Saturday, December 31, 2011

2012


நேற்றுதான் ஒரு ”ஐ பேட்” வாங்கினேன். கடைக் காரப் பிள்ளையிடம் சொல்லி பழையப் பாடல்களாகப் பதிவு செய்து கொண்டேன். 

”எத்தனைப் பாட்டு தேறும்?” 

” 360 இருக்குங்க அப்பா. மிச்சம் இருக்கும் இடத்துல அடுத்த வாரம் ரெகார்ட் செய்து தரேங்கப்பா”

“இதுவே போதுண்டா சாமி. இதக் கேட்டு முடிக்கிறதுக்கு ஆயுசு இருக்குமோ என்னமோ?” சிரித்துக் கொண்டே வந்துவிட்டேன்.

ஒரு வழியாய் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான் அதை இயக்கக் கற்றுக் கொண்டு இயக்கினேன்.

“உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் கலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ?”

என்ற ”படகோட்டி” படப் பாடல்தான் முதல் பாடல். திரும்பத் திரும்ப பத்துப் பதினைந்துமுறை பைத்தியக் காரனைப் போல் அதையே கேட்டேன். 2011 இல் நான் கேட்ட கடைசிப் பாடல் அதுதான்.

பிசைந்து எடுத்துவிட்டது. வாலியா, டி.எம். எஸ் ஆ யாரைச் சொல்வது. போட்டிப் போட்டுக் கொண்டு மீனவர் துயரத்தை பிழிந்து தந்திருக்கிறார்கள்.

“வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு”

என்ற இடத்தில் டி.எம்.எஸ் அழ வைத்துவிட்டார். நிலா விளக்கை நம்பியே பெரும்பகுதி இரவுகளை நகர்த்தும் தெற்குப் பகுதி மீனவனின் வாழ்வழித்து மின்விளக்கு எரிய வேண்டுமா?

“தனியாய் வந்தோர்
துணிவைத் தவிர
துணையாய் வருவோர் யாரோ?”

என்ற பகுதியும் அழவைக்கும். கூடங்குளம் அணு உலை எதிர்த்து துணிவோடுதான். போராடுகிறான்.

அவன் தனி ஆள் இல்லை என்பதை நிறுவ வேண்டாமா?

அணுவே இல்லாத பூமி நமது இலக்காகட்டும்.

இந்த ஆண்டில் நமது செயல் திட்டத்தில் இதுவே பிரதானமாகட்டும்.

எழுத முடிந்தோர் எழுதுவோம். பேச முடிந்தோர் பேசுவோம். வசப்படும் எல்லா வடிவக் கலைகளிலும் அணுவை எதிர்ப்போம், இந்த ஆண்டின் அசிங்கங்களில் ஒன்றான பரமக்குடி துப்பாக்கிச்சூட்டோடு நிறுத்து, இனியொரு முறை சேரியின் திசை நோக்கி துப்பாக்கியை நீட்டுபவன் எவனாயினும் சும்மா விடமாட்டோம் என்று சூழுரைப்போம்.

வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆதிக்கத்திற்கெதிரான உழைக்கும் மக்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் எதிர்ப் பியக்கங்களில் பங்கேற்போம்.

உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.

வாழ்த்துக்கள்.

Thursday, December 29, 2011

கூடங்குளம் கரண்டு ஃபேக்டரி...



“எங்கள் கணவர் மார்களில் பெரும்பான்மையோர் குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார்கள். மீதமுள்ள சிலரும் குடிப்பதில் பெரும்பகுதி நிறுத்திக் கொண்டார்கள்.. கூடிய விரைவில் அவர்களும் முற்றாய் நிறுத்திவிடுவார்கள். எங்களை அடித்து துன்புறுத்துவதை நிறுத்திக் கொண்டதோடு வீட்டு வேளைகளில்கூட எங்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்,” என்பதாக நீளும் மகிழ்ச்சியும் குதூகலமும் கலந்து கொப்பளிக்கும் பெண்களின் பேட்டியோடு நகர்கிறது இன்றைய (.28.12.2011) “நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்” இன் செய்தி ஒன்று.

யுகம் யுகமாக எது பெண்களை விடாது அழவைத்ததோ அதை முற்றாக அழித்துப் போட்டு அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை மலரச் செய்த தலைவன் யார்? அல்லது கடவுள்தான் யார்?

