Sunday, August 21, 2016

எது செய்யும் காதல்?



தோழர் லட்சுமி (Lakshmi RS) “நீயும் நானும்” என்ற அவரது கவிதை நூலினை அனுப்பியிருந்தார். மிகவும் அழகான அட்டைப் படம். உள் உள்ள கவிதைகளுக்கு மிக நெருக்கமாக உள்ளது.
“வலது கண்ணும்
இடது கண்ணும் அல்ல
தொட்டுக் கொள்ளவே மாட்டோம்
என்பதற்கு
இரண்டாவது விரலும்
மூன்றாவது விரலும்
நீயும் நானும்”
என்பது மாதிரி 25 ஆண்டுகளுக்கு முன்னால் தங்கம் மூர்த்தி ஒரு கவிதை எழுதியிருந்தான். இந்த அட்டைப்படத்தைப் பார்த்ததும் நாங்கள் எங்கள் சிறு வயதில் கொண்டாடிய அந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.
போக, ‘நீயும் நானும்’ என்ற அந்த நூலின் தலைப்பும் என்னோடு நெருக்கமாக வந்து அமர்ந்து கொண்டது.
மிக மிக சிறிய அளவிலான கவிதைகள். அன்பெனும் மெல்லிய நூல்கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு கவிதைச் சரம் இந்த நூல்.
அகம் சார்ந்த நூல்.
மத்திய வயதை இன்னும் கொஞ்சம் நேரத்தில் கடக்க இருக்கிற ஒரு பெண்ணின் அகத்தை அதற்கு மிக நெருக்கமாக கொண்டுவர முயற்சித்திருக்கும் ஒரு படைப்பாளியின் வியர்வையின் நெடி என்னை வசீகரிக்கிறது.
“சிரிக்கிறது கேலியாக
உன் சட்டைப் பேனா
உருகி உருகி நீ கரைந்தாலும்
நாந்தான் எப்போதும் அவனுடனே
கோபமுடன் நானும்
நான் இருந்தால் அவனருகில்
உனக்கு ஏது வேலை?
உன் வழக்காடு மன்றத்தில்
நாங்கள் இருவரும்
தீர்ப்புக்காக”
என்றொரு கவிதை. இதில் என்ன இருக்கிறது என்றுகூட சிலர் கேட்க்கக் கூடும். இதில் என்ன இல்லை என்கிறேன் நான். நெஞ்சுக்கு நெருக்கமாக அதிக நேரம் இருக்கும் பேனாவைப் பார்த்து பொறாமைப் படும் ஒரு பெண்ணின் அழகான மனசை மிகுந்த ரசனையோடு கொண்டுவர முயற்சித்திருக்கிறார்.
புரிந்து கொள்ளப்படாத பெண்ணின் அன்பு குறித்து எத்தனையோ பேர் எத்தனையோ எழுதி குவித்திருக்கிறார்கள். இவர் எழுதுகிறார்
“புதியதோர் உலகத்தில்
புரியாத மொழிகளில்
மாட்டிக்கொண்டு முழிக்கிறது
என் அன்பு”
அன்புக்காக ஏங்கி ஏங்கி அலையும், ஒரு மென்மையான
ஜீவனின் அழுகையாகவே இது எனக்குப் படுகிறது. ‘புரியாத மொழி’ என்று எழுதவில்லை, ‘புரியாத மொழிகளில்’ என்பது அன்புக்காக ஏங்கி தொடர்ந்து சுநலமிகளால் ஏமாற்றப் படும் ஒரு இதயத்தை நேர்த்தியாக சொல்கிறார்.
ஒருவனின் மனுஷி அவனது சகோதரியுமாவாள். பிரச்சினை என்னவெனில் ஒருத்தியின் மனுஷன் அவளுக்கு சகோதரனாகவும் இருக்கவேண்டும் என்பதை இன்னும் ஆணுலகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான். இவரெழுதுகிறார்,
ஓடிவா என்னிடத்தில்
ஓர் துயரம் உனக்கென்றால்
அன்னையாய் நான்
அரவணைக்க
தோழியாய் தோள் கொடுக்க
சகோதரியாய்
சஞ்சலம் தீர்க்க
உனக்காக நான்
உனக்காக மட்டுமே நான்”
எது செய்யும் காதல்? என்பதற்கு இந்த ஒரு கவிதை போதும்
“உன்னுடன் பேச இயலாத
வார்த்தைகளுக்காக
பிறருடன் பேச இயலும்
வார்த்தைகள்கூட
கொஞ்சம் கொஞ்சமாய்
மரித்துப் போகின்றன”
என்று ஓரிடத்தில் எழுதும் இவர் பிரிதோர் இடத்தில்
”உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும்
ஆன்மாவை
உன்னுடன் பேசிவிட்டு”
என்கிறார். காதல் உரையாடல் ஆன்மாவைப் புதுப்பிக்க வேண்டும். ஆன்மாவைப் புதுப்பித்தல் என்பது காதலின் சாரம்.
“பருவம் தப்பி வந்த
அடைமழை நான்”
என்று சொல்கிறார். இதில் ஆதங்கப் படுவதற்கு ஒன்றும் இல்லை. காதலுக்கும் கவிதைக்கும் ஏது பருவம்? தாமதமாக வந்த அடைமழை என்றே கொள்கிறேன்.
இந்தக் கவிதைகளை இவ்வளவு கொண்டாட ஒரு காரணம் இருக்கிறது. இந்த நூலுக்குள்ளான எனது பயணம் ஒன்றைக் கண்டடைந்திருக்கிறது. இதைவிடவும் காத்திரமான கவிதைகள் இவருள் இருக்கின்றன. உற்சாகிப்பதன் மூலமும் கொண்டாடுவதன் மூலமாகவும் அதை சாத்தியப் படுத்த முடியும்.
கொண்டாடுகிறேன்.
இதை ’பன்முகம்’ வெளியிட்டிருக்கிறது. புத்தகத்தில் முகவரி இல்லை வாங்கி வைக்கிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...