Sunday, October 30, 2016

குட்டிப்பதிவு 55

கட்டிலுக்கடியில் கிடக்கும் ஒரு கோலிக்குண்டும் சுவர்க் கிறுக்கல்களும் பாப்பா இல்லாத வெறுமையின் சாட்சியங்கள்

சட்டங்களை மாற்றுவதற்கு இதுதான் தருணம்

84 பேரென்கிறார்கள், 54 பேரென்கிறார்கள்.
85 ஆயிரம் கோடி ரூபாய் என்பது உறுதியாகத் தெரிகிறது.
தொகை கொஞ்சம் கூடக்கூடுமென்பதே எனதபிப்பிராயம். 85 ஆயிரம் கோடியை வங்கியிலிருந்து வாங்கிவிட்டு கட்டாமல் ஏமாற்றி இருக்கிறார்கள். 54 பேரெனில் 1500 கோடி ஒவ்வொருவருக்கும் சராசரியாக, 84 பேரெனில் 1000 கோடி ஒவ்வொருவருவருக்கும் சராசரியாக வருகிறது.
40000 ரூபாய் இரண்டுசக்கர வாகனக் கடன் வாங்கி இரண்டு தவணையை ஏதோ காரணங்களால் கட்டமுடியாமல் போனால் விரட்டிக்கொண்டு வந்து மனைவி குழந்தைகளோடு பயணிப்பவனை நடுவழியில் இறக்கிவிட்டு வண்டியைப் பிடுங்கிக் கொண்டு போகும் வங்கிகள்...
கல்விக் கடன் பெற்ற குழந்தைகள் வேலை கிடைக்காது கடனை கட்ட முடியாது தவிக்கிறபோது புகைப் படத்தோடு பிளக்ஸ் வைத்தும் அம்பானியின் அடியாட்களை வைத்து மிரட்டவும் செய்யும் வங்கிகள்....
வரவேண்டிய டிராக்டர் கடன் தவனைக்காக விவசாயியை மனைவி மக்கள் முன்னாலேயே அடியாட்களைக் கொண்டு தாக்கும் வங்கிகள்..
85 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்ட பெரு முதலாளிகளின் பெயர்களை உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி கேட்டும் தருவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று வங்கிகள் சொல்ல முடியுமென்றால் அந்த சட்டங்களை மாற்றுவதற்கு இதுதான் தருணம்

இதற்கு பெயர்தான் தேசப்பற்று

"சார் ஹிலாரிக்கு ஓட்டுப் போடுவீங்களா? ட்ரம்ப்பிற்கு போடுவீங்களா?"
"நமக்கேதுடா அமெரிக்க ஓட்டு?"
" எங்கண்ணனுக்குந்தான் ஓட்டு இல்ல. ஆனா போட்டான்ல. அதுமாதிரி போடறதா ஒரு பேச்சுக்கு வச்சுக்கங்க. அப்ப யாருக்கு போடுவீங்க?"
"யாருக்கு போடலாம்? "
" அப்ப கெடச்சா நீங்களும் கள்ள ஓட்டுப் போடுவீங்க?"
"டேய்..."
"சும்மா மெறட்டாதீங்க. அப்படி கெடச்சா கிலாரிக்கு போடுங்க"
"ஏண்டா?"
"ட்ரம்பு வந்தா இந்தியாவுக்காகாதாம். சொன்னாய்ங்க. "
இதற்கு பெயர்தான் தேசப்பற்று மாண்பமை மோடி அவர்களே

அடுத்த நூல்



அடுத்த நூல்

புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கு


22.10.2016 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கில். மனசுக்கு பெரிதும் மகிழ்ச்சியாயிருந்தது.

மத்திய அரசின் ‘ஒற்றைக் கலாச்சர’ கட்டமைப்பிற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து நிற்பதன் ஒரு துளியாகவே இந்தக் கூட்டம் இருந்தது. இந்த ஒற்ருமையை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் கட்டமைக்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது.

போகவும் கூட்டம் முடியும் வரைக்கும் யாரும் எழுந்து போகாதது பெரிதான மகிழ்ச்சியைத் தந்தது.

இந்த சரியான கூட்டத்தை ஏற்பாடு செய்தDhahir BatchaDhayalan Dhayalan, அசன் தோழர், சின்னச்சாமி தோழர், Mahathma Selvapandiyan உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்.

