Friday, May 1, 2015

22 வீட்டுக்கொரு மரம் ....வகுப்புக்கொரு இதழ்

நடத்த முடியுமா?

நடத்துகிறார்கள்.

நடத்தலாம் சரி. தொடர்ந்து  நடத்த முடியுமா?

தொடர்ந்தும்  நடத்துகிறார்கள்.

அப்படியா? அப்படி எனில் அவர்கள் தேர்வில் தோல்வியுற்று அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்று வாழ்க்கையை நாசமாக்கொண்டிருப்பார்கள்.
சத்தியமாய் இல்லை. அனைவரும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று சமூக அக்கறையோடு கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

”என்னதிது?  நல்லா இல்லைனாலும் புரியற மாதிரி எழுதுவாயே. என்ன ஆச்சு எட்வின் உனக்கு?”

ஒன்றுமில்லை. நடத்த முடியுமா? தொடர்ந்து நடத்த முடியுமா? என்பதாக மேலே நீண்ட உரையாடல் சிற்றிதழ் நடத்துவது சம்பந்தமானது. தொடர்ந்து நடத்தி சாதித்துக் காட்டி தொடர்ந்து கொண்டுமிருப்பவர்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்தான் இந்த தொடரோட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலே நிகழ்ந்த உரையாடல் என்பது எனக்குள்ளே நிகழ்ந்ததுதான். கேள்விப் பட்டதிலிருந்து என்னாலேயே நம்ப முடியாமல்தான் குழம்பிக் கிடந்தேன். ஆனால் குறிப்பிட்ட சீரான இடைவெளியில் ( மாதா மாதம் ) வந்துகொண்டிருக்கும் “சமூகமே எந்திரி” , “பேனா முனை” , “சிற்பியின் விதைகள்”, மற்றும் “சுழல்” ஆகிய இதழ்கள் என் முன்னே கிடக்கின்றன.
தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் எந்த வித ஆரவாரமுமின்றி தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் ஒரு மாத இதழோடு தொடர்புடையவன் என்கிற வகையில் மிகுந்த ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிற விஷயமாகவே எனக்கிது படுகிறது.

சிற்றிலக்கிய இதழ்களைப் பொறுத்தவரை முப்பது வருடங்களுக்கு முன்னால் ”செந்தூரம்” தொடக்கவிழாவில் பேராசிரியர் பெரியார்தாசன் பேசியதைத்தன் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சொன்னார்,
“சிறு பத்திரிக்கை நடத்துவதென்பது ஒரு காஸ்ட்லியான தற்கொலை”
அவர் ஏதோ போகிற போக்கில் உதிர்த்துவிட்டுப் போன நகைச்சுவைத் துணுக்கல்ல அது. ஒவ்வொரு இதழும் ஒரு பிரசவம் போன்றது என்பார்கள். அது உண்மைதான். ஆனால் அது ஒரு தற்கொலைக்கு சமம் என்பதை சிற்றிதழோடு தொடர்புடையவர்கள் நன்கு உணர்வார்கள்.
சத்தியமாய் தற்கொலைதான். ஆனால் ஒவ்வொரு இதழ் கொண்டு வருவதற்காகவும் தற்கொலை செய்து கொள்பவன் இதழ் வந்த அடுத்த கணமே உயிர்த்தெழுந்து விடுகிறான்.

இப்படியும் சொல்லலாம், உயிர்த்தெழும் வல்லமை உள்ளவனால் மட்டுமே ஒரு சிற்றிதழை தொடர்ந்து நடத்த முடியும். எனில், மேற்சொன்ன இதழ்களை நடத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் உயிர்த்தெழும் வல்லமை கொண்டவர்களே.

” ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” என்றாள் கிழவி. அது பிள்ளைகளுக்கு சொன்னது. நமக்கல்ல என்பதாக ஆசிரியர்களின் மனோபாவம் சுறுங்கிப் போனதோ என்று அச்சப் படுமளவில்தான் இன்றைய ஆசிரியத் திரளின் ஒரு பகுதி வாசிப்பை விட்டு விலகி நிற்கிறது. பாடத் திட்டத்தை தாண்டி நகரமறுக்கும் ஒரு திரளும் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசினால் செய்தித்தாள்களை வாசிக்காத ஆசிரியர்களையும் நானறிவேன்.

