Wednesday, December 18, 2013

12 நடை நமது


கல்வி குறித்து கவலைப் படுகிற கல்வித்துறை அதிகாரிகளைப் பார்ப்பது என்பது அரிதாய்ப்போன ஒன்றாகிவிட்டது. தேர்ச்சி விழுக்காட்டைப் பற்றிய அக்கறையும், அது நோக்கிய பயணமுமே ஏறத்தாழ அவர்களது இன்றைய செயல்திட்டமாய் மாறிப் போய் இருக்கிறது.

ஏறத்தாழ எல்லாக் கல்வித்துறை அதிகாரிகளுமே பல நேரங்களில் பின்னிரவு வரைக்கும் உழைக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். பள்ளி பள்ளியாக பம்பரமாய் சுற்ருகிறார்கள். தலைமை ஆசிரியர்களை, ஆசிரியர்களை அன்பாய், கடுமையாய் என்று எப்படியோ ஒரு வகையில் முடுக்கிவிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

ஆனால் பெரும்பான்மையோரின் இலக்கு தேர்ச்சி விழுக்காட்டில் தமது மாவட்டத்தை எப்படியேனும் மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்பதாகத்தான் இருக்கிறது. முதல் பத்து இடங்களுக்குள் வந்து விட்டால் அடுத்த ஆண்டு எப்படியேனும் முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதாகிப் போகிறது அவர்களது கனவும் அதுநோக்கிய அவர்களது உழைப்பும்.

இன்னும் சில அதிகாரிகள் மாநிலத்தில் முதல் மதிப்பெண்களை குறிவைத்து விரிகிறார்கள். சான்றோனாக்குவது, மனிதனாக்குவது என்பதையெல்லாம்கூட விடுவோம், குறைந்த பட்சம் கல்விமானாக்குவது என்பதுகூட இவர்களது செயல்திட்டத்தில் இல்லை. மதிப்பெண்களைப் அள்ளிக் குவிக்கிற எந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதும், நல்ல என்றுகூட சொல்ல இயலாது, நூறு விழுக்காடு தேர்ச்சியை அறுவடை செய்கிற தொழிற்சாலைகளாக பள்ளிகளையும் இவர்களை அறியாமலேயே இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் வாழ்ந்து விட்டு வெளியேறும் மாணவன் ஒரு நல்ல மனிதனாக, வாழ்க்கையை சுயமாக எதிர்கொள்கிறவனாக, சான்றோனாக மாறியிருக்க வேண்டும் , அதற்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்று கருதுகிற அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

அதிலொருவர் அதுநோக்கிய தனது கனவுப் பயணத்திற்கான வாகனமாக தனது வலையை பயன்படுத்துகிறார்.

இன்னும் சொல்லப்போனால் தன்கீழ் பணியாற்றக் கூடிய, அவரது மொழியில் சரியாகச் சொல்வதெனில், தன்னோடு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை, மாணவர்களைப் படிப்பிக்க வேண்டுமெனில் முதலில் தாம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை உணரச் செய்தவர். அதிலுங்குறிப்பாக தமிழாசிரியர்கள்  மண் குறித்து, மொழி குறித்து, கலாச்சாரத் தொன்மம் குறித்து அக்கறையோடு இருப்பது அவசியம் என்பதையும் உணரச் செய்திருக்கிறார்.

இதற்கு இணையத்தின் பயன்பாடு இன்றியமையாதது என்பதை உணரச் செய்திருக்கிறார்.

விளைவு, இன்று இவரது மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய தொண்ணூறு விழுக்காடு தமிழாசிரியர்கள் இணையம் பயன் படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். அதில் பெரும்பான்மையோர் சொந்தமாக வலைகளை வைத்திருக்கிறார்கள்.

வலைகளை உருவாக்குவது எப்படி?, வலைகளைக் கொண்டு எது செய்யலாம் என்பவற்றிற்காக பயிற்சிப் பட்டறைகளை தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்துகிறார். ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றில் பங்கேற்கிறார்கள்.

அவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் தற்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள் முருகன். அவரது வலை ,” நடை நமது”

வரலாறு படிக்காதவன் வரலாறு படைக்க முடியாது என்பார்கள். அதை இவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால்தான் நமது தொன்மங்களையும் விழுமியங்களையும் கசியக் கசியப் பேசுகிறது இவரது வலை.

அஜந்தாவா?, எல்லோராவா?, எது இந்தியாவின் தொன்மையான குகை ஓவியம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது கடந்தும் தொன்மையான குகை ஓவியங்கள் நமது தமிழ் மண்ணில், திருமயத்தில் உள்ள பாறைகளில் , குகைகளில் இருப்பதை தகுந்த ஆதாரங்களோடு பேசுகிறது இவரது வலை.

ஓவியம் என்கிற கலை வடிவம் கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னமே எழுதப் பட்ட சித்திர வடிவங்களை ஆதாரத்தோடு நமது நடை பேசுகிறது. இந்த ஓவியங்களின் வயது ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் என்பதை அறியும் போது இந்த வலையை, அதன் உரிமையாளரை, அவரது மற்றும் அவரது நண்பர்களின் உழைப்பை கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது.

சமய தத்துவ ஆராய்ச்சியிலும் விவாதங்களிலும் நீலகேசி எவ்வாறு பங்கெடுத்தது என்கிற விவரங்களை வாசிக்கிற மாதிரி பேசுகிறது ”நீலகேசி உரைநூல் மொழிபெயர்ப்பும் விடுபடல்களும்” என்கிற ஒரு பதிவு.

“நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெறு காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்த காப்பியம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் இலக்கிய வரலாறுகள் சொல்லிப் போவது” தவறு என்பதை மிக வன்மைமையாக தக்க சான்றுகளோடு நிறுவுகிறது ” நமது நடை”

இலக்கணம் என்றாலே பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடும் இன்றைய சூழலில்  தி.வே. கோபாலையரின் இலக்கணப் பதிப்புகள் குறித்து ஒரு பதிவு பேசுகிறது.

அடிப்படையில் இவர் ஒரு கவிஞர் என்பதால் கவிதைகளுக்கும் இவரது வலையில் பஞ்சம் இல்லை.

இப்படி சொல்லலாம்,

ஏராளமான வலைகளையும் வலைஞர்களையும் உருவாக்கிய ஒரு விதைவலை நடை நமது. அவசியம் போய்ப் பாருங்கள்…

நன்றி : “புதிய தரிசனம்” 

Sunday, December 1, 2013

இது தவறெனில்....



சமீபத்தில் வெளியான இரண்டு தீர்ப்புகள் என்னைக் கையைப் பிடித்து இதற்குள் இழுத்துப் போயின.

1) கல்லூரி முதல்வரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரனைக் கைதிகளாக சிறையில் உள்ள மூன்று மாணவர்களும் பல்கலைக் கழகத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது.

2) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.

இரண்டுமே ஆகச் சமீபத்தில் வெவ்வேறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளாகும்.

நம்மைப் பொறுத்தவரை இவை இரண்டு தீர்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போதுதான் பிரச்சினையே வருகிறது. கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது சரி என்றால் கிரிமினல் வழக்குகள் நிழுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்பது தவறாய் படுகிறது. அல்லது கிரிமினல் வழக்குகள் நிழுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்றால் கொலை வழக்கு நிலுவையில் உள்ள மாணவர்கள் மூவரும் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது தவறாய் தெரிகிறது.

இதன்மூலம் இன்னொரு விஷயத்தை கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் கொலை வழக்கு நிலுவையில் உள்ள மாணவர்கள் தேர்வெழுத முடியாது. ஆனால், அவர்கள் விரும்பினால் தேர்தலில் நிற்கலாம். வெற்றி பெற்றால் அமைச்சராகக் கூட ஆகலாம்.

இதை இப்படியும் சொல்லலாம். குற்றப் பின்னனி உள்ளவன் பொறியியல் வல்லுனராகக் கூடாது. ஆனால் அமைச்சராகலாம். எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.