எங்கள் மண்ணிற்கு வந்து எங்களோடு உரையாடிய Marx Anthonisamy சாருக்கு என் வணக்கமும் நன்றியும் . மாத்திரைகளைப் போடவேண்டிய கட்டாயத்தினால் உங்களை வழியனுப்ப வர இயலாதது என் இழப்புகளுள் ஆகப் பெரியது.

கவிதை 72

கேட்கமலேயே
கடந்து போய்விடக்கூடும் நான்
கேட்பேன் உன்னிடமென்று நீ
எதிர்பார்த்ததை

கவிதை 71

மழைவனமா
வனமழையா
நீ?

கவிதை 70

காடென்பது
கலைத்துப் போடப்பட்ட
ஒழுங்கு

கவிதை 69

யாருக்காவது
கொடுத்திருக்கவும் கூடும்
கிழவி
அதியமான் தந்த நெல்லியை

கவிதை 68

ஈரத்தின்
உன்னதம்
வனத்தின்
பிசுபிசுப்பு

Saturday, October 22, 2016

அழைப்பு 29


ஆதியிலே எங்களூர் கடலாயிருந்தது

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றும்போது வறட்சியின் அடையாளமாகவே பொதுவில் அறியப்படும் பெரம்பலூர் மாவட்டம் தொன்மக் குவியல்களின் தொகுப்பிடம் என்று குறிப்பிட்டேன். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தரேஷ் அகமது அவர்களிடம் கோரினேன். உரையாற்றிவிட்டு மேடையைவிட்டு இறங்கும்போது திரு தரேஷ் அவர்கள் என்னை நோக்கி கைகளை நீட்டியவாறே எழுந்து நின்றார். எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து சந்திக்குமாறும் இதற்காக வேண்டிய அனைத்தையும் செய்து தருவதாகவும் கூறினார். என்னவோ தெரியவில்லை அவர் போகிற வரைக்கும் இதற்காக அவரை ஒருபோதும் சந்திக்க இயலாமலே போனது. நானும் அதுகுறித்து ஒரு சிறிய பதிவுகூட எழுதாமலே போனது.
தங்கள் ஊருக்கு அருகில் கடல் இருந்தாலே அது அவர்களது பெருமைக்குரிய விழுமியங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். அவர்களது ஊரிலே கடல் இருக்குமானால் சொல்லவே தேவையில்லை, நிச்சயமாய் அது அவர்களது பெருமைக்குரிய அடையாளம். ஆனால் எங்கள் ஊரே, இன்னும் சரியாக சொல்வதெனில் எங்கள் மாவட்டத்தின் பெரும்பகுதியே கடலாக இருந்திருக்கிறது. இதை எங்கள் மண்ணின் தொண்மையை வறட்டுத் தனமாக பதியும் ஆர்வக் கோளாறு அல்ல. எங்கள் மண்ணின் மூத்தகுடிகளில் யாரோ ஒருவர் இது குறித்து என்னிடம் கூறியிருந்தால்கூட நான் அதை இங்கு குறிப்பிடுமளவிற்கான தரவாகக் கொள்பவன் அல்ல.
இந்திய அரசிற்கு சொந்தமான ‘இந்திய புவியியல் இலாகா’ பெரம்பலூரில் உள்ள சாத்தனூர் கல்மரப் பூங்காவில் ஒரு பலகையை வைத்திருக்கிறது. அந்தப் பலகையிலிருந்து நம்மால் கீழே உள்ளவாறு நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது,
சாத்தனூருக்கு கிழக்கே 100 கிலோமீட்டர் தூரத்தில் தற்போது கடல் இருக்கிறது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இது சாத்தனூருக்கும் மேற்கே 10 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் பரவிக் கிடந்தது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு பொழுதில் இங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிற்கு கடல் உள் வாங்கியது.