விதி விலக்காக வாசித்துக் குவிக்கிற ஆசிரியப் பெருமக்களும் இருக்கவே செய்கிறார்கள். சொறிபிடித்தவன் கையும் பேனா பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்பாகள். அது மட்டுமல்ல நல்ல புத்தகத்தைப் படித்தவனாலும் சும்மா இருக்க முடியாது. அதுவும் நல்லதை வாசித்த நல்லவன் ஒருவனுக்கு சும்மா இருப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

இதுதான் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியிலும் நடந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தீவிரமான வாசிப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். தீவிர வாசிப்பாளனால் சும்மா இருக்க இயலாது. வாசித்தவை பற்றி அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அது விவாதம் வரை நீண்டிருக்கிறது. ஆழமாய் விவாதித்திருக்கிறார்கள். வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வரைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று ஒரு புள்ளியில் அக்கறை கொள்கிறார்கள். வாசிப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நல்ல இதழ்களை வாசிக்க கொடுத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் கொடுத்த பத்திரிக்கைகளுள் ”காக்கைச் சிறகினிலே” வும் ஒன்று என்பதுமகிழ்ச்சியைத் தருகிறது.

இதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறார்கள். வாரா வாரம் வாசித்தவைகளைப் பற்றி கட்டமைக்கப் படாத அமைப்பாகக் கூடி விவாதிக்கிறார்கள். பையப் பைய இந்த நிகழ்வுகளுக்குள் மாணவர்களும் வருகிறார்கள். இவற்றிற்கு இவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளரிடமிருந்து ஆதரவு கிடைக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்களில் சிலர் எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்கள். எழுதியவற்றை கொண்டுசெல்ல தாங்களே ஒரு இதழைத் தொடங்கினால் என்ன என்று சிந்திக்கிறார்கள். தலைமை ஆசிரியர் “ஆஹா” என்கிறார்.   என் ஆசி எப்போதும் உண்டென்கிறார்  தாளாளர்.
விளைவு அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நடத்தும் “சுழல்” என்ற இதழ் பிறக்கிறது. அந்த இதழின் வெளியீட்டு விழாவை பள்ளி நிர்வாகம் மிகச் சிறப்பாக நடத்துகிறது. ஆசிரியர்களை உச்சி முகந்து கொண்டாடுகிறார் தாளாளர்.

ஆயிரம் பிரதிகள் போடுகிறார்கள், கொண்டு சேர்க்கிறார்கள் என்பது நினைத்தும் பார்க்க முடியாத விஷயம். வந்தவாசியில் இந்த இதழை நான் பார்த்திருக்கிறேன். நேற்று புதுக்கோட்டையில் முத்துநிலவன் வீட்டிலும் சுழலைப் பார்க்கிறேன். பரவலாய் நாடு முழுக்கக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆயிரம் பிரதிகள் என்பது லேசான காரியமே இல்லை. அது எவ்வளவு கடினமென்பது எனக்குத் தெரியும். வெறும் 300 பிரதிகளைத் தாண்டாத வலுவான சிற்றிதழ்களை நானறிவேன். எப்படி இந்த அதிசயத்தை இவர்கள் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள்?

ஒரு சிறு பத்திரிக்கை நடத்த முதலில் பணம் தேவை. அதைத் தொடர்ந்து படைப்புகள். அதனைத் தொடர்ந்து இதழை நடத்த ஒரு குழு.
சுழல் நடத்த மாதா மாதம் தோறாயமாக எட்டாயிரம் ரூபாய் தேவைப் படுகிறது என்கிறார் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர். இதை எப்படி சமாளிக்கிறார்கள்?

500 சந்தாதாரர்கள் இருப்பதாக அவர் சொன்னபோது நான் வியப்பின் உச்ச்சிக்கே போனேன். முழுநேரமாய் பத்திரிக்கைத் தொழிலை செய்யக்கூடிய நண்பர்களுக்கே இது சாத்தியப் படாத ஒன்றுதான்.

வருட சந்தா எண்பது ரூபாய் என்கிறார்கள். எனில் இந்த வகையில் 40000 ரூபாய் வருகிறது. இந்த வகையில் மாதம் 3000 ரூபாய் ஒதுங்குகிறது. விற்பனையில் 3000 வருகிறது என்கிறார். எவ்வளவு ஆச்சரியமான விஷயம். மிச்சத்தை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதைப் பார்த்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஏன் நமக்கென நாமே ஒரு இதழைத் தொடங்கக் கூடாது என்று சிந்திக்கிறார்கள். விளைவு, “சமூகமே எந்திரி” என்ற இதழ் உதயமாகி உள்ளது. தஙளது ஆசிரியர்களுக்கு இதழ் நடத்துவதில் ஏற்பட்ட அனுபவங்களை உள் வாங்கியவர்களாக அவர்கள் இதழை ஆரம்பித்துள்ளார்கள்.. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இதழ் இது எனில் அடுத்த ஆண்டு இந்த மாணவர்கள் வெளியேறிவிடுவார்களே? என்றேன். அடுத்த ஆண்டும் பத்தாம் வகுப்பு இருக்கும். அதிலும் மாணவர்க இருப்பார்கள். அவர்கள் தொடர்வார்கள் என்கிறார்.

