Monday, January 16, 2017

அவர்கள்….. குழந்தைகள்….

தங்கையின் திருமண அழைப்பிதழை வைப்பதற்காக திருவையாறு சென்றுவிட்டு திரும்புவதற்காக திருவையாறு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். வருகிற பேருந்துகள் எல்லாம் பிதுங்கிக் கொண்டு வந்தன. இரண்டு படிக்கட்டுகளிலும் கூட்டம் தொங்கிக் கொண்டு போனது. சரியான முகூர்த்தநாள் என்பது தெரியாமல் புறப்பட்டது தவறாகப் போனது.

பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போனதே அல்லாமல் குறைந்தபாடில்லை. கும்பகோணம் போகிற பேருந்து காலியாகப் போனது. திருக்காட்டுப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் போகிற பேருந்துகளும் காலியாகவே போயின. அதில் அமர்ந்து போகிறவர்களைப் பார்த்தால் ஒரு விதமான பொறாமையே வந்தது. ஆக, இருக்கிற கூட்டமெல்லாம் அரியலூர் வருகிற கூட்டம்தான் போல. அந்த எண்ணமே ஒருவித அயர்வை ஏற்படுத்தியது. பத்துப் பேருந்துகள் காலியாய் வந்தாலும் இருக்கிற ஜனங்களுக்கு காணாது என்றே பட்டது. சரி, உட்கார இடம் கிடைக்கிற வகையில் ஒரு பேருந்து வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தோம்.

ஓரமாய் மூடிக்கிடக்கும் ஒரு கடையின் படியில் அமரலாம் என்று போனோம். படிக்கட்டின் ஒரு மூலையில் ஏற்கனவே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது.ஒரு இளைய ஜோடி அமர்ந்திருக்க அவர்களது குழந்தை தன்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது அவன்மீதும் அவர்களுக்கு கவனம் இருக்கவே செய்தது. “ஏய், மண்ணுல விளையாடாத, சிரங்கு வந்துடும். ஆபுறம் டாக்டர்ட்ட தூக்கிட்டு போய் ஊசி போட்டுடுவேன்” என்று அவனது அப்பா சொன்னதுதான் தாமதம், “நான் பெரிய பையனா வந்து நம்ம ஸ்ப்லெண்டர எடுத்துட்டு போயி அந்தக் கொரங்கு மாமா மேல ஏத்தி அறைக்கப் போறேன்” என்று விளையாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமலே சொன்னான்.

இதைக் கேட்டதும் நானும் விக்டோரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். இருவர் மனதிலுமே ஒரு பழைய சம்பவம் மலரும் நினைவாய் வந்துஎங்கள் புன்னகையை ஆழமாய் அர்த்தப் படுத்தியது.

அப்போது நாங்கள் பெருமாள்பாளையத்தில் குடியிருந்தோம். கிஷோருக்கப்போது மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். அவனுக்கான சளிப் பிரச்சினைக்கு மருத்துவர் நரசிம்மன் அவர்களிடம் ஹோமியோ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அவரது மருத்துவமனை நொச்சியத்தில் இருந்தது. ஒரு முறை
அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு அவரிடம் கிளம்பினோம். போகும் வழியெல்லாம் எதையாவது கேட்டுக் கொண்டே வருவான். நானோ, விக்டோரியாவோ ஒருபோதும் அவனது கேள்விகளை அலட்சியப் படுத்தியதே இல்லை.

நொச்சியம் நெருங்கிய பொழுது சாலை ஓரத்தில் மரங்களில் தென்பட்ட குரங்குகளைப் பார்த்துவிட்டான். குரங்குளைப் பற்ரிய கேள்விகளாய் கேட்டு ஒரு வழி செய்துவிட்டான். அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் இடையே நடந்த உரையாடலுள் ஒரு மெல்லியப் பகுதியைப் பார்ப்போம்,

“பாப்பாக் கொரங்கெல்லாம் ஸ்கூலுக்கு போகுமாம்மா?”

“போகும்”

“அவங்களுக்கு யார் ரைம்ஸ் சொல்லிக் கொடுப்ப்பாங்க?”