ஒன்றைச் சொல்லி விடுகிறேன். அந்தக் கொலை வழக்கு முறையாக நடக்க வேண்டும் என்பதிலும் மிகச் சரியான தண்டனை கொலையாளிளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் நான் இரண்டாவதாய் இல்லை. ஆனால் நெஞ்சில் ஈரம் மிச்சம் இருப்பவர்களைப் பார்த்து இரண்டு கேட்க ஆசைப் படுகிறேன்.

மனசு நிறைய ஆசைகளோடும், விழிகளில் கசியும் கனவுகளோடும்தானே எம் பிள்ளைகள் கல்வி நிலையங்களில் நுழைகிறார்கள். அவர்கள் கைகளில் கொலைக் கத்தியைக் கொடுத்த சக்தி எது?

தங்கள் குடும்பத்தின் ஆறேழு வயிறுகளுக்காகவும் வாழ்க்கைப் பாட்டிற்காகவும்தானே பாடம் கற்பிக்க வருகிறார்கள். எந்தக் குழந்தைகள் வளமோடு வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று மனசார போராடுகிறார்களோ அதே குழந்தைகளிடம் ஆசிரியர்களைக்  கொன்று அவர்களது குடும்பங்களை அநாதையாக்க கொலைவாளினைக் கொடுக்கும் சக்தி எது?

சுருக்கமாகக் கேட்கிறேன் தந்தையும் பிள்ளையுமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொலைக் களத்தில் கொண்டு வந்து நிறுத்திய ஈனத்தனமான சக்தி முதலாளித்துவம் என்பதை என்பதை நாம் இன்னும் எத்தனை இழப்புகளுக்குப் பிறகு புரிந்து கொள்ளப் போகிறோம்?

நானொரு கற்றுக் கொடுக்கும் ஊழியன். என்னைப் போலவே கற்றுக் கொடுக்கும் ஊழியரான கல்லூரி முதல்வர் சுரேஷ் அவர்களின் கொலைக்காக ஒரு சக ஊழியனாய் வலி தாங்க முடியாமல் அழுகிறேன்.

நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவனின் தகப்பன். அந்த வகையில் பதறி, ஒரு கொலையை செய்துவிட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் நினைத்தும் ஒரு தகப்பனாய் வலி தாங்க முடியாமல் அழுகிறேன்.

சிலர் கேட்கக் கூடும்,

“ இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா? எந்தப் பக்கம் நீ? ”

ஈரம் துளியுமற்ற வறட்டுத்தனத்தின் விளைவாகவே இத்தகைய கேள்வியைப் பார்க்கிறேன்.

நான் சராசரி மனிதன்.  கடன் வாங்கி பிள்ளையைப் படிக்க வைக்கும் ஒரு பாமரத் தகப்பன். கல்வியை சொல்லித்தர வேண்டிய ஒரு ஊழியன். ஆகவே பாமரத் தனமான சராசரியாய் நால்வருக்காவும் அழுகிறேன்.

எனக்குத் தெரியும்,

என்னிடம் படிக்கும் பிள்ளையை பள்ளியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலையும் எங்களுக்கு  வரலாம். எனக்கு எதிராகவும் என்னிடம் படிக்கும் குழந்தையின் கையில் ஏதோ ஒன்று கத்தியைத் தரலாம்.

இதை இப்படியும் வெளிப்படையாகப் பார்க்கலாம்,

ஒரு நாள் என்னிடம் படிக்கும் பிள்ளையையும் நாங்கள் எங்கள் பள்ளியிலிருந்து நீக்கலாம்.  என்னைக் கொல்லவும் என்னிடம் படிக்கும் குழந்தை கத்தியை எடுக்கலாம்.

வழக்கமாக பெரும்பான்மை நேரங்களில் பதட்டத்தோடும் தவறுதலாகவும் நாம் இரண்டாவதை எடுத்துவிடுகிறோம்.

எந்த ஆசிரியனுக்கும், தலைமை ஆசிரியருக்கும், விரிவுரையாளருக்கும், பேராசிரியருக்கும் , முதல்வருக்கும் ஒரு மாணவனைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வெளியேற்றி  அவனது வாழ்க்கையை நாசமாக்கிவிட வேண்டும் என்கிற அளவிற்கு எந்தப் பிள்ளையோடும் தனிப்பட்ட பகையோ விரோதமோ இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும்கூட அத்தகைய ஈனத்தனம் வெளிப்படாது.

