Wednesday, March 23, 2016

தொடர்வார்கள் என் தோழர்கள்



இளைஞர் முழக்கத்திற்காக தம்பி ரமேஷ் பாபு எழுதி வாங்கி 18 வருடங்கள் இருக்கும். இப்பவும் எனக்கு இதைப் பிடிக்கும்.
............................................................................................................
கண்கள் கலங்க
கைகள் நடுங்க ... 
என்ன இது?
என் இறுதி நொடிகளின்
சாட்சி நீ
என் இறுதிப் பயணத்தின்
சக பயணி நீ
கலங்காதே
காயம் பட்டு விடும்
என் மரணத்தின் கம்பீரம்
எங்கே
ஒரு புன்னகையோடு
கதவு திற காவல் நண்பனே
மரணம் வாங்க
ஒரு மகத்தான பேரணி
என்ன பேரணி...
முழக்கமேயில்லாமல் ?
எங்கே
என்னோடு சேர்ந்து
நீயும் முழங்கு
"இன்குலாப் இன்குலாப்
இன்குலாப் ஜிந்தாபாத் "
நாளை போய் உலகு சொல்
காற்று வாங்க
கடற்கரை போகும்
குதூகலத்தோடும் ...
விருது வாங்கப் போகும்
வீரனின் மிடுக்கோடும்
மரணம் வாங்க
நடந்தான் பகத் என்று
உலகை நோக்கி
உரக்க சொல் நண்பா!
எந்தத் தேவதையும்
என் இறுதி வழியில்
பூ மாறிப் பொழியவில்லை
ஒளி வட்டம் முளைக்க
வானம் கிழித்து வந்த
வாகனமேறி
நான்
வைகுந்தம் போகவில்லை
போகிற பாதை எங்கும்
தன் சொந்தப் புன்னகையை
தூவிப் போனான்
இவனென்று சொல் நண்பா
மக்கள் போராளிகளின்
உதிரத்திலும்
வியர்வையிலும்
கசிவேன் நான்
நீ கதவில் கை வைத்த
நொடி வரைக்கும்
லெனின் படித்தேன்
உனக்கு
லெனின் தெரியுமா?
நண்பா
எனக்கே
தாமதமாய்த் தெரியும்
கிடைக்க வேண்டிய
எங்களுக்கு
லெனின் மட்டும்
கிடைத்திருந்தால்
நாங்கள் இதயத்தில்
லெனினை ஏந்தியிருப்போம்
அடடா...
போராட்டப் பாதையே
திசை மாறிப் போயிருக்கும்
தேச விடுதலையோடு
ஜனங்களின் விடுதலையும்
சேர்த்தே வந்திருக்கும்
இந்தா
இந்த முத்தத்தை
சிந்தாமல் சிதறாமல்
சேர்த்துவிட்டு
துர்கா மகளிடம்
இறுதி வரை
மாமன் உன்னை
நினைத்திருந்தான்
என்று சொல்
கருணை மனு தந்த
சங்கடம்
என் தூக்குமேடை வரைக்கும்
கூடவே தொடர்ந்ததாய்
என் தந்தையிடம் சொல்
என்ன இது
துக்கம் காட்டும்
கருப்புத் துணி
தூர எறி
பூமி பார்த்துப் பிறந்தால்
பூமி வாங்குவானாம்
பூமி பார்த்து சாகிறேன்
என் மக்கள்
பூமி மீட்கட்டும்
அதிகாரிகளே
கொடுத்து வைத்தவர்கள்:
நீங்கள்
சிரித்துக் கொண்டே
சாகும் மனிதனை
உங்களைத் தவிர
யார் பார்க்க முடியும்
"எல்லாம் முடிந்தது "
என்று சொல்ல
நான் ஒன்றும் ஏசுவல்ல
தொடங்கச் சாகிறேன்
தொடர்வார்கள் என் தோழர்கள்
விடுதலை பூமியில்
உச்சி சூரியனின்
வெயிலாய் கசிவேன் நான்
"இன்குலாப் இன்குலாப்
இன்குலாப் ஜிந்தாபாத் "

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...