Wednesday, January 20, 2016

11 தேர்ச்சி பெறாதவர் என யாரும் இல்லை

எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெறவேண்டும் என்பதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சமீப காலமாக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித்துறை செயலர் மாதா மாதம் உயரதிகாரிகளைக் கூட்டி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும்படியாக கல்வித்துறையின் செயல்பாடுகளை முடுக்கி விடும்படி அறிவுறுத்துகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை மாதத்திற்கு இரண்டு மூன்று கூட்டங்களை போட்டு முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்வித்துறை அதிகாரிகள் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை தலைமை ஆசிரியர்களைக் கூட்டி முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல தலைமை ஆசிரியர்கள் தினந்தோறும் ஆசிரியர் கூட்டங்களைக் கூட்டி ஆசிரியர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் பல கூட்டங்களில் மேலிருப்போர் தங்களுக்கு கீழிருப்போரை படு கேவலமாக நடத்துவதுதான் சோகம். அவரவர் அவரவர் மேலதிகாரியிடம் வாங்கி வரும் வசைகளை தங்களுக்கு கீழுள்ளோர்மீது இறக்கி வைப்பதில் சமர்த்தர்களாகவே இருக்கிறார்கள். ஆசிரியர்களால் மாணவர்கள் மீது இறக்கி வைக்க இயலாத நிலை என்பதால் ஆசிரியர்கள்தான் பரிதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களை முடுக்கிவிட்டபடியே இருக்கிறார்கள். வருடா வருடம் தேர்ச்சி விழுக்காடும் ஆச்சரியப் படுமளவிற்கு கூடிக் கொண்டேதான் வருகிறது. போகிற போக்கைப் பார்த்தால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய குழந்தைகள் அனைவரும் தேர்ச்சி பெறும் காலம் அடுத்த அல்லது அதற்கு அடுத்த ஆண்டிற்குள் வந்துவிடும் என்றே தோன்றுகிறது. பன்னிரண்டாம் வகுப்பைப் பொறுத்தவரை இது சற்று தாமதமாகலாம் என்றாலும் நிச்சயமாக  நிகழவே நிகழும்.

இதில் கல்வித் துறையின், உயரதிகாரிகளின், அதிகாரிகளின், தலைமை ஆசிரியர்களின், ஆசிரியர்களின், தனிப் பயிற்சி ஆசிரியர்களின், பெற்ரோர்களின் , மாணவர்களின் கடும் உழைப்பு இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மேற்சொன்ன அனைவரது உழைப்பும் மெனக்கெடலும் இதில் நிச்சயம் இருக்கும்.

நூறு சதவிகித தேர்ச்சி விழுக்காடு என்பதன் பொருள் என்ன?

7,88,413 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 7,88,413 மாணவர்களும் தேர்ச்சியும் பெற்று விடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். எனில், தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டார்கள். எனவே நூறு விழுக்காடு தேர்ச்சி என்பது மாதிரிதான் பதில் வருகிறது. ஒரு வகையில் பார்த்தால் இது சரிபோலவும் படக் கூடும். ஆனால் அது எவ்வளவு ஆபத்தான மதிப்பீடு என்பது இன்னும் கொஞ்சம் ஆழமாக இதனுள் பயணித்தாலே பாமர மனிதனுக்கும் புரிந்துவிடும்.

2015 மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய குழந்தைகள் அனைவரும் அநேகமாக 2005 ஜூன் மாதம் வாக்கில் முதல் வகுப்பில் சேர்ந்திருப்பார்கள். 2005 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் 2015 ஆம் ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்களா?

நிச்சயமாக இருக்காது. எவ்வளவு குறைவாகக் கணக்கிட்டாலும் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வருவதற்குள் குறைந்த பட்சம் ஐம்பதாயிரத்திலிருந்து எழுபத்தி ஐயாயிரம் வரைக்கும் எண்ணிக்கை குறைந்திருக்கும். ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணாவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்புவரை கல்வியைத் தொடர இயலாதபோது எப்படி இதனை நூறு விழுக்காடு தேர்ச்சி என்று கொண்டாடுவது?

