Monday, January 16, 2017

எங்கள் வீட்டு வாக்குகள் விற்பனைக்கல்ல

கணினி வாங்குவதற்கா அல்லது வேறு ஏதேனும் கடன் வாங்குவதற்கா என்று சரியாக ஞாபகமில்லை. நண்பர் சிவக்குமார் பத்து காசோலைகளையும் விக்டோரியாவின் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு சத்திரம் பேருந்து நிலையம் வரச் சொல்லியிருந்தார். சரியாக நான்கு மணிக்கெல்லாம் வருவதாக சொல்லியிருந்தவர் ஐந்தரை வரைக்கும் வரவே இல்லை. ஏறத்தாழ ஒன்றரை மணிநேர காத்திருப்பு தந்த அயர்வு என்னை ஒரு தேநீர்க் கடையை நோக்கித் தள்ளியது. சூடான வாழைக்காய் பஜ்ஜியை எடுத்து தாளில் வைத்து நசுக்கி எண்ணெயை எடுத்துக் கொண்டிருந்தபோது சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது. தான் வேறொரு வேலையாக கரூர் சென்றுள்ளதாகவும் போன வேலை முடிய இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிடும் என்பதால் அடுத்த நாள் சென்று மேலாளரைப் பார்க்கலாம் என்றும் ஆகவே இன்று வீட்டிற்கு திரும்பிவிடுமாறும் கேட்டுக் கொண்டார். வேறு வழி, பஜ்ஜிக்கும் தேநீருக்குமான காசைக் கொடுத்துவிட்டு பேருந்தை நோக்கி நகர்ந்தேன்.

வரிசையில் முதலில் நின்ற பேருந்திலேயே உட்கார இடம் கிடைத்தது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. முன்னேயும் இல்லாமல் பின்னேயும் இல்லாமல் நடுப்பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் இடம். அறச்செல்வனுடைய பாப்பாவிற்கு பள்ளியில் இடம் கிடைத்ததற்கு அவர் அடைந்த சந்தோசத்தை அந்த இருக்கை எனக்கு வழங்கியது. அப்பாடா என்று அமர்ந்தால் சுசிலா அம்மாவின் “நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா/ இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”/ பாடல், அப்படியே கரைந்து போய்க் கிடந்தேன். அதைத் தொடர்ந்து, “நினைக்கத் தெரிந்த மனமே / உனக்கு / மறக்கத் தெரியாதா?/ அடுத்ததாக “கண்கள் இரண்டும் / என்று / உன்னைக் கண்டு பேசுமோ / காலம் இனிமேல் / நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ? /என்று சுசிலா அம்மாவின் தேன் கலந்த அற்புதங்களாகத் தொடரவே வேறு எதிலும் மனது நகராமல் ஓட்டுநருக்கு நன்றி சொல்லியபடி மனது பரவசித்துக் கிடந்தது. அப்படியே கண்களை மூடி லயித்துக் கிடந்த நமது மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போட்டார்கள் நான்கைந்து கல்லூரி மாணவர்கள்.

அவர்களது நச்சரிப்புத் தாங்காமல் ஓட்டுநர் குத்துப் பாடல்களைப் போட்டார். சரி, இனி வேறு வழியில்லை. கொண்டு வந்திருக்கும் புத்தகத்தை வாசிக்கலாம் என்று தேடியபோதுதான் அதை தேநீர்க் கடையிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது.. தோழர்.மதிவண்ணனின் ‘உள் ஒதுக்கீடு சில பார்வைகள்’ என்ற புத்தகம்.கருப்பு பிரதிகள் வெளியீடு. அநேகமாக ஐம்பது ரூபாய் என்று நினைவு. ஒரு தொலை பேசினால் அனுப்பி விடுவார்கள். ஆனால் அதற்குள் வைத்திருந்த வெற்றுக் காசொல்லைகள் ரொம்பவே பயப்படுத்தின. எனவே அடுத்த இறக்கத்திலேயே இறங்கி சாலையைக் கடந்து அந்தப் பக்கம் போய் அடுத்தப் பேருந்தேறி சத்திரம் வந்து அரக்கப் பறக்க தேநீர்க் கடைக்கு வந்தால் நல்ல வேளை, புத்தகம் எடுத்து வைக்கப் பட்டிருந்தது.

ஆனால் அதைத் தர மறுத்தார் கடைக்காரர்.

