Thursday, September 27, 2012

கணபதியே சரணம்






நல்ல வேளை,

எங்களூர் மலை உச்சியில் பிள்ளையாரைக்
கொண்டு வந்து வைத்தார்கள்.

இல்லையேல்

மலைக்கோட்டை இருக்கும் இடத்தில் 

இந்நேரம் ஒரு பெரிய ஷாப்பிங் மால் வந்திருக்கும்

Sunday, September 23, 2012

பாரதியின் “இந்திய பாங்க்”

ஒரு பக்கம் பார்த்தால் பாரதியைப் பற்றி எவ்வளவு பேசியாயிற்று என்று மலைப்பாகத் தோன்றுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பேசுவதற்கு பாரதியைப் பற்றி இன்னும் இவ்வளவு இருக்கிறதே என்றும் தோன்றுகிறது.

அதுதான் பாரதி.

எவ்வளவோ விமர்சனங்கள், எவ்வளவோ வசைகள் எவ்வளவோ பாராட்டுக்கள் எனப் பரந்து விரியும் பாரதியின் தளம்.

பாரதியைக் கொண்டாடுபவர்களுள்ளும் சரி தூற்றுபவர்களுள்ளும் சரி பாரதியை முழுமையாகப் பார்க்காதவர்களே ஏராளம் எனலாம். கோனார் நோட்ஸில் போட்டிருப்பதற்காகவே பாரதியை மகாகவியாகக் கொண்டாடும் பலரை நானறிவேன்தான்.

ஆனால் இவை யாவும் கடந்து அள்ள அள்ளக் குறையாமல் ஏராளம் கிடக்கிறது பாரதியிடம்.

எது குறித்து பேசவில்லை பாரதி?

எது குறித்தும் பேசியவன்தான் பாரதி என்று ஆழமாய் நம்புபவனும் ஆச்சரியப் படும்படியாக ஒரு விசயத்திற்காக பாரதி விடாப் பிடியாகப் போராடியிருக்கிறான்.

தமிழகத்தில் ஒரு சுதேசி வங்கியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று போராடி அதில் வெற்றியும் பெற்றவன் பாரதி என்பது பாரதியின் பன்முகத் தன்மை குறித்து தொடர் வகுப்பு எடுக்குமளவிற்கு ஞானம் உள்ளவர்களில்கூட பலருக்கு ஆச்சிரியத்தைத் தரும் செய்தி.

36 சதவிகித வட்டி, வண்ண வண்ண, மற்றும் இதுமாதிரியான கவர்ச்சிகரமான அறிவிப்புகளில் மயங்கி தங்களது உழைப்பின் விளைவை எல்லாம் மொத்தமாக முதலீடு செய்துவிட்டு நிதி நிறுவனத்துக்காரன் கம்பியை நீட்டியவுடன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுகின்றவர்களை, சமயத்தில் தற்கொலை செய்துகொள்கிறவர்களை ஊடகங்களின் வாயிலாக நாம் ஏராளம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

எவ்வளவோ எடுத்து சொன்னாலும், ஊடகங்களின் வழியே அறிவுறுத்தினாலும் இது தொடர் கதையாகத்தான் இருக்கிறது. எத்தனை முறை எடுத்து சொன்னாலும் திருப்பித் திருப்பி இப்படி ஏமாறுகிறார்கள் எனில் எவ்வளவு பேராசை இவர்களுக்கு. இவ்வளவு பேராசை பட்டால் இப்படித்தான் நட்டப் படவேண்டும் என்று சொல்பவர்களும் உண்டுதான்.

ஆனாலும் இவர்கள் நிதி நிறுவனங்களில் கொண்டு போய் தங்களது வாழ்நாள் சேமிப்பைக் கொட்டுவது அவர்களது பேராசையினால் அல்ல. பிள்ளைகளை எப்படியேனும் உயர் படிப்பு படிக்க வைத்துவிடமாட்டோமா?, அவர்களின் திருமணத்தை நடத்திவிட மாட்டோமா? என்ற வாழ்க்கை நைந்து போயிருப்பவர்களின் ஏக்கத்தைதான் இந்த நிதிநிறுவனங்கள் கொள்ளை அடிக்கின்றன.

விலக்காய் சில பேராசைகளும் இருக்கவே செய்யும் என்பதையும் முற்றாக மறுத்துவிட முடியாதுதான்.