இப்படியாகத் தங்களது பள்ளிக் கல்வியைத் தொடர முடியாது இடையிடையே நின்றுவிடும் போக்கிற்குஇடை நிற்றல்என்று பெயர்.

இத்தகைய இடைநிற்றலில் மாணவர்களின் எண்ணிக்கையை விடவும் மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. கூலி வேலைக்கு போக வேண்டிய கட்டாயம், குடிகாரத் தந்தையின் பொறுப்பில்லாதத் தனத்தால் போக முடியாமை, தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம், பருவமடைதல், இது கடந்து படிக்கிற வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறாமை போன்றவை இடை நிற்றலுக்கான சில வலுவான காரணங்கள்.

இதுபோக அரசாங்கம் என்னதான் உத்திரவு போட்டாலும் சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மாட்டான் என்று தாங்கள் சந்தேகிக்கிற மாணவர்களை ஒன்பதாம் வகுப்பிலேயே காடாத் துணி கட்டி வடிகட்டி விடுகிறார்கள்.

சில பள்ளிகள் பெற்ரோர்களை வரவழைத்து தேனொழுக உபசரித்து ஏதோ பையனின் நலனுக்காக பேசுவதுபோல பேசுவார்கள். பையன் ஃபெயில் என்றும், ஆனால் பையனும் பெற்றோரும் பள்ளிக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பதால்பாஸ்போட்டு மாற்றுச் சான்றிதழைத் தருவதாகவும் முடியுமானால் வேறு ஏதேனும் பள்ளியில் படிப்பைத் தொடருமாறும் அல்லது ஏதேனும் தனிப் பயிற்சி நிலையங்களில் சேர்த்து பகுதி பகுதியாக தேர்ச்சிபெற முயற்சிக்குமாறும் விலையில்லா ஆலோசனைகளை வழங்குவார்கள். பள்ளியில் எனில் மொத்த பாடங்களையும் நடத்தவேண்டி இருக்கும் தனிப்பயிற்சி எனில் பரிட்சைக்கு தேவையானதை மட்டும் திரும்பத் திரும்ப எழுதி வாங்குவார்கள். சுலபமாக தேர்ச்சி பெற்றுவிடலாம், அது மட்டும் இல்லாது அக்டோபரில் சில தாள்கள் மார்ச்சில் சில தாள்கள் என வருஷத்தை வீணடிக்காமல் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற பிரச்சாரத்தில் பெரும்பான்மை பெற்ரோர்கள் விழுந்து விடுவார்கள்.

இன்னும் சில பள்ளிகளில் வேறு மாதிரி நடைமுறையைக் கடைபிடிப்பார்கள். அவர்கள் மாற்றுச் சான்றிதழைத் தந்து விடுவார்கள். ஆனால் மாணவனை வெளியே அனுப்ப மாட்டார்கள். அவன் தொடர்ந்து பள்ளிச் சீருடையோடு பள்ளிக்கு வரலாம். படிக்கலாம். ஆனால் தனித் தேர்வராகத்தான் தேர்வெழுத வேண்டும். வினோதம் என்னவெனில் இப்படி தேர்ச்சி பெறமாட்டான் என்றெண்ணி தனித்தேர்வராக அனுப்பப்பட்ட மாணவர்கள் பல நேரங்களில் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி பெறுவான் என்று நம்பிய குழந்தைகள் தேர்ச்சியடையாது போய்விடுவதுதான்.

இத்தகைய வடிகட்டல்களுக்குப் பிறகு கிடைக்கும் இந்தத் தேர்வு விழுக்காட்டினை எப்படி நூறு விழுக்காடு என ஏற்றுக் கொண்டாட முடியும்?

