Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Tuesday, April 23, 2024

காந்தியின் கடிதம்

 26.07.1947

அநேகமாக அது ஒரு சனிக்கிழமை
இன்னும் 19 நாட்கள்தான் விடுதலைக்கு
துப்புறவு தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த காந்தி அவ்வளவு பரபரப்பாக இருக்கிறார்
இந்திய பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் முந்தைய நாள் கூட்டாக வெளியிட்டிருந்த அறிக்கையை பத்திரிக்கைகளில் வாசிக்கிறார்
நிறைய சந்திப்புகள்
நிறைய உரையாடுகிறார்
வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையின் நல்லவை அல்லவைகள் குறித்து உரையாடுகிறார்
இந்திய தேசிய காங்கிரஸ் செய்ய வேண்டியவை குறித்து உரையாடுகிறார்
இத்தனை கடுமையான பணிகளுக்கும் இடையிலும் இளைஞர் ஒருவருக்கு கடிதம் எழுதுகிறார்
”நீங்கள் எடுத்துப்போன புத்தகத்தை இன்னும் திருப்பித் தரவில்லை. அது இந்த நூலகத்திற்குரியது. உடனடியாகத் திருப்புங்கள்”

Friday, February 9, 2024

இந்த அன்பிற்குரிய தோழர்கள் பட்டியல் என்பது என்னையும் சேர்த்துதான்

 
1929

மீரட் சிறை

மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தனித்தனிக் கொட்டடிகளில் அடைக்கப்படுகிறார்கள்

பிரிட்டிஷ் பேரரசரின் ஆட்சியை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த சதி செய்ததாக வழக்கு

இதற்கு அப்போது பெயர் சதி

இப்போது தேசப்பற்று

தேசத்திற்கு உண்மையற்றவர்களின் ஆட்சியில் தேசப்பற்றுக்கு தேசத் துரோகம் அல்லது சதி என்றே எப்போதும் பெயர்

கொட்டடியில் இருந்து வெளியே அழைத்து வரப்படும்போது சந்தித்துக்கொள்ளும் சிறிய சிறிய வாய்ப்புகளில் தோழர்கள் உரையாடிக் கொள்கிறார்கள்

நேரம் குறைவு

சுற்றிக் காவலர்கள்

அப்படியாக ஒரு சந்திப்பில் டாக்டர் அதிகாரியும் தோழர் முசாபரும் சந்தித்துக் கொண்ட அந்தச் சின்ன இடைவெளியில்

கான்பூர் சதிவழக்கில் நீதிமன்றத்தை அரசியல் களமாக தன்னால் மாற்ற முடியாமல் போனதற்காக வருந்திய தோழர் முசாபர்

மீரட் வழக்கில் நீதிமன்றத்தை பிரச்சாரக் களமாக மாற்ரினால் என்ன எனக் கேட்க

தோழர் அதிகாரி சரி என்று சொல்ல

அதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன

நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் தனித்தனி வாக்குமூலங்கள் கொடுப்பது

பொதுவான வாக்குமூலங்கள் கொடுப்பது

முன்கூட்டியே கற்பது என

வாய்த்த சின்னச் சின்ன சந்திப்புகளில் தோழர்கள் முடிவெடுக்கிறார்கள்

செய்து காட்டுகிறார்கள்

சிறைகளை,

நீதிமன்றங்களை,

தூக்குமேடைகளை 

அரசியல் களமாக்கி இருக்கிறார்கள்

சிறையில் இருக்கிறார்கள்

தனித் தனிக் கொட்டடி

கற்றுக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்கிறார்கள்

அன்பிற்குரிய தோழர்களே,

இந்த அன்பிற்குரிய தோழர்கள் பட்டியல் என்பது என்னையும் சேர்த்துதான்

சுயபரிசீலனை செய்வோம்

பின் குறிப்பு: கையில்பாரதி புத்தகாலயம் வெளியீடான தோழர் முசாபர் எழுதிய “மீரட் சதிவழக்கு” என்ற குறு நூல்

Sunday, January 28, 2024

வதந்திகளை கருத்தியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்த நூல் சாட்சி

 
கீழவெண்மணிக்கு சென்று அந்தப் போராட்டக் களத்தின் எஞ்சிய சாட்சியாக இருக்கும் தோழர் கோ.பழனிவேல் அவர்களை ஆளுநர் சந்திக்க இருப்பதாக செய்திகள் கசிவதையும்

தோழர் பழனிவேல் ஆளுனரைச் சந்திக்க தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள செய்தியையும் 28.01.2024 அன்று காலை நான் வாசித்ததும்



”மரிச்ஜாப்பி” நூலை எழுதிய தோழர் ஹரிலால் நாத் அவர்களின் முன்னுரையையும்

அதன் தமிழ் பெயர்ப்பாளர் தோழர் ஞா.சதீஸ்வரன் அவர்களின் முன்னுரையும்





இன்று இரவு வாசித்ததும் மிகவும் தற்செயலாகத்தான்

இந்த இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதையும், 

இன்றைய தீக்கதிரில் வந்த செய்தியை மிக எச்சரிக்கையோடு இடதுசாரிகள் அணுக வேண்டும் என்று இந்த இரண்டு முன்னுரைகளும் நமக்கு தருவதையும் என்னால் உணர முடிகிறது

‘மரிச்ஜாப்பி’ தமிழில் வருவதற்கு திருவாரூரில் நடந்த ஒரு படிப்பு வட்டத்தில் நடந்த ஒரு உரையாடலில் ஒரு குழந்தைக் கேட்ட ஒரு கேள்விதான் காரணமென்பது சில கோரிக்கைகளை நம்மிடம் வைக்கிறது

திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு படிப்பு வட்டத்தை நமது பிள்ளைகள் நடத்தி வருகிறார்கள்

ஒரு நாள் “கீழவெண்மணி” குறித்து உரையாடல் நடக்கிறது

அப்போது ஒரு குழந்தை “மரிச்ஜாப்பி”யில் லட்சக்கணக்கான அகதிகளை அன்றைய இடதுசாரி அரசாங்கம் கொன்று அழித்ததாமே என்ற ஒரு கேள்வியை வைக்கிறார்

அதுவரை,

அங்கிருந்தவர்களில் பலருக்கு மரிச்ஜாப்பி என்றால் என்னவென்றே தெரியாது

ஆக அந்தக் கேள்விதான் தோழர் சத்தீஸ்வரனை இதுநோக்கி உந்துகிறது

அந்தக் கேள்விதான் இந்த நூல் தமிழில் வருவதற்கு காரணமாக அமைகிறது

மாநிலத்தில் மம்தா அரசங்கமும்,

ஒன்றியத்தில் பாஜக அரசாங்கமும் வந்த பிறகு

மேற்கு வங்கத்தில் மரிச்ஜாப்பியில் அகதிகளை கொன்று அழித்ததாக குவியல் குவியலாக புனைந்து எழுதப்பட்ட வதந்திகள்தான் தோழர் ஹரிலால் நாத் அவர்களை இந்த நூலை எழுதத் தூண்டியது

ஆக வதந்திகள் இந்த மூல நூலையும்

வதந்திகளைக் குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்வி நூலின் தமிழாக்கத்தையும் கொண்டு வந்திருக்கிறது

வதந்திகளை கருத்தியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது?

என்பதற்கு இந்த நூல் சாட்சி

உரையாடல்களை, கேள்விகளை ஊக்கப்படுத்துவோம்

ரவி கீழவெண்மணிக்குப் போக நினைப்பது என்பதே நாம் எச்சரிக்கையோடு அதன் வரலாற்றினை இன்னும் பேரதிகமாக உரத்து பேச வேண்டும் என்பதையும்  நமக்கு உணர்த்துகிறது 

Wednesday, January 17, 2024

ஒரு வழியாக எமது பதிப்பகத்தின் வழி என் எழுத்தும்

 

இதுவரை என் புத்தகம் எதுவும் பாரதி புத்தகாலயம் வழி வரவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு
இன்னும் கொஞ்சம் எழுதக் கற்றுக் கொண்டுதான் தோழர் சிராஜிடம் வம்பு செய்ய வேண்டும்
கொஞ்சம் காலம் ஆகும் அதற்கு
அந்தக் குறையை
தோழர் மால்கம் எழுதிய “பகை நன்று” மற்றும்
தோழர் Theni Sundar அவர்களின் ”மாணவர் மனசு”
ஆகிய இரண்டு பாரதி வெளியீடுகளுக்கும் முன்னுரை எழுதி தீர்த்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு வழியாக எமது பதிப்பகத்தின் வழி என் எழுத்தும்

Friday, December 29, 2023

எங்கள் வீட்டின் முதல் பெண்ணெழுத்து

ரொம்ப நாளாச்சே புத்தகம் கொடுத்து


புக்பேருக்கு ஏதும் இருக்கா எட்வின்?

நாளாச்சுதான்

தரவேண்டும்தான்

ஆனால் மூன்று மாதங்களாகும்

புக்பேருக்கு?