”வெறும் புத்தகமா இருந்தா கொடுத்துடலாம் சார். காசோலை இருக்கு”. ( ஒரு ஆழமான புத்தகத்தைவிட வெற்ருக் காசோலைகளுக்கு அவ்வளவு மரியாதை. அது சரி, வெறும் புத்தகமா இருந்திருந்தால் நாம் மட்டும் இப்படி வேர்க்க விறு விறுக்க வந்தா இருக்கப் போகிறோம். நேரே வீடு போய் கருப்புப் பிரதிகளுக்கோ அல்லது வைகறை அய்யாவிர்கோ தொலை பேசியிருந்தால் புத்தகம் வந்திருக்காதா? நம்மை இழுத்து வந்ததும் அந்த வெற்றுக் காசோலைகள்தானே)

“அது என்னுதுதான் சார். வேணா காசோலையைப் பாருங்க, எட்வின்னு இருக்கும்”

“அதெல்லாம் சரிங்க சார். ஆனா நீங்கதான் எட்வின்னு எப்படி முடிவு பன்றது”” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் புத்தகத்திற்குள்ளிருந்த விக்டோரியாவின் புகைப் படத்தை எடுத்து, “இது யாருங்க சார்?” என்றார்.

“அவங்க என் மனைவி”

“அப்ப சிரமத்தைப் பார்க்காம அவங்களைக் கொஞ்சம் வரச் சொல்லுங்க.கோவிச்சுக்காதீங்க, இது காசோலை விஷயம். உரியவங்க கிட்ட சேர்க்கனுங்கறதுக்காகத்தான் இவ்வளவும்”

உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற அவரது அக்கறை அவர்மீது மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. இனி வேறு வழியில்லை, விக்டோரியாவை அழைக்கலாம் என்று அழைபேசியை எடுப்பதற்கும் சிவா என்னை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

“கோவிச்சுக்காதீங்க சார். இப்பதான் வேலை முடிஞ்சுது. இப்ப உடனே புறப்பட்டாலும் சத்திரம் வந்து சேர இன்னும் ரெண்டு மணிநேரம் ஆகும். அதுதான்  நாளைக்குப் பார்த்துக்கலாம்னு சொன்னேன். வீட்டிற்குப் போயிட்டீங்களா சார்?”

நடந்தவைகளை அவரிடம் பொறுமையாக சொல்லி முடித்தேன்.

“எந்தக் கடை சார்?”

சொன்னேன்.

“செல்லக் கொஞ்சம் மொதலாளிகிட்ட கொடுங்க சார்”

கொடுத்தேன்.

பேசிவிட்டு அலைபேசியை என்னிடம் கொடுத்தவர், “சிவாவோட கூட்டாளியா சார். தப்பா நெனச்சுக்காதீங்க. உரியவங்ககிட்ட பொருள் போய் சேரனுங்கிற பயம்தான் சார்”

நன்றி சொல்லிப் புத்தகத்தைப் பெற்ருக் கொண்டு கிளம்பினேன்.

 தவறவிட்ட நமது வெற்றுக் காசோலைகள் சிலவற்றை திரும்பப் பெறுவதற்குள் நாம் இவ்வளவு சிரமப் பட வேண்டியிருக்கிறது. தவற விட்ட வெற்றுக் காசோலைகளை எப்படு பட்டேனும் திரும்பப் பெறவே விழைகிறோம். இதில் வயதில் மூத்த நாம் மட்டும் அல்ல, சிறிய குழந்தைகளும் தவறவிட்ட தங்கள் பொருட்களை மீட்க எத்தனை சிரமத்தை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வர். பல நேரங்களில் பள்ளிக் கூடத்தில் கூட்டு வழிபாட்டினை நடத்தித் தரவேண்டிய இடத்தில் இருப்பதால் இதை நன்கு உணர முடிகிறது.

ஒவ்வொரு மாலையும் பள்ளியை மூடும் முன் குழந்தைகள் தவறி விட்டுச் செல்லும் பேனா, பென்சில், ஜாமெண்டரி பெட்டிகள், மற்ரும் டிபன் பாக்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்து தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்படும். அடுத்த நாள் கூட்டு வழிபாட்டில் உள்ள பொருட்களின் பட்டியல் வாசிக்கப்பட்டு உரியவர்கள் தக்க அடையாளத்தை சொல்லி பெற்ருக் கொள்ளச் சொல்வோம். குழந்தைகளின் மனப் பக்குவத்தை நன்கு அறிந்தவரும் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுபவருமான ஆசிரியர் சேவியர் அந்தப் பணியினை சரியாக செய்து முடிப்பார். சில நேரங்களில் ஒரே பொருளுக்கு இரண்டு மூன்று குழந்தைகள் உரிமை கொண்டாடுவார்கள். அதை மிகச் சாமர்த்தியமாக சமாளித்து உரிய குழந்தையிடம் பொருளை சேர்த்துவிடுவார்.

அதை விடுங்கள்,  தெருவில் எதையேனும் கீழே இருந்து எடுத்து “ இது யாருடையது?” என்று கேட்டுப் பாருங்களேன். நான்கைந்து பேராவது திரும்பிப் பார்த்து, உரிமை கோராது போயினும் அது தன்னுடையதாக இருக்குமோ என்றேனும் தடுமாறிப் போவர். இது இயல்பு.