எந்தத் தலைவனாலும், இறைதூதனாலும் ஏன் இறைவனாலும் இது சாத்தியப் படாது. ஒரு மக்கள் போராட்டம் மட்டுமே இத்தகையதொரு மாற்றத்திற்கு காரணமாக அமைய முடியும் என்பது மீண்டுமொருமுறை நிறுவப் பட்டிருக்கிறது.

இடிந்தகரையில் நடைபெறும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் 134 வது நாள் நிகழ்வுகளை சேகரிப்பதற்காக சென்ற அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளர்களிடம் போராடிக்கொண்டிருக்கும் அந்த மண்னின் பெண்கள் கூறியது இது.

எந்தவொரு மகத்தான மக்கள் போராட்டமும் இது போன்ற உப விளைவுகளையும் சேர்த்தே கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான் நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

உப விளைவே இவர்களது வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தினையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வல்லது எனில் போரட்டத்தின் இறுதி விளைவு சத்தியமாய் இதைவிட கோடி கோடி மடங்கு மாற்றத்தையும் உறுதியாய் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்மால் உணர முடிகிறது.

”எங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினை போராட்ட நிதியாக வழங்கிவிடுகிரோம்” என்று நீளும் அவர்களது நேர்காணலோடு நீள்கிறது அந்த செய்தி. உண்மையை சொல்வதெனில் தினமும் தினமும் செத்து செத்துப் பிழைக்கும் அன்றாடம் காய்ச்சிகளான, அதிலும் அறைகுறை வருமானத்திற்கான உழைப்பின் பெரும்பகுதி நேரத்தையும் போராட்டத்திற்காகத் தியாகித்து விட்ட பனையேறிகளும் மீனவர்களும் கிடைக்கும் தங்கள் சொற்ப வருமானத்திலும் பத்தில் ஒரு பங்கை போராட்டத்திற்களித்து போராடுகிரார்கள் எனில் ஏன் அவர்கள் போராடுகிறார்கள்?

“ஏம்பா கூடங்குளத்து கரண்டு ஃபேக்டரி வரக்கூடாதுன்னு இப்படி வம்படிக்குறீங்களே. நல்லா இருப்பீங்களா நீங்க .?” என்று விஷ்ணுபுரம் சரவணனின் நண்பரிடம் அவரது நண்பர் ஒருவர் கூறினாராம். ஆக, அவரைப் பொறுத்தவரை கூடங்குளம் அணு உலை என்பது சோப்பு ஃபேக்டரி மாதிரி, கார் ஃபேக்டரி மாதிரி மின்சாரம் தயார் செய்யும் ஒரு ஃபேக்டரி. அது உற்பத்தியைத் துவங்கி விட்டால் மின் தடை வராது, ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் பேருக்கு பிழைப்பு கிடைக்கும். ஒரு பத்து பதினைந்து பேர் கடை வைத்துப் பிழைக்கலாம், சுத்துப் புறம் வளர்ந்து விரிவடையும். இன்னும் சொல்லப்போனால் மின்சாரத்தின் விலைகூடக் குறையும். அதை ஏன் பாழாய்ப் போன இவர்கள் இப்படி மல்லுக் கட்டிக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம். ஆமாம் கூடங்குளத்தில் கரண்டு ஃபேக்டரி ஏன் வரக்கூடாது?

மேலே சொன்ன எதுவும் உண்மை அல்ல என்பதை முதலில் சொல்லிவிட்டு தொடர்வதே சரியாக இருக்கும்.