பாப்பா

"அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது"

கொண்டு வந்திருக்கா

தலைப்பே மிரட்டுதில்ல

எங்கள் வீட்டின் முதல் பெண்ணெழுத்து

விழா எடுக்க வேண்டும்

15 வருஷமா எங்கள்மீது கல்லெறிந்து கொண்டே இருக்கிறார்கள்

கையிலிருப்பது கொண்டு தடுத்துக் கொண்டே இருக்கிறோம்

வாளும் கேடயமுமாய்

"மரிச்ஜாப்பி" பாரதி புத்தகாலயம் மூலமாக வருகிறது

கொண்டு சேர்க்க வேண்டும்

மால்கம் "பகை நன்று" தருகிறார்

கல்வி குறித்து அக்கறைப் படுபவர்கள் அவசியம் படிக்க வேண்டும்

இதுவும் பாரதி புத்தகாலய வெளியீடுதான்

அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது

மற்றும்

பகை நன்று

இரண்டின் அட்டைகளும் அவற்றிற்காகவும் பேச வைக்கும்

தோழர் Lark Bhaskaran மிரட்டி இருக்கிறார்

தருவோம் தோழர்





Saturday, December 23, 2023

திருந்துவது தவறு என நினைக்கும் ஏரியா இது

 புத்தகங்களை ஆட்டையப் போடுவது என்பது நமக்கு அப்படிப் பிடித்தமான ஒன்று

அப்படிச் சுட்ட புத்தகங்கள் ஆயிரமாவது வீட்டில் இருக்கும்
சமீபத்தில் ஆட்டையப் போட்ட நூல் “ஆர் எஸ் எஸ் -இந்தியாவிற்கு அச்சுறுத்தல்”
சுதாவிடமிருந்து
பார்த்தால் பென்சிலில் அடிக்கோடுகள்
கடைசிப் பக்கம் வரை
என்ன சுதா?
முதல்முறை படிக்கும்போது அடிக்கோடு போட்டிடுவேன்
அப்ப அடுத்துப் படிப்பியா
ஆமாம்
அய்யோவென்று இருந்தது
ஆனாலும்
அய்யோவென்றிருந்தாலும் தொடர்ந்து ஆட்டையப் போடுவோம்தான்
திருந்துவது தவறு என நினைக்கும் ஏரியா இது

Monday, February 3, 2014

குழந்தைகளை குழந்தைகளாக… விஷ்ணுபுரம் சரவணனின் ” வாத்து ராஜா” வை முன்வைத்து


சீ…, உட்றா சனியனே…” என்றவாறு முகத்தை சுளித்தபடியே கீர்த்தனா தன்மேல் தொத்தனங்கால் போட்ட தோனியின் கால்களை தள்ளிவிட்டுக் கொண்டிருந்ததைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. சிறு வயதில் அவனது முகத்தோடு முகம் வைத்து கொஞ்சிக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தவள் எப்படி இப்படி ஆனாள்?

சின்ன வயதில் அவனுக்கு புரியாததை எல்லாம் அவனோடு அவள் பேசிக் கொண்டிருந்ததை அவளுக்கு நினைவுபடுத்தியபோது தான் பேசியதெல்லாம் தோனிக்கு புரிந்ததாகவும் அவன் மறுமொழித்ததும் வினவியவை அனைத்தும் தனக்குப் புரிந்ததாகவும் அவள் சொன்னாள்.

ஆக, விலங்குகள் மற்றும் பறவைகளுடனான குழந்தைகளின் உரையாடல் அர்த்தம் செறிந்ததாக இருக்கிறது. குழந்தைகளின் மொழி அணிலுக்கும் நாய்க்கும் காக்கைகளுக்கும் கோழிகளுக்கும் புரிகிறது. அவைகளின் மொழியும் குழந்தைகளுக்கு பிடிபடுகிறது. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் இது ஏன் மாறிப் போகிறது?

பள்ளிக்கூடங்களும், வீட்டுப் பாடங்களும், தொடர்ந்த தேர்வுகளும், மதிபெண்கள் குறித்த மதிப்பீடுகளும்…… குழந்தைகளை பறவைகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் அன்னியப் படுத்தும் பெருங்காரணிகளாக மாறிப் போயுள்ளன.

குழந்தைகளுக்கான படைப்பிலக்கியங்கள் குறிப்பாக குழந்தைகளுக்கான கதைகள் மட்டுமே குழந்தைகளையும் விலங்குகளையும், குழந்தைகளையும் பறவைகளையும் மீண்டும் ஒரு புள்ளியில் கொண்டு போய் நிறுத்த முடியும். ஆனால் அதற்கான முயற்சி தேவையான அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே சொல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கென்று ஒரு மொழி இருக்கிறது, அவர்களுக்கென்று ஒரு சூழல் இருக்கிறது. அவர்களது தேடலும் பயணமும் அலாதியானது. இரண்டு மூன்று விளக்கமாற்றுக் குச்சிகளோ, உடைந்த ஓட்டாஞ்சில்லோ போதும் அவர்களை மகிழ்வுறச் செய்ய. ஒன்றுக்கும் உதவாது என்று நாம் ஒதுக்கித் தூரப் போடும் அந்த சிறு ஓட்டாஞ்சில் காணாமல் போவது ஒன்றே போதும் அவர்களது கண்களை உடையச் செய்ய.
அவர்களது தேடல் என்பது நம்மைப் பொறுத்தவரை ஒன்றுக்கும் உதவாத ஒன்றாக இருக்கலாம். உதாரணமாக விரல் நுழைத்து வாய்வைத்து உள்ளிழுத்து உடைந்த பலூன் துண்டுகளிலிருந்து உருவாக்கப் படும் முட்டைகள் அவர்களை சொர்க்கத்திற்கே இட்டுச் செல்லும்.

மென்மையான அவர்கள் தங்களது இலக்கு நோக்கிய பயணத்தில் முரட்டுத் தனமாய் தோன்றும் நம் யாரைவிடவும் முரட்டுத்தனமானவர்கள். பாறைபோன்று மென்மையானவர்கள். பூ போன்று முரடானவர்கள்.
குழந்தைகளிடம் போய் சேரவேண்டுமானால் ஒருவன் லூசாக வேண்டும் என்று குழந்தைகளுக்கான கலைஞர் வேலு சரவணன் ஒருமுறை சொன்னார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பது உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

குழந்தைகளோடு குழந்தைகளாய் பயணப்படுபவர்களால் மட்டுமே குழந்தைகளைக் கவரக்கூடிய இலக்கியங்களைத் தர முடியும்.
எனக்குத் தெரிய அத்தகைய ஒரு சிலரில் விஷ்ணுபுரம் சரவணனும் நிச்சயமாய் ஒருவர். பள்ளி பள்ளியாய் கைக்காசை செலவளித்துப் போய் குழந்தைகளுக்கு கதை சொல்லும் கதை சொல்லிகளில் ஒருவர்.

ஒரு மாதம் விளையாட பத்துக் குழந்தைகள் கிடைக்கும். ஆனால் ஆயுளில் ஒரு வருடத்தை அதற்காக தாரை வார்க்க வேண்டும் என்றால் நூறு குழந்தைகளைக் கொடுத்துவிட்டு பத்து ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறக் கூடியவர்.

அவர் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் நூல் “ வாத்து ராஜா”. எல்லோரும் இதை குழந்தைகளுக்கான நாவல் என்று சொல்கிறார்கள். ஆனால் இது குழந்தைகளுக்கான கதை. ஆனால் நாவலோ குறுநாவலோ அல்ல. இது ஒரு புது வடிவம். சோதித்துப் பார்த்திருக்கிறார் சரவணன்.

இந்தக் கதையை எழுதத் தூண்டிய

“ஒரு பழத்தின் உருண்டை வடிவத்தை
எங்கிருந்து கடிக்கத் துவங்க வேண்டும் என்பதற்கு
கணிதங்கள் உண்டா, தெரியவில்லை
ஒரு அணிலிடமும் பறவையிடமும்
கற்றுக் கொள்ள
இருக்கிற விஷயங்களில்
பழம் கடித்தலும் அடங்கும்”

என்கிற கல்யாண்ஜியின் கவிதை வரிகளுக்கு இந்த நூலை அர்ப்பணித்திருக்கிறார். இதுவே வித்தியாசானமாதாக இருக்கிறது. இதுவரை யாரேனும் குறிப்பிட்ட கவிதை வரிகளுக்கு தங்களது படைப்பினை அர்ப்பணித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இல்லை எனும் பட்சத்தில் அந்த வகையில் இது முதலாவதாகக் கூட இருக்கலாம்.

ஒரு ராஜாவுக்கு மூன்று மகன்கள். மிக நல்ல ராஜாவான அவர் சாகும் தருவாயில் தனது ராஜாங்கத்தை மூன்றாகப் பிரித்து மூன்று மகன்களிடத்தும் கொடுக்கிறார். நல்லாட்சி நடத்த வேண்டும், தன் ஆளுகையின் கீழ் இருந்த பொழுது மக்கள் எப்படி எந்தக் குறையுமின்றி இருந்தார்களோ அப்படியே அவர்கள் காலத்திலும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு செத்துப் போகிறார்.

மூத்தவர்கள் தேசிங்கும் கலிங்கனும் தங்களது தந்தை சொன்னது போல நல்லாட்சியை நடத்துகிறார்கள். ஆனால் இளையவன் வானவன் மட்டும் தாந்தோன்றித்தனமாக ஆட்சியை நடத்துகிறான். அறிவார்ந்த அமைச்சர்கள் சான்றோர்கள் யார் சொல்வதையும் செவி மடுக்காமல் தன் இஷ்டத்திற்கு ஆட்சி செய்கிறான். அவனது கேலிக்குரிய நடத்தையை மனதில் கொண்டு அவனை அனைவரும் வாத்து ராஜா என்றழைக்கிறார்கள்.

ஒருநாள் ராஜா தர்பாருக்கு வந்துகொண்ருந்தபோது துதி பாடிக் கொண்டிருந்த சம்பு துதியை முடிக்கும் தருவாயில் வாய் தவறி “மாமன்னர் வாத்து ராஜா வருகிறார் “ என்று சொல்லிவிட்டான். ராஜாவுக்கு கோவம் வரும் என்பதும் தன் தலை தப்பாது என்பதும் தெரியுமென்பதால் சம்பு குடும்பத்தோடு தலைமறைவாகிறான். நாட்டில் உள்ள வாத்துக்களை எல்லாம் கொல்ல உத்தரவிடுகிறான் ராஜா. வாத்துகள் அழிக்கப் படுகின்றன.

