அலைபேசியில் மூழ்கியிருந்தவனின்
தோளில் கிடந்த குழந்தை
"பாவம் ...
சூரியனுக்கு குளிருதாம்"
என்று சொன்னது
எனக்கு ஏன் கேட்டது?
நகைச்சுவைத்து கடக்கவிடாமல்
குழந்தையின் கவலை தோய்ந்த குரல்
ஏன் என்னை
குடைந்துகொண்டே இருக்கிறது?
அது சரி
சூரியனுக்கு குளிருவதாக
குழந்தையிடம் யார் சொன்னது?
யாரும் சொல்லாத பட்சத்தில்
சூரியனுக்கு குளிர்வதாக
குழந்தை தானாக உணர்ந்தது ஏன்?
ஒருக்கால் சூரியனுக்கு உண்மையிலேயே
குளிர்கிறதோ என்னமோ
நெருப்புக்கு குளிரெனில்
போர்வையை எதில் நெய்வது?
அய்யோ அய்யோ
ரேஷன் கடைக்கு வேறு
போக வேண்டும்
இரண்டு கட்டுரைகளை
முடிக்க வேண்டும்
முடியும் வரைக்குமேனும்
குழந்தையின் கவலையை
யார் தோளில் சாய்ப்பது?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்