Monday, March 21, 2016

ஜாதிதானே இணைப்பதும் பிரிப்பதும்.



அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ராஜா அவர்களே,
வணக்கம்.
முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன்.
நான் நாத்திகன்.
என் தந்தை கிறிஸ்தவர்.
அவர் இறந்தபோது ஊர்மக்கள் திரண்டு வந்து அவர் தங்களோடு ஒன்றோடு ஒன்றாய் வாழ்ந்ததாகவும் எனவே அவரை இந்து முறைப்படி அடக்கம் செய்துகொள்ள அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.  அவரை இந்து முறைப்படி அடக்கம் செய்து காக்காய்க்கு சோறு வைத்து அழைத்தவன் நான். இன்னும் சொல்லப்போனால் கடவுள் இல்லை என்பதில் தெளிவாய் இருக்கும் நான் எங்கள் கிராமத்து தோழர்கள் கேட்டுக் கொண்டதற்கு சம்மதித்து கொஞ்சநேரம் உடலில் பட்டை போட்டு இருந்தவன் .
அவர்கள் இந்துக்கள், என் அப்பா கிறிஸ்தவர், நான் நாத்திகன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. காரணம் எங்களில் யார் ஒருவர் இல்லை எனினும் அது முழுமை இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறோம்.
தெரிந்து கூறினீர்களோ அல்லது வழக்கம் போலவே என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசினீர்களோ தெரியவில்லை. ஆனால் மிகச் சரியான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள்.
“இந்துக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் ஹிட்லராக மாறுவேன்” என்று சொல்லியிருக்கிறீர்கள். என்ன ஒரு கொடுமையெனில் உங்களிடமிருந்து ஹிட்லரையும் காப்பாற்ற வேண்டியது இருக்கிறது.
ஒன்று தெரியுமா, ஹிட்லர் சொல்வதை அச்சுப் பிசகாமல் செய்வதற்கு வெறிகொண்ட ஆட்கள் அவனிடம் இருந்தது. நீங்கள் சொன்னதை யாருமே கண்டுகொள்வதில்லை. அப்படியே அதிகமாய் அதற்கெதிராய் ஜனங்கள் திரண்டாலும் ‘அது அவரது சொந்தக் கருத்து. பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம்’ என்று மரியாதைக்குரிய தமிழிசை சொல்லிவிடுவார்கள். 
பாவம் ஹிட்லர், அவனை விட்டுவிடுங்கள்.
நீங்கள் இதை புதிதாக சொல்லவில்லை. உங்களது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே ‘உலகில் எந்த மூலையில் இந்துக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் நாங்கள் தலையிடுவோம்’ என்பதுமாதிரி சொல்லியிருந்தீர்கள். 
உங்கள் தேர்தல் அறிக்கையின் இந்தப் பகுதியை அப்போதே வரவேற்றவன் நான். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது ராஜா.
இந்துக்களுக்கு பாதிப்பு என்றால் இந்துக்களின் பிரதிநிதியாகிய நீங்கள் கேட்காமல் யார் கேட்பது?
சில கேள்விகள் இருக்கிறது ராஜா,
கொஞ்சநாளைக்கு முன்னால் ,’அவனவன் அவனவன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டால் ஏன் பிரச்சினை வரப்போகிறது?’ என்பதாக பேசியுள்ளீர்கள். எனில், ஜாதி தாண்டினால் பிரச்சினை வரும் என்கிறீர்களா? அல்லது ஜாதி தாண்டினால் பிரச்சினைகளை உண்டுபன்னுமாறு தூண்டுகிறீர்களா?
உடுமலையில் ஒரு இந்து இன்னொரு இந்துவைத் திருமணம் செய்துகொண்டதற்காக அவனை எல்லோரும் பார்க்கிறபோதே நடுரோட்டில் வெட்டி சாய்த்தார்கள்.
வெட்டப்பட்டவன் இந்து திரு ராஜா அவர்களே.
இல்லை , அவன் தலித் என்று சொல்லப்போகிறீர்களா?
எனில், அவன் இந்து இல்லையா?
இல்லை அவன் இந்துதான் எனில் நீங்கள் ஏன் ஹிட்லராக மாறவில்லை. ஹிட்லராக மாறாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஏட்டையா ரேஞ்சிற்கேனும் ஏன் நீங்கள் மாறவில்லை?
இல்லை அவன் இந்து இல்லை எனில், யாரெல்லாம் இந்து?
பல கிராமங்களில் இந்து இடைச்சாதியும் கிறிஸ்தவ இடைச்சாதியும் ஒன்றிணைந்து தலித்துகளை நசுக்கும் போக்கினை நீங்கள் அறிவீர்களா? எனில், மதமல்ல ஜாதிதானே ராஜா இணைப்பதும் பிரிப்பதும்.
இப்போதும் கையேந்திக் கேட்கிறேன், வாருங்கள் ராஜா, எல்லோரும் இணைந்து தேசத்தைக் கட்டுவோம்.
அதெல்லாம் இல்லை என்று சொல்வீர்களேயானால் இன்னும் பச்சையாக கேட்கிறேன்
எந்தெந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இந்துக்கள்?
உங்கள் இயக்கத்தைச் சார்ந்த தோழர் வானதி அவர்கள் எவ்வளவு நேர்த்தியாக தனது வாதங்களை அடுக்குகிறார் பாருங்கள். எமக்கு முரணான விஷயங்களைக்கூட எத்துனை நாகரீகமாக அடுக்குகிறார். உங்களுக்கு நேரெதிராக செயல்படும் மரியாதைக்குரிய வீரமணி அவர்கள் வானதி அவர்களை சந்திக்க நேரிட்டபோது இதற்காக கஞ்சத்தனமே இல்லாமல் பாராட்டினாரே. வானதி தோழர் அப்படியே நெகிழ்ந்து போனார்களே.
ஒரு மாபெரும் இயக்கத்தின், தேசத்தை ஆளுகின்ற ஒரு இயக்கத்தின் மரியாதைக்குரிய தேசியச் செயலாளர் நீங்கள் என்பதை உணர்ந்து பேசுங்கள் என்று மிகுந்த அன்போடு கேட்கிறேன்.

4 comments:

  1. சரியான சாட்டையடி தோழரே!
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. வலிதாங்காத வேதனையின் தெறிப்பு தோழர்

      Delete
  2. நல்ல கேள்விகள்.நல்ல பதிவு.ஆனால் இவர் திருந்த மாட்டார்.
    karthik amma

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...