சுந்தரி என்ற குழந்தை தனது இரு வாத்துக்களையும் தனது புத்திசாலித் தனத்தினால் காப்பாற்றுகிறாள். தனது இரு வாத்துகளின் சிறகுகள் மேல் முட்டை முட்டையாக மையினால் வரைகிறாள். அடுத்தநாள் சேவகர்கள் சோதிக்க வந்த போது இவை வாத்தல்ல என்று நிறுவுகிறாள். நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவிக்கும் சேவகர்கள் இவை வாத்துகள் இல்லை எனில் இவற்றின் முட்டைகளைக் காட்ட வேண்டும் என்றும் இல்லாது போனால் சிறையில் அடைத்து விடுவோம் என்றும் சொல்லிவிட்டு செல்கிறார்கள்.

இத்தோடு கதையை நிறுத்திய அமுதாவின் பாட்டி ஊருக்குப் போய் விடுகிறார். சுந்தரிக்கும் அவளது வாத்துகளுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை அறிய கதை சொல்லிகளைத் தேடி அமுதாவும் அவளது தோழி கீர்த்தனாவும் மேற்கொள்ளும் பயணம்தான் கதை.
கதை என்று பார்த்தால் அவ்வளவுதான். ஒரு நான்கு பக்கத்தில் சிறுகதையாக முடிந்துவிடும். ஆனால் அந்தக் குழந்தைகளின் பயணத்தை இவர் நீட்டிச் செல்கிற அழகு இருக்கிறது பாருங்கள் அதில்தான் சரவணன் வெளிப்படுகிறார்.

இந்தக் கதை அல்ல நம்மை அவரை நோக்கி உந்தித் தள்ளுவது. அதைக் கையாண்டிருக்கக் கூடிய விதம் நம்மை ஈர்க்கிறது. அதில் உள்ள சொற்கள் , விளையாட்டுகள் பொருட்கள் எல்லாம் குழந்தைகளினுடையவை.

”வேப்பப் பழத் தோலுக்குள்ள குச்சியை நுழைத்து எதிரில் வருகிற பையன்களை அடிக்கிற விளையாட்டுல அமுதாவை யாரும் ஜெயிக்க முடியாது” இப்படித்தான் இந்த நூலின் ஆரம்பத்தில் அமுதா அறிமுகமாகிறாள்.

ஐம்பது வயதாகும் நான் சிறுவனாக இருந்தபோது விளையாடிய விளையாட்டு இது. இப்போது வீடியோ கேம்சும் இன்னபிற விளையாட்டுகளாலும் முற்றாய் களவாடப் பட்டு உலகமயத்தின் பெருங்குடலுக்குள் போன விளையாட்டு. இப்படி தொலைந்துபோன மண்சார்ந்த தொன்மமான விளையாட்டுகளை மீண்டும் குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கிற கதை உத்தியை சரவணன் அழகாக செய்திருக்கிறார்.

குழந்தைகளுக்கான கதை என்றபோதிலும் ஆழமான அரசியலை, ஆள்பவர்களின் கோமாளித்தனத்தை, அம்பலப் படுத்தவும் அவர் தவறவில்லை.

அந்த ஊரில் அந்த ஆண்டு நிறைய மழை பெய்கிறது. ஆகவே நிறைய நெல் விளைகிறது. மகிழ்ந்து போன மக்கள் தெய்வத்துக்கு விழா எடுத்து தங்களது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறார்கள். அரசனையும் அழைக்கிறார்கள். அதற்கு ராஜா சொல்கிறான்,

“நிறைய நெல் விளைஞ்சது என்றால் அதை மீண்டும் வயலிலேயே போடவேண்டியதுதானே. அதை ஏன் அறுவடை செஞ்சீங்க”

பொதுவாகவே ராஜாக்கள் என்றால் ஏதோ மக்கள் காவலர்கள், புத்திசாளிகள் என்பதுமாதிரி கல்வி அவர்களிடம் கல்வி கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை உடைத்து இப்படிப் பட்ட ராஜாக்களும் இருப்பார்கள் என்பதை ருசிக்க ருசிக்க படிக்கத் தருகிறார் சரவணன். இதை பள்ளிக்கூடத்து ஆசிரியர்களால் செய்ய இயலாது. இது மாதிரி நூலாசிரியர்கள்தான் செய்ய வேண்டும். அதை சரியாய் செய்திருக்கிறார் சரவணன்.

இந்தக் கதையில் மிகச் சுவாசியமான இடம் ஒன்றுண்டு. துதி பாடும் சம்பு அவையில் “ மாமன்னர் வாத்து ராஜா வருகிறார்… / பராக்.. பராக் / என்று வாய்தவறி பாடியவுடன் வானவன் ராஜா திகைத்து நிற்கிறான். மக்கள் அதிர்ச்சியியில் அப்படியே உறைந்து போய் இருக்கிறார்கள். சம்புவோ பயத்தின் விளிம்பு தாண்டி நிற்கிறான். ஆனால் குழந்தைகளோ மகிழ்ச்சியின் உச்சியில் ஹே.. ஹே..வாத்து ராஜா… வாத்து ராஜா… என்று குதூகலிக்கின்றனர். பெற்றோர்கள் பயத்தில் குழந்தைகளின் வாய் பொத்துகின்றனர். அந்த நேரம் பார்த்து ராஜாவுக்கு பரிசளிப்பதற்காக கொண்டு வந்திருந்த வாத்துக்கள் க்வாக்… க்வாக் என்று கத்த குழந்தைகள் மீண்டும் ஹே… ஹே.. வாத்து ராஜா என்று குதூகலிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் நிஜக் குழந்தைகள். இதுதான் குழந்தைகளின் உலகம். குழந்தைகளை மேன்மைப் படுத்துகிறேன் , அறிவாளிகளாகக் காட்டுகிறேன் என்று அவர்களை பொம்மைகளைப் போல் சித்தரிக்கும் இந்தக் கால கட்டத்தில் குழந்தைகளை குழந்தைகளாக காட்டியிருக்கிறார் சரவணன்.

”டம்
டம்
டம்
டம் /”
தண்டோரா இசையின் ஓசை நயத்தை மிக அழகாக பதிந்து தந்திருக்கிறார். தண்டோரா முரசு போன்றவற்றை எல்லாம் சிறுவர் கதைகளில்தான் இனி பார்க்க முடியும்.

அழிப்பதற்காக வாத்துக்களைத் தேடி வரும் அரண்மனை ஊழியர்களிடம் சுந்தரி இவை வாத்துக்கள் இல்லை என்றவுடன்,

“இது வாத்து இல்லை என்றால் என்ன.பார்ப்பதற்கு வாத்து மாதிரியே இருப்பதான் கொன்று போடுவோம்” என்று அவர்கள் சொல்வது “போல” களுக்கு இந்தக் கதை காலத்திலேயே இருந்த மரியாதையை சொல்கிறது.

கதையின் முடிவைத் தெரிந்து கொள்வதற்காய் அமுதாவோடும் கீர்த்தனாவோடும் நம்மையும் ஓட விடுகிறார் பாருங்கள்… மனிதர் விரட்டி ஜெயிக்கிறார்.

”போல” குழந்தைகள் கதைகள் பெருகி வரும் காலத்தில் “வாத்து ராஜா” ஒரு நிஜமான குழந்தைகள் கதை. முழுக்க முழுக்க ஒரு சோதனை முயற்சி. சரியாய் பரிசீலிக்கப் படும் போது சோதனை முயற்சியை செய்தவர்களின் பட்டியலில் சரவணனும் சத்தியமாய் இடம் பெறுவார்.
அடுத்த ஆண்டு எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு அந்த நேரத்தில் பசையோடிருப்பின் இந்த நூலை வாங்கித் தருவதாக உள்ளேன்.

நூலின் பெயர்:  “வாத்து ராஜா “
ஆசிரியர் :      விஷ்ணுபுரம் சரவணன்
பதிப்பகம்:       பாரதி புத்தகாலயம்
விலை         50 ரூபாய்

நன்றி : காக்கைச் சிறகினிலே









Tuesday, January 29, 2013

வறண்ட குளத்திலும் கவிதை எடுக்கும் வைகறை





“ நிலாவை உடைத்த கல்” கவிதை நூலை முன் வைத்து...


கடந்த ஒரு வார காலமாக எதற்குமே ஒத்துழைக்க மறுக்கிறது உடல்.

“பயணம் தவிர். ஓய்வெடு,”  என்கிறார் மருத்துவர்.

“எனக்கப்புறமும் நாலு வருஷ சர்வீஸ் இருக்கு. இப்படி இருந்தா எப்படி? ஓய்வெடுத்து உடம்பைக் கவனி,” என்று உதைக்காத குறையாக கடிந்து கொள்கிறார் தலைமை ஆசிரியர்.

வேறு வழியில்லை. கட்டிலில் தலையணையை சுவரோரமாய் சாய்த்துப் போட்டு சாய்ந்து அமர்ந்தபடி வாசிப்பிற்காக வரிசைகட்டி நிற்கும் நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

தோழர் மோகனா அவர்கள் இரு சுமை நூல்களை கருணையோடு புத்தாண்டிற்கு பரிசளித்திருக்கிறார்கள். அந்தக் குவியலிலிருந்து தோழன் யூமா வாசுகி மிக அருமையாக மொழிபெயர்த்துள்ள “கருப்பழகன்” என்ற நாவலின் 29 வது அத்தியாயத்திற்குள் பயணித்துக் கொண்டிருக்கும்போதுதான் மேல்வீட்டு பாட்டி இன்றைய தபால்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

இரண்டு நூல்கள், மூன்று சிற்றிதழ்கள், கொஞ்சம் தபால்கள். அந்த இரண்டு நூல்களுள் ஒன்று தம்பி வைகறை அனுப்பியிருந்த அவரது “ நிலாவை உடைத்த கல்”

என்னமோ தெரியவில்லை, யூமாவின் நூலை ஓரம் மடக்கி வைத்துவிட்டு, தம்பி வைகறை அனுப்பியிருந்த “ நிலாவை உடைத்த கல்” கவிதை நூலை புரட்ட ஆரம்பித்தேன்.