”உலைக் கட்டுமானங்கள் மிகப் பாதுகாப்பன முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளன. மேகூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில்1988 இல் கோபர்ச்சேவ் மற்றும் ராஜீவ் இருவரும் கையொப்பமிடுகின்றனர் “அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்” ஒப்புதல் பெறவில்லை. எனெவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க் குரெலெடுத்தது அமெரிக்கா. ஏறத்தாழ இந்த நிலையிலேயே இப்பகுதி மக்களும் உலைக்கு எதிரான தங்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்கள். போராடுபவர்களைப் பார்த்து அரசும் இதன் ஆதரவாளர்களும் சொன்னார்கள் “அமெரிக்காவிடம் பணம் பெற்றுக் கொண்டு கூத்தடிக்கும் அமெரிக்க கைக்கூலிகள்” . இப்படிச் சொன்னவர்கள்தான் ஆட்சியே போனாலும் பரவாயில்லை அமெரிக்காவோடு அணு ஒப்பந்தம் செய்தே தீருவோம் என்று அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உத்தமர்கள். மக்களின் எதிர்ப்பிற்கும் அமெரிக்காவின் எதிர்ப்பிற்கும் ஒரே காரணம்தான் என்பதை ஒத்துக் கொள்வதற்கு நாம் ஒன்றும் அவர்கள் அளவிற்கு புத்திசாளிகள் இல்லை. ரஷ்யாவோடு ஒப்பந்தம் என்பதைத் தவிர அமெரிக்கா இதை எதிர்ப்பதற்கு வேறு காரணம் எதுவுமில்லை என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் நன்றாகவே, மிக நன்றாகவேப் புரிகிறது.

லும் ரிக்டர் அளவில் ஆறு எண் வரைக்கும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் உலை கட்டமைக்கப் பட்டுள்ளது. எனவே அச்சமே கொள்ளத் தேவையில்லை என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அவரைவிட நீங்கள் என்ன பெரிய அறிவாளியா ?” என்றும் ஒரு புன்னகையோடு ஏளனிக்கிறார்கள் சிலர்.

சத்தியமாக அய்யா கலாம் அளவிற்கு நாம் படித்தவர்களோ அறிவாளிகளோ அல்லதான். ஆனாலும் அவர் சொல்லியிருக்கிற எல்லை அளவைக் கடந்து 6.5 ரிக்டர் அளவில் அந்தப் பகுதியில் எதிர் காலத்தில் ஒரு பூகம்பம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் (அதைவிட அதிக அளவில்கூட நிலனடுக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமென்றே சொல்கிறார்கள்) அதன் விளைவுகள் புக்சிமா, செர்னோபில் மற்றும் அமெரிக்காவின் மூன்று மைல் அணு உலை விபத்துக்களைவிடக் கொடுமையானதாகத்தானே இருக்கும். ஒருக்கால் அப்படி ஒரு பேரிடரே வராது. நாங்கள் இறைவனிடம் ஐ.எஸ்.டி போட்டு பேசிவிட்டோம் என்று கூட இவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்கும் ‘செர்னோபில் மற்றும் மூன்று மைல் அணு உலை விபத்துக்கள் பேரிடர் விபத்துகளால் ஏற்படவில்லை. மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளுமே கூட உலைகள் வெடிக்க காரணமாகக் கூடும்’ என்பதே நமது பாமரத்தனமான பதில்.

ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது நமக்கு இருந்தாலும் கலாம் அய்யா மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் எந்த ஆக நவீன அளவுகோளையும் தாண்டி நீளும் தன்மை கொண்டவை. ஆனால் அதற்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் “செர்னோபில் விபத்தில் வெறும் 55 பேர் மட்டுமே இறந்து போனார்கள்.அதை ஏன் இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள்” என்பது மாதிரி சொல்லி நம்மை சங்கடப் பட வைத்திருக்கிறார்.

அய்யோ அய்யா, 55 பேர் செத்தது பெரிது இல்லையா? இதைச் செய்தால் ஒரே ஒருவன் செத்துப் போவான் என்று தெரிந்த பின்னும் அதை ஒருவன் செய்தால் அவன் மனிதன்தானா அய்யா? விழித்துக் கொண்டே கனவு காணும் பித்துக்குளி கூட இப்படி உளற மாட்டானே. எப்படி இப்படி மாறினீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். இதுதான் நீங்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிற தைரியம் எப்படி வந்தது? எதற்கு சுற்றி வளைத்து பேசிக் கொண்டு, நேரடியாய் சொன்னால் மட்டும் என்ன செய்துவிடுவார்கள் என்கிற, ஆமாண்டா அப்படித்தான் சொன்னேன் என்ன செஞ்சுடுவ? என்று கேட்கிற திமிர் கலந்த தொனி இருக்கிறது பாருங்கள் அதுதான் நாங்கள் சற்றும் எதிர் பார்க்காதது. அது சரி, எத்தனை பேர் செத்தால்தான் அதை நீங்கள் ஒரு பொருட்டாய் கொள்வீர்கள்? யூனியன் கார்பைடு மாதிரி குவியல் குவியலாய் செத்துத் தொலைத்தால்தான் உங்களுக்கு அதை ஒரு பொருட்டென ஏற்க மனமிரங்குமா?

