Wednesday, December 18, 2013

12 நடை நமது


கல்வி குறித்து கவலைப் படுகிற கல்வித்துறை அதிகாரிகளைப் பார்ப்பது என்பது அரிதாய்ப்போன ஒன்றாகிவிட்டது. தேர்ச்சி விழுக்காட்டைப் பற்றிய அக்கறையும், அது நோக்கிய பயணமுமே ஏறத்தாழ அவர்களது இன்றைய செயல்திட்டமாய் மாறிப் போய் இருக்கிறது.

ஏறத்தாழ எல்லாக் கல்வித்துறை அதிகாரிகளுமே பல நேரங்களில் பின்னிரவு வரைக்கும் உழைக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். பள்ளி பள்ளியாக பம்பரமாய் சுற்ருகிறார்கள். தலைமை ஆசிரியர்களை, ஆசிரியர்களை அன்பாய், கடுமையாய் என்று எப்படியோ ஒரு வகையில் முடுக்கிவிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

ஆனால் பெரும்பான்மையோரின் இலக்கு தேர்ச்சி விழுக்காட்டில் தமது மாவட்டத்தை எப்படியேனும் மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்பதாகத்தான் இருக்கிறது. முதல் பத்து இடங்களுக்குள் வந்து விட்டால் அடுத்த ஆண்டு எப்படியேனும் முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதாகிப் போகிறது அவர்களது கனவும் அதுநோக்கிய அவர்களது உழைப்பும்.

இன்னும் சில அதிகாரிகள் மாநிலத்தில் முதல் மதிப்பெண்களை குறிவைத்து விரிகிறார்கள். சான்றோனாக்குவது, மனிதனாக்குவது என்பதையெல்லாம்கூட விடுவோம், குறைந்த பட்சம் கல்விமானாக்குவது என்பதுகூட இவர்களது செயல்திட்டத்தில் இல்லை. மதிப்பெண்களைப் அள்ளிக் குவிக்கிற எந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதும், நல்ல என்றுகூட சொல்ல இயலாது, நூறு விழுக்காடு தேர்ச்சியை அறுவடை செய்கிற தொழிற்சாலைகளாக பள்ளிகளையும் இவர்களை அறியாமலேயே இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் வாழ்ந்து விட்டு வெளியேறும் மாணவன் ஒரு நல்ல மனிதனாக, வாழ்க்கையை சுயமாக எதிர்கொள்கிறவனாக, சான்றோனாக மாறியிருக்க வேண்டும் , அதற்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்று கருதுகிற அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

அதிலொருவர் அதுநோக்கிய தனது கனவுப் பயணத்திற்கான வாகனமாக தனது வலையை பயன்படுத்துகிறார்.

இன்னும் சொல்லப்போனால் தன்கீழ் பணியாற்றக் கூடிய, அவரது மொழியில் சரியாகச் சொல்வதெனில், தன்னோடு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை, மாணவர்களைப் படிப்பிக்க வேண்டுமெனில் முதலில் தாம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை உணரச் செய்தவர். அதிலுங்குறிப்பாக தமிழாசிரியர்கள்  மண் குறித்து, மொழி குறித்து, கலாச்சாரத் தொன்மம் குறித்து அக்கறையோடு இருப்பது அவசியம் என்பதையும் உணரச் செய்திருக்கிறார்.

இதற்கு இணையத்தின் பயன்பாடு இன்றியமையாதது என்பதை உணரச் செய்திருக்கிறார்.

விளைவு, இன்று இவரது மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய தொண்ணூறு விழுக்காடு தமிழாசிரியர்கள் இணையம் பயன் படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். அதில் பெரும்பான்மையோர் சொந்தமாக வலைகளை வைத்திருக்கிறார்கள்.

வலைகளை உருவாக்குவது எப்படி?, வலைகளைக் கொண்டு எது செய்யலாம் என்பவற்றிற்காக பயிற்சிப் பட்டறைகளை தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்துகிறார். ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றில் பங்கேற்கிறார்கள்.

அவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் தற்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள் முருகன். அவரது வலை ,” நடை நமது”

வரலாறு படிக்காதவன் வரலாறு படைக்க முடியாது என்பார்கள். அதை இவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால்தான் நமது தொன்மங்களையும் விழுமியங்களையும் கசியக் கசியப் பேசுகிறது இவரது வலை.

அஜந்தாவா?, எல்லோராவா?, எது இந்தியாவின் தொன்மையான குகை ஓவியம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது கடந்தும் தொன்மையான குகை ஓவியங்கள் நமது தமிழ் மண்ணில், திருமயத்தில் உள்ள பாறைகளில் , குகைகளில் இருப்பதை தகுந்த ஆதாரங்களோடு பேசுகிறது இவரது வலை.

ஓவியம் என்கிற கலை வடிவம் கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னமே எழுதப் பட்ட சித்திர வடிவங்களை ஆதாரத்தோடு நமது நடை பேசுகிறது. இந்த ஓவியங்களின் வயது ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் என்பதை அறியும் போது இந்த வலையை, அதன் உரிமையாளரை, அவரது மற்றும் அவரது நண்பர்களின் உழைப்பை கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது.

சமய தத்துவ ஆராய்ச்சியிலும் விவாதங்களிலும் நீலகேசி எவ்வாறு பங்கெடுத்தது என்கிற விவரங்களை வாசிக்கிற மாதிரி பேசுகிறது ”நீலகேசி உரைநூல் மொழிபெயர்ப்பும் விடுபடல்களும்” என்கிற ஒரு பதிவு.

“நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெறு காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்த காப்பியம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் இலக்கிய வரலாறுகள் சொல்லிப் போவது” தவறு என்பதை மிக வன்மைமையாக தக்க சான்றுகளோடு நிறுவுகிறது ” நமது நடை”

இலக்கணம் என்றாலே பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடும் இன்றைய சூழலில்  தி.வே. கோபாலையரின் இலக்கணப் பதிப்புகள் குறித்து ஒரு பதிவு பேசுகிறது.

அடிப்படையில் இவர் ஒரு கவிஞர் என்பதால் கவிதைகளுக்கும் இவரது வலையில் பஞ்சம் இல்லை.

இப்படி சொல்லலாம்,

ஏராளமான வலைகளையும் வலைஞர்களையும் உருவாக்கிய ஒரு விதைவலை நடை நமது. அவசியம் போய்ப் பாருங்கள்…

நன்றி : “புதிய தரிசனம்” 

Sunday, December 1, 2013

இது தவறெனில்....



சமீபத்தில் வெளியான இரண்டு தீர்ப்புகள் என்னைக் கையைப் பிடித்து இதற்குள் இழுத்துப் போயின.

1) கல்லூரி முதல்வரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரனைக் கைதிகளாக சிறையில் உள்ள மூன்று மாணவர்களும் பல்கலைக் கழகத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது.

2) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.

இரண்டுமே ஆகச் சமீபத்தில் வெவ்வேறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளாகும்.

நம்மைப் பொறுத்தவரை இவை இரண்டு தீர்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போதுதான் பிரச்சினையே வருகிறது. கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது சரி என்றால் கிரிமினல் வழக்குகள் நிழுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்பது தவறாய் படுகிறது. அல்லது கிரிமினல் வழக்குகள் நிழுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்றால் கொலை வழக்கு நிலுவையில் உள்ள மாணவர்கள் மூவரும் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது தவறாய் தெரிகிறது.

இதன்மூலம் இன்னொரு விஷயத்தை கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் கொலை வழக்கு நிலுவையில் உள்ள மாணவர்கள் தேர்வெழுத முடியாது. ஆனால், அவர்கள் விரும்பினால் தேர்தலில் நிற்கலாம். வெற்றி பெற்றால் அமைச்சராகக் கூட ஆகலாம்.

இதை இப்படியும் சொல்லலாம். குற்றப் பின்னனி உள்ளவன் பொறியியல் வல்லுனராகக் கூடாது. ஆனால் அமைச்சராகலாம். எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.

ஒன்றைச் சொல்லி விடுகிறேன். அந்தக் கொலை வழக்கு முறையாக நடக்க வேண்டும் என்பதிலும் மிகச் சரியான தண்டனை கொலையாளிளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் நான் இரண்டாவதாய் இல்லை. ஆனால் நெஞ்சில் ஈரம் மிச்சம் இருப்பவர்களைப் பார்த்து இரண்டு கேட்க ஆசைப் படுகிறேன்.