இந்தியப் புவியியல் துறை கூறுவதை சரியாகக் கணித்தால் ஏறத்தாழ பெரம்பலூர் வரைக்குமான இன்றையப் பூமிப் பரப்பு அப்போது கடலாக இருந்திருக்கிறது..
அதே பலகை கல்மரங்கள் எப்படித் தோன்றுகின்றன என்ற விவரத்தையும் தருகிறது.
கடலில் வாழும் உயிரனங்கள் இறந்து ஆறுகள் கொண்டுவரும் மணலில் புதைந்து இறுகி பிற்காலத்தில் கடல் உட்கொள்ளப்படும்போது கடல் பகுதிக்கு அருகில் நிலக்கரியாகவோ அல்லது நீர்த்த நிலையில் எண்னெயாகவோ கிடைக்கிறது. பலநேரங்களில் மரங்கள் ஆற்று வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு கடலுக்கடியில் புதைந்து போய்விடுவதுண்டு. அவை இறுகி கல்மரங்களாவதும் உண்டு. சாத்தனூரில் இருக்கும் 18 மீட்டர் நீளமுள்ள கல்மரமும் இப்படியாகத் தோன்றியதுதான் என்றும் அந்தப் பலகையிலிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
18 மீட்டர் நீளமுள்ள கல்மரங்கள் என்பது உலகில் மிக அபூர்வமாகத்தான் உள்ளன என்றும் கலிஃபோர்னியா மற்றும் அமெரிக்கா போன்ற சில இடங்களில் மட்டுமே இதனையொத்த கல்மரங்களைக் காணமுடியும் என்றும் செய்திகள் கூறுகின்றன. அதுவும் உலகின் அனைத்துப் பகுதி கல்மர ஆராய்ச்சியாளர்களுக்கும் சாத்தனூர் கல்மரம் முக்கியமான ஒன்றாகத் தெரிகிறது.
இவ்வளவு தொண்மச் சிறப்பு மிக்க இந்தக் கல்மரத்தைக் காணவேண்டும் எனில் அதற்காக நாம் மிகவும் சிரமப் பட்டாக வேண்டும். அவ்வளவு மோசமான சாலை வசதி. வெளியூரிலிருந்து வருபவர்களுக்கான ஓய்விடம் ஒன்று கட்டப்பட்டு இன்னமும் திறக்கப்படாத நிலையில் அவர்கள் படும் துயரம் சொல்லொன்னாதது. குடிநீர் வசதி கழிவறை போன்றவை ஏதுமற்ற நிலையில் அந்தக் கல்மரமும் அநாதையாக அந்த இடத்தில் படுத்துக் கிடந்திருக்கிறது. சிறுவர்கள் அதன்மீது ஏறி விளையாடுவது ஆடு மாடுகள் அதன்மீது ஏறிப் போவது மூத்திரம் போவது சாணி போடுவது என்கிற நிலையில் இருந்த கல்மரம் திரு.ரமேஷ் கருப்பையா உள்ளிட்ட சில இளைஞர்களின் முயற்சியால் தற்போது சுற்று வேலியிட்டு பாதுகாக்கப் பட்டிருக்கிறது.
ஒரு காவலர் பணியிலிருக்கிறார். அவருக்கு அந்தப் பஞ்சாயத்து மூலம் மாதம் 4000 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. அதுவே அந்தப் பஞ்சாயத்திற்கு அதிகப்படியான செலவுதான். ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அவர் கல்மரத்தைப் பார்க்க வருகிறவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் அவர் அறிந்த தகவல்களை தருவதுதான். நாம் ஏதேனும் கல்மரத்தைப் பற்றிக் கூறினாலும் அக்கறையோடு கேட்டுக் கொள்கிறார். பிறகு புன்னகை கசிய, ‘அடுத்தாப்ல வரவங்களுக்கு சொல்ல உதவும்’ என்று அவர் சொல்லும் போது நமக்கு சிலிர்க்கிறது.
இதுமட்டும் பெரம்பலூரின் தொண்ம அடையாளம் அல்ல. பெரம்பலூர் அரியலூர் பகுதிகளில் டையனோசர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. டையோனசர் முட்டைகள் இறுகிய நிலையில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன. அவை அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.