ஆனால் இரண்டு நாட்களாக ஒரு பேருந்து ஓடாமல் அதன் உரிமையாளர் வீட்டில் நிற்கிரது. ஓட்டுநர் வரவில்லை என்று காரணாம் சொல்லப்படுகிறது. அர்த்த ஜாமத்திற்கு கொஞ்சம் பிந்தி அந்தப் பேருந்து நிற்கும் இடம் குறித்த தகவலோடு அந்தப் பேருந்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக ஒரு தொலைபேசி தகவல் வருகிறது. செய்தியைப் பெற்ற அதிகாரி முப்பதிற்கும் ஒன்றிரண்டு குறைவான வயதுடைய ஒரு சின்னப் பெண்.

அந்தப் பின்னிரவிலும் ஒரே ஒரு ஊழியரின் துணையோடு போகிறார்.பேருந்து கூரையில் விரிக்கப்பட்டிருந்த தார்ப்பாய்க்கடியில் சற்றேரக்குறைய ஐந்தேகால் கோடி சிக்கியதாக செய்த்தாள்கள் கூறின.

“:இவ்வளவு பணாத்தை ஏன் சார் பேருந்துக் கூரையின் மேல வச்சிருக்கீங்க?”

“இது என் பணாமில்லங்க மேடம்.” பேருந்து உரிமையாளர் பதறுகிறார்.

“அப்புறம் இது எப்படி உங்க பஸ்ல வந்தது?”

“சத்தியமா தெரியலீங்க மேடம்?”

“இது உங்க பஸ்தானே?”

“ஆமாங்க மேடம்”

எவ்வளவு நாளா உங்க வீட்டு வாசல்ல இந்த பஸ் நிர்குது?”

“ரெண்டு நாளாங்க மேடம்”

“ரெண்டு நாளா உங்க பஸ் உங்க வீட்டு வாசல்ல நிற்குது.அதன் கூரைல உங்களுக்குத் தெரியாம யாரு பணத்த வச்சிருக்க முடியும்?”

“எங்க அம்மா மேல சத்தியமா இது என் பணம் இல்லீங்க மேடம். இது எப்படி இங்க வந்துச்சுன்னும் சாமி சத்தியமா எனக்குத் தெரியாதுங்க”

பிடிபட்ட ஐந்தே கால் கோடியும் அவருடையது அல்ல என்று நிறுவித் தப்பிக்க ஒன்றிரண்டு கோடிகளை செலவழித்தும் ஒன்றும் கதை ஆகாமல் இன்றளவும் அவர் பதட்டத்துடன் இருப்பதாகத் தகவல்.

அடுத்து இன்னொரு இடம்.

அது ஒரு தேநீர்க்கடை. விஷேச காலங்களில் பிச்சுக்கிட்டுப் போற வியாபாரம்னாக்கூட ஆயிரத்தைத் தாண்டி கல்லா கட்டாத கடை. அந்தக் கடையில் ஒரு பெரிய தொகை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வருகிறது. விரைந்த அதிகாரிகளின் கையில் நாற்பது லட்சம் சிக்குகியதா செய்தித் தாள்கள் சொல்லின.

“இந்தப் பணாம் இங்க எதுக்கு வந்தது?”

“என் புள்ளைங்க மேல சத்தியமா இது என் பணம் இல்லீங்க சாமி”

“இது ஒன்னோடது இல்லன்னு தெரியும். யாரோடது? எதுக்கு இங்க வந்துச்சு?”

தேநீர் கடைக்காரரும் சாமி சத்தியமாய் நாற்பது லட்ச ரூபாய் பண மூட்டை எப்படி தனது வீட்டிற்குள் வந்தது என்று தெரியாது என்று சொல்லியிருக்கிறார்.

வழக்கமாக வீட்டிலிருந்துதான் எப்படி போனது என்று தெரியாமல் பொருள்கள் களவு போகும். அவர்களது இடத்திற்குள் அவர்களுக்குத் தெரியாமல் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று தெரியாமல் இருப்பதுதான் தேர்தல் நகைச்சுவைகளிலேயே அதி சிறந்த நகைச்சுவை.

பிடிபட்ட தொகையே லட்சம் கோடிகளைத் தாண்டும்போல இருக்கும் பட்சத்தில் பிடிபடாமல் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பட்டது எவ்வளவு தேறும்?

இவ்வளவு கீழ்மைகளுக்கும் மத்தியில் தேர்தல் நெருக்கத்தில் வந்து விட்டது. மதுரையில் ஒருவர் தனது வீட்டில் “எங்கள் வீட்டு வாக்குகள் விற்பனைக்கு அல்ல” என்று எழுதி வைத்திருக்கிறார். அது என்ன விளைவைத் தரும் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அது நிச்சயமாய் வெளிச்சமான நன்பிக்கையைத் தருகிறது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...