மனசு நிறைய ஆசைகளோடும், விழிகளில் கசியும் கனவுகளோடும்தானே எம் பிள்ளைகள் கல்வி நிலையங்களில் நுழைகிறார்கள். அவர்கள் கைகளில் கொலைக் கத்தியைக் கொடுத்த சக்தி எது?

தங்கள் குடும்பத்தின் ஆறேழு வயிறுகளுக்காகவும் வாழ்க்கைப் பாட்டிற்காகவும்தானே பாடம் கற்பிக்க வருகிறார்கள். எந்தக் குழந்தைகள் வளமோடு வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று மனசார போராடுகிறார்களோ அதே குழந்தைகளிடம் ஆசிரியர்களைக்  கொன்று அவர்களது குடும்பங்களை அநாதையாக்க கொலைவாளினைக் கொடுக்கும் சக்தி எது?

சுருக்கமாகக் கேட்கிறேன் தந்தையும் பிள்ளையுமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொலைக் களத்தில் கொண்டு வந்து நிறுத்திய ஈனத்தனமான சக்தி முதலாளித்துவம் என்பதை என்பதை நாம் இன்னும் எத்தனை இழப்புகளுக்குப் பிறகு புரிந்து கொள்ளப் போகிறோம்?

நானொரு கற்றுக் கொடுக்கும் ஊழியன். என்னைப் போலவே கற்றுக் கொடுக்கும் ஊழியரான கல்லூரி முதல்வர் சுரேஷ் அவர்களின் கொலைக்காக ஒரு சக ஊழியனாய் வலி தாங்க முடியாமல் அழுகிறேன்.

நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவனின் தகப்பன். அந்த வகையில் பதறி, ஒரு கொலையை செய்துவிட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் நினைத்தும் ஒரு தகப்பனாய் வலி தாங்க முடியாமல் அழுகிறேன்.

சிலர் கேட்கக் கூடும்,

“ இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா? எந்தப் பக்கம் நீ? ”

ஈரம் துளியுமற்ற வறட்டுத்தனத்தின் விளைவாகவே இத்தகைய கேள்வியைப் பார்க்கிறேன்.

நான் சராசரி மனிதன்.  கடன் வாங்கி பிள்ளையைப் படிக்க வைக்கும் ஒரு பாமரத் தகப்பன். கல்வியை சொல்லித்தர வேண்டிய ஒரு ஊழியன். ஆகவே பாமரத் தனமான சராசரியாய் நால்வருக்காவும் அழுகிறேன்.

எனக்குத் தெரியும்,

என்னிடம் படிக்கும் பிள்ளையை பள்ளியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலையும் எங்களுக்கு  வரலாம். எனக்கு எதிராகவும் என்னிடம் படிக்கும் குழந்தையின் கையில் ஏதோ ஒன்று கத்தியைத் தரலாம்.

இதை இப்படியும் வெளிப்படையாகப் பார்க்கலாம்,

ஒரு நாள் என்னிடம் படிக்கும் பிள்ளையையும் நாங்கள் எங்கள் பள்ளியிலிருந்து நீக்கலாம்.  என்னைக் கொல்லவும் என்னிடம் படிக்கும் குழந்தை கத்தியை எடுக்கலாம்.

வழக்கமாக பெரும்பான்மை நேரங்களில் பதட்டத்தோடும் தவறுதலாகவும் நாம் இரண்டாவதை எடுத்துவிடுகிறோம்.

எந்த ஆசிரியனுக்கும், தலைமை ஆசிரியருக்கும், விரிவுரையாளருக்கும், பேராசிரியருக்கும் , முதல்வருக்கும் ஒரு மாணவனைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வெளியேற்றி  அவனது வாழ்க்கையை நாசமாக்கிவிட வேண்டும் என்கிற அளவிற்கு எந்தப் பிள்ளையோடும் தனிப்பட்ட பகையோ விரோதமோ இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும்கூட அத்தகைய ஈனத்தனம் வெளிப்படாது.

 ஒரு ஆசிரியரையோ, தலைமை ஆசிரியரையோ, கல்லூரி முதல்வரையோ கொலை செய்யுமளவிற்கு எந்த ஒரு பிள்ளைக்கும் சொந்தப் பகை இருக்காது. அப்படியே இருப்பினும் எந்தப் பிள்ளையும் இத்தகையதொரு படு பாதக செயலை செய்ய மாட்டான்.

ஆனால் இரண்டும் நடக்கத் துவங்கியுள்ளன. ஆனால் இவை இவர்கள் மூலமாக நிறைவேறியிருப்பினும் இதற்கு இவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் இந்தக் கொலை நடந்தது?

ஏதோ ஒரு தவறு நடக்கிறது. அதுபற்றி விரிவாய் பேச இங்கு இடமில்லை என்பதால் அதற்குள் நாம் போகவில்லை. அந்தத் தவறுக்காக மாணவர்கள் தற்காலிகமாக கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள். இதற்காக கொலை செய்துவிடுவதா? என்ற கேள்வி இயல்பானதுதான். அதற்குள் போவதற்குமுன் இன்னொரு விஷயத்தை நாம் பார்த்தாக வேண்டும்.

ஏதோ ஒரு தவறை பிள்ளைகள் செய்து விடுகிறார்கள். அதற்காக இடை நீக்கம் செய்துவிடுவார்களா? அவர்களது பிள்ளைகளாக இருந்தால் இப்படி செய்துவிடுவார்களா? தவறே செய்திருந்தாலும் நெறிப்படுத்த வேண்டாமா? ஒரு கல்வி நிலையத்தின் வேலை பொறியியல் வல்லுனர்களை உருவாக்கித் தருவது மட்டும்தானா? ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பதில்லையா?

மேல் சொன்ன இரண்டு பாராக்களில் உள்ள அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் உலகமயமும் தாராளமயமும் விதைத்துள்ள வணிகப் போட்டி இவற்றை செய்வதற்கான அவகாசத்தை தருவதில்லை.

கொலை நடந்திருப்பது கல்லூரி வளாகத்தில். இதில் எங்கே வணிகப் போட்டி வந்தது என்று கேட்களாம். கல்வியே வணிகமாகிப் போன சூழலில் கல்லூரி முதலாளிகளுக்கு நட்டம் வந்துவிடக்கூடாது என்கிற வணிக நோக்கமே இப்படி பிள்ளைகளை கொலையாளிகளாயும், ஆசிரியர்களை பிணங்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு மாணவன் ஒரு மாணவியிடம் குறும்பு செய்கிறான் என்றும், அந்த  மாணவி பேராசிரியரிடம் முறையிடுகிறாள் என்றும் வைத்துக் கொள்வோம். முன்னர் எல்லாம் எப்படி நடக்கும் என்றால் அப்படி ஒரு புகார் வந்தவுடன் இருவரையும் அழைத்து பேசி சமாதானப் படுத்தி விடுவார்கள். அந்த மாணவியிடம் தனியாக இதை பெரிது படுத்த வேண்டாம். இனி இப்படி நடக்காது. பயப் படாமல் போடா. தொடர்ந்து அவன் இதையே செய்தால் வா. பார்த்துக் கொள்ளலாம் என்பார்.

மாணவனிடமோ இனி இப்படி ஒருமுறை நடந்தால் தொலைத்து விடுவேன் தொலைத்து என்று மிரட்டி அனுப்பிவிடுவார். பெரும்பான்மை இந்த அணுகுமுறையிலேயே தீர்ந்துவிடும்.

இந்த இயல்பான அணுகுமுறையில்தான் முதலாளித்துவம் மண்ணள்ளிப் போட்டது.

அவசரகதியில் இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் முதல்வருக்கு ஏன் வந்தது? அவருக்கும் மாணவர்களுக்கும் அவ்வளவு பகையா? மனிதாபிமானமே சுத்தமாய் இல்லாது வறண்டு போயிற்றா அவருக்கு? இல்லை, இந்த இடை நீக்கத்தை நிர்ப்பந்தத்தின் பேரிலேயே அவர் செய்திருக்க முடியும்.