அது சரி, செர்னோபில் கூட ஒரு விபத்து. செர்னோபில் விபத்தில் கூட 55 பேர்தானே செத்தார்கள் என்பதன் மூலம் எதை எங்களுக்கு உணர்த்த வருகிறீர்கள் அய்யா?. பயப்படாதீர்கள், அப்படியே விபத்து ஏதேனும் நிகழ்ந்தாலும் சொற்ப அளவில்தான் சாவு இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் இடது கால் சுண்டு விரலிலிருந்து உதிர்ந்து விழும் மண்ணளவிற்கும் பொருட்டில்லாத நான் கேட்கிறேன், எதிர்பார்க்கமல் ஏற்படும் உயிரிழப்பை விபத்து என்று கொள்ளலாம். ஆனால் சொற்ப அளவே நிகழும் என்ற அளவில் எதிர் பார்த்துவிட்டாலே அது விபத்தல்ல, கொலையாயிற்றே அய்யா?. உங்களைப் போன்ற சான்றோர்களையும் மேதைகளையும் எதிர்கால சந்ததியினர் கொலையாளிகளாகப் பார்த்துவிடக் கூடாதே என்பதற்குத்தான் இப்படிப் போராடித் தொலைக்கிறார்கள் .



2004 நவம்பர் மாதத்து “current science" இதழில் கேரளப் பல்கலைகழகத்தின் நில இயல் துறையை சேர்ந்த முனைவர் பிஜி அவர்களூம் சென்னை ஐ.ஐ.டி ராம்குமார் அவர்களும் கூடங்குலம் பகுதி எரிமலைக் குழம்புகளால் ஆனது என்று எழுதியிருப்பதை தனது பேட்டி ஒன்றில் மாலதி மைத்ரி மேற்கோள் காட்டியிருப்பதை இப்போது நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

"மக்கள் அதிகமாய் நடமாடாத பகுதியில்தானே அணு உலை அமைக்கப் படுகிறது. பிறகு ஏன் இவ்வளவு பதறுகிறீர்கள்?” என்பது மாதிரியான ஒரு கேள்விக்கு, மக்கள் நடமாட்டமே இல்லாதப் பகுதியில்தான் இவை அமைக்கப் படவேண்டும் என்ற 29.04.1991 அன்று வெளியிடப் பட்ட எண் 828 (தமிழ்நாடு பொதுப் பணித்துறை) என்ற அரசாணையை பொருத்தமாக சுட்டிக் காட்டி இது அந்த அரசாணைக்கு புறம்பானது என்று சொல்வதையும், சுற்றுலாத் தளங்கள் மற்றும் புகழ் பெற்ற இடங்களுக்கு 20 கிலோமீட்டர் தொலைவு வரை அணு உலைகளை நிறுவக் கூடாது என்கிற AERA விதிகளையும் இது மீறுவதாக அவர் மிகச் சரியாக கூறுவதையும் நம்மால் உதாசீனப் படுத்திவிட முடியாது.

கல்பாக்கத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒரு பாதிப்பும் நிகழ்ந்து விடவில்லையே. அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டம் என்று கூட சொல்கிறார்கள். விபத்து திடீரென்றுதான் வரும் என்று நாம் அவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களுக்கு இது மிக நன்றாகவே தெரியும். கல்பாக்கத்தில் பெரிய அளவில் விபத்துக்கள் நிகழவில்லையே தவிர அதன் பாதிப்புகளான கேன்ஸர் , ஆறு விரல் குழந்தைகள், மற்றும் பல்வேறு விதமான எலும்பு சம்பந்தமான வியாதிகள் இருக்கவே செய்கின்றன. கூடவே அவற்றை எதிர்த்து போராட்டங்களும் அந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன சோகம் எனில் அணு உலைக்கு எதிராகப் பேசுபவனை குண்டர் சட்டத்திலே போடு என்று பேசினால் பக்கம் பக்கமாகப் போடும் பத்திரிக்கைகள் அவற்றுக்கெதிரான போராட்டங்களை கண்டு கொள்வதே இல்லை.