இதுமாதிரியான காரியங்களுக்கு எதிராகத்தான் சட்டங்களும் அரசின் செயல்பாடுகளும் இருக்கின்றன. ஆனாலும் இதுமாதிரி காரியங்களும் தொடர்ந்து தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.

ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் யாரையும் நிறுத்திவிடக் கூடாது என்பதில் அரசும் பள்ளிக் கல்வித்துறையும் இவ்வளவு அக்கறை காட்டுவது குறைந்த பட்சம் அனைத்து மாணவர்களும் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவது பள்ளிக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான்.

காரணம் கல்வி என்பது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்ற பாடத்திட்டங்களோடு மட்டும் சுறுங்கிப் போகிற ஒன்று அல்ல. இந்த ஐந்து பாடங்களை மட்டும் நெட்டுறு போட்டு தேர்ச்சி பெறுவதற்காக மட்டுமே குழந்தை பள்ளி வளாகத்திற்கு வருவதில்லை. அவன் கற்றுக் கொள்வதற்கு மேற்சொன்ன ஐந்து பாடங்களைத் தவிர ஏராளம் இருக்கிறது பள்ளி வளாகத்தில். சாதிகள் இல்லை, சாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வுகளை அனுமதிக்க்க் கூடாது என்பதை சொல்லித் தரவேண்டிய இடம் பள்ளி. வயதில் பெரியவர்களை பெற்றவர்களை மரியாதையோடு மதித்து நட்த்த வேண்டும் என்பதை கற்றுக் கொள்கிற இடம் பள்ளி. ஆணாதிக்கத்தை பெண்ணடிமைத் தனத்தைஅடியோடு வேரறுக்கச் சொல்லித்தருகிற இடமாகவும், தன்னபிக்கையை வளர்க்கிற இடமாகவும் பள்ளி இருக்க வேண்டும். மொழிப் பற்றை, தனது மண்மீதான பற்றினையும் அவன் பெற்றுக் கொள்கிற இடமாகவும் பள்ளிகள் இருக்க வேண்டும். முடைநாற்றம் வீசும் மூடப் பழக்க வழக்கங்களின்மீது தாரள்ளிப் பூசுகிற தார்மீக தைரியத்தை மாணவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய இடம் பள்ளி.

அதனால்தான் ஒவ்வொரு மாணவனும் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவது பள்ளியில் இருக்க வேண்டும் என்று அரசும் பள்ளிக் கல்வித்துறையும் கருதுகின்றன. அதனால்தான் எட்டாம் வகுப்பு வரைக்கும் தேர்ச்சி தோல்வியே வேண்டாம் என்று சட்டத்தின் மூலமாகவும் ஒன்பதாம் வகுப்பிலும் வடிகட்டிவிட வேண்டாம் நடைமுறையிலும் அவை வலியுறுத்துகின்றன.

இடையிலேயே பள்ளிக்குப் போவதை நிறுத்திவிடுவதற்கான பட்டியலில் உள்ள அனைத்துக் காரணங்களையும் இல்லை என்றாக்க அரசு செயலில் இறங்கியுள்ளது என்ற உண்மையை மறைப்பதற்கில்லை.