இவ்வளவு தொடர்பு சாதனங்கள்,  இவ்வளவு தொடர் பிரச்சாரங்கள் இருக்கிற இந்த நாளிலும் இத்தனைபேர் ஏமாறுகிறார்கள் என்றால் இவை ஏதுமில்லாத 1906 ஆம் ஆண்டு மக்கள் பெரிதாய் ஒரு வங்கியால் ஏமாற்றப் பட்டிருப்பதில் பெரிதாய் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லைதான். அதுவும் அன்றைய அரசாங்கமே அந்த வங்கியைத் தவிர வேறு எதிலும் லேவாதேவி செய்யக் கூடாது என்று சொல்லியிருந்த ஒரு கால கட்டத்தில் அரசு சொன்ன நிதி நிறுவனத்தைத் தாண்டி அவர்களுக்கு வேறு வழி ஏது?

1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அன்று சென்னை அர்பத்னாட் வங்கி இழுத்து மூடப்பட்டு அதன் கதவில் இப்படி எழுதி ஒட்டப் பட்டிருந்தது,

“அர்பத்னாட் கம்பெனியார் கடனாளிகளுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக விசனத்துடன் அறிவித்துக் கொள்கிறார்கள்.”

ஹிந்து நாளிதழ் 23.10.1906 அன்று இப்படி எழுதியது,

“:the consequence of this sudden and disastrous failiure will mean the ruin of many hundreds of families in southern india"

“ இந்த வங்கி இப்படித் திடீரென மூழ்கிப் போனதால் தென்னிந்தியாவில் உள்ள பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளன” என்பது மாதிரி ஹிந்து பத்திரிக்கை எழுதுமளவிற்கு அப்படி என்ன நடந்தது அந்த வங்கிக்கு.

“ஹிந்து” சொல்கிறமாதிரி திடீரென்றெல்லாம் அந்த வங்கி மூழ்கிப் போனதாத் தெரியவில்லை. 22.10.1906 திங்கள் அன்று வங்கி திவால் ஆனதாக அறிவிக்கக் கோரிய மனுவினை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறார் வங்கியின் தலைவர். ஆனால் சனி மாலை வரை வங்கி பொது மக்களிடமிருந்து “வைப்பு நிதி”களைப் பெற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

திங்கள் கிழமை காலை திவால் ஆனதாகக் கோரும் மனுவைத் தாக்கல் செய்கிறவருக்கு சனிக்கிழமை அன்று அந்த விவரம் தெரியாமல் போயிருக்க வாய்ப்பே இல்லை.

வழக்கறிஞரை நாடுதல், விவரங்களை சொல்லி மனுப்போடச் சொல்லி அவர் மனுதாக்கல் செய்தல் என்பதான இந்தச் சங்கிளித் தொடருக்கு எப்படிக் குறைச்சலாக வைத்துக் கொண்டாலும் ஒருமாத காலம் தேவைப் பட்டிருக்கும்.

எனில்,

22.09.1906 ஆம் தேதிக்கு ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னமே அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருக்க வேண்டும்.

எனில்,

குறைந்துபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பே வங்கியின் நிலைமை குறித்து அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

எனில்,

வங்கியை திங்கள் கிழமை மூடப் போகிறோம் என்று நன்கு தெரிந்திருந்தும் சனிக்கிழமை மாலை வரை பொது மக்களிடமிருந்து “வைப்பு நிதியினை”ப் பெற்றிருக்கிறார்கள் எவ்வளவு அயோகியத்தனமான கொள்ளையர்கள் அவர்கள்.

ஆனால் பாரதியோ அவர்களை வெறும் கொள்ளையர்களாகப் பார்க்கவில்லை. சுதேசிப் பணத்தினைக் கொள்ளை அடித்த அந்நியர்களாகப் பார்த்தான்.

“அரசாங்க வேலையில் உள்ளவர்கள் வெள்ளைக் கார வங்கிகளைலன்றி வேறு எந்த வங்கிகளிலோ அல்லது மற்ற பொதுமக்களிடமோ எந்தவிதமான பணப்பரிமாற்றமும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்றொரு விதி அந்தக் காலத்தில் இருந்தது.

03.11.1906 ஆம் தேதியிட்ட “இந்தியா” வில் பாரதி கேட்டான்,

“இவர்களெல்லாம் இப்படி நாசம் அடைவதற்கு சர்க்கார் விதியொன்று பெருந்துணையாக இருந்திருக்கிறது. அதாவது கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தர்கள் மற்ற ஜனங்களுடன் எவ்விதமான கொடுக்கல்- வாங்கலும் வைத்துக் கொள்ளக் கூடாதுஎன்றும், வெள்ளைக்காரபாங்கிகளில்தான் கொடுக்கல்- வாங்கல் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு விதி இருக்கின்றது.