டையனோசர் வாழ்ந்தது நிறுவப்படுமானால் இங்கு வேறு என்ன வகையான விலங்குகள் வாழ்ந்தன என்பன பற்றியும் ஆய்வு விரியும். அது மட்டுமல்ல சென்ற ஆண்டு பெரம்பலூரின் வீடுகள் நிறைந்த பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்றின் நடமாட்டம் தென்படவே கூண்டு வைக்கப்பட்டு பிடிபட்டது. பக்கத்தில் காடுகளெதுவும் இல்லாத நிலையில் ஊருக்குள் சிறுத்தை வருகிறதென்றால் பக்கத்தில் உள்ள சிறுகாடுகளில் அவை இருக்கவும்கூடும் என்ற உண்மையை நாம் உள்வாங்க வேண்டும். அப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுமானால் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைக்கும் சிருத்தைகள் உள்ளனவா என்பது நிறுவப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சரணாலயம் அமைவதற்கான வாய்ப்பும் இந்த பூமிக்கு கிடைக்கும்.
மட்டுமல்ல மனிதனின் தொன்மம் டையனோசரோடு தொடர்புடையது என்றும் கொள்ளப்படுகிறது. அது உண்மை எனில், பெரம்பலூர் பகுதியில் டையனோசர் வாழ்ந்தது நிறுவப்படுமானால் உலகின் ஆதிக்குடிமகன் வாழ்ந்த மண்ணும் எனது மண்ணாகும்.
வாலிகண்டபுரமருகில் ஒரு ஆங்கில ராணுவத் தளபதியின் சிறு குழந்தையின் கல்லறை ஒன்றினை அரும்பாவூரைச் சேர்ந்த தோழர் செல்வபாண்டியன் அவர்கள் கண்டறிந்திருக்கிறார். 1800 களின் முற்பகுதியில் கட்டப் பட்ட கல்லறை அது.
இன்றைய நிலையில் அந்தப் பகுதியில் ஆங்கில வம்சாவழியைச் சேர்ந்தவர்களோ அல்லது ஆங்க்லோ இந்தியர்களோ யாரும் இல்லாத சூழலில் ஒரு ஆங்கிலத் தளபதியின் குழந்தையின் கல்லறை அங்கு இருப்பதால் அந்த காலக் கட்டத்தில் அந்தப் பகுதியில் தற்காலிகமாக ஆங்கில ராணுவத்தினர் முகாமிட்டிருக்க வேண்டும். எனில், இந்த மண்ணில் ஒரு போர் நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
எங்கள் அடையாளங்களின் மற்றுமொரு விழுமியம் ரஞ்சன் குடிகோட்டை. ஒரு இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை இஸ்லாமிய மன்னர்களின் மதசார்பின்மைக்கு ஆகச் சிறந்த சான்றாக விளங்குகிறது. ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்த இந்தக் கோட்டையில் நாம் ஏறத்தொடங்கும் போது ஒரு சிவலிங்கம் நம்மை வரவேற்கும் வலதுபுறமாகத் திரும்பினால் பெருமாள் கோயில், அது கடந்து கொஞ்சம் உள்ளே சென்றால் ஒரு மசூதி.
1972 ஆண்டு முதல் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அந்தக் கோட்டையில் காவலராகப் பணியாற்றிய திரு ஹசீம்பாய் அந்தக் கோட்டையைச் சுற்றி அகழ்வாராய்ச்சி செய்தால் நிறைய அறிய வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும் என்கிறார். கோட்டையை சுற்றி தான் நிறைய செப்புக் காசுகளைக் கண்டெடுத்ததாகவும் அவற்றில் பெரும்பான்மையானவற்றை தனது அதிகாரிகளிம் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியதாக 24.09.2014 அன்றைய ‘தி இந்து’ எழுதியுள்ளது.