அப்படி செய்யாவிட்டால் கல்லூரியின் மாண்பு கெட்டுப் போய்விட்டதாகக் கருதி கல்லூரி முதலாளி அவரை பதவி இறக்கமோ பணிநீக்கமோ செய்திருக்கக் கூடும். அதற்கு அஞ்சித்தான் முதல்வர் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

நிர்வாகிக்கு கல்லூரியின் மாண்பு குறித்து இவ்வளவு அக்கறையா என்றால் அது அல்ல இங்கு பிரச்சினை. இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மாணவர்கள் வர மாட்டார்கள். முதலாளியின் கல்லா நிரம்பாது என்ற வணிக நுணுக்கமே இத்தனைக்கும் காரணம் என்பதை நாம் உணராமல் போனால் தவறிழைத்தவர்களாவோம்.

இடைநீக்கம் செய்த பின்பு அந்த மாணவர்களை அழைத்து ஒன்றும் பயப்பட வேண்டாம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அமைதியாகப் படியுங்கள். வீட்டிற்கெல்லாம் சொல்ல வேண்டாம். அந்தப் பிள்ளையை சமாதானப் படுத்தவே இந்த முடிவு என்று சொல்லியிருந்தால் இந்தக் கொலை நடந்திருக்குமா?

அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் மாணவர்களை அழைத்து  அன்போடும் அக்கறையோடும் பேசி சமாதானப் படுத்தியிருந்தார்கள் என்றால்கூட இது நடந்திருக்காது.

ஏன் அவர்கள் அப்படி செய்யவில்லை? அப்படி செய்ய அவர்கள் விரும்பவில்லையா?   அதெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் செய்தால் எங்கே நிர்வாகத்திற்கு எதிராக தங்களைக் கொண்டு போய் நிறுத்திவிடுமோ என்ற அச்சமே அவர்களை அப்படி செய்யாமல் தடுத்திருக்கும் என்பதையும் உணர வேண்டும்.

இது மட்டுமல்ல இவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டிருக்கக் கூடும். ஆக இடை நீக்கம் செய்யப் பட்ட  பிள்ளைகள் தனிமைப் படுத்தப் பட்டிருப்பார்கள். அந்தத் தனிமை அவர்களை வேதனைப் படுத்தியிருக்கும். அது சன்னம் சன்னமாக கோவமாக மாறியிருக்க வேண்டும்.

நாம் என்ன கொலையா செய்தோம். நமக்கேன் இந்த தண்டனை என்று அவர்கள் குமுறியிருக்க வேண்டும். அந்தக் குமுற்லும் கொந்தளிப்புமே சுரேஷ் அவர்களுக்கு எதிராக அவர்கள கையில் கொடுவாளைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு சின்னத் தவறுக்காக கொலைகாரர்களைப் போல் அந்தப் பிள்ளைகளைப் பார்த்ததன் விளைவுதான்  இன்றவர்களை கொலையாளிகளாகவே மாற்றியிருக்கிறது.

ஆக, முதாளியின் கல்லா குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற முதலாளித்துவத்தின் உந்துதலோடு எடுக்கப் பட்ட ஒரு நடவடிக்கைதான் சுரேஷ் கொலை செய்யப் படுவதற்கும் மூன்று பிள்ளைகள் கொலையாளிகளாக வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்பதற்கும் காரணம்.

சுரேஷ் கொலை செய்யப்பட்டு விட்டார். பிள்ளைகள் கைதிகளாகி விட்டார்கள். இந்தக் கொலைபாதகச் செயலுக்கு உந்தித் தள்ளிய முதலாளித்துவத்தை என்ன செய்யப் போகிறோம்?

நன்றி: “காக்கைச் சிறகினிலே”




அழுத்தமான ஹைகூ கட்டுரைகள்


இவனுக்கு அப்போது மனு என்று பேர்




சு.பொ. அகத்தியலிங்கம் 


ஆசிரியர் : இரா.எட்வின்.
வெளியீடு : சந்தியா பதிப்பகம் ,
புதிய எண் 77 , 53 வது தெரு , 9வது அவென்யூ ,
அசோக்நகர், சென்னை - 600 083.
பக் :104 , விலை : ரூ.70.

சொந்த அனுபவத்தோடும் ஆழ்ந்த சமூக நோக்கோடும் சிறுகதை போன்ற வடிவத்தில் எளி மையாய் குட்டிகுட்டியாய் சிறிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு .ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் பெரிய கட்டுரைக்கான முன்னோட்டமாகவே உள்ளது. பெயரில் இருக்கிறது என்கிறகட்டுரை நுட்பமானது . “எனக்கும் அப்படித்தான் . பெயரில் என்ன இருக்கிறது என்றுதான் நினைத்தேன் .பெயர் ஒரு அடையாளம் . அவ்வளவுதான் . அதைத் தாண்டி அதில் என்ன இருக்கிறது என்றுதான் யோசிக்கத் தோன்றியது .

பெயருக்குள் சாதியும் , ஜாதி அரசியலும் , ஆணவமும் , அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கிறது என்பதெல் லாம் தெரிந்திருந்தும் பெயர் குறித்து பெரிதாய் நான் எப்போதும் அலட்டிக் கொண்டதில்லை ”என் கிறார் எட்வின் . அதேசமயம் , நாத்திகரான தன்னை தன் பெயரால் கிறத்துவராக அறியப்படுவது குறித்து வேதனைப்படுவதும் ; பாரதிதாசன் என்ற பெயரைச் சுற்றி நடந்த விவாதத்தகவல்களும் ; “ஆக, பெயரில் இருக்கிறது”என்ற முடிவுக்கு எட்வினை மட்டுமல்ல நம்மையும் வரவைக்கிறது .

சமீபத்தில் நான் படித்த ஜூதான் ஸ எச்சில்] நாவலில் ஒரு தலித்தை அவரின் அல்லது அவர் தந்தையின் பெயரைக்கொண்டு சாதியை அறிந்து சிறுமைப்படுத்தும் சாதிய வெறியின் கோர முகம் பளிச்சென படம் பிடிக்கப்பட்டிருக்கிறது . இக்கட்டுரை அதை என் நினைவுத்திரையில் சுழலவிட்டது . குழந்தைகள் குறித்தும் , கல்வி குறித்தும் பேசும் பலகட்டுரைகள் நச்சென்று சமூகத்தின் மனச்சாட்சியைக் குத்திக் கிழிக்கவல்லவை . இவர் ஆசிரியராக இருப்பது - அதிலும் சமூக அக்கறை உள்ள ஆசிரியராக இருப்பது இந்நூல் நெடுக நறுக்குத் தெறித்தாற்போல் பதிவாகியுள் ளது .“ நதி பயணப்படும் பாதை ”எனும் கட்டுரையில் வீணாய் கடலில் கலக்கும் நீரைத் தேக்கிவைத் தால் என்ற சிந்தனையை குழந்தைகளோடு உரையாடி அவர்கள் வழி உணர்த்துவதும் ; ஓரிடத்தில் “ஏழாம் வகுப்புக் குழந்தைக்கு புரிகிற இந்த விஷயம் அரசுக்குப் புரியாதா ?” என குத்தீட்டியாய் கேள்வியை வீசி இருப்பதும் மிகக் கூர்மையானது .

“ இவனுக்கு அப்போது மனு என்று பெயர் ” என்கிற கட்டுரையில் அயோத்திதாசர் கூட்டிய கூட்டத்தில் சிவராம சாஸ்திரிக்கும் அயோத்திதாசப் பண்டிதருக்கும் நடந்த உரையாடல் வர்ணாஸ்ரமவாதிகளை சரியாக அடையாளம் காண உதவும். ஆதி முதல் சமச்சீர்கல்வி வழக்கு வரை அவர்கள் மனுவாகவே தொடர்வதை ; வார்த்தைகள் மாறினும் உள்ளடக்கம் மனுதர்மமாகவே இருப்பதை சாட்டையடியாய் விளக்கியுள்ளார். சமூக அக்கறையுள்ளோர் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.


நன்றி: தீக்கதிர் 01.12.2013

Monday, November 25, 2013

நிலைத் தகவல் 22

விக்டோரியாவை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருவதற்காக போய்க் கொண்டிருந்தேன். ஷைரன் ஒலிக்க ஒரு ஆம்புலன்ஸ் வரவே ஒதுங்கினேன். பக்கத்தில் நின்றிருந்த பாட்டி ஒருவர் கை குவித்து கண்களைமூடி யார் இருப்பதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் “ நல்லா இருக்கணும் மகமாயி” என்றார்.