இதனால் எத்தனையோ கவர்ன்மெண்ட் காலேஜ் உபாத்திமார்களும், கலெக்டராபீஸ் முதலிய கச்சேரிகளில் உள்ள நாள் எல்லாம் அரைவயிற்றுச் சோறுக்கு உழைக்கும் ஏழை ஜனக்களும் தாம் கஷ்டப்பட்டு மிச்சம் வைத்திருப்பதை இருக்கிற பிரிட்டிஷ்பாங்கிகளிலேசிறிது நல்ல மாதிரியாக இருந்த ஆர்பத் நாட் கம்பெனியிலே கொட்டிக் கொடுத்தார்கள்.

இப்போது அவர்களெல்லாம் உடைமையைத் தோற்றுவிட்டுப் பரிதபிக்கிறார்களே! இவர்களுக்கு சகாயம் செய்ய வேண்டியது கவர்ன்மெண்டாரின் கடமையல்லவா?”

ஆக, அரசு விதிகளுக்குக் கட்டுப் பட்டுத்தான் மக்கள் ஆர்பத்நாட் வங்கியில் பணம் போட்டார்கள் என்பதால் அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டென்றும் , அதிலிருந்து நழுவிவிடாமல் அவர்களுக்கு அரசாங்கம் நியாயங்கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் கோரினான்.

“ ரீட்” என்பவரை இது குறித்து விசாரிக்கும் காரியஸ்தராக அரசாங்கம் நியமித்தது. இது போதாது என்றும் அரசாங்க காரியஸ்தரோடு கடனாளிகள் சார்பிலே அவர்கள் நியமிக்கும் ஒரு காரியஸ்தரும் இணைந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் பாரதி எழுதினான்.

03. 10 1906 ஆம் “இந்தியா” வில் அவன் எழுதினான்,

“ மொத்தம் கம்பெனியில் இருக்கும் தொகையில்100-க்கு 5 கமிஷன் சர்க்கார் காரியஸ்தருக்குக் கொடுக்கப் படவேண்டும் என்று விதி இருக்கிறது, என்றபோதிலும் ,ஹைகோர்ட்டாருக்கு இஷ்டமுண்டானால்சர்க்கார் காரியஸ்தருக்கு இவ்வளவுதான் என்பதைக் குறிப்பிடலாம் என்ற விதியும் இருக்கிறது.

இந்தச் சம்பவம் அசாதாரணமானதும், ஜனங்களுக்கெல்லாம் அளவறிந்தவருத்தம் உண்டாக்கத் தக்கதும் ஆக இருப்பதால்,இவ்விஷயத்தில் ஹைகோர்ட்டார் சர்க்கார் காரியஸ்தரின் லாபத்தை இவ்வளவென்று வரையறுத்துக் கொடுப்பது அவர்களுடைய பொறுப்பாகும்,

அப்படியில்லாவிடினும் மொத்த லாபத்தை சர்க்கார் காரியஸ்தருக்கு பாதியும், கடனாளிகளால் நியமிக்கப் படும் காரியஸ்தருக்குப் பாதியும் ஆகவகுத்துக் கொடுக்க வேண்டும்”

ஏற்கனவே இழந்து நிற்கும் மக்களின் பணத்தில் 5 விழுக்காடு அரசாங்க காரியஸ்தருக்கு கொடுக்கக் கூடாது என்று வாதாடுகிறான். அதற்கான விதிகளைச் சுட்டிக் காட்டுகிறான். ஒருக்கால் அதற்கு சாத்தியம் இல்லாது போனால் 5 விழுக்காட்டையும் வெள்ளைக் காரனுக்கு கொடுக்காமல் அதில் பாதியை சுதேசிக் காரியஸ்தருக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறான்.

விக்கி பீடியா சொல்கிறது,

“when the auditors appointed bythe official assigneebegan examining Arbuthnot s accounts, they found thefirm had 2300 accounts in India with balance of RS2.75 million and about 4,000 fixed deposits with claims to amount of 25 million.

This was the biggest crash in Indian banking history, till then."

இது ஒரு புறம் நடந்துகொண்டிருக்க இழந்த மக்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்று சில நல்லவர்கள் முடிவெடுக்கிறார்கள். இதைக் கேள்விப் பட்டதும் பாரதி துள்ளிக் குதிக்கிறான். கையில்தாஅன் “இந்தியா” இருக்கிறதே, 10.11.1906 ஆம் தேதியிட்ட “இந்தியா” வில் எழுதுகிறான்,

“இந்த நிதிக்குப் போதுமான்படி பணம் வந்து குவிந்து அனேக அநாதைகளுக்கு உதவி ஏற்படும் என்று நம்புகிறோம்.