தான் உயிரோடிருக்கும்போது அகழ்வாராய்ச்சி நடக்குமெனில் தன்னால் நிறைய ஒத்துழைக்க இயலும் என்றும் தன்னிடமுள்ள தகவல்களை தொல்லியல் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுவதாகவும் அதே நாளிதழ் கூறுகிறது.
இவ்வளவு தொண்மப் புராதனம் மிக்க பூமி எங்கள் பூமி. சோகம் என்னவெனில் எங்கள் மண்ணின் சிறப்பை முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்யும் எம் பிள்ளைகளில் பலரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான்.
நான் சாத்தனூர் கலமரப் பூங்காவிற்கு சென்றிருந்த அன்று வந்திருந்த குடும்பம் ஒன்று மிக ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது குழந்தை என்னோடு ஒட்டிக் கொண்டாள். இங்க சீ (கடல்) இருந்துச்சாமே என்றவளிடம் ஆம் என்றேன். அடுத்ததாக ’எதுவரைக்கும் இருந்துச்சு’ என்றாள். மேற்குப் புறமாக கைநீட்டி ’அதுவரைக்கும் ‘ என்றேன். அதுவே அவளுக்கு அது விஷயத்தில் போதுமானதாக இருந்தது. என் கை சுட்டிய திசையில் மலைகள் இருக்கவே ‘அப்ப இந்த மலை எல்லாம் கடல்ல இருந்துச்சா அங்கிள்’ என்றாள். “ ஆமாம்” என்றவுடன் , “அப்ப, இப்பவும் கடலுக்குள்ள மலையெல்லாம் இருக்குமா அங்கிள்” என்றாள்.
அய்யோ, அப்படியே மிரண்டுப் போய்விட்டேன். எந்த ஊரிலோ இருந்து வந்திருந்த குழந்தைக்கே இவ்வளவு ஆர்வம் வருகிறது என்றால், எங்கள் பிள்ளைகளுக்கு இதை சொல்லிக் கொடுத்தால் எப்படி இருக்கும்.
தன் மண்ணின் தொண்மை அறிந்தவனுக்கு மண்ணின்மீது பற்று ஏற்படும். அதைக் காக்கவும் மென் மேலும் கொண்டு செல்லவும் அக்கறை ஏற்படும். இத்தகையதொரு தொன்ம விழுமியங்களுக்கு சொந்தக்காரன் தான் என்பதை உணர்ந்து கொள்வான் எனில் அவனால் குறைந்த பட்சம் கீழ்மையானவனாக மாற முடியாது.
பெரம்பலூர் கல்வி நிலையங்கள் நிறைந்த பகுதி. இங்கிருக்கக் கூடிய பள்ளிக் குழந்தைகளுக்கு மாரல் இன்ஸ்ட்ரெக்ஷன் பிரிவேளைகளில் இந்த விழுமியங்களை கொடுத்தாலே போதும். அதற்கு இங்குள்ள ஆசிரியர்களுக்கு இவற்றைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். இது விஷயத்தில் அக்கறையோடே இருக்கும் இன்றைய ஆட்சித் தலைவர் கல்வி அதிகாரிகளை இதில் கவனம் செலுத்தச் செய்தால் இது நூறு விழுக்காடு சாத்தியப் படும்.
கல்லூரிகளில் இதுகுறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ப நிகழ்வுகளைத் திட்டமிட வேண்டும். NSS முகாம்களை இந்த இடங்களில் அமைக்க வேண்டும். இரண்டு மூன்று கல்லூரிகளிலிருந்து ஒரே நேரத்தில் இவற்ரிலொரு இடத்தில் முகாம் ஏற்பாடு செய்து இவைகுறித்த அறிஞர்களைக் கொண்டு மாணவர்களுக்கு இவற்றின் தொன்மை, விழுமியம் மட்டுமல்லாது இவற்றைப் பாதுகாப்பது எப்படி என்பதையும் கொண்டு சேர்க்க வேண்டும்.
கால்லூரி அளவிலும் பள்ளிகள் அல்ளவிலும் இவை குறித்த பேச்சுப் போட்டி மற்ரும் கட்டுரைப் போட்டிகளை நடத்தலாம்.
இவை போக இருக்கும் உள்ளூர் சேனல்களை இந்தத் திசையில் மடைமாற்றம் செய்யலாம்.
மாணவர்களிடம் சேர்த்துவிட்டால் போதும் மக்களிடம் அவர்கள் கொண்டு சேர்ப்பார்கள்.
நன்றி; நிலவளம் அக்டோபர் 2016

