்ல முயன்றபோது அதை அங்குள்ள காவலர்கள் நீதிமன்றத் தடையானையை சுட்டிக்காட்டி அதைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் திரு H.ராஜா அவர்கள் உயர்நீதிமன்றத்தையும் காவலர்களையும் போதையில் உள்ள ஒரு மூன்றாம்தர குடிகாரனைவிடவும் தரக்குறைவாக பேசியது.
அங்குள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரைப் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கபட்டு அவர்களும் அவரை வலைபோட்டுத் தேடி வருகிறார்கள். பிரச்சினைப் பெரிதாவதை உணர்ந்துகொண்ட திரு ராஜா அவர்கள் அந்தக் குரல் தன்னுடையதில்லை என்று கூறிவிட்டார்.
தனிப்படைக் காவலர்களால் தேடப்பட்டுக் கொண்டிருப்பரான திரு ராஜா அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு நேற்று இரவு வேடசந்தூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார்.
இரண்டு விஷயங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன,
1) எந்தக் காவலர்களை அவ்வளவு கேவலமாகப் பேசினோமோ அந்தக் காவலர்களின் பாதுகாப்பில் பேசுகிறோமே என்ற என்ற கூச்சம் கொஞ்சமும் இல்லாது திரு ராஜா கொஞ்சம்கூட சலனமே இல்லாமல் உரையாற்றியது
2) நம்மை அவ்வளவு கேவலமாகப் பேசிய, இன்னும் சொல்லப்போனால் தமது சகாக்களால் தேடப்பட்டுவரும் குற்றஞ்சுமத்தப்பட்ட ஒருவரைப் பிடித்து தம் சகாக்களிடம் ஒப்படைக்காமல் அவருக்கு பாதுகாப்புத் தருகிறோமே என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவருக்கு பாதுகாப்பு கொடுத்த காவலர்கள்
அங்கும் அவர் நிதானமாகப் பேசினாரா என்றால் இல்லை/. அங்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மிகவும் கொச்சையாகப் பேசியிருக்கிறார். அதற்காக அங்குள்ள காவல்நிலையத்தில் அவர்மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
தொடரப்பட்டிருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனில் பதிவு செய்வதும் அவசியம்.
அதைவிட அவர் தலைமறைவாகிவிட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ள பத்திரிக்கையை மேடையில் நின்றவாறு தூக்கிக் காட்டி “சிங்கம் இங்கதாண்டா இருக்கு. முடிஞ்சா கை வைத்துப் பார்” என்று பாஜகவின் ஊழியர் ஒருவர் திமிராகப் பேசியிருக்கிறார்.
ராஜாவை விடவும் மோசமானவர்கள் அந்த மனிதரைப் போன்றவர்கள்.
முதலில் அவர்மீது ஒரு வழக்குப் போட வேண்டும்.
திரு ராஜா திருந்துவதாகத் தெரியவில்லை. சட்டம்தான் அவரைத் திருத்த வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. அதற்காக நிர்வாகத்திற்கு போராட்டங்களின் வாயிலாக நாம் கவனப்படுத்த வேண்டும்
இரண்டாவதாக பாஜக ஊழியர்களால் மரண வெறியோடு தாக்கப் பட்ட திரு கதிர் அவர்களின் வீடு சென்று திருமதி தமிழிசை ஆறுதல் கூறியிருக்கிறார்.
இரண்டில் ஏதோ ஒரு காரணத்திற்காக இதை திருமதி தமிழிசை செய்திருக்க வேண்டும்
1) செய்த தவறுக்கு வருந்தி அதை செய்திருக்க வேண்டும்
2) கேமராவில் பதிவாகி வைரலாகி விட்டது. இனி வேறு வழியில்லை. வழக்குப் பதிவாகி தமக்கும் பிரச்சினை வரும் முன் நிலைமையை சரி செய்துவிடலாம் என்பதற்காக செய்திருக்கலாம்
முதல் காரணம் எனில் அவரை வாழ்த்தலாம். இரண்டாவதுதான் எனில்,
கேமராவில் பதிவான கதிரைத் தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்
ஒரு கேள்வி என்னைக் குடைந்துகொண்டே இருக்கிறது.
திரு கதிர் அடி வாங்கியதிலிருந்து அவர் வீட்டிற்கு தமிழிசை போனது வரை நேரில் சென்று கதிரை அரவணைக்க நாம் ஏன் தவறினோம்?
#சாமங்கவிய 24 நிமிடங்கள்
17.09.2018
17.09.2018
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்