மனசுக்குள் கிழவியைத் தொழுது கொண்டேன்.

எத்துனை முறை வேண்டுமாயினும் திரும்பத் திரும்ப சொல்வேன்,

“இருக்கவே இருக்கிறது ஈரம்”

Saturday, November 23, 2013

கவிதை




நமத்துப் போய்விடாமல்
உலர்த்திக் கொண்டிருக்கிறது வெயில்
மழையின் நினைவுகளை

தேவியர் இல்லம்


ஆயிரத்து இருநூறு மதிப்பெண்களுக்கு ஆயிரத்தி இருநூறி ஐம்பது பெற்றுவிட மாட்டானா தன் பிள்ளை என்று ஏங்குகிற பெற்றோர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தப் பொது ஆசை கல்வியை எந்த அளவு கீழே கொண்டுபோய் தள்ளுகிறது என்பதை அவர்களில் பெரும்பாலோர் கொஞ்சமும் அறிந்திருக்க நியாயமில்லை.

இத்தகைய சூழலில் “ ஏன் என் பிள்ளைகளை மதிப்பெண்களைக் கொண்டு அளவிடுகிறீர்கள்?” என்று ஒரு தந்தை கேட்கிறார் என்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல மகிழ்ச்சியையும் சேர்த்தே நம்மிடம் அழைத்து வருகிறது.

குறைவான மதிப்பெண்களைப் பெறுகிற குழந்தை ஒருவனின் தந்தை இப்படி கோவப் படுகிறார் என்றால் ஆச்சிரியப் படுவதற்கு அதில் எதுவும் இல்லை. ஆனால் எண்ணூறுக்கு எழுநூற்றி எண்பது பெற்றிருக்கும் ஒரு குழந்தையின் தந்தை மதிப்பெண் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு உரத்தக் குரலெடுத்து இப்படி கேட்கிறார் என்றால் அவரைக் கொண்டாட வேண்டாமா?

அதுவும் அவருக்கு வலை ஒன்றிருந்து அதில் கல்வி குறித்து அவரளவில் நியாயம் என பட்டவற்றை வெளிப்படையாக எழுதுகிறார் என்றால் அவரைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை நாம் இயங்கிக் கொண்டிருக்கும் தளங்களில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற நியாயமான ஆசையில்தான் அவரது வலைதளத்தை அறிமுகம் செய்கிறேன்.

அவர் ஜோதிஜி. அவரது வலை “ தேவியர் இல்லம்”

நாள் முழுக்க விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் “ ஏண்டா, படிக்கலையா?” என்று கேட்டால் “நாளைக்கு எதுவும் டெஸ்ட் இல்லை” என்று சொல்வான். இதை சொல்லிவிட்டு ஜோதிஜி சொல்கிறார், “ பரிட்சைகள்தான் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன”

இதற்குள் போவதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்லிவிட வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு டெஸ்ட் இல்லாத நாட்கள் அபூர்வமானவை. ஒவ்வொரு நாளும் நான்கைந்து டெஸ்டுகள் அவர்களுக்கு. ஆக, குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு அடுத்தநாள் டெஸ்ட்  இல்லை என்று அர்த்தம். இதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் டெஸ்ட் இல்லை என்றால்தான் குழந்தைகள் விளையாட முடியும். எனில் இன்றைய சூழலில் குழந்தைகள் எப்போதாவதுதான் விளையாட முடியும் . எனில் “மாலை முழுதும் விளையாட்டு” என்ற பாரதியின் கனவு பொய்த்துப் போகாதா என்ற ஆதங்கத்தோடு இவரது வலை விவாதிக்கிறது.

பரிட்சைக்காவும், பிரகாசமான எதிர் காலத்திற்காகவும்தான் இன்றைக்கு கல்வி என்றாகிப் போனதே என்கிற கவலையை பகிர்வதோடு பிரகாசம் என்பதுகூட உடனடி வேலை வாய்ப்பு என்கிற அளவில் சுறுங்கிப் போனதே என்றும் கவலைப் படுகிற வலையாக தேவியர் இல்லம் இருக்கிறது.

மனிதர்களை உருவாக்க வேண்டிய கல்வி ஊழியக்காரர்களை உருவாக்குவதோடு சுறுங்கிப் போகிறதே என்பதில் அவருக்குள்ள அக்கறை நியாயமாகவே படுகிறது.

பாடத் திட்டங்களின் கட்டமைப்பு குறித்தும் இந்த வலை சன்னமாக பேசுகிறது. பாடத்திட்டத்திற்கு அப்பால் பாடங்கள் போதிக்கப் படுவதில்லை என்றும் ஜோதிஜி இந்த வலையில் கவலைப் படுகிறார்.

ஒரு முறை பெரியார்தாசனும் அவரது பேத்தியும் வெளியே சென்றிருக்கிறார்கள். ஒரு பேருந்தைப் பார்த்ததும் குழந்தைக் கேட்டிருக்கிறாள்,

“ இது என்ன தாத்தா?”

“ பஸ்”

“ பஸ்னா”

“இதுலதான் ஜனங்க எல்லாம் ஓரிடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போவாங்க”

“ ஜனங்கன்னா”

“ நீயும் நானும்தான்”

“ நான் ?”

“நீ”

“நீ னா?”

“நான்”

”நான் னா நீங்கற நீ னாநாங்கற லூசா நீ “ என்றிருக்கிறாள்.

இப்படி கேள்வி கேட்கும் குழந்தைகளைத்தான் “ ஏய் சத்தம் போடாத. கம்முன்னு உக்காருங்கற பள்ளியில கொண்டு போய் தள்ளிடறோம் என்பார் பெரியார் தாசன்.

அதே ஆதங்கம் இந்த வலையெங்கும் தென்படுகிறது. குழந்தைகளை பேசவிடாமலும் கேள்வி கேட்க விடாமலும் மனனம் செய்து வாந்தி எடுக்க வைக்கும் இன்றைய கல்வி முறையை ஏறத்தாழ இந்த வலையின் அனைத்து பக்கங்கங்களிலும் சபித்தவாறே பயணிக்கிறார் ஜோதிஜி.

போக ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்ச்சி அறிக்கையில் கையொப்பமிட பெற்ரோரை பள்ளிக்கு வரச் சொல்வார்கள். அது பல இடங்களில் செம காமடியாக இருக்கும்.எனக்கே ஒரு முறை இப்படிப் பட்ட அனுபவம் நேர்ந்தது.

கிஷோர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது அவனது ஆங்கில ஆசிரியரைப் பார்க்க வரிசையில் ஒரு ஆளாய் நின்றிருந்தேன். 188 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். அவனது ஆசிரியர் ஒரு இளைஞர். எனக்கு பாடமே நடத்தினார். ஆறு மாதங்களாக 12 ஆம் வகுப்பிற்கு ஆங்கிலம் நடத்தும் அவர் 22 ஆண்டுகளாக ( அதே பள்ளியில் இரண்டு ஆண்டுகள்) 12 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆங்கிலம் நடத்தும் எனக்கு வகுப்பு எடுக்க வேண்டிய சூழல். எதுவும் பேசாமல் சரிங்க சார் என்று சொல்லிவிட்டு கையொப்பமிட்டுவிட்டு வந்தேன்.

இது கூட பரவாயில்லை. பெற்ரோர் கூட்டம் என்பார்கள். ஆனால் தாயார் போனால் அப்பா இல்லையா என்பார்கள். ஏன் தாய் என்பவள் பெற்றவள் இல்லையா?

என்மகள் என் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில்தான் படிக்கிறாள். அவளது தேர்ச்சி அறிக்கையில் நாந்தான் கையொப்பமிட வேண்டும். “அம்மாவிடம் வாங்கிக்க என்றால் சிஸ்டர் திட்டுவாங்க என்கிறாள்.

தலைமை ஆசிரியை உள்ளிட்டு எல்லா ஆசிரியர்களும் பெண்களாகவே இருக்கும் ஒரு பள்ளியிலேயே இதுதான் நிலைமை எனில் எங்கு சென்று முட்டிக் கொள்வது.