தனது கவிதைகளைப் பற்றி வைகறை சொல்கிறார்,

“என் கவிதைகள் உங்களுக்கு
பெரிதாய் ஏதும்
கொண்டு வரவில்லை
அதிக பட்சமாய் கொடுக்கலாம்
ஒரு புன்னகையை
அல்லது
ஒரு துளி கண்ணீரை”

ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன், ஒரு நல்ல கவிதை இதை செய்தால் போதாதா? ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் எல்லாம் தேவை இல்லைதான் வைகறைக்கு.

புன்னகையையும் கண்ணீரையும் தாண்டி அப்பழுக்கில்லாத, வாசனைத் திரவியம் ஏதும் அடிக்காமலே மணக்கும் குழந்தைமையை இவர் கூடை கூடையாய் கொண்டு வந்து கொட்டுகிறார். அது ஒன்றிற்காகவே இவரைக் கொண்டாடலாம்.

தனக்கேற்பட்ட அல்லது தான் கண்டுணர்ந்த ஏதோ ஒன்றின் குதூகலத்தை,எள்ளலை, வெட்கத்தை, கோவத்தை, ஏக்கத்தை, தவிப்பை, ஆதங்கத்தை, ஆவேசத்தை,வலியை, வெறுமையை, முழுமையை, அன்பை, காதலை, காமத்தை வாசகனுக்கு கடத்திக் கொடுக்குமானால் அது கவிதை. அதுவே கொஞ்சம் அழகியலோடு வருமென்றால் அது ஆஹா கவிதை.

வாசித்து முடித்துவிட்டு இன்னுமொருமுறை வாசித்தேன் ஏதேனும் “போல கவிதைகள்” இருக்கிறதா என்று. சத்தியமாய் எதுவும் தென்படவில்லை.

பொதுவாகவே குழந்தைகள் நம்மை ஜெயிக்கவே செய்வார்கள். குழந்தைகளிடம் தோற்பவர்கள் என்னை ஜெயிக்கிறார்கள். அதை ஒத்துக் கொள்பவர்கள் எனது மரியாதைக்கு உரியவர்களாகிறார்கள். குழந்தைகளிடம் தோற்பதை சந்தோஷித்து கொண்டாடுபவர்கள் என்னை அடிமை கொள்கிறார்கள்.

வைகறை எழுதுகிறார்,

“எப்படி சிரித்தாலும்
தோற்றுப் போகிறேன்
ஏதாவதொரு குழந்தையிடம்”

குழந்தைகளிடம் வெற்றிகரமாக உறவாட ஒருவன் கோமாளியாக வேண்டும். இது நான் வேலு சரவணனிடமிருந்து கற்றது.

ஒன்று புரிகிறது, ஒரு குழந்தையைப் போல் அழகாய் சிரிக்க இன்னொரு குழந்தையால்தான் ஏலும். இப்படி குழந்தைகளிடம் இந்த இளைஞன் தோற்கும் புள்ளியில்தான் நாம் அவனிடம் தோற்று அடிமைப் படுகிறோம்.

நம் பாட்டனும், தாத்தனும், அப்பனும் பார்க்காத வறட்சியை நாம் பார்க்கிறோம். விவசாயி, விவசாயத் தொழிலாளி உயிர்குடிக்கும் இந்த வறட்சி அறுவெறுப்பு எதனெனினும் அறுவெறுப்பாய் உள்ளது. பூமிதான் இப்படி வறண்டு கிடக்கிறதென்றால், வறட்சியை சொல்லும் படைப்புகளில் பெரும்பான்மை இதைவிடவும் வறண்டே வருகின்றன.

இந்த இளைஞன் வறட்சியின் கோரத்தை எழுதுகிறான்,

“கூழாங்கற்களில்
காய்ந்து கிடக்கிறது
கோடை நதி”

சொல்லுங்கள், அபூர்வமாகத்தானே யாராவது இப்படி எழுதுகிறார்கள்.

இன்றைய நதிகளின் அவலத்தை சொல்லும்போது,

“புன்செய்
வயல்கள் மட்டுமல்ல
ஆறுகளும்தான்” என்கிறான்.

புஞ்சை பூமி என்போம், இவனோ புஞ்சை ஆறு என்கிறான். ஆக, இவனது கணக்குப்படி காவிரி புஞ்சை நதி ஆகிறது. அப்படியெனில் கங்கை நஞ்சை நதி. நதிகளில் நஞ்சை புஞ்சை என்று நம் மாதிரி கிழவர்களுக்கு ஒரு இளைஞன் கவிதை எழுதி வகுப்பெடுக்கிறான். எடுத்துக் கொண்டால் பிழைப்போம் அல்லது போகிற போக்கில் அடித்துச் செல்லப் பட்டு ஏதோ ஒரு புதரில் செறுகிச் சாவோம்.

அதே நேரத்தில் முரட்டுத்தனமாக கோடையை இவன் வெறுப்பவனாகவும் தெரியவில்லை. இயல்பாக வருகிற கோடையை இவன் ரசிக்கவே செய்கிறான். எப்போதும் நிறைந்து கிடக்கும் குளங்களை மட்டும் அல்ல, அவ்வப்போது வறளவும் வேண்டும் இவனுக்கு. குளங்களின் வயிறை சுத்தம் செய்யும் பேதி மருந்தாக கோடை இருக்க வேண்டும் இவனுக்கு.

போக வறண்ட குளத்திலும் இவனுக்கு எடுக்க ஏராளமாய் கவிதைகள் இருக்கின்றன,. வறண்ட குளம் பற்றி எழுதுகிறான்,

“ குளத்தில்
என்றோ எறிந்த கற்களை
மீட்டுத் தந்தது கோடை”

இவனுக்கு குழந்தைகளை மட்டுமல்ல, குழந்தைகளுக்குப் பிடித்த வண்ணத்துப் பூச்சி, மழை, கூழாங்கற்கள் ஆகிய அனைத்தையும் பிடித்திருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் அவற்றின் காதலனாகவே மாறிப் போகிறான்.

“நனைய மறுக்கும்
நம்மைப் பார்த்து
அழுகிறது குடை’ என்கிறான்.

குடையின் அழுகையைக் கூட உதாசீனப் படுத்தாமல் அதற்கான காரணத்தை புலனாய்ந்து அழகியலோடு வடிக்கிறான்.

வானவில்லைப் பற்றி விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் என்று யார் யாரோ என்னென்னவோ சொல்லியாகிவிட்டது. வானவில்லைக் காட்டி குழந்தைகளிடம் ஏதேதோ சொல்லி அவர்களை சலிப்பேற்றிவிட்டோம். ஆனால் வைகறை சொல்கிறான், வானம் வரைந்த குழந்தைகளின் குதூகலம் வானவில் என்று. பாருங்களேன்,

“ மழையில் நனையும்
ஒரு குழந்தையின்
எழுதிக் காட்டமுடியாத
சந்தோசங்களைத்தான்
வரைந்து காட்டுகிறது வானம்
வானவில்லாக”

“காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை
ஒட்டகங்களே போதும்”

என்பார் தணிகைச் செல்வன்.அதை இவன் வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவர் தோள் மேல் அமர்ந்து இவன் எழுதுகிறான்,

“முட்டாள்
எதற்காக பாலம்
மணலைக் கடப்பதற்கு”

தணிகை மாதிரி ஒரு அனுபவ ஆளுமையிடம் தெறிப்பது இந்த இளைஞனிடமிருந்தும் தெறிப்பது பெரும் நம்பிக்கையை நம்முள் அள்ளிவந்து போடுகிறது. நமக்கு தணிகையும் வேண்டும் வைகறையும் வேண்டும்.

ஒரு எலி வீட்டிற்குள் நுழைந்துவிட்டது. ஆளாளுக்கு கம்புகளோடு எலி வேட்டையில் இறங்குகிறார்கள். அது அங்கும் இங்கும் ஓடி ஒளிகிறது. அவசர கதியில் பொருட்கள் எடுத்தெறியப்பட்டு எலியே இலக்காகிப் போகிறது. இறுதியாய் எலி சாகிறது. அதை எறிந்து வந்தபின் சிதறிக் கிடக்கிற பொருட்களை ஒழுங்குபடுத்தும் அயர்வில் சொல்வோம் “ இந்த நாசமா போற சனியன் என்ன பாடு படுத்திவிட்டது”

இவர்கள் எலியைக் கொல்ல முடிவெடுத்துவிட்டதும் அது சமர்த்தாய் வந்து அமர்ந்து அடிபட்டு சாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எலிவேட்டையில் சிதறிக் கிடக்கும் பொருட்களைப் பார்த்ததும் வைகறை எழுதுகிறான்,

“சிதறிய பொருட்களில்
பரவிக் கிடக்கிறது
இறந்த எலியின் போராட்டம்”

இவனுக்கு எப்படி இப்படி தோன்றுகிறது? காரணம் இதுதான், இவன் கவிஞன்.

கருத்து முதல்வாதத்தை மணிக்கணக்காய் யாருக்கும் புரியாமல் பேசும் வேதாந்திகளுக்கும் பஞ்சமில்லை. கருத்து முதல்வாதத்திற்கு எதிராய் தர்க்கம் செய்கிறோம் என்று வறண்டு கறைபவர்களும் ஏராளம். வைகறை கருத்து முதல்வாதத்தை எவ்வளவு லாவகமாக எதிர் கொள்கிறான் பாருங்கள்,

“அவனது
முகம் மலர
தியானமும் வேண்டாம்
உபதேசமும் வேண்டாம்
யாராவது கொடுங்கள்
ஒரு பிடி சோறு”

எப்படி கன்னத்தில் அறைந்து எதார்த்தத்தை சொல்கிறது இந்தக் கவிதை.