மின்சாரம் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தவிர வேறு மாற்றே இல்லையே என்கிறார்கள். ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் எந்தப் பத்திரிக்கை என்று சரியாய் நினைவில்லை தினத் தந்தி அல்லது தினகரன் இலவச மலரில் வந்திருந்த ஒரு செய்தி மாற்று சாத்தியமே என்று சொல்கிறது.

ஏழாம்வகுப்பு அளவில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப் பட்ட விருதுகளைப் பற்றியது அது. ஒருவன் வீட்டிலிருக்கும் மின் விசிரியை தொடர்ந்து உற்று நோகியதன் விளைவாக ஒரு ஆய்வுக்கு நகர்கிறான். சக்கரம் சுற்றினால் மின்சாரம் எடுக்கலாம். மின்விசிரிதான் சுழல்கிறதே அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாமே என சிந்திக்கிறான். விளைவு அதற்கேற்றார்போல் ஒரு டைனமோ தயார் செய்கிறான். மின்விசிறி இயங்கும் போது ஒரு பெல்ட்டால் இணைக்கப்பட்ட

அதன் அருகில் பொருத்தப் பட்டுள்ள டைனமோவின் சக்கரமும் சுழற்றப் பட்டு மின்சாரம் தயாராகிறது. ஒரு அரை மணி நேரமானதும் மின் இணைப்பை துண்டித்து விடலாம். அரை மணி நேரம் அந்த டைனமோ உற்பத்தி செய்து சேமித்து வைத்திருந்த மின்சாரத்தைக் கொண்டு அடுத்த அரை மணி நேரம் மின்விசிறி ஓடும். இந்த அரை மணி நேரத்தில் மின் விசிரி இயங்கும் போது மீண்டும் டைனமோ மிசாரத்தை உற்பத்தி செய்யும்.

இன்னொரு மாணவன் சுழலும் ரயில் சக்கரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க இயலும் என்று நிறுவி இருக்கிறான்.

ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மணி நேரம் கூட மின்வெட்டே இல்லை என்ற செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடனில் பார்த்தேன். அவர்கள் காற்றாலை , சூரிய ஒளி போன்றவற்றால் மின்சாரம் தயாரிப்பதாகவும், தங்கள் தேவைக்கு மிஞ்சிய மின்சாரத்தை அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தருவதாகவும் படித்தேன்.

இப்படியெல்லாம் மாற்றுப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்க பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்களாலேயே முடிகிறது எனில் அணு உலையை அமைத்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நிற்கும் இந்த மேதைக்ளால் முடியாதா?

வெய்யில் எவ்வளவு மகத்துவமானது என்பதை எஸ்.ரா விடம்தான் கேட்க வேண்டும். வெய்யிலின் தீராக் காதலர் அவர். மகத்துவம் மிக்க வெய்யிலை எப்படி வீணடிக்கிறோம்? ஒவ்வொரு சொட்டு வெய்யிலிலும் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது என்பது இந்த அணு உலையின் காதலர்களுக்கு ஏன் இன்னும் புரியாமல் இருக்கிறது?.அல்லது ஏன் இன்னும் புரியாத மாதிரி நடிக்கிறார்கள்.அல்லது என்ன செய்தால் இவர்களுக்குப் புரியும். அல்லது புரிந்தேதான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் இவ்வளவு மின் தேவையும் இருளும் இருக்கிறபோது என் பாட்டனையும் அப்பனையும் தம்பி தங்கைகளையும் கூண்டோடு கொலை செய்த ராஜபக்‌ஷேவை திருப்தி செய்வதற்காய் கடலிலே குழாய் அமைத்து வழங்க இருக்கும் மின்சாரத்தை நிறுத்தினால் போதாதா?

“செர்னோபில்லில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது.மாறாக இது மொத்த உலகத்தையேபாதித்துள்ள விஷயமாகக் கொள்ள வேண்டும்” என்று கோபர்ச்சேவ் சொன்னதையும் இங்கு பதிவது சரியாக இருக்கும்.