இப்படித்தான் “பேனா முனை” “சிற்பிகளின் விதை” ஆகிய இதழ்களும் வெளி வருகின்றன

“அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாகவும் அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாகவும் மாற்றுவது கல்வி. ஆனால், இன்றைய நிலையில் கல்வியானது வெறும் பணம் சம்பாரிக்கும் தொழிலாக மாறிவிட்டது”
இது எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் எழுதிய தலையங்கம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை

கூடங்குளத்தைப் பற்றி இப்படி கவிதையாக்குகிறான் ஜா. முத்து என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவன்,

“கரண்டுக்காக
கல்லறையைக் கட்டி ஏமாந்தான்
இந்தியன்.”

இதுபோல நிறையத் தெறிப்புகளை இந்த இதழ்களில் நம்மால் பார்க்க முடிகிறது.

இதில் வெளிவந்த கவிதைகளை தொகுத்து “மொட்டுகளின் வாசம்” கவிதை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள் பள்ளியின் நிர்வாகக் குழுவினர். பெரிய விழாவெடுத்து இந்தத் தொகுப்பினை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறர்கள் பள்ளியின் தாளாளரும் தலைமை ஆசிரியரும். இதைப் பள்ளியின்
69 வது ஆண்டுவிழா வெளியீடு எனச் சொல்லி பெருமை பட்டிருக்கிறார்கள்.
நிறைய பிம்பங்களை கட்டுடைத்திருக்கிறார்கள் இந்தப் பள்ளியின் நிர்வாகிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும்.

1 ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சமூக அக்கறை அவ்வளவாக இல்லை என்று விஷம்போலப் பரவி வரும் பொதுப் புத்தியைத் தகர்த்து தூளாக்கியிருக்கிறார்கள்.

2 இதுமாதிரி நடவடிக்கைகள் மாணவர்களை கல்வியிலிருந்து அப்புறப் படுத்தும் என்கிற பொதுவான குற்றச்சாட்டினையும் தங்களது தேர்ச்சி விழுக்காடு மற்றும் அதிக மதிப்பெண்கள் மூலம் சரித்துப் போட்டிருக்கிறார்கள்.

3 படிப்பு படிப்பு படிப்பு என்கிற நிலை மட்டுமே மாணவனின் எதிர்காலத்தை செறிவாக்கும் என்கிற பிம்பத்தையும் தகர்த்துப் போட்டிருக்கிறார்கள்.
4 ஆசிரியர்களும் மாணவர்களும் நிர்வாகமும் எந்தப் புள்ளியிலும் ஒன்றிணைய முடியாது என்கிற கருத்தையும் துடைத்தெறிந்திருக்கிறார்கள்.
இதுமாதிரியான ஒன்றிணைவும் புரிதலும் இருந்து விட்டால் எந்த மாணவனும் ஆசிரியனுக்கெதிராக கத்தியைத் தூக்கமாட்டான். அந்த வகையில் இந்தப் பள்ளி ஒரு முன்னுதாரனமாக விளங்குகிறது.
இன்றைய நமது எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் படித்த பள்ளி, முன்னாள் அமைச்சர் இராம வீரப்பன் அவர்கள் படித்த பள்ளி என்பதிலெல்லாம் எவ்வளவு பெருமையும் மகிழ்வும் கிடைக்கிறதோ அதற்கு சற்றும் குறையாத அளவு மகிழ்ச்சியும் பெருமையும் இதில் இத்தகைய மாணவர்களாலும் மாணவர்களாலும் பள்ளிக்குக் கிடைப்பதாகவே நிர்வாகியும் தலைமை ஆசிரியரும் நம்புகிறார்கள்.

ஆசிரியர்கள் பத்திரிக்கை நடத்துகிறார்கள். பத்தாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களும் பத்திரிக்கை நடத்துகிறார்கள்.

அடுத்து?

ஒரு ஆசிரியர் சொல்கிறார்,

”ஒரு வீடு ஒரு மரம் என்பது போல் ஒரு வகுப்பு ஒரு இதழ் என்பதே எங்கள் கனவு”

கனவு பலிக்கட்டும்.

நன்றி : “ காக்கைச் சிறகினிலே”

2 comments:

  1. போற்றுதலுக்கு உரிய பள்ளி தோழர்
    போற்றுவோம் பாராட்டுவோம்
    எம் பள்ளியிலும் இவ்வாண்டு இதழ் தொடங்கிட
    முயற்சிக்கிறேன் தோழர்
    ந்ன்றி
    தம 2

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்கள் தோழர். கொண்டாடி விடுவோம்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...