Tuesday, October 18, 2016

முதலில் இது குறித்து மனம் திறந்து உரையாடுவோம்

கார்ப்பரேட் அமைப்பின் கோர முகத்தின் ஒரு பகுதியை பெருசாலையோர உணவு விடுதிகள் காட்டத் தொடங்கியுள்ளன.
சாலையோரத்திலேயே ஊழியர்களை நிற்க வைத்திருக்கிறார்கள். அவர்களது வேலை அந்தப் பக்கமாக கடந்து போகும் வாகனங்களை அவர்களது கடைக்கு திருப்புவது. அவர்களது கைகளில் சிறு துணியோ அல்லது ஒரு கழியில் கட்டப்பட்ட துணியோ இருக்கும். அதை அசைத்து கடைக்கு அழைக்கிறார்கள்.
கடும் வெய்யில் மழை எதன் பொருட்டும் அவர்கள் தப்பிக்க இயலாது.
சில இடங்களில் அடுத்தடுத்து கடைகள் இருக்கும் அப்போது இவர்களிடையே கடும் போட்டி நிலவும். போட்டி போட்டுக்கொண்டு சாலைக்குள் வந்து அழைப்பார்கள்.
பெருசாலைகளில் வாகனங்களின் சராசரி வேகம் சுமார் 120 கிலோமீட்டர்.
அதுமாதிரி சாலைகளில் இவர்களின் இந்தப் பணியானது எவ்வளவு ஆபத்தானது என்பது புரியாதௌ அல்ல. இரவு வேளைகளில் இன்னும் பேராபத்தானது இவர்களது வேலை.
சாலைக்குள் வந்தவர்கள் குறித்த சிறு இடைவெளியில் ஓரத்திற்கு திரும்பிவிட வேண்டும். அப்படித் திரும்பும்போது கால்பிசகி விழுந்துவிட்டாலோ அல்லது அந்த நொடியில் ஓட்டுனர்கள் கொஞ்சம் அசந்துவிட்டாலோ அவ்வளவுதான்.
அடுத்தடுத்த கடைகளின் முதலாளிமார்கள் தங்கள் ஊழியர்களுக்கிடையேயான போட்டியை ரசிக்கிறார்கள். அவர்கள் தங்களது பொழுதுபோக்கு கிளபுகளில் இதுகுறித்து சிலாகிக்கக் கூடும். இவ்வளவு போட்டியோடு வியாபாரம் செய்தாலும் அவர்களுக்கிடையேயான சங்கம் அவர்களது பிரச்சினைக்காக முன் நிற்கும்.
முதலாளிகள் சங்கத்தின்மூலம் ஒன்றிணைவது சாத்தியப் படும் இங்கு தொழிலாளிகள் இணைவது சாத்தியப்படாது போகிறது. இது சாத்தியப் படக்கூடாது என்பதில் முதலாளிகள் கவனமாக இருக்கிறார்கள்.
இதுமாதிரி வேலையில் ஊழியர்களுக்கு ஏதேனும் நடந்தாலும் கடைகள் தொடர்ந்து இயங்கவே செய்யும்.
ஏதேனும் செய்ய வேண்டும்
முதலில் இது குறித்து மனம் திறந்து உரையாடுவோம்

கவிதை 67

துப்பிவிடு
தொண்டைக் குழிக்குள்
ஊசலாடும்
எனக்கான சொற்களில் 
ஒன்றையேனும்

கவிதை 66

சீசரைக் கொன்ற ஆயுதம் 
புரூட்டஸ் மற்றும் வகையறாக்களின்
தேசப்பற்று

குட்டிப் பதிவு 54

தன்னை கடவுளாக்கும் பணியில் மனிதன் வெற்றி பெறும் புள்ளியில் தான் மரணிக்க இருப்பதாக சொல்லித் திரிகிறான் புத்தன்

அதற்கேதாவது ஏதேனும் செய்ய வேண்டும்.

ஆம்புலன்ஸ் வண்டிகளை இரண்டு எஞ்சின்களோடு வடிவமைத்த்தால் உயிருக்கு போராடுபவரோடு போகும் வழியில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு எஞ்சின் மூலம் ஆம்புலன்சை இயக்கி உயிரைக் காக்கலாமேயென்று ஒரு பதவு போட்டிருந்தேன்.
அதில் இருக்கும் சிரமங்கள் குறித்து தோழர் Thirumavalavan Arunachalam பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கு என் நன்றி. நமக்கு அந்த டெக்னிக்கல் சிக்கல்களெல்லாம் தெரியாது. ஆனால் ஆம்புலன்ஸ் பழுதாவதால் உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதற்கேதாவது ஏதேனும் செய்ய வேண்டும்.
திருமாவளவன் உள்ளிட்ட தோழர்களிடம் கையேந்தி நிற்கிறேன். இதற்காக கையேந்த தயாராயிருப்பவர்கள் வரிசையாய் வரலாம்

இந்தக் காட்டாறு காவிரி என்றும்...



இந்தக் குட்டியூண்டு காட்டாறு காவிரி என்றும் அழைக்கப்படுகிறது

கவிதை 65


கவிதை 64


ரசனை 32

"அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது."
என்ன ஒரு அலட்சியமான கம்பீரம்.
வாழ்த்துக்கள் இளமதி சேகர்

இப்படியே போகாது காலம் .



இன்றிரவு போதையில்லாமல் உங்களால் தாங்கமுடியாது நண்பர்களே?
என்ன செய்தானிந்தப் பிள்ளையென்று இவ்வளவு வன்மமுங்களுக்கு?
உங்களுக்கும் எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் காவிரி ஆணையம் கேட்டு போராடுகிறான் .
பத்தாயிரம் கோடி முழுங்கியவன் போதை, படகுசவாரி என்று கும்மாளமிடுகிறான்.
அவனும் வருவான் , உங்களிலொருவர் அவனுக்கு சல்யூட் அடிக்கவும் கூடும். 