 ஒரு ஆசிரியரையோ, தலைமை ஆசிரியரையோ, கல்லூரி முதல்வரையோ கொலை செய்யுமளவிற்கு எந்த ஒரு பிள்ளைக்கும் சொந்தப் பகை இருக்காது. அப்படியே இருப்பினும் எந்தப் பிள்ளையும் இத்தகையதொரு படு பாதக செயலை செய்ய மாட்டான்.

ஆனால் இரண்டும் நடக்கத் துவங்கியுள்ளன. ஆனால் இவை இவர்கள் மூலமாக நிறைவேறியிருப்பினும் இதற்கு இவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் இந்தக் கொலை நடந்தது?

ஏதோ ஒரு தவறு நடக்கிறது. அதுபற்றி விரிவாய் பேச இங்கு இடமில்லை என்பதால் அதற்குள் நாம் போகவில்லை. அந்தத் தவறுக்காக மாணவர்கள் தற்காலிகமாக கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள். இதற்காக கொலை செய்துவிடுவதா? என்ற கேள்வி இயல்பானதுதான். அதற்குள் போவதற்குமுன் இன்னொரு விஷயத்தை நாம் பார்த்தாக வேண்டும்.

ஏதோ ஒரு தவறை பிள்ளைகள் செய்து விடுகிறார்கள். அதற்காக இடை நீக்கம் செய்துவிடுவார்களா? அவர்களது பிள்ளைகளாக இருந்தால் இப்படி செய்துவிடுவார்களா? தவறே செய்திருந்தாலும் நெறிப்படுத்த வேண்டாமா? ஒரு கல்வி நிலையத்தின் வேலை பொறியியல் வல்லுனர்களை உருவாக்கித் தருவது மட்டும்தானா? ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பதில்லையா?

மேல் சொன்ன இரண்டு பாராக்களில் உள்ள அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் உலகமயமும் தாராளமயமும் விதைத்துள்ள வணிகப் போட்டி இவற்றை செய்வதற்கான அவகாசத்தை தருவதில்லை.

கொலை நடந்திருப்பது கல்லூரி வளாகத்தில். இதில் எங்கே வணிகப் போட்டி வந்தது என்று கேட்களாம். கல்வியே வணிகமாகிப் போன சூழலில் கல்லூரி முதலாளிகளுக்கு நட்டம் வந்துவிடக்கூடாது என்கிற வணிக நோக்கமே இப்படி பிள்ளைகளை கொலையாளிகளாயும், ஆசிரியர்களை பிணங்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு மாணவன் ஒரு மாணவியிடம் குறும்பு செய்கிறான் என்றும், அந்த  மாணவி பேராசிரியரிடம் முறையிடுகிறாள் என்றும் வைத்துக் கொள்வோம். முன்னர் எல்லாம் எப்படி நடக்கும் என்றால் அப்படி ஒரு புகார் வந்தவுடன் இருவரையும் அழைத்து பேசி சமாதானப் படுத்தி விடுவார்கள். அந்த மாணவியிடம் தனியாக இதை பெரிது படுத்த வேண்டாம். இனி இப்படி நடக்காது. பயப் படாமல் போடா. தொடர்ந்து அவன் இதையே செய்தால் வா. பார்த்துக் கொள்ளலாம் என்பார்.

மாணவனிடமோ இனி இப்படி ஒருமுறை நடந்தால் தொலைத்து விடுவேன் தொலைத்து என்று மிரட்டி அனுப்பிவிடுவார். பெரும்பான்மை இந்த அணுகுமுறையிலேயே தீர்ந்துவிடும்.

இந்த இயல்பான அணுகுமுறையில்தான் முதலாளித்துவம் மண்ணள்ளிப் போட்டது.

அவசரகதியில் இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் முதல்வருக்கு ஏன் வந்தது? அவருக்கும் மாணவர்களுக்கும் அவ்வளவு பகையா? மனிதாபிமானமே சுத்தமாய் இல்லாது வறண்டு போயிற்றா அவருக்கு? இல்லை, இந்த இடை நீக்கத்தை நிர்ப்பந்தத்தின் பேரிலேயே அவர் செய்திருக்க முடியும்.