இத்தகைய கேவலமான ஆணாதிக்க மனோபாவத்தை எதிர்த்தும் அவர் இன்னும் எழுதுவார் என்றே எதிர் பார்க்கிறேன்.

சேவை என்ற நிலையிலிருந்து வணைகமாகிப் போயிருக்கிறது இன்றைய கல்வி. ஏறத்தாழ மளிகைக் கடையில் துவரம்பருப்பு வாங்குவது போல் கல்விக் கடையில் கவ்வி வாங்க வேண்டிய சூழல். இங்கு ஒரு ஆசிரியரின் நிலை என்பது ரேக்கில் இருக்கும் பருப்பு பொட்டலத்தை எடுத்து தருவது மட்டும்தான். இதை இன்னும் கொஞ்சம் ஆழமான அளவில் இவர் புரிந்தெழுத வேண்டும் என்பது நேயர் விருப்பம்.

இந்த வலையில் நான் முக்கியமானதாகக் கருதும் இன்னொரு பதிவு  “தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள்” என்பது ஆகும். இன்றைய ஆங்கில வழிக் கல்வி எப்படி பாட்டியையும் பேரப் பிள்ளைகளையும் அந்நியப் படுத்துகிறது என்பதை அழகாக விளக்குகிறது.

மருத்துவம் குறித்து, வவ்வால் பறவையா விலங்கா என்பது குறித்து இப்படி ஏராளம் இருக்கிறது. கல்வியை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன்.

அவசியம் பார்க்க வேண்டிய வலை. பாருங்கள்
http://deviyar-illam.blogspot.in/

நன்றி : புதிய தரிசனம்

Monday, November 11, 2013

மாத்தி யோசி

இது 2012 பொங்கலை ஒட்டிய ஒரு தினத்தில் நடந்தது.

ரயிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தொலைக் காட்சியிலிருந்து வெளிப்பட்ட குதூகலமும் கூச்சலும் கொப்பளிக்கிற சத்தமும் கீர்த்தனாவின் கைதட்டலும் ஆவென்ற கூப்பாடும் போகிற போக்கில் அதை பார்க்க வைத்தன. 

ஏதோ ஒரு சேனலின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியின் முன்னோட்டம் அது. 

அனிதா (புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி ) அமர்ந்திருக்கிறார். கண்கள் கட்டப்பட்ட நிலையில் புஷ்பவனம் ஒரு கம்பினால் பானைகளை உடைக்க முயன்று கொண்டிருந்தார்.

“ மூனு பானைகளையும் உடைச்சுட்டா உங்க அறுபதாம் கல்யாணத்த ஜாம் ஜாம்னு கொண்டாடலாம்” என்று உற்சாகமும் நக்கலும் கொப்பளிக்க அனிதா சொல்ல...

“ஆமாம் என்னோட அறுபதாம் கல்யாணத்துக்கு பொண்ணு யாரு?”

“ஏய்...”

எங்கள் வீட்டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏன் , அனிதாகூட ரசித்து சிரிக்கிறார்.

ஒருக்கால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அனிதா ஒரு கம்பினால் பாவைகளை உடைக்க முயற்சி செய்வதாகவும், “ மூனு பானைகளையும் உடைச்சிட்டா உனது அறுபாதவது கல்யாணத்த ஜாம் ஜாம்னு கொண்டாடலாம்” என்று குப்புசாமி சொல்ல,


 “ஆமாம், அறுபதாம் கல்யாணத்துல எனக்கு  மாப்ள யாரு?” என்று அனிதா கேட்டிருந்தால் குப்புசாமியோ, புஷ்பவனம் கேட்டபோது ரசித்து சிரித்த என் மனைவி மகள் உள்ளிட்டவர்களோ  ரசித்து சிரித்திருப்பார்களா?

Friday, November 8, 2013

10 வெளிச்சம் மாணவர்கள்



எனது தாத்தாவின் தந்தை பெயர் எனக்குத் தெரியாது. அதாவது எனது தந்தையின் தாத்தா பெயர் எனக்குத் தெரியாது.

எனது தந்தையின் கரும காரியத்தில் அமர்ந்திருந்த என் தம்பியை புரோகிதர் என் தாத்தாவின் அப்பா பெயரைக் கேட்ட போது அவனுக்குத் தெரிய வில்லை. எனக்கும் தெரியாது என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்தப் புள்ளியில் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த கிஷோருக்கு எனது தாத்தாவின் பெயர் தெரிய வில்லை. அதாவது அவனது அப்பாவின் தாத்தா பெயர் தெரிய வில்லை. எனது தந்தையின் தாத்தா பெயரை சரியாய் சொன்ன எனது சித்தப்பாவிற்கு அவரது அப்பாவின் தாத்தா பெயரை சத்தியமாய் தெரியாது.

ஆக, யாருக்கும் தனது அப்பாவின் தாத்தா பெயர் தெரியாது என்பது தெளிவாகிறது. விதிவிலக்குகள் இருப்பின் என் மீது வழக்குப் போடலாம்.

1965 இல் இறந்த, அதாவது நான் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்த எனது கொள்ளுத் தாத்தனின் பெயர் தெரியவில்லை. ஆனால் நான் பிறப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப் போன பாரதியின் தகப்பன் பெயர் எனக்கு அத்துப் படி. அது ஏன்?

ஏன் எனில் பாரதி எனது மண்ணின் மகாகவி. ஏன் அவன் மகாகவி? அவனை ஏன் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?

என்னைப் பொருத்தவரை அவனை நான் நினைத்துக் கொண்டிருப்பதற்கும், அவனை மகாகவி என்று அழைப்பதற்கும் ஒரே காரணம்,

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்என்ற அவனது ஒரு வரிதான்

இந்த ஒற்றை வரியை ஒரு இயக்கமாகவே  மாற்றியிருக்கிறார் செரின். அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை எடுத்துப் போகவும் கல்வி குறித்து சிந்திப்பவர்களை செயல்படுபவர்களைக் கொண்டாடவும் அது குறித்த ஆக்கங்களை கொண்டு செல்லவும் அவரால் ஆரம்பிக்கப் பட்ட வலைதான் “ வெளிச்சம் மாணவர்கள்”

“ கல்வி என்பது கடைச் சரக்கல்ல. அது சமூக மாற்றத்திற்கான ஆயுதம்” என்கிறது இந்த வலை.

வெளிச்சம் மாணவர்கள் என்ற அமைப்பும் வலையும் வேறு வேறாகத் தெரியவில்லை.  தங்களது கள செயல்பாட்டினை, போராட்டங்களை கருத்துத் தளத்தில் விவாதிக்கவும் வெகு சனத்திடம் கொண்டு செல்லவுமான ஒரு ஊடகமாகவே அவரது வலை இருக்கிறது.  இந்த ஊடகத் தளத்தில் விவாதித்து பயணித்து கண்டறியபட்ட போக்குகளை செயல் படுத்துகிற களமாகவே அவரது அமைப்பு இருக்கிறது.

சக மனிதனுக்காக கவலைப் படும் இயல்பான மனித குணத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடாகத்தான் இந்த வலையை செரின் பார்க்கிறார்.

எந்த ஒரு மாணவனும் பணம் இல்லை என்ற காரணத்திற்காக தனது கல்வியை இழந்துவிடக் கூடாது. அவனும் உயர் கல்வியை அடைய வேண்டும் என்பதே வெளிச்சம் மாணவர்களின் குறிக்கோள் என்று பிரகடனம் செய்கிறது இந்த வலை. அதிலும் முதல் தலைமுறை மாணவர்களையே இது இலக்காகக் கொண்டுள்ளது.

எல்லாம் கெட்டுக் கிடக்கு. நாம ஒரு ஆளு நெனச்சு என்ன ஆகப் போகுது என்கிற பொதுப் புத்தியைத் துப்பி தூரக் கிடாசியிருக்கிறது வெளிச்சம் மாணவர்கள்.

அஃப்ரியலூருக்கு அருகில் உள்ள பிச்சிக்குழி என்ற கிராமத்தைச் சார்ந்த செந்தில் என்கிற பையன் பள்ளியிறுதித் தேர்வில் நிறைய மதிப் பெண்களைப் பெற்றிருந்தும் பணம் இல்லாத காரணத்தினால் முந்திரிக்காட்டுக்கு வேலைக்குப் போவதாக செய்தித் தாளில் பார்த்த அந்தப் புள்ளியில்தான் “ வெளிச்சம் மாணவர்கள்” அமைப்பின் செயல் பாடு தொடங்குகிறது.

