Thursday, January 7, 2016

ஒரு கொடம் தண்ணி ஊத்தி

வெளிவரவுள்ள தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களுடைய “ ஒரு கொடம் தண்ணி ஊத்தி “ என்ற கவிதை நூலுக்கான எனது அணிந்துரை
**********************************************************************************

“ தன்னிரு கைகளால்
குழந்தையின் முகத்தை வருடி
தன் தலையில் சொடுக்கிட்டபடி
எங்களை
கடந்து செல்லும் திருநங்கைக்கு
‘ அத்த டாட்டா’ என்றது
குழந்தை”
இந்த ஒரு கவிதை போதும் இந்தக் கவிதைநூலை எல்லோருக்கும் சிபாரிசு செய்வதற்கு. “ கவிதை என்பது ஊடுருவி உருக்குலைப்பது” என்று சுந்தர ராமசாமி ஏதோ ஒருபொழுது சொன்னதாய் ஞாபகம். அந்த வேலையை கணக் கச்சிதமாக செய்கிறது இந்தக் கவிதை.
திருநங்கைகளைப் பற்றி பொதுவெளியில் படிந்துகிடக்கும் தூசிபடிந்த பிம்பத்தை ஊடுருவி, உருக்குலைத்து, ஊதித் தள்ளி ஒரு அழகான காட்சியாய் விரிகிறது இந்தக் கவிதை.
அது ஒரு புறநகர் ரயில்பெட்டியாக இருக்கலாம், அல்லது ரயிலடியாகவோ, அல்லது பேருந்துநிலையமாகவோ அல்லது ஒரு கோவிலாகவோ இருக்கலாம். பிச்சை எடுக்கவோ வேறு எதற்காவோ ஒரு திருநங்கை வருகிறார். பார்த்த மாத்திரத்திலேயே பெரும்பான்மையோர் முகம்சுளிக்கவோ அல்லது பகடி செய்யவோதான் செய்திருப்பார்கள். அந்த இடத்தில் இருக்கும் குழந்தை ஒன்று பயந்திருக்கும் அல்லது ஒதுங்கியிருக்கும்.
இதுமாதிரி சூழலில் திருநங்கைகள் பொதுவாக கைகளைத் தட்டியபடி சத்தமான குரலெடுத்து காசு கேட்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கொரு திருநங்கை குழந்தையின் முகம் வருடி தலையில் நெட்டிமுறிக்கிறார். ஒரு புள்ளிவரை ஆணாக அறியப்பட்டு, ஆணாகவே வாழ்ந்து திருநங்கையாகிப் போன ஒருவரிடம் சுரக்கும் தாய்மையை கண்டுணர்ந்து காட்சிப்படுத்தும் தமிழ்ப்பித்தன், அந்தக் குழந்தையை விட்டு அந்தத் திருநங்கையை ’அத்த’ என அழைக்க வைத்து காட்சியை கவிதைப் படுத்துகிறார்.
குழந்தைகள் நடக்குமிடமெல்லாம் நந்தவனம்தான். அதை தரிசிக்க இயலாதவர்கள் சபிக்கப் பட்டவர்கள். இப்படியான எனது அசைக்க முடியாத நம்பிக்கையை எவ்வளவு அழகாக கவிதையாக்குகிறார் பாருங்கள்,
“ஒரு கொடந் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்துச்சாம்
ரெண்டு கொடந் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்துச்சாம்..
மூனு கொடம்.
பொன்னாத்தா வெள்ளாண்டது போதும்
வெரசா வீட்டுக்கு வாடி…
ஒரு பூந்தோட்டம்
அமைக்கும் பணி
பாதியிலேயே நின்று போனது”
வீடியோ விளையாட்டுக்களும் வீட்டுப் பாடங்களும் தாண்டி “ஒரு கொடம்…” விளையாட்டுக்கெல்லாம் இப்போது ஏது நேரம்? அப்படி ஒரு வாய்ப்பு எங்கேனும் நிகழ்ந்தாலும் பூந்தோட்டங்களும், நந்தவனங்களும் அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்கு இந்தச் சமூகம் எப்படி பெற்றோர்களை பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதை இந்தக் கவிதை எவ்வளவு அழகாக சொல்கிறது.
“யானையானேன்
மேலமர்ந்தாள்
வனத்தை பிரசவித்தது வீடு”
யானையாய் மாறி குழந்தைகளை சுமந்த தந்தைகளால், மாமன்களால், தாத்தன்களால் புன்னகைத்துக் கொண்டாடாமல் இந்தக் கவிதையைக் கடந்துவிட முடியாது.
கடலுக்கும் குழந்தைகளுக்குமான உறவு அலாதியானது. அதை அவ்வளவு எளிதில் படைப்புகளுக்குள் கொண்டுவந்துவிட முடியாது. அவ்வளவு நுட்பமான உறவு அது.
ஒருமுறை கீதாஞ்சலி பிரியதர்ஷினி இந்த நுட்பத்தை ஒரு கவிதையில் வெளிப்படுத்தியிருந்தார். இரண்டு நாள் யோசித்தும் கவிதை வரிகளை அப்படியேத் தர இயலவில்லை. ஆனால் இப்படித்தான் கவிதை போகும். எதிர்வீட்டுக் குழந்தை ஒருத்தி இவரிடம் அடுத்தநாள் நடக்கும் கவிதைப் போட்டிக்கு நாலு வரிகளுக்குள் கடலை கவிதையாக்கித் தருமாறு கேட்டுவிட்டு ஓடிவிடுவாள். நாலு வரிகளுக்குள் அகப்படுகிற கடலை எங்கே பிடிப்பது என்ற இவரது உணர்வை கீதாஞ்சலி அவ்வளவு அழகாக கவிதையாக்கியிருப்பார்..
நான்கு வரிகளுக்குள் கடலை அடக்க குழந்தைகளால் மட்டுமே முடியும். ஒரு சின்னக் குவளையை நீட்டி அதற்குள் வந்து அடங்குமாறு ஒரு குழந்தை கேட்டால் வங்கக் கடலே மகிழ்ந்து அந்தக் குவளைக்குள் அடங்கும். குழந்தைகள்மீதான கடலின் நேசம் அப்படி.
”தலைக்குமேல்
தலைக் குப்புறக் கவிழ்ந்து
நனைத்துவிட்டுப் போனது
காற்றில் பறந்த
குழந்தை வரைந்த
தண்ணீர் வாளி”
என்று நான்கூட ஒருமுறை இந்த நுட்பத்தை கவிதையில் கொண்டுவர முயன்றிருக்கிறேன். ஆனால் கடலுக்கும் குழந்தைகளுக்குமிடையிலான இந்த நுட்பமான உறவை, நேசத்தை தனது இரண்டு கவிதைகளில் மிக செறிவாக செதுக்கியிருக்கிறார் தமிழ்ப் பித்தன்.
1
“எல்லோரும் கடலை ரசித்தனர்
கடல்
குழந்தைகளை ரசித்தது”
2
ஓடியா..
ஓடியா…
கடல் வாங்குனா மீன் இலவசம்
மீன் வாங்குனா கடல் இலவசம்
மூதாட்டியின் குரலுக்கு கூட்டம் கூடியது
எல்லோரும் மீனை வாங்கினர்
கடலுக்கு பதில் கேரிப்பை
இலவசமாகக் கேட்டனர்
மீந்த கடலை
வீதியில் வீசினாள் மூதாட்டி
குழந்தைகள்
கப்பல் செய்யத் துவங்கி விட்டனர்”
ஒரு கவிதையில்,
“சுருதி சேரல
இன்னும் நன்னா கத்துக்கிட்டு வா” 