அப்படி செய்யாவிட்டால் கல்லூரியின் மாண்பு கெட்டுப் போய்விட்டதாகக் கருதி கல்லூரி முதலாளி அவரை பதவி இறக்கமோ பணிநீக்கமோ செய்திருக்கக் கூடும். அதற்கு அஞ்சித்தான் முதல்வர் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

நிர்வாகிக்கு கல்லூரியின் மாண்பு குறித்து இவ்வளவு அக்கறையா என்றால் அது அல்ல இங்கு பிரச்சினை. இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மாணவர்கள் வர மாட்டார்கள். முதலாளியின் கல்லா நிரம்பாது என்ற வணிக நுணுக்கமே இத்தனைக்கும் காரணம் என்பதை நாம் உணராமல் போனால் தவறிழைத்தவர்களாவோம்.

இடைநீக்கம் செய்த பின்பு அந்த மாணவர்களை அழைத்து ஒன்றும் பயப்பட வேண்டாம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அமைதியாகப் படியுங்கள். வீட்டிற்கெல்லாம் சொல்ல வேண்டாம். அந்தப் பிள்ளையை சமாதானப் படுத்தவே இந்த முடிவு என்று சொல்லியிருந்தால் இந்தக் கொலை நடந்திருக்குமா?

அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் மாணவர்களை அழைத்து  அன்போடும் அக்கறையோடும் பேசி சமாதானப் படுத்தியிருந்தார்கள் என்றால்கூட இது நடந்திருக்காது.

ஏன் அவர்கள் அப்படி செய்யவில்லை? அப்படி செய்ய அவர்கள் விரும்பவில்லையா?   அதெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் செய்தால் எங்கே நிர்வாகத்திற்கு எதிராக தங்களைக் கொண்டு போய் நிறுத்திவிடுமோ என்ற அச்சமே அவர்களை அப்படி செய்யாமல் தடுத்திருக்கும் என்பதையும் உணர வேண்டும்.

இது மட்டுமல்ல இவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டிருக்கக் கூடும். ஆக இடை நீக்கம் செய்யப் பட்ட  பிள்ளைகள் தனிமைப் படுத்தப் பட்டிருப்பார்கள். அந்தத் தனிமை அவர்களை வேதனைப் படுத்தியிருக்கும். அது சன்னம் சன்னமாக கோவமாக மாறியிருக்க வேண்டும்.

நாம் என்ன கொலையா செய்தோம். நமக்கேன் இந்த தண்டனை என்று அவர்கள் குமுறியிருக்க வேண்டும். அந்தக் குமுற்லும் கொந்தளிப்புமே சுரேஷ் அவர்களுக்கு எதிராக அவர்கள கையில் கொடுவாளைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு சின்னத் தவறுக்காக கொலைகாரர்களைப் போல் அந்தப் பிள்ளைகளைப் பார்த்ததன் விளைவுதான்  இன்றவர்களை கொலையாளிகளாகவே மாற்றியிருக்கிறது.

ஆக, முதாளியின் கல்லா குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற முதலாளித்துவத்தின் உந்துதலோடு எடுக்கப் பட்ட ஒரு நடவடிக்கைதான் சுரேஷ் கொலை செய்யப் படுவதற்கும் மூன்று பிள்ளைகள் கொலையாளிகளாக வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்பதற்கும் காரணம்.

சுரேஷ் கொலை செய்யப்பட்டு விட்டார். பிள்ளைகள் கைதிகளாகி விட்டார்கள். இந்தக் கொலைபாதகச் செயலுக்கு உந்தித் தள்ளிய முதலாளித்துவத்தை என்ன செய்யப் போகிறோம்?

நன்றி: “காக்கைச் சிறகினிலே”




அழுத்தமான ஹைகூ கட்டுரைகள்


இவனுக்கு அப்போது மனு என்று பேர்




சு.பொ. அகத்தியலிங்கம் 


ஆசிரியர் : இரா.எட்வின்.
வெளியீடு : சந்தியா பதிப்பகம் ,
புதிய எண் 77 , 53 வது தெரு , 9வது அவென்யூ ,
அசோக்நகர், சென்னை - 600 083.
பக் :104 , விலை : ரூ.70.