”பட்ட மரம்
ஒற்றைக் குயில்
கிளையெல்லாம் இசை”

எப்படி ஒரு கவிதை. இதுவே காடெல்லாம் இசை என்று வந்திருப்பின் இன்னும் அழுத்தம் கூடியிருக்கும்

எனக்குத் தெரிய நான் சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் ஒரே புத்தகத்தில் இத்தனைக் கவிதைகளைக் காணக் கிடைக்கவில்லை.

நிறைய நம்புகிறேன், குழந்தைமையைக் கொண்டாடுகிற வைகறை, குழந்தைகளுக்கான படைப்புகளையும் எதிர்காலத்தில் தருவான். அதற்காக இவனிடம் இரண்டு கை ஏந்துகிறேன்.

எலியின் மரண வலியை கவலையோடு பார்க்கிற, வேதாந்தம் எல்லாம் தூர எறிந்துவிட்டு மனிதனுக்கு ஒரு கவளம் சோறு கேட்கிற இவனது மனிதம் இவனை வெகுசீக்கிரம் மக்கள் கவிஞனாக முழுமைபடுத்தும்.

அவசியம் வாசியுங்கள்.

நேரமாகிறது. விஷ்ணுபுரம் சரவணனுக்கு இதை அனுப்பவேண்டும். கொண்டாடுவான்.

நூல் : “நிலாவை உடைத்த கல்”

கவிஞர்: வைகறை (96884 17714)

கிடைக்குமிடம்:

தகிதா பதிப்பகம்
4/ 833, தீபம் பூங்கா
கே.வடமதுரை
கோவை--641017
அலைபேசி: 94437 51641


Thursday, January 24, 2013

கிரீடமல்ல தலைப்பாகை



நல்ல பேனாவும் நல்ல அரசியலும் கை கோர்க்கும்போது எவ்வளவு அழுத்தமாக உயிர்ப்போடு இலக்கியம் உருவாகும் என்பதை ரத்தமும் சதையுமாக நிரூபித்திருக்கிறது தோழர். டி. செல்வராஜின் “ தோல்.”

மட்டுமல்ல, இடதுசாரிகள் வர்க்கத்தின்பால் மட்டுமே கவனமாக இருப்பார்கள், வர்ணப்பிரச்சினையைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் அல்லது, அவர்கள் வர்க்கப் பிரச்சினையை கவனத்திலெடுக்குமளவிற்கு வர்ணப் பிரச்சினையின்மீது கவனம் குவிக்க மாட்டார்கள் என்பது மாதிரியாக திட்டமிட்டு படிய வைக்கப் பட்டுள்ள பொதுப் புத்தியினை “தோல்”  துனையோடு மிகக் கம்பீரமாக எதிர் கொள்கிறார் தோழர் டி. செல்வராஜ்.

 “இந்தியாவில் கம்யூனிச இயக்கங்கள் தடை செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் தோராயமாக 1930 முதல் 1958 வரையிலும் நடைபெற்ற போராட்டங்கள், அதில் ஈடுபட்ட போராளிகளின் பாத்திரங்களை நாவலில் வடித்துள்ளேன்,” என்று 36 வது புத்தக கண்காட்சியில் தனக்கு அளிக்கப் பட்ட பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது தோழர் டி.செல்வராஜ் கூறுகிறார். முதலில் தோழர்கள் A.பாலன் , மற்றும் S.A.தங்கராஜ் ஆகியோரோடு இந்த நாவல் மூலம் உறவாட நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு தோழர் செல்வராஜுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஜனவரி 2013 புத்தகம் பேசுது இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தோழர் டி.செல்வராஜ் சொல்கிறார்,

“என் கருத்தில் ஒரு நாவலின் குறிக்கோள் சமுதாய மாற்றத்தைச் சித்தரிப்பது.வாசகனின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துவது முக்கியம். சமுதாயப் பொறுப்புணர்வு இருந்தால்தான் நம் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.”

சமூக அவலங்களை, ஒடுக்கப் படும் விளிம்புநிலை மக்களின் ரணத்தை , வலியை சித்தரிப்பதோடு பெரும்பான்மை நல்ல படைப்புகள் பொறுப்பினை சுறுக்கிக் கொண்டு தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொண்டு சிலாகித்துத் திரியும் பொதுக் கட்டமைப்பு நிலைபெற்றுள்ள இன்றைய சூழலில் சமுதாய மாற்றத்தை சித்தரிப்பதுதான் நல்ல நாவலின் அடையாளம் என்கிறார் தோழர்.

பாமர வாசகனாக ஒன்றைக் கேட்கலாம். எது மாதிரி இருந்த சமூகம் எது மாதிரியாய் மாறியுள்ளதை “தோல்” அடையாளப் படுத்துகிறது?

திண்டுக்கல் நகரம் முழுக்க தோல் தொழிற்சாலைகள். ஏறத்தாழ எல்லா தொழிற்சாலைகளுமே உயர் மற்றும் இடைசாதி முதலாளிகளுக்கு சொந்தமானவை. (ஒன்று மட்டும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு உரியதாய் உள்ளது)

அந்த தோல் ஷாப்புகளில் வேலை பார்க்கிற ஊழியர்கள், ஊழியர்கள் என்று சொல்வது கூட சரியில்லை, அடிமைகள் பெரும்பகுதி தலித்துகள்.

பெரும் முதலாளிகள் ஊழியர்களச் சுரண்டிக் கொழுக்கும் போக்காகக் கொண்டால் அது வர்க்கப் பிரச்சினை.

உயர் சாதிக் காரர்கள் தலித்துகளை சுரண்டிக் கொழுக்கிற போக்காகக் கொண்டால் இது வர்ணப் பிரச்சினை

வறட்டுத் தனமான விளிம்பு நிலைக்குப் போகாமல் இரண்டையும் ஒரு சேர எடுத்து சங்கரன் என்கிற மேட்டுக் குடித் தோழனும், சந்தானத் தேவன் என்கிற இடைசாதிக் காரத் தோழனும் ஓசேப்பு என்கிற கடைசாதித் தோழனும் இன்னும் இதே போன்று பல சங்கமங்களையும் படைத்து வர்க்கமாயும் வர்ணமாயும் ஒரு விடுதலையை சாத்தியப் படுத்தியிருக்கிறார் தோழர். செல்வராஜ்.

அதுவும் எதுமாதிரியான சூழலிலிருந்து இது மாதிரியான ஒரு சமூக மாற்றத்தை அவர் தனது படைப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

ஒடுக்கப் பட்ட உழைக்கும் பெண்களை முதலாளிமார்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வேடிக்கை பார்ப்பதைத் தவிர சத்தமாய் அழுவதற்கும் புலம்புவதற்கும்கூட உரிமை மறுக்கப் பட்டிருந்த ஒரு காலத்தில் ... ஒடுக்கப்பட்ட கடையர்களளை ஒரு இயக்கம் எப்படி ஒன்றிணைத்து போராடச் செய்து மீட்டெடுத்தது என்பதை சகதி மணக்க, கடுக்காய் குழி கொதிக்க உள்ளது உள்ளபடி பௌடர் பூசாமல் செண்ட் அடிக்காமல் இவை எதையும் விட உழைக்கும் மக்களின் வியர்வை நாற்றம் வசீகரமானதும் உன்னதமானதும் என்பதை தேவையான அளவிற்கு கடுக்காய் அளவும் குறைந்துவிடாத அழகியலோடு பதிவு செய்கிறது “ தோல்”

 அன்றைய சூழல் எப்படி இருந்தது என்பதை இந்த நாவலில் வரும் ஒரு சம்பவம் புரிய வைக்கும்,

ஆசீர் என்று ஒரு கதாபாத்திரம். இந்த நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரமாக வளர்ந்து மிளிரப்போகிற கதாப் பாத்திரத்திரமான ஓசேப்பின் தந்தை. தோல் தொழிற்சாலைகளில் கடுக்காய் குழியில் தோல் மாற்றிப் போடும் வேலையில் திண்டுக்கல் பகுதியில் இவனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும்படிக்கு தொழில்காரன். அவனது மனைவி இறந்து போகிறாள். அடக்கம் செய்ய அவனிடம் காசு இல்லை. தனது முதலாளி அஸன் ராவுத்தரிடம் இரந்து கடன் வாங்குவதற்காக அப்போது குழந்தையாக இருந்த ஓசேப்பை அழைத்துக் கொண்டு வருகிறான்.

தாயில்லாத அந்த சிறு குழந்தையைக் கண்டாலாவது ராவுத்தருக்கு இரக்கம் பிறக்காதா என்று நினைத்திருக்கக் கூடும்.

மனைவியை இழந்து வந்து நிற்கும் அவனது அவலத்தை கணக்குப் பிள்ளை கனி ராவுத்தர் சொன்னபோது அஸன் சொல்வதைக் கேளுங்கள்,

“ மாதர் சோத், அரே சைத்தான், விடிஞ்சதும் விடியாததுமா மவுத்தான சேதியைத்தான் சொல்ல வந்தீரா அத்தா” என்று சொன்னவன்,

“ஒம் சசாரம் மௌத்தான சமுசாரத்தைச் சொல்லிட்டேல்ல, இன்னைக்கு வேணண்டா லீவு எடுத்துக்க. மையச் செலவுக்கு எல்லாம் நம்மால சல்லிக் காசு தர ஏலாது” என்று சொன்னவன் ஓசேப்பைப் பார்த்ததும் மலர்ச்சியடைந்தவனாக,

“ஒம் பொண்டாட்டி மையச் செலவுக்குப் பணம் கேட்டியில்ல. நீயும் இந்தப் பொடியனும் முறியில கை ஒப்பம் வச்சிட்டுச் சல்லிய வாங்கிட்டுப் போ.மத்ததெல்லாம் பொறவு பார்த்துக்கலாம்” என்கிறான்.