அந்த மாணவனது படிப்புக்கான ஏற்பாடுகளை செய்கிறார். அலைகிறார். காசு சேர்க்கிறார். படிக்க வைக்கிறார். அந்த செந்தில் இன்று ஓமனில் பணி புரியும் ஒரு இளம் விஞ்ஞானி என்பதை இந்த வலை நமக்குத் தருகிறது.

எந்த இடத்திலும் பணத்தை கையால் வாங்குவதில்லை. மாணவர்களுக்கான கல்வித் தொகையை காசோலையாக வாங்கி கல்லூரிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

“ நல்லாப் படிடா. பிச்சை எடுத்தாவது உன்னைப் படிக்க வைக்கிறேன்” என்று பெத்தப் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் சொல்வது வாடிக்கை. ஆனால் 2009 ஆம் ஆண்டு போதிய ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால் அமைப்பினர் மக்களிடம் உண்டியலடித்து 48 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டியுள்ளனர் என்பதை இந்த வலையில் பார்க்க முடிகிறது.

இவர்களது இந்தப் போராட்டத்தை தமிழக அரசியல், டெக்கான் குரோனிகல், NDTV போன்ற ஊடகங்கள் வெளிட்டதன் விளைவாகவே முதல் தலை முறைக்கான இலவச உயர் கல்விக்கான அரசானை வந்தது என்கிற தகவலை இந்த வலை தருகிறது. 

அதை செயல்படுத்த சொல்லி நீதி மன்றம் சென்று போராடி வென்ற கதை இதில் உள்ளது.

2012 ஆம் ஆண்டைய  “ child morality estimates" என்கிகிற யூனிசெப்பின் அறிக்கையை வேதனையோடும் வெளிப்படையாகவும் விவாதிக்கிறது இந்த வலையின் ஒரு பதிவு.

போதிய சத்துணவு இன்மையால் ஒவ்வொரு நாளும் 19000 இந்தியக் குழந்தைகள் செத்து மடிகின்றன ஒரு விவரத்தை அதில் பார்க்கிறோம்.2011 ஆம் ஆண்டு மட்டும் 15 லட்சத்து ஐம்பதாயிரம் இந்தியக் குழந்தைகள் சத்துணவு இன்மையால் இறந்திருக்கிறார்கள் என்ற தகவவலை நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனத்தில் அந்த ஆண்டு 2 லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரம் குழந்தைகள் மட்டுமே ஒப்பிட்டுக் காட்டுகிறது அந்தப் பதிவு.

இதைப் படிக்க வேண்டியவர்கள் படித்தால் நலமாகும்.

“ உயர் கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம்” என்கிறது இந்த வலை. 

சபிக்கப் பட்ட ஒரு தேசத்தில் வாழ்கிற, எல்லோருக்கும் கல்வி என்கிற நியாயமான கோரிக்கையை ஏற்கிற யாவரும் பார்க்க வேண்டிய வலை. 

உறுதியாய் சொல்கிறேன் இந்த வலை நம்மை இயக்கப்பட உந்தித் தள்ளும்.  பாருங்கள்

http://velichamstudents.blogspot.in/

நன்றி : “ புதிய தரிசனம்”
 

 

Monday, November 4, 2013

கேளிர்?

சேறு
நாற்று நடும் 
கருப்பாத்தா

வேப்பமர நிழல்
கயிற்றுக் கட்டில்
ஆண்டை

ஏசி அறை
இருண்ட வெளிச்சம்
மேசை துடைக்கும்
சிறுவன்

ருசித்து உண்ணும் 
மந்திரி

குமட்டும் நாற்றம்
சாக்கடை அள்ளும் 
காத்தான்

சாரதி காட்டன்
செண்ட்
சேர்மன் பவுடர்பழனி

மன்னித்து விடு 
பூங்குன்றா

Thursday, October 31, 2013

திருவாளர்.கழிவறை

யோசித்துப் பார்க்கிறேன்,

திருவாளர் கழிவறை என்று யாருக்கேனும் பெயர் வைத்து அழைக்க இயலுமா?

கேவலமான பட்டப் பெயரால் விளிம்புநிலை மக்களை அழைப்பதில் எந்தக் கூச்சமும் காட்டாத நம் மண்ணில்கூட இது சாத்தியமில்லை என்றே படுகிறது.

“மண்ணாங்கட்டி”, “மண்வெட்டி” என்பது வரைக்கும் கூட இது நகர்ந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ராமசாமி என்ற தனது பெயரால் அழைக்கப் படும் போது திரும்பிப் பார்க்காத மனிதன் “ மண்ணாங்கட்டி” என்று அழைத்ததும் திரும்பிப் பார்க்கிற நிகழ்வுகள் இங்கு ஏராளம் இருக்கவே செய்கின்றன.

அந்த அளவிற்கு பட்டப் பெயரோடு ஒன்றிப் போகும் விளிம்பு நிலை மனிதன்கூட தன்னை யாரேனும்  ”கக்கூசு” என்றழைத்தால் கொன்றே போடுவான்.

அனால் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய பிரபலமான ஒரு பெரிய மனிதரை “ திருவாளர். கழிவறை” (mr.toilet) என்று அழைப்பதில் ஒரு நாடு பெருமைப் படுகிறது.

அதைவிட முக்கியம் என்னவென்றால் அப்படி தான் அழைக்கப் படுவதில் எதைவிடவும் பெருமை கொள்கிறார் அந்த பெரிய மனிதர்.

இது சாத்தியப் பட்டிருக்கிறது சிங்கப்பூரில்.

ஜாக்சிம் என்ற பெரிய மனிதரைதான் திருவாளர். கழிவறை (MR.TOILET) என்று அழைக்கிறார்கள். அப்படி அழைக்கப் படுவதற்கு அவர் என்ன செய்தார்?

கழிவறைகளின் அவசியத்தை சிங்கப்பூர் மக்களிடம் இயக்கமாகக் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அதற்காகத்தான் அவரை மக்கள் அப்படி கொண்டாடுகிறார்கள். அவர் தந்த அழுத்தத்தின் விளைவாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த விவதமொன்றில் சிங்கப்பூரின் பிரதிநிதி திரு மார்க் நியோ அவர்கள் நவம்பர் 19 ஐ உலக கழிவறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மன்றாடினார்.

இந்தக் கோரிக்கையை முன் வைப்பதற்காக தான் கேலி செய்யப் படலாம் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். அதை வெளிப்படையாக அந்த மன்றத்தில் பதியவுமே செய்தார். யார் தன்னை எவ்வளவு கேவலமாக பகடி செய்த போதிலும்  இந்தக் கோரிக்கையிலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். உலகத்தின் இந்த நொடியின் மிக அவசியமான ஒரு பிரச்சினையைத் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், ஆகவே அந்த மாமன்றம் அது குறித்து கவனம் குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர் எதிபார்த்தபடியே அவர் பகடி செய்யப் பட்டாரா இல்லையா என்பதற்கு சான்றெதுவும் இல்லை. என்றாலும் அதற்கு வாய்ப்பிருக்கவே இருக்கிறது. ஒருக்கால் வெளிப்படியாக அதை செய்ய தைரியம் இல்லாதவர்கள் மனதிற்குள்ளேனும் அவரை பகடி செய்திருப்பதற்கு வாய்ப்புகளுண்டு.

உலகில் 250 கோடிக்கும் சற்று கூடுதலான மக்களுக்கு சுகாதாரமான கழிவறை இல்லை என்றும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் திறந்த வெளியையே கழிவறையாகப் பயன் படுத்துகிறர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனில், இவ்வளவு வளர்ந்தநிலை விஞ்ஞானத்தை பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் நேரத்தில் 110 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதியே இல்லை என்பது எவ்வளவு கொடுமை. இவர்கள் திறந்த வெளியை கழிவறைகளகப் பயன்படுத்துவது சூழலை பாதிக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இன்றைய உலக மய சூழலில் அதற்கு அவ்வளவு மறைவான இடம் எங்கே இருக்கிறது.