என்கிற இடத்தில் பொம்மையையும் தன் தம்பியாய் நேசிக்கத் தெரிந்த குழந்தைகளிடத்தில்கூட பல்லைக் காட்டும் பார்ப்பணியத்தின் மீதான இவரது விமர்சனத்தைக், எரிச்சலை, கோவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அழகியலை, குழந்தைமையை, இயற்கையை கவிதையாக்குவது போவவே தனது எரிச்சலையும் கோவத்தையும்கூட கவிதையாக்குற தொழில் நுட்பத்தை இவரிடம் நான் கற்றாக வேண்டும்.
உலக குழந்தைகளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட “ஒரு கொடந் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்” என்கிற கவிதை நூலை வாசிக்கிற வரம்பெற்ற உங்களை வாழ்த்துகிறேன்.
நான் அந்த மூதாட்டி வீதியில் வீசிய கடலில் குழந்தைகள் இயக்கும் ஏதோ ஒரு காகிதக் கப்பலில் அந்தக் குழந்தைகளோடு ஏதோ ஒரு தீவு நோக்கி பயணிக்கப் போகிறேன்.

2 comments:

  1. சுந்தர்ஜியின் கவிதைகளும் தஞ்சைகவிராயர் கவிதைகளும் நினைவில் மோதின. வார்த்தைகள் நினைவுக்கு வரவில்லை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...