“கொரங்கு மிஸ்”

“கொரங்கு மிஸ் அவங்கள ஸ்கேல்ல அடிப்பாங்களா?”

“மாட்டாங்க”

:”அப்புறம் ஏன் எங்க மிச் மட்டும் அடிக்கிறாங்க?”

“ஏன்னா அவங்க மனுஷ மிஸ்” (அய்யோ, விக்டோரியா இவ்வளவு அழகான பதிலை இவ்வளவு லாவகமாகவும் அலட்சியமாகவும் சொல்வதைக் கேட்டு சத்தியத்திற்கும் சிலிர்த்தே போனேன்)

“ஓ, பாப்பாக் கொரங்குக்கு சளிப் புடிச்சா யாரு மருந்து கொடுப்பா?”

“கொரங்கு டாக்டர்”

இப்படியாக குரங்குகளைப் பற்ரியே அவர்களது உரையாடல் சுழன்றுகொண்டிருக்க மருத்துவமனை வந்துவிட்டது. காத்திருக்கும் தேவை அன்று ஏற்படவில்லை.

அவருக்கு கிஷோரை மிகவும் பிடிக்கும்.

“காய் கிச்சு, எப்ப வந்தீங்க?”

“தம்பி, சாருக்கு வணாக்கம் ச்சொல்லு”

“சாரெல்லாம் இல்ல மாமாதான். கிச்சு, எங்க மாமா பேரென்ன சொல்லுங்க பார்ப்போம்”

சட்டென சொன்னான் ,”கொரங்கு மாமா”

சிரி சிரியென்று சிரித்தார். எங்களுக்கு மிகவும் சிரமமாய் போய்விட்டது. ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டோம். வரும் வழியில் குரங்குகளைப் பார்த்ததையும், தொடர்ந்து அவன் குரங்குகளைப் பற்றியே உரையாடிக்கொண்டு வந்ததையும் அதன் விளைவாகத்தான் இப்படிப் பேசிவிட்டான் என்றும் நாங்கள் சொல்லச் சொல்ல அவற்றையெல்லாம் சற்றும் சட்டை செய்யாதவராய் சாக்லெட் கொடுத்து தூக்கி வைத்துக் கொண்டு “எங்க இன்னொருதரம் சொல்லு” என்று அவனோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தை ”கொரங்கு டாக்டர்” என்று சொன்னதும் எங்களுக்கு பழைய நினைவு வந்துவிட்டது. விக்டோரியா அவனை நோக்கி கையை நீட்டி சிரிக்கவே விக்டோரியாவை நோக்கி தாவிக் குதித்து ஓடி வந்தான்.

“தம்பி பேரு என்ன?”

“தனுஷ்”

“ஓ! என்ன படிக்கிறீங்க?”

“யு.கே.ஜி” என்றவன் என்னை நோக்கி கை நீட்டி “இவங்கதான் மாமாவா?”

“ஆமாம்”

“அய்ய, நல்லாவே இல்ல, வேணாம்”

“சரி, என்ன செய்யலாம்?”

“கா விட்டு தொறத்தி விடுங்க ஆண்டி”

“சரி, செஞ்சுடலாம். நீ ஆண்டிய கட்டிக்கிறியா?”

இதைக் கேட்டதும் “சரி” என்றவன் விக்டோரியாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “ஓகேவா” என்றான்.

“ஓகே, ஓகே” விக்டோரியாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.

“டேய் பெரியவங்கள அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன்ல” என்று சொல்லிக் கொண்டே அவனை வாங்க எழுந்து வந்தார்.. விக்டோரியா அவனைத் தராமல் இழுத்து வைத்துக் கொண்டு ,”விடுங்க சின்னப் பிள்ளைதானே, போகவும் அவன் சரியாய்த்தானே சொல்கிறான்” என்று சொல்லவும் அவனது அம்மாவும் அப்பாவும் எங்களோடு சேர்ந்து சிரித்தனர்.