திறந்த வெளியை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு புதர் உள்ள இடங்களைத்தான் நாடவேண்டும். கிராமங்களில் இத்தகைய இடங்களை மந்தை என்பார்கள். வெளிச்சத்தில் போக முடியாது. இருட்டினால்தான் போக முடியும். புதர், இருட்டு கழிவறை கட்டவே வசதியற்ற கிராமப் புற ஏழை மக்கள் கை விளக்கிற்கு எங்கு போக முடியும்? இரவு நேரத்தில் புதர் பக்கம் ஒதுங்கியவர்களில் பாம்பு கடித்து செத்தவர்களின் எண்னிக்கை யாருக்குத் தெரியும். 

கழிவறை கட்டவே வக்கற்ற ஏழைமக்கள் எப்படிச் செத்தால் யாருக்கென்ன கவலை?

இதைவிடக் கொடுமை எவ்வளவு அவசரமென்றாலும் இருட்டும் வரை காத்திருக்க வேண்டும்.

”ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது “ என்பார்கள் ஆனால் பள்ளிகளில் எதை கற்றுத் தருகிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு மூத்திரத்தை அடக்கக் கற்றுத் தருகிறோம் என்று ஒரு கட்டுரையில் சொல்வார் தி. பரமேசுவரி.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கிராமத்தில் அல்லது, கழிவறை இல்லாத சிறு நகரத்தில் வசிக்கக் கூடிய ஒரு பெண்ணிற்கு மதிய நேரத்தில் இயற்கை உபாதைக்கான அறிகுறி தெரிகிறது எனில் அவர் எங்கு போவார்? பல பர்லாங்குகள் கடந்து போனால்தான் புதர் கிடைக்கும்.அதுவரை அடக்கிக் கொண்டே போகும் அவஸ்தையை, வலியை எப்படி எழுதுவது.

பயணத்தில் இருக்கிறோம். பசிக்கிறது. இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் ஒரு நல்ல உணவகம் கிட்டும் எனில் ஒரு மணி நேரம் பசியை அடக்கலாம். இருட்டும் வரை இதை எப்படி அடக்குவது?

பெரும் பகுதி இயற்கை உபாதைகளுக்காக இவர்கள் ஒதுங்கும் பகுதி சாலை ஓரங்கள்தான். அப்படி இருக்கும் போது சாலையில் வாகனங்களோ, மனிதர்களோ கடக்க நேரிட்டால் இவர்கள் படக் என்று எழுந்து நிற்க வேண்டும்.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். இயற்கை அழைப்பினை ஏற்று கழித்துக் கொண்டிருக்கும் வேளை யாராவது ஒரு நிமிடம் எழுந்து நில் என்று சொன்னால் கொன்றே போட மாட்டோமா?

ஆனால் கழித்துக் கொண்டிருக்கும் வேளை ஏதேனும் வாகனத்தின் ஒலியையோ ஒளியையோ கண்டு விட்டால் நிறுத்திவிட்டு அப்படியே எழுந்து நிற்க வேண்டுமே அந்தக் கொடூர வலியின் அவஸ்தையை இத்தனை ஆண்டுக்காலம் ஆண்ட நம் தலைவர்கள் உணர்வார்களா? 

தண்ணீர் எடுக்க எம் தாய்மார்கள் இரண்டு மூன்று மைல்கள் கால் கடுக்க நடந்து, அங்கு பல நேரம் கால் நோக காத்திருந்து நீரெடுத்து வரவேண்டுமென்றால் மூத்திரம் போக ஒதுங்க இருட்டும் வரை காத்திருக்க வேண்டிய அவலம்.

ஏறத்தாழ இரண்டு லட்சம் குழந்தைகள் போதிய கழிவறைகள் இல்லாமையால் வருடா வருடம் இறக்கிறார்கள் என்கிற செய்தியை மார்க் நியோ வேதனையோடு குறிப்பிடுகிறார். 

ஆக கழிவறைப் போதாமை இரண்டு லட்சம் குழந்தைகளை வருடா வருடம் கொல்கிறது. இதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் போதிய கழிவறைகளை கட்டுமானித்தால் வருடா வருடம் இரண்டு லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.

போதிய சத்துணவு இல்லாமையாலும் பல லட்சம் குழந்தைகள் வருடா வருடம் செத்து மடிகிறார்கள்.போதிய கழிவறையின்மையாலும் பல லட்சம் குழந்தைகள் செத்து மடிகிறார்கள். இதற்கு ஒரு வழி காணாது சந்திரனுக்குப் போயென்ன? சூரியனைக் கொண்டு வந்து பாராளுமன்றத்தின் கோபுரத்தில் வைத்தென்ன?

பாராளு மன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் நமது பிரதான எதிர்க் கட்சியின் பிரதம வேட்பாளரான திரு மோடி அவர்கள் “ கழிவறை கட்டுவதற்கே முன்னுரிமை. கோயில்கள் இரண்டாம் பட்சமே” என்று பேசத் துவங்கியிருக்கிறார்.

இதைப் பார்த்ததும் வடையை எங்கே அந்த மனுஷன் கொண்டு போய்விடுவாரோ என்ற அச்சத்திலும் பதட்டத்திலும் காங்கிரஸ் எதிர்குரலெடுக்கத் தொடங்கியிருக்கிறது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரிஜா வியாஸ் இது தங்களது அரசிந்திட்டம் என்றும், கோவிலை விட கழிவறைகளே அவசியம் என்பதை மோடிக்கு முன்பே தங்கள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பேசியிருப்பதையும் சொல்வதோடு தங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியுள்ளதையும் குறிப்பிடுகிறார்.

கிரிஜா அவர்கள் சொல்வது உண்மைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஜெயராம்தான் மோடியை முந்தி இதை சொன்னவர். நாம் கேட்பது என்னவெனில் ஜெயராம் பேசியது சரி, நீங்கள் ஒதுக்கியதும் சரி, என்ன விளைவு?

முறையான கழிவறைகளைக் கட்டுவதுதான் எங்கள் செயல்திட்டம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தவர்கள் சொல்வது ஏழைகளை எள்ளி நகையாடுவது அன்றி வேறென்ன? இதை செயல் திட்டமாக சொல்வதற்கே அரை நூற்றாண்டுக்கும் மேலே தேவைப் படுகிறது உங்களுக்கு எனில் நிறைவேற்ற எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்.

கோவில் கட்டுவதாகச் சொல்லியே இதுவரை அரசியலை நகர்த்தியவர்கள் இப்போதுகழிவறையைப் பற்றி பேசுகிறார்கள் என்றால் அது ஏதோமக்களின்பால் ஏற்பட்டுள்ள அக்கறையால் அல்ல, இன்றைய தேவை கோவில் அரசியல் அல்ல, கழிவறை அரசியலே என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பதுதான்.

சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் ஒரு புரிதலைத் தந்தது. ஒரு திருமணத்திற்காக கரூர் சென்றேன். பேருந்து நிலையம் இறங்கியதும் வேக வேகமாக கழிவறை நோக்கி நகர்ந்தேன். “ஒன்னுக்கு ரெண்டு ரூபா, ரெண்டுக்கு மூனு ரூபா “ என்று டோக்கன் கொடுப்பவர் கத்திக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாய் உள்ளே நுழைந்தால் ரேஷன் கடைக் கூட்டத்தில் பாதி தேறும் போல இருந்தது. கைகளைப் பின் கட்டி, கால்களை தரையில் அழுத்தி , இடுப்பை நெளித்து என என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன். ஏறத்தாழ அனைவரும் அப்படித்தான்.

அங்கு நின்று கொண்டிருந்த இருவர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. பணி மூப்பை மதிக்காமல் பதவி உயர்வினை பள்ளி நிர்வாகங்கள் வழங்கிக் கொண்டிருப்பது பற்றி விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

கோவத்தை எள்ளலோடு வெளிப்படுத்தும் ஆற்றல் இருந்தது இருவருக்கும்.
அந்த அவஸ்தையின் உச்சத்திலும் கொடுமை கண்டு எள்ளலோடு அவர்களால் பொங்க முடிந்தது.

என்னாலும் ரசிக்க முடிந்தது.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தார்கள்.

“ தனியார் பள்ளி ஆசிரியர்களா சார்?”

“ ஆமாம் சார். நீங்கள்?”