அனைவருக்கும் கல்வித் திட்டம் வந்த பிறகு வட்டார வள மைய அலுவலகத்தில் உள்ள ஆசிரியப் பயிற்றுனர்களும் மேற்பார்வையாளர்களும் இடை நின்றவர்களின் பட்டியலைத் தயாரிப்பதில் கவனமாயிருக்கிறார்கள். தாரித்த பட்டியலை கையில் வைத்துக் கொண்டு முகவரி கண்டுபிடித்து பிள்ளைகளை அழைத்துப் போய் அவர்களுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள். தொடர்ந்து அந்தந்தப் பள்ளிகளோடு தொடர்போடு இருக்கிறார்கள். அப்படி கொண்டு வந்து சேர்க்கப் பட்ட பிள்ளைகளில் யாரேனும் இடையில் நின்று விடுகிறார்களா என்பதையும் கண்டறிந்து  மீண்டும் மீண்டும் மாணவர்களை மீட்டெடுத்து வந்து பள்ளிகளில் விடுகிறார்கள்இது மாதிரியான பத்து மாணவர்களை ஒரு பள்ளியில் சேர்க்கிற பட்சத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே ஒரு சிறப்பு ஆசிரியரை அனைவர்க்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்கிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்னால் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் இடையிலேயே பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டிருந்தான் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவனை மீண்டும் ஆறாம் வகுப்பில் சேர்த்தால் அவனது மனநிலை மற்ற மாணவர்களோடு ஒத்துப் போகாது. அது விரும்பத் தகாத விளைவுகளைக் கொண்டுவரும். எனவே அவனை
வயதுக்கேற்ற வகுப்புஎன்ற திட்டத்தின் கீழ் அவன் வயதை ஒத்த மாணவர்கள் படிக்கும் வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள். அதாவது ஆறாவது படிக்கும் போது இடை நின்றவனை இப்போது எட்டாம் வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வீடுகளில் கல்விக்கான வாய்ப்பு இல்லை எனும் பட்சத்தில் அவர்களுக்கானஉண்டு உறைவிடப் பள்ளிகளில்அவர்களை சேர்த்து கண்காணிக்கிறார்கள்

உளவியல் ரீதியாக பார்க்கும் போது இது மிக உயரியதும் அவசியம் தேவையானதுமான ஒரு திட்டம். ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோரும், கல்விமீது அக்கறை கொண்டோரும் அவசியம் வரவேற்க வேண்டியதொரு திட்டம். ஆனால் எட்டாம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களின் சிக்கலை யார் உணர்வது? அதுதான் இதுமாதிரி மாணவர்களுக்காக ஒரு சிறப்பு ஆசிரியரை அனைவருக்கும் கல்வித் திட்டம் வழங்குகிறதே என்று கேட்கலாம். பத்து மாணவர்களை ஒரு பள்ளியில் சேர்த்தால்தான் இந்த வாய்ப்பு. ஒன்பது மாணவர்கள்தான் எனில் அதுவும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லாமே நன்றாகத்தானே தெரிகிறது. அப்புறம் ஏனிந்தப் புலம்பல்? என்றும் சிலர் கேட்கலாம். இவை அத்தனை திட்டங்களையும் மகிழ்ந்து வரவேற்கவே செய்கிறோம். மிக உயரியதும் மிக நல்ல விளைவுகளைத் தர வல்லவையுமான திட்டங்களே இவைகள்

ஆனால் இவற்றில் எந்த ஒரு திட்டத்தையும் மெட்ரிக் பள்ளிகளிலோ, தனியார் சுயநிதிப் பள்ளிகளிலோ அல்லது மிகப் பெரிய அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலோ நடைமுறைப் படுத்த இயலாது. அவர்கள் சாக்குகளில் வடிகட்டிய மாணவர்களையே சேர்ப்பார்கள், ஒவ்வொரு ஆண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒன்பதாம் வகுப்பிலாவது காடாத் துணி கொண்டேனும் மாணவர்களை வடிகட்டுவார்கள்.

இது மாதிரியான அரசின் முன்னோடித் தொலைநோக்குத் திட்டங்களை அரசுப் பள்ளிகளிலும் எளிய நிலையில் உள்ள உதவி பெறும் பள்ளிகளிலும் மட்டுமே நடைமுறைப் படுத்துவது என்பது சாத்தியம்.

இரண்டு விதமான பள்ளிகளும் ஒரே விதமான தேர்ச்சி விழுக்காட்டைத் தரவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் மீதே நமது விமர்சனம் இருக்கிறது.

தற்போதுள்ள தேர்வுமுறை சில அறிஞர்களை, மருத்துவர்களை, சில வல்லுனர்களை உருவாக்கலாம். ஆனால் சிறந்த குடிமகன்களை உருவாக்கித் தராது என்ற அய்யமே நம்மை கவலை கொள்ள வைக்கிறது.