 மனைவியை சாகக் கொடுத்துவிட்டு அவளைப் புதைப்பதற்கு வக்கற்றவனாய் கையேந்தி வந்து நிற்பவனிடம் முதலாளி நடந்து கொள்ளும் விதம் இருக்கிறதே, பொருளற்ற அவனது ஏழ்மையைப் பயன்படுத்தி அவனது குழந்தையையும் ( பச்ச மண்ணுங்க சாமி என்பான் ஆசீர்) அடிமை படுத்தும் ஈனத்தனம் இருக்கிறது பாருங்கள் அது வர்க்கம் சார்ந்த பிரச்சினை.

அதே வேளை பறையர்களும் சக்கிளியர்களும் தங்களது சாதியின் பொருட்டாகவே அனுபவிக்கும் வலிகளும் அநீதிகளும் வர்ணம் சார்ந்த பிரச்சினைகள். ஆனால் இரணையும் ஒரு சேரப் பிணைத்து தோழர் தீர்வு காணும் பாங்கு இருக்கிறது பாருங்கள் அது சத்தியமாய் சோசலிச எதார்த்தவாதம்தான்.

நாவலின் தொடக்கமே முதாளாளி வர்க்கம் அதுவரை பேணிக் காத்துவந்த கட்டமைப்பை அசைத்துப் போடுகிறது.

முஸ்தபா மீரான் என்கிற காமுக முதலாளியை ஓசேப்பு என்கிற கடைசாதி அடிமை மண்டையைப் பிளந்து போட்டிருக்கிறான் என்கிற செய்தியோடுதான் முதல் பக்கமே துவங்குகிறது. இது, இது, இதுதான் தோழர் செல்வராஜ்.

சின்னக் கிளி என்ற சமைந்து ஓரிரு வாரங்களே ஆன பச்சைப் பிள்ளையை நிர்வாணப் படுத்தி இழுத்துப் போகிறான் மீரான். எல்லோரும் பார்த்துக் கொணிருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நின்று கொண்டிருந்தபோது ஓசேப்பு அவந்து மண்டையைப் பிளக்கிறான்.

கீழத் தஞ்சை ஆண்டையாக இருந்தாலும், தோல் ஷாப் இஸ்லாமிய முதலாளியாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார்கள். அழ்கான பெண்களைக் கண்டால் கசக்கி எறிந்துவிடுவது என்பதில். அதில் பச்சைக் குழந்தைகளையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை.

யாருக்கும் தெரியாமல் வன்புணர்ந்து யாரிடமும் சொன்னால் கொன்று போடுவேன் என்று மிரட்டும் ஈனக் காரியத்தையே நாகரீகமாக மாற்றிவிடும் அளவு கொடூரமானதும் ஈனத்தனமானதும் ஆகும் இந்த ஆண்டைகளின் பாதகங்கள்.

அவர்களின் காம அரிப்புக்கு அவர்கள்  தேர்ந்தெடுத்த பெண்ணின் தாய், தந்தை, சகோதரன் சகோதரி யார் இருந்தாலும் அவர்கள் கண்ணெதிரிலேயே புணர்வது, திமிறி எதிர்ப்புக் காட்டும் பெண்களை கொன்று போடுவது என்பதாக விரிகிறது இவர்களின் காமக் கொடூரம். முணங்கிக் கொண்டோ, சபித்துக் கொண்டோ நடப்பதை மௌனிக்கும் இவர்களின் இணங்குதலுக்குள் இருக்கும் அரசியலை அழுத்தமாக அம்பலப் படுத்துவதுடன் அதிலிருந்து மீள்வதற்கான அரசியலை அவர்களை கையெடுக்கச் செய்து , போராடவும் இறுதியாய் மீளவும் செய்கிறார்.

நாவலில் ஓரிடத்திலொரு தாழ்த்தப் பட்ட பெண் இறந்த போது அவளது பிணத்தை தங்கள் வீதி வழியாக கொண்டு போனால் தெரு தீட்டுப் பட்டுவிடும் என்று கூறி தங்களது தெருவை மறித்துக் கொண்டு ஆயுதங்களோடு நிற்கிறார்கள். தலித்துகள் தடுமாறி நிற்கிறபோது அவர்களை எதிர்க்கவும் இயலாமல் வேறு வழியும் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சங்கரனும், சப் கலக்டரும் பாடியை தூக்குங்கள் பார்த்துவிடலாம் என்று தைரியம் சொன்னபோதும் பயந்துபோய் ஸ்தம்பித்து நிற்கிகிறார்கள். அவர்களுக்கு தைரியம் வரழைக்க வேண்டி சங்கரனும் சப் கலக்டரும் பாடையைத் தூக்க அக்ரஹாரமே அவனை தள்ளிவைக்க கொதிக்கிறது.

அது அப்படித்தான் இருக்கும். 01.08.1920 அன்று திலகர் இறந்த பொழுது அவரது பாடையை தூக்கிய காந்தியை பிராமணர்கள் வைசியன் பிராமணன் பாடையத் தூக்கினால் பிணம் தீட்டுப் பட்டுவிடும் என்று அவரைக் கீழே தள்ளி விடுகிறார்கள்.

என்ன கொடுமை இது? தலித் பிணம் தங்களது தெருவில் வந்தால் தெரு தீட்டுப் பட்டு விடும் என்கிறான். பிராமணப் பிணத்தை வைசியன் தொட்டால் பிணமே தீட்டுப் பட்டு விடும் என்கிறான். ஆனால் இவற்றிற்கிடையில் உள்ள தத்துவங்களுக்குள் நுழைந்து விசாரம் செய்யாமல் விடுதலைக்கான சரியான வழியைக் காட்டுகிறது “தோல்”

கதை சொல்லி காக்கையன் கதாபாத்திரம் மிக அருமையான படைப்பு. பாற்கடலைக் கடைந்த போது மூதேவி சேரிக்கு வந்த கதையை சொல்கிற நேர்த்தி மிகவும் அலாதியானது.

அவனது மனைவி புணத்த எரிக்கிற சோலிய முடிச்சுக்கன்னா கேக்குறியா. நெருங்க முடியல ஒரே பொணவாட என்றபோது இதுக்கே இப்படின்னா சதா சர்வ காலமும் சுடுகாட்டுலேயே இருக்கிற சிவன் பக்கத்துல எப்படி பார்வதி படுப்பா? என்பதுசிவனும் பார்வதியும் எதார்த்தமல்ல புனைவு என்பதை சொல்லும்.

தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கையைப் பற்றி வாசிக்கிறபோது  அரசியல் வகுப்புகளில் நமக்கு கிடைத்த பல தலைவர்களையே பார்ப்பது போல இருக்கிறது. அதுவும் அந்தத் தலைவர்கள் எதை எல்லாம் சாப்பிட்டு இயக்கம் நடத்தியிருக்கிறார்கள் என்பதை வாசிக்கும் போது கண்கள் உடைகின்றன.

பதப் படுத்த வருல் தோலில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடிய இறைச்சியை சுரண்டிக் கொண்டு வந்து அதை சமைத்து  தலை மறைவாய் இருக்கும் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும் உணவே அவர்களுக்கான விஷேச விருந்து என்பதைப் படிக்கும் போது அய்யோ என்றிருக்கிறது.

இந்தப் புதினத்தில் ஆசீரின் மேல் தாயம்மாவிற்கு இருக்கும் காதலும், அந்தக் காதலுக்காக அவனது குழந்தையை அவள் தன் குழந்தையாகவே பாவித்து பெற்றோர் இருவரும் இறந்து போனதால் அநாதையாகிப் போன ஓசேப்பிற்கு தாயாய் தந்தையாய் வாழும் வாழ்வு இருக்கிறதே... அப்பப்பா.., நான் வாசித்த காதல்களுல் மேன்மையானது இது.

இதற்கு கொஞ்சமும் குறைவானது அல்ல அருக்காணி ஓசேப்பு காதலும், சங்கர் வடிவாம்பாள் காதலும்.

சிட்டம்மா பாத்திரம் எவ்வளவு கனமானது. என் மக்னுக்கோ மகளுக்கோ பெண் பிள்ளை பிறந்தால் நிச்சயமாய் நான் சிட்டம்மா பெயரை முன்மொழிவேன்.

இந்த நாவலில் எது இல்லை?

முதலாளி வர்க்கத்தின் அப்பட்டமான கொடூரச் சுரண்டல் அரசியல் இருக்கிறது. சாதி அரசியல் இருக்கிறது. அடிமைகளாய் தங்களை சுருக்கிக் கொண்ட உழைக்கும் ஜனத் திரளை உணர்ச்சிப் பெறச் செய்து ஒன்றுதிரளச் செய்யும் அரசியல் இருக்கிறது. வறட்டுதனமான தத்துவம் பேசாமல், அதே நேரத்தில் சரியான சித்தாந்தங்களை களத்தில் எடுத்துச் செல்லும் நடை முறை அரசியல் இருக்கிறது. கள சூட்சுமங்களைச் சரியாய் கை கொண்டு ஒடுக்கப் பட்ட ஜனங்கள் இயங்கும் அர்சியல் இருக்கிறது.ஏன், பாண்டிச்சேரி தங்கப் பறையனுக்கும் திண்டுக்கல் பறையனுக்கும் இடையே உள்ள முரண்களை அம்பலப் படுத்துகிறது.

பொதுவாக முதலாளிகள் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது எதையும் கடந்து ஒன்றினைவார்கள். ஆனால் உழைக்கும் மக்களை அப்படிச் சேர விடாமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்தப் புதினத்தில் அது உடைந்து உயர் சாதி, மற்றும் இடைசாதி மக்கள்  ஒடுக்கப் பட்ட கடை சாதி மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அவர்களோடு ஒன்றிணைந்து அதை சாதித்துக் காட்டியது இந்த நாவலின் சிறப்பு.