“ நானும்தான்”

இப்படி எங்களுக்குள் ஒரு உரையாடல் துவங்கியிருந்த நேரத்தில் ஒரு அறை காலியாகவே எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த இளைஞன் உள்ளே நுழைந்து விட்டான்.

“ இங்க வரிசையில நிக்கறவனெல்லாம் மனுசனா இல்லையா?” என்று சகட்டு மேனிக்கு ஒருவர் திட்ட ஆரம்பித்து விட்டார்.

மற்றொரு ஆசிரியர் அவரை சமாதானப் படுத்தினார்.

சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்,

“ பாருங்க சார், இவனவிட ஏழு வருஷம் ஜூனியரை தலைமை ஆசிரியரா போட்டாங்க. அப்பக் கூட சிரிச்சான். இன்னமும் அந்த ஹெச்.எம் மோட நல்லாதான் பழகுறான். ஆஃப்டர் ஆல் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி பாயறான் பாருங்களேன்”

 “ எதுடா சின்ன விஷயம்?”

“ இது அவ்வளவு பெரிய விஷயமாடா?”

“ இல்லையா பின்ன. HM ப்ரொமோஷன உட்டுக் கொடுத்ததால என் பேண்ட்டு நாறாது. இங்க அப்படியில்லை”

இதுதான் ஞானத்தின் உசரம்.

மக்கள் தொகையின் அளவுக்கேற்ற கழிவறகளை அரசு கட்டமைக்க வேண்டும். அதை சுகாதாரத்தோடு பராமரிக்க வேண்டும்

இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். மூன்று ரூபாய் கொடுத்து என்னால் போக முடிந்தது . போனேன். காசில்லாத ஏழை என்ன செய்வான். வேறு வழியின்றி பேருந்து நிலையத்திலேயே போவான். கழிவறைகள் வேண்டுமளவும், சுகாதாரத்தோடும், இலவசமாகவும் அமைய வேண்டும்.

நம்பிக்கையிருக்கிறது,

இந்தத் தேர்தலில் அதிகம் பேசப்பட உள்ளவைகளுள் கழிவறையும் உண்டு.

நன்றி: காக்கைச் சிறகினிலே





Sunday, October 27, 2013

சம்மதமில்லையெனக்கு அதிசயங்களை சாப்பிட...

ரட்சிப்பு
மன்னிப்பு

இளைப்பாறுதல்
எது கொண்டும்
பொங்க மறுக்கிறது என் உலை
நீரை ரசமாக்கலாம்
ஐந்து துண்டுகளால் கூடைகளை நிரப்பியும் நீட்டலாம் நீ
சம்மதமில்லையெனக்கு அதிசயங்களை சாப்பிட
போக
உழைத்துதான் உண்ணனும் கர்த்தரே
முடியுமெனில்
கூலிக்கொரு வேலைக்கொடு

Friday, October 25, 2013

சோம்பேறிகளையும் இயக்கும் சித்தன்கள்





படைப்பளிகளைத் தேடிச் சென்று கண்டெடுப்பதில், அவர்களைக் கொண்டாடுவதில், ஒரு நல்லப் படைப்பைப் பார்த்துவிட்டால் ஒரு ஐம்பது நபர்களிடமாவது அதைக் கொண்டு சேர்ப்பதில் யுகமாயினி சித்தன் அவர்களுக்கு இணை சித்தன்தான்.

வடை மடித்த தாளில் ஒரு நல்ல படைப்பைப் பார்த்து விட்டாலும் அவ்வளவுதான். ஓரங்கட்டி நின்றுகொண்டு ஆற அமர ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, அந்த நேரத்தில் நினைவுக்கு வரும் ஏதேனும் ஒரு நல்ல வாசக நண்பரை அலை பேசியில் பிடித்து,

“ அதுல பாருங்க எட்வின், இன்னைக்கு ஜோன்ஸ் ரோட்ல அந்த ஓரக் கடைல வடை வாங்கிய தாளில் ஒரு அழகான கவிதை. என்னமா எழுதியிருக்கான். பேரக் காணோம். விடுங்க எட்வின், பிடிச்சுடலாம். அந்த மனுஷனத் தேடிப் பிடித்து படைப்ப வாங்கி “ யுக மாயினி” யில போடனும்.”

அத்தோடு நிற்க மாட்டார். கையில் காசில்லை என்றாலும் கடனையாவது  வாங்கிக் கொண்டு அந்தப் படைப்பாளியைத் தேடிப் போய் விடுவார்.

எந்தப் பிரதி பலனையும் எதிர்பார்க்க மாட்டார். உண்மையை சொல்லப் போனால் ஏதோ காரணங்களால் எழுத மறுத்துக் கிடந்த சில எழுத்தாளர்களை மீட்டெடுப்பதற்காக இவர் இழந்தது ஏராளம்.

எத்தனை பேர் நம்புவீர்கள் என்று தெரியாது. பத்து வருடங்களாக எழுதாமல் இருந்த என்னைத் தேடி பெரம்பலூருக்கு மகிழுந்தில் வந்து, என்னிடம் இருந்த பழைய கவிதைகளுள் நான்கினை எடுத்துப் போய் “ எட்வின் கவிதைகள் நான்கு” என்று அழகுற வடிவமைத்து யுகமாயினியில் போட்டவர்.

ஒருக்கால் அன்று அவர் சிரமமெடுத்து என்னைத் தேடி வந்திருக்காவிட்டால் இந்த எட்வினை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சராசரி பேச்சாளனாகவும், அதைவிட சராசரியான ஆசிரியனுமாகவே செத்துப் போயிருப்பேன்.

இதுவரை மூன்று, அச்சில் ஒன்று, அச்சுக்குப் போவதற்குத் தயாராய் இரண்டு நூல்கள் என என் கணக்கிலும் ஏதோ இருக்கிறது என்றால் அது அவரால்தான்.

இப்பவும் எப்போதாவது பேச ஆரம்பித்தால் விசாரிப்புகள் முடியும் முன்னமே “ இளங்கோ கிருஷ்ணனை வாசிச்சீங்களா எட்வின்”  என்று தாவிப் போய்விடுவார்.

எதையும் எதிர்பார்க்காமல் இலக்கியத்துக்காக இயங்கும் எனக்குத் தெரிந்த சிலரில் இவரே முதன்மையானவர்.

இவரைக்காட்டிலும் விஷேசமான சிலரும் இவரால்தான் எனக்கு அறிமுகமானார்கள்.

ஒருநாள் அழைத்தார்,

“ எட்வின், தலைவாசலில் இருந்து சிலர் பேசினாங்க. போன மாசம் யுகமாயினியில் போட்டிருந்த உங்களோட ஒரு கவிதையை அவர்கள் நோட்டிஸாப் போடனுமாம். நம்பர் கொடுத்திருக்கேன். பேசுவார்கள். சரி சொல்லிடுங்க”

எதுவும் புரியாத குழப்பத்தோடே அவருக்கு “ சரி “ சொன்னேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்களே அழைத்தார்கள். தலை வாசலை சேர்ந்த சில நண்பர்கள் சன்னமான நல்ல கவிதைகளைக் கண்டுவிட்டால் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அந்தப் படைப்பை நோட்டீஸ் போட்டு பேருந்து நிலையங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், சந்தை, வீடுகள் என்று கொண்டு சேர்ப்பார்களாம்.

அப்பொழுது உலக மகளிர் தினம் நெருங்கியதாலும் எனது கவிதை பெண்னுரிமையை மையச் சரடாகக் கொண்டிருந்தமையாலும் 5000 நோட்டீஸ்கள் போட்டு விநியோகிக்க இருப்பதாகவும். அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டார்கள்.

அப்படி அவர்கள் போட்டதுதான் மேலே காணும் பிரதி.

ஒரு நல்ல கவிதைய வாசிக்க நேர்ந்து அதை நான்கு பேருக்கு சொன்னால் அதுவே பெரிய அளவிலான பெருந்தன்மை இப்பொழுது. ஆனால் அதை ஆயிரக் கணக்கில் பிரதியெடுத்து கொண்டுபோய் சேர்க்கும் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?

கேட்டால் நல்லதுகளை நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

சித்தன் மாதிரியும் இவர்களை மாதிரியுமான தோழர்களே என்னை மாதிரி சோம்பேறிகளை சோர்ந்து போகாமல் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...