மாறாக எல்லாத் திறமைகளையும் சோதித்துப் பார்க்கிற ஒரு கல்வித் திட்டத்தையும் தேர்வு முறையையும் சோதித்துப் பார்த்தால் என்ன?

தோழர்.ஜீவகுமார் அவர்களின் இந்தக் கவிதையை இதனோடு பொறுத்திப் பார்ப்பது சரியாக அமையும் என்று தோன்றுகிறது,

நீ பாடங்களில் முதலிடம்
நீச்சலில் இல்லை
நான் நீச்சலில் முதலிடம்
ஓவியத்தில் இல்லை
அவன் ஓவியத்தில் முதலிடம்
கவிதையில் இல்லை
அவள் கவிதையில் முதலிடம்
நாட்டியத்தில் இல்லை
எல்லாத் திறமைகளுக்கும் தேர்வு இல்லை
இருந்தால் தேர்ச்சி பெறாதவர் என
யாரும் இல்லை



6 comments:

  1. பாடச்சுமை குறைத்து மனப்பாடம் செய்யும் கல்வி முறை ஒழிய வேண்டும்! நூறு சதவீத தேர்ச்சி சாத்தியம் என்றாலும் அதன் தரம் எந்த அளவில் இருக்கும் என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த வருடம் பத்தாம் வகுப்பு பாஸ் செய்த பலர் எடுத்த மதிப்பெண்கள் என்னை வியக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர்

      Delete
  2. உண்மைதான் தோழர்
    இந்நிலை என்று மாறுமோ?

    ReplyDelete
    Replies
    1. மாறாது போல தோழர். நாம்தான் மாற்ற வேண்டும்

      Delete
  3. நல்ல கட்டுரை மெட்ரிக் பள்ளிகள் தேறாது என்று கைவிடப்பட்ட மாணவர்களுக்கு அரசு பள்ளிகளே தஞ்சம் கொடுக்கிறது.பெற்றோரிடம் இருந்து எந்தவித ஒத்துழைப்பும் இல்லாத நிலையில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அரசு பள்ளிகளும் தந்திரமாக 9ம் வகுப்பில் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன
    *****************

    நீங்கள் சொல்லி இருப்பது உண்மை.ஆய்வுக் கூட்டங்களிலேயே பல நாட்கள் சென்று விடுகின்றன என்பது உண்மை. ஆய்வுக் கூட்டங்களில் பிரயோகப் படுத்தும் வார்த்தைகள் மன உளைச்சலை உருவாக்கக் கூடியவை. கீழ்நிலை கல்வி அலுவலர்களின் பாடு சொல்லி முடியாது. ஆண்டு முழுதும் நலத்திட்டங்கள் நிறைவேற்றுவதற்கே நேரம் போதவில்லை. இதில் தகவலறியும் சட்டம், வழக்குகள் புள்ளி விவரங்கள்,போட்டிகள் விழாக்கள், தணிக்கை, பயிற்சிகள் என்று மூச்சுவிடக்கூட நேரம் இல்லாத நிலை. தங்கள் கீழ் பணிபுரியும் பணியாளர்களை கட்டுப் படுத்த இயலாத சூழல். அர்ப்பணிப்பு அற்ற ஆசிரியர்கள்(எல்லோரும் அல்ல. நல்ல ஆசிரியர்கள் பலர் உள்ளனர்). சிறிது கடிந்து கொண்டாலும் பொய் புகார் சொல்பவர்கள் ஒருபக்கம், ஆசிரியர்களுக்கு சங்கங்கள் துணை புரிகின்றன. போராட்டங்கள் நடத்துகின்றன. குறைந்த பட்சம் தங்கள் குறைகளை சொல்லவாவது வாய்ப்பு உண்டு.ஆனால் இவர்கள் வாயை திறக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது செய்தாக வேண்டும் தோழர். அல்லது பொதுக் கல்வி ஒரு புள்ளியில் முற்றாய் அழிந்து போகும்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...