குழந்தைகளைக் கவனித்தால் எதையும் மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். சிரித்துக் கொண்டே கற்கலாம். எவனோ ஒருவன் அரை போதையில் உளறி இருக்கிறான் , “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று.எந்தக் குழந்தைக்காவது இது புரியும் என்றால் அவன் சொல்பவனைக் கொன்றே போடுவான்.இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு நிகர் எதுவுமே இல்லை.

இதற்குள் அவர்கள் போக வேண்டிய ஊருக்கு பேருந்து வரவே அவனை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.முத்தம் கொடுத்து டாடா சொல்லி விக்டோரியா அனுப்பி வைக்கவே அவன் காற்ரிலே ஒரு முத்தம் அனுப்பினான். அதில் ஒரு துளி என் மீதும் விழுந்தது.அயர்வு முழுக்க பறந்தே போனது.

“பேசாம அவங்க முகவரிய வாங்கி வச்சிருந்தா போயி அப்பப்ப கொஞ்சலாம்ல”

“அதுக்கு அங்க போகனௌம்னு அவசியமே இல்ல”

“அப்புறம்?”

“ஊர்ல இருக்கிற எல்லாக் குழந்தைகளுமே அவந்தான். எல்லக் குழந்தைகளுமே ஒரே மோல்டுதாங்க”

அப்பா, எவ்வளவு ஞானம். இவ்வளவு நாள் இதை எப்படி கண்டு கொள்ளாமல் போனோம்.

ஒரு வழியாய் எங்களுக்கும் பேருந்து வந்தது. நின்றுகொண்டுதான் போக வேண்டும். உள்ளே நுழைவதற்கு இடம் கிடைக்கவே ஏறிவிட்டோம்.

ஏறிய பின்புதான் ஏன் ஏறினோம் என்று தோன்றியது. முன்னே இருப்பவர்களைப் பின்னே போகுமாறும் பின்னே இருப்பவர்களை முன்னே போகுமாறும் ஒவ்வொரு முறை நடத்துநர் தள்ளும் பொழுதும் ஒவ்வொருவரும் எரிச்சலடைந்தோம். சிலர் அவரை கண்டபடி சபிக்கவே செய்தனர்.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறிக்கொண்டேதான் இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் நடத்துநரை சபித்துக் கொண்டேதான் வந்தோம். “இப்படிச் சம்பாரிக்கிறதுக்கு பதிலா…” என்றுகூட சிலர் அசிங்கமாய் திட்டவே செய்தனர்.

சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து, கசங்கி, இதில் அடிக்கடி நடத்துநர் டிக்கட் போடுவதற்காய் இப்படியும் அப்படியுமாய் நுழைந்து போவது என்பதெல்லாம் சேர்த்து உயிரே போனது.

இந்த நேரம் பார்த்து மழை வேறு வந்துவிடவே இன்னும் துயரம் அதிகமானது. எல்லா இடங்களிலும் ஒழுகியது. இரண்டு பக்கங்களிலும் ஜன்னல் கண்ணாஅடிகள் சரியாக வேலை செய்யாததால் சாரல் வேறு. ஏறத்தாழ குளித்தோம்.

ஒருவழியாய் பேருந்து அரியலூர் வந்தது. எல்லோருக்கும் அப்பாடா என்றிருந்தது. சிலர் அதைக் கொஞ்சம் சத்தமாகவே வெளிப்படுத்தினர்.

இறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கேட்டான், “இந்த பஸ் எப்ப திரும்பக் கிளம்பும்?”

“அதை ஏன் கேக்கற. எவ்வளவு ஒழுகினாலும் உடனே கிளப்பிடுவாங்க”

“பாவம் இல்ல அந்த கண்டக்டர்?”

அதை யாரும் சட்டை செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு பொட்டில் அறைந்ததுபோல் இருந்தது.

ஆம் நாம் ஏன் இப்படி யோசிப்பது இல்லை? அல்லது குழந்தைகள் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறார்கள்?

அவர்கள் குழந்தைகள்.


எனக்கொரு ஆசை, என்னைத் தவிர எல்லோரும் குழந்தைகளாய் மாறிவிட வேண்டும். அல்லது என்னோடு தொடர்புடைய அனைவருமாவது குழந்தைகளாய் மாறிவிட வேண்டும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...