“அதாவது, தலித்தியம், பெண்ணியம், தமிழ்த் தேசியம் சேர்ந்த சொல்லாடல்கள், தமிழ்ச்சூழலில் இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.ஏன் இப்படி?என்று ஒரு நண்பர் கேட்டார்.  மார்க்ஸியம்தான் காரணம் என்றேன்.ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலமாக இங்கு விதைக்கப் பட்ட மார்க்ஸிய சிந்தனைதான் ஒடுக்குமுறையின் பல்வேறுபட்ட வடிவங்களையும் , ஆதிக்க அதிகார சக்திகளின் நுட்பமான தந்திரங்களையும் பச்சையான சுயநலக் கூறுகளையும் அடையாளம் கண்டுகொள்வதற்குத் துணை போகின்றன.எனவே மார்க்ஸியத்தின் நீட்சியாகவே இவைகளை நான் பார்க்கிறேன்” என்று தோழர் பஞ்சாங்கம் சொல்வதை தனது மின்னுரையில் தோழர் செல்வராஜ் சொல்கிறார்.

தலித்தியம் மற்றும் பெண்ணியத்தை மார்க்ஸியத்தின் நீட்சியாகவே தோழர் பார்த்திருக்கிறார் என்பதை “தோல்” சொல்கிறது.

அவருக்கு அளிக்கப் பட்ட பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது தோழர் செல்வராஜ் சொல்கிறார்,

“கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தடை செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் மேற்கொண்ட போராட்ட முறைகளை ஆய்வு செய்து புதிய வடிவங்களை வகுத்து செயல்பட வேண்டிய கட்டாயம் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டுள்ளது”

இது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல ஒடுக்கப் பட்ட மக்களுக்காக போரடும் எந்த ஒரு அமைப்பிற்கும் நீண்டு பொருந்தவே செய்கிறது.

சாகித்ய அகாதமி விருது என்பது சின்ன தலைப் பாகைதான்.
கிரீடத்திற்கே உரிய தலை தோழருடையது.


  நூல் வெளியீடு:

 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-600098
பக்கங்கள்: 695, விலை - ரூ 375


நன்றி: காக்கைச் சிறகினிலே



Monday, July 23, 2012

இன்றின் நியாயத்திலிருந்து...

”எது கவிதை?
யாருக்குத் தெரியும்?”

என்பார் சுகதேவ்.

சுகதேவ் சொல்வது மிகச் சரியான கூற்றாகவே படுகிறது. ஆமாம், கவிதை குறித்து முழுதாய் அறிந்தவர்கள் யாருமே இல்லை என்றே கூறலாம். கவிதை குறித்த அபிப்பிராயம் ஆளுக்கு ஆள் மாறவே செய்கிறது. எது கவிதை என்பதற்கான ஒரு பொதுவான அபிப்பிராயம் இதுவரையிலும் எட்டப் படவில்லை என்பதோடு என்றேனும் ஒரு நாள் எட்டப் படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றனவா என்பதும் சந்தேகமே.

ஆனால் அதற்காக யாரும் குழம்பித்திரிகிற சூழையும் கவிதை யாருக்கும் வைக்கவில்லை.

அம்ரீதா சொல்கிறார்,
“குருதியின் வெப்பத்திலிருந்து பிறப்பது கவிதை”

எனக்கென்னவோ இது பெருமளவு சரி என்றே படுகிறது.குருதி கொதிக்கக் கொதிக்கப் பொங்கிக் கொப்பளித்து வரவேண்டும் கவிதை என்றுதான் தோன்றுகிறது. அப்போதுதான் கவிதை உயிர்ப்போடும் வன்மத்தோடும் வரும். கவிதை குறித்த எந்த அபிப்பிராயத்தோடும் பேதம் கொள்ளும் யாரும் இதை எந்த வித பேதமும் இல்லாமல் ஏற்கவே செய்வார்கள். சூடு கவிதையின் உயிர்ப்பு எனில் வன்மம்தான் கவிதையின் குரல்.

மக்கள் கவிஞர் இன்குலாப் சொல்கிறார்,
“இன்றின் நியாயத்திலிருந்து எழுதுகிறேன். குருதி கொப்பளிக்கிறது”

எவ்வளவு சத்தியமான கூற்று. இன்றின் நியாயத்திலிருந்து புறப்படுகிற கவிதை குருதியின் வெப்பத்திலிருந்துதான் புறப்படும். அதன் குரல் தவிர்க்கவே இயலாதபடி வன்மமாகத்தான் இருக்கும். அவை சூடாகவும் வன்மக்குரலோடும் இருப்பதால் அவை கலகக் கவிதைகளாகவும் இருக்கும். மக்கள் கவிஞரின் கவிதைகளே இதற்கு சாட்சி.

இன்றின் நியாயத்திலிருந்து எழுதப் படுகிற கவிதைகள்தான் நாளையை சரி செய்து செழுமைப் படுத்தும்.

எனவேதான் குருதி கொப்பளிக்க , வன்மக் குரலோடு, இன்றின் நியாயத்திலிருந்து கலகக் கவிதைகள் ஏதேனும் வராதா என்ற தவத்தோடு காத்திருக்கிறோம். நமது அகோரப் பசிக்கான சிற்றுண்டிகளும், உணவு வகைகளும் சமயத்தில் பெரு விருந்துமாக கவிதை நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் தனது “வெட்கத்தில் நனைகின்ற” என்ற கவிதை நூல் மூலம் நமக்குப் பந்தி வைத்திருக்கிறார் கிருஷ்ணப்ரியா.

“கவிதைக்காண இலக்கணங்களோ, சிறப்பான வார்த்தைகளோ, அழகியலோ,இல்லாத கவிதைகளாக இவை இருக்கக்கூடும்..”என்று தனது நூலுக்கான அறிமுகத் தளத்தில் ப்ரியா சொல்கிறார். அவரது நூலுக்குள் பயணித்து வந்த பிறகு நாம் சொல்வது இதுதான்,

 “ப்ரியாவிற்கு இவ்வளவு தன்னடக்கம் தேவையில்லை”

காரணம், இல்லாமலும் இருக்கக்கூடும் என்று இவர் பட்டியலிட்டுத் தருகிற அனைத்தும் இவரது கவிதைகளில் செழித்துக் கிடக்கின்றன.

கீழத்தஞ்சை ஆண்டைகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஈவு இரக்கமே இல்லாது தங்களது பன்னையாட்களை சவுக்காலும், சாட்டைகளாலும், புளிய மிளாறுகளாலும் ரத்தம் வர அடித்து வேலை வாங்கிய மனிதக் கழிசடைகள். அவர்களிடம் வேலை பார்த்த அடிமைக் கூலிகள் பேசிக்கொள்வார்களாம்,

“என்னதான் கோவம் வந்து சாட்டையால அடிச்சாலும் எங்க ஆண்ட ரொம்ப நல்லவங்கத் தெரியுமா? காலயில அடிச்சவுங்க சாயங்காலம் வேல முடிஞ்சப்புறம் ,” ஏண்டா இப்படி அடி வாங்குற மாதிரி நடந்துக்கற. பாரு எப்படி வரி வரியா முதுகெல்லாம். போ, வெரசா போயி சுடு தண்ணி வச்சு பொஞ்சாதிய ஒத்தடங்கொடுக்க சொல்லு”ன்னு சொல்றாக. எவ்வளோ பெரிய மனசு. சும்மாவா சொன்னாக ‘அடிக்கிற கைதான் அணைக்குமுன்னு’”

இது அவன் மீதான அக்கறையின் பொருட்டு அல்ல, அவன் வீட்டு நாளைய வேலைக்கான தயாரிப்பு அது என்பது புரியாதபடி கூலிச்சமூகத்தை மிகுந்த கவனத்தோடு கட்டமைத்து வைத்திருந்தது ஆண்டைச் சமூகம்.

இன்னொரு கூலி சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள்,

“சாட்டைய எடுத்து அடிக்கிற அளவுக்கு எங்க ஆண்ட மோசமானவங்க இல்ல. தப்பு செஞ்சா புளிய மெளாராலதான் அடிப்பாங்க”

எப்படி கவனமாகக் கட்டமைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

ஆனால் சீனிவாச ராவ் முன்னெடுத்த,  நிறையப் பலிகொண்ட,  மிக நீண்ட போராட்டங்களும் அதன் விளைவாய் வந்த சட்டங்களும் அந்த ஆண்டைகளிடமிருந்து எங்கள் அடிமைக் கூலிச்சமூகத்தை விடுதலை செய்திருக்கின்றன.

ஆனால் சராசரிக் குடும்பக் கட்டமைப்பில் இன்னமும் பல இடங்களில் கணவன்மார்கள் ஆண்டைகளாகவும் மனைவிகள் அடிமைக்கூலிகள் போலவும் இன்றைக்கும் தொடர்வதைக் காணத்தான் முடிகிறது. ஆண்டைகள் போல இரக்கமற்று நடந்துகொள்ளும் கணவன்மார்கள்மீது மனைவிகள் வைத்திருக்கும் நம்பிக்கை இருக்கிறது பாருங்கள், அதை இந்தக் கவிதையை விட யாரால் எது கொண்டு அழகாய் சொல்லிவிட முடியும்,

“உப்பு குறைந்ததற்காய்
சூடான குழம்பைத் தலையில் கொட்டிய
தாத்தாவைப் பற்றிக்
கதை சொல்லும் பாட்டி
எப்போதும் முடிக்கிறாள்
‘என் மேல் அவருக்கு கொள்ளை ஆசை’ ”

இந்த இடத்தில் கவிதை சரியாக முடிந்துவிடுகிறது. அதற்கு மேல்”என்று” என்பதில் தொடங்கி நீளும் எந்த ஒரு வார்த்தையுமே தேவைப் படவில்லை. அவ்வளவு அழகாக நேர்த்தியாக முடிகிறது கவிதை.

ஏதேனும் ஒன்று சரியான இடத்தில் நறுக்கென்று முடிந்தால் “ நச்” என்றும் சொல்லலாம் அல்லது அதற்கு பதில் இந்தக் கவிதையையும் சொல்லலாம்.