ஆர்பத்னாட் கம்பெனி சிதறிப் போனதில்நஷ்டமடையாத பிரபுக்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கஷ்டப்படும் ஜனங்களுக்கு உதவி செய்வதைத் தமதுகடமையாகப் பாவிக்க வேண்டும்”

பாரதி கோரியபடி ஒருவார கால அவகாசத்திற்குள் 45,150 ரூபாய் நன்கொடைகளாக வந்து சேர்ந்தது. ஏமாந்ததைத் திரும்பப் பெறுவதற்கான போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டே இருக்க இடைபட்ட காலத்தில் அவர்களுக்கு உதவுவது அவசியம் என்ற பட்டறிவும் ஈரமும் அவனுக்கிருந்தது.

ஊதாரித் தனமான செலவு, தாறுமாறான முதலீடு , முதலே இல்லாமல் கம்பெனியைத் துவங்கியது போன்றவையே வங்கி திவாலானதற்கு காரணமென்று ரீட் சொன்னார்.

“தன் பணத்தைச் சூதாடுகிறவனையே கோர்ட்டில் தண்டிக்கிறார்கள். அன்னியர் பணத்தைச் சூதாட்டம் போன்ற முயற்சிகளில் செலவிடுவோரை சும்மா விடுவது நியாயமாகுமா?” என்று “இந்தியா” வில் எழுதினான் பாரதி.

ஆர்பத்நாட் சிறைக்குப் போனான்.

இப்போது சுதேசி வங்கி ஒன்றின் தேவை குறித்து யோசித்தான் பாரதி. பம்பாயில் அது அப்போது சாத்தியப் பட்டிருந்தது.

இதில் பாரதியை ஈர்த்தது என்னவெனில் ஒருக்கால் சுதேசி வங்கி திவால் ஆனாலும் பணம் முழுக்க நம் மண்னிற்குள்ளேயே இருக்கும் என்பதுதான். மண்ணின் ஒரு துரும்பும் மண்ணைத் தாண்டக் கூடாது என்று அந்தக் காலத்தில் போராடியிருக்கிறார்கள். இன்றோ ஊசி பாசி உருளைக் கிழங்கு முதல் ராக்கெட் வரை சகலத்திற்கும் அந்நியனுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

“இந்திய பாங்க்” என்று வரவேண்டிய வங்கிக்கு பெயரும் வைக்கிறான்.

இதே நேரத்தில் இதே கருத்தை “இந்தியன் பேட்ரியாட்” இதழில் திரு கோவிந்த தாஸ் அவர்கள் எழுதுகிறார்,

பாரதி கொண்டாடி எழுதுகிறான். 10.11.1906 “இந்தியா” வில் எழுதினான்,

“சென்னையிலே ஓர் இந்திய பாங்க் ஸ்தாபிக்கப் பட வேண்டியதன் அவசியத் தன்மை பற்றி நாம் பல முறை பேசியிருக்கின்றோம்.

இப்போது சென்னையிலே முக்கிய தனவந்தரும் மிகுந்த செல்வாக்குடையவருமாகிய ஸ்ரீ லாட் கோவிந்ததாஸ் “இந்தியன் பேட்ரியட்” பத்திரிக்கையிலே ஒரு கடிதம் எழுதியிருப்பதில் மேற்கண்டவாறு ஒரு பாங்க் ஸ்தாபிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருப்பதை மிகவும் மகிழ்வுடன் படித்தோம்.

வெறும் வாய்ப் பேச்சுக்காரர் முயற்சியிலே ஒரு பாங்க் ஸ்தாபனமாகி விடாது.

ஆதலால்,

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்தும், அந்நிய பாங்கிகளிலே கொட்டி வைத்தும் இருக்கும் சுதேசிகள் எல்லாம் உடனே கண் விழித்து கோவிந்த தாசருக்கு கடிதங்கள் எழுதிக் காரியங்களைப் பக்குவத்திற்கு கொண்டு வர வேண்டும்”

பாரதியின் கனவு ஒரு வழியாக மெய்ப் பட்டது. 02.12.1906 அன்று “இந்தியா பாங்க்” அமைப்புக் கூட்டம் நடந்தது.