ஏற்கனவே 14000 கோடிகளுக்கு மேல் கொட்டியாகிவிட்டது . இவ்வளவு செலவு செய்த பிறகு விட்டுவிட முடியுமா?. வீணாக்க முடியுமா? என்றும் அடிக்கடி கேட்கிறீர்கள் சான்றோர்களே?.

1,76,000 கோடியிலிருந்து வேண்டுமானால் இந்த 14000 கோடியை கழித்துக் கொண்டு அருள்கூர்ந்து எங்களை விட்டு விடுங்களேன். 14000 கோடி செலவளித்து செய்த சவப் பெட்டி என்பதற்காக செத்துவிடு என்றால் இயலாது என்று போராடுவதற்காக எங்களை மன்னித்து விடுங்கள் பெரியோர்களே.

நன்றி: “காக்கைச் சிறகினிலே” “ அலை செய்திகள்” இணைய இதழ்

Tuesday, December 13, 2011

சிரிக்கும் துறவிகள்


"காக்கை சிறகினிலே” இந்த மாத இதழில் ஜென்னைப் பற்றி நீண்ட, சுவையான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி. இதை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். அதனூடே “சிரிக்கும் துறவிகள்” என்ற கதை ஒன்றினை சொல்கிறார். அதை எனது மொழியில் இங்கே தருவதை எனது இன்றைய கடமையாகவே கருதுகிறேன்.

மூன்று துறவிகள் சீனாவில் இருந்தார்கள். மூவரும் சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருந்ததால் அவர்களை மக்கள் “சிரிக்கும் துறவிகள்” என்றே அழைத்தார்கள். எதற்காக சிரிக்கிறோம் என்பது அவர்களுக்கே விளங்காத நிலையில் பையப் பைய மக்களும் அவர்களோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு நாள் அந்த மூவரில் ஒரு துறவி இறந்து போனார். ஊரே திரண்டு நின்று அழுது தீர்த்தது. ஆனால் மற்ற இரண்டு துறவிகளும் நண்பனின் பிணத்தருகே நின்று சிரித்துக் கொண்டே இருந்தனர். எரிச்சலடைந்த மக்கள் அவர்களிடம் சென்றனர்.

“ நண்பனின் பிணமருகே நின்று சிரிக்கிறீர்களே. இது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?”

“இல்லை”

“பாவிகளா. உருப்படுவீங்களா”

“ பந்தயத்தில் எங்களை அவன் ஜெயித்து விட்டான். அதுதான் சிரிக்கிறோம்”

“பந்தயமா?”

“ஆமாம், எங்களில் யார் முதலில் சாவது என்பது பந்தயம். அவன் ஜெயித்து விட்டான். அதை நினைத்துதான் சிரிக்கிறோம்”

வாயடைத்துப் போனார்கள்.

செத்த துறவி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

“ நான் சதா சிரித்துக் கொண்டே இருந்ததால் அழுக்கென்னை அண்டவே இல்லை. எனவே நான் செத்துப் போனதும் என்னைக் குளிப்பாட்டாமல் அப்படியே எரித்து விடுங்கள்.”

அப்படியே செய்தார்கள்.

அப்போது அவர் தனது உடைகளுக்குள் ஒழித்து வைத்திருந்த வெடிகள் வெடித்தன. வானத்தில் சில ஜொளித்து வேடிக்கை காட்டின. எரியூட்ட வந்திருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

என்ன ஒரு பந்தயம்? வென்றவன் தனது வெற்றியைக் கொண்டாடவே இயலாது என்று தெரிந்திருந்தும் தோற்றவர்கள் தங்களது தோல்விக்காக துவளாமல் வென்று இல்லாமல் போனவனது, அல்லது இல்லாமல் போய் வென்றவனது வெற்ரியை கொண்டாடுவது என்பது இருக்கிறதே... அப்பப்பா... ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னமே கதை சொல்லி இருக்கிறார்கள். 

அநேகமாக தனது மரணத்திலும் மக்கள் சிரித்து மகிழ எதையோ வைத்து விட்டுப் போன மகத்தான மனிதன் இவனாகத்தானிருக்கும். 