ப்ரியா ஒரு நல்ல தொழிற்சங்கவாதி. தான் சார்ந்திருக்கிற ஊழியர் சங்கத்தின் மகளிர் அமைப்பினை ஆங்காங்கே கட்டுவதில் முனைப்போடு பங்கேற்ற முன்னனி ஊழியழ்ர். அந்த அமைப்பின் பல மாநாடுகளை முன் நின்று நடத்திய அனுபவம் மிக்கவர். இந்த அனுபவம் தந்த வெளிச்சத்தில் வேலைக்குப் போகும் பெண் ஊழியர்களின் அவல நிலையை அவர் மிகச் சரியாக உள்வாங்கியிருக்கிறார் என்பதை கீழ்க் காணும் கவிதை தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே வேலைக்குப் போகாத பெண்களைவிட வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை மிகவும் துயரமானது. வேலை முடிந்து ஒரே வண்டியில் வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டிற்கு வந்து உடை மாற்றிய உடன் கணவனது வேலை பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு அவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுப்பதிலிருந்து தொடங்கி நள்ளிரவுவரை சில நேரம் பெண்ணுக்கான வேலை நீளுகிறது. இதை மூஞ்சியிலத்தாற்போல் சொல்கிறார் ப்ரியா,

“கையொடிய எழுதி
கோப்புகளைப் பார்த்து
பலவிதமான பார்வைகளை
வார்த்தை விரசங்களை
சிரித்தும் சிரிக்காமலும்
மெல்லப் புறந்தள்ளி
கடிகார முள்சுற்றி
ஆறில் நிற்கும் போது
அரக்கப் பரக்க ஓடி
பிதுங்கும் பேருந்தில்
சதை மூட்டையாய் ஏறி இறங்கி
ஆயாசத்துடன் வீட்டிற்குள் நுழைகையில்
கூடவே நுழையும் உன்னால்
இரக்கமே இல்லாமல் கேட்க முடிகிறது...

’சூடா ஒரு டீ கொடுடி’ ”

வீட்டில் வெட்டியாய் உட்கார்ந்திருப்பவனுக்கும் வேலைக்குப் போய் வந்து பணிவிடை செய்ய வேண்டிய அவலம் இருக்கிறது பாருங்கள், அதுகுறித்தும் ப்ரியா கவனம் செலுத்தவேண்டும் என்பதே நேயர் விருப்பம்.

வேலைக்குப் போவது என்றால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், பள்ளிகளில், மருத்துவ மனைகளில், வணிகத்தளங்களில் பணிபுரிவது என்றே பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிறது. எனவே உழைக்கும் பெண்களின் பிரச்சினை என்பது மேற்சொன்ன இடங்களில் பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகளாகவே பொதுத் தளத்தில் கொள்ளப் படுகிறது.

இது கடந்து வயல்களில், கட்டடக் கட்டுமானத்தில், சாலை போடுவதில்,வீடுகளில் வேலை செய்கிற பெண்களின் பிரச்சினைகள் பொதுவாக போதுமான அளவிற்கு பேசப் படாத சூழலில் அவர்களது அவலத்தை இடது சாரிக்கே உரிய புள்ளியில் நின்று பார்க்கிறார்,

“அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாய்
ஓய்வில்லாது உழைத்து
அலுத்துக் களைத்துப் போகும்
எண்ணற்ற தருணங்களில்
எல்லாரிடமும் சிடுசிடுக்கும் அம்மா
சீறுவதேயில்லை
பத்துப் பாத்திரம் தேய்க்கும்
பத்மாவிடம் மட்டும்...

களித்துச் சிரித்திருக்கும்
எங்களுக்கான நேரங்களில்
கேட்டால்
‘வீட்டிலும் வெளியிலும்
அவளும்தான் தேய்கிறாள், என்னைப் போலவே’
பதில் சொல்லும் அம்மாவின் கண்களில்
எப்போதும் தெரிகிறது ஒரு நெருப்பு”

ப்ரியா அம்மாவின் கண்களில்பார்த்த நெருப்புதான் இவர்களது அவலத்தைக் கொளுத்தி சாம்பலாக்கப் போகும் ஆதிக் கங்கு.

இந்தக் கவிதையை சுகனில் வாசித்துவிட்டுத்தான் இருப்பு கொள்ளாமல் சுகனுக்கு அலைபேசி ப்ரியாவின் எண் வாங்கி அவரோடு பேசினேன். பெண்களின் மாதாந்திர அவஸ்தையை, வலியை இவ்வளவு இங்கிதத்தோடு, அழ்கியல் உடைந்து போகாமல் ப்ரியாவால் சொல்ல முடிகிறது. கொஞ்சம் பிசகியிருந்தால் வேறு மாதிரி போயிருக்கும். மிக நேர்த்தியாய் கம்பியில் நடந்திருக்கிறார்,

மிகவும் பிடித்த
நீலநிறப் பூக்கள் போட்ட
வெள்ளைச் சேலையை
அணியவே யோசிக்கிறேன்

கண்ணாடிகள் சூழ்ந்த
கடைகளில் நுழையும்போதோ
ஓரப் பார்வையாய்
என் பின்புறம் பார்க்கிரேன்

இருக்கையிலிருந்து
எழுந்து நடக்கையில்
தயங்கியபடியே
முந்தானை நுனியைக்
கையில் பிடிக்கிறேன்
அலுவலக சகாவுடன்
கூட நடக்கையில்
எனக்குப் பின்னால்
அவன் வந்து விடாதபடி
மெல்ல நடக்கிறேன்

கவனத்தைத் தின்னுகிற
உடம்பின் வலியில்
தினசரி வேலைகளில்
அடிக்கடி தவறுகிறேன்

நாற்பதைக் கடந்து
நாலைந்து வருடமாகியதில்
எப்போது வருமோ, இது
என்று பயந்துதான் நகருகிறது
என் ஒவ்வொரு பொழுதும்”

“தேரைகள்” என்றொரு கவிதை. அந்த கொஞ்சம் நீண்ட கவிதையில் அனைத்தையும் இறுதி ஆறு வரிகளைத் தவிரக் கழித்தால் சத்தியமாய் இதை ஒரு ஜென் என்று கொள்ளலாம். பாருங்களேன்,

“வாழை மரம்தான்
தேரைகளை வளர்க்கும்
குளிர்ந்த சூழலென்று
அம்மா எடுத்துச் சொன்னாலும்
அழிக்க மனமில்லை
தேரைகளின் குடியிருப்பை”

சரிதானே நான் சொன்னது.

எனக்கு இந்த நூலில் முத்தாய்ப்பாய்த் தோன்றும் ஒரு கவிதை இது. ரசனையும், ரசமும் எள்ளலும் துள்ளிப் பாய்ந்து வரும் ஒரு கவிதை. படித்தவுடன் வெளிப்படையாய் சிரிக்கப் பயந்தவர்களைக்கூட யாரும் இல்லாத இடம் சென்று ரகசியமாகவேனும் புன்னகைக்க வைக்கும் இந்தக் கவிதை புன்னகையின் சுவடு மறையும் முன்னே ஆணைப் போல எதையும் வெளிப்படையாய் வெளிப்படுத்த இயலாத நிலையில் ஆண்களால் மிகுந்த கவனத்தோடு கட்டமைக்கப் பட்டுள்ள ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் சொல்ல முடியாமல் பொத்தி பொத்தி வைத்துப் புழுங்கி புழுங்கி வாழும் பெண்களின் அவஸ்தைக் கசிவாகவே இந்தக் கவிதையைப் பார்க்க்கிறேன்.

“ நினைவு தப்பிப் போய்
படுக்கையில் கிடக்கும் பாட்டி
புலம்பிக் கொண்டிருக்கிறாள்
பக்கத்து வீட்டு
சின்னசாமி தாத்தாவோடு
தனக்கு தொடர்பில்லையென்று”

பானை சோறுக்கு பருக்கை என்ற கணக்கில்தான் கவிதைகள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

ப்ரியா சொல்கிறார்,
“சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம் இல்லைஎன்பதை பல சமயங்களில் உணர்கிறேன். மனைவியாய், தாயாய், தமக்கையாய், தங்கையாய்,இன்னும் எத்தனையோ பாத்திரங்களாக வாழ வேண்டியிருக்கிற பெண்ணிற்கு, படைப்பாளி என்ற பாத்திரத்தில் நிலைப்பது மிகப் பெரிய சவால்தான்”

ஆமாம்தான். மிகப் பெரிய சவால்தான். ஆனாலும் அந்தச் சவால்களை எல்லாம் முட்டி மோதித் தூளாக்கியிருக்கிறார் என்பதையே இந்த நூல் உரத்துக் கூறுகிறது

இன்றும் ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை உணர்ந்து கலகம் செய்கிற ப்ரியா ஆணும் பெண்ணும் சமமாகவே இய்லாது. ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்பதை உணர்ந்து அந்த எதிர் சமத்திற்கான குரலை உயர்த்தும்பொழுது இன்னும் உசரமாய் கவிதைகள் வரும்.

இவரது குருதிச் சூட்டிலிருந்துதான் இவரது கவிதகள் பிறக்கின்றன. எனவேதான் உயிர்ப்போடும் வன்மக் குரலோடும் நம்மை ஈர்க்கின்றன.

இன்றைய நியாயங்களின் மிக நெருக்கத்தில் இருந்து இவர் கவிதைகளைப் படைக்கிறார் என்பதை யார் மீதும் சத்தியம் செய்து சொல்லலாம்.

தமிழரசி, பரமேஸ்வரி, விஜயலட்சுமி என்று என்னிடம் இருக்கும் பட்டியலில் ப்ரியாவும் ஒட்டிக் கொள்கிறார்.

”வெட்கத்தில் நனைகின்ற...”
(கவிதை நூல்)

ஆசிரியர்: கிருஷ்ணப்ரியா (8939998444)

கிடைக்குமிடம்
சௌந்தர சுகன்
அம்மா வீடு, சி 46 இரண்டாம் தெரு
முனிசிபல் காலனி, தஞ்சாவூர் 613007




இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...