சொந்த அனுபவத்தோடும் ஆழ்ந்த சமூக நோக்கோடும் சிறுகதை போன்ற வடிவத்தில் எளி மையாய் குட்டிகுட்டியாய் சிறிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு .ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் பெரிய கட்டுரைக்கான முன்னோட்டமாகவே உள்ளது. பெயரில் இருக்கிறது என்கிறகட்டுரை நுட்பமானது . “எனக்கும் அப்படித்தான் . பெயரில் என்ன இருக்கிறது என்றுதான் நினைத்தேன் .பெயர் ஒரு அடையாளம் . அவ்வளவுதான் . அதைத் தாண்டி அதில் என்ன இருக்கிறது என்றுதான் யோசிக்கத் தோன்றியது .

பெயருக்குள் சாதியும் , ஜாதி அரசியலும் , ஆணவமும் , அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கிறது என்பதெல் லாம் தெரிந்திருந்தும் பெயர் குறித்து பெரிதாய் நான் எப்போதும் அலட்டிக் கொண்டதில்லை ”என் கிறார் எட்வின் . அதேசமயம் , நாத்திகரான தன்னை தன் பெயரால் கிறத்துவராக அறியப்படுவது குறித்து வேதனைப்படுவதும் ; பாரதிதாசன் என்ற பெயரைச் சுற்றி நடந்த விவாதத்தகவல்களும் ; “ஆக, பெயரில் இருக்கிறது”என்ற முடிவுக்கு எட்வினை மட்டுமல்ல நம்மையும் வரவைக்கிறது .

சமீபத்தில் நான் படித்த ஜூதான் ஸ எச்சில்] நாவலில் ஒரு தலித்தை அவரின் அல்லது அவர் தந்தையின் பெயரைக்கொண்டு சாதியை அறிந்து சிறுமைப்படுத்தும் சாதிய வெறியின் கோர முகம் பளிச்சென படம் பிடிக்கப்பட்டிருக்கிறது . இக்கட்டுரை அதை என் நினைவுத்திரையில் சுழலவிட்டது . குழந்தைகள் குறித்தும் , கல்வி குறித்தும் பேசும் பலகட்டுரைகள் நச்சென்று சமூகத்தின் மனச்சாட்சியைக் குத்திக் கிழிக்கவல்லவை . இவர் ஆசிரியராக இருப்பது - அதிலும் சமூக அக்கறை உள்ள ஆசிரியராக இருப்பது இந்நூல் நெடுக நறுக்குத் தெறித்தாற்போல் பதிவாகியுள் ளது .“ நதி பயணப்படும் பாதை ”எனும் கட்டுரையில் வீணாய் கடலில் கலக்கும் நீரைத் தேக்கிவைத் தால் என்ற சிந்தனையை குழந்தைகளோடு உரையாடி அவர்கள் வழி உணர்த்துவதும் ; ஓரிடத்தில் “ஏழாம் வகுப்புக் குழந்தைக்கு புரிகிற இந்த விஷயம் அரசுக்குப் புரியாதா ?” என குத்தீட்டியாய் கேள்வியை வீசி இருப்பதும் மிகக் கூர்மையானது .

“ இவனுக்கு அப்போது மனு என்று பெயர் ” என்கிற கட்டுரையில் அயோத்திதாசர் கூட்டிய கூட்டத்தில் சிவராம சாஸ்திரிக்கும் அயோத்திதாசப் பண்டிதருக்கும் நடந்த உரையாடல் வர்ணாஸ்ரமவாதிகளை சரியாக அடையாளம் காண உதவும். ஆதி முதல் சமச்சீர்கல்வி வழக்கு வரை அவர்கள் மனுவாகவே தொடர்வதை ; வார்த்தைகள் மாறினும் உள்ளடக்கம் மனுதர்மமாகவே இருப்பதை சாட்டையடியாய் விளக்கியுள்ளார். சமூக அக்கறையுள்ளோர் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.


நன்றி: தீக்கதிர் 01.12.2013

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...