இப்படியே போகாது காலம் .

வாழ்த்துக்கள் மகனே.
தடியடித் தழம்பு ஒவ்வொன்றிற்கும் அப்பனின் முத்தம்

Wednesday, October 12, 2016

இரண்டு எஞ்சின்களோடு

இன்று மாலை சேலத்திற்கருகே சாலையோரத்தில் பழுதாகி நின்ற ஒரு ஆம்பலன்ஸ் வேனை மூன்றுபேர் மராமத்து செய்து கொண்டிருந்தனர்.

அந்த ஆம்புலன்ஸ் பழுதான நேரத்தில் ஆபத்தான நிலையில் யாரேனும் இருந்திருப்பின்...

அப்படி இருந்திருக்கக் கூடாது.

ஆம்புலன்ஸ் வண்டிகளை இரண்டு இஞ்சின்களோடு வடிவமைத்தால் என்ன?

Sunday, October 9, 2016

கொஞ்சம் கோவத்தைக் குறை

இவனை யாராவது ஒரு சாமியார்ட்ட கொண்டுபோய் மந்திருச்சுவிட்டா தேவலாம், இவ்வளவு மொரட்டுத்தனமான கோவக்காரனா இருக்கானே என்று கடங்கைப் (Kadanganeriyaan Perumal) பற்றி நான்கூட அவ்வப்போது நினைப்பதுண்டு,
தப்பென்று ஒன்று பட்டுவிட்டால் அவனது கோவத்தைப் பற்றி அவனை அறிந்தவர்கள் அறிந்ததுதான்.
ஆனால் அவனது நெகிழ்வும் கரிசனமுமான நெறிப்படுத்துதல்கள் மிகவும் மேன்மையானவை.
அதை இரண்டாவது முறையாக நேற்று அதை அனுபவித்தேன்.
“மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
என்பது சிலம்பா அல்லது மணிமேகலையா என்று தெரியாமல் சிலம்பென்று போட்டிருந்தேன்.
உள்டப்பியில் வந்து “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பது புறநானூறு என்கிறான்.
ஆமாம்தான். ஆனால் மணிமேகலையிலும் இருப்பதாகவே படுகிறது. விவரம் தெரிதவர்கள் அதை தெளிவு படுத்துங்கள்.
பிழை என்று படுவதை உள்டப்பியில் வந்து சுட்டிக்காட்டி நெறிப்படுத்தும் பக்குவமிருக்கிறதே அது அரிதானது, எடுத்துக் கொள்ள வேண்டியது.
கொஞ்சம் கோவத்தைக் குறைத்து அடங்குடா கடங்கு என்று மட்டும் அவனுக்கு உரிமையோடு சொல்லத் தோன்றுகிறது

Saturday, October 8, 2016

நாற்பது நிமிட சேட்டைகளே

கொலைவெறியோடு பேருந்தேறியவன், “ ஏண்டா இப்படி பன்னின. நானுனக்கு என்ன துரோகம் செய்தேன்” என்று புலம்புகிற லெவலுக்கு இறங்குவதற்கு பக்கத்து இருக்கை பொடிசுகளின் நாற்பது நிமிட சேட்டைகளே போதுமானது.

இருக்கவே இருக்கிறது ஈரம்

விக்டோரியாவை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருவதற்காக போய்க் கொண்டிருந்தேன். ஷைரன் ஒலிக்க ஒரு ஆம்புலன்ஸ் வரவே ஒதுங்கினேன். பக்கத்தில் நின்றிருந்த பாட்டி ஒருவர் கை குவித்து கண்களைமூடி யார் இருப்பதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் “ நல்லா இருக்கணும் மகமாயி” என்றார்.
மனசுக்குள் கிழவியைத் தொழுது கொண்டேன்.
எத்துனை முறை வேண்டுமாயினும் திரும்பத் திரும்ப சொல்வேன்,

மழலை ஜென்னாகும்

இன்று Varthini Parvatha ஏற்பாடு செய்திருந்த "லிட்டில்ஸ்" அமைப்பின் 14 ஆம் ஆண்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை போய்க்கொண்டிருந்தேன்.
ஆணைமலையைக் கடக்கும்போது ஒரு பொடிசு ஆச்சரியத்தோடு ஆணைமலையைக் காட்டியவாறே கத்தினான், "ஐ! எவ்வளவு பெரிய கல்லு"
இதே புள்ளியில் எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு பிள்ளை கையில் உள்ள சிறிய கல்லைக் காட்டியவாறே " ஐ! எவ்வளவு சிறிய மலை " என்றும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.
மலையை பெரிய கல்லாகவும் குழந்தையின் கைக்குள் அடங்கும் கல்லை சிறிய மலையாகவும் பார்ப்பதென்பது மழலை ஜென்னாகும்