Monday, December 12, 2011

அச்சம் தவிர்

”காக்கை சிறகினிலே” ஆசிரியர் குழு கூட்டத்தில் இருந்த பொழுது வைகறை அய்யா “ஸ்டேட்ஸ் மேன்” பத்திரிக்கையின் சிறப்பு நிரூபர் ராதிகா கிரி அவர்களது கட்டுரை ஒன்றைக் கொடுத்து, இதை உடனே தமிழ்ப் படுத்தித் தாருங்கள் என்றார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மலையாள பத்திரிக்கையாளர்கள் எப்படி கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே திட்டத்தில், ஒரே குரலில், முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு அச்சத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கிறார்கள் என்பதை தொட்டு நீள்கிறது அவரது கட்டுரை.

மலையாளிகள் எங்கு இருக்கும் போதும் மலையாளிகளாகவே செயலாற்றுவதில் திட்டமிட்டு வெற்றி பெற்றுவிடுகிறாகள் என்பதையும் அவரது கட்டுரை சொல்கிறது. இதில் கோவம் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும், கற்றுக் கொள்ளவே நமக்கு இதில் இருக்கிறது என்றுமே உணர்ந்தேன்.

மலையாளப் பத்திக்கையாளர்கள் மலையாளப் பத்திரிக்கை உலகில் மண், மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய அடிப்படையில் தன் இனம் சார்ந்த உணர்வோடு செயல்படுவதில் பிழை இல்லை. ஆனால் சென்னையில் இருக்கும் ஆங்கில அச்சு ஊடகத்தில், பணி புரியும் மலையாளப் பத்திரிக்கையாளர்களும் அதே உணர்வோடு பணியாற்றுவது என்பது ஆபத்தாந்தல்லவா? என்று ஆதங்கப் படுகிறார்.

ஆமாம், மலையாள மண் சார்ந்து மலையாள ஊடகத்தில் கொண்டு போவது ஏற்படுத்தும் விளைவுகள் அந்தப் பிராந்தியத்தில் மட்டுமே அதிர்வுகளை ஏற்படுத்தி அவர்களை உசுப்பும். ஆனால் அதுவே ஆங்கில ஊடகத்தில் எனில் அது தேசம் முழுமையும் ஊடுறுவி அவர்களது செயலில் நியாயம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். இது ஆபத்தானது என்கிற வகையில் நாம் இது குறித்து கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.

அவர்கள் தொடர்ந்து ஆங்கில இதழ்களிலும் “முல்லப் பெரியாறு” என்றே எழுதுவதையும் அவர் குறிப்பிடுகிறார்.

அதைக் கூட விட்டுவிடலாம். ஆனால் சென்னை இந்து கூட “முல்லப் பெரியாறு” என்றுதானே எழுதுகிறது என்று அவர் கேட்பதில் இருக்கிற நியாயத்தை உணரத் தவறினால் இன்னும் விழவே விழுவோம்.

சரி ஆங்கில ஊடகத்தில் பணியற்றும் தமிழ் எழுத்தாளர்களே இல்லையா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்விக்கும் இவர்கள் எதுவும் சுயமாய் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் சொல்கிறார்.

தற்போது கேரள அரசுக்கு ஆலோசகராக இருக்கும் பரமேஸ்வரன் நாயர் எழுபதுகளில் கேரள மிசாரத்துறையின் தலைமை பொறியாளராக இருந்த பொழுது ஒரு முறை அப்போது கேரள காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. கருணாகரனிடம் சொன்னாராம், “அணையின் நீர் வரத்தை குறைக்க தமிழக முதல்வரிடம் பேசுங்கள். அதை விட முக்கியமாய் அதற்கு முன்னர் அணை குறித்த ஒரு அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்திவிட வேண்டும்”

மலையாள மனரோமா உள்ளிட்ட பத்திரிக்கைகள் அந்த வேலையை கச்சிதமாக செய்து தர அன்றைய தமிழக முதல்வரை அதன் பிறகு அணுகினார்கள் என்றும், அதன் விளைவே 152 அடி 136 அடியானது என்றும் அவரது கட்டுரையில் இருந்து அறிய முடிகிறது.

தெரிதவர்கள் அருள் கூர்ந்து பேசுங்கள் இது குறித்து தனியாய் எழுத உதவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...