Friday, September 7, 2018

இந்த வீதியிலே புகுந்திருக்கிற சிவப்பு சமுத்திரமும் ...




ஒன்று தெற்கிலும் ஒன்று வடக்கிலுமாக நேற்று இரண்டு பேரணிகள்
இரண்டின் நோக்கங்களுக்கும் இடையில் அம்பானியின் அசையா சொத்துக்கள் முழுவதையும் அடுக்கி வைத்துவிட முடியும்
ஒன்று ஒரு கட்சியில் ஒரு மனிதரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சியின் தலைமையை நிர்ப்பந்திப்பதற்காக காசு கொடுத்துத் திரட்டப்பட்ட சிறு கூட்டம்
மற்றொன்று தேசத்தின் எல்லாத் திக்குகளிலும் இருந்து உழைக்கும் மற்றும் உழவுத்தொழில் செய்யும் திரளின் உரிமைக்காக செங்கொடியோடு திரண்ட எளிய ஜனங்களின் மாபெரும் பேரணி
மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று சென்னையில் நடந்த பேரணி அனைத்து மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்ததாக்க் கூறியுள்ளார்
தில்லியில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான CPI(M) கட்சியைச் சார்ந்த CITU மற்றும் AIKS கையிலே தங்களது அமைப்புகளின் பதாகைகளை ஏந்தியபடி சத்தியமும் ஆவேசமும் கலந்த கோஷங்களோடு நாடாளுமன்ற வீதியைக் குலுக்கினர்.


அவர்கள் கோரிக்கை யாரோ ஒரு தனிப்பட்ட மனிதன் சார்ந்தது அல்ல.
சேற்றிலும் ஆலைகளிலும் காடுகளிலும் வெய்யில் சாலைகளிலும் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன கோடானு கோடி உழைக்கும் திரளின் குறைந்தபட்ச வாழ்வுரிமைக்கான கோரிக்கைகளை காற்றைக் கிழித்து முழக்கங்களாக்கி வெற்றுக் கால்களோடு வீதியை அளந்தக் கூட்டம்.
கீழ்வரும் அவர்களது கோரிக்கைகள் அநியாயமானவை என்று யார் கூறினாலும் அவர்களை அடுத்தமுறை சந்திக்காமலே செத்துவிட வேண்டும் என்று நினைப்பவன்
1) கவுரவமான வேலை
2) நியாயமான கூலி
3) தரிசுநிலப் பகிர்வு
4) விலைபொருட்களுக்கான நியாயமான விலை
5) விவசாயக் கடன் தள்ளுபடி
6) கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி
7) சமூகப் பாதுகாப்பு
8) எல்லோருக்கும் கல்வி
9) சீரான சுகாதார வசதி
10) தரகை, தனியார் மயத்தை ஒழிப்பது
11) தொழிலாளார் நலச் சட்டங்களைப் பாதுகாப்பது



என்ன கேட்கிறார்கள்?
விவசாயக் கூலித் தொழிலாளிகளும் உழைக்கும் திரளும் பணிபுரியும் இடங்களில் அவர்களை சக மனிதனாக மதிக்கிற சூழலைக் கேட்கிறார்கள். இப்படிக் கேட்கிற சூழலை அவர்களுக்கு இன்னமும் வைத்திருப்பதற்காகவே இந்தச் சமூகம் சன்னமான அளவிற்கேனும் நாசமாகப் போக வேண்டும்.
பதினேழு வயதுக் குழந்தை தன் வீட்டில், ஆலையில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் வேலை பார்க்கும் ஒரு 50 வயது மனிதனை ஒருமையில் அழைக்கும் நிலை இன்றைக்கும் இருக்கிறதே.
பத்தாவது பதினைந்தாவது மாடிக்கு சாரத்தில் நின்றபடி கீழிருந்து தம்மை நோக்கி எறியப்படும் ஜல்லித் தட்டை கலவைத் தட்டை பிடித்து தமக்கும் மேலே சாரத்தில் நிற்பவருக்கு எறிந்து பணிபுரிவது எத்தனைப் பாதுகாப்பற்றது
அந்த ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்பு என் ஊதியப் பாதுகாப்பேனும் உண்டா?
அவர்களது ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானது மட்டுமல்ல நீண்டகாலக் கோரிக்கைகளும் ஆகும்.
இந்தக் கோரிக்கைகளை அவர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்குத்தான் லட்சம் பேர் நேற்று தில்லியிலே திரண்டார்கள்.
மாண்புமிகு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அந்த மய்ய அரசின் ஒரு முக்கியமான பிரதிநிதி.
ஆகவே அது அவரது கவனத்திற்காகவும் நடந்த பேரணிதான்.
ஆனால் அவரோ ஒரு தனி மனிதனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு மனிதனுக்காக நடந்த மிகச் சிறிய ஊர்வலத்தில் கரைந்துபோய் சிலாகித்த நிலையில் இருக்கிறார்
இவர்கள் இப்படி இருப்பார்கள் என்று தெரிந்ததால்தான், இவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை உதாசீனப் படுத்துவார்கள் என்று உணர்ந்ததால்தான் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு முழங்கினார்கள்,
“சூழ்கிற கருப்பு மேகங்களும் இந்த வீதியிலே புகுந்திருக்கிற சிவப்பு சமுத்திரமும் மோடி அரசை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும்”
இது நிச்சயம் நடக்கும் மாண்புமிகு பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே.
#சாமங்கவிய 56 நிமிடங்கள்
06.09.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...