"அவங்களும்தான்"

நேற்று கிஷோருடனான அலைபேசி உரையாடலின் ஒரு புள்ளியில் நிவேதிதா அவனை "மக்கு, மக்கு " என்றாள். எல்லோரும் சிரித்தோம். நிச்சயமாக அவனும் சிரித்திருப்பான்.
"ஏண்டா அவன மக்குங்கற? "
"கேள்வியா கேக்கறான். அதனாலதான்"
"கேள்வி கேட்டா மக்கா?"
"ஆமா"
"உங்க மிஸ்சும்தான கேள்வி கேட்பாங்க? "
"அவங்களும்தான்"

"துரா" குறித்தும் "யாகு" குறித்தும்

"துரா" என்றொரு இந்திய மொழி அழிவின் விழிம்பில் ஒருவர் மட்டுமே அதை அறிந்திருந்த நிலையில் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு பெண் ஈடுபட்டிருந்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அதுகுறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
ஒன்பது பேர் மட்டுமே புழங்கக்கூடிய " யாகு" மொழிகுறித்து ஒரு தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.
"துரா" குறித்தும் "யாகு" குறித்தும் மேலதிக தகவல் இருப்பவர்கள் சொல்லுங்கள்

இத்தனை வருஷங்களாக நானும்தான்

நேற்று ஒரு நண்பர் என்னைத் தொடர்பு கொண்டார்,
“ஏம்பா, வாய்கிழிய பேசுறியே. என் பெயர் பட்டியலில் இல்லாதது பற்றி கள்ளத்தனமா மௌனமா இருக்கியே. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? இத்தனை வருஷத்து என் எழுத்தைப் பற்றிய உன் மரியாதை இவ்வளவுதானா?”
இத்தனை வருஷங்களாக நானும்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கடிதம் 19

அன்பின் நண்பர்களே,
வணக்கம்.
நலம்தானே?

ஐம்பது படைப்பாளிகள் குறித்து எழுத வேண்டும் என்ற ஆசையை முகநூலில் வைத்து கருத்து கேட்டிருந்தேன். நிறையபேர் மகிழ்ச்சியோடு ‘செய் எட்வின்’ என்றிருந்தார்கள்.
இது ஒன்றும் புதியதும் இல்லை. இது பட்டியலும் இல்லை.
ஏற்கனவே ‘புதிய தரிசனம்’ இதழிலில் ‘வலைக்காடு’ என்றொரு தொடர் எழுதினேன். எனக்குப் பிடித்த வலை தளங்கள் (BLOGS) குறித்து எழுதினேன். உண்மையைச் சொல்வதெனில் என் கவனத்திற்கு வந்த வலைகளுள் சில வலைகளைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் அது ’வலைக்காடு’ என்ற தலைப்பிலேயே பரிதி பதிப்பக வெளியீடாகவும் வந்தது.
வாசிப்பவர்களின் எண்ணிக்கை தங்களுக்கு கூடிப் போனதாகக் கூட சில நண்பர்கள் சொன்னார்கள்.
சில தோழர்கள் இப்போது இருக்கும் பட்டியல் வெப்பம் என்னை இதை செய்யத் தூண்டுகிறதோ என்றுகூட நினைக்கக் கூடும். அப்படியெல்லாம் இல்லை.
ஏதேனும் வார இதழ் சம்மதித்தால் செய்ய ஆசை. ஒருக்கால் அப்படி வாய்க்காது போயினும் வாரம் ஒருவரது படைப்புகள் குறித்த கட்டுரைகளை எழுதி முகநூலிலும் என் வலைப் பக்கத்திலும் வைக்க நினைத்திருக்கிறேன்
எந்தப் பட்டியலிலும் என் பெயர் ஒருபோதும் இருக்காது. என்னைப் போன்று வெளி உலகம் அறிந்திருக்காத படைப்பாளிகளை அறிமுகம் செய்ய எண்ணம். அதற்காக நூறு விழுக்காடும் அப்படியே என்று சொல்லவில்லை.
விரைவில் அறியப்படாத பேராளுமைகளோடு வருகிறேன்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...