08.12.1906 “இந்தியா”வில் பாரதி எழுதினான்,

சென்னையில் ஒரு சுதேசி பாங்க் ஸ்தாபிக்கும் அவசியத்தைக் குரித்து மகா ஜன சபையிலே சிலர் கூடி ஆலோசித்ததில் ஒரு பங்கு 500 ரூபா வீதம் 4000 பங்குகள் சேர்த்து, 20 லட்சம் ரூபாய் மூலதனம் உண்டாக்க திவான் பகதூர் ராஜரத்தின முதலியாரும், திவான் பகதூர் ஆதி நாராயய்யாவும், மிஸ்டர் சீதாராம் செட்டியும், மிஸ்டர் அண்ணாமலை செட்டியும், மிஸ்டர் சுந்தரம் அய்யரும், மிஸ்டர் முரளி தாஸும், மிஸ்டர் நடேச அய்யரும், மிஸ்டர் முத்தையா செட்டியும், மிஸ்டர் வெங்கடாசலம் செட்டியும், - ஒரு கமிட்டியாய் நியமிக்கப் பட்டார்கள்.

மிஸ்டர் சுந்தர அய்யரும், மிஸ்டர் முத்தையா செட்டியாரும்., மிஸ்டர்சீனிவாச அய்யரும் தற்காலத்துக்கு கமிட்டிக் காரிய தரிசிகளாய் நியமிக்கப் பட்டார்கள்.”

ஆக, தமிழ் மண்ணில் முதல் சுதேசி வங்கி உருவானதில் பாரதியின் பங்கு மகத்தானது.

ஒன்று சொல்ல வேண்டும்,

அது கோவிந்த தாஸன்கள் காலம். சுதேசி வங்கிகளைத் தோற்றுவித்தார்கள்.
இது ”கோவிந்த வாசன்”கள் காலம். அசந்தால் சுதேசி வங்கிகளை முற்றாய் முழுசாய் அந்நியர்களுக்கு விற்று விடுவார்கள்.

கொஞ்சம் விழிப்போடே இருப்போம்.

கட்டுரைக்கு பெரிதும் உதவியவை;

1)சீனி.விசுவநாதன் எழுதிப் பதிப்பித்த “ மகாகவி பாரதி வரலாறு”
2)விக்கி பீடியா இணைய தளம்
3)23.10.1906 ஆன் நாளிட்ட ஹிந்து நாளிதழ்
4) www.arbuthnot.org/crash_of_arbuthnot.html








Wednesday, September 5, 2012

இத்தனைக்குப் பிறகும்


வகுப்புகள்... 
மாலை வகுப்புகள்... 
சிறப்பு  வகுப்புகள்...

இத்தனைக்குப் பிறகும் 
தேர்வறையில் 
திருட்டுத் தனமாய் 
நோட்சைப் பார்க்கிறான் 

நோட்சைப் பிடுங்கி... 
முதுகில் 
இரண்டு பலமாய் போட்டு 

கோபம் நிழலாய் 
கூடவே தொடர 
குறுக்கும் நெடுக்குமாய் 
அறையில் நடந்து 

"பதினேழு வருஷ அனுபவம் ...
தப்ப முடியுமா?"
பெருமை கொப்பளிக்க 
நாற்காலி சேர்ந்து 

பற்றிய நோட்சைப் புரட்டினேன் 
வினாத் தாளுக்கு 
விடை தயாரிக்க  

Sunday, September 2, 2012

அம்மாவின் ஞானம்

அம்மா
அப்பா
அப்பாயி
அண்ணன்கள்
அண்ணிகள்
குழந்தைகள்
அப்புறம் நான்

கொஞ்சம் பெரிசுதான்
விடுங்கள்

குடும்ப அட்டையில்
 கடைசிப்பக்க விளிம்புவரை
பெயர்கள் நீண்டாலும்

கழிவறை ஒன்றுதான்
ஆனாலும்

நகராட்சிக் கழிவறை
வரிசைதான் காலையில்

எழுப்பொலி வைத்துப் போனதுண்டு
நிம்மதியாய்க் கழிக்க

எழுப்பொலி
எல்லா அறைகளிலும் ஒலிக்க
புரிந்தது

வதந்திபோல் பரவியது
நுணுக்கம்

பற்கள் கடித்து
கால்கள் நெருக்கி

அவசர அவஸ்தையில்
கண்கள் செருக

கழிவறை வாளியில்
நீர் விழும் சத்தம்

ஏ. ஆர். ரஹ்மானாவது
இளையராஜாவாவது

வலிக்கும் அவஸ்தை
இடம் கிடைத்த நிம்மதி

தாள் போடும் வேளை
சிணுங்கியது தொலைபேசி

“கொஞ்சம்
யாருன்னு பாரேன்”

குபுக்கென கொப்பளித்தது
அம்மாவின் ஞானம்

“எந்தக் கடங்காரனோ
ஆமா
இப்ப நீ
எந்த ஊர்ல இருக்கிறதா
சொல்லித் தொலைய?”

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...